1. வாசகர்களே!
2. கர்த்தருக்கு லேசான காரியம்
3. ஒரு விதவையின் விசுவாசம்
4. சூனேமியப் பெண்ணின் சுயநலமில்லாத சேவை
5. நம்மை இரட்சிப்பது விசுவாசமா? கிறிஸ்துவா?
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! காலங்கள் வேகமாகக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன. பத்திரிகை ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. சீர்திருத்த சத்தியங்களை ரேஷன் அரிசி போலக் கலப்படமில்லாமலும், எல்லாம் கலந்த சாம்பார் இறையியலை வாசகர்களுக்குப் படைக்காமலும், தனித்துவமுள்ள சீர்த்திருத்த சத்தியங்களை வரலாறு கண்டிருக்கும் விசுவாச அறிக்கைகள் மற்றும் வினாவிடைப் போதனைகளுக்கு சிறிதும் முரண்படாமலும், சீர்திருத்தவாத, பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளோடும் நடைமுறைகளோடும் வேறுபட்டு நிற்காமலும், காலத்துக்கும் பண்பாட்டிற்கும், நவீன உத்திகளுக்கும் சிறிதும் இடங்கொடாமலும் சகல போதனைகளையும் இன்றுவரை படைத்தளித்துக் கொண்டிருக்கிறது திருமறைத்தீபம். அது கர்த்தரின் கிருபையால் மட்டுமே ஆகக்கூடிய செயல். அவருக்கே சகல மகிமையும்.
கல்வினித்துவ போதனைகளுக்கு (கிருபையின் போதனைகள்) மட்டும் முக்கியத்துவம் கொடுத்து (அதையும் அறைகுறையாகத் தெரிந்துவைத்திருந்து), சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அறிந்திராத பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கோட்பாடுகளை அதோடு திணித்து, கர்த்தரின் ஆராதனையை இசைக்கச்சேரியாகவும், தனிநபர் துதியாகவும் நடத்தும் ஒரு புதுவகைப் பாதையைக் காட்டி வரும் பச்சோந்தித்தனத்திற்கும் இதழ் ஒருபோதும் இடமளிக்கவில்லை; இடமளிக்கப்போவதுமில்லை. கர்த்தரின் உன்னதத் திட்டத்தில் அதிமுக்கிய இடத்தைப் பெறும் திருச்சபைக்கு முதலிடத்தை அளித்து, சீர்திருத்த திருச்சபைக் கோட்பாடுகளுக்கு எந்தவித பங்கமுமில்லாமல் அவற்றிற்கு விளக்கமளித்து வருவதோடு, திருமறைத்தீபப் பணியாளர்கள் அனைவரும், ஒருவர் தவறாமல் நடைமுறையில் திருச்சபை அங்கத்தவர்களாக இருந்து, திருச்சபைக்கு மதிப்பளித்து வாழ்கிறவர்களாகவும் இருந்து வருகிறோம். இதழையும், நம் நூல்களையும் விநியோகம் செய்கிறவர்களும் அதையே பின்பற்றி வருகின்றனர். இது நம்மிதழுக்குரிய தனித்துவம்; கர்த்தர் நமக்களித்திருக்கும் ஆசீர்வாதம்.
இந்த இதழில் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலிலிருந்து மூன்று ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். அத்தோடு, இரட்சிப்பில் விசுவாசத்தின் பங்கு பற்றியும் விளக்கியிருக்கிறேன். இதழைத் தயாரிக்கத் துணைபுரிந்தவர்களுக்கு என் நன்றிகள்! இந்த இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக் கர்த்தர் துணைபுரியட்டும். – ஆசிரியர்
கர்த்தருக்கு லேசான காரியம்
2 இராஜாக்கள் 3:4-27
இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:4-27 வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் ஆகாபின் மரணத்தின் பின் அவனுடைய இடத்தில் யோராம் இஸ்ரவேலின் அரசனாக வந்ததைக் கவனித்தோம். அது மட்டுமல்லாமல் அந்த யோராம் எப்படிப்பட்டவன் என்பதை முதல் மூன்று வசனங்களிலிருந்து அறிந்துகொண்டோம். ஆகாப் மோசமானவன்தான், அவனைப் போல மோசமானவன் இஸ்ரவேலில் இருந்ததில்லை. உண்மையில் இஸ்ரவேலிருந்த மோசமான அரசர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தாலும் அவர்கள் எல்லோரையும்விட மோசமானவனாக ஆகாப் இருந்திருக்கிறான். அவனுடைய இடத்தில் யோராம் அரசனாக வந்தான். இவனும் கூட ஒரு நல்ல அரசன் என்று சொல்ல முடியாது. இந்தப் பகுதி யோராம் அரசனான பிறகு அவன் ஒரு திட்டத்தை போட்டு, மோவாபியருக்கு எதிராக யுத்தம் செய்யப் புறப்பட்டதைப் பற்றி விளக்குகிறது. இது ஒரு நீண்ட வேதப் பகுதி. ஆகவே இதை வார்த்தைக்கு வார்த்தை விளக்கி எழுதமுடியாது. இருந்தபோதும், நான்கு தலைப்புகளின் அடிப்படையில் இந்தப் பகுதியின் மூலமாக ஆண்டவர் எதை விளக்குகிறார் என்பதைப் பயன்பாடுகளோடு நாம் ஆராயலாம்.
- சந்தர்ப்பவாதக் கூட்டணி
- கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்பட்ட அவமதிப்பு
- கர்த்தருடைய வார்த்தை செய்கின்ற அற்புதம்
- கர்த்தரின் வார்த்தை தரும் வசதி
முதலாவதாக, சந்தர்ப்பவாதக் கூட்டணி
இது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். மோவாபின் அரசனான மேசா அதிகமான ஆடு மாடுகளை வைத்திருந்தான். அது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்திருக்கலாம், அது அவனுக்கு அதிக வருமானத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அவனுக்கு ஆடுமாடுகள் தொகை தொகையாக இருந்தன. ஆகாப் அரசனாக இருந்தபொழுது அவனுக்குக் கையாளாக இருந்து வந்தவன்தான் இந்த மேசா. அதுமட்டுமல்ல மோவாப் ஆகாபுக்கு கீழ் இருந்ததால் இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் அவன் கப்பமாகச் செலுத்திவந்தான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகாப் கொடியவன் மட்டுமல்ல, அதிக பலமுள்ளவனாகவும் இருந்ததால் இந்த மோவாப் அரசனான மேசாவினால் அவனுக்கெதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் தனித்துச் சுதந்திரமாக நாட்டை ஆள விருப்பப்பட்டாலும் அது அவனால் முடியாமல் இருந்தது.
இப்போது ஆகாப் இறந்து விட்டான். அவனுடைய இடத்தில் யோராம் வந்துவிட்டான். ஆகாபைப்போல யோராம் வலிமையானவனாக இல்லை என்று தெரிந்ததால் இவன் கலகம் செய்ய ஆரம்பித்தான். ஆகவே அது யோராமுக்கு ஆபத்தாய் முடிந்தது. மேசா பிரிந்துபோய்விட்டால் யோராமுக்கு ஆபத்து. எந்தவிதத்தில் என்றால், இதுவரை ஒருலட்சம் ஆட்டுக்குட்டிகளும், ஒருலட்சம் குரும்பாட்டுக் கடாக்களும் கப்பமாக வந்து கொண்டிருந்தது, அது முதலில் இல்லாமல் போய்விடும். அது மட்டும் இல்லாமல் இவனும் பிரிந்து போனால் தன் வசம் இருக்கும் மற்றப் பகுதியில் இருப்பவர்களும் இப்படியே கலகம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அது இஸ்ரவேல் நாட்டிற்கு ஆபத்தாகப் போய் முடியும். அதை உணர்ந்த யோராம் ஒரு கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்தான். ஏனென்றால் தனியாகச் சென்று சண்டைபோட்டு மேசாவை வெல்ல முடியாது என்பது யோராமுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அதற்காக ஒரு கூட்டணியைத் தாயார் செய்தான் என்பதை 6, 7 வது வசனங்கள் நமக்கு சொல்லுகின்றன.
இந்தக் கூட்டணியில் வரும் முதல் அரசன் இஸ்ரவேலுக்கு தென் பகுதியில் இருந்த யூதாவின் ராஜாவாகிய யோசபாத். யூதாவில் அரசர்களாக இருந்த எல்லோரையும்விட யோசபாத் நல்லவனாகவும், மிகவும் திறமையுள்ளவனாகவும் இருந்தான். இஸ்ரவேல் ராஜாக்களைப்போல இவன் மோசமானவனாக இருக்கவில்லை. இருந்தபொழுதும் இவனிடமும் தவறுகள் இருந்தன. இஸ்ரவேலின் ராஜாக்களோடு இணங்கிப் போவதை இவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
1 இராஜாக்கள் 22:3, 4 வசனங்களில் யோசபாத் ஆகாபிற்கு நண்பனாக இருந்ததைப் பற்றி வாசிக்கிறோம்,
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
இதே வார்த்தைகளை 2 இராஜாக்கள் 3:7 வது வசனத்திலும் யோசபாத் யோராமிடம் சொல்லுவதைப் பார்க்கிறோம்.
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
யோசபாத் ஆகாபின் நண்பனாக இருந்தான். அதுவே அவன் தன் வாழ்க்கையில் செய்திருக்கக்கூடாத ஒரு பெரிய தவறு. ஆனால் யோசபாத் அதை செய்திருந்தான் என்று வாசிக்கிறோம். இப்போது யோராம் யோசபாத்தைத் தன்னோடு மேசாவுக்கு எதிராக யுத்தத்திற்கு வர அழைத்தபொழுது முன்பு ஆகாபிடம் ஒத்துக்கொண்டது போலவே இவனோடும் அதற்கு ஒத்துழைத்தான் என்று பார்க்கிறோம். இப்படி யோசபாத்தின் உதவியை நாடுவதற்கு ஆகாபிடமிருந்துதான் யோராமுக்கு யோசனை வந்தது என்று நாம் நினைத்தாலும் அதில் தவறில்லை. ஏனென்றால், இங்கேயும் ஆகாப் பயன்படுத்திய அதேவிதமான வார்த்தைகளைத்தான் யோசபாத் பயன்படுத்துகிறான். யோசபாத் யூதாவின் நல்ல அரசர்களில் முக்கியமானவன். இருந்போதும் அவனுக்கு நல்ல நண்பர்கள் இருக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகாபோடும், யோராமோடும் அவன் இணைந்து அவர்களுக்கு நண்பனாக இருந்தது பெரிய தவறு. இவர்கள் தொடர்பான விஷயங்களில் யோசபாத் விசுவாசத்தோடு நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் வேதத்தில் வாசித்து அறிந்து கொள்ளுகிறோம்.
அடுத்ததாக இந்தக் கூட்டணியில் வரும் இரண்டாவது நபர் ஏதோம் தேசத்து அரசன். யோராமும் யோசபாத்தும் மேசாவோடு போரிடுவதற்கு உடன்பட்டு அவர்களோடு போகின்றபொழுது எந்த வழியாகப் போகவேண்டுமென்று யோசபாத்து கேட்டபொழுது அவன் ஏதோம் வனாந்திரத்தின் வழியாகப் போவோம் என்று யோராம் சொல்லுவதை நாம் வாசிக்கிறோம். இவற்றைக் கவனிக்கின்றபோது யோராம் ஏற்கனவே நன்றாகச் சிந்தித்து ஒரு திட்டத்தை வகுத்திருந்தான் என்று நாம் பார்க்கிறோம். ஏதோம் தேசத்து ராஜாவாக இருந்தவனுக்கு யோசபாத்தோடு சிறிது நட்பு இருந்தது. யோசபாத்திற்கு கீழ் அவன் இருந்தான் என்று நாம் வைத்துக்கொள்ளலாம். ஆகவே அந்த வழியில் போகலாம் என்று யோராம் சொன்னால், அந்த வழியாகச் சென்று ஏதோமின் ராஜாவையும் இந்தக் கூட்டணியில் யோசபாத்தின் உதவியோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதுதான் யோராமின் திட்டமாக இருந்தது. ஆகவே ஏதோம் ராஜாவும் இதில் இணைந்து கொண்டான். மோவாபின் மேசாவுக்கு எதிராக மூன்றுபேர் கூட்டணியாக, அதாவது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், ஏதோமினுடைய ராஜாவும் சேர்ந்து ஒரு பெரும் படையோடு ஏதோம் வனாந்தரத்தின் வழியாகப் போனார்கள். இதுவே மோவாபின் மேசாவுக்கு எதிரான ஒரு கூட்டணியாக இருந்தது.
இந்தக் கூட்டணியைப் பற்றிப் பார்க்கிறபோது இது அரசியல் லாபத்திற்காக ஏற்பட்ட ஒரு கூட்டணியாகத் தெரிகிறது. இங்கு சுயநலமே ஆட்சி செய்தது. இதில் நிச்சயமாக யோராமின் திட்டம் இருந்தது, அந்தத் திட்டத்தின் உள்நோக்கத்தை உணராமல் அதை நிறைவேற்றுவதில் மற்ற இரண்டு பேரும் ஒத்துழைத்தார்கள். யோசபாத்தை திருப்திப்படுத்துவதற்காக ஏதோம் ராஜா இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டான். யோராமை திருப்தி செய்ய யோசபாத்து இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டான். யோசபாத்தை தன்னோடு சேர்த்துக்கொள்ள யோராம் விசுவாச நாடகமாடினான். அதாவது அவன் பாகாலுக்கு ஆகாப் கட்டிய புனிதத் தூணை அகற்றினான். அதைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அது ஒரு முழுமையான ஆவிக்குரிய மாற்றத்துக்கு அடையாளமே இல்லை. அது போலிச் சீர்திருத்தமாக இருந்தது. அது அரசியல் லாபத்திற்காக யோராம் தீட்டிய திட்டம். ஆகவே இந்தக் கூட்டணி ஒரு சௌகரியமான சந்தர்ப்பவாதக் கூட்டணியாக மட்டுமே இருந்தது. இதனை Collision of convenience என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதில் யோசபாத் இணைந்தது மிகத் தவறான செயல்.
இதிலிருந்து கற்க வேண்டிய சில பாடங்கள்
- முதலாவது பாடம் யோசபாத் செய்த தவறை கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாது.உலகத்தோடு நாம் நட்பை நாடினால் ஆண்டவருடன் நட்போடு இருக்க முடியாது என்கிறது வேதம். அதனை யோவான் மற்றும் 1 யோவானில் வாசிக்கிறோம். உலகத்தோடு நமக்கு நட்பு இருந்தால் கர்த்தரோடு நட்பு இருக்க முடியாது. பணத்தோடு நட்பு இருந்தால் ஆண்டவருக்கு நாம் நண்பனாக இருக்க முடியாது. யோசபாத் விசுவாச வாழ்க்கையில் அதிக உலக ஆசை இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம் இதனை பின்பற்றக்கூடாது. ஆண்டவரும் உலகமும் ஒரு காலமும் நண்பர்களாக இருக்க முடியாது. நம் நாட்டில் இருக்கிற பிரச்சனை என்ன? முக்கியமாக இந்தியாவில் சபையை சபையாகப் காணமுடியவில்லை. அதுதான் பெரிய பிரச்சனை. அதற்குக் காரணமென்ன? அவற்றை உலகத்தோடு உறவாடுகிற சபைப் பிரிவுகளாகத்தான் காண்கிறோம். எங்கு போனாலும் எந்த சபைப் பிரிவைப் பார்த்தாலும் அங்கு உலகம்தான் ஆட்சி செய்கிறது. போதகர்கள் அரசியல் லாபத்திற்காகவும், தங்களுடைய சுயநலன்களுக்காகவும் எதையும் செய்வதைப் பார்க்கிறோம். சமீபத்தில் நான் தமிழகத்தில் இருக்கும் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தான் போய்க்கொண்டிருக்கிற சபைப் பிரிவு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதால் இன்னொரு சபைப் பிரிவு நன்றாக இருக்கிறதென்று ஒருவர் சொல்ல அங்கு சென்று பார்த்தாராம். அங்கும் அதேவிதமான சுயநலன்களும் வேதத்திற்கு சிறிதும் இடமளிக்காதபடி அதற்கு விரோதமான அணுகுமுறையுமே இருந்தது என்று என்னிடம் சொன்னார்.
ஒரு போதகனாக வேதம் சொல்லுக்கிறவிதமாக எதையும் செய்ய முடியாத ஒரு நிலை தமிழ் நாட்டில் காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமென்ன? உலகம் சபைக்குள் வந்துவிட்டது. அதனால் அதை ஆளுக்கிறவர்கள், அதற்கு அதிகாரிகளாக இருந்து போதிக்க வேண்டியவர்கள் உலகத்தோடு ஒப்புரவாகி ஆத்துமாக்களை வஞ்சிக்கிறார்கள். அவர்களுக்கு வேதத்தைப் படித்து, அதை ஒழுங்காக விசுவாசத்தோடு பிரசங்கிப்பதற்கு இருதயம் இல்லை. ஏனென்றால் அந்த இருதயம் உலகத்திற்கு விற்கப்பட்டுவிட்டது. இதனால் வஞ்சிக்கப்பட்டு, ஆசீர்வாதமடையாமல் போகிறவர்கள் ஆத்துமாக்கள்தான். அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய சத்தியம் அங்கு போய்ச் சேர முடியாதபடி இந்த உலகத்து மனிதர்களால் சபை துன்பப்படுகிறது. அங்கு சத்தியத்தைக் கேட்க முடியவில்லை. ஆவியானவருடைய பிரசன்னத்தை அங்கு பார்க்க முடியவில்லை. உண்மையான தேவ அன்பையும் சமாதானத்தையும் அங்கு பார்க்க முடியாமல் இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள்தான். கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாத தவறை யோசபாத் செய்தான். அவன் உலகத்தோடு நட்புறவாடினான். என்னைப் பின் தொடர வேண்டுமானால் சிலுவையை சுமக்க வேண்டுமென்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். அவ்வாறு சிலுவையை சுமக்க முடியாதவர்கள் ஆண்டவரைப் பின் தொடர முடியாது. ஆண்டவரே எனக்கு நீங்களும் வேண்டும், இந்த உலகமும் வேண்டுமென்றுதான் எல்லாரும் கேட்கிறார்கள். அதைத்தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் நாம் காண்கிறோம். ஆகவே கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாத ஒரு காரியம் உலகத்தோடு நட்புறவாடுவதாகும். உலகம் ஆண்டவருக்கு சொந்தமானதாக இருந்தபோதும் பாவத்தில் இருக்கிற உலகமும் பரிசுத்தமாக இருக்க வேண்டிய சபையும் ஒரே விதத்தில் இயங்க முடியாது.
- இரண்டாவதாக நாம் இதில் படிக்கும் உண்மை, நம் விசுவாசத்தை சுயநலத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.கிறிஸ்தவத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது. நாம் ஏற்கனவே பார்த்த வண்ணம் யோராம் உண்மையான மனந்திரும்புதலைக் கொண்டிருக்கவில்லை. சுயலாபத்திற்காக அவன் ஒரு நாடகமாடினான். தன்னுடைய சுயநல நோக்கங்களுக்கு அது பயன் தருமென்று அவன் நம்பினான். ஏனென்றால் ஆகாபு பலமுள்ளவனாக இருந்தாலும் மிகவும் கேடான பெயரைப் பெற்றுக்கொண்டான். அவனைப் பிடித்தவர்கள் நாட்டிலேயே ஒருவருமில்லை. ஆகாபைப் போலத் தான் பெயர் வாங்கி விடக்கூடாது, தன்னையும் அவ்வாறு எல்லோரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு ஒரு கண் துடைப்பு மாதிரித்தான் அவன் பாகாலுடைய புனிதத்தூணை அகற்றிய செயல். அதைத் தவிர ஆகாபு செய்து வந்த அத்தனை பாவங்களையும் அவன் தன் வாழ்க்கையில் தொடர்ந்தான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அவன் தன்னை சீர்திருந்தியது போல காட்டிக் கொண்டது வெளிப்புறமாக மக்களை ஏமாற்றுவதற்காகதான். நாம் ஒருநாளும் ஆண்டவருடைய வேதத்தையும், கிறிஸ்தவத்தையும், விசுவாசத்தையும், வேதத்தோடு முரண்பட்டு சுய நலத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது. அது மிகப்பெரிய பாவம்.
