1. வாசகர்களே!
2. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம்
3. ஏறிய கட்டிலிலிருந்து இறங்காமல் போனவன்
4. எலியாவின் முடிவும், எலிசாவின் ஆரம்பமும்
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இது இந்த வருடத்திற்கான இறுதி இதழ். நேரத்தோடு இதை முடித்து உங்கள் முன் வைக்கக் கர்த்தர் உதவியிருக்கிறார். இதற்காக உழைத்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். ஆக்கங்களை எழுதியிருக்கும் என்னோடு ஆடியோ செய்திகளைப் பிரதி எடுத்துத் தந்திருக்கும் சிவாவிற்கும், இதழை வடிவமைப்பு செய்து, அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுத்து அச்சுக்குப் போகும்வரை உழைத்திருக்கும் பாஸ்டர் ஜேம்ஸுக்கும், இதழை சரிபார்ப்பதில் உதவியிருக்கும் பாலா, ரோஸ்லின் ஆகியோருக்கும் என்றும் போல் இன்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
இவ்விதழில் இரண்டு ஆக்கங்கள் 2 இராஜாக்கள் நூலில் இருந்து கொடுக்கப்பட்ட பிரசங்கங்கள். பழைய ஏற்பாட்டில் இருந்து எவ்வாறு பிரசங்கம் செய்வது? என்பது அநேக பிரசங்கிகளுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதிலிருந்து வெறும் கதைகளையும், அதில் காணப்படும் நபர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும், அதிலுள்ள வாக்குத்தத்த வசனங்களை ஆத்துமாக்களுக்குக் கொடுத்தும் வருவதே நம்மினத்துப் பிரசங்கிகளின் வழக்கம். பழைய ஏற்பாட்டு வரலாற்றுப் பின்னணியும், இறையியலும் அவர்களுக்குத் தெரியாததால் அதை எப்படிப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. புதிய ஏற்பாட்டைவிட பழைய ஏற்பாடு புரிந்துகொள்ளக் கடினமானதுதான்; இருந்தாலும் அதை விளங்கிக்கொள்ள முடியாது என்று எண்ணக்கூடாது. இரண்டு ஏற்பாட்டையும் (உடன்படிக்கைகளையும்) கர்த்தர் தம்முடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ளுவதற்காகவே தந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டை எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதையும், அதிலிருந்து எவ்வாறு பிரசங்கம் செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றை இதழில் தந்திருக்கிறேன். இவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவட்டும்.
இதழில் முதல் ஆக்கமாக, பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் அறிமுக ஆக்கம் வந்திருக்கிறது. ஒரு நூலின் பின்னணி தெரியாமல் அதைப் புரிந்துகொள்ள முடியாது; அதிலிருந்து பிரசங்கிக்கவும் முடியாது. ரோமர் நிருபத்திற்கான இந்த அறிமுகம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். ஆழமானதும், ஆத்மீகப் பயனுள்ளதுமான வேதசத்தியங்களைத் தன்னி¢ல் தாங்கி இந்த இதழ் உங்கள் கையை வந்தடைந்திருக்கிறது. இந்தப் பணி தொடரவும், பணியாளர்களையும் உங்கள் ஜெபத்தில் வையுங்கள். நன்றி. – ஆசிரியர்
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம்
பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தை இப்போது சபையில் பிரசங்கம் செய்து வருகிறேன். முழு நூலின் வரலாற்று இறையியல் பின்னணியின் அடிப்படையில் தொடர்ச்சியாக வசனம் வசனமாக வியாக்கியானப் பிரசங்கமளிப்பதே என் வழக்கம். இப்போதைக்கு கர்த்தரின் கிருபையால் 17 பிரசங்கங்களை 2ம் அதிகாரத்தின் நடுப்பகுதிவரையும் அளித்திருக்கிறேன். இந்நூலைப் பிரசங்கித்து முடிய ஒரிரு வருடங்களாவது எடுக்கும் என்று நினைக்கிறேன்.
ரோமர் நிருபத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன் பிரசங்கமளித்திருக்கிறேன். இப்போது சபையில் புதியவர்களும் இருப்பதால் மீண்டும் அதில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். வேத நூல்கள் அனைத்திலும் ரோமர் நூலுக்கே அதிகமான விளக்கவுரையாளர்கள் ஆங்கிலத்தில் விளக்கவுரை அளித்திருக்கிறார்கள். ஐம்பதுக்கு மேல் காணப்படும் அருமையான விளக்கவுரைகளோடு இந்த வருடம் வெளிவந்த புதியதொன்றும் இணைந்திருக்கிறது. இது எந்தளவுக்கு ரோமருக்கு பவுல் எழுதிய நிருபம் பிரபலமானதாக இருக்கிறதென்பதை உணர்த்துகிறது. ரோமர் நூலையோ, அதன் ஒரு பகுதியையோ வாசித்து மனந்திரும்புதலை அடைந்தவர்கள் அநேகர்; அவர்களில் முக்கியமானவர் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர்.
ரோமர் பற்றிய கற்றோரின் கருத்துரை
இந்நூல் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உணர ஜோன் கல்வினின் வார்த்தைகளைக் கவனியுங்கள்,
“இந்த நூலை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோமானால், வேதத்தில் அடங்கிக்காணப்படும் அற்புதமான போதனைப் புதையல்களை நாமடையக்கூடிய வாசல் நம்முன் திறந்துகாணப்படுகிறது”.
இந்நூலால் அதிகம் பாதிக்கப்பட்டு மனந்திரும்பிய மார்டின் லூதர், “இந்நூலே புதிய ஏற்பாட்டின் மிக முக்கிய நூல், அத்தோடு மிகத் தெளிவாக சுவிசேஷத்தை இது கொண்டிருக்கிறது. இதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் வார்த்தை வார்த்தையாக அறிந்திருப்பதோடு, தன் இருதயத்திற்கான அன்றாட அப்பமாக இதில் ஒவ்வொரு நாளும் தோய்ந்திருக்க வேண்டும். இதற்கு மேல் போதும், இதை வாசிக்கத்தேவையில்லை என்று ஒரு நாளும் ரோமரை நினைக்கமுடியாது. அதிகமாகத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க மிகவும் அருமையானதாக ரோமர் இருப்பதை நாம் காண்பதோடு, அதனுடைய ருசியும் மேலானதாகக் காணப்படும்“ என்கிறார் லூத்தர்.
இதற்கு விளக்கவுரை எழுதியுள்ளவர்களில் ஒருவரான, மறைந்த சீர்திருத்த பிரசங்கியும், போதகருமான ஆர். சீ. ஸ்பிரவுல், “இது பவுலின் முழுமையானதும், மகத்தானதும், அனைத்தையும் உள்ளடக்கியதுமான சுவிசேஷ செய்தி” என்று எழுதியிருக்கிறார்.
ஹாவார்ட் மார்ஷல் எனும் இறையியல் அறிஞர் ரோமருக்கு வியாக்கியானப் பிரசங்கமளித்துள்ள டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான பிரசங்கியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்,
“இருபதாம் நூற்றாண்டில் சபையில் ரோமருக்கு விளக்கங்கொடுத்திருப்பவர்களில் மிகவும் செல்வாக்குள்ளவர் யார் என்று கேட்டால், அதில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் டேவிட் மார்டின் லொயிட் ஜோன்ஸ். அவரைப் பற்றிப் பெரும் கல்விமான்களின் மத்தியில் கேள்விப்படமாட்டீர்கள். ஆனால், சுவிசேஷ திருச்சபைகள் மத்தியில் அவரே ரோமர் நிருபத்திற்கு விளக்கமளித்த மிகத்திறமையான பிரசங்கியும், வியாக்கியானப் பிரசங்கியுமாக இருந்திருக்கிறார். ஜோன் கல்வினும், மார்டின் லூத்தரும் அவரில் அதிக செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள்.”
மார்டின் லொயிட் ஜோன்ஸ், 1955ல் ஆரம்பித்து 1968 வரை ரோமர் நிருபத்தில் இருந்து தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமைகளில் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் 325 பிரசங்கங்களை அளித்திருக்கிறார். அதைக் கேட்பதற்கு அக்காலத்தில் பெருங்கூட்டம் கூடியது. ஏனெனில், வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கம் பெருமளவுக்கு இல்லாதிருந்த காலம் அது. அதனால் அத்தகைய நல்ல பிரசங்கங்களை நாடிக் கூட்டம் அலைமோதியது. அறுநூறு, எழுநூறுக்கு மேல் வார நாளில், வெள்ளிக்கிழமைகளில் வேதப் பிரசங்கம் கேட்க மக்கள் வருவது அன்று அபூர்வம். மார்டின் லொயிட் ஜோன்ஸின் பிரசங்கங்கள் நடைமுறையை அன்று மாற்றியமைத்திருந்தது. என் சபையில் உதவிக்காரராக இருந்து வருகிற ஒருவர் (88 வயது) அந்தக் கூட்டங்களில் அக்காலத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருந்து பலர் அத்தொடர்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு லொயிட் ஜோன்ஸின் பிரசங்கங்கள் அன்று பிரசித்தமாயிருந்தன. அப்பிரசங்கங்கள் அனைத்தும் தொடராக இன்று ஆங்கிலத்தில் நூல்களாக விற்பனைக்கு இருந்து வருகின்றன.
