1. வாசகர்களே!
2. மழைக்கு முன் தூவானம்
3. சாபம் அகன்றது; கிருபை மலர்ந்தது
4. பெத்தேலில் பயங்கரம்
5. யோராம்: ஆகாபைப்போல அல்ல; ஆனால் . . . !
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இது இந்த வருடத்திற்கான முதலாவது இதழ். ஒவ்வொரு இதழையும் தயாரிக்க உதவி வந்திருக்கும் ஆண்டவர் இதைத் தயாரிக்கவும் உதவியிருக்கிறார். என்னோடு இணைந்து இந்தப் பணியி¢ல் ஆர்வத்தோடு உழைத்து வருகின்ற நண்பர்களுக்காக என் நன்றி! முக்கியமாக புது வருட வாழ்த்துக்களை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் இந்த வருடத்தி¢ல் நம்மெல்லோரையும் வழிநடத்தித் தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே என் ஜெபம்.
ஒன்றை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. திருமறைத்தீபத்தின் செயலி (Android App) இப்போது நல்ல முறையில் உருவாகி வாசகர்கள் அனைவரும் உங்களுடைய Android போனிலோ அல்லது Tablet டிலோ பயன்படுத்தக்கூடிய வசதியைச் செய்திருக்கிறோம். அதை நீங்கள் Google Play Store ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விளம்பரத்தை இந்த இதழில் காணலாம். விளம்பரத்தில் காணப்படும் QR code ஐப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுவரை அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறவர்கள் அதுபற்றிய நல்ல கருத்துக்களையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இவ்விதழில் மூன்று ஆக்கங்கள் 2 இராஜாக்கள் நூலில் இருந்து கொடுக்கப்பட்ட பிரசங்கங்கள். மிகவும் அவசியமான காலத்திற்கேற்ற வசனப்பகுதிகள் அவை. பழைய ஏற்பாட்டுப் பகுதிகளில் இருந்து அநேக ஆவிக்குரிய பயன்பாடுகளையும், சுவிசேஷத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் பழைய ஏற்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்ளுவது என்பது தெரியாமல் அதிலிருந்து பெறக்கூடிய பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்குத் துணைசெய்யுமுகவாகவே இவற்றை இதழில் வௌ¤யிட்டு வருகிறோம். இவற்றை வாசி¢த்துப் பயனடையுங்கள்.
இதழில் முதல் ஆக்கமாக, ஒரு புது வருட செய்தியளித்திருக்கிறேன். செய்தி வழமைக்கு மாறான செய்தியாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள். இதைத் தவிர எதை நாம் ஒருவருக்கொருவர் நினைவுபடுத்த முடியும்? அநேகரின் உழைப்பைத் தன்னி¢ல் தாங்கி இந்த இதழ் உங்கள் கையை வந்தடைந்திருக்கிறது. இந்தப் பணி தொடரவும், பணியாளர்கள் ஆர்வத்தோடுழைக்கவும் அவர்களை உங்கள் ஜெபத்தில் வையுங்கள். நன்றி. – ஆசிரியர்
மழைக்கு முன் தூவானம்
புதிய வருடம் (2025) உதயமாகியிருக்கிறது. நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல்வேறு கனவுகளோடு 2024ஐ எதிர்கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தவை நடக்கவில்லை; நினையாதவைகள் நடந்திருக்கின்றன. உலகம் இயற்கை அழிவுகளையும், போர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கோவிட் கிருமியின் அட்டகாசம் நின்று போயிருந்தாலும், அதன் பலமான தாக்கங்களை இன்றும் நாடுகள் அனுபவித்து வருகின்றன. விலைவாசி கூரைக்குமேல் போயிருக்கிறது. பொதுவாகவே எல்லா நாடுகளிலும் வேலைக்கு ஆள் தட்டுப்பாடும், பணவீக்கமும் அதிகரித்துப் போயிருக்கின்றன. என் நாட்டிலும் கூட இரவு வேலைகளில் நாற்பது பேருக்கு ஒரு மருத்துவ தாதி பணிசெய்து கொண்டிருக்கும் இக்கட்டான நிலைமை. கோவிட்டுக்கு முன்பிருந்ததைப் போல உலகம் இன்றில்லை.
இதெல்லாம் உலகத்தில் நிகழாமல் இருக்காது என்று இயேசு கிறிஸ்து அறிவித்திருக்கிறார். உலகம் அமைதியையும், பாதுகாப்பையும், மகிழ்வான சூழலையும் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற தப்பான இறையியல் நம்பிக்கை சிலருக்கிருக்கிறது. ஆனால், அது அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டும் ஏராளமான வேதப்பகுதிகளை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். வெளிப்படுத்தல் விசேஷமும், மத்தேயு 24-25 அதிகாரங்களும் இதையே சுட்டுகின்றன. பாவத்தால் சீரழிந்திருக்கும் இந்த உலகத்தை நிர்மூலமாக்கி புதிய உலகத்தையும் பரலோகத்தையும் ராஜாவாகிய இயேசு உருவாக்கப்போகிறார். அதனால் நாம் வாழும்வரை இந்த உலகத்தில் கர்த்தருக்குப் பணி செய்து புதிய உலகத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதே நம் கடமை என்பது என் நம்பிக்கை.
அநேகர் அழியவிருக்கும் இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து அறியாமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாவத்தில் இருக்கும் இந்த உலகம் அதிகம் பிடித்துப் போயிருக்கிறது. அதனாலேயே சுவிசேஷ எச்சரிக்கைகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். அவர்களுடைய கடினமான இருதயம் சுவிசேஷத்துக்கு அசைய மறுக்கிறது. 1 யோவான் 2:15-17 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள்:
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
யோவானும், ஏனைய புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் நாம் கடைசிக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எச்சரித்திருக்கிறார்கள். அது இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையோடு ஆரம்பித்துவிட்டது. இந்தக் காலம் இயேசுவின் இரண்டாம் வருகையையும், நியாயத்தீர்ப்பையும் நோக்கி வேகமாக அசைந்துகொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் நல்லவையும், கேடானவையும்; அமைதியும், அமைதியின்மையும்; சமாதானமும், போரும் தொடர்ந்து மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கும். முழு அழிவோ அல்லது பூரண சமாதானமோ இந்த உலகத்தில் இருக்காது. உலகத்து மக்கள் எதிர்காலத்தைப் பற்றிய பெருங்கனவுகளோடு வாழ்க்கையில் வெற்றியை எதிர்பார்த்து உழைத்துக்கொண்டிருக்கும்போது, எவரும் அறியாத நேரத்திலும் காலத்திலும் இயேசுவின் வருகை அமைந்திருக்கும். அது எவருக்கும் தெரியாததால் அதைக் கணக்கிட்டு நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருக்கக்கூடாது. அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன?
ஆண்டவரை அறியாதிருப்பவர்களும், விசுவாசமற்றவர்களும் சுவிசேஷத்தில் அக்கறைகாட்டி அதைக் கேட்க வேண்டும். சுவிசேஷத்தை அறியாமல் எவருக்கும் கிறிஸ்துவின் இரட்சிப்பு கிடைக்காது. பாவிகளுக்கு இயேசு செய்திருக்கும் பரிகாரமும், பாவமன்னிப்பும் சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலமே ஒருவருக்குக் கிடைக்கிறது. ஒருவரும் நீதிமானாக இந்த உலகத்தில் இல்லாமல் இருப்பதால் நீதிமானாக கர்த்தரால் அறிவிக்கப்படுவதற்கு, நீதியைத் தன் மரணத்தின் மூலம் சம்பாதித்திருக்கும் இயேசுவிடம் பாவிகள் ஒடிவர வேண்டும். இயேசு மட்டுமே பாவிகளுக்கு இரட்சகர். ஒழுக்க வாழ்க்கை வாழ்வதன் மூலமாகவோ, சுயமாக எதையும் செய்து பார்ப்பதன் மூலமோ எவரும் தங்களை ஆவிக்குரியவிதத்தில் இரட்சித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை; எல்லோருமே பாவிகளாகி தேவமகிமையை இழந்து நிற்கிறோம். இரட்சிப்பு கர்த்தருடையது; அவர் மட்டுமே அதைத் தரமுடியும். அவர் மட்டுமே பரிசுத்த ஆவியின் மூலம் பாவியில் மறுபிறப்பை ஏற்படுத்த முடியும். அதனால் பாவிகளாகத் தங்களை உணர்கிறவர்கள் இயேசு கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் செய்திருக்கும் பாவநிவாரண பலியை முழு மனத்தோடு நம்பி இயேசு கிறிஸ்துவை இரட்சிப்புக்காக விசுவாசிக்க வேண்டும். இந்தச் செய்தியை அறிவிக்கும் சுவிசேஷத்தைத் தெளிவாக இக்காலத்தில் பிரசங்கிக்க வேண்டிய பெருங்கடமை சபைக்கிருக்கிறது. அதில் சபை தன் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டும்.
இயேசுவை விசுவாசிப்பவர்கள் அவருக்காக முழு மனத்தோடு வாழவேண்டிய கடமை அவர்களுக்கிருக்கிறது. பரிசுத்தத்தை வாழ்க்கையில் கொண்டிருந்து சபைக்கு விசுவாசமாகவிருந்து வாழ்க்கையில் கர்த்தர் எதிர்பார்க்கும் அத்தனைக் கடமைகளையும் அவருடைய மகிமைக்காகச் செய்துவரவேண்டிய பெருங்கடமை விசுவாசிகளுடையது. அதை ஆவியின் வழிநடத்துதலோடு அவர்கள் நிறைவேற்றி வரவேண்டும்.
இந்தப் பகுதியின் தலைப்பு புரிகிறா? புரிந்தாலோ அல்லது புரியாவிட்டாலோ என்னைத் தொடர்புகொள்ளுங்கள். வாசகர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்!
சாபம் அகன்றது; கிருபை மலர்ந்தது
2 இராஜாக்கள் 2:19-22
இந்த வேதப்பகுதியில் தேவனுடைய கிருபை எவ்வாறு சபிக்கப்பட்ட எரிகோவை வந்தடைந்தது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம். ஆங்கிலத்தில் அநேக நல்ல கீர்த்தனைகள் இருக்கின்றன. அதில் ஒன்று Grace it’s charming sound என்பதாகும். தமிழில் மொழிபெயர்த்தால்,
“கிருபை இனிய சத்தம் காதுக்கு இணக்கமானது,
போதுமானது கிருபை,
ஒருபோதும் வல்லமை இழக்காதது,
கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார்,
எடுக்க எடுக்க குறையாத தன்மையோடு.”
இது கிருபையைப் பற்றி எழுதப்பட்ட ஓர் அற்புதமான பாடலாகும். நாம் கவனிக்கப்போகும் இந்த வேதப்பகுதி, வேதம் போதிக்கின்ற கர்த்தருடைய கிருபை எவ்வாறு எரிகோ பட்டணத்தை அடைந்தது என்பதை விளக்குகிறது. எரிகோ சபிக்கப்பட்ட ஒரு நகரமாக இருந்தது. அப்படி சபிக்கப்பட்ட நகரத்திற்கு ஆசீர்வாதத்தை எது கொண்டுவர முடியும்? கிருபை மட்டுமே அதைச் செய்ய முடியும். நம்மேல் இருக்கும் பாவமாகிய சாபத்தைக் கூட தேவனுடைய கிருபை மட்டுமே நீக்கிக் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இரட்சிப்பைக் கொடுக்க முடியும்.
2 இராஜாக்கள் 2:19-22 வரையுள்ள கீழ்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.
பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
இந்த நான்கு வசனங்களும் ஓர் அருமையான வரலாற்றை நமக்கு விளக்குகின்றன. இந்த நான்கு வசனங்களும் அந்தக் காலத்தில் எரிகோவாகிய நகரம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்தது என்பதை விளக்குகின்றன. இந்த வேதப்பகுதியை வேகமாக, சாதாரணமாக வாசித்துக் கடந்துபோனால் அதில் சொல்லப்பட்டிருக்கிற உண்மைகளை இலகுவாக நாம் புரிந்துகொள்ள முடியாது. இது நிறுத்தி நிதானமாகவும், வேறு வேதப்பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் வாசிக்க வேண்டிய வேதப்பகுதியாக இருக்கிறது. அந்தவகையில் ஆராய்கிறபோதுதான் இந்த நான்கு வசனங்களும் எத்தனை பெரிய விஷயத்தை விளக்குகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த வேதப் பகுதியை நாம் மூன்று தலைப்புகளின் கீழாக ஆராய்வோம்.
1. எரிகோ பட்டணத்திற்கு வந்த சாபம்
2. எரிகோ பட்டணத்திற்கு வந்த தீர்வு
3. எரிகோ பட்டணத்திற்கு வந்த கர்த்தரின் கிருபை
1. எரிகோ பட்டணத்திற்கு வந்த சாபம்
2 இராஜாக்கள் 2:15ல், தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எரிகோவில் எலிசாவை சந்தித்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம். இது பலமுறை எலிசா எரிகோவிற்குப் போய் வந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆகவே இந்த 19 வது வசனத்தின் மூலம் முதல்முறை எலிசா எரிகோவிற்கு போனார் என்று நினைத்துவிடக் கூடாது. எலியா சுழல் காற்றினால் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு எலிசா யோர்தானின் அக்கரையிலிருந்து சால்வையினால் நதியை அடித்து இக்கரை சேர்ந்து எரிகோவிற்கு வந்தார். அவ்வாறு வந்தபோது அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தார் என்று வேதம் விளக்குகிறது. அவர் தங்கியிருந்த அந்த மூன்று நாட்களுக்குள்தான் அங்கிருந்த பட்டணத்து மனிதர்கள் எலிசாவைப் பார்க்க வந்தார்கள். 19 வது வசனத்தில்
2 இராஜாக்கள் 2:19
“பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்” என்று விளக்குவதை நாம் பார்க்கிறோம்.
இங்கு ஆண்டவன் என்ற வார்த்தை கர்த்தரைக் குறிக்காமல் பெரிய மனிதர்களை மரியாதையாக அழைக்கும் வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தை நாம் எழுத்துபூர்வமாக வாசிக்கிறபோது, இங்கு சொல்லப்பட்ட சில காரியங்கள் மாறுபடுவதைக் காணமுடியும். இந்த வசனத்தை மூல மொழியிலிருந்து தமிழ் வேதத்திலும், நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் கூட எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கவில்லை. ஏனென்றால் எபிரெய மொழியில் இருக்கின்ற வார்த்தையின் அழுத்தம் மொழிபெயர்ப்புகளில் வரவில்லை. இந்த வசனத்தை எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால், “அந்தப்பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் கருச்சிதைவால் துன்பப்படுகிறது.” என்று இருக்க வேண்டும். இவ்விதமாக மொழிபெயர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதற்குக் காரணமிருக்கிறது. NASB என்ற நல்ல ஆங்கில வேதம் கூட விளைச்சல் அற்ற நிலம் (unfruitful) என்றுதான் இதை மொழிபெயர்த்திருக்கிறது. அது உண்மைதான், ஆனால் அதற்கும் மேலாக அந்த நிலத்தைப் பற்றிய ஆழமான கருத்து எபிரெய மூல வார்த்தையில் காணப்படுகிறது. நான் பயன்படுத்துகிற NKJV என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு பாழ்நிலம் (barren) என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால் நிலமும் கருச்சிதைவால் துன்பப்படுகிறது என்று மொழிபெயர்ப்பதே சரியானதாக இருக்கும். இதற்கான காரணத்தை இனி விளக்குகிறேன்.
எரிகோ நகரத்திற்கு வந்துகொண்டிருந்த நீரூற்றுகள் மிகவும் மோசமானவையாக இருந்தன. அவை குடிநீராகப் பயன்படுத்த முடியாத வகையில் அதிமோசமானதாக இருந்தன, அதுமட்டுமல்ல அந்தத் தண்ணீர் எங்கு சென்று நிலத்தில் பாய்கிறதோ அங்கு ஒரு பயிரும் வளர முடியாதபடி அதை நாசமாக்கி விட்டது. ஆகவே அந்தத் தண்ணீரினால் எந்தவித நன்மையும் இல்லாமல் இருந்தது. அந்தத் தண்ணீரைக் குடிக்கிற மனிதர்களுக்கும் பல மோசமான வியாதிகள் வந்தன, நிலங்களும் பயிர் வளர்ந்து பலன் கொடுக்காதபடிக்கு மோசமானவையாக இருந்தன. ஆகவே அந்தத் தண்ணீர் நிலத்திற்கு மட்டுமல்ல, அந்த நிலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தத் தண்ணீரில் ஏதோவொரு மோசம் இருந்தது. அதற்குக் காரணமே அதற்குக் கொடுக்கப்பட்ட சாபம்தான். அந்த நகரமும் சபிக்கப்பட்ட நகரமாக இருந்தது. அந்த சாபத்தினால் அங்கிருந்த தண்ணீர் விஷத்தன்மை உடையதாக மாறியது. அது மனிதனுக்கும் நிலத்திற்கும் மிருக ஜீவன்களுக்கும் பேராபத்தை விளைவிக்கிறதாகவும் இருந்தது. இந்த 19 வது வசனத்தில் “நிலமும் கருச்சிதைவால் துன்பப்படுகிறது” என்று சொல்லப்படுகிறது. இங்கு நிலமும் என்ற வார்த்தை வெறும் நிலத்தை மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த மக்களையும் குறிக்கிறது. அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அந்தத் தண்ணீர் கருச்சிதைவை உண்டாக்கியது. அப்படியென்றால் அந்த நிலத்தில் வாழ்ந்து அந்தத் தண்ணீரைக் குடித்த திருமணமான பெண்களுக்கு பிள்ளை பெறமுடியாதபடி அது கருச்சிதைவை உண்டாக்கியது.
எரிகோ பட்டணத்திலிருந்த திருமணமான அநேக பெண்கள் பிள்ளைகள் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு பிள்ளைகளை இழந்து கொண்டிருந்தார்கள். அந்தளவுக்கு அங்கிருந்த தண்ணீரூற்றுக்கள் மோசமானவையாக இருந்தன. ஆகவே அங்கிருந்த மக்கள் ஊருக்கு வெளியில் இருந்துதான் தண்ணீரைக் கொண்டுவந்து பயன்படுத்தி இருப்பார்கள். பலவிதமான துன்பங்களோடு அந்த நகரத்தின் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தளவுக்கு நகரமே மோசமானதாக இருந்ததற்கு காரணம் கர்த்தரின் சாபம்தான். நமக்குச் சில கேள்விகள் எழலாம், ஏன் அந்த நகரத்தின் அதிகாரிகள் அதற்கு ஒரு வழியைத் தீர்வாகக் கண்டுபிடிக்கவில்லை? அந்தத் தண்ணீரை சுத்தமாக்குவதற்கு அவர்கள் எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லையா? இந்தப் பகுதி அதைப் பற்றி நமக்கு விளக்கமளிக்கவில்லை. அவர்கள் எலிசா அங்கு வருகிற வரையும் காத்திருந்து அவரிடம் உதவி கேட்டதற்குக் காரணமென்ன? இதற்கு முன்னால் வேறு யாரிடமாவது அவர்கள் உதவி கேட்டிருந்தார்களா என்றும் நமக்குத் தெரியாது. நாம் பதில் தேட வேண்டிய கேள்விகள் இருக்கின்றன.