- மூன்றாவதாக, நாம் இதில் படிக்கும் பாடம், போலியான சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் கர்த்தரை ஒரு போதும் மகிமைப்படுத்தாது என்பதுதான்.அநேகர் சபைகளின் ஒற்றுமையைப் பற்றி வாய்ப்பேச்சு பேசுவார்கள். அதாவது சபைகள் எல்லாம் இணைந்து இருக்க வேண்டும். போதகர்கள் எல்லோரும் இணைந்து ஜெபம் பண்ண வேண்டும். ஆண்டவர் ஒற்றுமையை எதிர்பார்க்கிறார் என்று சொல்லி வேத வசனங்களை எல்லாம் சுட்டுவார்கள். அது நல்லதுதான். ஆண்டவரே, யோவான் 17 ஆவது அதிகாரத்தில் அப்படியான ஒற்றுமையைப் பற்றி ஜெபம் பண்ணியிருக்கிறார். ஆனால் ஒருநாளும் சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இராமாயணத்து சூர்ப்பனகையைப் போன்ற போலியானதொரு ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என்று ஆண்டவர் அறிவுரை செய்யவில்லை. எந்த ஒற்றுமையாக இருந்தாலும் அது சத்தியத்தின் அடிப்படையிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும்; சத்தியத்திற்குத் துரோகம் செய்வதாக இருக்கக்கூடாது. சத்தியத்தை மட்டும் ஏற்று எல்லோரும் இணைந்து ஒரேவிதமாக விசுவாசிக்கும்போது மட்டுமே அங்கு உண்மையான வேதம் எதிர்பார்க்கின்ற ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பார்க்க முடியும். சத்தியம் இல்லாத இடத்தில் கிறிஸ்தவ ஐக்கியத்தையோ ஒற்றுமையையோ காண முடியாது. ஆகவே சந்தர்ப்பவாதக் கூட்டணி, அதாவது வெளியில் ஒற்றுமையாக இருப்பதுபோல நடித்து, ஜெபம்பண்ணி, போதக வேஷதாரிகளாக உலவி வந்து, வேதத்திற்குப் புறம்பான விஷயங்களில் நம்பிக்கை வைத்து உலகத்தின் வழியில் போவது ஆண்டவருக்குப் பிடிக்காது. நான் பலிகளையல்ல கீழ்ப்படிதலையே விரும்புகிறேன் என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறார். கீழ்ப்படிதல் எப்போதுமே முழுமையான கீழ்ப்படிதலாக இருக்க வேண்டும். அரைகுறை கீழ்ப்படிதல் உண்மையான கீழ்ப்படிதல் அல்ல. அது பாவம் மட்டுமே. ஆகவே இந்த மூன்று பாடங்களையும் இங்கிருந்து நாம் படிக்கிறோம்.
இரண்டாவதாக, கர்த்தரின் வார்த்தைக்கு ஏற்பட்ட அவமதிப்பு
இதனை நாம் எங்கு காண்கிறோம்? இப்பகுதியில் 8 லிருந்து 10 வரையும் உள்ள வசனங்களில் அதை நாம் வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 3:8-10
எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான். அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
இங்கே என்ன நடந்தது? மூன்று பேரும் இந்தக் கூட்டணியை அமைத்து பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு மிருக ஜீவன்களையும் தங்களோடு அழைத்துக்கொண்டு போனார்கள். எதற்காக அவைகளைக் கொண்டுபோனார்கள்? அவர்களுக்கு வழியில் தேவையான உணவை சமைத்து சாப்பிடுவதற்காகத்தான். அந்தக் காலத்தில் இன்றிருக்கும் பிரயாண வசதிகள் இருக்கவில்லை. இன்று ஒரு இடத்திற்குப் போகவேண்டுமென்றால் மிகவேகமாகப் போய்விடலாம். படைகளை நகர்த்துவதற்குக்கூட அதிவேகமாகப் போகும் பெரும் பொருள்தாங்கி விமானங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கும் காலம் நம்முடைய காலம். ஆனால் அன்று அத்தகைய வசதிகள் இருக்கவில்லை. படைகள்கூட அன்று நடந்துதான் போக வேண்டும், அதற்குப் பல நாட்களாகும். அந்தப் பயணத்தில் அவர்கள் ஏழு நாட்கள் சுற்றித் திரிய வேண்டியிருந்தது. தமிழ் வேதத்தில் “சுற்றித் திரிந்தார்கள்” என்றிருப்பது தவறான வார்த்தைப் பிரயோகமாகும். நாம் அதனை ஏதோ பாதை தெரியாமல் வெறுமனே சுற்றித் திரிந்து அலைந்தார்கள் என்றுதான் எண்ணுவோம். ஆனால், “சுற்றித்திரிந்தபோது” என்று சொன்னால், அவர்களுக்கு நன்றாகப் பாதை தெரிந்திருந்தது, அதேவேளை அதிக தூரம் பிரயாணம் செய்து மலைகள், காடுகள் போன்றவற்றைக் கடந்து சுற்றிச் சுற்றிப் போக வேண்டியதாக இருந்தது என்று அதற்கு அர்த்தம். அப்படிப்போனபோது அவர்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரும் உணவும் குறைந்து போய்விட்டன. இனிப் போக வேண்டிய தூரமும் மிக அதிகமாக இருந்தது. மூன்று ராஜாக்களும் பெரும் படைகளோடு அத்தூரத்தைக் கடந்து போயிருப்பார்கள். அவ்வளவு பெரிய ராணுவத்திற்கு அவர்கள் கொண்டுபோன மிருக ஜீவன்கள், அவர்களுடைய போர்ப்படையில் இருந்த குதிரைகள், அது மட்டும் இல்லாமல் சமைப்பதற்குக் கொண்டுபோன மிருகங்கள் என எல்லாவற்றிற்கும் தண்ணீர் தேவையாக இருந்தது. அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறையால் இஸ்ரவேலின் ராஜா கலங்கிப் போய்விட்டான். நன்றாக வந்து மாட்டிக்கொண்டோமோ, நாம் போட்ட திட்டந்தான் சரியில்லையோ என்று குழம்பிப்போனான்.
அப்போது உடனே அவனுக்கு யாரைப் பற்றிய நினைவு வந்தது? யாரை அவனுக்குப் பிடிக்காதோ அவர்கள் நினைவுதானே வரும். அவனுக்கு யாரைப் பிடிக்காமல் இருந்தது? அவன் தகப்பனுக்கு யாரைப் பிடிக்காமல் இருந்தததோ அதே கர்த்தரைத்தான். ஆகவே இங்கு அவன் பழியைக் கர்த்தர்மேல் போடுகிறான். “இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்”. ஏதோ பார்ப்பதற்கு இவ்வளவு தூரம் வனாந்தரத்தில் எல்லாம் நடந்து அலைந்து மனந்திரும்பிவிட்டான் என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது. மாறாக, நான் படுகிற கஷ்டத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் அந்தக் கர்த்தர்தான், ஏனென்றால், அவர்தான் நமக்கு எப்போதுமே தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர்தான் ஏற்கனவே ஒரு திட்டத்தைப்போட்டு என்னுடைய திட்டங்களையெல்லாம் நாசமாக்கி மூன்றுபேரையும் சேர்த்து அழிப்பதற்காக இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார், என்று இருதயத்தில் கடுங்கோபத்தோடு சொல்லியிருப்பான். யோராமின் இந்த வார்த்தைகள் கர்த்தரை அவமதிக்கிற வார்த்தைகளாகும்.
கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தோடு உடன்படிக்கையை ஏற்படுத்தினவர் என்பதையெல்லாம் விசுவாசிக்காமல், இஸ்ரவேலின் வரலாறு மற்றும் இஸ்ரவேல் ஆண்டவரை மகிமைபடுத்தி அவரை உயர்த்திய எத்தனையோ பெரும் தலைவர்களைப் பற்றியெல்லாம் அவன் அறிந்திருந்தும் அவையெல்லாவற்றையும் மறந்து கர்த்தரை அவமதிக்கும் வகையில் யோராம் பேசுகிறான். இங்கு அவன் கர்த்தரின் இறையாண்மையை மிகவும் உதாசீனப்படுத்துகிறான். மேலும் அவனுடைய சுயரூபத்தை வெளிப்படுத்துகிறான். அவன் வெறும் உருவ வழிபாட்டுக்காரன் மட்டுமல்ல, உருவ வழிபாட்டோடு வருகிற அத்தனை அசிங்கங்களும், பாவங்களும் அவனிடத்தில் காணப்பட்டது. அவனுக்கு ஒருநாளும் கூட இஸ்ரவேலின் தேவன் மேல் நம்பிக்கை இருக்கவில்லை, அவரை வணங்கவில்லை, அவருடைய வழிகளை நாடிப் போகவில்லை. அதே நேரம், அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்கின்ற இருதயத்தையும் கொண்டிருந்தான் இந்த யோராம். ஆகவே, நமக்கு எதிரியாக இருக்கிற கர்த்தர் இந்த மோவாபியர் கையில் நாம் அகப்பட்டுக்கொள்வதற்காகத்தான் இவ்வாறு செய்தார், என்று சொன்னது கர்த்தருடைய இறையாண்மைக்கே சவாலான வார்த்தைகளாகும்.
ஆனால் யோசபாத் அவ்வாறு இல்லை, அவனுக்குக் கொஞ்சம் புத்தி இருந்தது. யோராம் அளவிற்கு மோசமானவனல்ல யோசபாத். இப்படிச் சொல்லுவதால் யோசபாத் தவறுகள் செய்யாத மனிதன் என்று அர்த்தமல்ல. யோராம் போன்ற மோசமான மனிதர்களோடு நட்பு கொண்டிருந்ததே அவன் செய்த பெரிய தவறு. இருந்தபோதும் யோசபாத் தன்னுடைய புத்தியை இழந்து முட்டாளாகக் கர்த்தருக்கு விரோதமாக இங்கு நடக்கவில்லை. யோசபாத் என்ன சொல்லுகிறான் என்பதை 11, 12 வது வசனங்களில் நாம் பார்க்கலாம்.
2 இராஜாக்கள் 3:11-12
அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.
இஸ்ரவேலோ, யூதாவோ சரி, அந்நாட்டு அரசர்களும் சரி, ஆலோசனை கேட்கப் போகவேண்டியது கர்த்தரிடத்தில் என்பதை யோசபாத் நன்றாக அறிந்திருந்தான். கர்த்தர் தான் அவர்களுக்கு அரணாக இருந்தார். கர்த்தர்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார். கர்த்தர் அவர்களோடு இருந்தபோதுதான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது, பாதுகாப்புக் கிடைத்தது. எப்பொழுது அவர்கள் பாவம் செய்தார்களோ, கர்த்தரை விட்டு விலகிப் போனார்களோ, அவர் தன்னுடைய பாதுகாப்பு அரணையும் அகற்றிக்கொள்ளுகிறார். இதெல்லாம் யோசபாத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எந்த ஆலோசனைக்கும் மக்களும் அரசர்களும் சேர்ந்து கர்த்தரிடத்தில் தான் போக வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்தக் காலத்தில் கர்த்தருடைய ஆலோசனை தீர்க்கதரிசிகளிடம் இருந்தே வந்தது. தீர்க்கதரிசிகளே கர்த்தரின் செய்தியாளர்கள். ஆகவேதான் யோசபாத் “கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா” என்று கேட்டான். அவன் இந்த நாட்டில் ஒருவரும் தீர்க்கதரிசி இல்லையா என்று கேட்கவில்லை, மாறாக பக்கத்தில் ஒருவரும் இல்லையா என்று கேட்டான். எலிசா அங்கே இருக்கிறார் என்று அவன் கேள்விப்பட்டபொழுது “கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது” என்று சொன்னான். நாம் போட்ட திட்டம் நிறைவேற வேண்டுமானால் எலிசாவைப் போய்ப் பார்க்க வேண்டும், அப்போது கர்த்தருடைய வார்த்தையும், ஆலோசனையும் நமக்கு கிடைக்கும் என்று யோசபாத் சொன்னான். இஸ்ரவேல் ராஜாவுக்கு வேறு வழியில்லாமல் அவனும் அதற்கு ஒத்துக்கொண்டான். அப்பொழுது மூன்று ராஜாக்களும் சேர்ந்து எலிசாவிடம் போனார்கள்.
யோசபாத்திற்கு ஏற்கனவே நான் கூறியபடி இரண்டு உண்மைகள் தெரிந்திருந்தன. ஒன்று, எதற்கும் எப்போதும் கர்த்தருடைய வார்த்தையைத்தான் நாடவேண்டும் என்பது. இன்னொன்று, கர்த்தரின் அவ்வார்த்தை தீர்க்கதரிசியிடம் இருந்தது என்பது. இருந்தபோதும், அவன் நண்பர்களைத் தெரிவு செய்வதில் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அவன் ஒருநாளும் ஆகாபோடும் யோராமோடும் நட்பைக் கொண்டிருந்திருக்க மாட்டான். இப்போது மூவரும் சேர்ந்து எலிசாவிடம் போகிறார்கள். எலிசா வெகு தொலைவில் இருக்கவில்லை. மாறாக அருகில்தான் இருந்திருக்கிறார். இப்போது ஒரு கேள்வி வரும், இந்த வனாந்தரத்தில் அவர்கள் ஏழு நாள் சுற்றித் திரிந்தபோது எலிசாவுக்கு அங்கே என்ன வேலை இருந்தது? ஏன் அவர் அங்கே இருந்தார்? இம்மாதிரியாக நாம் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் வேதம் பதில் கொடுக்கவில்லை. வேதம் அதற்குப் பதில் கொடுக்கவில்லை என்றால் அதை நாம் தெரிந்து கொள்ளுவதற்கு அவசியமே இல்லை என்பதுதான் அர்த்தம். ஆகவே, அதற்கெல்லாம் நாம் பதிலைத் தேடிக்கொண்டிருக்கக்கூடாது, எலிசா அங்கு இருந்தார் என்பதுதான் முக்கியம்.
எலிசா இங்கே நடந்து கொண்ட முறையே வித்தியாசமாக இருக்கிறது. மூன்று ராஜாக்களும் அவரிடத்தில் வருகிறார்கள். இஸ்ரவேல் ராஜா, யூதா ராஜா, ஏதோம் ராஜா என மூன்று ராஜாக்களும் வந்தால் மரியாதை கொடுக்க வேண்டுமல்லவா? ஆரம்ப மரியாதைகளையெல்லாம் செய்துவிட்டுப் பின்னால் பேச வேண்டிய விஷயத்திற்கு வருவதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கிறது. ஆனால் எலிசா ஒன்றுமே செய்யவில்லை. நம் தமிழ் வேதம் கொஞ்சம் மரியாதையான மொழியில் எலிசா செய்ததை மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால் உண்மையில் அந்த அளவுக்கு மரியாதையாக எலிசா அங்கு பேசவே இல்லை. 13 வது வசனத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 3:13
எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
யோராமைப் பார்த்து நீ ஏன் என் முன்னால் நிற்கிறாய் என்று கேட்கிறார் எலிசா. இவ்வாறு அவனை அவமதிக்கும் அளவிற்கு அவருக்குக் கோபம் இருந்திருக்கிறது. ஏனென்றால் எலிசாவிடம் வருவதற்கு முன்பாக யோராம் என்ன பேசினான் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்திருக்கும். இதே 2 இராஜாக்கள் 6 ஆம் அதிகாரத்தில் சீரிய ராஜாவின் திட்டங்களையெல்லாம் எலிசா இஸ்ரவேல் ராஜாவுக்கு முன்கூட்டியே சொன்னதை நாம் பார்க்கிறோம். சீரிய ராஜா படுக்கை அறையில் பேசுகிற வார்த்தைகளையும் அவர் கர்த்தர் மூலம் அறிந்திருந்தார்.
2 இராஜாக்கள் 3:11-12
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
இப்படியிருக்கையில் யோராம் கர்த்தரை அவமதிப்பாகப் பேசினான். அதை ஆண்டவர் நிச்சயமாக எலிசாவிற்கு வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் அது யோராமுக்குத் தெரியாது. யோராம் மீண்டும் தான் முன்பு சொன்னதையே சொல்லுகிறான்.
2 இராஜாக்கள் 3:13
அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
இப்போது எலிசாவுக்கு கோபம் கூடிவிடுகிறது. முதலில், தான் பார்க்கக் கூடாத ஒருவரைப் பார்த்தாலே எவருக்கும் பிடிக்காது இல்லையா? காலையில் நன்றாகத் தூங்கி சமாதானத்தோடு எழுகிற நேரத்தில் நாம் பார்க்கவே விருப்பப்படாத ஒருவர் வந்து கதவை தட்டினால் எப்படி இருக்கும்? இருக்கிற சந்தோசமெல்லாம் போய்விடும். எலிசாவுக்கு இஸ்ரவேலில் பிடிக்காதவர்கள் என்று சொன்னால் யோராம்தான் முதல் நபராக இருப்பான். அவன் மோசமான விதத்தில் ஆண்டவரைப் பற்றிச் சொன்னால் எலிசா சும்மா இருப்பாரா? 14 வது வசனத்தில் அவர் சொல்லுகிறார் பாருங்கள்.
2 இராஜாக்கள் 3:14
அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு நேரம் அதை சகித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமே யோசபாத்தான். ஏனென்றால் யோசபாத் நல்ல அரசன். அதையே மேற்குறிப்பிட்ட வசனத்தில் எலிசா சொல்லுகிறார். இங்கே நாம் என்ன பாடத்தைப் படிக்கிறோம்?
முதலாவது பாடம், கர்த்தரின் வார்த்தையையும், அவருடைய இறையாண்மையையும் அவமதிக்கக்கூடாது. அது மிகவும் தவறானது. எனக்கு தெரிந்த ஒருவர் பிரச்சனை அதிகமானதால் நிதானமில்லாமல் ஆண்டவரைக் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார். பிரச்சனை யாருக்குத்தான் இல்லை? எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அவர் சொன்னதைக் கேட்டு எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவ்வாறு பேசுகிற இருதயம் நல்ல இருதயம் இல்லையே என்று நான் யோசித்தேன். நாம் சிலநேரம் கவனக்குறைவாகப் பிரச்சனைகள் அதிகமாவதால் ரூத்தின் மாமியார் நகோமியைப் போல ஆண்டவருக்கு எதிராகப் பேசிவிடுகிறோம். அது மிக மிக ஆபத்தானது. அவ்வாறு நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. கர்த்தருடைய வார்த்தை, இறையாண்மை மற்றும் அவரது செயல்களையெல்லாம் நாம் அவமதிக்கக் கூடாது. கர்த்தர் ஒருநாளும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். இங்கு யோராமின் இருதயம் மிகவும் மோசமானதாக இருந்தது. அவன் ஆண்டவருடைய பிள்ளையே அல்ல. அவனுக்கு ஆண்டவரின் மீது எந்தவித நேசமுமில்லை. ஆகவே அவனுடைய இருதயத்தில் கர்த்தருக்கு எதிரானவைதான் இருக்கும். ஆனால், அவன் தான் செய்கிற பாவம் என்னவென்று தெரியாமல் இருந்தான். சிலநேரங்களில் நாம் செய்கிற பாவம் இன்னும் கூடுதலான பாவங்களைச் செய்யவைக்கும். பாவத்திற்குத் தன்னை சீர்திருத்திக்கொள்ளத் தெரியாது. நல்ல வேளையாக சாத்தான் சாத்தானாக இருக்கிறான். அவன் அதற்கு மேலாக அவனால் வளர முடியாது. ஆனால், நம்மோடிருக்கிற பாவம் தொடர்ந்து விருத்தியடைந்து இன்னும் மேலும் மோசமான பாவமாகத்தான் கடைசிவரைக்கும் போய்கொண்டிருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. யோராமின் வார்த்தைகள் மிகவும் மோசமானவை. ஆகவே கர்த்தருடைய வார்த்தையையும், இறையாண்மையையும், அவரது செயல்களையும் அவமதிக்கிறவிதமாக ஒருநாளும் பேசாதீர்கள், சிந்திக்காதீர்கள். ஏனென்றால் ஆண்டவர் ஒருநாளும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
இரண்டாவது பாடமாக, கர்த்தருடைய வார்த்தையோடு நாம் விளையாடக்கூடாது. அதாவது அதை நாம் சாதாரணமாக எடுத்து நம் சுயநலத்திற்காகவோ, சுய ஆதாயத்திற்காகவோ பயன்படுத்திவிடக்கூடாது. சிலபேர் ஆபத்துக் காலத்தில்மட்டும் அதைத் தேடுவார்கள். சபைக்கு ஒழுங்காக முறையாகப் போவதில்லை, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை, போதகர்கள் அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லை ஆனால் ஆபத்து என்று வந்துவிட்டால் சபைக்குச் செல்லுவார்கள், கர்த்தருடைய வார்த்தையைத் தேடுவார்கள், போதகரின் ஆலோசனையை நாடுவார்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாராவது இவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் ஒருநாளைக்கு கர்த்தருடைய வார்த்தை உங்கள் பக்கத்திலேயே வராமல் போய்விடும். யோராமுக்கு அந்த ஆபத்து இருந்தது. ஏனென்றால் அவன் அடிக்கடி கர்த்தருடைய வார்த்தையோடு விளையாடிக் கொண்டிருந்தான். அது ஆண்டவருக்குப் பிடிக்காத காரியம். ஆகவேதான் எலிசா உன் முகத்தையே நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தையைப் பொறுத்தளவில் எப்போதுமே அதற்குக் கீழ்ப்படிகிற மனப்பான்மையோடுதான் அதைப் படிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், செயற்படுத்த வேண்டும். வேறு எதற்காகவும் அதைப் பயன்படுத்தவோ, அதோடு விளையாடவோ கூடாது. சுய ஆதாயத்துக்காக அதைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் ஆண்டவர் சும்மா விடமாட்டார்.