ஒரு சபையில் ரோமர் மூன்றாம் அதிகாரத்தில் 1978-1979களில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களே இவ்வாக்கத்தின் ஆசிரியரைப் பாதித்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வைத்தன. கிறிஸ்தவ வாழ்க்கையில் அந்த ஆரம்பக் காலங்களிலேயே நான் மார்டின் லொயிட் ஜோன்ஸ் ரோமருக்குக் கொடுத்திருந்த வியாக்கியானப் பிரசங்க நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். லொயிட் ஜோன்ஸின் அருமையான விளக்கங்களைப் பொறுமையோடு வாசித்து சிந்திக்க வேண்டும். அந்தளவுக்கு ரோமரின் ஒவ்வொரு வசனத்திற்கும் அவர் மூல மொழியை ஆராய்ந்து, வேத வசன உட்பொருள் விளக்கமளித்து (Exegesis), வியாக்கியானப் பிரசங்கமளித்திருந்தார் (Expository preaching). அவர் பயன்படுத்திய அந்தப் பிரசங்கமுறை ஆத்துமாக்களை வேதத்தை அதிக ஆழமாக வாசித்துப் புரிந்துகொள்ள வைத்தது. இந்த 21ம் நூற்றாண்டிலும் நம்மினத்தில் அத்தகைய பிரசங்கங்களை அளிக்கக்கூடியவர்களை விரல்விட்டு எண்க்கூடியளவுக்குக்கூட இல்லை.
ரோமர் நூலின் விளக்கவுரைகள்
ரோமர் நிருபத்திற்கு ஏராளமானோர் ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னேன். தற்காலத்தில் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள்வரை வாசிக்கக்கூடிய அளவுக்கு அந்நிருபத்தில் விளக்கவுரைகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரையில் பேராசிரியர் ஜோன் மரேயும், வில்லியம் ஹென்றிக்சனும் எழுதியுள்ள விளக்கவுரைகள் சிறப்பானவை.
அந்நிருபத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்க விளக்கவுரைகளுக்கு மார்டின் லொயிட் ஜோன்ஸினுடையது மிகச் சிறந்தது; வாசிக்க இலகுவானது. அத்தோடு நவீன காலத்தில் ஆர். சி. ஸ்பிரவுல், ஸ்டுவர்ட் ஒலியொட், ரொப் வென்சூரா போன்றோர் எழுதியுள்ள எளிமையான விளக்கவுரைகள் விற்பனையில் இருக்கின்றன.
பிரபலமாகவிருந்த ஒரு பாப்திஸ்து போதகர், “ரோமர் நிருபத்தில் இருந்து செய்யப்பட்டிருக்கும் பிரசங்கங்கள் கிறிஸ்தவ வரலாற்றில் அதை மாற்றியமைக்கக்கூடிய சீர்திருத்தங்களையும், எழுப்புதல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ரோமரில் இருந்து கொடுக்கப்படும் உயர்தரமான போதனைகள் திருச்சபையில் உண்டாக்கக்கூடிய வல்லமையான சிற்றலை போன்ற அதிரடி மாற்றங்களை ஒரு நிமிஷம் நின்று நிதானித்துப் பாருங்கள். எந்தக் கேள்வியும் எழமுடியாதபடி நம்முடைய சத்தியங்கள் பலமானதாகவும், நம்முடைய நம்பிக்கைகள் ஆழமானதாகவும் மாறும். நம்முடைய ஆராதனை உயர்தரமானதாகவும், நம்முடைய வாழ்க்கை மேலும் பரிசுத்தமடையும். நம்முடைய ஐக்கியம் நெருக்கமானதாகவும், சுவிசேஷப் பணி பலமானதாகவும் அமையும்” என்று விளக்கியிருக்கிறார்.
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் இத்தாலியில் ரோமாபுரியில் இருந்த சபைக்கு எழுதப்பட்டது (ரோமர் 1:7). அன்று ரோமாபுரி ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்தது.
ரோமருக்கான நிருபத்தை யார் எழுதியது?
அப்போஸ்தலன் பவுல் இந்த நிருபத்தை எழுதினார் என்பதை சந்தேகிக்கிறவர்கள் எவரும் இல்லை.
இஸ்ரவேலின் அரசனாக இருந்த சவுலைப் போல பவுலும் பென்யமின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் (பிலிப்பியர் 3:5). பவுலுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்படுமுன் சவுல் என்ற பெயர் இருந்திருக்கிறது.
பவுல் ரோமராஜ்யத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தார் (அப்போஸ்தலர் 16:37; 22:25).
கிறிஸ்து பிறக்கும்போது தர்சு என்னும் நகரத்தில் பவுல் பிறந்திருந்தார் (அப்போஸ்தலர் 9:11). இது ரோமராஜ்யத்தில் சிசிலியா என்ற பிரதேசத்தில் காணப்பட்ட முக்கியமான நகரம் (அப்போஸ்தலர் 21:39). தற்கால நவீன துருக்கி நாட்டில் இது காணப்படுகிறது. பவுல் தன்னுடைய வாழ்நாளில் ஆரம்ப காலங்களை எருசலேமில் செலவிட்டிருக்கிறார். அங்கே மிகவும் பிரபலமான யூத ஆசிரியனாக இருந்த கமாலியலிடம் அவர் கல்வி கற்றிருக்கிறார் (அப்போஸ்தலர் 22:3). தன்னுடைய தகப்பனைப் போலவே பவுலும் ஒரு யூதப் பரிசேயனாக இருந்திருக்கிறார் (பிலிப்பியர் 3:5).
தமஸ்குவில் இருந்த கிறிஸ்தவர்களை சிறைப்பிடிப்பதற்காக பவுல் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்த பாதையில் மிகவும் அற்புதமான முறையில் இயேசு அவர் முன் தரிசனமளித்தபோது அவருடைய மனந்திரும்புதல் நிகழ்ந்தது (கி.பி. 33-34). அதை அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். தமஸ்குவில் தனக்கு வந்த ஆபத்தில் இருந்து அருந்தப்புத் தப்பி (அப்போஸ்தலர் 9:23-25; 2 கொரிந்தியர் 11:32, 33), பவுல் அராபியா (Nabatean Arabia) பகுதியில் மூன்று வருடங்களைக் கழித்திருந்தார். இது மரணக் கடல் (Dead Sea) என்றழைக்கப்படும் கடலின் தென் கிழக்குப் பகுதியில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் புதிய உடன்படிக்கைக் காலத்து சத்திய வெளிப்படுத்தலை அவர் நேரடியாக ஆண்டவரிடம் இருந்தே பெற்றுக்கொண்டார் (கலாத்தியர் 1:11, 12).
வேறு எவரையும்விட, ரோம ராஜ்யம் முழுவதும் சுவிசேஷத்தைக் கொண்டு சேர்த்திருப்பவர்களில் பவுலுக்கே பெரும் பங்குண்டு. மத்தியதரைக் கடல் பகுதிக்கு அவர் மூன்று தடவை மிஷனரிப் பிரயாணங்களைச் செய்தார். ஆரம்பத்தில் தான் அழிப்பதற்குக் கங்கணம் கட்டித் துடிப்போடு இயங்கிக் கொண்டிருந்த அதே சுவிசேஷத்தை அவர் தளர்ச்சியில்லாமல் பிரசங்கித்து வந்தார் (அப்போஸ்தலர் 26:9). அவர் எருசலேமிலிருந்த சபையில் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உதவித்தொகையோடு மறுபடியும் திரும்பி வந்தபோது சில யூதர்களால் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு (அப்போஸ்தலர் 21:27-29), ஆத்திரங்கொண்டிருந்த கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு (அப்போஸ்தலர் 21:30-31), ரோமப் படைகளால் சிறைசெய்யப்பட்டார். பீலிக்ஸ், பெஸ்டஸ் ஆகிய இரு கவர்னர்களும், ஹெரட் அக்கிரிப்பாவும் அவர் பவுலின் மேல் எந்தக் குற்றத்தையும் காணமுடியாதிருந்தும் யூதர்களின் பிடிவாதத்தால் அவர் தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தி ரோமப் பேரரசனாகிய சீசருக்குத் தன் நிலையை விளக்கி விண்ணப்பம் அனுப்பினார். பவுல் ரோமுக்குக் கப்பல் பிரயாணத்தில் கொண்டு வரப்பட்டபோது வழியில் மிகவும் ஆக்ரோஷமான கடல் கொந்தளிப்பில் இரண்டு வாரங்களுக்கு அகப்பட்டுப் பெருந்துன்பத்தை அனுபவித்து, கப்பலும் உடைந்து கவிழும் நிலையை அடைந்து அருந்தப்புத் தப்பி இறுதியாக ரோமாபுரியை அடைந்தார் (அப்போஸ்தலர் 27, 28). ரோமாபுரியில் குறுகிய காலத்துக்கு பவுல் தன் ஊழியத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார். அதன் பின் மறுபடியும் அவர் சிறைபிடிக்கப்பட்டு இறுதியில் ரோமாபுரியில் கி.பி. 65-67களில் கிறிஸ்துவுக்காக இரத்தப் பலியானர் (2 தீமோத்தேயு 4:6).
பவுல், இஸ்ரவேலின் அரசனான சவுலைப்போல் உயரமான ஆணழகனாக இல்லாதிருந்தபோதும் (2 கொரிந்தியர் 10:10; கலாத்தியர் 4:14) பரிசுத்த ஆவியின் வல்லமையால் தனக்குள் தைரியத்தையும், பயமின்மையையும் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 4:13). அவருடைய தேவைகளனைத்தையும் கர்த்தர் கிருபையாக நிறைவேற்றி (2 கொரிந்தியர் 12:9, 10), பவுல் தன்னுடைய தியாகபூர்வமான ஆவிக்குரிய ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக முடிக்க உதவினார் (2 தீமோத்தேயு 4:7).
பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தைக் கொரிந்துப் பட்டணத்தில் இருந்து எழுதினார். அதற்கு ஆதாரமாக கொரிந்து சபையைச் சேர்ந்த பெபேயாளின் பெயரும் (ரோமர் 16:1), கெங்கிரேயா என்ற கொரிந்து நகரின் கப்பல்துறையின் பெயரும் (ரோமர் 161), கொரிந்து சபையோடு தொடர்புடையவர்களாயிருந்த காயு மற்றும் ஏரஸ்து ஆகியோரின் பெயர்களும் (ரோமர் 16:23) காணப்படுகின்றன. இந்நிருபத்தைப் பவுல் தன்னுடைய மூன்றாவது மத்தியதரைக்கடல் பிரதேசத்திற்குச் செய்த பயணத்தின் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது (கி.பி. 56 களில்). இக்காலப்பகுதியிலேலே பவுல் எருசலேம் சபையில் வறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக சேர்த்த பணத்தோடு பாலஸ்தீனம் போகத் தயாராகிக்கொண்டிருந்தார் (ரோமர் 15:25). இந்த நிருபத்தை ரோமாபுரியில் இருந்த சபைக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பு பெபேயாளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது (ரோமர் 16:1, 2).