சென்னை போன்ற பெருநகரத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? அங்கு நிலத்தடியிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாமலும், வெளியிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியாமலும் இருந்து, கூவம் ஆற்றின் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலை வந்தால் இவ்வாறுதான் போய் முடியும். கூவம் ஆற்றின் தண்ணீரைக் குடிக்கிறவர்கள் எவ்வாறு உயிர் வாழமுடியும்? எரிகோ பட்டணத்து மக்களும் அவ்விதமான மோசமான நிலையில்தான் காணப்பட்டார்கள். எரிகோ பட்டணத்தில் எவ்வளவு காலமாக இவ்விதமான நிலை காணப்பட்டது? எவ்வளவு பேர் அதன் காரணமாக இறந்து போயிருப்பார்கள்? மக்கள், மிருக ஜீவன்கள், பயிர் வகைகள் போன்றவை எவ்விதமான மோசங்களைச் சந்திக்க நேரிட்டது என்ற கேள்விகள் எல்லாம் நமக்கு உருவாகும். இந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டு பிடிப்பதற்கு நாம் வரலாற்றைப் பின் நோக்கிச் சென்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
பழைய ஏற்பாட்டில் யோசுவா நூலில் ஆறாவது அதிகாரத்தைக் கவனியுங்கள். யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர்கள் பல ஊர்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தார்கள். ஏனென்றால் அவ்வாறு அந்த ஊர்களை எல்லாம் கைப்பற்றித்தான் கானான் தேசத்திற்குள் நுழைய வேண்டும். யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் மக்கள் எரிகோ நகரத்திற்கு வருகிறார்கள். அதன் வரலாறு உங்களுக்குத் தெரியும். இஸ்ரவேல் மக்கள் ஏழு முறை எரிகோவைச் சுற்றி வந்து ஆண்டவருடைய வல்லமையின் மூலமாக அந்த நகரத்தைப் பிடித்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம். யோசுவா 6:26 வது வசனத்தில்
“அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்” என்று சொல்லப்படுகிறது.
யோசுவா இந்த மாதிரியான சாபத்தை தான் வெற்றி கண்ட ஒவ்வொரு நகரத்தின் மீதும் கூறினானா என்று கேட்டால், அவ்வாறு அவன் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த எரிகோ நகரம் மட்டும் இவ்வாறு சபிக்கப்பட்டது என்பதை நாம் கவனிக்கிறோம். அந்த நகரத்தில் இருந்த அனைத்தையும் ஆண்டவர் அடியோடு அழிக்கும்படியாகச் சொன்னார், யோசுவா அப்படியே அதைச் செய்தான். செய்து முடித்த பிறகு இவ்வாறு சாபத்தையும் அறிவித்தான். கர்த்தர் இல்லாமல் யோசுவா இதைச் செய்திருக்க முடியாது. ஆகவே யோசுவா இந்த நகரத்தின் மீதிருந்த தனிப்பட்ட காரணத்தினாலோ, ஆத்திரத்தினாலோ இவ்வாறு செய்தான் என்று நாம் நினைக்கக்கூடாது. இது கர்த்தரே யோசுவாவின் மூலம் சொன்ன காரியமாகும். யாராவது அந்த நகரத்தைக் கட்ட நினைத்தால் தன் மூத்த குமாரனையும் இளைய குமாரனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கொடுக்கப்பட்டது. இதுதான் எரிகோ பட்டணத்தின்மேல் வந்த சாபம். இவ்வளவு பெரிய சாபம் அந்த பட்டணத்தின் மீது கொடுக்கப்பட்டதற்கு காரணமென்ன என்று நாம் யோசிக்கலாம். அதற்குப் பதில் நமக்குத் தெரியாது, ஆண்டவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எல்லாப் பட்டணங்களுக்கும் இவ்வாறு நிகழவில்லை, ஆனால் எரிகோ பட்டணத்திற்கு இது நிகழ்ந்திருந்தது. யோசுவா 6:27 வது வசனத்தில்,
“இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று” என்று வேதம் சொல்லுகிறது.
இந்த வசனத்தை நாம் பார்க்கிறபோது யோசுவா கொடுத்த சாபத்திற்கும், கர்த்தர் அவனோடு இருந்தார் என்பதற்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே இது யோசுவாவின் தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது கர்த்தருடைய திட்டம், அவர் அந்த சாபத்தைக் கொடுத்திருக்கிறார். யோசுவா செய்த காரியம் கர்த்தருக்குப் பிடித்த காரியமாக இருந்தது. யோசுவாவின் கீர்த்தி அதாவது அவனது புகழ் தேசமெங்கும் பரவியது என்று நாம் பார்க்கிறோம்.
இதற்குப் பிறகு நாம் 1 இராஜாக்கள் 16:34 ஆம் வசனத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கேயும் எரிகோவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். அந்நாட்களில் கொடூரமான ஆகாப் அரசன் இஸ்ரவேலை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய காலத்தில் மிகவும் குறைவானவர்களே வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு அநேகர் அன்றைக்கு மதிப்பே கொடுக்கவில்லை. அப்படியிருந்தபோதும் ஒரு மனிதன் மட்டும் வீம்புக்கென்று இந்த நகரத்தை மறுபடியும் கட்டுவதற்கு தைரியத்தோடு முன் வந்தான். அப்படி அவன் முன்வந்தபோது,
1 இராஜாக்கள் 16:34
“அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்” என்று சொல்லப்படுகிறது.
இங்கு அவன் நாட்களில் என்று சொல்லப்படுவது ஆகாப் ராஜாவைக் குறிக்கிறது. யோசுவா காலத்தில் கொடுத்த சாபம் ஆகாப் காலம் வரையும் தொடர்ந்து அந்த பட்டணத்தைப் பாதித்துக் கொண்டிருந்தது. அது பாழடைந்த இடமாக இருந்திருக்கலாம், ஆனாலும் மக்களில் குறைந்தளவானவர்கள் அதில் தொடர்ந்தும் வாழ்ந்திருந்திருக்கக்கூடும்.
ஆகாபின் காலத்தில் பெத்தேல் நகரத்தைச் சேர்ந்த ஈயேல் இந்த எரிகோ நகரத்தைத் திரும்பக் கட்ட முயற்சிகளைச் செய்தான். அப்படி அவன் செய்தபோது தன் மூத்த குமாரனையும் இளைய குமாரனையும் பலிகொடுக்க நேர்ந்தது. அங்கு என்ன நடந்தது? ஆண்டவர் தன் சாபத்தின்படி அவர்களைக் கொன்றார் என்று பார்க்கிறோம். ஏனென்றால் கொடுத்த சாபத்தை மீறிக் கட்ட வேண்டாம் என்ற கட்டளையை மீறி அவன் நகரத்தைக் கட்டியதால் அவ்வாறு நேரிட்டது. ஆகவே அந்த சாபம் அந்த எரிகோ பட்டணத்தின் மீது தொடர்ந்து இருந்தது என்று பார்க்கிறோம். யாராவது கர்த்தருடைய வார்த்தையைச் சோதித்துப் பார்த்தால் அவருடைய நீதியான நியாயமான கோபம் அவர்கள்மேல் வந்து இறங்கும். ஆகவே இந்த ஈயேல் செய்த காரியம் அவனைப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டது. அவன் குடும்பத்தில் இரண்டுபேரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏன் ஈயேல் இவ்வளவு தூரம் ஆணவத்தோடு கர்த்தருடைய வார்த்தையை மீறி இந்த நகரத்தைக் கட்ட முயன்றான்? அதற்கான காரணத்தை 33 வது வசனத்தில் பார்க்கிறோம். இவையெல்லாம் இங்கு தற்செயலாக எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல.
1 இராஜாக்கள் 16:34
“ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.”
ஆகாப் எவ்வளவு மோசமான ராஜாவாக இருந்தான் என்று பாருங்கள். இதற்கு அடுத்த வசனத்திலேயே ஈயேல் எரிகோவைக் கட்ட முயன்றதைப் பார்க்கிறோம். அப்படியானால் ஈயேல் செய்ததற்குக் காரணமென்ன? தேவனுடைய வார்த்தையை அவன் மீறி நடந்தான் என்று நாம் பார்க்கிறோம். ஆகாபைப் போல ஒரு மோசமான அரசன் இருந்து, அவன் செய்த கொடுமைகளை எல்லாம் அந்நாட்டு மக்கள் அனுபவித்து, தேவனுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் அவருடைய வார்த்தையை மீறி நடந்து, புற தெய்வ வழிபாட்டில் அவர்கள் ஈடுபட்டு, பத்துக் கட்டளைகளை எல்லாம் நிராகரித்து வாழ்ந்து வருகிற சமுதாயத்தில் வளர்கின்ற சந்ததியினர் எப்படி இருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். பெத்தேலில் இருக்கிற ஈயேல் இவ்விதமாகச் செய்ததற்கு அவன் ஆகாபின் சந்ததியில் வந்திருந்தது ஒரு காரணம். ஏனென்றால் ஆகாபின் சந்ததியில் எவரும் கர்த்தருக்கும் அவருடைய வார்த்தைக்கும் எந்தவித மதிப்பும் தரவில்லை. அவ்விதமான சமுதாயத்தில் வந்தவன்தான் இந்த ஈயேல். தேவனை நிந்திக்கிற ஒரு சமுதாயத்தில் வந்த ஈயேல், வீம்புக்கென்று இந்தக் காரியத்தை செய்யப்போய் தன்னுடைய குடும்பத்தை இழந்தான் என்று பார்க்கிறோம்.
அதுமட்டுமல்ல இந்த 1 இராஜாக்கள் 16 ஆம் அதிகாரம் முடிந்து அடுத்த அதிகாரம் ஆரம்பிக்கிறபோது எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்.
1 இராஜாக்கள் 17:1
“கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.”
இந்த வசனம் ஆங்கிலத்தில் And என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கிறது. ஆனால் தமிழில் அது இல்லாமல் ஆரம்பிக்கிறது. 1 இராஜாக்கள் 16:33 -வது வசனத்தில் ஆகாப் எல்லா ராஜாக்களை விடவும் கொடுமையாக நடந்தான் என்றிருக்கிறது. 34 வது வசனத்தில் ஈயேல் செய்த அநியாயத்தையும் அதனால் அவனுக்கு வந்த ஆபத்தையும் பார்க்கிறோம். 1 இராஜாக்கள் 17:1 வது வசனத்தில் அடுத்த ஆபத்து வருகிறதைப் பார்க்கிறோம். தொடர்ச்சியாக ஆண்டவருடைய வார்த்தையை உதாசீனப்படுத்தி மீறி நடந்தால் அவர் அமைதியாக இருக்கமாட்டார். அவருக்கு அமைதியாக இருக்கத் தெரியும், அவரின் குணாதிசயங்களில் ஒன்று நீடிய பொறுமை. ஆங்கிலத்தில் Long suffering என்று அதற்கு அர்த்தம். எதற்கும் அவசரப்பட்டு உடனடியாகத் தண்டனை கொடுப்பவரல்ல கர்த்தர்.
2019 க்கு முன்பு பார்க்கிறபோது உலகம் பெரியளவுக்கு உலகளாவிய பிரச்சனைகள் இல்லாமல் தான் இருந்தது. நன்மை செய்கிறவர்கள் நன்மை செய்து கொண்டிருந்தார்கள், தீமை செய்கிறவர்கள் இன்னும் அதிகமாகத் தீமை செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டவர் பேச்சுக்கு எவரும் மதிப்பு கொடுக்காமல் வாழ்ந்து வந்தனர். பணத்தை அளவுக்கு அதிகமாக சம்பாதித்தனர், பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காமல் நிந்தித்தனர், உலக சிற்றின்பங்களை அனுபவிப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். செல்வத்தில் நாடுகள் முன்னோக்கிப் போய்கொண்டிருந்தன, திட்டங்களை வகுப்பதில் அவை ஆர்வம் காட்டின. ஆனால் ஆண்டவருடைய நீடிய பொறுமைக்கும் ஒரு முடிவு வந்தது. கொரோனா என்ற ஒரு கிருமியை அவர் உலகம் சந்திக்க அனுமதித்தார். எல்லாவற்றையும் அது முடக்கிப் போட்டது. அது ஒருவரும் ஒன்றுமே செய்ய முடியாதபடியும், எங்கும் நகர முடியாதபடியும் செய்துவிட்டது. உலகம் முழுவதும் அதனால் பல இலட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள். அவ்வாறு நடந்ததற்கும் ஆண்டவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நினைக்கிறீர்களா? இது நிகழ்வதற்குப் பல வருடங்களுக்கு முன்பு ஆண்டவர் சுனாமியை அனுப்பினார், அப்போதும் இலட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள். என்னதான் ஆண்டவர் சற்று இடைவெளிவிட்டு தண்டனையைக் கொடுத்தாலும் மனிதன் திருந்துவதாக இல்லை. உருவ வழிபாட்டை விடுவதாக இல்லை. ஆண்டவர் எவ்வளவு காலந்தான் பொறுமையாக இருப்பார். பழைய ஏற்பாட்டில் இதுபோல பல சம்பவங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் நமக்கு எதை விளக்குகின்றன? ஆண்டவர் அநாவசியமாகத் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கமாட்டார். பழைய ஏற்பாட்டில் நடந்த சம்பவங்களைப்போல நம் வாழ்நாட்களில் நாமும் அவற்றைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது. ஆண்டவர் இன்றும் நம்மோடு பேசுகிறார். இஸ்ரவேலோடு ஆண்டவர் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பேசியதுபோல இன்றும் பேசுகிறார். அன்று எரிகோ பட்டணத்திற்கு சாபம் வந்ததன் மூலம் அவர்களோடு பேசினார். நாம் நம் முதல் பெற்றோர்கள் ஆதியில் செய்த பாவத்தின் காரணமாக ஏற்பட்ட சாபத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அந்தப் பாவம் நம் ஒவ்வொருவரின் மீதும் இறங்கியிருக்கிறது. அது நீக்கப்படாதவரையும் நமக்கு ஆபத்தே காத்திருக்கிறது. எரிகோ பட்டணம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
2. எரிகோ பட்டணத்திற்கு வந்த தீர்வு
அடுத்ததாக, எரிகோவின் பட்டணத்திற்கு எவ்வாறு தீர்வு ஏற்பட்டது என்பதைக் கவனிப்போம்.
2 இராஜாக்கள் 2:20-23
“அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.”
எலிசா ஒரு புதுத்தோண்டியில், அதாவது ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பைப் போட்டுக் கொண்டுவா என்றார். எலிசா அந்தப் பாத்திரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு நகரத்திற்கு எங்கிருந்து தண்ணீர் ஊற்று வந்ததோ அங்கு சென்று பாத்திரத்திலிருந்த உப்பை அதில் போட்டார். அதனால் அந்த தண்ணீர் ஆரோக்கியமாயிற்று என்று நாம் பார்க்கிறோம்.
இந்த அற்புதத்திலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ளலாம்? முதலாவதாக, இதை விளங்கிக்கொள்ளுவதற்கு இங்கு சொல்லப்பட்டிருக்கும் உப்பை வைத்து அநாவசியக் கதைகளைக் கட்டக்கூடாது. சில வேத விளக்கவுரையாளர்கள் கூட இந்த உப்பை வைத்துத் தேவையற்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். ஆண்டவர் அவ்வாறு விளக்கமளித்திருந்தால் தவிர மற்றபடி உப்பை உப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். உப்புக்கும் பாத்திரத்திற்கும் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் இந்த வேதப் பகுதி விளக்குகிற சத்தியத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. எலிசா உப்பைப் பயன்படுத்தியதற்கு காரணமிருக்கிறது. ஏனென்றால் நாம் 2 இராஜாக்கள் புத்தகத்தைத் தொடர்ந்து வாசித்தால் நடந்திருக்கும் அத்தனை சம்பவங்களிலும் ஏதோ ஒரு பொருளை எலிசா பயன்படுத்தியிருக்கிறார். ஆண்டவரின் அனுமதியோடுதான் அவ்வாறு பயன்படுத்தி வந்திருந்தார். ஆகவே அதில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. உப்பு இங்கே வெளிப்புறமான அடையாளமாக இருக்கிறது. அந்த உப்போடு கர்த்தருடைய வார்த்தை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. வார்த்தையினால்தான் அற்புதம் நடந்ததே தவிர உப்பினால் அந்த அற்புதம் நடைபெறவில்லை. உப்பு அங்கு பயன்படுத்தப்பட்டபோதும் உப்போடு வந்த எலிசாவின் வார்த்தைகளே அந்த அற்புதத்தைக் கொண்டுவந்தன. எலிசா என்ன சொல்லுகிறார்? “இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்” என்று சொல்லுகிறார். இதிலிருந்து கர்த்தருடைய வார்த்தை கர்த்தருடைய தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தருடைய மக்களுக்கு கிருபையைக் கொண்டுவந்ததைப் பார்க்கிறோம். இதுதான் கர்த்தர் எலிசாவின் மூலம் செய்த பெரிய அற்புதமாகும். ஒரு சின்ன பாத்திரத்தைக் கொண்டுவரச்சொல்லி வெறும் உப்பைப் பயன்படுத்தி யோசுவா காலம் முதல் ஆகாப் ராஜாவின் காலம் வரைக்கும் சபிக்கப்பட்டு யாருக்கும் பயன்படாதிருந்த நிலத்தையும் தண்ணீரையும் அவ்வளவு சீக்கிரத்தில் எலிசா மாற்றிவிட்டார். அந்தச் சாபத்திற்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். இதிலிருந்து நாம் எதைக் கவனிக்கிறோம்? கர்த்தருடைய கிருபையின் அற்புதத்தைப் பார்க்கிறோம். அது எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது என்பதை இங்கு பார்க்கிறோம். அது தேவனுடைய கிருபையின் மகத்துவத்தைக் காட்டுகிற அற்புதமாக இருக்கிறது.
3. எரிகோ பட்டணத்திற்கு வந்த கர்த்தரின் கிருபை
எரிகோ சபிக்கப்பட்ட நகரமாக இருந்தது. அவ்வாறு இருந்ததனால் அந்தப் பட்டணத்திற்குச் சென்று வாழலாம் என்று யாரும் சாதாரணமாக நினைக்கமாட்டார்கள். அது எல்லோரும் அறிந்திருந்த உண்மை; இரகசியமானதல்ல. அப்படிப்பட்ட அந்தப் பட்டணத்திற்கு ஆசீர்வாதமான கிருபை வந்து சேர்ந்திருக்கிறது. ஆண்டவர்தான் அந்த நகரத்திற்கு சாபத்தைக் கொண்டுவந்து தண்டித்தார். ஆனால் இப்போது சாபத்தை நீக்கி விடுதலையையும் கொண்டுவந்தார் என்று பார்க்கிறோம். இதுபோல வரலாற்றில் முன்பும் நடந்துள்ளது. என்றும் மாறாதவராக இருக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர் இதே காரியத்தை யாத்திராகமம் 15 ஆம் அதிகாரத்தில் செய்திருக்கிறார்.
யாத்திராகமம் 15:22-26
“பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.”
ஆண்டவர்தான் நமக்கு விடுதலையைக் கொண்டுக்கிறவர், அவரல்லாமல் யாருக்கும் விடுதலை வராது. மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தமாகும். இந்த கசப்பான தண்ணீர் குடிக்கக்கூடிய நல்ல தண்ணீராக மாறியது போல இங்கு சபிக்கப்பட்ட எரிகோவின் தண்ணீரும் நல்ல தண்ணீராக மாறியது. 2 இராஜாக்கள் 2 ஆம் அதிகாரத்தில் எதைக் காண்கிறோம்? ஒரு சாப நகரம் என்று பெயர் பெற்றிருந்த எரிகோ கிருபையின் நகரமாக மாறியது. அதைச் செய்தது எது? கர்த்தருடைய வார்த்தை கர்த்தருடைய தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தருடைய மக்களுக்கு அவருடைய கிருபையைக் கொண்டுவந்தது என்று பார்க்கிறோம்.