மூன்றாவதாக, கர்த்தருடைய வார்த்தை செய்யும் அற்புதம்
யோராம் கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் 16-19 வது வசனங்களில் ஆண்டவர் செய்கிற அற்புதத்தை நாம் வாசிக்கிறோம்
2 இராஜாக்கள் 3:16-19
இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
எதற்காக இங்கு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று எலிசா சொன்னார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. இருந்தபோதும் இந்த இடத்தில் எலிசாவின் கோபம் மிகவும் அதிகரித்து இருந்தது. அவருடைய கோபம் தணிவதற்காக வாத்தியக்காரனை அழைத்து வரும்படி அவர் கேட்டிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது கர்த்தருடைய கரம் எலிசாவின்மேல் இறங்கியது. இன்னொருவிதத்தில் பார்த்தால் ஆண்டவருடைய கோபம் தணிந்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.
அடுத்ததாக தண்ணீருக்காக வாய்க்கால்களை வெட்டச் சொல்லுகிறார் எலிசா. எதுவும் இல்லாததை வைத்து எல்லாவற்றையும் செய்பவர்தானே நம் ஆண்டவர்! ஒன்றுமில்லாததிலிருந்துதானே நம் ஆண்டவர் உலகத்தைப் படைத்தார். இந்த வனாந்தரத்தில் தண்ணீர் வரவழைப்பதெல்லாம் அவருக்கு அற்பமான காரியம். யெகோவா தேவனுக்கு இந்த இடத்தில் தண்ணீர் வரவழைப்பதா பெரிய விஷயம்? ஏனென்றால் யோராம் தண்ணீர் இல்லையென்றுதான் புலம்பிக்கொண்டிருந்தான். தண்ணீர் மட்டுமல்ல, அதற்கு மேல் அவர் மோவாபியரையும் உன் கையில் கொடுப்பார் என்று எலிசா சொன்னார். யோராம் கர்த்தரின் வார்த்தையை உதாசீனப்படுத்தி அவருடைய இறையாண்மையையே அவமதிக்கும்விதமாகப் பேசினான். ஆனால், எலிசா இது அற்பமான காரியம் என்று யோசபாத்திற்காகச் சொல்லுகிறார், யோராமிற்காக அல்ல. கர்த்தருக்கு அது மிகவும் சாதாரண காரியம், அதுமட்டுமல்ல மோவாபியரையும் உங்கள் கையில் கொடுப்பார் என்று சொன்னார். கர்த்தர் அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவையை மட்டுமல்லாமல் அதற்கு மேலானதையும் செய்யக்கூடியவர் என்று எலிசா இந்தப் பகுதியில் விளக்குவதை நாம் பார்க்கிறோம். அதற்குப் பின்பு என்ன நடந்தது?
2 இராஜாக்கள் 3:20-25
மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று. தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல்தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டு வந்து எல்லையிலே நின்றார்கள். மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது. அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து, பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
காலை நேரத்தில் பலி செலுத்தப்படும்போது அவர்கள் ஏதோம் தேசம் வழியாய் வந்திருந்தார்கள். அந்த தேசம் தண்ணீரால் நிரம்பியது. மோவாபியர்கள் தங்கள் படைகளையெல்லாம் தயார் செய்து எல்லைகளில் வந்து நிற்கிறார்கள். தண்ணீர் வந்ததெல்லாம் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆண்டவர் இங்கொரு அற்புதம் செய்கிறார், சூரியன் காலையில் வருகிற நேரம் சிவப்பாகத்தானே காணப்படும். ஆண்டவர் முதலில் அந்த இடத்தைத் தண்ணீரால் நிரப்புகிறார் பிறகு காலையில் சூரியக் கதிர்கள் அந்தத் தண்ணீரில் பட்டு தண்ணீர் முழுவதும் இரத்தமாக மோவாபியருக்குக் காட்சியளித்தது. ஆண்டவர் ஒரு காரணத்திற்காக இதைச் செய்தார். தண்ணீரைக் கொடுத்த தேவன் அதைப் பயன்படுத்தி மோவாபியரைக் கலங்கடித்தார் என்று நாம் வாசிக்கிறோம். எதிரிகள் எல்லோரும் தங்களைத் தாங்களே வெட்டிக்கொண்டு மரித்துப்போனார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொள்ளைக்குப் போகப் புறப்பட்டார்கள். ஆனால் எலிசா சொன்னபடி மோவாபியர்கள் அனைவரும் மூன்று ராஜாக்களினால் முறியடிக்கப்பட்டார்கள். இதுதான் கர்த்தர் செய்த அற்புதமாகும். இதை அவர் பெரிய காரியங்களைக் கொண்டு செய்யவில்லை. சூரியனையும் தண்ணீரையும் படைத்த ஆண்டவர் தண்ணீரில் சூரியன் ஒளிவிசுகிற நேரம் தண்ணீரை இரத்தமாகக் காட்சியளிக்கச் செய்து மோவாபியரையும் அவர்கள் நாட்டையும் மிகவும் சுலபமாக இஸ்ரவேல் அரசன், யூதா அரசன், ஏதோம் அரசன் ஆகியோரின் கையில் ஒப்படைத்தார் என்று நாம் கவனிக்கிறோம்.
நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை அடியோடு இல்லாமல் செய்வதற்கு ஆண்டவருக்கு ஒரு நொடி கூடத் தேவையில்லை. நூற்றுக்கு அதிபதி இயேசுவினிடத்தில் வந்து ஆண்டவரே! என் வேலைக்காரன் சாகும் நிலையில் இருக்கிறான், நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்டான். அதற்கு இயேசு நீ போ நான் வருகிறேன் என்று சொன்னார். அதற்கு அவன் அதெல்லாம் வேண்டாம், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பேசுங்கள், அவன் சுகமாவான் என்றான். அவனுக்குத் தெரிந்திருந்தது ஆண்டவர் சர்வ இறையாண்மையுள்ளவர், வல்லமையுள்ளவர் என்று. ஆனால் இந்த யோராமிற்கு அது தெரியவில்லை. ஆண்டவர் எவ்வளவு கிருபையுள்ளவர் என்பதை யோசித்துப்பாருங்கள். யோராம் பேசின வார்த்தைக்கு அவனை ஆண்டவர் இல்லாமல் செய்திருக்க வேண்டும். ஆனால் யோசபாத்தினால் அவர்கள் எல்லோருமே அன்று தப்பினார்கள். இந்த இடத்தில் ஆண்டவர் ஒரு அருமையான அற்புதத்தை செய்து, தான் இறையாண்மையுள்ள தேவன் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ளும்படிச் செய்கிறார். யோராம் திருந்துவதற்கு அதுகூட ஒரு வாய்ப்புதான். நம்மிலும் சிலபேர் அப்படி இருப்பார்கள். எத்தனையோ சுவிசேஷ செய்திகளைக் கேட்டும் கல்லைப் போல அசையமாட்டார்கள். யோராமிற்கு கிருபையுள்ள தேவன் இவ்வளவு பெரிய அற்புதத்தைக் காணும்படியாகச் செய்தார். ஆனால் அவன் எங்கு திருந்தினான்? வானத்திலிருந்து மரித்தவன் உயிரோடு பூமிக்குப் போனால் மக்கள் திருந்துவார்கள் என்று ஐஸ்வரியவான் சொன்னதற்கு ஆண்டவர் என்ன சொன்னார்? என்னுடைய வார்த்தைகளைக் கேட்டுத் திருந்தாதவன் மரித்தவன் உயிரோடு எழுந்தாலும் திருந்தமாட்டான் என்றுதான் இயேசு சொல்லியிருக்கிறார். இந்த அற்புதங்களையெல்லாம் வேதத்தில் அவர் பதிவு செய்திருப்பதற்குக் காரணம் நாம் வாசித்துத் திருந்துவதற்காகத்தான். இறையாண்மையுள்ள தேவனால் செய்ய முடியாதது ஒன்றுமேயில்லை. அவருக்கு எல்லாம் அற்பமான காரியம்.
கடைசியாக, கர்த்தரின் வார்த்தை தரும் வசதி
இப்பகுதியின் கடைசி வசனங்கள் புரிந்துகொள்ள சிறிது கடினமானவை. அந்த வசனங்களுக்கு நான்கு விளக்கங்களை விரிவுரையாளர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதை நாம் இப்போது பார்க்கப்போவதில்லை. எது சரியானது என்பதை மட்டும் நான் இதில் விளக்குகிறேன். கடைசி இரண்டு வசனங்கள் இவ்வாறு சொல்லுகின்றன.
2 இராஜாக்கள் 3:26-27
யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று. அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
மோவாப் அரசன் இங்கு என்ன செய்கிறான்? யுத்தம் மிகவும் மோசமாகிவிட்டது, நாடெல்லாம் போய்விட்டது, எல்லாவற்றையும் சூறையாடிவிட்டார்கள். இனிமேல் தோல்வி உறுதி என்கிற நிலைக்கு வந்து தூரத்தில் தன் போர் வீரர்கள் 700 பேர்களோடு மட்டும் அவன் இருந்தான். அவர்களைக் கொண்டு முயற்சித்தும் எதுவும் முடியாமல் போய்விட்டது. இங்குதான் அவன் ஒரு காரியத்தைச் செய்கிறான். நம் ஊரில் அதிக நாட்கள் மழை வராமல் இருந்தால் என்ன செய்வார்கள்? கோயிலுக்குச் சென்று பூசை செய்வார்கள். பிறகு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டால் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணச் சடங்கு நடத்துவார்கள். இதை மேலை நாட்டாரிடம் விளக்கினால் அவர்களுக்குப் புரியாது; சிரிப்பார்கள். மூளை இருக்கிற ஒருவனும் இதைப்போல எதையும் செய்யமாட்டான். இத்தகைய ஒரு செயலைத்தான் மோவாப் அரசன் செய்கிறான். உண்மையில் மிகவும் கொடூரமான செயலைச் செய்தான். மோவாப் அரசன் புறஜாதிக்காரன். அவனுக்கு ஆண்டவரைப் பற்றித் தெரியாது. தான் வணங்கும் விக்கிரகத்திடம் சென்று தன் மூத்த மகனை அதற்கு சர்வாங்க தகனமாகப் பலியிட்டான். இஸ்ரவேல் மக்கள் அந்நிய மக்களோடு சேரக்கூடாது என்று ஆண்டவர் ஏன் சொன்னார் தெரியுமா? இதுபோன்று கடவுளுக்கு விரோதமான எந்தக் காரியத்தையும் அவர்கள் பின்பற்றக்கூடாது என்பதற்காகத்தான். இதைவிடக் கேவலமான செயலை ஒருவரும் செய்யமாட்டார்கள். தன் வெற்றிக்காகத் தன் சொந்த மகனையே இவன் பலிக்கொடுக்கிறான்.
மோவாப் அரசன் மிகவும் மோசமான காரியத்தைச் செய்தான். “அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால்” என்று நாம் வாசிக்கிறோம். இங்கு ஒரு கேள்வியை நாம் கேட்கவேண்டும். இஸ்ரவேல்மேல் யாருக்குக் கடுங்கோபம் வந்தது? மோவாபியருக்கா? கர்த்தருக்கா? இங்கு கர்த்தருக்கு இஸ்ரவேல் மேல் கடுங்கோபம் மூண்டது என்று வசனம் சொல்லவில்லை. அவ்வாறு ஏற்படுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் நாம் பார்க்க முடியவில்லை. ஆகவே நிச்சயமாக இது கர்த்தருடைய கோபத்தைப் பற்றிச் சொல்லவில்லை. இதனை எப்படி மொழிபெயர்த்திருக்க வேண்டும் தெரியுமா? “அப்பொழுது இஸ்ரவேலர் கடுங்கோபம் கொண்டதினால் அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டுத் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்” என்றிருக்க வேண்டும். ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்? இஸ்ரவேலர்கள் கர்த்தரை ஆராதித்து வந்தார்கள், பிறகு பாவம் செய்து தாணிலும் பெத்தேலிலும் கன்றுக்குட்டியை வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த இஸ்ரவேலர்கள் கூட, பாவத்தில் இருந்தபோதும் இந்தளவுக்குப் பாவம் செய்வதற்குத் துணியவில்லை. மோவாப் அரசன் தன் வெற்றிக்காகத் தன் மூத்த மகனைப் பலியிட்டதைக் சிறிதும் இஸ்ரவேல் மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அக்கொடுமையான செயல் அவர்களுக்கு அவ்வளவு தூரம் கடுங்கோபத்தை உண்டாக்கியது. அதனால் அவர்கள் எங்களுக்கு நாடும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப் போய்விட்டார்கள். மோவாப் அரசன் இப்படிச் செய்தது மிகவும் பயங்கரமான காரியம். இதிலிருந்து நாம் எதைக் கவனிக்கிறோம்? தன் காரியங்கள் நடக்கவில்லை, தனக்குத் தோல்வி வரப்போகிறது என்றுணர்ந்தால் உருவ வழிபாட்டு மக்கள் எல்லாம் இப்படித்தான் கேவலமான காரியத்தைச் செய்வார்கள் என்பதுதான்.
மூன்று ராஜாக்களும், இஸ்ரவேலர்களும் அன்று பார்த்தது என்ன தெரியுமா? எந்த அளவுக்கு உருவ வழிபாடு மனிதனை மோசமாக்கி வைத்திருக்கிறது என்பதைத்தான். நம் நாட்டிலும் உருவ வழிபாடு நிறைந்து காணப்படுகிறது. படித்தவன், படிக்காதவன் என எல்லோரும் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். படித்தவனுக்கும் புத்தி இல்லை, படிக்காதவனுக்கும் புத்தி இல்லை. அந்த அளவுக்கு உருவ வழிபாட்டுப் பிசாசு அவர்களுடைய இருதயத்தில் குடிபுகுந்து அதை விடமுடியாதபடி அவர்களை ஆண்டுவருகிறான். அது எங்கு கொண்டு போய்விடும்? இங்குதான் கொண்டுவந்து விடும். ஒரு நாளும் நல்லது செய்யாமல் இதைவிடக் கேவலமானது வேறெதுவும் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குக் கேவலமான காரியங்களையெல்லாம் செய்ய வைக்கும். ஏசாயாவை வாசித்துப் பாருங்கள், உருவ வழிபாட்டைப் பற்றி எவ்வளவு தூரம் எழுதியிருக்கிறார். நீயே நடந்து போன மண்ணை எடுத்து ஒரு உருவத்தைச் செய்து அதற்கு முன்னால் விழுந்து வணங்குகிறாய், உனக்கு புத்தி இருக்கிறதா என்று கேட்கிறார். இதையேதான் பவுல் ரோமர் முதலாவது அதிகாரத்தில் சொல்லுகிறார். ஆண்டவர் படைத்த காரியங்களை வைத்து மிருகங்களை வழிபடுகிறார்கள், உனக்குப் புத்தி இருக்கிறதா என்று பவுல் கேட்கிறார்.
உருவ வழிபாட்டைப் போலக் கேவலமானது, கோரமானது, பாவமானது ஒன்றுமில்லை. இதனால்தான் ஆண்டவர் இஸ்ரவேலரை அதிகமாகத் தண்டித்தார். இஸ்ரவேலர்களே கடுங்கோபம் கொண்டு அதைப் பார்க்கச் சகிக்காமல் இருதயம் தாங்காமல் அந்த இடத்தில் இருந்து ஓடிப்போக வைத்தது அந்த மோவாப் அரசனுடைய செயல். அன்றைக்கு அவன் தப்பி இருக்கலாம், அவனுக்குப் பழையபடி அழிந்து போன நாடு மீண்டும் கிடைத்திருக்கலாம், தோல்வி அடையாமல் தப்பி இருக்கலாம். ஆனால் உலகமே பார்த்துப் பயப்படும்படியான ஒரு காரியத்தை அவன் செய்தான்.
உங்கள் ஊரில் உருவ வழிபாட்டை நீங்கள் தினமும் பார்க்கிறீர்கள். இதை வாசிக்கிற உங்களில் சிலபேர் இன்னும் உருவ வழிபாட்டைச் செய்து வரலாம். உங்களுடைய நிலை எவ்வளவு மோசமானது என்பதை நினைத்துப் பாருங்கள். இதை வாசிக்கிற கிறிஸ்தவர்கள் உருவ வழிபாடு செய்கிறவர்களுக்கு மிகவும் ஜெபம் பண்ணி அன்போடும் கனிவோடும் ஆண்டவரைப் பற்றி அவர்களுக்குச் சொல்லப்பாருங்கள். நீங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படியான எத்தனையோ பெரிய ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறதில்லையா? ஆகவே, உருவ வழிபாட்டைத் தொடர்கிறவர்களுக்கு நிச்சயமாக ஆண்டவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். உருவ வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்லுகிறேன், வாசித்த இந்தப் பகுதியை வாசித்த பிறகாவது திருந்தப் பாருங்கள். ஒருநாளும் உருவ வழிபாடு உங்களை ஒழுங்காக வாழவிடாது. அது மனிதனுடைய மனத்தைச் சிறைபிடித்து தப்பான காரியங்களைத் தொடர்ந்து செய்ய வைக்குமே தவிர உண்மையான விடுதலையை அது கொடுக்காது. உங்களை அது தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கும். நீங்கள் அழிந்து போவதற்கு அதுதான் கடைசியான காரணமாக இருக்கும்.
ஆண்டவரை ஆராதிக்கிறவர்கள் எந்த உருவத்தையும் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்லுவதற்கு என்ன காரணம்? உருவ வழிபாடு கேவலமானது, மோசமானது, பயங்கரமானது அழிவைக் கொண்டு வரும். இயேசு படம் வைத்திருக்கிறவர்களும், சிலுவை வைத்திருக்கிறவர்களும் நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒருநாளும் அது உங்களுக்கு உதவாது. ஜீவனுள்ள தேவனை இறையாண்மையுள்ள ஆண்டவரை எந்தப் பொருள்களுக்குள்ளும் அடக்க முயற்சி செய்யக்கூடாது. அவர் எரிச்சலுள்ள தேவன். உருவ வழிபாட்டை விட்டு விலகுங்கள். உண்மையாக ஜீவிக்கிற தேவனை மனந்திரும்பி விசுவாசியுங்கள். உங்கள் பழைய வாழ்க்கைக்கு முடிவுகட்டிவிட்டு கர்த்தரை ஆராதனை செய்யுங்கள். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவர் உங்களுக்கு விடுதலையைத் தருவார். என்னிடத்தில் வருகிறவர்களை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் என்று சொல்லியிருக்கிற இயேசு, உங்களைப் பாவங்களிலிருந்து விடுதலை செய்து தன்னுடைய குமாரர்களாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய ரத்தத்தை சிலுவையில் சிந்தி இருக்கிறார். அவர் உங்களுக்கு விடுதலையைக் கொடுப்பார், புத்தியைக் கொடுப்பார், ஞானமாய் வழிநடத்துவார். எவ்வளவு கோரமான விளைவுகளை உருவ வழிபாடு ஏற்படுத்துகிறது என்று தெரியுமா? இந்தவழியில் வாழ்ந்து நீங்கள் கெட்டுப் போக வேண்டுமா? இன்றைக்கே மனந்திரும்புங்கள். இயேசுவை விசுவாசியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்!
ஒரு விதவையின் விசுவாசம்
2 இராஜாக்கள் 4:1-7
பழைய ஏற்பாட்டில் இது ஒரு அருமையான வேதப்பகுதி. 2 இராஜாக்கள் புத்தகமே ஒரு அருமையான நூலாக இருக்கிறது. என்னுடைய சபையில் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இதிலிருந்து செய்திகளைக் கொடுத்திருக்கிறேன். இந்த நூல் ஆரம்பிக்கிற விதமே அருமையாக ஆரம்பிக்கிறது. இது எலியாவுக்குப் பிறகு எலிசா செய்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறது. எலியா தன் ஊழியத்தை ஆரம்பித்தபோது மிகவும் அதிரடியாக ஆரம்பிப்பதை நாம் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் Explosive miracles என்று சொல்லுகிற வண்ணம் அருமையான அற்புதங்களையெல்லாம் செய்து அவர் தன் ஊழியத்தைத் தொடங்கினார். இந்த நூலை முழுமையாக வாசிக்கிறபோது அக்காலம் வார்த்தைப் பஞ்சம் நிலவிய ஒரு காலமாக நாம் காணமுடிகிறது. இருந்தபோதும் ஆண்டவர் எலிசாவையும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களையும் அங்கு வைத்திருந்தார். இந்தப் பகுதியை வாசிக்கும்போது ஆகாபின் குமாரனாகிய யோராம் காலத்தில் எலிசா வாழ்ந்திருந்ததை நாம் காண்கிறோம்.