இந்நிருபத்தின் பின்னணியும், அமைப்பும்
ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், மிக முக்கிய நகரமாகவும் ரோமாபுரி இருந்தது. அது கி.மு. 753ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கு முன்பு இது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. டைபர் ஆற்றங்கரையையொட்டி, மத்தியத்தரைக் கடலில் இருந்து 15 மைல்கள் தூரத்தில் ரோமாபுரி இருந்தது. நகரின் அருகே இருந்த ஒஸ்டியா என்ற இடத்தில் கப்பல் துறை அமைக்கப்படுவதற்கு முன், 150 மைல்களுக்கு அப்பாலிருந்த பியூடியோலி (Puteoli) என்ற இடத்திலேயே ரோமாபுரியில் பிரதான கப்பற்துறை காணப்பட்டது. பவுலின் காலத்தில் ரோமாபுரியில் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர்; அவர்களில் பெரும்பாலானோர் அடிமைகள். ரோமில் இருந்தோர் நகரின் அருமையான கட்டடங்களான பேரரசனின் மாளிகை, மெக்ஸிமஸ் விளையாட்டுத் திடல் போன்றவற்றால் பெருமைபாராட்டி வந்தனர். இருந்தபோதும் நகரின் பெரும்பாலான மக்கள் வாழ்ந்த சேரிப்பகுதி அதன் அழகைக் கலங்கப்படுத்தியது. பாரம்பரியச் செய்திகளின்படி, நீரோவின் காலத்தில் நகருக்குப் புறம்பான பகுதியான ஒஸ்டியன் பாதையருகே பவுல் இரத்தப் பலி கொடுக்கப்பட்டார் (கி.பி. 54-68).
எருசலேமில் பெந்தகொஸ்தே தினத்தில் பேதுருவின் பிரசங்கத்தின் மூலமாக இரட்சிப்பை அடைந்தவர்கள் ரோமாபுரியில் இருக்கும் சபையை அமைத்திருக்கக்கூடும் (அப்போஸ்தலர் 2:10). ரோமாபுரிக்குப் போக வேண்டும் என்ற ஆவல் பவுலுக்கு அநேக காலம் இருந்தது. இருந்தபோதும் போகமுடியாதபடிப் பல தடைகள் ஏற்பட்டிருந்தன (ரோமர் 1:13). கர்த்தரின் பராமரிப்பினால், பவுலால் ரோமாபுரிக்குப் போகமுடியாதிருந்தபோதும் அவரால் எழுதப்பட்ட சுவிசேஷத்தின் அருமையான சத்தியங்களை விளக்கும் இந்த நிருபம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
பவுலின் போதனைகளை நேரடியாகக் கேட்கக்கூடிய ஆசீர்வாதத்தை அடைந்திருந்திராத ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவ சபையாருக்கு ஆழமான சுவிசேஷ சத்தியங்களை இந்நூலின் மூலம் விளக்கி எழுதுவதே பவுலின் முக்கிய நோக்கமாக இருந்தது. தனிப்பட்டவிதத்தில் பவுலை நேரில் சந்தித்திராத ரோம கிறிஸ்தவ சபையாருக்கு இந்நூல் பவுலை அறிமுகம் செய்து வைத்தது. ரோமாபுரிக்குத் தான் போகமுடியாதிருந்தபோதும்,
- இந்நிருபத்தின் மூலம் கிறிஸ்தவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் (ரோமர் 1:15),
- விசுவாசிகளுக்கு சத்தியப் போதனையளித்து ஊக்குவிப்பதும் (ரோமர் 1:13),
- ரோம கிறிஸ்தவ சபையாரோடு ஐக்கியத்தில் வருவதும், அவர்களால் தான் ஊக்குவிக்கப்படுவதும் (ரோமர் 1:13),
- அவர்களுக்காக ஜெபிப்பதுமே (ரோமர் 15:32)
- பவுலின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இவற்றோடு தான் ஸ்பானியாவுக்குப் போகப் போட்டிருக்கும் திட்டத்திற்கு அவர்கள் தனக்கு உதவியாக இருப்பதும் (ரோமர் 15:28) பவுலின் நோக்கமாக இருந்தது.
பவுல் ஏனைய சபைகளுக்கு எழுதியிருந்த நிருபங்களில் காணப்படுவதுபோல் (கொரிந்தியர், கலாத்தியர்) தவறான இறையியலைத் திருத்துவதோ, பக்தியற்ற தவறான வாழ்க்கையைச் சுட்டிக்காட்டித் திருத்துவதோ ரோமருக்குப் பவுல் எழுதிய நிருபத்தின் நோக்கமாக இருக்கவில்லை. ரோமாபுரியில் இருந்த சபை சரியான இறையியல் போதனைகளைக் கொண்டிருந்தது; இருந்தபோதும் எல்லாச் சபைகளையும்போல அவர்களுக்கும் ஆழமான சத்தியங்களும், நடைமுறைக்குத் தேவையான ஆலோசனைகளும் தேவைப்பட்டன. அவற்றை இந்நிருபம் அவர்களுக்கு அளித்தது.
நிருபத்தின் கருப்பொருள்
இந்நிருபம் பிரதானமாக இறையியல் அமைப்பைக் கொண்டிருப்பதால் இதில் அதிகமாக வரலாற்று விபரங்களைக் காணமுடியாது. அதில் பவுல் பழைய ஏற்பாட்டில் காணப்படும் நமக்குப் பரிச்சயமான முக்கிய மனிதர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
- ஆபிரகாம் (அதி. 4)
- தாவீது (4:6-8)
- ஆதாம் (5:12-21)
- ரெபேக்காள் (9:10)
- யாக்கோபுவும் ஈசாவும் (9:10-13)
- பாரோன் (9-11)
ஆகியோரைப் பவுல் இந்நிருபத்தில் உதாரணங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். அத்தோடு இஸ்ரவேலின் வரலாற்றையும் திரும்பிப் பார்த்து இதில் பவுல் விளக்கமளித்திருக்கிறார் (9-11). முதல் நூற்றாண்டு சபையின் தன்மையைப் பற்றியும், அதன் அங்கத்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் ஓரளவுக்கு நூலின் பதினாறாம் அதிகாரத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்நிருபத்தின் அடித்தளப் போதனையாக கர்த்தர் நமக்களிக்கும் நீதி காணப்படுகிறது; கர்த்தரே குற்றம் சாட்டப்பட்டு நிற்பவர்களுக்கு நீதிதேடித் தருகிறார்; தண்டனைக்குட்பட்டவர்களாக நிற்கும் பாவிகளை கிருபையின் மூலமாக, கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினூடாக நீதிமான்களாக்குகிறார். சமீபத்தில் ரோமர் பற்றி விளக்கமளித்திருக்கும் ஒரு இறையியல் போதகன் நீதிமானாக்குதல் ரோமரில் காணப்படும் பல்வேறு போதனைகளில் ஒன்று மட்டுமே என்றும், அது அதன் பிரதான போதனையல்ல என்றும் எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தவாதிகளே நீதிமானாக்குதல் ரோமரின் அடிப்படைப் போதனை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள் என்றும் விளக்கியிருந்தார். இந்த இறையியல் போதகனின் விளக்கம் முழுத் தவறானது. இதுபற்றி திருமறைத்தீப இதழில் நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலே ரோமர் நூலின் முக்கிய அடிப்படைப் போதனை. ஏனெனில் அதுவே இந்நூலின் பவுல் விளக்கும் சுவிசேஷம். அந்த சுவிசேஷமளிக்கும் நீதிமானாக்குதலால் நீதிமானாக்கப்பட்டவன் எத்தகைய வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையும் பவுல் இதில் விளக்குகிறார்.
பவுல் ரோமருக்கெழுதிய நூலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
- 1-11 வரையுள்ள அதிகாரங்கள் நீதிமானாக்குதலாகிய இறையியல் போதனையை விளக்குகின்றன.
- 12-16 வரையுள்ள அதிகாரங்கள் நீதிமான்களாக்கப்பட்ட தனிப்பட்டவர்களிலும், சபையிலும் அந்நீதிமானாக்குதலின் நடைமுறைத் தாக்கங்கள் இருக்கவேண்டிய விதத்தை விளக்குகின்றன.
இந்நூலில் பவுல் கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலம் நீதிமானாகுதலாகிய, நூலின் பிரதான தலைப்பின் அடிப்படையில் சில குறிப்பிட்ட இறையியல் போதனைகளையும் விளக்குகிறார்.