இதே நேரத்தில் லூக்கா 19 அதிகாரத்தையும் கவனிப்போம். யோசுவாவின் காலத்தில் சபிக்கப்பட்ட அந்த நகரம் ஆகாபின் காலம் வரை தொடர்ந்திருந்தது. எலிசாவின் காலத்தில் கிருபை அந்த நகரத்திற்கு வந்தது. லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் புதிய உடன்படிக்கைக் காலத்தில் இயேசு எரிகோவிற்கு வருகிறார். “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்” (லூக்கா 19:1) என்று வசனம் ஆரம்பிக்கிறது. அன்றைக்கு எரிகோவில் யாரைச் சந்திக்கிறார்? சகேயு என்ற ஆயக்காரனின் தலைவனைச் சந்திக்கிறார். 2 இராஜாக்களில் அந்த எரிகோ நகரம் குணப்பட்டதற்கு அங்கிருந்தவர்கள் ஆண்டவருக்கும் எலிசாவிற்கும் நிச்சயமாக நன்றி சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் ஆண்டவரை விசுவாசித்து அவரையே தேவனாக ஆராதித்திருப்பார்களா? அது நமக்குத் தெரியாது. அன்றைக்கு கிருபை கர்த்தரை நம்புவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. இப்போது இயேசு தன்னுடைய காலத்தில் சகேயுவிற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தார். அவனோடு கூட பலரும் நிச்சயமாக இயேசுவை விசுவாசித்திருப்பார்கள். எப்படியெனில் அவரே அங்கு சொல்லுகிறார்,
“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” (லூக்கா 19:10).
அவ்வாறு இழந்து போனவர்கள் எரிகோ பட்டணத்திலும் இருந்தார்கள். சபிக்கப்பட்டு விடுதலை எப்படி வந்ததோ அந்த நகரத்திற்கு இரட்சிப்பும் கிருபையின் மூலமாக வந்தது. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும் இயேசு வந்தார் என்று நாம் பார்க்கிறோம். இங்கு நாம் கர்த்தருடைய குணாதிசயத்தை நிச்சயமாக அவதானிக்கிறோம்.
மாறாத தேவனாக இருக்கிறேன் என்று சொன்னவர் இந்த சபிக்கப்பட்ட நகரத்திற்கு விடுதலை கொடுத்ததுபோல சபிக்கப்பட்டவர்களாக இருக்கிறவர்களுக்கும், நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறவர்களுக்கும் தன்னுடைய கிருபையினால் விடுதலையைக் கொடுக்கக்கூடியவர் என்று அறிகிறோம். உங்களைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இயேசுவை உங்கள் இருதயத்தில் கடவுளாகப் பார்க்காதவர்களாகவும், அவருடைய வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்டு ஆனந்தம் அடையாதவர்களாகவும், பாவத்திலிருந்து விடுதலை பெறாதவர்களாகவும் இருந்தால் உங்களுக்கு இது என்ன செய்தியைத் தருகிறது? ஆண்டவர் எவ்வாறு சபிக்கப்பட்ட பட்டணத்திற்கு விடுதலை கொடுத்தாரோ அதேபோல ஆண்டவருடைய கோபத்தையும் சாபத்தையும் சுமந்து கொண்டிருக்கிற உங்களுக்கு அவர் நிச்சயமாக தன்னுடைய கிருபையின் மூலமாக மன்னிப்புக் கொடுக்கிற தேவனாக இருக்கிறார். எரிகோ பட்டணத்து மக்கள் எலிசாவிடம் வந்து தண்ணீரில் இருக்கும் கேட்டை நீக்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்குக் கிடைத்த விடுதலையை அவர்கள் அனுபவிக்கும் எந்தவிதமான தகுதியும் அவர்களுக்கு இல்லை. ஆண்டவருடைய சாபத்தையும் பாவத்தையும் சுமந்து கொண்டிருக்கிற நாமும் கூட அவருடைய கிருபையை அனுபவிப்பதற்கு எந்தவிதமான தகுதியையும் கொண்டிருக்கவில்லை. பாவம் செய்து அதனால் வரக்கூடிய சாபத்தை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். அவருடைய கட்டளையை மீறினவர்களாக அவருக்கு முன்பாக நிற்கிறோம். தொடர்ந்தும் அவருடைய கட்டளையை மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கிருபை நமக்கு இரட்சிப்பைத் தருவதற்காகக் காத்திருக்கிறது. அந்த தேவன் மாறாதவராக இருக்கிறார். யார் யாரெல்லாம் மனந்திரும்பி தேவனிடத்தில் வருகிறார்களோ அவர்கள் எல்லாருக்குமே இலவசமாகத் தன்னுடைய கிருபையின் மூலமாக இரட்சிப்பைக் கொடுக்கிறார்.
பவுல் கலாத்தியர் நிருபத்தில்,
“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13) என்று சொல்லுகிறார்.
இயேசு மரத்திலே சபிக்கப்பட்டவராகத் தூக்கப்பட்டிருந்தார். ஏன் தெரியுமா? வேதம் சொல்லுகிறது, நாம் சபிக்கப்பட்டவர்களாக பாவத்தைச் சுமந்து நிற்கிறோம். நமக்கு விடுதலை தர இன்னொருவர் தேவை. இந்த உலகத்தில் எந்த மனிதனும் நீதிமானுமில்லை, பரிசுத்தமானவனும் இல்லை. இந்த உலகம் நமக்குப் பாவ விடுதலையைக் கொடுக்க முடியாது. நம் குடும்பத்திலுள்ள பெரியவர்களால் அதைச் செய்ய முடியாது. நம்முடைய பாவத்திலிருந்தும், நம்மைப் பிடித்திருக்கிற சாபத்திலிருந்தும் விடுதலை வேண்டுமென்றால் பரலோகத்திலிருந்து அதற்கான வழி செய்யப்பட்டால் தவிர நாம் தொடர்ந்தும் பாவிகளாகவே இருந்து தேவ கோபத்தை நித்திய நரகத்தில் அனுபவிக்கிறவர்களாகவே இருந்திருப்போம். ஆனால் தேவன் ஜீவனுள்ள ஒரே குமாரனை உலகத்திற்கு அனுப்பி அதற்கு ஒரு முடிவு கட்டினார்.
பூரணப் பரிசுத்தத்தையும் பூரண தெய்வீகத்தையும் தன்னுள் கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவை மனித ரூபத்திலே பிறக்க வைத்து நம்மேல் இருந்த சாபத்தைக் கர்த்தர் சிலுவையில் அவர்மேல் கொட்டினார் என்று பார்க்கிறோம். நமக்காக அவர் சாபமானார் என்று வேதம் சொல்லுகிறது. நம்மேல் இருந்த சாபமும் தேவ கோபமும் அவர்மேல் சுமத்தப்பட்டது. பூரணப் பரிசுத்தமுள்ள முழு தெய்வீகமுள்ள ஒருவரால் மட்டுமே அதைத் தாங்க முடியும். ஆகவேதான் வேதத்தில் பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்று மானுடத்தில் இயேசு கிறிஸ்து கதறியதாக நாம் வாசிக்கிறோம். யாருமே சுமந்திருக்க முடியாத சாபத்தையும், யாருமே சுமந்திருக்க முடியாத பாவத்தையும் தேவ கோபத்தையும் இயேசு தன்னில் சுமந்தது மட்டுமல்ல, அந்தக் கணத்தில் தன் பிதாவோடு பிரிந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வை அடைந்தார் என்பது பயங்கரமானது. அதனை இயேசு முழு விருப்பத்தோடு பிதாவின் வார்த்தைகளை ஏற்று நமக்காகச் செய்தார். இதிலிருந்து எதை அறிந்துகொள்கிறோம்? எப்படி எரிகோ பட்டணத்திற்குக் கிருபை வந்து சேர்ந்ததோ, அதுபோல இயேசு கிறிஸ்து தன் கிருபையினாலே நமக்கு விடுதலை கொடுப்பதற்காகத் தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் என்று பார்க்கிறோம்.
நாம் வாழும் காலத்திலும் தேவன் நம்முடைய பாவத்தையும், சாபத்தையும், தேவ கோபத்தையும் நீக்கி விடுதலையைக் கொடுப்பதற்கு கிறிஸ்து இயேசுவின் மூலமாகத்தான் கிரியை செய்து வருகிறார். ஏனென்றால் அதற்கான அனைத்தையும் கிறிஸ்து தன்னை ஒரே பலியாகச் சிலுவையில் கொடுத்து நிறைவேற்றி இருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் பாவத்திலிருந்து விலகி ஆண்டவரிடம் மன்னிப்பிற்காகப் போக வேண்டியதுதான். நம்முடைய பாவத்திலிருந்து நம்மைக் குணப்படுத்தி, நம் இருதயத்தை மாற்றி, அழிவில்லாத நித்திய ஜீவனைக் கொடுக்கிறவர் நான் மட்டுமே என்று இயேசு விளக்கியிருக்கிறார். அவர் நானே ஜீவ தண்ணீர் என்று சொல்லுகிறார். அந்த ஜீவ தண்ணீரை சமாரியா பெண்ணிற்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு வாழ்க்கை மாறிய அந்தப் பெண் தான் வாழ்ந்த நகரம் முழுவதும் அதைப் பற்றி அறிவித்ததால் அநேகர் அந்தத் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளுவதற்காக அவரிடம் வந்தார்கள் என்று பார்க்கிறோம்.
- நீங்கள் ஏன் இன்னும் தள்ளி நிற்கிறீர்கள்?
- இதை வாசிக்கும் நேரத்தில் உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது?
- இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராக விசுவாசித்து பாவ மன்னிப்பைப் பெற்று விடுதலை அடைந்தவர்களாக நித்திய ஜீவனை அனுபவிக்கிறவர்களாக அவரையே ஆராதித்து வாழ்கிறீர்களா?
- இல்லையெனில் சபிக்கப்பட்ட எரிகோ பட்டணத்தைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?
- ஆண்டவருடைய சாபத்தையும் பாவத்தையும் சுமந்து தேவ கோபத்தையும் உங்கள் மேல் தாங்கி வரப்போகிற நியாயத்தீர்ப்பிலே அழிவைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறீர்களா?
- அப்படி வாழ்ந்து வந்தால் உங்களுக்கொரு நல்ல செய்தி இருக்கிறது. சபிக்கப்பட்ட எரிகோவிற்கு வந்த விடுதலையைக் கர்த்தர் உங்களுக்கும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். அது கிருபையின் மூலமாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து மட்டுமே வருகிறது.
இன்றைக்கு நீங்கள் உங்கள் பாவத்திலிருந்து விலகி இயேசு மட்டுமே மெய்யான தேவன், தன்னுடைய மகா கிருபையின் மூலமாக எனக்கு விடுதலை தரத் தயாராக இருக்கிறாரே! எனக்குத் தேவையான எல்லாவற்றையும் சிலுவையில் செய்திருக்கிறாரே! அந்த இயேசுவை நான் விசுவாசிக்கிறேன். இன்று முதல் அவருக்காக மட்டுமே நான் வாழப் போகிறேன் என்று நீங்கள் அவரைப் பின்பற்றினால் உங்களுக்கும் எரிகோவிற்குக் கிடைத்த விடுதலை நிச்சயம் கிடைக்கும். இந்த நாள் கிருபையின் நாளாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?
- தொடர்ந்து பாவத்தோடும் சாபத்தோடும் வாழப் போகிறீர்களா?
- இல்லையெனில் அதற்கெல்லாம் இயேசுவிடம் விடுதலை அடைந்து ஒரு புதிய மனுஷனாக மனுஷியாக வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறீர்களா?
நீங்கள்தான் அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வரலாறு இங்கு எழுதி வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமே நாம் அதை வாசித்துச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான். மனுஷனும் மனுஷியும் சிந்திக்காமல் இருப்பதுபோல மோசமானது ஒன்றுமேயில்லை. ஏற்கனவே சொன்னதுபோல ஆண்டவருடைய பொறுமைக்கும் ஒரு முடிவு இருக்கிறது. அவர் என்றென்றும் பொறுமையாக இருக்கிற தேவன் இல்லை. அவருடைய பொறுமை ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதைத்தான் இந்தக் காலம் நமக்கு உணர்த்துகிறது.
- இன்னும் மனந்திரும்பாமல் வாழப் போகிறீர்களா?
- அல்லது இலவசமாக இயேசு கொடுக்கிற கிருபையின் இரட்சிப்பைப் பெற்றுக் கரையேறப் போகிறீர்களா?
ஆண்டவரிடமே இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் சொல்லுங்கள்.
பெத்தேலில் பயங்கரம்
2 இராஜாக்கள் 2:19-22
இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 2:23-25 வரையிலுள்ள வசனங்களை ஆராய்வோம். இந்த வசனங்களை வாசிக்கிறபோதே மனத்தில் ஒரு பயம் ஏற்படும். மேலும் இந்தப் பகுதிக்கு விளக்கவுரை எழுதிய பல விரிவுரையாளர்கள் இது நம் காலத்திற்குப் பொருந்தி வராத கட்டுக்கதை என்று விளக்கியிருக்கிறார்கள். அது எப்படி ஆண்டவருடைய மனிதனான ஒரு தீர்க்கதரிசி இப்படிக் கோபப்பட்டுச் சபித்து இத்தனை பேரைக் கரடிகளைப் பயன்படுத்திக் கொல்ல முடியும் என்பது அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் வேதம் நம் கையில் கொடுக்கப்பட்டிருத்தும் தெய்வீக வழிநடத்தலை நம்புகிறவர்கள் அதில் தவறொன்றும் இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள். அதாவது வேதம் பரிசுத்த ஆவியினாலே ஊதி அருளப்பட்டிருக்கிறது என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார், அது மனிதனின் சிந்தனையில் இருந்து வெளிப்படவில்லை. மனிதர்களை வைத்து ஆவியானவர் அதை எழுத வைத்தாலும் எதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்தாரோ அந்த விஷயங்களை மட்டும் ஒரு வார்த்தையும் விடாமல் உள்ளது உள்ளபடியே அவர்களைக் கொண்டு எழுத வைத்தார். அந்தமுறையில் நம் கையில் வந்து சேர்ந்ததுதான் வேதம். அவசியத்தின் அடிப்படையில் தெய்வீகத் தேவையின் காரணமாக இந்த இரண்டாவது அதிகாரத்தின் கடைசி வசனங்கள் வேதத்தில் பதியப்பட்டிருக்கின்றன.
இந்த வசனங்களுக்கு முந்தைய வசனங்களில் எலிசா இப்போது எரிகோ பட்டணத்தில் இருக்கிறதை நாம் வாசிக்கிறோம். அந்த எரிகோ பட்டணத்தில் நடந்த அற்புதத்தை இதற்கு முந்தைய ஆக்கத்தில் நாம் விரிவாகக் கவனித்தோம். யோசுவா காலத்தில் சபிக்கப்பட்ட பட்டணமாக அது இருந்தது. அந்தப் பட்டணத்தில் இருந்த தண்ணீர் ஊற்றுக்களிலெல்லாம் நச்சுத்தன்மை பரவி இருந்தது. அதனால் அதைக் குடித்த பெண்களுக்குக் குழந்தைகளைப் பெற முடியாத அளவுக்கு அது மோசத்தை உண்டாக்கி இருந்தது. அப்படியிருந்த அந்த நீரூற்றுகளை எல்லாம் எலிசா நல்ல நீரூற்றுகளாக மாற்றினார். சபிக்கப்பட்ட அந்த எரிகோ பட்டணத்தின் சாபம் அகற்றப்பட்டு ஊருக்கு நன்மை கிடைத்தது என்று பார்த்தோம். அங்கிருந்த மக்கள் நிச்சயமாக எலிசாவிற்குப் பெரு நன்றியைத் தெரிவித்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்டவரையும் அவர்கள் மகிமைபடுத்தியிருப்பார்கள். எலிசா வந்த வேலை முடிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட வேண்டும். ஒரு முக்கிய காரணத்திற்காக எரிகோ பட்டணத்திற்கு ஆண்டவர் எலிசாவை அழைந்து வந்தார். தெய்வீக வழிநடத்துதலின்படி அவர் இப்போது நகரைவிட்டுப் போகவேண்டியிருந்தது. கர்த்தரின் வழிப்படி அடுத்த கட்ட ஊழியத்தை அவர் ஆரம்பிக்க வேண்டும். எரிகோவைவிட்டுப் புறப்பட்டு அவர் போன நகரம் பெத்தேல். “அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்” (2 இராஜாக்கள் 2:23) என்று வாசிக்கிறோம்.
ஆண்டவருடைய சித்தமில்லாமல் எலிசா பெத்தேலுக்கு போயிருக்கமாட்டார். அவர் பெத்தேலில் செய்ய வேண்டிய ஒரு காரியம் இருந்தது. எலிசாவின் வழிகள் கர்த்தரால் வழிநடத்தப்பட்டவையாக இருந்தன. அந்தவகையில்தான் அவர் இம்முறை பெத்தேலுக்கு வந்தார். அதை விவரிக்கும் வேதம்,
2 இராஜாக்கள் 2:23-24
“அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள். அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது” என்கிறது.
இந்த சம்பவத்திற்கு முன்பு எரிகோ பட்டணத்தில் நடந்த அருமையான நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். ஆனால் பெத்தேலுக்கு எலிசா வந்தபோது இத்தனை கோரமான நிகழ்வு நடைபெறுவதைப் பார்க்கிறோம். முன்பு நாம் வாசித்த வசனங்களில் எரிகோ பட்டணத்திற்கு சந்தோஷம் வந்ததைப் பார்க்கிறோம். இங்கு வன்முறையை நாம் பார்க்கிறோம். எலிசாவின் சாபத்தினாலே கரடிகள் அத்தனை பேரை அங்கு கொன்றுபோட்டதைக் கவனிக்கிறோம். எரிகோ பட்டணத்தில் மனந்திரும்புதல் இருந்தது, ஒப்புரவாகுதல் இருந்தது, தேவனுடைய சமாதானம் மக்களுக்குக் கிடைத்தது. ஆனால் இங்கேயோ பாவத்தைப் பார்க்கிறோம், பாவத்தினால் ஏற்பட்ட சாபத்தைப் பார்க்கிறோம், நியாயத்தீர்ப்பைப் பார்க்கிறோம். எவ்வளவு வேகமாக நிகழ்ச்சிகள் மாறிவிட்டன என்பதைக் கவனிக்கிறோம். ஒரு நகரத்தில் ஆனந்தமாக மக்கள் சந்தோஷத்தை அனுபவித்து கடவுளை மகிமைப்படுத்தின நிலையிலிருந்து, இன்னொரு நகரத்தில் ஒரு கோரமான நிகழ்ச்சிக்கும் மிகவும் துக்ககரமான நிலைக்கும் மக்களின் நிலைமை மாறியதை நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் தாழ்மையானவரான எலிசா இங்கு மிகவும் கோபமுள்ள ஒரு தீர்க்கதரிசியாக பழிவாங்கும் விதத்தில் பெத்தேல் வாலிபர்களைச் சபித்து அவர்கள் அகோரமாக மாண்டுபோனதைப் பார்க்கிறோம்.