இதற்கு முந்தைய அதிகாரமான மூன்றாவது அதிகாரத்தை நாம் வாசிக்கிறபோது யோராமின் கேடான நடத்தை மற்றும் தவறான நடவடிக்கைகளினால் ஆண்டவர் அவனைத் தண்டித்தார் என்பதை அறிந்துகொள்கிறோம். அவனைத் தண்டித்தது மட்டுமல்லாமல் இஸ்ரவேலுக்கு ஆண்டவர் விடுதலையைக் கொண்டு வந்ததையும் நாம் அறிகிறோம். இந்த நான்காவது அதிகாரத்தில் அதன் முதல் ஏழு வசனங்களும் அருமையாக ஆரம்பிக்கின்றன. அங்கு ஒரு விதவையைப் பார்க்கிறோம், அவள் யார் என்று கூட நமக்குத் தெரியாது. அவளுடைய பெயர் நமக்குச் சொல்லப்படவில்லை. அவளுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதமான நிகழ்ச்சியை நாம் இங்கு வாசிக்கிறோம். அதுவும் எலிசாவின் ஊழியத்தின் மூலமாக இது நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பகுதி நமக்கு எதை நினைவுபடுத்துகிறதென்றால் நாம் ஆராதிக்கிற நம்முடைய தேவன் திக்கற்றவர்களின் தேவனாக இருக்கிறார் என்பதைத்தான்.
சங்கீதங்களிலிருந்து ஒரு சில வசனங்களைப் பார்க்கலாம்.
சங்கீதம் 146:9
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
திக்கற்ற பிள்ளை என்பது ஆங்கிலத்தில் தகப்பன் இல்லாதவர்கள் (Fatherless) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
சங்கீதம் 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
சங்கீதம் 10:18
மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
இவ்விதமாக நம்முடைய தேவன் திக்கற்றவர்களுக்கெல்லாம் துணையாக இருக்கிறார். நாம் பார்க்கிற இந்தப் பகுதியிலும் கூட ஒரு திக்கற்ற விதவையைப் பார்க்கிறோம். நாம் மேலே குறிப்பிட்ட சங்கீத வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற உண்மைகள் இவளுடைய வாழ்க்கையில் நிதர்சனமாக நடப்பதை நாம் காண்கிறோம். நம்முடைய ஜெபங்களைக் கேட்டு நம்மைக் காக்கின்ற ஆண்டவர், அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு விடுதலையைக் கொடுத்து அவளுடைய பிரச்சனைகளையெல்லாம் அருமையாகத் தீர்த்து வைக்கிறார். ஆகவே இந்த வேதப்பகுதி அந்த ஆண்டவர் நாம் நம்பக்கூடியவராக இருக்கிறார் என்றும், நமக்கு உதவி செய்கிற அந்த ஆண்டவர் தன்னை நம்புகிறவர்களை ஒருநாளும் கைவிடமாட்டார் என்பதையும் நமக்குக் காட்டுகிறது.
இந்தப் பகுதியை நாம் பார்க்கிறபோது இதை வாசிக்கின்ற, ஆண்டவரை அறியாத, தேவ நம்பிக்கை இல்லாத வாசகர்கள் இருந்தால் நீங்கள் நிச்சயமாக அவரை நம்பலாம். தேவன் தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை உறுதியாக இந்தப் பகுதி நமக்குக் காட்டுகிறது.
இந்தப் பகுதியில் இருந்து இந்த ஆக்கத்தில் மூன்று காரியங்களை நாம் கவனிக்கப் போகிறோம்.
- விதவையின் மோசமான நிலை
- விதவையின் ஜெபம்
- விதவைக்கு ஆண்டவர் காட்டின கருணை
- விதவையின் மோசமான நிலை
முதலாவதாக, இந்தப் பகுதி ஒரு விதவையின் மோசமான நிலையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாள். அது எப்படி என்றும், அது எவ்விதமான சூழ்நிலை என்றும் நாம் கவனிப்போம். முதல் வசனம் அவளைப்பற்றி நமக்கு இப்படியாகச் சொல்லுகிறது.
2 இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ.
தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் என்பவர்கள் யார்? எலிசாவின் காலத்தில் வார்த்தைப் பஞ்சம் நிலவிய சூழ்நிலையில் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் நாடு முழுவதும் இருந்தார்கள். இவர்கள் எலிசா தீர்க்கதரிசியின் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தார்கள். இறையியல் கல்லூரி மாணவர்களைப் போல நாடு முழுவதும் ஆங்காங்கே இவர்கள் இருந்தார்கள். எலிசா தீர்க்கதரிசியாக இருந்தது மட்டுமல்லாமல், இவர்கள் இருந்த இடங்களுக்கெல்லாம் சென்று இறையியல் போதனைகளைக் கொடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். இந்தக் காலத்தில் காணப்படுகிற இறையியல் கல்லூரியைப் போல அந்தக் காலத்திலும் இந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இவர்களுடைய வேலை என்ன? இவர்கள் நாட்டு மக்களுக்குத் தேவனுடைய வார்த்தையைக் கொடுத்து வந்தார்கள். அந்நாட்களில் ஆண்டவர் தீர்க்கதரிசிகளை எழுப்பி வைத்திருந்ததற்கு காரணமே அவர் பேசுகிறபொழுது தீர்க்கதரிசிகளின் மூலமாகப் பேசுவதற்காகத்தான். நாட்டு ராஜாக்களும் கூட இந்தத் தீர்க்கதரிசிகளிடமிருந்துதான் தேவனுடைய வழிகளை அறிந்து கொண்டார்கள், ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்கள். அவ்விதமான தீர்க்கதரிசிகள் எழும்புவதற்காகத்தான் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த விதவையைப் பார்க்கிறபோது அவளுடைய கணவன் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களில் ஒருவராக இருந்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அவன் நிச்சயமாக தேவனை அறிந்த ஒரு விசுவாசியாக இருந்திருக்கிறான். தன் கணவனைக் குறித்து முதல் வசனத்தில் அவள் இவ்விதமாகச் சொல்லுகிறாள்.
2 இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்;
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? அவளுடைய கணவன் தீர்க்கதரிசியின் புத்திரர்களில் ஒருவன் மட்டுமல்ல, தேவனுக்குப் பயந்து நடந்தவனாகவும் இருந்திருக்கிறான். அவன் தேவனை அறிந்தவனாகவும் அவரை நம்பினவனாகவும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவனாகவும் வாழ்ந்திருக்கிறான். இருந்தபோதும் அவன் தன் வாழ்க்கையில் சடுதியாக மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இவள் விதவையானாள், அவளுடைய இரண்டு பிள்ளைகளும் தகப்பன் இல்லாத ஒரு நிலையை அடைந்தார்கள். இந்தப் பகுதியின் நிகழ்வுகள் எந்த இடத்தில் நடந்தன என்று குறிப்பிட்டு நம்மால் சொல்ல முடியவில்லை, இருந்தபோதும் கில்கால் என்ற பகுதியில் நடந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனென்றால் அங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வகுப்புகள் அந்நாட்களில் நடைபெற்று வந்தன. இவ்விதமாக தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது சாமுவேல் தீர்க்கதரிசிதான். இந்த வகுப்புகளில் ஆண்டவரை விசுவாசித்த வாலிபர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அங்கேயே வாழ்ந்து அவ்விதமான பயிற்சியைப் பெற்று வந்தார்கள். எலிசாவின் நாட்களில் நாட்டில் பஞ்சம் கொடுமையாக இருந்தது. வார்த்தைப் பஞ்சம் மட்டுமல்ல உணவுப் பஞ்சமும் கூட காணப்பட்டது. அப்பொழுது எலிசா பல இடங்களுக்குச் சென்று இவர்களுக்குப் போதித்தார். தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வேலையே ஆவிக்குரிய வேலைதான். தேவனுடைய வார்த்தையை விளக்கப்படுத்தி மக்களுக்குப் போதிப்பதுதான் இவர்களுடைய பணியாக இருந்தது. அப்படியாக இதில் பயிற்சி பெறுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணித்திருந்தார்கள். தேவனுடைய வரலாற்றைப் பழைய ஏற்பாட்டிலிருந்து கற்றுக்கொள்ளுவதுமட்டுமல்ல, அதில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் அர்த்தங்களையெல்லாம் கற்றுக்கொண்டு தங்களை ஆண்டவருடைய பணிக்காக வளர்த்துக்கொண்டார்கள், ஒப்புக்கொடுத்தார்கள் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர். இந்த விதவையின் கணவனும் அப்படியாக வேதத்தைக் கற்றுக்கொண்டு வளர்ந்து வந்தவன்தான். இருந்தபோதும் அவனுக்கு மரணம் நேரிட்டது, அவனுடைய மனைவி விதவையாகிவிட்டாள், அவனுடைய பிள்ளைகளும் தகப்பன் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இதுமட்டும் அவளுக்கு பிரச்சனை இல்லை, அதோடுகூட அநேக சோதனைகளும் வேதனைகளும் அவளுக்கு ஏற்பட்டன. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவள் இருந்தாள். அவளுக்கு வீடு இருந்தது, ஆனால் அந்த வீட்டினுள் எதுவுமே இல்லை. அவளுடைய சமையலறைக்குள் சென்று பார்த்தால் சாப்பிடுவதற்கு கூட ஒன்றுமே இல்லாதிருந்தது. தேவைகள் அவளுக்கு அதிகமாக இருந்தது. ஒரு பஞ்ச நிலை நாட்டில் இருந்தது மட்டுமல்ல, அவளுடைய வாழ்க்கையிலும் துன்பகரமான நிலை காணப்பட்டது. ஆனால், இவள் ஆபிரகாமின் வழியில் வந்த ஒரு தேவபக்தியுள்ள பெண்ணாக இருந்தாள். எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தேவனை நம்பி அவரை ஆராதித்து வந்தாள். தன்னுடைய பிள்ளைகளையும் கூட தேவனுக்குப் பயந்து நல்ல வழிகளில் வளர்த்து வந்தவளாக இருந்தாள். அப்படி இருந்தபோதும் அவளுடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் சம்பவித்தது என்பதைப் பார்க்கிறோம்.
நாம் ஆண்டவரிடத்தில் வந்துவிட்டோம், அவரை நம்புகிறோம், விசுவாசிக்கிறோம், அவருடைய வழிகளில் போகிறோம், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறோம், அதனால் ஆண்டவர் எப்போதும் ஆசீர்வாதத்தை நம்மீது கொட்டிக்கொண்டே இருப்பார் என்று நாம் நினைக்கக்கூடாது. இன்றைக்கு அப்படியான போலித்தனமான சுவிசேஷத்தை எல்லா இடங்களிலும் நம்மினத்தில் கேள்விப்படுகிறோம். அதற்கு செழிப்பு உபதேசம் என்று பெயர். இது அமெரிக்காவில் ஆரம்பித்து எல்லா நாடுகளிலும் பரவி இப்போது நம் நாட்டிலும் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இயேசுவிடம் வந்தால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழலாம் என்று பொய்யான செய்தியை அநேக பிரசங்கிகள் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் மோசமான ஒரு செயலாகும். வேதம் இப்படி ஓரிடத்திலும் போதிக்கவில்லை. இவர்களுக்கு விசுவாச வாழ்க்கை என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. இவர்கள் போதகர்கள் என்ற பெயரில் போலித்தனமான காரியங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் ஆண்டவரைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
தேவனிடத்தில் வருவதென்பது நாம் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து, பரலோகம் போவதற்கான ஒரு வாழ்க்கைதான் அது. அதற்கு நாம் இந்த உலகத்தில் செல்வந்தர்களாக இருந்து சகல வசதிகளையும் பெற்று வாழ்ந்துவர வேண்டும் என்கிற அவசியமே இல்லை. சில பேருக்கு ஆண்டவர் தம்முடைய சித்தத்தின்படி அவ்விதமான வசதியைக் கொடுப்பார், சிலருக்கு அவ்விதமான வசதி கிடைக்காது. நாம் வணங்குகிற ஆராதிக்கிற தேவனில் எப்போதும் தங்கியிருக்க வேண்டும். அவர் தன்னுடைய சித்தத்தின்படி நாம் கேட்கும் நேரம் நமக்கு உதவி செய்கிற தேவனாக இருக்கிறார். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நல்லதை மட்டுமே அவர் செய்யவேண்டும் என்று நினைப்பது தவறு. எதிர்பாராத பேரிடர்கள் அவிசுவாசிகளை மட்டுமல்ல விசுவாசிகளையும் பாதிக்கும். அதனால் விசுவாசிகள் இறந்தும் போகலாம். அதற்கெல்லாம் நேரடிக் காரணம் ஆண்டவர் என்று நாம் நினைக்கக்கூடாது. நம்மைச் சுற்றிக் காணப்படும் பாவத்தின் பாதிப்பின் காரணமாகவும், பாவம் இவ்வுலகில் தொடர்ந்திருப்பதாலும் அவைகள் நமக்கும் நேரிடுகின்றன; அவற்றைக் கர்த்தர் அனுமதிக்கிறார்.
ஆகவே இந்தப் பெண் இவ்வளவு பக்தியுள்ளவளாக இருந்தும், இவளுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசிகளின் புத்திரராக இருந்தும், ஆண்டவர் அவர்களோடு இருந்தும்கூட அவளுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் நேரிட்டது என்று நாம் பார்க்கிறோம். முதல் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 4:1
உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்.
உண்மையிலேயே அவளுடைய கணவன் மட்டுமல்ல அவளும்கூட ஆண்டவருக்குப் பயந்து வாழ்ந்து வந்தாள். அவ்வாறு பயந்து வாழ்ந்துவந்த குடும்பத்திற்கு வந்த பிரச்சனைகளைப் பாருங்கள். முதல் வசனத்தில் மேலும் நாம் தொடர்ந்து வாசிக்கிறோம்,
2 இராஜாக்கள் 4:1
கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
ஏன் இவ்வாறு இவர்களுக்கு நேரிட்டது? கணவனை இழந்ததால் குடும்பத்தில் பல செலவுகள் இருந்திருக்கும். ஆகவே அந்தக் காலத்தில் கடன் கொடுப்பவர்களிடம் சென்று அவள் கடன் வாங்கியிருக்கிறாள். இதை வாசித்த உடனே நீங்கள், இதைத்தானே நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆகவே கடன் வாங்கலாம் என்பதுபோல் இங்கே ஆண்டவர் சொல்லியிருக்கிறார் என்று தவறாக எண்ணிக் கடன் வாங்கப் போய்விடக்கூடாது. கடன் வாங்கலாம் என்பதற்கான போதனையை இந்தப் பகுதி அளிக்கவில்லை. அது இஸ்ரவேல் நாட்டில் சட்டப்பூர்வமாக இருந்த ஒரு நிலையாகும். அவள் கடன் வாங்கி அதிக நாட்கள் ஆகி நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது. அந்த நாட்டுச் சட்டப்படி கடன் கொடுத்தவன் அந்தக் கடனைத் திரும்ப பெற்றுக்கொள்ளுவதற்காக அவளுடைய இரண்டு மகன்களையும் தனக்குக் கீழாக வேலை செய்யும்படியாக அடிமையாக்கிக்கொள்ள வந்தான். அவ்வாறு அவர்கள் அடிமைகளாக வேலை செய்யும்போது அதிலிருந்து வருகிற வருமானத்தை அந்தக் கடன் தொகையிலிருந்து அவன் கழித்துக்கொள்ளுவான். அப்படியான மிகவும் மோசமான நிலைக்கு அவள் வந்துவிட்டாள். அவளுக்கு அது இருதயத்தின் பெரிய துன்பமாக வாழ்க்கையில் மாறியது. அவளுடைய மகன்கள் அந்தக் கடனை அடைக்க ஏழு வருடங்களுக்கு அடிமைகளாக வேலை செய்ய வேண்டும். அது அவர்கள் நாட்டுச் சட்டத்தில் இருந்தது. ஆகவே கடன்காரன் மிகவும் மோசமானவனாக இருக்கிறான் என்று தவறாக அவனைக் குறித்து எண்ணிவிடக்கூடாது.
அவளுடைய நிலை மிகவும் துன்பகரமானது, ஏற்கனவே கணவரை இழந்து பெரிய துன்பத்தில் இருந்தாள், இப்போது அவள் தன் இரண்டு பிள்ளைகளையும் இழக்கின்ற ஒரு நிலைக்கு வந்திருக்கிறாள். அவள் வீட்டில் சாப்பிடுவதற்கும் ஒன்றுமில்லை, ஒருவிதமான உணவுப் பதார்த்தம் கூட இல்லை. எங்கேயும் போய் வேலை செய்யவும் வழியில்லை, அவளுக்கு என்ன வயது என்பதுகூட நமக்குத் தெரியாது. அவளுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும்வகையில் ஒரு மோசமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். கடன்காரர்கள் வந்து பணத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள், இப்போது தன் பிள்ளைகளை அவள் இழக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது. அவளுக்கு இருந்த இந்த இருளான சூழ்நிலையில் அவளுக்குத் துணையாக இருந்தது தேவனுடைய வார்த்தை மட்டுந்தான். அவள் என்ன செய்தாள்? எலிசாவிடம் போகிறாள் என்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் எங்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்களோ அங்குதான் தேவனுடைய வார்த்தை இருந்தது. ஆகவே அவள் சரியானதைத்தான் செய்தாள். நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் துன்பங்கள் வருகிறபோது நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கு போக வேண்டும்? ஆண்டவரிடத்தில்தான் போகவேண்டும். அதைத்தான் அவளும் செய்கிறாள், எலிசாவிடம் சென்று தன் நிலைமையை விளக்குகிறாள். அவள் அவ்வாறு சென்று எலிசாவிடம் பேசுகிறபோது எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை.
இந்த இடத்தில் நாம் படிக்க வேண்டிய பாடம் இருக்கிறது. சில நேரத்தில் ஆண்டவர் தன்னுடைய பராமரிப்பின் காரணமாக தம்முடைய மக்களுடைய வாழ்க்கையில் இப்படியான சூழ்நிலைகளை அனுமதிக்கிறார். அவ்வாறு நமக்கு நேரிடும்போது ஆண்டவர் நம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டார் என்று நாம் நினைக்கக்கூடாது. தம்முடைய அன்பினால் முன்குறித்து நம்மைத் தெரிந்துகொண்டிருக்கும் தேவன், இயேசுவின் மூலம் நமக்கு பாவங்களிலிருந்து விடுதலையைக் கொடுத்திருக்கிறார். ஆகவே அவர் தான் காட்டுகிற அன்பை நிறுத்திக்கொள்ளமாட்டார். நம்முடைய தேவன் நம்மைக் கைவிடுகிற தேவனல்ல, அதனால் அவரைப் பற்றி நாம் தவறாக நினைக்கக்கூடாது. இஸ்ரவேல் தேசத்தைப் பாருங்கள், எகிப்திலிருந்து தம்முடைய மக்களை விடுதலையாக்கித் தாம் வாக்குத்தத்தம் செய்த கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தார் இல்லையா? ஆனால், அதேநேரம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை அனுபவிக்க நேரிட்டது. அதுபோலத்தான் இந்த விதவையின் வாழ்க்கையிலும் தேவனின் அனுமதியில்லாமல் இவ்விதமான கஷ்டங்கள் நேரிட்டிருக்க வாய்ப்பில்லை. கஷ்டங்கள் நேரிட்டாலும் தேவன் அவளோடு இருந்தார். அவள் மீது தான் காட்டுகிற அன்பை எவ்விதத்திலும் அவர் குறைத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு கஷ்டங்கள், துன்பங்கள், பாடுகள் நம் வாழ்க்கையில் வருவது நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது. எவ்வளவு மோசமான சூழ்நிலை நமக்கு நேரிட்டாலும் அது நமக்குப் பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது. அது எத்தகைய வாய்ப்பு? நாம் ஆண்டவரிடத்தில் நெருங்கிப் போவதற்கும், அவரில் நாம் இன்னும் தங்கியிருப்பதற்கும், அவரோடு பேசுவதற்கும் அது நமக்கு உதவுகிறது.
- விதவையின் ஜெபம்
இரண்டாவதாக இந்த விதவையின் ஜெபத்தைக் குறித்துப் பார்ப்போம். இந்த விதவை மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து எலிசாவை நோக்கிக் கதறுகிறாள். எலிசாவை நோக்கி இப்படிக் கதறுகிறாள் என்றால் அது ஆண்டவரை நோக்கிக் கதறுவது என்று அதற்கு அர்த்தமாகும். ஏனென்றால் எலிசா ஆண்டவருடைய மனிதனாக தீர்க்கதரிசியாக இருக்கிறார். அவரிடத்திலிருந்துதான் ஆண்டவருடைய வார்த்தை வருகிறது. அவரிடம் சென்று பேசி தன்னுடைய நிலையை விவரிப்பதெல்லாம் ஆண்டவரிடமே சொல்லுவது போலாகும். தன்னுடைய நிலையை ஆண்டவருக்கு முன்பாக ஒரு படமாக விரித்துக் காட்டுகிறாள். அவளுடைய ஜெபத்திலிருந்து சில காரியங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவதாக, அவள் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வழமையாக தொடர்ச்சியாக ஜெபித்து வந்திருக்கிறாள். அவள் தன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான ஒருநிலையில் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத ஒரு பஞ்ச நிலைமையில் மட்டும்தான் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டாள் என்று நாம் நினைக்கக்கூடாது. ஏற்கனவே நாம் பார்த்தபடி அவளுடைய கணவன் தேவனுக்குப் பயந்து வாழ்ந்து வந்தவனாக இருந்தான். இவளும் அதேவிதமாக தேவனை நம்பினாள், இருவரும் குடும்பத்தை அவ்வாறு வளர்த்திருக்கிறார்கள், தேவனிடத்தில் அடிக்கடி ஜெபித்து வந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே இவள் ஆண்டவரிடத்தில் ஜெபிப்பது ஒன்றும் புதிய காரியமல்ல. அவளுடைய ஜெபத்தைப் பார்க்கிறபோது அதில் அவள் தன்னுடைய நிலைமையை ஆண்டவரிடத்தில் எடுத்துச் சொல்லுகிறாள். அவள் ஆண்டவரிடத்தில் எவ்விதமான நிபந்தனையையும் வைக்கவில்லை. இதைத் தாரும் ஆண்டவரே, அதைத் தாரும் ஆண்டவரே என்றெல்லாம் அவள் கேட்கவில்லை.