- 1:8-15 – ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்கள்
- 1:18-32 – பாவிகளாக நிற்கும் மானுடத்தின் மீதான கர்த்தரின் கோபம்
- 2:1-16 – தெய்வீக நியாயத்தீர்ப்பின் தத்துவங்கள்
- 3:9-20 – அனைத்துலகையும் பாதித்திருக்கும் பாவம்
- 3:21-4:25 – விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் போதனை பற்றிய விளக்கமும், அதை நிரூபிக்கும் வாதமும்
- 5:1-11 – இரட்சிப்பின் பாதுகாப்பு
- 5:12-21 – ஆதாமின் பாவம் முழுமானுடத்தையும் பாதித்திருக்கும் போதனை
- 6-8 – பரிசுத்தமாக்குதல்
- 9 – இறையாண்மையுள்ள தெரிந்துகொள்ளுதல்
- 11 – இஸ்ரவேலருக்கான கர்த்தரின் திட்டம்
- 12 – ஆவிக்குரிய ஈவுகளும், நடைமுறை பக்திவிருத்தியும்
- 13 – இவ்வுலக அரசோடு தொடர்புடைய விசுவாசிகளில் பொறுப்புகள்
- 14:1-15:12 – கிறிஸ்தவ சுதந்திரம் பற்றிய தத்துவங்கள்
நூலின் சிக்கலான பகுதிகள்
புதிய ஏற்பாட்டின் முக்கிய இறையியல் போதனையை சுமந்து காணப்படும் பவுல் ரோமாபுரிச் சபைக்கெழுதிய நிருபம் சில சிக்கலான பகுதிகளையும் சுமந்து நிற்கிறது. 5ம் அதிகாரத்தில் விளக்கப்பட்டிருக்கும் மனுக்குலத்தைப் பாதித்து அதில் தொடர்கின்ற பாவம் மிகவும் ஆழமானதும், முழு வேதத்திலும் மிகமுக்கியமான இறையியல் போதனையாக இருக்கின்றது. ஆதாமோடு மனுக்குலத்திற்கு இருக்கும் தொடர்பும், ஆதாமின் பாவம் அனைத்து மனுக்குலத்தையும் பாதித்திருக்கும் போதனை தொடர்ந்தும் வாதிக்கப்பட்டு வருகின்ற இறையியல் போதனை. வேதக் கிறிஸ்தவர்களில் சிலர் ரோமர் 7:7-25 வரையுள்ள பகுதியில் பவுல் தன்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தை விளக்குகிறாரா அல்லது கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன் தானிருந்த நிலையை விளக்குகிறாரா? அல்லது அது எந்த வரலாற்று அனுபவத்தையும் கொண்டிராத, பவுல் பயன்படுத்துகிற ஒரு இலக்கிய வகையா என்ற விவாதங்களும் இன்றும் தொடர்கின்றன. அத்தோடு இதோடு நெருக்கமான போதனைகளான கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலையும் (ரோமர் 8:28-30), கர்த்தரின் இறையாண்மையையும் (ரோமர் 9:6-29) அநேக கிறிஸ்தவர்கள் விளங்கிக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். இன்னுமொரு கேள்வி ரோமர் 9-11 வரையுள்ள அதிகாரங்கள் இஸ்ரவேல் தேசத்திற்காகக் கர்த்தர் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறாரா? என்பது. சிலர் மானுட அரசாங்கங்களுக்கு விசுவாசிகள் கீழ்ப்படிய வேண்டுமென்ற (13:1-7) பவுலின் போதனையை உதாசீனப்படுத்துகிறார்கள்; இவர்களில் சிலர் கிறிஸ்தவ செயலாற்றல் (Christian activism) என்ற பெயரில் இப்போதனையை நிராகரிக்கிறார்கள். ஏனையோர் இதைப் பயன்படுத்தி மோசமான சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும் கிறிஸ்தவர்கள் பணிந்து நடக்கவேண்டும் என்று விளக்குகிறார்கள்.
பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கூற்று, ரோமர் 1:16-17 ஆகியவையே முழு நூலுக்கும் ஆதாரமாக இருந்து அதன் போதனைகளுக்கு வழிநடத்துகின்றன என்பது. இவற்றிலேயே நாம் நூலின் பிரதான போதனையான விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் என்ற தத்துவத்தைக் காண்கிறோம்.
ரோமர் 1:16-17
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்தப் போதனையையே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் மிகவும் ஆற்றலோடு அருமையாக விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் இதையே நம்முன் வைக்கிறது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் பாவத்தைத் தன்னில் உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டபோது ரோமரின் இந்த வசனங்களே அவருக்குக் கைகொடுத்து கிறிஸ்துவை நோக்கி வழிகாட்டின. கத்தோலிக்க சபைக்கு விசுவாசமாக இருந்து அது விளக்கும் கிரியைகளைச் செய்வதின் மூலமே இரட்சிப்பு மனிதனுக்குக் கிடைக்கிறதென்று ரோமன் கத்தோலிக்க மதம் போதித்தது. லூத்தர் அதைக் கடுமையாக எதிர்த்தார். அவர், விசுவாசத்தின் மூலம் மட்டுமே பாவி நீதிமானாக்கப்படுகிறான் என்பதை இவ்வசனங்களில் இருந்து அறிந்து அதை ஆணித்தரமாக நம்பினார். இதில் 17ம் வசனத்தை லூத்தர் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்தபோது அதை “விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமான் பிழைப்பான்” என்று மொழிபெயர்த்தார். அவர் ”மட்டுமே” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அதன் மூலம் அவர் ஆணித்தரமாக எந்தவொரு கிரியையின் மூலமாகவும் எவரும் இரட்சிப்பை அடைய முடியாது, தேவநீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்த முயன்றார். ஆரம்பம் முதல் முடிவுவரை விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு. இந்த “மட்டுமே” என்ற வார்த்தையே பின்னால் சீர்திருத்தப் போதனைகளில் அவசியத்தின் காரணமாகப் பயன்படுத்தப்பட்டன. அதாவது கிருபை மட்டுமே, விசுவாசம் மட்டுமே, கிறிஸ்து மட்டுமே என்ற வார்த்தைப் பிரயோகங்களில் “மட்டுமே” என்பது இணைந்து வருவதற்குக் காரணம், எந்தவித மானுடக்கிரியைகளோடும் இவற்றை இணைக்கக்கூடாது என்பதற்காகத்தான்.
ரோமருக்கான இந்த அறிமுகத்தை வாசிக்கின்ற அன்பான வாசகர்களே!
- உங்களுடைய விசுவாசம் எதில் தங்கியிருக்கிறது?
- உங்களுடைய சொந்தக் கிரியைகளிலா அல்லது கிறிஸ்துவில் மட்டுமா?
- யாரோ ஒரு பிரசங்கி உங்கள் நோயைக் குணப்படுத்தினார் என்பதற்காக நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் அது வேதத்தில் காணப்படாத ஒரு செயல் என்பதை நீங்கள் அறிவீர்களா?
- உங்கள் நம்பிக்கை நோய் குணப்படுத்தப்பட்டதிலோ, ஞானஸ்நானத்திலோ அல்லது ஒரு பிரசங்கியிலோ அல்லது வேறெதன் மீதிலோ தங்கியிருக்குமானால் உங்கள் விசுவாசம் சந்தேகத்துக்குரியது தெரியுமா?
எந்தவொரு உலக நன்மைக்காகவும் நீங்கள் இயேசுவிடத்தில் வந்திருந்தால் அதற்குப் பெயர் கிறிஸ்தவ விசுவாசமல்ல. எந்தக் கிரியையிலும் தங்கியிராமல், சுயத்திலும் தங்கியிராமல் வெறும் பிச்சைக்காரனைப்போல உங்கள் பாவத்தை உணர்ந்து, அதற்காக வருந்தி, அதை வெறுத்து, அதற்குப் பரிகாரம் செய்திருக்கிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்று அவர் மீது மட்டும் நீங்கள் விசுவாசம் கொண்டு அவரை அரவணைத்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் கர்த்தர் முன் நீதிமானாவீர்கள்; இரட்சிப்பைக் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்.
ஏறிய கட்டிலிலிருந்து இறங்காமல் போனவன்
இந்த ஆக்கத்தில் இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தை நாம் ஆராயப் போகிறோம். தமிழ் வேதத்தில், பழைய ஏற்பாட்டில், முதலாவது இராஜாக்கள், இரண்டாவது இராஜாக்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மூல மொழியான எபிரெய வேதத்தில் இது ஒரே நூலாகத்தான் காணப்படுகிறது. சில நடைமுறை காரணங்களுக்காக பிற்காலங்களில் அதை இரண்டு பிரிவுகளாகப் பிரித்திருக்கலாம். இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தைப் பார்க்கிறபொழுது எலியா தீர்க்கதரிசியினுடைய ஊழியத்தின் கடைசிக் காலப் பகுதியை அதில் வாசிக்கிறோம். இதன் மூலம் முதலாவது இராஜாக்கள் நூல் இரண்டு இராஜாக்களில் தொடருகிறதைத்தான் இதில் நாம் கவனிக்கிறோம்.
முதலாவது வசனத்தில், “ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.” (2 இராஜாக்கள் 1:1) என்று எழுதப்பட்டிருக்கின்றது. இந்த மோவாபியர் தாவீதின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேலுக்குக் கீழாகக் கொண்டுவரப்பட்டவர்கள். அவ்வாறு கொண்டுவரப்பட இவர்கள் இவ்வளவு காலம் வரைக்கும் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் ஒன்றாக இருந்தார்கள். அவர்கள் ஒரு தனி நாடாகப் பிரிவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால், இப்போது அவர்களுக்கு அத்தகைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டு இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம் பண்ணிப் பிரிந்து போனார்கள். அவர்கள் அவ்வாறு பிரிந்து போனதற்குக் காரணம் என்ன? முதலாவது வசனம் அதிரடியாக அதை நமக்கு விளக்குகிறது, “ஆகாப் மரணமடைந்தான்.” இது ஒரு தினப்பத்திரிக்கையில் கொட்டை எழுத்தில் தலைப்பு வருகிற மாதிரியான ஒரு செய்தியாகும். அந்தக் காலத்தில் இஸ்ரவேலில் உள்ளவர்களுக்கும், தேவனுடைய மக்களுக்கும் இது ஒரு பெரிய சமாதானத்தைக் கொடுத்திருக்கும். ஏனெனில் ஆகாப் ஒரு சாதாரணமான மனிதனல்ல. அவனைப் பற்றி 1 இராஜாக்கள் புத்தகத்தில் வாசித்துப் பார்த்தால்தான் எத்தனை மோசமானவன் என்பது உங்களுக்கே தெரியவரும்.