எலிசா ஏன் அவர்களைச் சபித்தார்? தமிழ் வேதத்தில் இந்தப் பகுதியில் ‘அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் என்று சொன்னால் இரண்டிலிருந்து ஐந்து வயதுள்ள சிறுபிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொள்ளுவோம். ஆனால் அந்த வார்த்தையை மூல மொழியான எபிரெய மொழி அந்தமுறையில் பயன்படுத்தவில்லை. ஆங்கில வேதத்தில் அதை வாலிபர்கள் (Youths) என்று மொழிபெயர்த்துள்ளனர். NASB என்ற ஆங்கில வேதத்தில் இளம் வாலிபர்கள் (Young lads) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் சிறுபிள்ளைகள் அல்ல, வாலிப வயதில் இருந்தவர்கள். அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்திருந்தது. நான்கைந்து வயதுள்ள சிறுபிள்ளைகளாக இருந்திருந்தால் அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் செய்திருப்பார்கள். ஆனால் இங்கிருந்த வளர்ந்த வாலிப பையன்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்கள் உலகம் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை நிந்தித்தார்கள். அதாவது மிகவும் அசிங்கமாகப் பேசுவது, அவமானப்படுத்துவது, கேவலமாக ஒரு மனிதனை நடத்துவது போன்றவை அதில் அடங்கும். அவர்கள் அவ்வாறு எலிசாவின் இருதயத்தில் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படச் செய்திருக்கிறார்கள். அந்த வாலிபர்கள் தீர்க்கதரிசியை அன்பாகவோ, கனிவாகவோ, மரியாதையுடனோ நடத்தவில்லை. அவர்கள் யாரோ முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதனை நித்திக்கவில்லை; அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது யார் இந்த மனிதனென்று. அந்த நாட்டில் ஆண்டவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு தீர்க்கதரிசியை அவர்கள் நிந்தித்து அவமானப்படுத்தியிருந்தனர். அதனால்தான் ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பு அந்த வாலிபர்கள் மீது வந்தது என்று பார்க்கிறோம். அன்று அங்கிருந்த வாலிபர்களின் மொத்தத் தொகையை வேதம் நமக்கு விளக்கவில்லை. “அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது” என்று வேதம் சொல்லுகிறது. அவர்களில் என்று சொல்லுகிறபோது அங்கு இருந்தவர்களில் நாற்பத்திரண்டுபேரைக் கரடி கொன்று போட்டிருக்கிறது என்று அறிகிறோம். அன்று பெருந்தொகை வாலிபர்கள் அங்கிருந்திருக்கலாம். அநேக வாலிபர்கள் அன்று தப்பிப்போயிருக்கிறார்கள். ஆனால் கோரமான முறையில் இறந்து போனவர்கள் நாற்பத்திரண்டு பேர். அன்று ஒன்று இரண்டு பேர் சாகவில்லை, ஒரு பெரிய கூட்டத்தில் நாற்பத்திரண்டு பேரை அந்த இரண்டு கரடிகளும் சின்னாபின்னமாக்கிக் கோரமாகக் கொன்று போட்டிருந்தன என்று அறிந்துகொள்கிறோம்.
இந்தப் பகுதியிலிருந்து மூன்று விஷயங்களை நாம் கவனிப்போம்.
முதலாவதாக, நிந்தனை ஆரம்பித்த விதம்
எலிசா தீர்க்கதரிசியை இளம் வாலிபப் பிள்ளைகள் நிந்தித்தார்கள். அது எப்படி ஆரம்பித்தது? எரிகோவில் தன்னுடைய பணிகளை முடித்த எலிசா இப்போது பெத்தேலுக்கு வந்தார். பெத்தேல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேவனுடைய வீடு என்பதாகும். பெத் (Beth) என்ற வார்த்தைக்கு அர்த்தம் வீடு. எல் (El) என்ற வார்த்தை ஆண்டவரைக் குறிப்பதாகும். இது அந்த இடத்திற்குத் தற்செயலாகக் கொடுக்கப்பட்ட பெயர் அல்ல. பெத்தேல் நகரம் ஆண்டவருக்கு மகிமை கொடுத்த நகரமாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அது அநேக காலங்களுக்கு முன்பு. அந்த நகரம், தேவனுடைய வீடு என்று இருந்தது, ஆனால் அந்தப் பெயர் பின்பு மாற்றப்பட்டுவிட்டது. பெத்தேல் என்பது பெத்தாவேன் என்று மாற்றப்பட்டது. பெத்தாவேன் என்ற வார்த்தைக்கு மாயையின் நகரம் அல்லது பழிவாங்குதலின் நகரம் என்று பொருள்படும். இதனை நாம் ஓசியாவில் வாசிக்கிறோம்,
ஓசியா 10:5
“சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்” என்று வாசிக்கிறோம்.
கன்றுக்குட்டி என்பது யெரொபெயாம் சிலையாக ஏற்படுத்தி மக்களை வணங்க வைத்த கன்றுக்குட்டியாகும். (இந்த வசனத்தில் ‘அதின்’ என்ற வார்த்தை மூன்று தடவைகள் வந்திருக்கின்றன. அது பழங்காலத் தமிழ் வார்த்தை. இன்று அந்த வார்த்தையை எவரும் பயன்படுத்துவதில்லை; எவருக்கும் அது புரியாது. அதை ‘அதன்’ என்றே நம் காலத்தில் எழுத வேண்டும்.)
தேவனுடைய வீடாக இருந்த நகரம் இவ்வாறு மாயையின் நகரமாக அல்லது பழிவாங்குதலின் நகரமாக (பெத்தாவேன்) மாறியதற்குக் காரணமென்ன? 1 இராஜாக்கள் 12:26-33 வசனங்கள் அதற்கான காரணத்தை நமக்குத் தருகிறது.
“யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து, தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.”
இதெல்லாம் யெரொபெயாம் செய்த காரியங்களாகும். அது சாதாரணமான காரியமல்ல, தேவனுடைய வீடு என்று சொல்லப்பட்ட ஒரு பட்டணம் பழிவாங்குதலின் நகரம் என்று பெயர் வாங்குகிற அளவுக்கு அவன் செய்த மோசமான பாவமாக இருந்தது. யெரொபெயாம் இதையெல்லாம் தன் சுயநல நோக்கத்திற்காகச் செய்தான். மக்கள் தன் வழியில் போகவேண்டும் என்பதற்காக அவர்களைக் கர்த்தருடைய வழியில் போகவிடாமல் போலித்தனமான ஒரு ஆராதனையையும் போலி தெய்வங்களையும் உருவாக்கி ஆராதிக்க வைத்தான். எந்தவொரு மனிதனும் கர்த்தருக்கு எதிராக ஒரு பாவத்தை செய்கிறபோது அல்லது கேட்டைச் செய்கிறபோது அதெல்லாம் சாதாரணமானதுதான், பெரிய தவறு இல்லை என்று நம்ப வைக்கத்தான் சகல முயற்சிகளையும் எடுப்பான்.
அதிக கேடான பாவத்தை செய்தவனிடம் நீங்கள் பேசிப்பார்த்தால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல என்று நாம் நினைக்கும்படிதான் பேசுவான். யெரொபெயாமும் அப்படித்தான் செய்தான். அவன் ஆண்டவருடைய மக்களிடத்தில் வந்து கன்றுக் குட்டிகளைக் காட்டி இவைகள்தான் எகிப்திலிருந்து நம்மைக் கூட்டிவந்த தெய்வங்கள் என்று சொன்னான். அவைகளை நாம் ஆராதிக்க வேண்டுமென்று சொன்னான். அவன் வார்த்தைகளில் பொய் இருந்தது, அவன் வார்த்தைகளிலும் செயல்களிலும் மாயமும், ஏமாற்றுத்தனமும் இருந்தன. அவன் இருதயம் எந்தளவுக்கு இருளடைந்து போயிருந்தது என்பதை அது காட்டியது. அவன் இருதயத்தில் ஒரு துளியும் தேவபயம் இல்லாமல் இருந்தது. ஆண்டவருக்கு எதிராகத் தீவிரமாக அவன் நடவடிக்கைகளை எடுத்துத் தான் செய்யும் செயல்களை ஆண்டவரே செய்யச் சொன்னார் என்பதைப் போல மக்களைத் திசை திருப்பி ஏமாற்றினான்.
இதைப்பற்றி எழுதுகிறபோது எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது, இன்று நம் சமுதாயத்தில் இருக்கின்ற பெரும்பாலான பாரம்பரிய சபைகளும், தனிப்பட்ட முறையில் இயங்குகிற சபைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இவைகள் கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரை வைத்துக்கொண்டு எந்தவித மனசாட்சியும் இல்லாமல், வேதத்தையும் அறிந்திராமல், ஆண்டவருக்குக் கொஞ்சமும் பயப்படாமல், போலிப் பிரசங்கங்களைச் செய்து, மேளமடித்து ஆண்டவர் தன் பிரசன்னத்தை அறியத் தரும் சபையை ஒரு களியாட்டுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். யெரொபெயாம் செய்ததற்கும் இவர்கள் இன்றைக்கு செய்து வருகிறதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்னைப் பொறுத்தளவில் ஒரு வித்தியாசமும் இல்லை. அநேக சபைகளுக்குப் போய் பார்க்கிறபோது அங்கு தேவ பயத்திற்கே இடமில்லாமல் இருக்கிறது. அது இன்றைக்கு சபையில் காணப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அல்பர்ட் என். மார்டின் எழுதிய தேவபயம் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறோம். தேவபயம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள அதை வாங்கிப் படித்துப்பாருங்கள். அவ்விதமான தேவபயம் போதகர்களுக்கும் இல்லை; சபைகளிலும் இல்லை. போதகர்கள், மக்களைத் தங்கள் வசப்படுத்தி அவர்களை அதிகமாகக் காணிக்கை கொடுக்க வைத்து கூட்டத்தைச் சேர்த்து ஆண்டவரின் பெயரை நிந்தித்து வருகிறார்கள். வேதம் ஆராதனையைப் பற்றித் தந்திருக்கின்ற போதனைகளை அறிய விரும்பாமலும், அது பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமலும் ஓய்வுநாளில் அவர்கள் செய்துவருகிற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போயிருக்கின்றன. யெரொபெயாம் செய்ததற்கும் இவர்கள் இன்று செய்து வருவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
யெரொபெயாம் செய்த செயலில் இரண்டு பாவங்களைப் பார்க்கிறோம். முதலாவதாக, கடவுளுடைய பெயரைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தினான். அவன் கடவுளை அடியோடு துப்பரவாகத் தூக்கி எறிந்துவிடவில்லை. அவன் கன்றுக்குட்டிகளை உருவாக்கி மக்களிடம், நான் உருவாக்கிய இந்தக் கன்றுக்குட்டிகளை மட்டுமே வணங்க வேண்டும், இஸ்ரவேலின் தேவனை வணங்கக்கூடாது என்று சொல்லவில்லை. அவன் அந்த சிலைகளை மக்களிடம் காட்டி, உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்த தேவன் இந்த சிலைகள் என்று சொன்னான். இது ஆண்டவருடைய பெயரைப் பயன்படுத்தி செய்த ஏமாற்றுத்தனமாகும். இதுபோன்ற ஏமாற்றுத்தனத்தை இன்றைக்கு எத்தனையோ பேர் செய்து வருகிறார்கள். ஒரு வேத வசனத்தை எடுத்து அதை ஆழமாக ஆராய்ந்து படிக்காமல் அந்த வசனத்திலிருந்து ஒரு தவறான போதனையைக் கொடுத்து மக்களை நம்ப வைக்கிறார்கள். யெரொபெயாம் செய்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? யெரொபெயாம் ஆண்டவருடைய பெயரைத் தன் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டான். இது ஒரு பெரிய பாவம்.
இரண்டாவதாக, ஆண்டவருடைய ஆராதனையை அவன் அடியோடு தூக்கியெறிந்துவிடவில்லை. அந்த ஆராதனையில் இவன் அநேக காரியங்களை இணைத்துக்கொண்டான். தனக்குப் பிடித்த காரியங்களைத் தனக்குப் பெருமை வரவேண்டும் என்பதற்காக ஆராதனையில் சேர்த்துக் கொண்டான். அவன் ஏற்படுத்திய ஆராதனை முறைக்கு ஆங்கிலத்தில் Normative principle of worship என்று சொல்லுவார்கள். அதாவது யெரொபெயாம், ஆண்டவரைத்தான் ஆராதிக்க வேண்டும், ஆனால், அந்த ஆராதனையை நான் கொஞ்சம் மேன்மைப்படுத்தி இன்னும் சிறப்பாக மாற்றியிருக்கிறேன் என்று சொல்லுகிறான். சீர்த்திருத்த சபைகளாகிய நம்மைப் பார்த்து அநேகர், என்ன வெறும் சங்கீதங்களையும், கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டு இருக்கிறீர்கள், அது நன்றாகவா இருக்கிறது என்று அநேகர் சொல்லுவார்கள். சினிமாப் படப் பாடல்களைப் போல ராகங்கள் இருந்தால்தான் மனதிற்கு குளுகுளுவென்று இருக்குமென்று சொல்லுவார்கள். பெர்க்மென் பாடல்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும். அநேகருக்கு அவற்றைப் பாடினால்தான் பரலோக இன்பம் கிடைத்தது போல உணருவார்கள், ஆனால் பேர்க்மன் அடிப்படையில் ஒரு கத்தோலிக்க கெரிஸ்மெட்டிக் என்பது கூடத் தெரியாமல் அம்மனிதரின் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்தளவுக்கு அறியாமையில் வாழுகிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறார்கள். நாம் பாடுகிற பாட்டுப் புத்தகத்தில் இருக்கும் பாடல்கள் சத்தியம் தெரிந்த பக்திமான்களாகிய மனிதர்களால் எழுதப்படாமல் இருந்தால், அவை வேத சத்தியங்களையும் இறையியல் உண்மைகளையும் கொண்டிராமல் இருந்தால், அந்தப் பாடல்களை ஆண்டவருக்காக நாம் பாடக்கூடாது. நாம் நிச்சயமாக ஆராய்ந்து தெரிந்தெடுக்கப்பட்ட இறையியல் அர்த்தம் நிறைந்த பாடல்களைத்தான் ஆண்டவருக்காகப் பாட வேண்டும். நிச்சயம் அதில் இராகம் இருக்க வேண்டும், அதில்லாமல் பாட்டுப்பாட முடியாது. ஆனால் அது தேர்ந்தெடுத்த இராகங்களாக இருக்க வேண்டும். கர்த்தருடைய ஆராதனையில் பாடவேண்டிய பாடலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய இராகத்திற்கும் பாப் இசைக் கச்சேரியில் வாசிக்கிற இராகத்திற்கும் வித்தியாசம் இல்லாவிட்டால் அது கிறிஸ்தவ ஆராதனையாக இருக்க முடியாது. அதை அறிந்திராதவன் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. நம் சரீரங்களை அசைத்து ஆட வைக்கின்ற இராகங்கள் நமக்குத் தேவையில்லை. ஆண்டவருடைய சந்தோஷத்தை உண்மையாக இருதயத்தில் ஏற்படுத்துகின்ற இராகங்களைக் கொண்ட பாடல்களை நாம் பாடவேண்டும். Normative principle of worship என்ற தத்துவம் நாம் ஆண்டவரை ஆராதித்தால் போதும், ஆனால் அவரை நாம் எந்தவிதமாக, எவற்றைப் பயன்படுத்தி ஆராதிக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது என்று விளக்குகிறது. அதற்குக் காரணம் அத்தகைய ஆராதனை பற்றிய தெளிவான விளக்கங்களை வேதம் தரவில்லை என்று இந்தப் போதனையைப் பயன்படுத்துகிறவர்கள் கொக்கரிக்கிறார்கள். யெரொபெயாம் ஏற்படுத்தியதுபோல இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஆராதனை முறை. ஆனால் கர்த்தர் அத்தகைய ஆராதனை முறையை சபைக்கு ஏற்படுத்தவில்லை.
மனிதன் ஏற்படுத்தின வழியைப் பின்பற்றிதான் இன்று அநேகர் நாம் ஏன் வீட்டிலிருந்து கர்த்தரை ஆராதிக்க முடியாது? என்று கேட்கிறார்கள். அவர்கள் கட்டிலில் ஆயாசமாக சாய்ந்துகொண்டு தேவ செய்தியைக் கேட்கும் வசதிக்காக அலைகிறார்கள். ஆனால் அத்தகைய சிந்தனையும், செயலும் அவர்களுக்குச் சாபமாக மாறப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஆண்டவருடைய வழிநடத்துதலின்படி காணப்படும் ஆராதனையே நமக்கு அவசியமே தவிர, எது நமக்குப் பிடித்தமானதாக இருக்குமென்று சிந்தித்து தனக்குப் பிடித்த விதத்தில் ஆராதனையை ஏற்படுத்துவது முழுத் தவறு. ஆகவே இந்த யெரொபெயாம் ஏற்படுத்தின ஆராதனை தத்துவம் உலகத்தைச் சார்ந்தது, ஆண்டவர் அதைக் கொடுக்கவில்லை.
ஆண்டவர் ஆராதனையை எப்படி வடிவமைத்திருக்கிறார்? சுருக்கமாக விளக்குவதானால், நாம் ஆண்டவரை ஆராதிக்க வேண்டும், அந்த ஆராதனையை அவர் ஏற்படுத்தித் தந்திருக்கின்ற வழிமுறையின்படி ஆராதிக்க வேண்டும் என்று விளக்கலாம். அந்த வழிமுறைகள் எங்கு காணப்படுகின்றன? அவற்றைப் பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களை வாசித்து அறிந்துகொள்ளலாம். அந்த ஆராதனை முறைக்குப் பெயர்தான் வரையறுக்கப்பட்ட ஆராதனை தத்துவம் (Regulative principle of worship). இதனை வேதத்திலிருந்து பெயர்த்தெடுத்து 1689 விசுவாச அறிக்கையில் ‘ஆராதனையும், ஆண்டவருடைய நாளும்’ என்ற தலைப்பின் கீழ் ஒரு தனி அதிகாரத்தில் நமது முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
யெரொபெயாம் திட்டமிட்டுக் கேடான இருதயத்தோடு மக்களைத் திசை திருப்பும்விதமாகத் தவறான ஆராதனையை ஏற்படுத்தியதால் மக்கள் அவன் வலையில் விழுந்துபோனார்கள். அதன் மூலம் மக்களுடைய பாராட்டை அவன் பெற்றிருக்கலாம், அது அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்திருக்கலாம், ஆனால் அது மோசமான பாவமாக இருந்தது. வேதம் விளக்குகிறதை நாம் செய்யவேண்டுமே தவிர மக்களுடைய பாராட்டு நமக்கு முக்கியமில்லை. யெரொபெயாம் நாட்டு மக்களை ஏமாற்றினான்.
1 இராஜாக்கள் 14:8-11 வசனங்களில்,
“நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல், உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய். ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம் பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார். யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்” என்று சொல்லப்பட்டுள்ளது.
யெரொபெயாம் செய்தது சாதாரணமான பாவமாக இருந்திருந்தால் ஆண்டவர் இந்தளவுக்கு அவன் சந்ததியையே இல்லாமல் ஆக்குவேன் என்று சொல்லுவாரா? Normative principle of worship எங்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். இருதயம் கடினப்பட்டுப் போய் ஆண்டவருடைய வார்த்தைகளை மீறித் திமிரோடு செய்கிற காரியங்களை ஆண்டவர் சும்மா விடமாட்டார். அன்றைக்கு யெரொபெயாம் செய்த பாவத்தின் சாபம் இன்றைக்கு சபையில் அதைச் செய்து வருகிறவர்கள் மேல் நிச்சயமாக இருக்கிறது. என்ன நீங்கள் இப்படியெல்லாம் சொல்லுகிறீர்கள்? அதெல்லாம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில்தான் நடந்தவை, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நடக்கப்போவதில்லை என்று நீங்கள் தவறாகச் சொல்லலாம். ஆனால் நான் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு சொன்னதையே சொல்லுகிறேன். அவர் பழைய ஏற்பாட்டில் ஏற்படுத்தின ஆராதனைத் தத்துவ முறைதான் புதிய ஏற்பாட்டிலும் இருக்க வேண்டுமென்று நியமித்துள்ளார். நாம் யெரொபெயாம் மாதிரி நடந்து பழைய ஏற்பாட்டு ஆராதனை முறை வேறு, புதிய ஏற்பாட்டு ஆராதனை முறை வேறு என்று சொல்லுவதெல்லாம் போலித்தனமாகும். லேவியர்கள் செய்த சடங்குகள், செலுத்தின தகனபலிகளை நாமின்று செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால் அன்றைக்கு ஆண்டவர் ஏற்படுத்தித் தந்திருக்கும் அடிப்படை ஆராதனை தத்துவம் எக்காலத்திலும் மாறாதவை. என்ன அந்த தத்துவம்? அவரை மட்டும் ஆராதிக்க வேண்டும், அவர் ஏற்படுத்தின வழிமுறைகளை மட்டும் பின்பற்றி அவரை ஆராதிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆராதனைத் தத்துவம்.