2 இராஜாக்கள் 4:1
உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
தனது நிலையை உள்ளது உள்ளபடி அவள் ஜெபத்தில் எடுத்து வைக்கிறாள் என்று நாம் பார்க்கிறோம். எந்தவிதத்திலும் அதைக் கூட்டியோ குறைத்தோ சொல்லவில்லை. அவளுடைய ஜெபத்தைக் கவனிக்கிறபோது அது அருமையானதாக இருக்கிறது. அவளுடைய தேவைகளை அவள் ஆண்டவர் முன் வைக்கிறாள், இதைத்தான் ஆண்டவர் நம்மையும் செய்யச் சொல்லுகிறார். இவ்வாறு அவள் சொன்னபோது இதைத்தான் நீங்கள் செய்யவேண்டும், இவ்வளவு நேரத்தில் அதைச் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை அவள் முன்வைக்கவில்லை. அவள் சத்தம்போட்டு அநாவசியமாகப் புலம்பித் தன் தேவைகளைச் சொல்லவில்லை, வழமையாக ஜெபிக்கிற விதத்தில்தான் சொன்னாள் என்று நாம் பார்க்கிறோம். அதேநேரம் மிகவும் வருத்தத்தோடு ஜெபித்திருந்திருப்பாள்.
ஜெபம் செய்வது மிகவும் அவசியம், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அன்றாடம் ஜெபம் செய்கிறவர்கள். யார் தன் வாழ்க்கையில் ஜெபம் செய்யவில்லையோ அவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். அதற்காக அவன் எத்தனை தடவை ஜெபித்திருக்க வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. இங்கு எத்தகைய மனிதன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாதென்றால் ஜெபத்தைப் பற்றி நினைக்காத, ஜெபமே பண்ணாத மனிதன்தான். ஒருவன் புறத்தில் கிறிஸ்தவனைப் போலத் தோற்றமளிக்கமுடியும். ஆனால் அவன் வாழ்க்கையில் ஜெபம் என்பதே இல்லாமல் இருக்கலாம். அவன் நிச்சயமாக ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது.
அநேகர் ஜெபத்தைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஜெபம் என்பது என்ன? ஆண்டவரிடத்தில் நம்முடைய தேவைகளையெல்லாம் கேட்பதற்கான வழி என்றால் அது மிகவும் தவறு. ஜெபம் என்பது ஆண்டவரோடு ஐக்கியத்தில் வருவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு திருநியமமாகும். அது ஒரு கிருபையின் கருவியாகும், அவரோடு பேசுவதற்காக அதை ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஜெபத்தின் மூலம் மட்டுமே நாம் ஆண்டவரிடத்தில் பேச முடியும். ஆண்டவர் நம்மோடு பேசுவதற்கு வேதம் இருக்கிறது. அதன் மூலம் ஆண்டவர் நம்மோடு பேசுகிறார், ஜெபத்தின் மூலம் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். ஆண்டவரை நேசிக்கிறவர்கள், அவருடைய ஐக்கியத்தில் மிகவும் ஆவல் உள்ளவர்கள் அவரோடு பேசுவார்கள். ஆகவே நாம் ஜெபத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. நாம் கேட்ட நேரமெல்லாம் எதையும் நமக்குக் கொடுப்பதற்காக ஆண்டவர் ஜெபத்தைக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்து ஜெபிக்கக்கூடாது. அது மிகவும் தவறானது. நான் தமிழ்நாட்டிற்கு வருகிறபோது கூட்டங்கள் முடிந்தபின்பு எனக்காக ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் என்று அநேகர் காத்திருப்பார்கள். அது ஜெபத்தையும், ஆண்டவரையும் மிகவும் கொச்சைப்படுத்தும் செயலாகும். என் ஜெபத்தில் ஒரு விசேஷமும் இல்லை; என்னிடம் தெய்வீகம் இல்லை.
நாம் மக்களுக்கு ஜெபத்தைக் குறித்துப் போதிக்க வேண்டும். ஜெபம் எதற்காகக் கொடுக்கப்பட்டிருகிறது, எப்படிப்பட்ட விசுவாசிகளாக நாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தர வேண்டும். நாம் வசதிகளை அடைவதற்காக சாதாரண மனிதர்களில் தங்கியிருக்கக்கூடாது. நீங்களும் ஜெபிக்கலாம், நீங்களும் ஆண்டவரோடு பேசலாம். ஒரு ஊழியக்காரன்தான் ஜெபிக்க வேண்டுமென்று வேதம் எங்கேயும் சொல்லவில்லை. இவளுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசிகளின் புத்திராக இருந்தான், இருந்தபோதும் அவள் தேவனிடத்தில் ஜெபிக்கிறாள். ஆகவே நாம் ஜெபத்தைக் குறித்து ஒரு வேதபூர்வமான எண்ணம் கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் ஜெபம் இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஜெபிக்கிறீர்களா? உங்கள் சபையில் ஜெபக்கூட்டம் உள்ளதா? அதில் விசுவாசத்தோடு கலந்து கொள்ளுகிறீர்களா? எங்கு பார்த்தாலும் ஆத்துமாக்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூட்டத்திற்குப் போகிறார்கள், ஆனால் ஜெபக் கூட்டத்திற்குப் போவதில்லை. ஆண்டவரை நோக்கிப் பேசுவதற்கு ஏன் நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமென்ன? இருதயம் கடினப்பட்டுப் போய்விட்டதா? நாம்தான் நம்மையே அதைக் கேட்டுப்பார்க்க வேண்டும். ஜெபம் மிகவும் அவசியமானது. நம்முடைய ஆண்டவர் தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கூப்பிடுவதை விரும்புகிறார். அவ்விதமான உறவை அவர் எதிர்பார்க்கிறார்.
இரண்டாவதாக, தன்னுடைய தேவைகளை எடுத்துச் சொல்லுவதற்காக அவள் தீர்க்கதரிசியிடம் வருவதை நாம் காண்கிறோம். தீர்க்கதரிசி தேவனுடைய மனிதனாக இருக்கிறார். அவரே ஆண்டவருடைய செய்தியாளராக இருந்தார். ஆண்டவருடைய செய்தியை மக்களிடம் கொண்டுவந்தவர்கள் இந்தத் தீர்க்கதரிசிகள். அதே காரியத்தைத்தான் எலியாவும் செய்தார், எலிசாவும் செய்தார். அந்தத் தீர்க்கதரிசியின் மூலம் தேவனுடைய வெளிப்படுத்தல் மக்களிடம் வந்தது. நாட்டின் அரசன் கூட எந்த வழியில் போகவேண்டும், தேவன் என்னிடம் என்ன சொல்லுகிறார், நான் என்ன செய்யவேண்டும் என்பதை எல்லாம் அறிந்துகொள்ள தீர்க்கதரிசியிடம் சென்று கேட்பான். வேதத்தில், சவுல் சாமுவேலைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டதற்குக் காரணமென்ன? ஆண்டவரிடத்திலிருந்து தனக்கொரு செய்தி வரவேண்டும் என்பதற்காகதான். ஏனென்றால் சாமுவேல் உயிரோடு இருந்தபோது அந்த ஒரு காரியத்தைத்தான் தீர்க்கதரிசியாக அவர் செய்திருக்கிறார். ஆகவே தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையை மக்களுக்குக் கொடுத்தவர்கள். இப்போது இவள் எலிசாவிடம் போகிறாள், ஏனென்றால் அவரிடமிருந்து தேவனுடைய வார்த்தை வருமென்ற நம்பிக்கை இவளுக்கு இருந்தது. தேவன் மட்டுமே திக்கற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நம்பி அவள் எலிசாவிடம் வருகிறதை நாம் பார்க்கிறோம். இங்கேயும் சில பயன்பாடுகள் நமக்கு உள்ளன.
இன்று புதிய உடன்படிக்கைக் காலத்தில் தீர்க்கதரிசிகள் இல்லை. இன்று தேவ செய்தியை அளிக்க யார் இருக்கிறார்கள்? திருச்சபைகள் இருக்கின்றன, சபையில் ஆண்டவர் போதகர்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். தேவனுடைய வார்த்தையை எடுத்து விளக்குவதற்காகவும், அதைப் போதிப்பதற்காகவும், மக்களுக்கு ஆத்மீக ஆலோசனைகளைக் கொடுத்து அவர்களை வளர்த்து விடுவதற்காகவும்தான் ஆண்டவர் போதகர்களைக் கொடுத்திருக்கிறார். நம்மினத்தில் அவ்விதமாக விசுவாசத்தோடு பணிசெய்கிறவர்கள் மிகவும் குறைவு. அது நம்முடைய நாட்டைப்பிடித்த ஒரு வியாதியாக இருக்கிறது, அது மிகவும் ஆபத்தானது. பிரசங்கிகள் அவ்விதம் இருக்கக்கூடாது. எலியாவும், எலிசாவும் சொன்னதுபோல தேவனுடைய வார்த்தையை உள்ளது உள்ளபடி மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஆண்டவருடைய சத்தத்தை அவர்கள் கேட்கும்படியாக செய்வதுதான் போதகர்களின் வேலையாக இருக்கிறது. ஆகவே வேதம் சொல்லுகிறபடி நம்முடைய தேவைகளை சபைக்குக் கொண்டுவரலாம். சபையில் ஜெபக்கூட்டம் (Corporate prayer) என்று இருக்கிறது. அதாவது ஆண்களும் பெண்களுமாக மூப்பர்கள் வழிநடத்திக் கூடி வந்து ஜெபிக்கும் கூட்டமே அது. எங்களுடைய சபையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுவாகக் கூடிவந்து அங்கு ஆண்கள் மட்டுமே ஜெபிப்பது வழக்கம். ஏனென்றால் 1 தீமோத்தேயு 2 வது அதிகாரத்தில் தெளிவாக அதைப்பற்றிய விளக்கம் இருக்கிறது. ஆணும் பெண்ணுமாக சபை கூடிவருகிறபோது போதகர்களால் வழிநடத்தப்படுகிற அந்தக் கூட்டத்தில் ஆண்கள் குரலை உயர்த்தி ஜெபம் செய்யவேண்டும். தேவ இராஜ்யத்துக்குரிய தேவைகளையெல்லாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். ஜெபம் செய்யாமல் இருக்கிற மற்றவர்கள் வாயைத்திறந்துதான் ஜெபிக்க வேண்டுமென்று இல்லை. ஒருவர் ஜெபிக்கிறபோது அதைக் காது கொடுத்துக் கேட்டு அந்த ஜெபத்திற்கு ஆமென் என்று சொல்லுவதும் ஜெபம்தான். ஆமென் என்று நாம் சொல்லும்போது அந்த ஜெபத்திற்கு நானும் உடன்படுகிறேன் என்பது அர்த்தமாகும். தேவனுக்கு முன்பாக நம் குறைகளை எடுத்து வைத்து, அவருடைய சபை ஊழியங்களுக்காக, அவருடைய பணிக்காக, சுவிசேஷம் எல்லா இடங்களுக்கும் போய்ச் சேருவதற்காக, மேலும் பல காரியங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அன்று எலியா எலிசாவினிடத்தில் குறைகளைக் கொண்டுபோனது போல, நம்முடைய குறைகளைப் போதகரிடத்தில் கொண்டுபோகலாம். அவரிடத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நமக்குப் பிரச்சனைகள் இருந்தால் அதை மூப்பரிடத்தில் கொண்டு போகவேண்டும் என்று நாம் யாக்கோபு நிருபத்தில் வாசிக்கிறோம். யாக்கோபு நிருபத்தின் கடைசி அதிகாரத்தில் ஒருவனுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தபோது மூப்பர்களை வரவழைத்து தன்னுடைய பாவங்களையும் குறைகளையும் விளக்கிச் சொன்னான் என்று நாம் வாசிக்கிறோம். அவர்கள் அவனுக்காக ஜெபம் பண்ணினார்கள், அவனுக்கு நோய் குணமானது மட்டுமல்ல, மன்னிப்பும் கிடைத்தது. இதையெல்லாம் நாம் மூப்பர்களிடம் சொல்லக்கூடாது என்று நாம் நினைக்கக்கூடாது. தவறான போதகர்கள் இருந்தால் அவர்களிடம் போகக்கூடாதுதான். ஆனால் நல்ல போதகர்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறபோது நாம் நம் குறைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டு ஆத்மீக ஆலோசனைகளை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது.
இங்கு அந்த விதவை தீர்க்கதரிசியிடம் போகிறாள், அங்கு தன்னுடைய குறைகளையெல்லாம் எடுத்துச் சொல்லுகிறாள். ஏனென்றால் தீர்க்கதரிசி ஆண்டவரோடு பேசுகிறவர், ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு ஆசீர்வதிக்கிறவர், நிச்சயமாக நமக்கு ஆலோசனைகளைச் சொல்லி உதவி செய்வார் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. தேவனுக்கு அவள் பயந்த மனுஷியாக இருந்தாள். விசுவாசமான ஒரு வாழ்க்கையை நடத்தி அருமையான சாட்சியாக இருந்தாள். இப்போது அவள் பெரிய துன்பமான நிலையில் இருந்தாள் என்று பார்க்கிறோம். இவ்வாறெல்லாம் சமுதாயத்தில் நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வளவோ வைராக்கியமாக விசுவாசத்தோடு வாழ்ந்தவர்களுக்கும் புற்றுநோய் வந்திருக்கிறது. சில நேரம் கணவனையோ அல்லது பிள்ளைகளையோ இழந்துபோக வேண்டிய சூழல் வந்திருக்கிறது. விசுவாசிகளுக்கு இதெல்லாம் நிச்சயமாக வரும். பாவமுள்ள உலகத்தில் வாழுகிறபோது அவிசுவாசி மட்டுமல்ல, நம்முடைய விசுவாசத்தை வளர்ப்பதற்காக ஆண்டவர் அனுமதிக்கும், எல்லோரும் அனுபவிக்க வேண்டிய பிரச்சனைகளை நாமும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் விசுவாசிகளோடு விசேஷமாக தேவன் இருக்கிறார். நாம் எந்த நிலையிலும் ஆண்டவரிடத்தில் தைரியமாக வரலாம். நம்மைத் தாங்குகிற தேவனாக அவர் இருக்கிறார்.
- விதவைக்கு ஆண்டவர் காட்டிய கருணை
மூன்றாவதாக இந்தத் திக்கற்ற விதவைக்கு ஆண்டவர் காட்டிய கருணையைக் கவனிப்போம். இதை நாம் 2-7 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்தப் பகுதி அற்புதமான வேதப்பகுதி என்றுகூட நாம் சொல்லலாம். முதல் வசனத்தில் அந்த விதவை தன்னுடைய நிலைமையைத் தெளிவாகச் சொல்லிவிட்டாள். எலிசா அவளைப் பார்த்து என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள்.
2 இராஜாக்கள் 4:2-4
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, உள்ளேபோய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
எலிசா இங்கு உதவி செய்யத் தயாராக இருந்ததை நாம் பார்க்கிறோம். ஆண்டவரும் அப்படித்தான் நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவைகளைச் சந்திக்கிறவராக இருக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு உலகத்தில் இருந்தபோது நாலாயிரம், ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததாக வாசிக்கிறோம். மக்கள் அதிக நேரம் வனாந்தரத்திலிருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்டார்கள், ஆனால் அவர்கள் பசியாக இருந்தபோது அவர்களிடம் என்ன இருக்கிறது என்று ஆண்டவர் கேட்டார். அப்போது அவர்கள் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் மட்டுந்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். அதைக்கொண்டு எல்லோரும் திருப்தியாக சாப்பிட அவர் உணவளித்தார். அதுபோலதான் எலிசா இங்கு கேட்கிறார். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான்.” (2 இராஜாக்கள் 4:2). அவள் ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது என்று சொன்னாள். ஒரு குடம் என்றால் பெரிய குடம் என்று நினைக்கக்கூடாது. அது ஒரு சிறிய குடம்தான். அதை வைத்து எலிசா ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார் என்று பார்க்கிறோம். ஏனென்றால் அவர் தேவனுடைய மனிதனாக தீர்க்கதரிசியாக இருந்தார். வறுமையின் காரணமாக அவள் வீட்டில் பாத்திரம் அதிகமாக இல்லாததனால் பக்கத்து வீட்டில் இருந்து வெறும் பாத்திரங்களை வாங்கி வரும்படிச் சொல்லுகிறார். அவள் பக்கத்து வீடுகளுக்குப்போய் எலிசா சொன்னபடியே பாத்திரங்களை வாங்கி வருகிறாள். அவளிடம் கீழ்ப்படிதலை நாம் காண்கிறோம். எலிசா சொன்னதை அவள் எந்தவிதத்திலும் சந்தேகப்படவோ, கேள்விகள் கேட்கவோ, எதிர்த்து நிற்கவோ இல்லை.
நம்மினத்தில் காணப்படாத ஒன்று கீழ்ப்படிதலாகும். சபை சபையாக சென்று பார்த்தாலும் கீழ்ப்படிதலையே ஆத்துமாக்களிடம் பார்க்க முடிவதில்லை. ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்று விருப்பத்தோடு கேட்டு அதற்குக் கீழ்ப்படியும் இருதயமே இல்லாமல் ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த விதவை அப்படியல்ல. என்ன சொன்னாலும் செய்வேன் என்கிற தயார் நிலையில் இருந்தாள். ஏன்? அவள் ஆண்டவரை நம்பினாள், ஆண்டவரின் மனிதனான எலிசாவை நம்பினாள். இந்த இடத்தில் அவள் எத்தனை பாத்திரங்களை வாங்கி வந்தாள் என்று வேதம் சொல்லவில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை. அவள் அவ்விதம் அநேகம் வெறும் பாத்திரங்களை வாங்கி வந்த பிறகு எலிசா சொன்னார்: “உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்” (2 இராஜாக்கள் 4:4).
இவ்விதமான சூழ்நிலையில் நீங்களும் நானும் என்ன செய்வோம்? வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்தாலும், கடன்காரர்கள் தொல்லை தலைக்கு மேல் போயிருந்தாலும் நாம் புத்திகெட்டவர்களைப் போலத்தான் நடந்துகொள்ளுவோம். முதலில் நாம் என்ன யோசிப்போம்? இந்த மனிதனுக்கு மூளை ஏதாவது கெட்டுப்போய்விட்டதா, என்றுதான் யோசிப்போம். என் கையில் இருப்பது ஒரு சின்ன குடம், அதிலிருக்கும் எண்ணெயைக் கொண்டு இவ்வளவு பாத்திரங்களை எப்படி நிரப்ப முடியும் என்றுதான் சொல்லுவோம். கட்டாயம் நாம் அவ்விதம் கேட்டிருப்போம். வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும் இருதயத்தில் அவ்விதமான கேள்வி எழத்தான் செய்யும். ஆனால் இங்கே இந்த விதவையினிடம் ஒரு கேள்வியையும் பார்க்க முடியவில்லை. “அவள் அவனிடத்திலிருந்து போய்” (2 இராஜாக்கள் 4:5) என்று வேதம் சொல்லுகிறது. அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? அவள் எந்தவிதமான கேள்வியும் சந்தேகமுமில்லாமல் எலிசா சொன்ன அனைத்தையும் முழுவதுமாக நம்பினாள் என்று அர்த்தம். இந்த விதவை தன் குறைகளையெல்லாம் தேவ மனிதனாகிய எலிசாவிடம் சொன்னாள். அதற்கு மேல் அவள் எவ்வித நிபந்தனையும் வைக்கவில்லை. ஏனென்றால் அதற்குமேல் ஆண்டவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. எலிசா அவளிடம் சொன்னதையும் அவள் எவ்வித மறுப்பும் சந்தேகமும் இல்லாமல் அப்படியே கீழ்ப்படிந்து செய்கிறாள்.