ஐரோப்பாவில் இரண்டாவது உலகப்போர்க் காலப் பகுதியில் ஜெர்மனியை ஆண்டு வந்தவன் ஹிட்லர். அந்த உலகப்போர் முடிவுக்கு வந்தபோது ஹிட்லர் மரணமடைந்தான் என்ற ஒரு செய்தி ஐரோப்பாவில் இருந்த மக்களுக்கு எந்தவிதமான சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் விடிய விடிய ஒரு விருந்து வைத்துக் கொண்டாடி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஏனென்றால் ஹிட்லர் அந்த அளவுக்கு ஒரு கொடுமைக்காரனாக இருந்தான். இங்கு ஹிட்லருடைய பெயரை நான் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஆகாப் இஸ்ரவேலில் அப்படிப்பட்ட ஒரு கொடுமைக்கார அரசனாக இருந்திருக்கிறான். அவனுடைய அரண்மனைக்குப் பக்கத்தில் நாபோத்துக்குச் சொந்தமான ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை அவனிடமிருந்து அபகரிப்பதற்காக இவன் செய்த அநியாயத்தையெல்லாம் 1 இராஜாக்கள் புத்தகத்தில் வாசிக்கலாம். ஆகாபின் மனைவி யேசபேல் மிகவும் மோசமானவள். யேசபேல் என்ற பெயருக்கான பொருளை அகராதியில் நீங்கள் பார்த்தால் ஒழுக்கங்கெட்டவள் என்பதைக் காண முடியும். அவள் மோசமான ஒரு நபருக்கு இலக்கணமாக இருந்தாள். அத்தனை மோசமானவளைத் தன் மனைவியாகக் கொண்டு ஆகாப் இஸ்ரவேலை ஆண்டு நாட்டை அழிவுப் பாதையில் வழி நடத்தினான். அவன் மிகவும் கொடுமைக்காரனும் சுயநலமானவனுமாக இருந்தான். அவனைப் பற்றி 1 இராஜாக்கள் 16:29-34 நீங்கள் வாசித்துப் பார்த்தால் எந்தளவுக்கு பாகாலுக்கு ஆராதனை செய்கிற வழக்கத்தை நாட்டில் தீவிரமாகவும் அதிரடியாகவும் பரப்பினான் என்பதை வாசிக்க முடியும். அதுமட்டுமல்ல 1 இராஜாக்கள் 21 வது அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால் நாட்டில் அநியாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான் என்பதைக் கவனிக்க முடியும். 1 இராஜாக்கள் 22ல், அவன் வேதத்திற்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்த ஒரு அரசனாக இருந்தான் என்பதைப் பார்க்க முடியும். இவ்வித சூழ்நிலையில் ஆகாப் மரணமடைந்தான் என்ற செய்தி வருகிறபோது அது தேவனுடைய மக்களுக்கு எத்தனை பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
வேதம் இந்தவிதமான முக்கியமான காரியத்தை அறிவிக்கும் விதமே விநோதமானது. ஆகாப் மரணமடைந்தான் என்ற நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக ஒரு கெட்ட செய்தியும் வருகிறது. இரண்டாவது வசனத்தில், ஆகாப்பின் மகனான அகசியாவின் பெயரை வாசிக்கிறோம். ஆகாப் போய்விட்டான் என்பதை அறிந்து ஆனந்தப்படுவதற்குள் அவனுடைய மகனுடைய பெயர் வருகிறது. நாம் வழக்குச் சொல்லாகப் பயன்படுத்துகின்ற, “தகப்பனைப் போலப் பிள்ளை” என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு மிகவும் பொருத்தமானவன் இந்த அகசியா. ஆகாப் எப்படி இருந்தானோ அப்படியே இந்த அகசியாவும் இருந்தான். ஆகவே ஆகாப் போய்விட்டான் என்று மக்களால் சிறிது நேரம் கொண்டாடக் கூட முடியவில்லை. அகசியாவை “ஜூனியர் ஆகாப்” அல்லது “சின்ன ஆகாப்” என்று நாம் அழைத்தாலும் அது மிகையாகாது. அந்தவிதமாகத் தகப்பனைப் போலக் கொடுமைக்காரனாக இருந்தவன்தான் இந்த அகசியா. இவன் ஆகாபிற்குப் பின் இஸ்ரவேலின் அரசனாக வந்துவிட்டான். இது கி.மு. 852 ஆம் வருடம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வைத்தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த 2 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மிகவும் அருமையான ஆச்சரியமான அதிகாரமாக இருக்கிறது. 1 இராஜாக்கள் புத்தகத்தில் எலியாவின் ஊழியம் எவ்வாறு அதிரடியாக ஆரம்பித்ததோ அதேவிதமாக அந்த ஊழியம் அதிரடியாக முடிவடைவதை இந்த முதலாம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். எலியாவின் ஊழியத்தின் முடிவும் மிகவும் அசாதாரணமாகத்தான் (Extraordinary) இருக்கிறது.
இந்த அதிகாரத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
- 1-8 வசனங்கள் ஒரு பிரிவாகவும்,
- 9-12 வசனங்கள் ஒரு பிரிவாகவும்,
- 13-18 வசனங்கள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கலாம்.
இந்த மூன்று பிரிவுகளையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
முதலாவதாக 1-8 வசனங்கள்: சிலை வழிப்பாட்டிற்கு எதிரான கர்த்தரின் உக்கிரமான கோபம்
இந்த முதலாவது அதிகாரம் ஆகாபின் மரணத்தை அறிவித்துவிட்டு அவனுடைய மகன் அரசனாக வந்ததை விவரிக்கிறது. ஆனால் முதல் எட்டு வசனங்களை வாசிக்கிறபோது அகசியா ராஜாவாக வந்தவுடனே அவனுடைய வாழ்க்கையில் பயங்கரமான பிரச்சனையைச் சந்திப்பதை நாம் பார்க்கிறோம். அது எவ்வாறு நடந்தது என்பதை வேதம் நமக்கு விளக்கவில்லை. இரண்டாவது வசனத்தில்,
“அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு” (1 இராஜாக்கள் 2:1) என்று நமக்குச் சொல்லுகிறது.
இது அவனுடைய ஆட்சியும் வாழ்நாளும் அதிக நாட்களுக்கு இருக்கப் போவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. அகசியா அரண்மனையின் இரண்டாவது மாடியிலிருந்து கிராதியின் வழியாக, அதாவது மாடியில் தடுப்பைப் போலக் காணப்பட்ட பகுதியில் சாய்ந்து கொண்டிருந்தானோ அல்லது அது பழுதடைந்திருந்ததோ நமக்குத் தெரியவில்லை, அதிலிருந்து அவன் கீழே விழுந்துவிட்டான். அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அது சாதாரணமான அடியாக இருக்காது. அவன் அடிபட்டு உயிர் போகிற நிலையில் படுக்கையில் கிடக்கிறான். அதை அவனே, “இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா” என்று சொல்லுகிறான். நமக்கு சாதாரணமான ஒரு காய்ச்சல் வந்தால் நாம் அது குணமாகிப் பிழைப்போமா என்றளவுக்கு யோசிக்க மாட்டோம். ஆனால் அதுவே கொரோனா வைரஸினால் ஏற்படும் காய்ச்சலாக இருந்தால் நிச்சயம் யோசிப்போம், ஏனென்றால் அது அநேகரை மரணத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. அதுபோல இவன் மாடியிலிருந்து விழுந்ததனால் தான் பிழைக்கப்போகிறேனா அல்லது இறந்துவிடுவேனா என்கிற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. அதைத்தான் இரண்டாவது வசனம் சொல்லுகிறது.
அகசியா இங்கு ஒரு பெரிய தவற்றைச் செய்கிறான். 72 கி.மீ தொலைவிலுள்ள பெலிஸ்தியாவிலுள்ள எக்ரோன் என்கிற இடத்தில் பாகாலுக்கு சிலை வழிபாடு நடைபெற்றது. புறஜாதியார் வழிபட்டு வந்த அந்த சிலைக்குப் பெயர் பாகால்சேபூ ஆகும். இவன் தகப்பன் அதிகமாக வழிபட்டு வந்த அந்த சிலையினிடம் தான் பிழைப்பேனோ என்று கேட்டு வரும்படியாகத் தன் ஆட்களை அனுப்புகிறான். உயிர்போகும் நிலையில் இருக்கும் அந்த நேரத்திலேயும் கூட அவன் தன் சிலை வழிபாட்டை விடவில்லை. அவன் தகப்பன் ஆகாப் நாட்டிலுள்ள எல்லோரையும் அந்த சிலையை ஆராதிக்கும்படியாகப் பழக்கி வைத்திருந்தான். அந்தப் பழக்கம் இவனை விட்டும் போகவில்லை. ஆகவே இந்த அகசியா இவ்வாறு செய்ததைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. 1 இராஜாக்கள் 16:29-34 வாசித்துப் பார்க்கிறபோது யெரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேலையும் எப்படிப் பாவத்தில் வழிநடத்தினானோ அதேபோல் ஆகாபும் நடந்தான் என்பதைப் பார்க்கிறோம். யெரொபெயாம் தாணிலும் பெத்தேலிலும் கோயில் கட்டி மக்கள் எருசலேம் சென்று ஆராதிக்க முடியாதபடி செய்து பாகால் வணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருந்தான். அவனுடைய வழியை அப்படியே பின்பற்றி வந்தவன்தான் இந்த ஆகாப். ஆகாபின் வழியில் ஊறித் திளைத்து ஆட்சிக்கு வந்தவன்தான் அவனுடைய மகன் அகசியா.
அன்பான வாசகர்களே! நீங்கள் ஆண்டவரை வணங்காமல் புறஜாதி தெய்வங்களையும் விக்கிரகங்களையும் வணங்கி வந்தீர்களானால் அது உங்கள் சந்ததியைப் பாதிக்கும். ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் அதிரடியாக இடைப்படாத வரை, உங்களைப் போலவே உங்களை பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் தவறான வழிகளில் நடந்து கேடானவர்களாகத்தான் வாழ்ந்து வருவார்கள். ஆகவே சிலை வணக்கத்தையும் புறஜாதி பழக்க வழக்கங்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஏதோ சாதாரணமாக புறத்தில் வழிபடுகிற வாழிபாடு மட்டுமல்ல, அதோடு சேர்ந்து வருகிற அநேக பாவங்கள் உள்ளன. அது நம் இருதயத்தையும் மனத்தையும் பாதித்து நமது வாழ்க்கையைத் தவறான வழியில் கொண்டு போய்விடும். ஆகவேதான் இந்த அகசியாவின் வாழ்க்கையில் சாகிற நேரத்திலும் அவனுக்குப் புத்தி சரியாக இருக்கவில்லை. அவன் பாகால்சேபூவினிடத்தில் சென்று தான் பிழைப்பானா என்று விசாரித்து வரும்படித் தனது ஆட்களை அனுப்பினான்.