யெரொபெயாம் பத்துக் கட்டளைகளில் நான்கு கட்டளைகளை மீறியிருக்கிறான். அது சாதாரணமான செயலல்ல.
யாத்திராகமம் 20:3-11
முதலாவது கட்டளை
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
இரண்டாவது கட்டளை
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
மூன்றாவது கட்டளை
7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
நான்காவது கட்டளை
8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.”
இதற்குமேல் ஆண்டவர் எதைத் தெளிவாகச் சொல்ல முடியும்? கன்றுக் குட்டியைக் கொண்டுவந்து வைத்து அது தான் ஆண்டவர் என்று சொன்னால் அது பாவம். கன்றுக்குட்டி மட்டுமல்ல, வேறு எதன் மூலமும் நாம் ஆண்டவரை நாம் ஆராதிக்க முடியாது. இங்கு விசாரிக்கிறேன் என்று (யாத்திராகமம் 20:5) ஆண்டவர் சொல்லுவதை ஏதோ நலமாக இருக்கிறீர்களா என்று கேட்பது போல் எடுத்துக்கொள்ளக்கூடாது. மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் நான் நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் வாரத்தின் ஒரு நாளை ஓய்வுநாளாக ஏற்படுத்தி வைத்திருக்கிறபோது நாம் திமிரோடு இன்னொரு நாளை ஓய்வுநாளாக ஏற்படுத்தக் கூடாது. ஓய்வு நாளில் உன் வீட்டிலிருக்கிற மாட்டைக் கூட வேலை செய்ய வைக்கக்கூடாது என்கிறார். ஆனால் நீங்கள் எப்படி துணிகரமாக அந்நாளில் உலகத்து வேலைகளைச் செய்கிறீர்கள்? படைத்த ஆண்டவரே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தபோது, அவரை ஆராதிக்க வேண்டிய நீங்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருப்பதற்கும் ஆராதிப்பதற்கும் மறுப்பதற்குக் காரணமென்ன? யெரொபெயாம் என்ன செய்தான்? அவன் சந்ததியையே பாகால் வணக்கத்திற்கு கொண்டுபோய் விட்டான். அந்த சந்ததியில் பிறக்கிற பிள்ளை எப்படி இருக்கும்? தேவனுடைய வீடான பெத்தேல், பலிவாங்குதலின் நகரமான பெத்தாவேன் என்று எப்படி மாறியது என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? ஆண்டவரையும் அவர் வழிகளையும் நாம் விட்டு விலகிப் போகிறபோது உலகத்திலிருக்கிற அத்தனைக் கேடுகளும் நம்மோடு வந்து ஒட்டிக்கொள்ளும்.
யெரொபெயாம் செய்து வைத்த பாவம் பயங்கரமான பாவம். அவன் சந்ததியில் வந்த வாலிபர்கள் எலிசாவை நிந்தித்தது நாற்பத்திரண்டு பேர் மட்டுமல்ல, அங்கிருந்த எல்லோரும் அப்படிதான் செய்திருப்பார்கள். அன்று அங்கிருந்த அனைத்து வாலிபர்களும் கேடாக நடந்து தீர்க்கதரிசியைக் கேவலமாகப் பேசி நிந்தித்தற்குக் காரணமென்ன? அது அவர்களுடைய பெற்றோர்கள் வளர்த்த முறை மட்டுமல்ல, அவர்களின் ஆராதனை முறையும், அதோடு சேர்ந்து வந்த அத்தனைக் கேடுகளுந்தான் காரணம். இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளுகிறோம்? இன்றைக்கு நம் காலத்தில் யெரொபெயாம் ஆராதனைதான் நடந்துகொண்டு இருக்கிறது. அத்தகைய ஆராதனையில் கலந்துகொள்ளுகிற வாலிபர்கள் நடந்துகொள்ளும் முறையைக் கவனித்துப் பாருங்கள். பெரியோர்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள், மிகவும் கேவலமாக நடந்துகொள்ளுவார்கள். பாட்டும் நடனமும் களியாட்டமும் மட்டுமே அவர்களுக்குக் கிறிஸ்தவமாகத் தெரியும். யெரொபெயாம் ஆராதனை முறையை நாம் எல்லா சபைகளிலும் காண முடியும். அவர்கள் இயேசுவை ஒரு கையில் வைத்துக் கொண்டு இந்த உலகத்து வாழ்க்கையை இன்னொரு கையில் வைத்திருக்கிறார்கள். எத்தனையோ சபைகளில் வாலிபர்கள் அணிந்திருக்கும் உடையைப் பார்த்தாலே அது சபையா என்று கேள்வி கேட்கத் தோன்றும். உங்கள் சபையில் வாலிபர்கள் எப்படி இருக்கிறார்கள்? பெத்தேல் வாலிபர்கள் இந்தளவுக்கு மோசமாக நடந்ததற்கான காரணத்தைத்தான் இதுவரை கவனித்திருக்கிறோம்.
இரண்டாவதாக, அது எப்படிப்பட்ட நிந்தனை?
எலிசா தீர்க்கதரிசியின் மீதான நிந்தனை ஆரம்பித்த விதத்தை நாம் இதுவரை கவனித்திருக்கிறோம், அதற்கு நாம் யெரொபெயாம் காலம் வரைக்கும் காலத்தைக் கடந்து பின்நோக்கிப் போகவேண்டியிருந்தது. ஏற்கனவே விளக்கியிருப்பதுபோல இந்த வேதப்பகுதியில் பிள்ளைகள் என்று இங்கே சொல்லப்பட்டிருப்பது வயதில் குறைந்த சிறுபிள்ளைகளை அல்ல, அவர்கள் வாலிபர்கள். அன்று ஏன் அவர்கள் அந்த இடத்தில் கூடி வந்திருந்தார்கள்? இவர்கள் இருந்த இடத்திற்கு எலிசா போனாரா? அல்லது எலிசா வந்துகொண்டிருந்த வழியில் இவர்கள் இருந்தார்களா? என்ன நடந்தது? இவ்விதமான கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். வாலிபர்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவர்களுடைய பெற்றோர்களைக் கவனிப்போம். பெற்றோர்களைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் அங்கு இல்லை. தங்களுடைய பிள்ளைகளின் கொடூரமான மரணத்தைக் கேள்விப்பட்டு அவர்கள் கதறி ஓடி வந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் எலிசாவை இவ்வாறு நிந்தித்தபோது அவர்கள் அங்கு இல்லை.
பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டாமா? ஒழுங்காக வீட்டில் வளர்ந்திருந்து பெற்றோர்களின் கண்காணிப்பு சரியாக இருந்திருந்தால் பிள்ளைகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அன்று சமுதாயம் எத்தனை மோசமாகப் போய்க்கொண்டிருந்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். பெற்றோர்களின் போலியான ஆராதனையோடு, போலியான தெய்வங்களை வணங்கி அதற்கேற்ற முறையில் அமைந்திருந்த கேவலமான வாழ்க்கை முறையும் சேர்ந்து அவர்களுடைய பிள்ளைகளையும் பாதித்து வாலிபர்கள் இம்முறையில் வளர்ந்து நிற்கிறார்கள். ஆகவே இந்த வாலிபர்கள் ஒன்றுமறியாத பிள்ளைப் பூச்சிகளான ஒழுக்கமான வாலிபர்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
எலிசா அந்தப் பாதையில்தான் வரப்போகிறார் என்பது அந்த வாலிபர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அன்று அவர்கள் செய்த நிந்தனை மிகவும் திட்டமிட்டதாய் இருந்தது. எலிசா தீர்க்கதரிசியை நிந்திக்க வேண்டுமென்று தீர்மானித்து அவர்கள் அந்த இடத்தில் அன்றிருந்திருக்கிறார்கள். 23 வது வசனத்தில்,
“அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்” (1 இராஜாக்கள் 2:23) என்று சொல்லப்படுகிறது.
எலிசாவிற்கு தலையில் முடி கொஞ்சம் இல்லாமல் இருந்திருக்கலாம், இல்லாவிட்டால் அவர்கள் மொட்டைத்தலையா என்று சொல்லியிருக்கக் காரணமில்லை. அவர்கள் எந்தளவுக்கு மோசமாக அவரிடம் நடந்துகொள்ள முடியுமோ அந்தளவுக்கு நடந்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக அவரின் உடையைப் பிடித்து இழுத்திருக்கலாம், பின்னால் நின்று கற்களை அவர்மீது எறிந்திருக்கலாம், காதில் கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாகப் பேசியிருக்கலாம்.
அவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதற்குக் காரணம் இருந்தது. முதலாவதாக, சமுதாயத்தில் எலிசா தான் எல்லாவற்றிற்கும் ஆவிக்குரிய அடையாளமாக இருந்தார். பக்திவிருத்திக்கும், ஆவிக்குரிய காரியத்திற்கும், தேவனுடைய வார்த்தைக்கும் ஒரு அடையாளமாக அவர்தான் அன்றிருந்தார். ஆகவே நான் ஏற்கனவே சொன்னதுபோல எலிசா இருக்குமிடத்தில் தேவன் இருந்தார், எலிசா இருக்குமிடத்தில் தேவனுடைய வார்த்தை இருந்தது. அவர் தேவனுடைய மனிதனாக இருந்தார், அதுதான் உலக இச்சைகளோடு வளர்ந்திருந்த அந்த வாலிபர்களுக்குப் பிடிக்கவில்லை. தேவனைப் பிடிக்காதவர்களுக்கு அவருடைய மக்களைப் பிடிக்காது. ஆகவே அவர்கள், இந்த மனிதன் இங்கு வருவது நம்முடைய சமுதாயத்திற்கே அசிங்கம் என்று நினைத்தார்கள். எலிசா இந்த வழியில் போகக்கூடாது, அவர் இந்த வழியில் போய் நகருக்குள் நுழைந்தால் நம் சமுதாயத்திற்கே நல்லதல்ல என்று நினைத்தார்கள். மொட்டத்தலையா என்று அவர்கள் எலிசாவை அழைத்தது அவர்களுடைய மோசமான இருதயத்தை வெளிப்படுத்தும் வார்த்தையாக இருக்கிறது; அது அவமதிப்பின் உச்சத்தைச் சுட்டுகிறது.
இரண்டாவதாக, இந்த வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையில் எதை விரும்பினார்களோ அதற்கெல்லாம் எதிராக எலிசா இருந்தார். என்னென்ன காரியங்களை அவர்கள் இருதயம் விரும்பியதோ, என்னென்ன காரியங்களை அவர்கள் பெரிதாக எண்ணி நாடினார்களோ அவை எல்லாவற்றிற்கும் எதிரானவராக எலிசா இருந்தார். சுவிசேஷம் சொல்ல வருகிறீர்களா? அது எங்களுக்குப் பிடிக்காது. பக்திவிருத்தியைப் பற்றிப் பேச வருகிறீர்களா? பேசாதீர்கள், அது எங்களுக்குப் பிடிக்காது. தேவபயத்தைப் பற்றிப் பேசாதீர்கள். சபையில் பக்தியாய் நடந்துகொள்ள வேண்டுமென்று பேசாதீர்கள். நான் நடனமாடினால் உங்களுக்கு என்ன? சமுதாயமே அதைச் செய்யவில்லையா? நான் வலையொளியில் (Youtube) காண்கிறதுபோல ஒரு சபை எனக்கு வேண்டும். இக்காலத்து வாலிபர்களைப் போல இந்தவிதமான சிந்தனை கொண்டவர்களாகத்தான் அந்த வாலிபர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு யெரொபெயாம் ஆராதனைதான் மிகவும் பிடித்திருந்தது. பாவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், மனந்திரும்புதலைப் பற்றியும் பிரசங்கம் செய்தால் அவர்களுக்குப் பிடிக்காது. பாவங்களைச் சுட்டிக்காட்டாத, எந்தவித குற்றவுணர்வையும் ஏற்படுத்தாத மனத்தைக் குளிர்விக்கக்கூடிய பிரசங்கங்கள் அவர்களுக்குத் தேவை. ஆனால் எலியாவும் எலிசாவும் அப்படிப்பட்ட பிரசங்கிகள் அல்ல. அதனால் அவர்கள் எலிசாவை வெறுத்தார்கள்.
கடைசியாக, நித்தனையினால் ஏற்பட்ட விளைவுகள்
எலிசா, ஏன் அந்த வாலிபர்களைச் சற்றுக் கண்டித்துவிட்டு அனுப்பியிருக்கக்கூடாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் எலிசா அவ்வாறு அவர்களை விட்டிருக்க முடியாது. அவர்கள் எலிசாவை நிந்தித்தது எலிசாவோடு மட்டும் நின்றுவிடவில்லை, அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஆண்டவரையே அவர்கள் நிந்தித்தார்கள். அவர்களை எப்படி எலிசா கண்டித்து அனுப்பியிருக்க முடியும்? எலிசா அவர்களை எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் சாகச் செய்திருக்கலாம். எலிசா ஏன் அவர்களைக் கோரமாக சாகப்பண்ணினார்? அன்று அந்த வாலிபர்கள் இறந்த செய்தி பெத்தேல் மட்டுமல்ல, முழு இஸ்ரவேலுக்கும் சென்றிருக்கும். அந்தளவுக்கு ஏன் எலிசா அவர்களைக் கரடிகள் கோரமாகக் கிழித்தெறியச் செய்திருக்க வேண்டும்? அதற்குக் காரணம் இருக்கிறது. கர்த்தருக்கெதிரான அந்த வாலிபர்களின் செயல்கள் அன்று அத்தனை மோசமாக இருந்தன. எந்தளவுக்கு மோசமாக ஒருவரின் பாவம் இருக்கிறதோ அந்தளவுக்குதான் நியாயத்தீர்ப்பும் அமையும். ஆண்டவர் நீதியுள்ளவர், அநீதியாக ஒருநாளும் நடக்கமாட்டார். நம் பாவங்களுக்குத் தகுந்த அளவில்தான் தண்டனையும் காணப்படும், அதில் எந்தவிதமான சந்தேகமும் நமக்கிருக்கக்கூடாது. அந்த வாலிபர்கள் செய்த அக்கிரமத்திற்குத் தக்க அளவிற்கு நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வந்த நியாயத்தீர்ப்பு அவர்கள் செய்த பாவம் எத்தனை மோசமானது என்பதைக் காட்டுகிறது. அவர் சபித்தவுடன் இரண்டு கரடிகள் காட்டிற்குள் இருந்து வந்து அங்கிருந்த தொகையான வாலிபர்களின் கூட்டத்தில் நாற்பத்திரண்டு பேரைக் கோரமாகக் கொன்று போட்டன. அவை எந்த வேகத்தில் அவர்களைப் பீறிக் கொன்றிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். கோரமான விபத்து ஏற்படுவது போல அன்றைக்கு அவர்கள் அகோரமாகக் கரடிகளால் கிழித்தெறியப்பட்டார்கள்.
அன்று நடந்ததைக் கேள்விப்பட்டு பெருந்தொகையான பெற்றோர்களும், சகோதரர்களும், சகோதரிகளும், உறவினர்களும் ஒடி வந்திருப்பார்கள். நடந்திருக்கும் நிகழ்ச்சி அவர்களுக்கு எத்தனை பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். பெத்தேல் நகரம் முழுவதையும் அன்று பயமும் நடுக்கமும் ஆட்டிப் படைத்திருக்கும். பெத்தேலில் நடந்த இந்தக் கோரமான நிகழ்வு, எலிசாவின் செயல்கள், ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பு எல்லாவற்றையும் கவனிக்கும்போது ஆண்டவரின் இரண்டாம் வருகை எந்தவிதத்தில் அமைந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஆகவே அன்றைக்கு நடந்த அந்தக் கோரமான நிகழ்வு கர்த்தருடைய நியாயத்தீர்ப்பாக இருந்தது.
இதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
முதலாவதாக, ஆண்டவரோடு தொடர்புடைய எதையும் வாலிபர்களாகிய நீங்கள் நிந்திக்கக்கூடாது. வேதத்தையும், போதகர்களையும், உதவிக்காரர்களையும், சபையையும், ஆண்டவருடைய செய்தியையும், கிருபையின் நியமங்களையும் பக்திக்குரிய எதையும் நிந்திக்கக்கூடாது; அவமதிக்கக்கூடாது.
இந்த வாலிபர்கள் அதையெல்லாம் அன்று செய்திருந்தார்கள். ஆண்டவரை பிரதிநித்துவப்படுத்துகிற எதையும் நாம் அவமதித்து நடக்கக்கூடாது. அதைவிட மோசமானது வேறெதுவும் இல்லை. இன்று இந்தவகையில் நடந்துகொள்ளும் வாலிபர்கள் இருக்கிறார்கள். பெருமையுள்ள இருதயத்தைக் கொண்டிருந்து சபையைத் திட்டுவதும், போதகரைத் திட்டுவதும், ஆராதனையைப் பற்றி அசிங்கமாகப் பேசுவதுமாக இருக்கிறார்கள். இரண்டு கரடி வந்து அன்று செய்தது போல் இவர்களைக் கொன்றுவிடவில்லையே என்று யோசிக்கிறீர்களா? நீடிய பொறுமை கொண்ட ஆண்டவர் அவர்களைச் சும்மா விடமாட்டார். பாவத்திற்குத் தக்க தண்டனையைக் கொடுப்பார். யெரொபெயாம் வழிவந்த மக்களைப் போல நாம் நடக்கக்கூடாது. அவிசுவாசி கூட இன்றைக்கு சபைக்கு மதிப்புக் கொடுக்கிறான். ஆனால் கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்த வாலிபர்கள், சுவிசேஷத்தை அறிந்த வாலிபர்கள் நடந்துகொள்ளும் விதந்தான் மோசமாக இருக்கிறது.
கிறிஸ்தவன் என்று பெயரை வைத்துக் கொண்டு ஆண்டவரையும், அவருடைய சபையையும் உங்களுடைய இறுமாப்பினால் நிந்தித்தால் ஆண்டவர் உங்களைச் சும்மா விடப்போவதில்லை. பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்ந்து வருகிறார்கள்? நீங்கள் அவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறீர்களா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் தவறான உதாரணம் உங்கள் பிள்ளைகளையும் அதேமாதிரி செய்ய வைக்கும். நீங்கள் தப்பவே முடியாது. இந்த நாற்பத்திரண்டு பேரும் தவறாக நடந்ததற்கு அவர்களுடைய பெற்றோர்கள் நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டும். அவர்களுடைய செல்வாக்கில்லாமல் இதையெல்லாம் அவர்கள் செய்திருக்கவே முடியாது. ஒருநாளும் தேவனோடு சம்பந்தப்பட்ட எதையும் அசிங்கமாகப் பேசவோ, உதாசீனப்படுத்தியோ நடக்கக்கூடாது. அவ்வாறு செய்திருந்தால் அதை அறிக்கை செய்து மனந்திரும்புங்கள். சிந்தித்துப் பார்த்து திருந்துவதைத்தான் ஆண்டவர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகள், வாலிபர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது.
“பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.” (எபேசியர் 6:1).
சில வாலிப பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பது பிடிப்பதில்லை, அதனால் பெற்றோர்களையும் அவர்கள் நிந்திக்கிறார்கள். உங்கள் பெற்றோர்கள் விசுவாசியாகவோ அவிசுவாசியாகவோ இருக்கலாம், ஆனால், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அதுவே நியாயமானது; கர்த்தரின் கட்டளையுங்கூட. பெற்றோர்கள் ஆண்டவரை மீறி எதையும் பிள்ளைகளைச் செய்யும்படி சொல்லக்கூடாது. யெரொபெயாம் வழியில் போவென்று பெற்றோர்கள் சொன்னால் அதை வாலிபர்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. அமைதியாக அதை மறுத்துவிட வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேவனுடைய நீதியான வழியில் வழிநடத்த வேண்டுமே தவிர எதிரான வழியில் அல்ல. ஆகவே வாலிபப் பிள்ளைகள் எல்லாம் இதையெல்லாம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்தவ பெற்றோர்களை ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருந்தால் அது ஆசீர்வாதம், அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே தவறாக நடக்க முயன்றால் வாலிப வயதில் அவற்றை மாற்றிக்கொள்ள முடியாது. நீங்களே தவறாக வளர்ந்தால் நாளைக்கு உங்கள் பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பீர்கள்? நீங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். சிறுவயதில் இருந்தே சரியான வழியில் நடக்கப் பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக, ஆண்டவர் உங்களுக்கு மனந்திரும்படியாக அளித்திருக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆண்டவர் சுவிசேஷத்தைக் கேட்கும்படியாகவும், நல்ல புத்தகங்களை வாசிக்கும்படியாகவும் எத்தனையோ வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து உங்களோடு ஏதோவொரு விதத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அதை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. பிரசங்கி 12:1-7 வரை ஆண்டவர், “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” (பிரசங்கி 12:1) என்று சொல்லுகிறார். ஏன் வாலிப வயதில் ஆண்டவரை நினைக்க சொல்லுகிறார்? சிறு வயதிலே ஆண்டவரை நினைத்து, பாவத்திற்கு விடுதலையைத் தேடி, அவரை விசுவாசித்தால் பெரிய பாவங்களைச் செய்யாமல் நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். கேடான வழியில் போவது கேட்டுக்குத்தான் வழிவகுக்கும். ஆண்டவருடைய வழியில் நீதியாக வளருவது நீதியை விளைவிக்கும். ஆகவேதான் உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை என்று சொல்லுகிறார்.
நீங்கள் ஆண்டவரைத் தேடுகிறீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்களா? இளம் வயதாக இருக்கும்போதுதான் எல்லாவற்றையும் சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்று நினைப்பதெல்லாம் பாவம். ஆகவே நாம் ஆண்டவரை விசுவாசித்து அவருடைய வழியில் நடந்து பரிசுத்தமாக வாழ வேண்டும்.
சங்கீதம் 119:9 இல்
“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” என்று வேதம் சொல்லுகிறது.
நீதிமொழிகள் 1:8-9 இல்
“என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” என்று சொல்லுகிறது.
2 நாளாகமம் 34:1-2 இல்
“யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்” என்று சொல்லுகிறது.
அந்த அதிகாரத்தின் கடைசியில், 2 நாளாகமம் 34:33 இல்
“அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” என்று வேதம் சொல்லுகிறது.
இங்கு யோசியா எட்டு வயதிலிருந்து கர்த்தருடைய வழிகளில் நடந்தான் என்பதைப் பார்க்கிறோம். அவன் கீழிருந்த மக்களும் அதனால் பயனடைந்தார்கள்.
ஆண்டவருக்கு விரோதமான ஆராதனை செய்வது, அவருக்கு விரோதமான இடத்தில் இருப்பது வளர்வது எல்லாம் உங்களுக்கு நன்மையைத் தராது. வாலிபர்களே, நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் சீக்கிரத்தில் திருமணம் செய்து விடுகிறீர்கள் அதெல்லாம் நல்லதுதான், ஆனால் உங்களுக்கு முதிர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. தாவீதைப் போல, தீமோத்தேயுவை போல உங்களிடம் முதிர்ச்சி இல்லை. உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டிய காரியங்களில் நீதி குறைவாக இருக்கிறது. மற்றவர்களுக்கு மரியாதை செய்வதில் உங்களில் குறை இருக்கிறது. உங்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கிறது. நிதானம் குறைவாக இருக்கிறது. இதையெல்லாம் சொன்னால் உங்களுடைய பெருமை கொண்ட இருதயத்தில் கோபம் வந்துவிடுகின்றது. அதனால் என்ன பயன்? ஆண்டவருடைய கோபத்திலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்களும் போதகர்களும் உங்களுக்கு ஆலோசனை தருகிறார்கள். நீங்கள் ஆண்டவருடைய கையில் அகப்பட்டு அழியக் கூடாது. அன்றைக்கு அந்த நாற்பத்திரண்டு வாலிபர்களும் அகப்பட்டு அழிந்து போனார்கள். அதனால் திருந்துங்கள், திருந்துகிறவர்கள் எப்போதும் நன்றாக இருப்பார்கள். ஸ்பர்ஜனுடைய வாழ்க்கை வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அவர் தன் பெற்றோர்களுக்கும், தாத்தாவிற்கும் மரியாதை கொடுத்து கீழ்ப்படிந்து வேதத்தைப் படித்து வளர்ந்து ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்திருந்தார் என்பதை மறவாதீர்கள்.
இன்றைக்கு அநேகர் சுவிசேஷம் சொல்லவும், பிரசங்கம் பண்ணவும் மிகவும் ஆசையாயிருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கை ஒழுங்காக இல்லாமல் நீங்கள் எதைச் செய்ய ஆசைப்பட்டாலும் அதெல்லாம் வீண். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பேசுகிற பேச்சில், செய்கிற காரியங்களில் இருக்க வேண்டிய உண்மையும், ஒழுங்கும் இருந்தால்தான் நாம் சொல்லுகிற காரியங்களுக்கு மதிப்பு இருக்கும். வாழ்க்கையில் ஒழுங்கு இல்லாமல் இருந்தால் சுவிசேஷம் சொல்லாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அது ஆபத்தைக் கொண்டுவந்து விடும். நம் நாட்டில் பிரசங்கம் மட்டும் மோசமில்லை, பிரசங்கிகளின் வாழ்க்கையே மோசமாக இருக்கிறது. அதனால் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைப்பதில்லை.
கடைசியாக, பெற்றோர்களுக்கு, உங்கள் பொறுப்பை உணர்ந்து கர்த்தருக்கு மதிப்புக் கொடுத்து உங்கள் பிள்ளைகளை ஆண்டவருடைய வழியில் வளர்த்துச் செல்லுங்கள்.
எபேசியர் 6:4 இல்
“பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்று பவுல் சொல்லுகிறார்.
பிதாக்களே என்றால் தகப்பன்மார்கள் என்று அர்த்தம். பிள்ளைகளை நிதானத்தோடும் அன்போடும் அமைதியோடும் கவனத்தோடும் நீங்கள் வளர்க்க வேண்டும்.
கொலோசெயர் 3:21 இல்
“பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” என்று பவுல் சொல்லுகிறார்.
பிள்ளைகளுக்கு உங்களை விட வயது குறைவு. நீங்கள் அவர்களுக்கு கோபமூட்டக்கூடாது, வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. அவர்கள் உங்களைவிட பெலன் இல்லாதவர்களாக இருப்பதனால் பிள்ளை வளர்ப்பில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகளுக்கு இருதயம் கடினப்பட்டு கோபத்தோடு வளர்ந்து உங்களை மதிக்கமாட்டார்கள்.
பெற்றோர்களுக்கு எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது, முக்கியமாகத் தகப்பன்மார்களுக்கு. எல்லா பொறுப்பையும் மனைவியிடம் விட்டுவிட்டு நீங்கள் பிள்ளைகளில் அக்கறை காட்டாமல் இருந்துவிடுவது சரியானதல்ல. தகப்பன்மார்களாக உங்களுக்கென்றும் பொறுப்பு இருக்கிறது. உங்கள் பிள்ளைகளை சரியாக வளர்த்தெடுக்க வேண்டிய பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் செய்யாமல் விட்டு விடாதீர்கள். இந்த நாற்பத்திரண்டு பேருடைய கோரமான முடிவு உங்களோடு பேசட்டும்.
கர்த்தருடைய வார்த்தையை மீறுவது, அவருக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது. தேவன் எந்தளவுக்கு அன்புள்ளவரோ அதே அளவுக்கு நீதியுள்ளவர் பரிசுத்தமானவர். அவர் பாவங்களைப் பொறுத்துக்கொள்ளமாட்டார், அவர் நம்மை நியாயந்தீர்ப்பார். அதை நிச்சயமாகச் செய்வார். இயேசு கிறிஸ்துவை நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் இன்றைக்கே மிகவும் தீவிரமாகச் சிந்தியுங்கள். கிறிஸ்துவிடம் வந்து அவர் இலவசமாகக் கொடுக்கின்ற இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
யோராம்: ஆகாபைப்போல அல்ல; ஆனால் . . . !
2 இராஜாக்கள் 3:1-12
பழைய ஏற்பாடு ஒரு அருமையான வேத நூல். அது ஆண்டவரைப் பற்றி வரலாற்றின் மூலமாக அருமையான போதனைகளை நமக்குக் கொடுக்கிறது. பழைய ஏற்பாட்டில் வரலாற்று நிகழ்ச்சிகளின் மூலம் அருமையான காட்சிகளை நாம் பார்க்கிறோம். அது மிகவும் மன எழுச்சியைக் கொடுக்கின்ற ஒரு நூலாக இருக்கிறது. பஞ்சவர்ணக்கிளியின் உடலில் பலவிதமான வர்ணங்கள் காணப்படுவதைப் போல பழைய ஏற்பாட்டில் ஆண்டவரின் செயல்களைப் பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும், அவருடைய ஞானத்தைப் பற்றியும் நாம் அறிய முடிகிறது; அதிகமான நடைமுறைப் பயன்பாடுகளையும் அது நமக்குக் கற்றுக்கொடுக்கின்ற நூலாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இந்த 2 இராஜாக்கள் நூலில் இதுவரை பார்த்து வந்துள்ள வேதப் பகுதிகளைக் கவனிக்கின்றபோது அவை அருமையான வேத சத்தியங்களை உள்ளடக்கியதாக இருந்துள்ளதைக் கண்டிருக்கிறோம். இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:1-12 வரையுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
இந்தப் பகுதியை நாம் வாசிக்கின்றபோது அந்நாட்களில் இஸ்ரவேல் எந்தவிதமான நிலையிலிருந்தது என்பதை அவதானிக்க முடிகிறது. நாடு முழுவதும் மக்கள் ஆண்டவரை விட்டு விலகிப்போய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசர்கள் மிகவும் மோசமானவர்களாக இருந்து மக்களைத் தீய வழிகளில் வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தபோதும் நாட்டில் வார்த்தைப் பஞ்சம் முழுமையாக ஏற்பட்டுவிடாதபடிக்கு எலியாவையும், பிறகு எலிசாவையும் ஆண்டவர் அந்நாட்டுக்குக் கொடுத்திருந்தார். அரசர்களும், மக்களும் ஆண்டவருக்கு விரோதமாக எத்தனையோ காரியங்களைச் செய்தபோதும் அவர் இன்னும் அவர்களை முழுமையாகக் கைவிட்டுவிடாமல், எலிசாவின் மூலமாக, நான் உடன்படிக்கையின் தேவன் என்பதைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் அறிவித்து வருவதையும் இந்த நூலை வாசிக்கிறபோது அறிந்துகொள்ள முடிகிறது.
மோவாபியர் இஸ்ரவேலுக்கு எதிராகச் செய்த கலகம்
இந்தப் பகுதியில் மோவாபியர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கலகம் செய்ததைப் பற்றி அறிந்துகொள்கிறோம். 3, 4 வது வசனங்களில்,
“மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் செலுத்திவந்தான். ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்” (2 இராஜாக்கள் 3:3-4) என்று நாம் வாசிக்கிறோம்.
- மோவாபியர்கள் ஏன் இவ்வாறு கலகம் பண்ணினார்கள்?
- அதற்குக் காரணமென்ன?
- இவர்கள் யார்?
என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடிப்பது அவசியமாகிறது. இந்த மோவாபியர்கள் ஒரு காலத்தில் இஸ்ரவேலுக்குக் கீழாக இருந்து தொடர்ந்து இஸ்ரவேலால் ஆளப்பட்டு வந்தார்கள். இந்த மோவாபியர் இஸ்ரவேலின் ஆளுகைக்குக் கீழாக வந்ததற்குக் காரணம் இஸ்ரவேலின் வல்லமையல்ல, ஆண்டவரே மோவாபியர்களை இஸ்ரவேல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதித்திருந்தார். மோவாபியர்கள் கலகம் செய்து சுதந்திர நாடாக இருப்பதற்குப் பல முறை முயற்சி செய்திருக்கிறார்கள். யோராமின் சகோதரன் அகசியாவைப் பற்றி நாம் ஏற்கனவே முந்திய ஆக்கங்களில் பார்த்திருக்கிறோம். அவனுடைய ஆட்சிக் காலத்திலும் இவர்கள் கலகம் செய்து பிரிந்து போக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் அப்போது அவர்கள் தனித்துப் போவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆகாப் இறந்த பிறகு மோவாபியர்கள் தாங்கள் இப்போது தனியாகப் பிரிந்து போய் சுதந்திரமாக வாழுவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று நினைத்து இப்போது அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆகாபைப் போல அவனுடைய மகன் பலம் வாய்ந்த அரசனல்ல என்று நினைத்து அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
மோவாபியர்கள் கலகம் செய்ததைக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தண்டனையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை மோவாபியர்கள் சாதாரணமாகச் செய்த காரியமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் அவ்வாறு செய்ததற்குக் காரணம் ஆண்டவர்தான். அதை இஸ்ரவேலின் இராஜாவின் வார்த்தைகளில் கவனிக்கிறோம்.
“அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.” (2 இராஜாக்கள் 3:10).
மோவாபியர்கள் கலகம் செய்து பிரிந்து போவதற்குக் காரணம் ஆண்டவர் அவர்கள் மூலம் நம்மைத் தண்டிக்கிறார் என்பதை யோராம் நன்கு அறிந்திருந்தான். ஏன் ஆண்டவர் இந்த மோவாபியர் மூலமாக இஸ்ரவேலைத் தண்டிக்க வேண்டும், என்கிற கேள்வி வருகிறது. அந்தக் கேள்விக்கான பதிலை இந்த அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களில் பார்க்கிறோம்.
2 இராஜாக்கள் 3:1-3
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான். என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.”
முதலாவது, யோராம் கர்த்தருக்கு முன்பாகக் கேட்டைச் செய்தான் என்று பார்க்கிறோம். அகசியா மிகவும் மோசமானவன் என்று ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். யோராமும் கூட அவனைவிட வித்தியாசமாக இருந்துவிடவில்லை. ஆண்டவரே யோராமின் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறார் என்று பார்க்கிறோம். ஆனால், யோராம் எல்லாமே நலமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ணினான். அவன் பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம் செய்தான். இரண்டாவது வசனத்தில்
“கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல” (2 இராஜாக்கள் 3:2) என்று வாசிக்கிறோம்.
யோராம் தனக்குள்ளாகவே தான் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல என்று எண்ணினான். ஆகாப் மற்றும் யேசபேலைப் பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே. ஆகாப் கேடான மனிதர்களில் மிகவும் கேடானவனாக இருந்தான். அவனுடைய மனைவி யேசபேலும் மிகவும் மோசமானவளாக இருந்தாள். அவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்திருந்தால் எந்த நாட்டிற்கும் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருவரும் இருந்தார்கள். அவர்களுக்கு மகனாகத்தான் யோராம் பிறந்தான். யோராம், தான் தன்னுடைய அப்பா அம்மாவைப் போல மோசமானவன் இல்லை என்று தனக்குள்ளே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறான். யோராம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பை செய்தான், ஆனாலும் தன் தகப்பனைப் போலும் தாயைப் போலும் இல்லை என்று இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கிறோம்.
யோராம் ஏற்படுத்திக் கொண்ட சிறிய மாற்றம்
யோரோம் எப்படி தன் தகப்பனைப் போலும் தன் தாயைப் போலும் இல்லாமல் இருந்தான்? உண்மையிலேயே ஒரு சிறிய வித்தியாசம் இருந்தது. ஆனால் அது மிகவும் சிறிய வித்தியாசம் மட்டும்தான். இந்தச் சிறிய வித்தியாசத்தை யோராம் மிகவும் பெரிய வித்தியாசம் என்று எண்ணினான். இந்தச் சிறிய வித்தியாசம் யூதாவின் அரசனாகிய யோசபாத் இவனோடு கூட்டு சேருகிற அளவிற்குப் போயிருந்தது. யோசபாத் நல்ல அரசன்தான். யூதாவில் இருந்த எல்லா அரசர்களும் மோசமானவர்கள் அல்ல. ஆண்டவர் முதலில் இஸ்ரவேலைத் தண்டித்துப் பிறகுதான் யூதாவைத் தண்டித்தார். யோராமில் காணப்பட்ட இந்தச் சிறிய வித்தியாசம் யோசபாத் இவனோடு ஒத்துழைப்பதற்குக் காரணமாக இருந்தது.
அந்தச் சிறிய மாற்றம் என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இரண்டாவது வசனத்தில்,
“கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்” (2 இராஜாக்கள் 3:2) என்று வாசிக்கிறோம்.
அநேகர் இதை வாசித்த உடனேயே இவன் எவ்வளவு நல்ல ராஜாவாக இருக்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அது இந்த ஆக்கத்திற்கே மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் பார்த்த இந்த வசனம் தமிழ் வேதத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. வேதத்தில் ஒரு வசனம் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லையென்றால் அந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள பொருளையே அது மாற்றிவிடும். “தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்” என்று தமிழில் இருக்கிறது. ஆனால் அது எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றால், “தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் புனிதத் தூணை இல்லாமல் ஆக்கிவிட்டான்” என்று இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் “The pillar of Baal” என்று இருக்கிறது. ஆனால் தமிழ் வேதத்தில், பாகாலின் சிலையை அகற்றிவிட்டான், அதாவது பாகாலையே இல்லாமல் ஆக்கிவிட்டான் என்று இருப்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. ஆகாப் பாகாலுக்கு புனிதத் தூணைச் செய்து வைத்திருந்தான். அதைத்தான் யோராம் இல்லாமல் ஆக்கிவிட்டான். மக்கள் பாகாலை ஆராதித்தது போல அந்தத் தூணையும் முக்கியத்துவம் கொடுத்து ஆராதித்து வந்தார்கள். மக்கள் முக்கியத்துவம் கொடுத்து ஆராதித்து வந்த அந்தத் தூணை அவன் அகற்றிவிட்டான். இதுதான் அவன் கொண்டுவந்த சிறிய சீர்த்திருத்தமாகவும் மாற்றமாகவும் இருக்கிறது. அவன் தகப்பனும் தாயும் செய்யாத ஒரு சிறிய மாற்றத்தை அவர்களுடைய மகனான யோராம் செய்திருக்கிறான் என்பதைக் கவனிக்கிறோம்.