இவளுடைய செயல் எதைக் காண்பிக்கிறது? அவளுடைய உறுதியான விசுவாசத்தைக் காண்பிக்கிறது. நீங்கள் ஆண்டவர் மீது கொண்டிருக்கிற விசுவாசம் எப்படி இருக்கிறது? எவ்விதமான நம்பிக்கையை அவர்மீது கொண்டிருக்கிறீர்கள்? நாம் எந்தவிதமான மோசமான சூழ்நிலையைக் கடந்து சென்றாலும் நம்மோடு இருக்கிற தேவன் என்றைக்கும் என்னைக் கைவிட மாட்டார் என்கிற உறுதி உங்கள் இருதயத்தில் இருக்கிறதா? அப்படியான உறுதியை நாம் ஆண்டவர் மீது கொண்டிருக்கவில்லை என்றால் அவர் நமக்குத் தேவையில்லையே. இந்த விதவை எலிசாவிடம் எனது புருஷன் உமது அடியான், கர்த்தருக்குப் பயந்து நடந்தான். அவனுடைய மனைவி நான், நாங்கள் குடும்பமாகவே கர்த்தருக்குப் பயந்து நடந்தோம் என்று சொன்னாள். ஆகவேதான் அவள் எலிசா சொன்ன வார்த்தையை அப்படியே நம்பினாள். அவளுடைய கீழ்ப்படிதல் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்! இதற்குப் பெயர்தான் கீழ்ப்படிதல். கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பதற்குப் பெயர் கீழ்ப்படிதல் இல்லை. ஆண்டவர் சொன்னதை அப்படியே எந்தவித மறுப்பும் இல்லாமல் செய்வதற்குப் பெயர்தான் கீழ்ப்படிதல். அநேகருக்கு ஆண்டவர் வேண்டும், இயேசு வேண்டும், பாவ மன்னிப்பு வேண்டும், இரட்சிப்பு வேண்டும், சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பினோம் என்றுகூட சொல்லுவார்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுப்பதற்கும், சபையில் சேர்ந்து அங்கத்தவராக இருப்பதற்கும் தயங்குவார்கள். இதற்குப்பேர் விசுவாசமா? இதெல்லாம் இரட்சிப்பை அடைந்ததற்கான அறிகுறியா? ஆண்டவரை உண்மையாக விசுவாசிக்கிறவன், ஆண்டவர் தன் தலையைக் கேட்டாலும் கொடுப்பான்; ஆபிரகாம் தன் மகனைப் பலிகொடுக்கத் தயாரானதைப்போல. நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும்.
மத்தேயு 28:18-20
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
ஆண்டவருடைய வார்த்தையின்படி செய்கிறவர்கள்தான் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க முடியும். நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? ஆண்டவரிடத்தில் நிபந்தனை வைப்பதற்கும், என்னால் இவ்வளவுதான் உங்களுக்கு கொடுக்க முடியும், இதற்குமேல் முடியாது என்று சொல்லுவதற்கு நீங்கள் யார்? அவர் உங்களுக்குக் கொடுக்கிற இரட்சிப்புக்குத் தகுதி இல்லாதவர்கள்தான் நீங்கள். அவர் அந்த இரட்சிப்பைக் கொடுக்காமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை இல்லாமல் போயிருக்கும், நீங்கள் அழிந்து நித்திய நரகத்திற்குப் போயிருப்பீர்கள். ஆண்டவர், மேலிருந்து கீழே பார்க்கிறபோது ஒருவரும் நீதியாக இல்லையென்று காண்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. உங்களைப் பொறுத்தளவில் எவ்வித நீதியும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறீர்கள். அவ்வளவு மோசமான நிலையில்தான் நாம் இருக்கிறோம். நமக்கு ஆண்டவர் பெரிய விடுதலையைக் கொடுக்கிறாரென்றால் அவர் தம் கிருபையின் காரணமாகத்தான் அதைச் செய்கிறார். நாம் இரட்சிக்கப்பட்டிருப்போமானால் எந்தளவுக்கு ஆண்டவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருடைய வார்த்தையைக் கேட்டு நடந்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் அவ்விதம் செய்கிறோமா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எந்தவிதத்தில் தேவனுடைய சபைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தையைப் பின்பற்றி நடந்து கொண்டிருக்கிறீர்கள்? ஆண்டவருடைய கூட்டம் சபையில் நடந்து கொண்டிருக்கும்போதுகூட நம்மால் நேரத்திற்கு வந்து அதைக் கேட்க முடியவில்லை இல்லையா? சபையில் நான் நடக்காத ஒன்றைச் சொல்லவில்லை, நடக்கிற விஷயத்தைதான் சொல்லுகிறேன். உங்களில் எத்தனைப் பேர் ஆண்டவருடைய நாளில் கூட்டம் ஆரம்பிப்பதற்குப் பத்து நிமிடங்கள் முன்பாகவே சபைக்குப் போய்விடுகிறீர்கள்? நம் நடத்தை ஆண்டவரின்மீது கொண்டிருக்கும் விசுவாசத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது பலிகளை அல்ல, கீழ்ப்படிதலையே அவர் நம்மிடம் கேட்கிறார். இதைத்தான் ஆண்டவர் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஆபிரகாம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தான். அநேக ஆண்டுகளுக்குப் பின்பு ஆண்டவர் தனக்குக் கொடுத்த பிள்ளையை, ஆசை ஆசையாய் வளர்த்த தன் பிள்ளையை ஆண்டவர் கேட்டபோது அவர் மறுப்புச் சொன்னாரா? எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் மகனை பலி கொடுப்பதற்காகக் கூட்டிச் சென்றார் என்று பார்க்கிறோம். அதற்குப் பெயர்தான் கீழ்ப்படிதல். அந்தக் கீழ்ப்படிதல் எதைக் காட்டுகிறது? என் ஆண்டவர் எதைச் செய்யச் சொன்னாலும் அது நன்மையாகத்தான் இருக்கும் என்கிற உறுதியைக் காட்டுகிறது. தனக்கு விசுவாசத்தைக் கொடுத்த தேவன் நன்மையே செய்வார், அவர் ஒருபோதும் தீங்கு செய்கிறவர் அல்ல என்று அவர் உறுதியாக நம்பினார். நம் ஆண்டவருடைய பெயரே நல்லவர், அவரே நன்மைக்கு உருவாக இருக்கிறவர். அந்த ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படிகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறோமா? கீழ்ப்படியும் இருதயம் இல்லாவிட்டால் போலியாக நடந்துகொள்ளுகிறோம் என்று அர்த்தமாகும். கீழ்ப்படிதல் இல்லையென்றால் கிறிஸ்தவத்தை வெறும் மதமாக நாம் கொண்டிருப்போம். ஆண்டவர் வெறும் மதவாதிகளைத் தேடிப்போகவில்லை. அவர் விசுவாசிகளைத் தேடி வந்தார். இந்த விதவையின் வாழ்க்கையில் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தாள் என்று நாம் பார்க்கிறோம். ஐந்தாவது வசனம் இவ்விதம் சொல்லுகிறது.
2 இராஜாக்கள் 4:5
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் எலிசா சொன்னபடியே செய்தாள். அவள், இந்தச் சிறிய குடத்தை வைத்து வாங்கிவந்த பெரிய பெரிய பாத்திரங்களில் எப்படி எண்ணெயை ஊற்றி நிரப்ப முடியும் என்கிற எண்ணமே இல்லாமல் எலிசா சொன்ன வார்த்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தாள். தேவனுடைய மனிதன் ஒரு காரியத்தைச் சொல்லுகிறார் என்றால் நிச்சயம் அதில் நன்மை இல்லாமல் இருக்காது என்று எண்ணி அவர் சொன்னபடியே தன் வாழ்க்கையில் செய்தாள். எலிசா இங்கே ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார். ஆனால் அதை எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்படியாக இல்லாமல் மறைமுகமாகச் செய்தார் என்று பார்க்கிறோம். மேலும் நாம் 6, 7 வது வசனங்களில் பின்வருமாறு வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 4:6-7
அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று. அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.
இந்த விதவை வீட்டிற்குள் சென்று சிறிய குடத்தில் இருக்கிற எண்ணெய்யை ஊற்ற ஊற்ற வெறும்பாத்திரங்கள் ஒவ்வொன்றாக நிரம்புகிறது. அவ்வாறு நிரம்பியவற்றைத் தன் பிள்ளைகளிடத்தில் கொடுக்க அவர்கள் அதை இன்னொரு இடத்தில் கொண்டுபோய் வைக்கிறார்கள். இப்போது எல்லா பாத்திரங்களும் நிரம்பிவிட்டன. அவை இருபதா, முப்பதா, ஐம்பதா, எத்தனை பாத்திரங்கள் என்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் எண்ணையை ஊற்ற ஊற்ற எல்லா பாத்திரங்களும் நிரம்பி வழிந்தன. அவள் இன்னொரு பாத்திரம் கொண்டுவா என்று சொல்லுகிறபோது இதற்கு மேல் ஒரு பாத்திரமும் இல்லையென்று மகன் சொல்லுகிறான். அவன் இவ்வாறு சொன்னவுடன் ஊற்றுகிற எண்ணெய் நின்றுபோயிற்று என்று வாசிக்கிறோம். ஆண்டவர் நமக்கு எப்போதும் நம் தேவைகளைக் கொடுக்கிறவராக இருக்கிறார். நாம் கேட்பதை அவர் கொடுப்பதில்லை, சிலநேரம் நாம் அநாவசியத்திற்குக் கேட்போம். ஆனால் அவர் நம் தேவைகளை மட்டுமே தீர்க்கிறாரே தவிர நாம் கேட்பதை எல்லாம் தருகிறவர் அல்ல. நம் தேவைகளை நம்மைவிட நன்றாக அறிந்திருக்கிறவர் நம் தேவன். இந்த விதவையினுடைய தேவைகளையும் ஆண்டவர் நன்றாக அறிந்திருந்தார். அவளுடைய தேவைகள் அன்றைக்கு நிறைவேற்றப்பட்டன. இதிலிருந்து நாம் எத்தனை அருமையான ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதைக் கற்றுக்கொள்ளுகிறோம்.
இந்த விதவை எலிசாவிடம் போய் நடந்ததைச் சொல்லுகிறாள், அப்பொழுது “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள்” (2 இராஜாக்கள் 4:7) என்று எலிசா சொல்லுகிறார். எண்ணெய் நிரம்பியிருக்கிற பாத்திரங்களின் எண்ணிக்கை நமக்குத் தெரியாது, ஆனால் அது அதிக பணத்தைக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது என்று பார்க்கிறோம். எந்தளவுக்கு அவள் கடன்பட்டிருந்தாளோ அந்தளவுக்கு அந்தக் கடனையெல்லாம் தீர்த்து, மீதியிருக்கும் பணம் அவளும் அவளுடைய பிள்ளைகளும் எந்தவிதப் பசியும் பட்டினியும், தேவைகளும் இல்லாமல் பல காலங்களுக்கு வாழ்கிற அளவுக்கு அந்தப் பணம் போதுமானதாக இருந்தது. நம் ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதைப் பாருங்கள்! பெயர் தெரியாத ஒரு விதவையோடு இந்த வரலாற்று நிகழ்வு ஆரம்பித்தது. அவளுடைய தேவை நிறைவேறிய உடனே ஏழாவது வசனத்தோடு இந்த வரலாற்று நிகழ்வை முடித்துக் கொண்டு வேறொரு விஷயத்திற்குக் கடந்து செல்லுகிறது வேதம். எவ்வளவு அற்புதமாக தேவன்! இந்த வேதப்பகுதியின் மூலம் ஒரு திக்கற்ற விதவையின் மூலம் நம்மோடு பேசுகிறார் ஆண்டவர். நம்முடைய விசுவாசம் எத்தகைய விசுவாசம் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்படியாகப் பேசுகிறார்.
இந்த ஆக்கத்தில் பல கேள்விகளை ஏற்கனவே உங்கள் முன் வைத்தேன். இன்னும் சில கேள்விகளைக் கேட்கிறேன். உங்கள் விசுவாசம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? உண்மையிலேயே ஆண்டவருக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? ஆண்டவருக்குக் கீழ்ப்படிகிறீர்களா? மனதில் எந்தவித முறுமுறுப்பும் இல்லாத அளவுக்கு வாழுகிறோமா? தேவனை அந்தவிதமாக நாம் ஆராதிக்கிறோமா? நம் நேரத்தை ஆண்டவருக்குக் கொடுத்து விசுவாசத்தில் நாம் வளருகிறோமா? உங்களில் எத்தனையோபேர் கிறிஸ்தவர்கள் என்கிற பெயரைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் குடும்பங்களில் கணவன் மனைவி சண்டை இருக்கிறது. பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதில்லை. பிள்ளைகளுக்கு முன் நீங்கள் நல்ல சாட்சியாக, உதாரணமாக இருப்பதில்லை. உங்கள் வேலையிலும் தொழிலும் உண்மையாக இருப்பதில்லை. வாழ்க்கையில் பலவிதமான குறைபாடுகளை வைத்துக்கொண்டு இயேசு பெயரை சொல்லிக்கொண்டு, திருவிருந்து எடுத்து எத்தனையோ தவறுகளைச் செய்கிறீர்கள். இந்த விதவையின் வாழ்க்கையில் நாம் அதையெல்லாம் பார்க்கவில்லையே. இது நம்மையே நாம் ஆராய்ந்து பார்த்துத் திருந்த வேண்டிய காலப்பகுதியாகும். நம்முடைய விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆண்டவரிடம் நம்முடைய தவறுகள், பாவங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி நாம் மனந்திரும்ப வேண்டும். மனந்திரும்பி வாழுகிறவன்தான் விசுவாசி. என்றைக்கு ஆண்டவர் தன்னுடைய வார்த்தையின் மூலம் நம்முடைய குற்றங்களைச் சுட்டிக் காட்டுகிறாரோ உடனே அதை ஒப்புக்கொண்டு, அவரிடத்தில் “ஆண்டவரே இனிமேல் இது தொடராதபடி எனக்கு உதவி செய்யுங்கள், நீர் எந்தளவுக்கு என்னைத் தண்டித்தாலும் அது நீதியானதுதான், அந்தளவுக்கு நான் நன்மையே இல்லாதவன், இருந்தபோதும் என்னுடைய பாவங்களின் அடிப்படையில் என்னோடு இடைபடாமல் உம்முடைய அன்பின் கிருபையின் அடிப்படையில் என்னைப்பார்த்து எனக்குத் துணை செய்யும்” என்று கேட்போம். அவ்வாறு நாம் கேட்கும்போது அவர் ஒருநாளும் நம்மைத் தள்ளி வைக்கமாட்டார்.
ஒருவேளை கிறிஸ்துவை அறியாதவர்கள் இதை வாசிக்கலாம், உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆண்டவர் இலவசமாகக் கொடுக்கிற பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் அவரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதற்காக இயேசுவை நீங்கள் விசுவாசியுங்கள். இந்த உலகமோ, இந்த உலகத்து தெய்வங்களோ உங்களுக்கு உதவப்போவதில்லை. ஜீவனுள்ள தேவனாக இருக்கிற இயேசு மட்டுமே மனிதனுடைய பாவங்களிலிருந்து விடுதலை கொடுப்பதற்காக தன்னையே சிலுவையில் ஒரேதரம் பலியாகக் கொடுத்தார் என்று வேதம் சொல்லுகிறது. அந்த இயேசுவை நீங்கள் விசுவாசித்தால் மட்டுமே உங்களுக்கு விடுதலையும், இரட்சிப்பும், ஜீவனும், பரலோகமும் கிடைக்கும். அவரை ஏன் நீங்கள் விசுவாசிக்கக்கூடாது? நாட்களை இப்படியே தொடர்ந்து வீணடித்து, சிக்கல்கள் கொண்ட இருதயத்தோடு வாழாமல் விடுதலைக்காக இன்றைக்கே அவரைத் தேடிச் சென்று, “இயேசுவே நீர்தான் என்னுடைய தேவன், உம்முடைய வார்த்தைகளைப் பின்பற்றி நடந்து உம்மில் அன்பு காட்டுகிறேன்” என்று ஏன் நீங்கள் சொல்லக் கூடாது? ஆண்டவர் பேசுகிறார், அவர் பேச்சைக் கேளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார். ஆமென்!
சூனேமியப் பெண்ணின் சுயநலமில்லாத சேவை
2 இராஜாக்கள் 4:8-16
இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 4:8-16 வரையுள்ள வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் இந்த அதிகாரத்தின் ஆரம்பப் பகுதிகளைப் பார்த்தோம். அதில் ஆண்டவருக்கு பயந்து வாழ்ந்த ஒரு விதவையை எலிசா சந்திப்பதையும், அவளுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து அவர் அவளுக்கு விடுதலையைக் கொடுப்பதையும் நாம் கவனித்தோம். இந்த ஆக்கத்தில் இன்னொரு பெண்ணைப் பற்றி ஆராயப்போகிறோம். இந்தப் பெண் சூனேம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவள். இந்தப் பெண்ணும்கூட அந்த விதவையைப்போல தேவனுக்கு பயந்து வாழ்ந்து வந்தாள். அந்நாட்களில் இஸ்ரவேல் பகுதிகளில் தேவனுடைய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அங்கு நிறைய பஞ்சம் நிலவியது, நாட்டிற்கு எதிரிகளின் தொல்லைகள் இருந்தன, உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதுமட்டுமல்ல ஆண்டவரைவிட்டு விலகிப் போய் வாழ்ந்த மக்கள் அதிகமாக இஸ்ரவேல் நாட்டில் காணப்பட்டார்கள். தேவனையும் அவருடைய வார்த்தையையும் அதிகமாக உதாசீனம் செய்து அந்நிய தேவர்களையும், புறஜாதி மக்களின் பழக்கங்களையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள் அதிகமானோர் இருந்தார்கள். அதுபோன்ற சூழலில் தேவனுடைய மக்கள் மீதமானவர்களாகக் குறைந்தளவே இருந்தார்கள். தேவனுடைய மக்களுக்கு, புறஜாதி தெய்வங்களை வணங்கி வந்த இஸ்ரவேல் மக்கள் மற்றும் மற்றவர்களிடத்திலிருந்து வந்த பலவிதமான எதிர்ப்புகளையும் தாங்க வேண்டியது மட்டுமல்லாமல் நாட்டில் பஞ்சத்தையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இருந்தபோதும் தேவன் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை.
இந்த வேதப்பகுதி சூனேமில் இருந்த பெண்ணின் விசுவாசத்தையும், அதன் அருமையையும், அவளுடைய விருந்தோம்பலைப் பற்றியும் அருமையாக நமக்கு விளக்குகின்றது. 8 வது வசனத்தில் வேதம் இப்படியாகச் சொல்லுகிறது, “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது”.
இவ்வாறு வேதத்தில் எழுதியிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. எலிசா சூனேமுக்குப் போனது இது முதல் தடவை அல்ல, பல தடவை அவர் அங்கு போயிருக்கிறார். யார் இந்த எலிசா? இவர் ஒரு தீர்க்கதரிசி, எலியாவுக்குப் பிறகு அவரைப்போல அவரால் பயிற்சி கொடுக்கப்பட்டு மற்றொரு அதிரடிப் பிரசங்கியாகவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். தேவனைவிட்டு விலகி புறஜாதி தெய்வங்களை மக்கள் வணங்கி நாட்டில் துன்பங்கள் இருந்த காலப்பகுதியில் எலிசா பல இடங்களுக்குப் பிரயாணம் செய்து தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அந்நாட்களில் நாட்டில் சத்தியப் பஞ்சம் அதிகமாக இருந்தது. சத்தியப் பஞ்சமென்றால் ஆண்டவருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காமல், அவருடைய வார்த்தையைக் கேட்கவேண்டுமென்ற இருதய தாகமில்லாமல், புறஜாதி தெய்வங்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பின்பற்றி வந்த அதிகமானோர் இருந்தார்கள். ஆண்டவர் இஸ்ரவேல் நாட்டிற்காகச் செய்த அனைத்தையும் மறந்துபோய், அவற்றை நிராகரித்து அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவ்வளவு மோசமான நிலையிலும் கூட ஆண்டவர் தன்னுடைய வார்த்தையைக் கொடுப்பதற்காகத் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருந்தார்.