இஸ்ரவேலை உருவாக்கின தேவன் இதைப் பார்த்தும் குருடனைப்போல் இருப்பாரா? எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்? அவர் இஸ்ரவேலை உருவாக்கியதற்குக் காரணமே அந்த நாட்டின் மூலமாகத் தனது மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். முழு உலகத்திற்கும் சுவிசேஷம் சென்றடைவதற்காக அதை ஏற்படுத்தின தேவன் எப்படி அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்? அவர்தானே நாடுகளுக்கும் உலகத்திற்கும் தேவனாக இருக்கிறார். தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக உருவாக்கின ஒரு நாட்டினுடைய அரசன் இப்படி நடந்துகொள்ளுவது அவரை மிகவும் கோபப்பட வைத்தது. எந்நேரத்தில் அகசியா தனது ஆட்களை விசாரித்து வரும்படி அனுப்பினானோ அதே நேரத்தில் திஸ்பியனாகிய எலியாவினிடத்தில் ஆண்டவர் பேசுகிறார்.
“கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?” (2 இராஜாக்கள் 1:3) என்று கேட்கும்படிச் சொன்னார்.
இந்த வசனத்தில் “இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா” என்ற வார்த்தையை நன்றாகக் கவனியுங்கள். ஆண்டவர் மிகவும் கோபமாக, ஜீவனுள்ள தேவனாக நான் இருக்கிறேன், என்னுடைய நாடாக இஸ்ரவேல் இருக்கிறது, இந்நாட்டின் மூலமாக என்னுடைய திட்டங்களையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன், அப்படியிருந்தும் இந்த இஸ்ரவேலில் நான் இல்லையென்று நினைத்துக் கொண்டு, எந்தவிதத்திலும் எனக்கு மதிப்புக் கொடுக்காமல், என்னை உதாசீனப்படுத்தி எப்படி நீ இதைச் செய்யலாம் என்று கேட்கிறார். மேலும் நான்காவது வசனத்தில்,
“இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.” (2 இராஜாக்கள் 1:3) என்றிருக்கிறது.
ஆண்டவரை மீறி நாம் நடப்பது எந்தவிதத்திலும் நமக்குப் பலனளிக்காது.
கிறிஸ்தவர்களுக்கு இதிலொரு பாடமிருக்கிறது, சிலர் மாமிச பெலவீனங்களுக்கு இடங்கொடுத்து ஆண்டவருடைய வார்த்தையை மீறிச் செயல்படுவார்கள். உங்களைப் புறஜாதி மதத்திலிருந்து வெளியே கொண்டுவந்து மிக அருமையான இரட்சிப்பைக் கொடுத்து, அருமையான சபையைக் கொடுத்து, நல்ல போதனைகளை ஆண்டவர் கொடுத்திருக்கலாம். ஆனால் மனித பெலவீனத்தினாலே கோபப்பட்டுக் கொண்டு சபையைவிட்டுப் போவது என்பது அசிங்கமான செயலாகும். (இங்கு வேதப்படி நடந்துவருகின்ற சபைகளைக் குறித்து மட்டுமே சொல்லுகிறேன்) ஆண்டவர் இத்தனை நாட்களும் அழகாக நடத்தி வந்து உங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையெல்லாம் சிறிதும் இருதயத்தில் சிந்தித்துப் பார்க்காமல் அவ்வாறு சபையைவிட்டுப் போவதென்பது, இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள் என்று ஆண்டவர் கேட்கும்படிச் செய்யும். ஆண்டவர் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் பிரச்சனைகளை அனுமதிக்கலாம், தொழிலில் நஷ்டத்தை அனுமதிக்கலாம், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இவையெல்லாம் நம் வாழ்க்கையில் ஏற்படாது என்று ஆண்டவர் சொல்லவில்லையே. அதையெல்லாம் சரி செய்து கொள்ளுவதற்கு ஆண்டவர் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிற வழிகளுக்கு இடங்கொடுக்காமல் இருதயம் கடினப்பட்டுப் போய் சபைக்குப் போகாமல் வீட்டிலிலேயே இருந்து விடுவதையும், போதகரை உதாசீனப்படுத்துவதையும் பார்த்து ஆண்டவர் உங்களை சும்மா விட்டுவிடுவார் என்று நினைக்கிறீர்களா? இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா என்று ஆண்டவர் சொன்னது போல அந்த இரட்சிப்பைக் கொடுத்த தேவன் நம்மை சிட்சை செய்யாமல் இருக்கப் போவதில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு, பேச முடியாமல், இருதயம் இல்லாமல் கல்லாக இருக்கிற வெறும் சிலை அல்ல. அவர் கடவுள். அவர் ஜீவனுள்ள தேவன் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே ஆண்டவர் இங்கு அகசியா அரசனைக் குறித்து நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று சொல்லுகிறார்.
மூன்றாவது வசனத்தில் கர்த்தருடைய தூதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கில வேதத்தில் இதை “The angel of the LORD” என்று வாசிக்கிறோம். இது ஒரு முக்கியமான வார்த்தைப் பிரயோகமாகும். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனித உருவில் பிறப்பதற்கு முன்பு அவரைக் குறித்து பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகம். இந்த இடத்தில் வந்தது யாரென்றால், Preincarnate Son of God. அதாவது இயேசு இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பாக ஜீவனுள்ள தேவனாக இருந்து நடமாடியவர்தான் கர்த்தருடைய தூதன் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாம் அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு இல்லையென்று சிலர் வேதம் தெரியாமல் முட்டாள்தனமாகப் பேசி வருகிறார்கள். பழைய ஏற்பாட்டின் கர்த்தர்தான் புதிய ஏற்பாட்டின் தேவனாக இருக்கிறார். இப்போது நாம் ஆராதிக்கிற ஆண்டவர்தான் பழைய ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறார்.
அகசியா இங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தான். அவனுக்கே தான் பிழைப்பேன் என்கிற நம்பிக்கை இல்லை. இவ்வளவு மோசமாக இருந்தபொழுதும் தெய்வமாக இல்லாத ஒரு கல்லினிடம் ஆட்களை அனுப்புகிறான். அந்த ஆட்களிடம் கர்த்தர் சொன்னதை எலியா சொல்லுகிறான். அவர்கள் திரும்பி அகசியாவிடம் போகிறார்கள். ராஜாவின் ஆட்களிடம் எலியா பேசின காரியத்தை விவரமாக வேதம் நமக்குச் சொல்லவில்லை. அந்த ஆட்கள் திரும்பி வந்தவுடன் அகசியா, தான் சொன்ன வேலையை அவர்கள் செய்து முடிக்கவில்லை என்று அறிந்து கொண்டான். ஐந்தாவது வசனத்தில்
“அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.” (2 இராஜாக்கள் 1:5) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சொன்ன காரியத்தைச் செய்யாமல் ஏன் இப்படி திரும்பி வந்தீர்கள்? உங்களைத் தடை செய்தது யார்? என்று காரணத்தை அறிந்துகொள்ள கேட்கிறான். அந்த ஆட்கள் ஆறாவது வசனத்தில்
“ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான்” (2 இராஜாக்கள் 1:6) என்று சொன்னார்கள்.
இப்படி அவர்கள் சொன்ன பிறகு, அகசியா அந்த ஆட்களிடம் அவன் எப்படிப்பட்டவன் என்று கேட்கிறான். அதாவது அவன் உருவம் எப்படி இருந்தது என்று கேட்கிறான்.
“அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்” (2 இராஜாக்கள் 1:8).
இவ்வாறு அவர்கள் சொன்னவுடன் அவனுக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து, அது யாரென்று அறிந்து கொண்டான். ஏனென்றால் எலியா அந்நாட்களில் மிகவும் பிரபலமான தீர்க்கதரிசியாக இருந்தார். இதைக் கேட்டவுடனே அகசியா மிகவும் கோபமடைந்திருப்பான். இருந்தாலும் அவனால் எந்தவித சாக்குப்போக்கும் சொல்ல முடியாதபடி அவனுடைய செயல் இருந்தது. சாகும் நிலையில் இருக்கிறபோது வெறுங் கல்லை அணுகி உதவி கேட்கப் போகவேண்டுமா? அவனுடைய தகப்பன் அதை வணங்கியிருந்தாலும் தானே அதை வழிபட்டு வந்தாலும் அவனால் எவ்வித சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதுபோன்ற போலித் தெய்வங்களை வழிபட்டு வருவதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை 1 இராஜாக்கள் புத்தகம் தெளிவாகச் சொல்லுகிறது.