உண்மையிலேயே யெரொபெயாம் கர்த்தருக்கெதிராக எத்தனை இழிவான செயலைச் செய்தான் என்பதை 1 இராஜாக்கள் 16 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். ஆண்டவருக்கு விரோதமாக ஆண்டவருடைய பெயரைப் பயன்படுத்தித் தன்னுடைய சுயநலத்தினாலே அவருடைய ஆராதனையை மாற்றி அமைத்து, எல்லாவற்றையும் கர்த்தருக்காக செய்வதாகச் சொல்லி நாட்டு மக்கள் எல்லோரையும் ஏமாற்றித் தவறான வழியில் வழிநடத்தினவன் யெரொபெயாம் என்பதை அறிந்துகொள்கிறோம். யெரொபெயாம் மோசமான வழியில் போனான். அதுபோலத்தான் ஆகாபும் மிகவும் தீவிரமாகப் பாகால் வணக்கத்தில் மக்களை ஈடுபடுத்தினான் என்று நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கு யோராம் அந்த முறையில் இல்லாமல் ஒரு சிறிய மாற்றத்தை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளுகிறான் என்பதைக் காண்கிறோம். அவன் பாகாலை முழுமையாக அகற்றிவிடவில்லை என்றாலும் அதன் புனிதத் தூணை மட்டும் அகற்றிவிட்டான் என்பதை அறிகிறோம். இதிலிருந்து இன்னும் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய காரியங்கள் இருக்கின்றன. இவன் கொண்டுவந்த இந்த சிறிய மாற்றம் அல்லது சீர்திருத்தத்தால் யூதாவின் அரசனான யோசபாத்தே மனம்மாறி இவனோடு சேர்ந்து மோவாபியருக்கு எதிராகப் போவதற்குக் காரணமாக இருந்தது.
முதலாவதாக, யோராம் செய்த இந்த சிறிய மாற்றம் தனிப்பட்ட முறையில் அமைந்திருந்ததே தவிர தேசிய அளவில் நாடு முழுவதையும் தழுவியதாக இருக்கவில்லை. இது கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. மக்கள் மத விஷயங்களில் தங்களுடைய வழிகளில் போய்க்கொண்டிருந்ததை யோரோம் தடுக்கவில்லை. மூன்றாவது வசனத்தில்
“என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்” (2 இராஜாக்கள் 3:3) என்று நாம் வாசிக்கிறோம்.
யெரொபெயாம் ஏற்படுத்தின கன்றுக்குட்டி ஆராதனை முறையை இவன் மாற்றவில்லை. தாணிலும் பெத்தேலிலும் அவைகள் தொடர்ந்து இருந்தன. மக்கள் அவற்றைத் தொடர்ந்து ஆராதித்து வந்தனர். இவன் அவற்றையெல்லாம் தடை செய்யவில்லை. தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிகள் தொடர்ந்து இஸ்ரவேலில் இருந்து வந்தன. யோராம் அவற்றை அழிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நாட்டு மக்கள் ஆண்டவருக்கு எதிராக ஆராதனை செய்து அவருடைய கட்டளையெல்லாம் மீறி நடந்ததை இவன் எந்தவிதத்திலும் நிறுத்தவில்லை.
ஒரு அரசன் ஆண்டவருடைய வழியில் போக வேண்டும், அவருடைய வழிகளில் ஆராதனை செய்ய வேண்டும். ஆனால் யோராம் அதைச் செய்யவில்லை. தன்னுடைய கடமையிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் அவன் தவறிவிட்டான். இஸ்ரவேல் ஆத்மீக ரீதியில் என்னென்ன காரியங்களைச் செய்து கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி ஆராதனை செய்து வரவேண்டுமோ அதையெல்லாம் செய்வதற்கு இவன் எவ்விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவன் கொண்டுவந்த மாற்றம் ஒரு பெரிய மாற்றம் போல் கண்ணுக்குத் தெரிந்தாலும் அது வெறும் சிறு மாற்றம்தான். தனிப்பட்ட விதத்தில் மட்டும் அதைத் செய்து அவன் அதைப் பெரிய மாற்றமாக கர்வத்தோடு எண்ணிக் கொண்டிருந்தான். என் வாழ்க்கையிலும் மாற்றமுள்ளது, நான் என்னுடைய அப்பா அம்மா மாதிரி நடந்து கொள்ளவில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். அதுமட்டுமல்ல, அந்தத் தைரியத்தோடு அவன் யோசப்பாத்திடம் போனான் என்று பார்க்கிறோம். இவன் தன் வாழ்க்கையில் செய்துகொண்ட இந்த மிகச் சிறிய மாற்றம் மற்றவர்களும் இவனைப் பற்றி நல்லவிதமாக எண்ண வைத்தது.
இரண்டாவதாக, யோராம் செய்த இந்தச் சிறிய மாற்றம் அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்ட மாற்றமாகும். ஆகாப் மரித்த பின்பு யோராம் அரசியல் ரீதியாக கஷ்டமான சூழ்நிலையில் இருந்தான். ஆகாபைக் கண்டு அநேகர் பயந்திருந்தனர். ஆகாப் உயிரோடு இருந்தபோது மோவாபியர் எந்தப் பிரச்சனையும் கொடுக்கவில்லை. பலம்வாய்ந்த அரசனான ஆகாப் போய்விட்டான், பலமில்லாத யோராம் அந்த இடத்திற்கு வந்துவிட்டான் என்று மோவாபியர் அறிந்தவுடன் அவர்கள் அதிக பிரச்சனைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். யோராம் அதையெல்லாம் சிந்தித்துப்பார்த்து என்ன செய்யலாமென்று யோசித்தான். இப்போது அவனுக்கு யூதாவின் அரசனான யோசபாத்தின் உதவி மோவாபியருக்கெதிராகத் தேவையாக இருந்தது. ஆகவே அவனோடு ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபட்டான் என்பதைக் கவனிக்கிறோம். அதனால் அவன் பாகாலின் புனிதத் தூணை அகற்றிவிட்டு அரசியல் லாபத்திற்காக யோசபாத்தோடு உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறான் என்பதைப் பார்க்கிறோம்.
2 இராஜாக்கள் 3:5-7
“ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான். அக்காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்துப்போய்: மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு” என்று நாம் வாசிக்கிறோம்.
இந்த இடத்தில்தான் யோராமின் பச்சோந்தித்தனமான அரசியல் தந்திரத்தை நாம் கவனிக்கிறோம். தான் ஒரு மத சம்பந்தமான பெரிய மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக்கொண்டேன் என்று தன் உள்ளத்திலே எண்ணிக்கொண்டு, மற்றவர்களையும் அதை நம்ப வைத்து, அரசியல் லாபத்திற்காக யோசபாத்தையும் மாற்ற முயற்சி செய்கிறான் என்பதைப் பாருங்கள். இவ்வாறு அவன் செய்வதைப் பார்க்கும்போது மிகவும் புத்திசாலித்தனமாக அவன் நடந்துகொள்வதாக எண்ணத்தோன்றும். ஆனால் இதற்குப் பெயர் புத்திசாலித்தனமல்ல. அரசியல் லாபத்திற்காக அவன் போடும் நாடகந்தான் அது. யோசபாத்தும் அதை நம்பிவிட்டான் என்று 7 வது வசனத்தில் நாம் பார்க்கிறோம்.
“அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.” (2 இராஜாக்கள் 3:7).
யோரோமின் தந்திரத்தை எந்தளவுக்கு யோசபாத் நம்பி மோசம் போனான் என்பதை அவனுடைய வார்த்தைகளில் இருந்து அறிந்துகொள்கிறோம். ஆகவே இங்கு யோராமின் நாடகம் வெற்றி அடைந்தது.
மூன்றாவதாக, யோராமில் நடந்த இந்த மாற்றம் வெறும் வெளிப்புறமான மாற்றமே தவிர அவன் இருதயத்தில் ஏற்பட்ட உண்மையான மாற்றமல்ல. அதாவது பாகாலின் புனிதத் தூணை யோரோம் அகற்றியதை நாம் கவனித்த உடன் என்ன நினைப்போம்? சிலைகளையெல்லாம் அகற்றிவிட்டான், ஆகவே அவன் இதுவரை வணங்கி வந்த அந்த உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டான் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் வெளிப்புறமாக மட்டும் யோரோம் அதைச் செய்ததற்குக் காரணமிருந்தது. அதை செய்கிறவர்களை நாம் பார்க்கிறபோது அவர்கள் அதை ஏன் செய்தார்கள் என்ற காரணத்தை நாம் அறிய முடியாது. அவர்களுடைய செயல்களை வைத்து அவர்கள் திருந்திவிட்டார்கள், அவர்கள் இனிமேல் உருவ வழிபாட்டில் ஈடுபடமாட்டார்கள் என்றுதான் நாம் நினைப்போம். சிலைகளை ஒருவன் தூக்கி எறிந்துவிட்டான் என்பதனால் அவன் கர்த்தரை வணங்க ஆம்பித்துவிட்டான் என்று அர்த்தமாகிவிடாது. யோராமில் காணப்பட்ட இந்த வெளிப்புறமான மாற்றம் அவன் இருதயத்திலிருந்து புறப்பட்ட உண்மையான மாற்றமல்ல. ஏனென்றால் பாகாலின் புனிதத் தூணை தூக்கியெறிந்தவன் நாட்டிலிருந்த பாகால் ஆராதனைகளை எந்த விதத்திலும் நிறுத்தவில்லை என்று நாம் கவனிக்கிறோம். அதை நாம் 3 வது வசனத்திலே பார்க்கிறோம்.
“என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.” (2 இராஜாக்கள் 3:3).
மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும், தனக்குத்தானே சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், அரசியல் லாபத்திற்காவும் ஒரு சிறிய மாற்றத்தை அவன் வாழ்க்கையில் செய்தான். அவன் அதைத் தன் இருதயத்தில் உண்மையாக ஏற்பட்ட ஒரு ஆவிக்குரிய மாற்றத்தினால் செய்யவில்லை.
ஆண்டவர் மோவாபியரைப் பயன்படுத்தி இஸ்ரவேலுக்கு ஒரு தண்டனையைக் கொண்டுவந்தால் நிச்சயமாக அதற்குக் காரணம் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். காரணமில்லாமல் ஆண்டவர் எவரையும் தண்டிக்கமாட்டார். ஒருவரின் வெளித்தோற்றத்தை மானிடர்களாகிய நாம் பார்க்கிறபோது அவருடைய இருதயத்தைக் காண முடியாது. ஆனால் தேவன் இருதயங்களைப் பார்க்கிறவர். அவரிடமிருந்து எந்தவிதமான இரகசியத்தையும் நாம் மறைக்க முடியாது. அவருடைய கண்களுக்குத் தப்பிப்போகிற எந்தக் காரியமும் இருக்கமுடியாது. யோராம் போடுகிற நாடகமெல்லாம் ஆண்டவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆண்டவருடைய வார்த்தை நம் கரத்தில் இருப்பதனால் யோராமின் செயல்களுக்கான காரணத்தை நாம் இப்போது வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம். ஆனால் அன்றைய காலகட்டத்தை யோசித்துப் பாருங்கள். இது எவருடைய கண்களுக்கும் புலனாகவில்லை. நாட்டிலிருந்த கொஞ்ச விசுவாசிகளுங்கூட இந்த அரசன் தன் அப்பா அம்மாவைப் போல இல்லாமல் நல்லவனாக இருக்கிறாரே என்று நினைத்திருப்பார்கள். யோசபாத் அரசனும் கூட இவனுடைய மாற்றத்தை நம்பிவிட்டான் இல்லையா? ஆண்டவர் நாம் வெளிப்புறமாக என்ன செய்கிறோம் அதை மட்டும் பார்ப்பதில்லை. அவருக்கு நம் இருதயத்தை பார்க்கத் தெரியும். எந்த நோக்கத்திற்காக நாம் வெளிப்புறமான காரியங்களைச் செய்கிறோம் என்பது ஆண்டவருக்கு நன்றாகத் தெரியும். ஆகவேதான் ஆண்டவர் மோவாபியரை இஸ்ரவேலுக்கு எதிராகக் கலகம் செய்ய அனுமதித்து இந்த ஆபத்தை உண்டுபண்ணுகிறார் என்று நாம் கவனிக்கிறோம்.
இங்கு சில பயன்பாடுகளைக் கவனிப்பது அவசியமாகிறது.
முதலாவதாக, எந்தவொரு மனிதனும் வெளிப்பார்வைக்கு மாறிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் அது மெய்யான ஆவிக்குரிய மாற்றமாக இருக்க முடியாது. அது எப்போதுமே சுய அழிவில்தான் போய் முடியும்.
யோராம் தன் வாழ்க்கையில் உண்மையிலேயே மாறவில்லை. அவன் இதுவரை செய்துவந்த பொல்லாங்குகளை எல்லாம் நிறுத்திக்கொள்ளவில்லை. கர்த்தரை வணங்காமல் கர்த்தருடைய ஆராதனையைத் தொடர்ந்து அவர் வழியில் செய்யாமல் இருந்ததை எல்லாம் அவன் நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரு சிறிய மாற்றத்தை மட்டுமே வாழ்வில் செய்தான். பாகாலின் புனிதத் தூணை அவன் அகற்றினான். பத்துப் பாவங்களில் முக்கியமானதொன்றை மட்டும் தூக்கி எறிந்துவிட்டான். அது நல்லதுதான், அதைப் பாராட்ட வேண்டும். ஆனால் அது உண்மையான மாற்றமா?
35 வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்லுகிறேன். எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஒரு இந்து. பல தெய்வ வழிபாட்டை அவர் செய்து வந்தார். அவர் வீட்டில் ஒரு பெரிய பூஜை அறை இருந்தது. அந்த அறையில் ஒரு மூலையிருந்து சுற்றிவர விக்கிரக படங்களாக வைத்திருந்தார். என்னென்ன தெய்வங்கள் ஊரில் இருக்கிறதோ அத்தனை விக்கிரகங்களின் படங்களும் அந்தப் பூஜை அறையில் இருந்தன. அவர் அதிக பணத்தைக் கோயிலுக்குக் கொடுப்பார், எல்லாருக்கும் உதவி செய்வார், விக்கிர ஆராதனைக்கு அதிகமாக செலவழிப்பார். ஒவ்வொருநாளும் விக்கிரக ஆராதனை வீட்டில் நடந்துகொண்டிருக்கும். அந்தக் காலப்பகுதியில்தான் நான் ஆண்டவரை அறிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருநாள் அவர் என்னிடம் உன்னில் நடந்த மாற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, எனக்குப் புரியும்படித் தெளிவாகச் சொல்லு என்று கேட்டார். ஏனென்றால் உன் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது எனக்குத் தெரிகிறது, அது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நானும் அவ்வாறு மாற ஆசைப்படுகிறேன் என்றார். நானும் அவருக்கு சுருக்கமாகவும் விளக்கமாகவும் சுவிசேஷத்தை சொன்னேன். அவரும் கேட்டார், அன்று இரவு முடிந்து காலையில் எழுந்து அவர் என் அறைக்கு வந்தார். நானும் கிறிஸ்தவனாக மாறிவிட்டேன் என்று சொன்னார். நானும் மிகவும் ஆச்சரியப்பட்டு அது எப்படி நடந்தது எனக்கு சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் என் கையைப் பிடித்து அவருடைய பூஜை அறைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர் என்ன செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை, இருந்தபோதும் அவரோடு போய்ப் பார்த்தால், அவருடைய பூஜை அறையில் ஏற்கனவே இருந்த படங்களோடு இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்திருந்தார். அவர் என்னை நோக்கி, அங்கு பார், நான் இப்போது இயேசுவையும் வணங்க ஆரம்பித்துவிட்டேன் என்று சொன்னார். அப்போது நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்: அது தவறு, ஒரு மனிதன் இந்தவிதத்தில் கிறிஸ்தவனாக மாற முடியாது. நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவை விசுவாசித்திருந்தால் இந்த அறையில் ஒரு படம் தவறாமல் அனைத்துப் படங்களும் காணாமல் போயிருக்கும் என்று சொன்னேன். அவர் அதற்குப் பிறகு எத்தனையோ சுவிசேஷ கூட்டங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இன்று வரையும் அவரில் மனமாற்றமும், விசுவாசமும் நிகழவில்லை. ஆகவே மனிதன் எப்போதும் வெளிப்புறமான மாற்றங்களைச் செய்துகொள்ளுவதற்குத் தயாராக இருப்பான்; உட்புறத்தில் ஆவிக்குரியவிதத்தில் ஒன்றுமே நிகழ்ந்திருக்காது. வேதத்தில் அது போன்று அநேக உதாரணங்களை நாம் பார்க்கிறோம்.
ஒரு பணக்கார இளம் வாலிபன் இயேசுவினிடத்தில் வந்தான் என்று சுவிசேஷ நூல்களில் நாம் வாசிக்கிறோம் (லூக்கா 18). அவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதைப்பற்றிக் கேட்பதற்காகத்தான் இயேசுவிடம் அவன் வந்தான். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பது ஆண்டவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அப்போது ஆண்டவர் அவனைப் பார்த்து உன் வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை ஒன்றுவிடாமல் பின்பற்று என்று சொன்னார். அதற்கு அவன், அவற்றை சிறுவயது முதல் கடைப்பிடித்து வருகிறேன் என்று சொன்னான். அவன் சொன்னதில் ஓரளவுக்கு மட்டும் உண்மையிருந்தது; முழு உண்மையும் இல்லை. ஏனென்றால் வெளிப்புறமாகப் பரிசேயர்கள் செய்ததுபோல பத்துக் கட்டளைகளை வாழ்க்கையில் செய்வதற்கு அவன் முயற்சி செய்து வந்திருக்கிறான். அப்போது ஆண்டவர் அவனிடம், உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் இல்லாதவர்களுக்குக் கொடுத்துவிடு என்று சொன்னார். அவனால் அதைச் செய்யமுடியவில்லை, அவன் துக்கத்தோடு திரும்பிப் போனான் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் இருதய மாற்றத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியாது. அவனுடைய இருதயம் பாவத்தில் இருந்தது, பாவம் எந்த வழியில் செல்லுமோ அதே வழியில்தான் அவனுடைய இருதயமும் சென்று கொண்டிருந்தது. அவனைப் பொறுத்தளவில் தன் சொத்துக்களை அவன் இழக்க விரும்பவில்லை. அவையே அவனுக்குக் கடவுளாக இருந்தது. அதுவே அவனுடைய உருவ வழிபாடு. அதை அவனால் விடமுடியவில்லை. இருதயத்தில் சுயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள எந்தவொரு மனிதனாலும் முடியாது. யோராம் செய்ததுபோல ஒரு தூணைத் தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இருதயத்தை உங்களால் மாற்றிக்கொள்ள முடியாது.