எலிசா இஸ்ரவேல் தேசத்தின் பல பகுதிகளிலும் பிரயாணம் செய்து மீதமாய் இருந்த மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை எடுத்துச் சென்று வந்தார். அதுபோன்று ஒரு பிரயாணமாகதான் அவர் சூனேமுக்கு வருகிறதை நாம் பார்க்கிறோம். அப்படி சூனேமுக்கு வந்தபோது அங்கொரு பெண்ணைச் சந்திக்கிறார். இந்த சூனேமுக்குப் போவதற்குக் கர்மேல் மலையிலிருந்து ஒருநாள் தூரம் பயணம் செய்து போகவேண்டியிருந்தது. ஆகவே அது அதிக நேரத்தை செலவழித்து போக வேண்டிய பிரயாணமாக இருந்தது. கர்மேலுக்கு வந்து தங்கியிருந்து படிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும் எலிசா அங்கு போவது வழக்கம். அப்படி கர்மேலுக்குப் போகிறபோது, போகிற வழியில் சூனேமுக்கு வந்து தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்காகதான் வந்திருந்தார். இந்தப் பெண்ணுக்கு எலிசாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் எலிசா ஏற்கனவே பலமுறை வந்து சென்றிருக்கிறார். எலிசாவுக்கும் இந்தப் பெண்ணைப் பற்றிய அறிமுகம் இருந்தது. எந்தளவுக்கு அவர்களுடைய உறவு இருந்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால், இதுதான் அவர்கள் ஒருவரையொருவர் முதல் முறை சந்தித்துக்கொண்ட நிகழ்வு அல்ல. அவளைப் பற்றி மேலும் வேதம் சொல்லுகிறது, “அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.” (2 இராஜாக்கள் 4:8)
கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ என்று சொல்லும்போது முக்கியஸ்தரான ஒரு பெண் (Prominent woman) என்று NASB என்ற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க பெண் (Notable woman) என்று NKJV என்ற இன்னொரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்துள்ளது. இவைகளுக்கு அர்த்தம் நல்ல செல்வந்தமுடையவளாக, வசதிகள் வாழ்க்கையில் நிறைந்தவளாக, சமுதாயத்தில் முக்கியத்துவம் கொண்டிருந்தவளாக இருந்திருக்கிறாள் என்று அர்த்தம் கொள்ளலாம். அல்லது அந்த ஊரில் ஒரு நல்ல பெயரை வாங்கிய ஒரு முக்கியமான பெண் என்றும் சொல்லலாம். அதற்குமேல் அவளைப்பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் தேவனை விசுவாசித்த கனம்பொருந்திய ஒரு பெண்ணாக இருந்தாள். எலிசா வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கு விருந்துபசாரம் செய்வதற்காகத் தன் வீட்டிற்கு வரும்படியாக அவரை அழைத்தாள். எலிசா தேவனுடைய மனிதன் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும், அவர் வீட்டிற்கு வந்து நம்மோடு உணவருந்த வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டு அவரை அழைத்தாள்.
சூனேம் என்ற ஊரைப்பற்றி . . .
ஆண்டவர் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தில் இருந்தது இந்த ஊர். அந்த தேசத்தில் வட தென் பகுதிகளுக்குப் போகிற வழியில் இடையில் சம தரையாக இருந்த இடம்தான் இந்த சூனேம். இதனுடைய எல்லை யோர்தான் வரைக்கும் பரந்து விரிந்து காணப்பட்டது. இந்த பரந்து விரிந்த பகுதிக்கு கிஷோன் என்ற ஆற்றிலிருந்துதான் தண்ணீர் வந்தது. இந்த பரந்த நிலப்பரப்பில் பயிர்கள் நன்கு செழுமையாக வளரக்கூடிய விதத்தில் காணப்பட்டது. அதுமட்டுமல்ல அதனுடைய காலநிலையும் கூட விவசாயம் பண்ணுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருந்தது. இந்தப் பகுதியில் சோளம் அதிகமாக விவசாயிகளால் பயிரிட முடிந்தது. மேலும் ஒலிவ மரங்களையும் அதிகமாகப் பயிரிட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான பகுதியாக இந்த சூனேம் ஊர் காணப்பட்டது. அங்கிருந்து வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகத்தான் இருந்தார்கள். அது பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான இடமாக இருந்தது. எலிசா கர்மேல் மலைக்குப் போவதற்கு முன்பாக இந்த நகரத்தில் ஓய்வெடுப்பதற்காக வந்திருந்தார்.
சூனேமியப் பெண்ணின் ஆவிக்குரிய நிலை
ஏற்கனவே நாம் கவனித்திருப்பது போல அவள் தேவனை விசுவாசித்தாள். அந்நாட்களில் தேவனை விசுவாசிக்காத மக்கள் அதிகமானோர் நாட்டில் இருந்தபோதும் இவள் தேவனை விசுவாசித்தாள் என்று நாம் பார்க்கிறோம். எலிசாவை அவள் மதித்து அவர் தனது வீட்டிற்கு வரவேண்டும், தனது வீட்டில் உணவருந்த வேண்டும் என்று அவள் விரும்பினாள் என்று பார்க்கிறோம். ஒரு நாட்டில் தேவபயம் குறைவாகவும், பாகாலை அதிகமாக வணங்கிக் கொண்டிருந்த மனிதர்கள் இருந்த காலப்பகுதியில் இந்தப் பெண் சற்று வித்தியாசமானவளாக இருந்தாள். தீர்க்கதரிசியாகிய எலிசா சூனேமுக்கு வருகிறபோதெல்லாம் அவருக்கு உதவிகள் செய்தாள், மேலும் அவருடைய வார்த்தைகளைக் கேட்க மிகவும் ஆர்வமுள்ளவளாக இருந்தாள். நான் ஏற்கனவே முந்திய ஆக்கங்களில் சொன்னதுபோல அந்த நாட்களில் எங்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்களோ அங்குதான் தேவனுடைய வார்த்தை இருந்தது. ஆகவே தேவனுடைய மக்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் வருவதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தீர்க்கதரிசிகள் அந்த இடங்களுக்குப் போகிறபோது அவர்களிடத்தில் இருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு அவர்கள் போவார்கள்.
இப்போது எலிசா இங்கு வந்தபோது இந்தப் பெண் மிகவும் அருமையாக அவரைக் கவனித்துக்கொள்ள எண்ணுகிறாள். தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனைப்போல எலிசாவை அவள் மதித்தாள். தீர்க்கதரிசிகளுக்கு எந்தமாதிரியான முக்கியத்துவம் இஸ்ரவேலில் இருந்தது என்பதை இவள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். தெய்வபக்தி இல்லாத ஒரு காலப்பகுதியில் இப்படியான தீர்க்கதரிசிகள் இருந்ததே ஒரு அருமையான காரியமென்று நாம் பார்க்கிறோம். மேலும் இந்தப் பெண்ணுக்கு ஒரு கணவன் இருந்தார் என்று இந்தப் பகுதி சொல்லுகிறது. 9 வது வசனத்தில் “அவள் தன் புருஷனை நோக்கி” என்று சொல்லுவதை நாம் பார்க்கிறோம். இவர்கள் இரண்டு பேருமே தேவபக்தி உடையவர்களாக அருமையான மணவாழ்க்கையைக் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கணவனும் மனைவியுமாக இருவரும் சேர்ந்து தீர்க்கதரிகள் அங்கு வருகிறபோதெல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தார்கள். அதே நேரத்தில் அவர்களிடத்திலிருந்து தேவனுடைய வார்த்தையைப் பெற்று தாங்களும் தங்கள் வாழ்க்கையில் ஆறுதலையும் உற்சாகத்தையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பெண் தீர்க்கதரிசிக்கு மேலும் சில உதவிகளை செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறாள். 9, 10 வது வசனத்தில் நாம் வாசிக்கிறோம். “அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.”
இந்தப் பெண் தானே எதையும் செய்துவிடாமல் தன் கணவனை மதித்தவளாக அவரோடு கலந்து பேசுகிறதை நாம் இங்கு பார்க்கிறோம். எலிசா பரிசுத்த மனிதன் என்று அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். மேலும் அவர் அடிக்கடி அங்கு வந்து போவதால் அவர் வந்து போவதற்கு வசதியாக ஏன் ஒரு ஏற்பாட்டைச் செய்யக்கூடாது என்று ஆலோசனை பண்ணினார்கள். அந்தளவுக்கு வசதியைச் செய்து கொடுக்கும்படிக்கு அவர்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் இருந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு மேலாகவே ஒரு அறையைக் கட்டி அங்கு ஓய்வெடுப்பதற்கு கட்டிலும், படிப்பதற்கு மேஜையும் நாற்காலியும் குத்துவிளக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என்று யோசித்தார்கள். மேலும் 11 வது வசனம் சொல்லுகிறது, “ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.” (2 இராஜாக்கள் 4:11)
இந்தப் பெண் கணவனிடம் சொன்ன யோசனை அவருக்கும் பிடித்திருந்தது. அப்போது அவர்கள் சொன்னபடியே அப்படியான ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்தார்கள் என்று நாம் பார்க்கிறோம். இவர்கள் எந்தளவுக்கு தேவ பக்தியுள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கணவனும் மனைவியுமாக சேர்ந்து தாங்கள் எதைச் செய்யவேண்டுமென்று தீர்மானித்தார்களோ அதையெல்லாம் செய்து முடித்து எலிசாவையும் அவனுக்கு உதவியாக இருந்த கேயாசியையும் தன்னுடைய வீட்டின் மேல் வந்து தங்கும்படி செய்தார்கள்.
படிக்க வேண்டிய பாடங்கள்
இந்தப் பகுதியில் இவர்கள் செய்ததை வெறும் வரலாற்று நிகழ்வாக மட்டும் கருதிவிடக்கூடாது. இங்கு ஆண்டவரை நேசித்த ஒரு பெண்ணையும் அவளது கணவனையும் நாம் பார்க்கிறோம். நாட்டில் பல பிரச்சனைகளும் வார்த்தைப் பஞ்சங்களும் இருந்தபோதும் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்து ஆண்டவருக்கென்று எவ்வளவு வைராக்கியமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும், ஆண்டவருடைய மனிதர்களான தீர்க்கதரிசிகள் வந்தபோது அவர்களை எந்தளவுக்கு கவனித்துக் கொண்டார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளுகிறோம். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்லுகிறார்.
மத்தேயு 10:40-42
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னதுபோல இந்த சூனேம் ஊராளாகிய பெண் இங்கு நடந்துகொள்ளுவதைப் பார்க்கிறோம். அவளுக்கு ஒரு தீர்க்கதரிசி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது தெரிந்திருந்தது. அவருக்குச் செய்யும் எதுவும் ஆண்டவருக்கே செய்வது என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள். ஆகவே இவள் இருதயத்தில் எந்தளவுக்கு தேவன் மீது வாஞ்சையாக இருந்தாள் என்பதைத் தனது செயலின் மூலம் வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு செய்கிறவர்களை நிச்சயமாக ஆண்டவர் ஆசீர்வதிப்பார். தேவனுடைய மக்கள் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும். எவ்வாறு நாம் தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கிறோமோ அந்தளவுக்கு ஆண்டவர் அதற்கான பலனைக் கொடுக்காமல் போகமாட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வாழும் இந்தக் காலங்களில் மனிதர்கள் அதிகமாக பணம் சேர்க்கும் காரியங்களில் ஈடுபடுகிறார்களே தவிர, ஆண்டவருடைய பிள்ளைகளைக் கவனிப்பதும், அவர்களுடைய வார்த்தையைக் கேட்பதும், அவருடைய மக்களுக்கு உதவி செய்வதும் மிகவும் குறைந்துபோய் காணப்படுகிறது. ஆனால் உண்மையாக தேவனை விசுவாசிக்கிறவர்களும், வைராக்கியத்தோடு ஆண்டவருடைய வசனத்தைக் கேட்கிறவர்களும் அவ்வாறு செய்யமாட்டார்கள். எவ்வளவு துன்பம் நாட்டில் இருந்தபோதும் மீதமாக இருந்த ஆண்டவருடைய மக்கள் மிகக்குறைவாக இருந்தபோதும் இவள் ஆண்டவருக்காக வாழவேண்டுமென்ற வைராக்கியத்தோடு இருந்ததை நாம் காண்கிறோம். எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வேதம் சொல்லுகிறது,
எபிரெயர் 13:2
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
இந்த வசனம் எந்தளவுக்கு நாம் விருந்தோம்பலில் ஈடுபட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. விருந்தோமல் என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் Hospitality என்று சொல்லப்படுகிறது. இதைக் குறித்து வேதம் அதிகமாக விளக்குகிறது. யாரையும் உபசரிக்க மறக்காமல் இருக்க வேண்டும். ஏன் நாம் அதைச் செய்யவேண்டும்? ஆண்டவருக்காக அதைச் செய்யவேண்டும். அவ்வாறு நாம் செய்கிறபோது நம்மையே அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு என்று வேதம் சொல்லுகிறது. நான்கூட பிரசங்கம் செய்வதற்காகப் பல நாடுகளுக்குப் போய்வரும்போது சிலரை நான் சந்தித்து இருக்கிறேன். அமெரிக்காவில், கடந்த 32 வருடங்களாக அங்கு சென்றபோதெல்லாம் ஒரு மாகாணத்தில் ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்திருக்கிறேன். ஒரு வாரம் அல்லது ஒன்றறை வாரம் அங்கு தங்கி இருக்கிறேன். அவர்கள் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் தங்களுடைய வசதிக்கு ஏற்றவிதத்தில் அருமையாக என்னை கவனித்துக்கொள்ளுவார்கள். அந்தளவுக்கு அதிகமாக நான் ஒரு வீட்டில் தங்கியதில்லை. அவர்கள் இரண்டுபேரும் வயதானவர்கள்தான். இருந்தபோதும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறவர்கள் ஊழியக்காரர்கள் என்பதற்காக எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு அன்போடு கவனித்துக்கொள்ளுவார்கள். அப்படியான ஒரு அருமையான உறவு இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு எனக்கு இருக்கிறது. அவர்கள் எப்போதும் எதையும் என்னிடம் எதிர்பார்த்ததே இல்லை. தங்களால் முடிந்ததைச் செய்து தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் அவர்கள் இருதயத்தில் இருந்தது. இந்த மாதிரியானவர்களை நம்மால் பார்க்க முடிகிறதா? இந்தக் காலத்தில் நாம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்போம், ஆலயத்திற்கு போவோம், காணிக்கையைக் கொடுத்துவிடுவோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் யோசித்துப் பார்த்து கடவுளுடைய வார்த்தை மேலும் மேலும் பிரசங்கிக்கப்படுவதற்கும் அவருடைய வார்த்தை எல்லோருக்கும் போய்ச் சேருவதற்கு என்ன செய்யலாம் என்று இந்தப் பெண்ணைப் போல யோசிப்பதில்லை.
எலிசாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வார்த்தை போய்ச் சேரவேண்டும் என்கிற வைராக்கியம் அவளுக்கு இருந்திருக்கிறது. நமக்கு அந்த வைராக்கியம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் போன்று நாம் யோசிக்கிறோமா? ஆலயத்திற்கு போய் வந்துவிட்டோம், போதகரை வீட்டுக்கு அழைத்து உபசரிக்கிறோம், இதுவே போதுமென்று எண்ணாமல் இந்தப் பெண்ணைப் போன்று ஆண்டவருக்கென்று இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோமா? நாம் ஏதோ கொஞ்சம் செய்துவிட்டோம் என்று திருப்தியடையாமல் இன்னும் எவ்வளவு செய்யலாம் என்கிற மனப்பான்மை நமக்கிருக்கிறதா? ஆண்டவருடைய வார்த்தை எல்லோரையும் போய்ச் சேருவதற்கு நமக்கொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? நாம் செய்யக்கூடிய ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறோமா? நாம் ஆலயத்திற்குக்கூட நேரத்திற்குப் போவதில்லை. ஆண்டவர் கிருபையாக எவ்வளவோ வசதிகள் செய்துகொடுத்தாலும் நாம் நேரத்திற்குப் போவதில்லை. மிகவும் அசட்டையாக இருந்துவிடுகிறோம். தேவனுடைய காரியத்தில் எந்தளவுக்கு நீங்கள் வைராக்கியமாக இருக்கிறீர்கள்? இந்த சூனேமியப் பெண்ணைப் போல ஆண்டவருக்கென்று வைராக்கியத்தோடு இருக்கிறீர்களா? உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
சூனேமியப் பெண்ணுக்கு எலிசா தீர்க்கதரிசியின் பாராட்டு
சூனேமியப் பெண்ணின் செயலை எலிசா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலபேருக்கு இவ்விதம் செய்துகொடுத்தால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் போய்விடுவார்கள். நம்மிடமும் அவ்விதமான பழக்கம் இருக்கிறது. யாராவது நமக்கு உதவிசெய்தால் அவர்களுக்கு நன்றி சொல்லுகிறோமா? அவர்கள் எந்த நிலையிலிருந்து அந்த உதவியைச் செய்தார்கள் என்று அவர்களுடைய நிலைமையைப் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறோமா? இந்த சூனேமியப் பெண்ணின் உதவியை எலிசா கவனித்தார். 12 வது வசனத்தில் வேதம் நமக்கு சொல்லுகிறது, “அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.” (2 இராஜாக்கள் 4:12)
எலிசா ஏன் அழைத்துவரச் சொன்னார்? ஏனென்றால் தான் ஏதாவது அந்தப் பெண்ணுக்கு உதவ முடியுமா என்று அவர் யோசித்தார். அந்த மனுஷி தன் வாழ்க்கையில் காட்டின அக்கறையான கவனிப்பை அவர் மதித்தார், அதற்கு நன்றியுள்ளவராக இருந்தார். 13 வது வசனத்தில் சலக்கரணையோடும் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஆங்கில வேதத்தில் கவனிக்கிறபோது, சகலவிதமான அக்கறையோடும் என்னைக் கவனித்துக்கொண்டாள் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அது சாதாரணமான அக்கறை இல்லை. அவள் தன்னால் எந்தளவுக்கு அவருக்குச் செய்யமுடியுமோ அந்தளவுக்கு அக்கறை காட்டி கவனித்துக்கொண்டாள்.
அவள் செய்திருப்பதைக் கவனியுங்கள். வீட்டில் தங்குவதற்கு ஒரு அறையைக் கட்டிக்கொடுத்து, அந்த அறைக்குள்ளாகப் படிப்பதற்கு விளக்கும் மேஜையும், ஓய்வெடுப்பதற்கு கட்டிலும் எனத் தங்களால் முடிந்தளவுக்கு அக்கறையோடு சிந்தித்துப் பார்த்து அவர்கள் செய்ததையே அந்த “சலக்கரணையோடும்” என்கிற பழங்காலத் தமிழ் வார்த்தையின் அர்த்தமாக உள்ளது. இதுபோன்ற இருதயமுள்ளவர்களாக நாம் காரியங்களைச் செய்கிறபோது ஆண்டவர் அதைக் கவனிக்கிறார். யாரும் பாராட்டவில்லையே என நாம் எதிர்பார்த்தால் நாம் செய்த செயல்கள் எல்லாம் உண்மையிலேயே செய்யத்தகாது. நம்மை ஆண்டவர் பார்க்கிறார், அதை அவர் கவனிக்காமல் இருக்கமாட்டார். அவருடைய கண்கள் எல்லோர் மேலும், எல்லாக் காரியங்கள் மேலும் இருக்கிறது. அக்கறையோடு நம் ஆண்டவர் அதைக் கவனிக்கிறார். கர்த்தருக்காக நாம் செய்கிறபோது எதையும் எதிர்பார்க்காமல் வலது கையில் கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 13 வது வசனத்தில் எலிசா சொல்லுகிறார், “அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான்.” (2 இராஜாக்கள் 4:13)
ராஜாவுக்கு எலிசாவைப் பிடிக்காது. அத்தோடு எலிசாவுக்கும் அவனைப் பிடிக்காது. அப்படியிருக்க நான் ராஜாவினிடத்தில் பேச வேண்டுமா? என்று எலிசா கேட்கிறார். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ராஜா தீர்க்கதரிசியை மதிக்கிறவன். அன்றைக்கு ராஜாவுக்கும் எலிசாவுக்கும் நெருங்கிய உறவு இல்லாவிட்டாலும் எலிசா சொன்னால் ராஜா செய்வார். ஏனென்றால் எங்கு எலிசா இருக்கிறாரோ அங்குதான் கர்த்தர் இருக்கிறார் என்பது ராஜாவுக்குத் தெரியும். அவரிடம்தான் வார்த்தை இருக்கிறது, அங்குதான் நாம் தேவனுடைய ஆலோசனைக்குப் போகவேண்டும் என்பது ராஜாவுக்குத் தெரியும். சாமுவேல் இறந்த பிறகும் சவுல் ஏன் சாமுவேலைக் கூப்பிட்டார்? சாமுவேல் வந்தால்தான் தேவனுடைய வழிகளை அறிந்துகொள்ள முடியுமென்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே எலிசா சொன்னால் ராஜா கேட்பார். ஆகவேதான் ராஜாவினிடத்தில் இருந்து ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அல்லது சேனாதிபதியினிடத்திலாவது பேசி உங்களுக்குத் தேவையானதைச் செய்யச் சொல்லட்டுமா என்று கேட்டார். ஆனால் அவளுடைய பதில் அவ்வளவு அருமையாக இருந்தது. “அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.” (2 இராஜாக்கள் 4:13)
என் ஜனம் அதாவது தேவனுடைய மக்கள் கொஞ்சப்பேர் இருந்தாலும் அவர்கள் மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஆகவே நீங்கள் எனக்கு எதுவும் செய்யவேண்டிய அவசியமேயில்லை என்று சொல்லுகிறாள். நீங்கள் இங்கு வந்து தங்கினதே எங்களுக்குப் பெரிய காரியம், எங்களால் இந்தளவுக்குச் செய்ய முடிந்ததே சந்தோஷம்தான், நாங்கள் எதுவுமே உங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கவில்லை என்று தன் இருதயத்திலிருந்து சொன்னாள். இந்தமாதிரியான மக்களை நாம் பார்க்கிறோமா? இதுபோன்று நாம் நடந்து கொள்ளுகிறோமா? நம்மை நாம் கேட்டுப்பார்க்க வேண்டும். ஆனாலும் எலிசாவுக்கு அதில் சமாதானம் இருக்கவில்லை. அவன் தன் ஊழியக்காரனான கேயாசியைப் பார்த்து கேட்டார். “அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.” (2 இராஜாக்கள் 4:14)
கேயாசி அவர்களைக் கவனித்துப் பார்த்து அவர்களுக்கு பிள்ளை இல்லை என்று சொல்லுகிறான். பெரிய வயதுள்ளவன் என்றால் அதிக வயதான நிலையில் அவள் கணவன் இருக்கிறான் என்று அர்த்தம்.. உடனே எலிசா அவளைக் கூப்பிடுமாறு சொன்னார். “அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.” (2 இராஜாக்கள் 4:15-16)
பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே என்றால், ஆங்கில வேதத்தில் பார்க்கிறபோது அடுத்த வருஷம் இதே நேரம் என்று சொல்லப்படுகிறது. அவ்வேளை உன் கையில் ஒரு பிள்ளை இருப்பான் என்று எலிசா சொல்லுகிறார். இங்கு ஒரு அருமையான அற்புதத்தை அவளுக்காக எலிசா செய்கிறார். அவளுடைய வாழ்க்கையில் பிள்ளை இல்லை என்பது ஒரு குறையாகத்தான் இருந்திருக்கும், அவளுடைய கணவரோடு சேர்ந்து அந்தக் குறையைப் பற்றி அதிக நேரம் பேசியிருந்திருப்பார்கள், அது அவர்களது உள்ளத்துக் கவலையாக இருந்திருக்கும். இருந்தபோதும் அதைப்பற்றி அவள் கவலைப்படாமல் தேவனுடைய வார்த்தையில் அக்கறைகாட்டி, தேவனுடைய மனிதர்களைக் கவனிப்பதில் அக்கறைகாட்டி, பிரச்சனைகள் இருந்தாலும் ஆண்டவரில் எந்தளவுக்கு விசுவாசம் வைக்கவேண்டும் என்று அவள் விடாப்பிடியாக இருந்திருக்கிறாள். அவள் தீர்க்கதரிசி எவ்வளவு பெரிய அற்புதங்களையும் செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தபோதும், அவரைத் தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும், அவருடைய சுவிசேஷம் பல இடங்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று தீர்மானித்து உதவி செய்கிறாள். அதனால்தான் அவளே தன் தேவையைத் தீர்க்கதரிசியிடம் சொல்லாதபோதும் ஆண்டவர் அவளுடைய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் பார்க்கிறோம்.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? இவளுடைய நிலமையில் நாம் என்ன செய்திருப்போம்? நமக்கு நம்முடைய கவலைதான் பெரிதாக தெரிந்திருக்கும். இதுபோன்று அற்புதம் செய்யும் பெரிய தீர்க்கதரிசி நம்மிடம் வந்தால் முன்கூட்டியே திட்டம் வகுத்து சமயம் கிடைக்கும்போது நம் எல்லா குறைகளையும் சொல்லிவிடலாம் என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்திருப்போம். விசுவாசத்தில் உறுதியாகவும் ஆண்டவரிடத்தில் சந்தோஷமாக இவர்கள் இருந்தபோதும் அவர்களிடத்திலும் குறைகள் இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. நாம், எல்லாம் நன்றாக இருந்தால் ஆண்டவருக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசிப்போம். நம் வாழ்க்கையில் குறையே இல்லாமல் வாழ்ந்து மரித்துவிட முடியுமா? குறைகள் ஒன்று போனால் ஒன்று வரும். என் குறையெல்லாம் தீர்ந்த பிறகு, பிரச்சனைகள் முடிந்த பிறகு நான் ஆண்டவருக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுவது தவறு. எனக்கு நிறைய கடன்கள் இருக்கிறது, நிறைய தேவைகள் இருக்கிறது, இதெல்லாம் முடிந்த பிறகு ஆண்டவருக்கு காணிக்கை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சிலர் சொல்லுவார்கள்.