தன் தகப்பனுடைய காலத்தில் நடந்த நிகழ்வையெல்லாம் அகசியா மறந்திருக்க முடியாது. கர்மேல் மலையின்மேல் நடந்த சம்பவத்தை அவன் எப்படி மறந்திருக்க முடியும்? அங்கு ஆண்டவர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி பாகால் ஆராதனையை அடியோடு அழித்தார். இதை அவன் மறந்திருக்க முடியுமா? ஆகவே ஒரு ஜீவனுள்ள தேவன் இருப்பதையே உதாசீனப்படுத்தி மறுபடியும் பாகால்சேபூவிடம் போவது எவ்வளவு கொடுமையான காரியம். இறையாண்மையுள்ள தேவன் இதைப் பொறுத்துக் கொண்டிருப்பாரா? ஆண்டவருக்கு நீடிய பொறுமை இருக்கிறது. ஆனால் நம்முடைய சிந்தனைகளாலும், செயல்களாலும் அந்தப் பொறுமையை நாம் சோதிக்கக் கூடாது. இங்கு அகசியா அவருடைய இறையாண்மையை சோதிக்கிறான். அப்பாவைப்போல சிலை வழிபாட்டை அழிக்காமல் அதைத் தொடருகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறான். கர்த்தரை நம்பாமலும் மனந்திரும்பாமலும் தொடர்ந்து அவன் தகப்பனின் வழியில் போகிறதை நாம் இங்கு பார்க்கிறோம். சாகிற நேரத்திலாவது புத்தி வரதா என்று நம்மவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் அது வராது. இவனிடம் அதைப் பார்க்க முடியவில்லையே. உயிர் போயிடுமா என்கிற சந்தேகம் அவனுக்கிருந்தது. ஆனால் அவனுக்குப் புத்தி வரவில்லை. அது எல்லோருக்கும் வந்துவிடாது. ஏன் தெரியுமா? மனிதன் தன் வாழ்க்கையில் எது நடந்தாலும் சுயமாக இருதயத்திலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவே மாட்டான். அதற்குக் காரணம் அவனைப் பிடித்திருக்கிற பாவம். அதை அவனால் மாற்றிக்கொள்ள முடியாது. பாவத்தின் இயல்பே அது தன் வழியில் தொடர்ந்து போவதுதான். ஆகவே நாம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கொடுமையான சம்பவம் நடந்தால் அவன் சுலபமாக மனந்திரும்பி விடுவான் என்று நினைக்கக்கூடாது. ஒரு மனிதன் மனந்திரும்புகிறான் என்றால் அது அவனுடைய சுயத்தினால் நடைபெறுவதல்ல, பரிசுத்த ஆவியினால் நடைபெறுவதாகும். ஆண்டவர் ஒரு மனிதனை மாற்றினால் தவிர அவன் தன்னை மாற்றிக்கொள்ள முடியாது. வேறெந்த மனிதனும் அவன் மாறுவதற்கு உதவி செய்யவும் முடியாது.
அகசியாவின் இருதயம் பாவத்தினால் நிறைந்திருந்தது. ஆகவேதான் அவன் மரண நிலையிலும்கூட மனந்திரும்பவில்லை. அவன் பாகால்சேபூவின் உதவியை நாடிப் போகிறான். ஆண்டவர் அதைப் பார்த்து பொறுமையாக இருப்பாரா? அவர் நீடிய பொறுமையும், அன்பும், கிருபையும் கொண்டவராக இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அது உண்மைதான் என்றாலும் அவருடைய முழுமையான தன்மையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் எந்தளவுக்குக் கிருபையுள்ளவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவர் பாவத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவனாகவும் இருக்கிறார். சத்தியத்திலிருந்து விலகி ஓடுவதை அவர் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். அவர் இருப்பதை இல்லையென்று மறுப்பதை அவர் சகித்துக்கொள்ள மாட்டார். தான் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறபோது இல்லாத ஒன்றுக்கு இருதயத்தில் இடங்கொடுப்பதை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். தன்னுடைய நாடான இஸ்ரவேல் போலி தெய்வமான பாகால்சேபூ வழியில் போவதை எப்படிப் பொறுத்துக்கொள்ளுவார்? இங்கு அகசியா மிகப் பெரிய தவற்றைச் செய்கிறான். இதனை நாம் சாதாரணத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சில கொடுமைக்காரர்கள் சாகிற நிலையிலும் ஏதாவது தீங்கைச் செய்துவிட்டுப் போய்விடலாம் என்று எண்ணுவார்கள். அதுபோலவே இவனும் நடந்துகொள்ளுகிறான். ஆனால் ஆண்டவர் அவனை விட்டுவிடவில்லை. “இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய்” என்று சொன்னார். அதாவது உனக்கு நடந்த இந்தக் காரியத்திலிருந்து நீ மீளவே முடியாது என்று சொன்னார்.
இதை வாசிக்கிற நேரம் கர்த்தர் இப்படியெல்லாம் செய்யலாமா என்று நாம் யோசிப்போம். இதெல்லாம் மிகவும் மோசமான காரியமாக இருக்கிறதே, கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறதே என்று சிந்திக்கலாம். ஆனால் இந்த உலகத்து மக்கள் அப்படித்தான் ஆண்டவரைப் பற்றி சிந்திப்பார்கள். அன்புள்ள ஆண்டவர் எப்படி இவ்வாறு நடந்துகொள்ளலாம் என்றுதான் நினைப்பார்கள். ஏனென்றால் உலகத்துக்கு எப்படிப்பட்ட ஆண்டவர் தேவையாக இருக்கிறார்? அவர்களுடைய தேவைகளையெல்லாம் சந்தித்து, கேட்கிற நேரமெல்லாம் வேலைக்காரனைப் போல அவர்களுக்குப் பணி செய்தால் அவர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். இப்படியெல்லாம் ஜீவனுள்ள ஆண்டவரை நாம் துளியும் நினைத்துப் பார்க்கக்கூடாது. இங்கு நாம் யாரைக் குறித்துப் படிக்கிறோம்? இஸ்ரவேலின் தேவன், ஜீவனுள்ள, அன்புள்ள, மகா கிருபையுள்ள, நீடிய பொறுமையுள்ள, பரிசுத்தமான தேவனாக அவர் இருக்கிறார். இருந்தபோதும் தன்னை நிராகரித்து உதாசீனப்படுத்தி பாவ வழிகளில் போவதை பார்த்துக்கொண்டிராத தேவனாகவும் அவர் இருக்கிறார். எரிச்சலுள்ள தேவன் என்று வேதம் அவரைக் குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறது. அவர் பாவத்தை வெறுப்பது மட்டுமல்ல, அந்த பாவத்தின் வழியில் தொடர்ந்து போகிற பாவிகளையும் வெறுக்கிறார் அழிக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறது. இங்கு அகசியா தேவனுக்கு எதிராக பாகால்சேபூவைப் பின்பற்றி பாவம் செய்தான்.
அகசியா இங்கு பத்துக்கட்டளைகளில் முதலாவது கட்டளையை அடியோடு மீறி எதிர்த்து நிற்கிறான்.
“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” (யாத்திராகமம் 20:3).
நான் மட்டுமே ஒரே ஜீவனுள்ள தேவனாக இருப்பதனாலே என்னைவிட்டு இன்னொரு தெய்வத்தின் வழியிலே போகாதீர்கள் என்கிறார். நான் சொல்லுகிறபடி என்னை வழிபட்டு எனக்காக நீங்கள் வாழவேண்டும், அந்த இடத்திலே நீங்கள் யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறார். உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை மட்டுமே ஆராதித்து எனக்கே சிறப்புரிமையைக் கொடுக்க வேண்டும் என்று முதலாவது கட்டளையில் சொல்லுகிறார். அதை அகசியா ராஜா முற்றிலும் மீறியதால் அப்படியான தண்டனையைக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டின் ஆண்டவர்தான் எல்லாரையும் தண்டிப்பார், புதிய ஏற்பாட்டின் ஆண்டவர் நாம் என்ன செய்தாலும் அன்பாகவே இருப்பார், எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுவார் என்று மிகவும் தவறாகப் பலர் எண்ணுகிறார்கள். மாற்கு எழுதின சுவிசேஷத்தில் ஒருவன் ஆண்டவரிடத்தில் வந்து இரட்சிப்படைய என்ன வழி என்று கேட்டான்.
“இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.” (மாற்கு 10:21-22) என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது.
இங்கு ஆண்டவரிடம் வந்தவனுக்கு ஆண்டவரையே நம்பி அவரையே விசுவாசித்து அவருக்காகவே வாழவேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆகவேதான் அவன் ஆண்டவரித்தில் ஒடி வருகிறான். ஆனால் ஆண்டவர் அவனைப் பார்த்து உன்னிடத்தில் ஒரு குறை இருக்கிறது, நான் இருக்க வேண்டிய இருதயத்தில் வேறொன்று உன்னில் இருக்கிறது. அதாவது உன் ஆஸ்திமேல் உன் ஆசை அதிகமாக இருக்கிறது, அதை நீ மாற்றிக்கொள் என்றார்.
ஆண்டவர் வழியில் போக வேண்டிய அவன், தன் வாழ்க்கையில் இன்னொரு தேவனுக்கு இடங்கொடுத்து வாழ்ந்திருக்கிறான். பொருளின் மீதும், பொக்கிஷத்தின் மீதும் ஆசை வைத்து தொடர்ந்து அவற்றை அவன் தெய்வமாக நினைத்து வழிபட்டு வந்ததனால் ஆண்டவருக்கு உண்மையிலே அவனுடைய இருதயத்தில் இடம் இருக்க முடியாது. பணம் உங்களிடத்தில் இருக்கிறதா? அதில் தவறொன்றுமில்லை, ஆனால் அதுவே தெய்வமாக உங்களுக்கு இருந்தால் ஆபத்துதான். இங்கு ஆண்டவரிடத்தில் வந்தவனுக்குப் பணம் தெய்வமாக இருந்தது, அவன் பணத்திற்காக வாழ்ந்தான், அதைப் பெருக்கிக் கொள்ளுவதில் தான் நோக்கமாக இருந்தான். ஆண்டவர் அவன் இருதயத்தை அறிந்துதான் அவனிடத்தில் அப்படியாகப் பேசினார். சில நேரம் நமக்கு நம்முடைய பெலவீனம் தெரியாமல் இருக்கலாம். ஆகவேதான் ஆண்டவர் நம்மைச் சுய பரிசோதனை செய்துகொள்ளும்படிச் சொல்லுகிறார். பண ஆசை மிகவும் மோசமானது, அதனால் நாம் அநேக காரியங்களில் பாதிக்கப்படலாம். பணத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்கிற நோக்கம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கலாம், சபைக்குப் போவது அதனால் தடைபடலாம், ஆண்டவருக்கென்று சேவை செய்வதற்கு நேரத்தைக் கொடுக்காமல் இருக்கலாம், இப்படி எத்தனையோ விதத்தில் அது நம்மைப் பாதிக்கும். ஆண்டவருக்கு எதிராக நாம் இன்னொன்றுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். அப்படித்தான் இந்த சம்பவத்தில் பார்க்கிற மனிதனும் இருந்தான். ஆண்டவர் அதைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அவன் மனமுடைந்து துக்கத்தோடு போய்விட்டான் என்று நாம் அந்தப் பகுதியில் வாசிக்கிறோம். நித்திய ஜீவன் வேண்டுமென்று ஆண்டவரிடம் வந்து அவன் கேட்டான், ஆனால் அவன் வாழ்க்கையில் வேறொன்று அவனுக்குத் தெய்வமாக இருந்தது. அதை அவனால் விட்டுவிட முடியவில்லை. பணத்தைக் கொடுப்பவரே ஆண்டவர்தான் என்கிற எண்ணமே அவனுக்கு இல்லை. அவரோடு இருந்தால் தனக்கு எந்தத் தேவையும் இல்லாத அளவிற்கு அவர் பார்த்துக் கொள்ளுவார் என்கிற நம்பிக்கையும் இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் உங்களை அறியாமலே வேறொன்றை நீங்கள் தெய்வமாகக் கொண்டிருக்கலாம். சிலை வணக்கம் பல்வேறு விதங்களில் உங்களில் காணப்படலாம். ஒரு விக்கிரகத்தை வைத்து நீங்கள் வணங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் ஆண்டவருக்கு முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் ஆராதனை செய்யாமல் வேறு எதற்காவது நீங்கள் இருதயத்தில் இடம் கொடுத்திருக்கலாம். அது எதுவாகவும் இருக்கலாம். ஜீவனுள்ள தேவனாகிய அவரை வணங்கி அவருடைய வழிகளின்படி எல்லாவற்றையும் செய்யவேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.