அநேக சபைகளில் ஆண்டவரைப் பற்றிச் சொல்லிவிட்டு, உடனடியாக ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளுகிறீர்களா என்று கேட்டு அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிடுவார்கள். உண்மையில் இதற்கு அநேகர் ஒப்புக்கொள்ளுவார்கள். ஏனென்றால் வாழ்க்கையில் வெளிப்புறமானதொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதில் மனிதனுக்குப் பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. அதனால்தான் அவனுக்கு சில தடவைகள் கோயிலுக்குப் போவது ஒரு பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஒரு நாளைக்கு அநேக தடவை இந்துக்கள் கோயிலுக்குப் போகிறார்கள். நமக்கு இரண்டு முறை ஆராதனைக்கு போவதே கஷ்டமாக இருக்கிறதில்லையா? காலையில் வருகிற எல்லாருமே மாலை ஆராதனைக்கு வந்துவிடுகிறார்களா? வருவதில்லை. போதகர்கள் அவர்களை விசாரிக்க வேண்டும். ஆண்டவர் முழுநாளையும் ஆராதனைக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டிருக்க, நீங்கள் ஒரு நேரம் மட்டும் ஆராதனைக்கு வருவதற்குக் காரணமென்ன என்று கேட்கவேண்டும். எதுவும் இருதயத்தில் இருந்துதான் எழமுடியும். ஆனால் ஒரு இந்துவோ அல்லது இஸ்லாமியனோ பல தடவைகள் கோயிலுக்கோ மசூதிக்கோ போய்விடுகிறான். வெளிப்புறமான காரியங்களைச் செய்வது அவனுக்குச் சுலபம். இதே போலத்தான் செல்வந்தனான வாலிபனும் செய்தான், இதேபோலத்தான் யோராமும் செய்தான். வெளிப்புறமான காரியங்களை அவர்களால் செய்ய முடிந்தது, ஆனால் உள்ளான நிலையில் இருதயத்தில் மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இருதய மாற்றத்தைக் கொண்டுவருவது ஆண்டவர் மட்டும்தான். மனிதனால் சுயமாகத் தன்னுடைய இருதயத்தை மாற்றிக்கொள்ள முடியாது. வெளிப்புறமான காரியங்களை மட்டும் வைத்து ஒருவன் கர்த்தரை ஆராதிக்கிற மனிதன் என்ற ஆவிக்குரிய தீர்மானத்திற்கும் வந்துவிட முடியாது. புறத்தில் காணப்படும் மாற்றத்திற்கு ஆதாரமாக இருதயத்தில் உண்டாகியிருக்கும் மாற்றத்தை நாம் கவனிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவே யோராமின் மாற்றம் உண்மையான மனமாற்றமல்ல. அது பாகாலின் புனிதத் தூணைத் தூக்கி எறிவதில் மட்டுமே முடிந்திருந்ததே தவிர வேறெந்தவிதமான ஆவிக்குரிய மாற்றமும் அவனில் ஏற்படவில்லை.
இரண்டாவதாக, வாழ்க்கையில் வெளிப்புறமாக ஏற்படுத்திக்கொள்ளும் சீர்திருத்தம் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.
யோராம் அதையே செய்தான். ஏனென்றால் ஆகாப் செய்யாததை மகன் செய்திருக்கிறானே, அகசியா செய்யாததை யோராம் செய்திருக்கிறானே. அவர்கள் இருவரும் புனிதத் தூணைத் தூக்கி எறியவில்லையே. ஆனால் யோராம் அதைச் செய்திருக்கிறான். அப்பாவைவிட இவன் நன்றாக இருக்கிறான் என்று அநேகர் அதைப் பாராட்டி இருப்பார்கள். ‘தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல’ என்று வசனமும் சொல்லுகிறதல்லவா! ஆகவே அவன் செய்த காரியம் கவர்ச்சிகரமாக இருந்திருக்கிறது. அது கவர்ச்சிகரமாக இருந்திருந்தாலும் இந்த மாதிரியான செயல்கள் ஒரு மனிதனில் ஆவிக்குரிய மாற்றங்களுக்கு அடையாளமல்ல.
பிரபல பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஒருமுறை சொல்லியிருக்கிறார், கர்த்தரைத் தேடுவது என்பது ஒரு மனிதனில் எந்தளவில் இருந்தாலும் அது நன்மையில்தான் போய் முடியும் என்கிற நம்பிக்கையை நமக்குத் தரலாம். ஆனால் அது உண்மையானதல்ல. அப்படியான அந்தத் தேடுதல் மெய்யான இரட்சிப்பில் போய் முடியவேண்டும் என்கிறார் ஸ்பர்ஜன். சிலர் அதிகமாகக் கர்த்தரைத் தேடுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு அவரில் நம்பிக்கை இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது உண்மையானதல்ல. அந்தத் தேடுதல் இரட்சிப்பில் போய் முடியாதவரை அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே வெளிப்புற மாற்றங்கள் சில நேரங்களில் நல்லதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் காணப்பட்டாலும் அது உண்மையான மனமாற்றத்திற்கு ஆதாரமில்லை. அப்படியாக வெளிப்புறம் மட்டும் பரிசேயர்களைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் சட்டவாதிகளாக (legalist) மாறிவிடுகிறார்கள். அவ்வாறு செய்வதுதான் அவர்களுக்கு ஆத்மீகக் காரியங்களாகத் தெரிகிறதே தவிர மெய்யான இருதய மாற்றத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
நம்முடைய பிள்ளைகளுக்கு வேதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், ஜெபிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வீட்டில் நேரத்தை வீணடிக்காமல் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் பெற்றோர்கள் கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதில் நிச்சயமாக பிரயோஜனம் இருக்கிறது. இருந்தபோதும் ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் வேதத்தை வாசித்தும், ஜெபித்தும், ஆலயத்துக்கும் போய்வருகிறார்கள் என்பதால் அவர்கள் ஆண்டவரிடத்தில் வந்துவிட்டார்கள் என்று நினைக்கக்கூடாது. ஆண்டவர் அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி பிள்ளைகளில் இருதய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நாம் கர்த்தரிடத்தில் அன்றாடம் முழங்கால் படியிட்டு ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் அது தேவன் மட்டுமே செய்யக்கூடிய காரியமாகும். அதை நாம் செய்துவிட முடியாது. வேதம் வாசிப்பதாலோ ஜெபிப்பதாலோ பிள்ளைகள் கிறிஸ்தவர்களாக ஆகிவிட்டனர் என்று நினைக்கக்கூடாது. அந்த செல்வந்தனான வாலிபன் அதையெல்லாம் செய்திருந்தும் கர்த்தரிடம் வரவில்லையே. ஆனால் அது நல்லது, அத்தகைய ஆவிக்குரிய செயல்கள் அவர்களை அதிகமான பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் தள்ளிவைக்கும். அதில் அதிக பயன்கள் இல்லாமல் இல்லை. இருப்பினும் அவர்களின் இருதய மாற்றத்திற்கு ஆண்டவரிடத்தில்தான் நாம் போக வேண்டும். அவர் மட்டுமே அந்தக் கிரியையைச் செய்கிறவர். ஏனென்றால் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து வருகிறது. எதுவும் இரட்சிப்புக்கு ஈடாகாது. எவ்வளவோ நல்ல காரியங்கள் ஒருவனில் இருந்தபோதும் அவனுக்கு இரட்சிப்பு கிடைப்பதற்கான சுவிசேஷத்தைத் தொடர்ந்து சொல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே வெளிப்புற காரியங்களில் மட்டும் நாம் கவனத்தைச் செலுத்திவிடக்கூடாது. உட்புறமாக இருதய மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த இருதய மாற்றம் சுவிசேஷத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் செய்கிற காரியமாகும். யோராமின் இருதயத்தில் அது இல்லாமல் இருந்தது. உங்கள் நிலை எப்படி என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். யோராம் ஒரு சின்ன சீர்திருத்தத்தைத் தன் வாழ்க்கையில் செய்து கொண்டான். அதைப் பெருமையாக எண்ணினான். அதைப் பயன்படுத்தி யோசபாத் நம்புகிற அளவிற்கு நாடகமாடினான். அதனால் என்ன பிரயோஜனம்? அவன் வாழ்க்கை மாறவே இல்லை.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யோசபாத் விட்ட பெரிய தவறு அது. யோசபாத் இந்த வெளிப்புற மாற்றத்தை உண்மையென்று நம்பியது மிகவும் தவறு. ஆகவேதான் போதகர்களும், கிறிஸ்தவர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அநேக மக்கள் இவ்வாறு நம்மை ஏமாற்றிவிடலாம். நிதானத்தோடு ஒருவரின் விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் செய்வதெல்லாம் உண்மையென்று நம்பிவிடக்கூடாது. இந்தளவுக்கு வெளிப்புறமான மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு முழு சபையையும் கூட ஏமாற்றிவிடலாம் என்பதற்கு யோராம் ஒரு உதாரணமில்லையா?
மூன்றாவதாக, உண்மையான இருதய மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியவர் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே.
பரிசுத்த ஆவியானவர்தான் தேவனுடைய வார்த்தையான சுவிசேஷத்தைப் பயன்படுத்தி இருதயங்களில் மாற்றத்தைக் கொண்டு வருகிறார் என்பதை இயேசு கிறிஸ்து அருமையாக யோவான் மூன்றாம் அதிகாரத்தில் நிக்கொதேமுவுக்கு போதித்தார். நிக்கொதேமுவும் அந்த செல்வந்தனான வாலிபனைப் போல பத்துக் கட்டளைகளை அன்றாடம் கடைப்பிடிக்க முயற்சி செய்து தன்னை கர்த்தருடைய மனிதனாக நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு இருதய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆகவேதான் ஆண்டவர், ஒருவன் பத்துக் கட்டளைகளை வாழ்க்கையில் நடைமுறையில் பின்பற்றி கிறிஸ்தவனாக முடியாது என்று விளக்கியிருக்கிறார். இருதய மாற்றம் ஆவியானவர் செய்கிற காரியம். ஆவியானவர் செய்கிற கிரியை காற்று வீசுவதைப் போல இருக்கிறது. ஏனென்றால் காற்றை இங்கே போ அங்கே போவென்று யாரும் சொல்ல முடியாது. அது எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்று கூட நமக்குத்தெரியாது. அதேபோல் ஆவியானவரும் தன்னுடைய சித்தத்தின்படி கிரியை செய்கிறவராக இருக்கிறார். அவர் வார்த்தையைப் பயன்படுத்தித் தன் சித்தத்தின்படி கிரியை செய்கிறபோது, அது நம்மில் நிகழும்போது அதனுடைய மாற்றங்களை அறிந்து கொள்ளுகிறோம், உணருகிறோம். ஆகவே அதை அவர் மட்டுமே செய்ய முடியும்.
உண்மையிலேயே யோராமின் வாழ்க்கையில் ஆவியானவரின் கிரியை நிகழ்ந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? அவன் பாகாலின் புனிதத் தூணை மட்டுமல்ல அந்த நாடு முழுவதும் இருந்த அத்தனைப் பாகால் வணக்கங்களையும் இல்லாமல் ஆக்கியிருப்பான். வேதத்தில் யோசியா என்கிற அரசன் அவ்விதம் செய்திருக்கிறான். 2 நாளாகமம் 34 ஆம் அதிகாரத்தில் அதை நாம் வாசிக்கிறோம். ஆண்டவர் ஆவியானவர் மூலம் இருதய மாற்றத்தை நிகழ்த்துகிறபோதுதான் ஒரு மனிதன் எல்லாவிதமான உருவ வழிபாட்டிற்கும் முடிவுகட்டி அந்தவிதமான சிந்தனைகள் எல்லாம் தொடர்ந்து இல்லாதபடி ஒரு புதிய மனமாற்றத்தை அடைந்து ஒரு புதிய ஜீவனாகிறான் என்று வேதம் சொல்லுகிறது. ஆவியானவர் இரட்சிப்பை இலவசமாகக் கொடுக்கிறார். அது ஆண்டவரிடத்திலிருந்து வருகிறது. ஆவியானவர் அப்படியான மாற்றத்தைக் கொண்டுவருகிறபோது இருதயத்தில் நம் சிந்தனைகள் எல்லாமே முழுமாற்றம் அடையும். அது அரைகுறை மாற்றமாக இருக்காது. அது உண்மையான மாற்றமாக இருக்கும்.
ஆண்டவர் பிறவிக் குருடனாக இருந்தவனுக்கு பார்வை அளித்தபோது அவன் என்ன சொன்னான்? இதுவரை நான் குருடனாக இருந்தேன், இப்போது எனக்குப் பார்வை கிடைத்திருக்கிறது என்று எந்தவித பயமுமில்லாமல் தைரியத்தோடு எல்லோரும் அதைக் கேட்கும்படி சொன்னான். எந்த பயமும் இல்லாமல் அவன் சொன்னதற்குக் காரணம் ஆவியானவர் அவனுடைய இருதயத்தில் நிகழ்த்திய மாற்றத்தினால்தான். பிலிப்பு நாட்டில் பவுல் ஆற்றங்கரையில் சென்று பிரசங்கம் செய்தபோது லீதியாளுக்கும் அப்படியான மாற்றம் நிகழ்ந்தது. வார்த்தையின் மூலமாக அவளுடைய இருதயம் மாற்றமடைந்தது. இன்னொருவனான கெட்டகுமாரனைப்பற்றி வாசிக்கும் போதும் அதைத்தான் பார்க்கிறோம். அவனுக்குப் ‘புத்தி தெளிந்தபோது’ என்று நாம் வாசிக்கிறோம். புத்தி தெளியாத ஒரு காலமும் வாழ்க்கையும் அவனில் இருந்தது. புத்தி தெளிந்தது என்கிற வார்த்தைப் பிரயோகம் எதைக் குறிக்கிறது? தேவனுடைய ஆவியானவர் அவனுடைய இருதயத்தில் நிகழ்த்தியிருந்த காரியத்தைக் காண்பிக்கிறது. அதனால்தான் அந்த இடத்தில் அவன் தொடர்ந்து இருக்காமல் எழுந்து தன்னுடைய தகப்பனிடத்தில் போய் என்னென்ன சொல்லத் தீர்மானித்திருந்தானோ அனைத்தையும் சொன்னான் என்று நாம் பார்க்கிறோம். ஆகவே உள்ளத்தில் மாற்றத்தைக் கொடுப்பது பரிசுத்த ஆவியானவர் என்பதை நாம் உணரவேண்டும். அது யோராமின் வாழ்க்கையில் நடக்கவில்லை.
கடைசியாக, நீங்கள் உங்கள் இரட்சிப்பிற்கும், நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவதற்கும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் தேவனாகவும் விசுவாசிக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் உங்களுடைய வாழ்க்கை ஒருநாளும் மாற்றமடையாது. அநேகர் சுவிசேஷத்தைக் கேட்கும்படியாக சபைக்கு வருவார்கள், அப்படி வருகிறவர்களுக்கு பலவிதமான ஏக்கங்கள், கவலைகள், தொல்லைகள், பிரச்சனைகள் இருக்கும். இந்த உலகத்தில் தேவைகள் இல்லாத மனிதன் இல்லையென்று ஒருவரும் இல்லை. அப்படியான சூழ்நிலையில் இதிலிருந்து விடுவிக்கிறேன் என்று ஆண்டவர் சொல்லுவதால் ஒருவருக்கு கிறிஸ்தவராக வருவதற்கு விருப்பம் இருக்கும். அதிலொன்றும் தவறில்லை. நம் ஆண்டவர் தேவைகளைத் தீர்க்கிற ஆண்டவர்தான். ஆனால் அவர் ஆத்மீக தேவைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆகவே அவர்கள் சில நேரம் தொடர்ந்து கூட்டத்திற்கு வருகிறோம் என்று சொல்லலாம், வேதத்தை வாசிக்கிறோம் என்று சொல்லலாம், இன்னும் என்னென்னவோ செய்யலாம். அதெல்லாம் நல்லவையே, அவைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும், நிறுத்தக் கூடாது. ஆனால் அவர்கள் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இல்லாமல் இயேசு கிறிஸ்துவே ஜீவனுள்ள தேவன், அவர் மட்டுமே சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்து எல்லாருடைய பாவங்களையும் இல்லாமல் ஆக்குவதற்காகத் தானே ஒரே பலியாக மரித்தார், அவர் தேவனுடைய ஒரே குமாரனான இயேசு என்று அவர்கள் விசுவாசிக்க வேண்டும். தங்களைப் பிடித்திருக்கிற பாவம், தங்களுக்குள்ளே இருக்கிற பாவம் போக இயேசு தேவை என்பதை அவர்கள் உணர வேண்டும். பாவத்தில் இருப்பதால்தான் கண்ட கண்ட தெய்வங்களை வணங்கிக் கொண்டிருக்கிறேன், என்னை விட்டு முதலில் பாவம் நீங்க வேண்டும், அது நீங்காதவரை நான் நல்லவனாக வாழ முடியாது, பாவம் இருக்கிறவரை மெய்யான ஆண்டவரை வணங்க முடியாது என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அப்படியான பாவ உணர்வைக் கொடுக்கிறவரே பரிசுத்த ஆவியானவர்தான். அவர் இல்லாமல் ஒருவரும் பாவத்தைப் பற்றி நினைக்க முடியாது.
பாவத்தைப் பற்றி ஒருவன் பேச ஆரம்பித்துவிட்டாலே அவன் நல்ல வழியில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கு யாருமே பாவத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆண்டவருக்கு முன்பாக நாம் அனைவரும் நல்லவர்களாக அல்ல, பாவிகளாக நிற்கிறோம். அவர் நம்மைப் பார்க்கிறபோது அவருக்கு நாம் நன்மையானவர்களாகத் தெரியவில்லை, அநீதியுள்ளவர்களாகத் தெரிகிறோம். அதற்குக் காரணம் நம்முடைய பாவம்தான். அந்தப் பாவம் இல்லாதிருந்தால் பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்கவே மாட்டார். நம்மைப் பிடித்திருக்கிற பாவத்தை நீக்குவதற்கு வேறுயாருமே இல்லை. ஆகவேதான் அந்த ஜீவனுள்ள தேவன் நம்முடைய பாவங்களுக்காக தன்னை பலியாகக் கொடுக்க வந்தார். அந்தப் பாவம் உங்களைப் பிடித்திருக்கிறது என்பதை உணருகிறீர்களா? அந்தப் பாவத்தைப் போக்குகிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை விசுவாசிக்கிறீர்களா? அந்தப் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு தன் இரத்தத்தை சிந்தினார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அந்தப் பாவம் போவதற்காக, அதிலிருந்து விடுதலை கிடைப்பதற்காக, ஆண்டவருடைய சமாதானத்தை அடைவதற்காக, அந்த இயேசுவை இரட்சகராகவும், ஆத்தும விடுதலை கொடுக்கிறவராகவும், அவரே ஜீவனுள்ள தேவனாகவும், ஆண்டவராகவும் நீங்கள் விசுவாசிக்க ஆரம்பித்தால் நீங்களும் யோசியா அரசனைப் போல வரலாம். எத்தனையோபேர் ஆண்டவரிடம் வந்து பாவத்தை உணர்ந்து, அந்தப் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவதற்காக ஆண்டவரை விசுவாசித்திருக்கிறார்கள். அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது? யோராம், அகசியா போல தன் வாழ்க்கையில் கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை வீணாக்கிக் கொண்டார்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஆண்டவர் உங்களுக்கும்கூட எத்தனையோ சந்தர்ப்பங்களைக் கொடுத்திருக்கிறார் அல்லவா! அந்த சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்களா? ஏன் நீங்கள் இன்னும் இயேசுவை விட்டு தள்ளி நிற்கிறீர்கள்? அவரை விசுவாசிப்பதற்கு உங்கள் இருதயம் இன்னும் ஏன் இடம் கொடுக்காமல் இருக்கிறது? ஆண்டவர் இலவசமாகத் தருகிறேன் என்று சொல்லுகிற நித்திய ஜீவனை நீங்கள் ஏன் இயேசுவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது? யோராம் ஒரு சிறு மாற்றத்தை தன் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொண்டு ஒரு ஆத்தும நாடகத்தை ஆடினானே தவிர உண்மையான விசுவாசியாக முடியவில்லை. உங்கள் நிலைமை எப்படி? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதைத்தான் இன்றைக்கு இயேசு உங்களிடம் கேட்கிறார்.