இந்த சூனேமியப் பெண் இதுபோன்று எதுவும் சொல்லவில்லையே. அவள் வாழ்க்கையில் பல குறைகள் இருந்திருக்கிறது. அதற்கெல்லாம் ஜெபித்து ஆண்டவரிடத்தில் நிச்சயமாக சொல்லியிருப்பாள். அவள் அதை சொல்லி விட்டுவிட்டுத் தான் செய்யவேண்டிய வேலைகளில் அவள் குறை வைக்காமல் செய்தாள். பக்தியின் காரியங்களில் அவள் குறை வைக்கவில்லை, ஆண்டவருக்குச் செய்யவேண்டிய வைராக்கியமான கடமைகளில் அவள் குறை வைக்கவில்லை, பொறுப்புகளில் குறை வைக்கவில்லை, தன் கணவனோடு சேர்ந்து எந்தளவுக்கு ஆண்டவருக்குச் செய்ய முடியுமோ அந்தளவுக்கு உற்சாகத்தோடும், ஆனந்தத்தோடும் குறைகளுக்கு மத்தியிலும் அத்தனையும் செய்தாள் என்று பார்க்கிறோம். நம்மிடம் அப்படிப்பட்ட தன்மைகள் இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள்.
ஆண்டவருக்கென்று பணிகள் செய்கிறபோது சிரமத்தையும் பாரத்தையும் பார்க்கக்கூடாது. இவ்வளவுதான் ஆண்டவருக்குக் கொடுப்பேன், இவ்வளவு நேரம்தான் கொடுப்பேன் இதற்குமேல் என்னால் கொடுக்கமுடியாது என்று எவ்வளவோ பேர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுவா ஆண்டவருக்கென்று கொண்டிருக்கிற வைராக்கியம்? இந்தப் பெண் இன்னும் என்ன செய்யலாம், இதற்குமேல் என்ன செய்யலாமென்று யோசித்து செய்தாள் என்று பார்க்கிறோம். அதற்காக ஜெபித்திருப்பாள், சிந்தித்திருப்பாள், கணவருடைய ஆலோசனையைக் கேட்டிருப்பாள். நம்மிடம் ஏன் அப்படிப்பட்ட காரியங்கள் இல்லை? எந்தளவுக்குச் செய்தாலும் அது போதாது என்கிற மனப்பான்மை நமக்கிருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். சீர்த்திருத்தவாத காலப்பகுதிகளில் எவ்வளவோ பேர் ஆண்டவருக்காக உயிரையே விட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் சிறையில் போடப்பட்டிருக்கிறது, இரத்தம் சிந்தி மரித்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். நாம் இந்த உலகத்தின் வசதிகளுக்காக மட்டும் கிறிஸ்தவர்கள் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு வாழ்வது மிகவும் அபத்தமானது. நாம் ஆண்டவரில் எந்தளவுக்கு விசுவாசமும் வைராக்கியமும் கொண்டிருக்கிறோம் என்பதை நம் வாழ்க்கைதான் காட்டிக்கொடுக்கிறது.
இந்த சூனேமியப் பெண்ணின் பெயர்கூட நமக்கு சொல்லப்படவில்லை. அவளுடைய கணவருடைய பெயரும் சொல்லப்படவில்லை. அவளைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் நமக்கு அதிகமாகச் சொல்லப்படவில்லை. இந்த பெயர் தெரியாத பெண்ணைப் பற்றி வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் ஆண்டவர் அவளைக் கவனித்திருக்கிறார் அல்லவா! நம் ஆண்டவர் எல்லோரையும் கவனித்துக்கொண்டே இருக்கிறவர். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இறுதி நியாயத்தீர்ப்பில் அநேகர் வரிசையில் நின்றுகொண்டு ஆண்டவருடைய பெயரில் நிறைய செய்திருக்கிறோம் என்று சொல்லுவார்கள், ஆனால் ஆண்டவர் அவர்களைப் பார்த்து உங்களை எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுவார் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய விசுவாசம் எந்தளவுக்கு உண்மையான பக்தி வைராக்கியம் கொண்ட விசுவாசம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சத்தியம் எந்தளவுக்கு உங்களை மாற்றியிருக்கிறது? பெயர் தெரியாத இந்த பெண்ணின் விசுவாசத்தை ஆண்டவர் வேதத்தில் பதிவு செய்துள்ளார், அது நம் வாழ்க்கையை மாற்றப்போகிறதா? எந்தளவுக்கு ஆண்டவருக்கு வைராக்கியமாக இருக்கப்போகிறீர்கள்? நம்முடைய பிள்ளைகள் ஆண்டவரை இன்னும் அறியாமல் இருக்கிறார்கள், அவர்கள் ஆண்டவரை அறிந்துகொள்ளுவதற்காக அவருடைய வழியில் போவதற்காக எந்தளவுக்கு தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்? திருச்சபையில் இன்னும் எத்தனையோ மூப்பர்களும், உதவிக்காரர்களும் தேவையாக இருக்கிறதே, அது நம் நாட்டில் ஒரு பஞ்சமாகவே இருக்கிறதே. நன்றாக உழைத்துக் கருத்தாகப் போதிக்கிற போதகர்கள் இல்லை. கருத்தோடும் கனிவோடும் ஆத்துமாக்களைப் பார்க்கிறவர்கள் இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து அதற்காக ஜெபிக்கிற இருதயம் இருக்கிறதா? சுயநலவாதிகளாக இல்லாமல் கர்த்தருக்காக முழுமையாக நம்மை ஒப்படைத்து வாழுகிற வாழ்க்கையை ஏன் நாம் கொண்டிருக்கக்கூடாது? இந்த சூனேமியப் பெண்ணின் மூலம் ஆண்டவர் இன்றைக்கும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவளுடைய வாழ்க்கையை ஆண்டவர் கவனித்தார், அவளை ஆசீர்வதித்தார் என்று நாம் பார்க்கிறோம்.
ஆண்டவரால் முடியாதது ஒன்றுமே இல்லை. அவளுக்கு பிள்ளை இல்லாமல் இருந்தது, அவளுடைய கணவனுக்கு வயதாகிவிட்டது. வயதாகிவிட்டால் பிள்ளைகள் பிறக்காது என்று எல்லோரும் சொல்லுவார்கள். மனிதனால் முடியாது என்று நினைக்கிறபோது, என்னால் முடியுமென்று செய்துகாட்டுகிறவர்தான் நம் ஆண்டவர். எலிசா அந்தப் பெண்ணைப் பார்த்து அடுத்த வருஷம் இதேநேரம் உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்று சொன்னார். ஏனென்றால் அந்தளவுக்கு அவள் விசுவாசத்தையும் இருதயத்தையும் செயல்களையும் அவர் பார்த்தார்.
இதிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டவர் நமக்கும் அப்படியான வைராக்கியத்தைக் கொடுக்க வேண்டும். இவ்விதமாக வாழ்வதற்கு நாமும் முயற்சி செய்வோம். இந்தக் காலங்களில் நம்மை நாம் ஆராய்ந்து சிந்தித்துப் பார்ப்போம். எந்தளவுக்கு குடும்பமாக சபைக்கு உதவியாக இருக்க முடியும், எந்தளவுக்கு ஆண்டவருக்குச் செய்ய முடியும் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆண்டவர் இந்த பெண் மூலம் நம்மோடு பேசுகிறார். ஆனால் நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? ஆண்டவருக்கென்று பக்தி வைராக்கியமாக இன்னும் அதிகமாக அவருக்காக காரியங்களை செய்வதற்கு உங்களுக்கு இருதயம் இருக்கிறதா? சிந்தித்துப்பாருங்கள்.
நம்மை இரட்சிப்பது விசுவாசமா? கிறிஸ்துவா?
பிரசங்கத்தில் இறையியலின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இறையியல் இல்லாத பிரசங்கம் உயிரில்லாத உடலைப்போல; அது வெறும் எலும்புக்கூடு மட்டுமே. தரமான பிரசங்கங்கள் தரமான இறையியலைக் கொண்டிருக்கும். இதை நான் சொல்வதற்குக் காரணம், இன்று சுவிசேஷப் பிரசங்கங்கள் எல்லாம், “இயேசுவை விசுவாசி, இயேசுவை விசுவாசி” என்ற அறைகூவலோடு நின்று விடுகின்றன. விசுவாசிப்பது என்றால் என்ன? என்று எவரும் விளக்குவதில்லை. அதைத் துல்லியமாகப் பிரசங்கிகள் வேதத்தில் இருந்து அறிந்துவைத்திருக்கவில்லை.
பவுல் ரோமர் 1:17ல் “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்கிறார். 3:28ல் “மனுஷன் . . . விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்” என்கிறார். மாற்கு 1:15 சொல்கிறது, “. . . மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்று. அப்போஸ்தலர் 16:31ல், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது . . . இரட்சிக்கப்படுவீர்கள்” என்றிருப்பதை வாசிக்கிறோம்.
இப்போதனைகள் சரியே. ஆனால், நாம் நீதிமானாக்கப்படுவதில், இரட்சிப்பை அடைவதில் விசுவாசம் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்மை இரட்சிப்பது நம்முடைய விசுவாசமா? என்று கேட்டால் அதற்கு வேதம் இல்லை என்றுதான் பதிலளிக்கிறது. இது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும். அதற்காக விசுவாசம் தேவையற்றது என்று நான் கூறவில்லை; விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. நம்மை இரட்சிப்பது விசுவாசம் இல்லை என்றுதான் சொல்ல வருகிறேன். நமது இரட்சிப்பில் நிச்சயம் விசுவாசம் பெரும் பங்கு வகிக்கிறது. அதில்லாமல் இரட்சிப்பு கிடைக்காது என்றும் சொல்வது அவசியம். என்ன இப்படிக் குழப்புகிறீர்களே என்று நினைக்கிறீர்களா? பொறுமையாக வாசியுங்கள்.
நம்மை இரட்சிப்பது எது? நிச்சயம் நம்முடைய விசுவாசம் அல்ல. நம்மை இரட்சிப்பது இயேசு கிறிஸ்துவும், அவருடைய சிலுவை மரணத்தின் பலன்களுந்தான். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை விசுவாசத்திற்குக் கொடுத்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் நீதியையும், அவருடைய மரணத்தின் பலன்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதுதான் விசுவாசம். அந்தவகையில் விசுவாசம் கிருபையின் ஊடகமாக, நியமமாக செயல்படுகிறது. அது ஒரு ஊடகம் மட்டுமே; அதுவும் கிருபையின் ஊடகம். அதிலில்லாமல் ஒருவர் கடவுளைக் காணமுடியாது, ஒருவர் இரட்சிக்கப்பட முடியாது. இருந்தபோதும் விசுவாசமல்ல நம்மை இரட்சிப்பது; கிறிஸ்துவே நம்மை இரட்சிக்கிறார்.
பவுல் எபேசியர் 2:8ல் சொல்கிறார், “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்று. அதாவது, கிருபையின் மூலம், விசுவாசத்தின் ஊடாக இரட்சிக்கப்பட்டீர்கள் என்று இதற்கு அர்த்தம். இதில், “ஆல்”, “ஊடாக” என்ற வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். விசுவாசம் ஒரு ஊடகம் மட்டுமே என்பதைப் பவுல் “விசுவாசத்தைக் கொண்டு” என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலமாக உணர்த்துகிறார். நம்மை இரட்சிக்கும் கிறிஸ்து, அந்த இரட்சிப்பை நாம் அடைய விசுவாசத்தை ஒரு ஊடகமாகக் கருவியாகப் பயன்படுத்துகிறார். அதனாலேயே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று விளக்குகிறார். இங்கே விசுவாசம் தேவநீதியைக் கிறிஸ்துமூலம் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது என்று இதற்கு அர்த்தம்.
இரட்சிப்பை நாம் அடைவதில் விசுவாசம் கொண்டிருக்கும் பங்கை நாம் வேறெதற்கும் கொடுத்துவிடக்கூடாது. ரோமன் கத்தோலிக்க மதமும் அதைப்போன்ற மதங்களும் விசுவாசத்தின் இடத்தைக் கிரியைகளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதுவே அவர்கள் விடும் பெருந்தவறு. கிறிஸ்து நமக்காக சம்பாதித்திருக்கும் நீதியை செத்த கிரியைகள் ஒருபோதும் நமக்கு அளித்துவிட முடியாது. கர்த்தர் கிருபையால் நமக்களிக்கும் “விசுவாசம்“ மட்டுமே அதை நாம் அடையச் செய்கிறது. அதனால்தான் வேதம் சுவிசேஷத்தை நாம் விசுவாசிக்க வேண்டும் என்றும், விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்றும், விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவோம் என்றும் விளக்குகிறது.
இதுபற்றி விளக்கமளிக்கும் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் சொல்லுகிறார், “வேதம் எந்த இடத்திலும் நம்முடைய விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்று சொல்லவில்லை. வேதம் எந்த இடத்திலும் நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்றும் சொல்லவில்லை. அவ்விதமாக வேதம் போதிக்கவில்லை. வேதம் சொல்லுகிறது, நாம் விசுவாசத்தினால் அல்லது விசுவாசத்தின் ஊடாக நீதிமானாக்கப்படுகிறோம் என்று. விசுவாசம் கிறிஸ்துவின் நீதியை நாம் அடையுமாறு செய்யும் வெறும் கருவி மட்டுமே. விசுவாசம் நம்மை இரட்சிப்பதில்லை; நம்மை இரட்சிப்பது கிறிஸ்துவும் அவருடைய பரிபூரணமான சிலுவை மரணமுமே. . . . அவருடைய பரிபூரண வாழ்க்கையே நம்மை இரட்சிக்கிறது. நமக்காக அவர் பிதாவின் முன் தரிசனமாகிப் பரிந்துரையாடுவது நம்மை இரட்சிக்கிறது. கர்த்தர் நம்முடைய கணக்கில் கிறிஸ்துவின் நீதியைப் பதிவு செய்வது நம்மை இரட்சிக்கிறது. இந்த நீதியே நம்மை இரட்சிக்கிறது. விசுவாசம் அந்த நீதியை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் கருவி மட்டுமே. அந்த நீதி முழுமுற்றாகக் கிறிஸ்துவைச் சார்ந்தது. என்னுடைய விசுவாசம் என்னுடைய நீதியல்ல, விசுவாசத்தை நான் ஒருபோதும் நீதியாக எண்ணி விளக்கமளிக்கக்கூடாது. இயேசு கிறிஸ்துவோடும் அவருடைய நீதியோடும் நம்மை இணைப்பதே விசுவாசம்.’
லொயிட் ஜோன்ஸ் தொடர்ந்து சொல்கிறார், “இதை இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், நாம் விசுவாசத்தைத் தனித்து நிற்கக்கூடியதொன்றாக எண்ணக்கூடாது. விசுவாசம் ஒருபோதும் தனியாக நிற்காது அல்லது ஒன்றோடும் சேராத நிலையில் இருக்காது. நாம் விசுவாசத்தை அதனுடைய இலக்கிலிருந்து ஒருபோதும் பிரிக்கக்கூடாது. விசுவாசம் எப்போதும் ஒரு இலக்கோடு இணைந்து காணப்படும். அந்த இலக்கு இயேசு கிறிஸ்துவும், அவருடைய பரிபூரண நீதியும். இதை எப்போதும் நினைவில் கொண்டிருந்தால் நீங்கள் இந்த விஷயத்தில் தவறு செய்ய வழியிருக்காது. அதனால் நாம் ஒருபோதும் நம்முடைய விசுவாசத்தைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளக்கூடாது. விசுவாசம் நம்மை இரட்சிப்பதில்லை, அது ஒரு கருவி மட்டுமே.” (Romans, Martyn Lloyd Jones, An exposition of chapters 3:20-4:25, Atonement and Justification, Pg 120).
இப்போது புரிகிறதா, நம் இரட்சிப்பில் விசுவாசத்திற்கு இருக்கும் பங்கு என்னவென்று? சிலர் இந்தளவுக்கெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்பார்கள். வேதம் விளக்கும் சத்தியங்களை சிறிதளவும் அவற்றின் தன்மையை மீறிச் சிந்திப்பது கர்த்தருக்கெதிரான சிந்தனையாகிவிடும். ஆகவே, வேத சத்தியங்களை வேதம் விளக்கும் வகையில் மட்டுமே சிந்தித்துப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளக்கவேண்டும். போலிப்போதனைகள் எப்படி உருவாகின்றன தெரியுமா? வேதம் விளக்குகின்ற வகையில் சிந்திக்கும் சோம்பேறித்தனத்தைக் கொண்டிருந்து மேலெழுந்தவாரியாக சிந்திப்பதால்தான். அத்தகைய பொறுப்பற்ற சிந்தனை நாம் சத்தியத்தைவிட்டு விலகிப்போகச் செய்துவிடும். இரட்சிப்பைப் பற்றிய போதனைகளை விளங்கிக்கொள்ளுவதில் நாம் அத்தகைய சோம்பேரித்தனத்தைக் கொண்டிருக்கக்கூடாது. நாம் கிறிஸ்துவின் நீதியை அடைவதற்குக் கருவியாக இருக்கும் விசுவாசத்தை இனியாவது அதற்குரிய இடத்தை மட்டும் கொடுப்பதில் கவனத்தோடிருங்கள்.