ஆண்டவர் இங்கு அகசியாவிற்கு மனந்திரும்பும்படியாக ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார். ஆண்டவர் இதை அவனிடத்தில் சொன்ன பிறகு உடனே அவனைக் கொன்றிருக்கலாம். ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நீ சாகவே சாவாய் என்று ஏன் சொல்லி அனுப்பிவிட வேண்டும்? அவன் மனதிரும்பும்படிக் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவன், ஆண்டவரே நான் செய்ததது பாவந்தான், ஜீவனுள்ள தேவனாகிய உம்மை உதாசீனப்படுத்தி இந்த நிலைக்கு வந்து விட்டேன் என்று மனந்திரும்பி இருக்கலாம் அல்லவா! நினிவேக்கு ஆண்டவர் யோனாவை அனுப்பி நீங்கள் மனந்திரும்பவில்லையானால் உங்களை நிர்மூலமாக்கிவிடுவேன் என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் மனந்திரும்பி யோனாவையே ஆச்சரியப்பட வைத்தார்கள். ஆண்டவர் நினிவேவை அழிப்பேன் என்று சொன்னது உண்மைதான், ஆனால் மனந்திரும்புகிறவர்களை அழிப்பேன் என்று அவர் சொல்லவில்லை. அவர்கள் மனந்திரும்பினதாலேயே அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். அகசியாவும் அதுபோலக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மனந்திரும்பி இருக்கலாமே! ஆனால் அவன் இருதயம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. கிடைத்த கடைசி வாய்ப்பையும் தவறவிட்டான். இங்கு ஆண்டவரிடத்தில் அன்பு இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? அவனுக்கு அவர் வாய்ப்புக் கொடுக்காமல் இருந்தாரா? அப்படி ஒருவேளை வாய்ப்பே கொடுக்காமல் அவனைக் கொன்றிருந்தாலும் அவர் நீதியுள்ளவராகத்தான் இருந்திருப்பார். ஆனாலும் அவர் அவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார், அதை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சிலை வணக்கத்தை நீங்கள் சாதாரணமாக நினைக்கக் கூடாது. சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் முதலாவது கட்டளையை சரியாகப் படிக்காமல், தாங்கள் விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் பெரிய இயேசு படத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். பெரிய தாடி வைத்து, அவர் எதோ பஞ்சத்தில் இருத்தவர்போல மிக மோசமான நிலையில் இருப்பதைப் போலக் கற்பனையான படத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படியான மோசமான நிலையிலிருந்தால் அவர் சமாரியா மற்றும் பல பகுதிகளுக்கு நடந்து சென்றிருக்க முடியுமா? நாம் ஒரு நாளைக்கு 4 கி.மீ. நடந்தாலே முடியாமல் போகிறது. அவர் மிகவும் பெலமுள்ளவராக இருந்திருக்கிறார், இல்லாவிட்டால் அவர் தச்சராக அப்பாவோடு இருந்து வேலை செய்திருக்க முடியாது. இதுமாதிரி படத்தை எல்லாம் வைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனென்றால் அது முதலாவது கட்டளையை மீறுவதற்கு வழிவகுக்கும். படத்தில் ஒன்றுமே இல்லை. ஆண்டவர் நம் இருதயத்தில் இருக்கிறார், அவர் சிலுவையிலோ அல்லது வேறோன்றிலோ இருப்பதில்லை. சிலுவையைக் கழுத்தில் போட்டுக் கொள்வதாலோ, தலையணைக்கு அடியில் வைத்திருப்பதாலோ ஒரு பிரயோஜனமும் இல்லை. அவ்வாறு செய்வதால் நீங்கள் என்ன செய்கிறீர்களென்றால் ஜீவனுள்ள தேவனை வணங்க வேண்டிய விதத்தில் வணங்காமல் நீங்களே வேறொன்றை உருவாக்கிக் கொண்டு அதன்மேல் உங்கள் விசுவாசத்தை வைக்கிறீர்கள்.
சிலை வணக்கம் கோரமானது. அதுவும் இந்த அகசியாவின் சிலை வணக்கம் அவனுடைய தகப்பனுடையதைப் போல மிகவும் தீவிரமான சிலை வணக்கமாகும். ஏன் இந்த சிலை வணக்கம் மோசமானது என்பதை 1 இராஜாக்கள் 22 ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
“ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.” (1 இராஜாக்கள் 22:51-53).
சிலை வழிபாட்டை ஆண்டவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். அகசியாவின் இந்த நிலைமைக்குக் காரணம் அவனுடைய தீவிர உருவ வழிபாடே. முதலாவது கட்டளையை அவன் அவமதித்து உதாசீனப்படுத்தினான். அகசியா தான் எதை நம்பினானோ அதன் அடிப்படையிலே தொடர்ந்து நடந்தான் என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம். அவன் பாகால்சேபூவுக்கு ஆட்களை அனுப்பியது ஏதோ சாகப்போகிற நேரத்தில் இந்த சாமியாவது நமக்கு உதவி செய்யுமா என்று கேட்டுப் பார்க்க அவன் இப்படிச் செய்யவில்லை. எந்த வழியில் அவன் வளர்ந்து எதைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்துவந்தானோ அதையே அவன் தொடர்ந்தான் என்று நாம் பார்க்கிறோம். 2 இராஜாக்கள் புத்தகத்திற்கு விரிவுரை எழுதின ஒருவர் இந்த அகசியாவின் செயலைப் பற்றி சொல்லுகிறபோது, “இதை அவன் அறியாமையினாலோ தனக்குள் இருந்த பெலவீனத்தாலோ செய்யவில்லை. அதுவே அவனுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது” என்று சொல்லுகிறார். இது மிகவும் முட்டாள்த்தனமான சிலை வணக்கமாகும். ஏனென்றால் சாகக் கிடக்கும் நேரத்தில் இப்படியா செய்ய வேண்டும்? அவனுக்கே நன்றாகத் தெரியும், தான் பிழைக்க முடியாதபடி இருக்கிறேன் என்று. இந்த நேரத்தில் உதவியைத் தேடி தவறான ஒரு வழியில் போகக் கூடாது. இவ்விதமான கடினமான நேரத்தில் இஸ்ரவேலின் தேவனிடம் அவன் போயிருக்க வேண்டும்.
எலியா நாட்டில் இருந்தார், அவர் எங்கே இருந்தாரோ அங்கே ஆண்டவர் இருந்தார். எலியாவின் மூலம் ஆண்டவர் செய்த அற்புதங்கள் எல்லாம் அகசியாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும்கூட அவன் இருதயம் கடினப்பட்டுப்போய் முட்டாள்த்தனமாக பாகால்சேபூ வழியிலேயே போனான். அதனால் ஆண்டவர் மிகவும் கோபமடைந்தார். ஆண்டவர் அவன் தொடர்ந்து தவறான வழியில் சென்றதைத் தொடர்ந்து பொறுத்துக்கொள்ளவே மாட்டார். ஆகவேதான்
“இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ இதை செய்கிறாய்” என்று கேட்டார். ஆகவே ஆண்டவர் இப்படியான நேரத்தில் கொடுக்கிற நியாயத்தீர்ப்பு மிகவும் கடுமையாகத்தான் இருக்கும். எந்தவிதக் கருணையும் இல்லாத விதத்தில்தான் அந்த நியாயத்தீர்ப்பு இருக்கும். அப்படியான ஒரு நியாயத்தீர்ப்பைத்தான் அவர் அகசியாவிற்கு அளித்தார். “இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய்” (2 இராஜாக்கள் 1:4) என்று ஆண்டவர் சொன்னார்.
ஆண்டவருடைய கோபம் எந்தளவுக்கு அகசியா மீது இருந்தது என்பதை “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய்” என்று சொன்னதிலிருந்து விளங்குகிறது. அது இந்த அதிகாரத்தில் 3, 6, 16 வது வசனங்கள் என்று மூன்று தடவை வருகிறது. ஆண்டவர் சொன்ன இந்தத் தீர்ப்பு எலியாவின் மூலமாக அகசியாவிற்கு வந்து சேர்ந்தது.
எலியாவோடு கர்த்தருடைய தூதன் பேசுகிறார்.
“கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்” (2 இராஜாக்கள் 1:4).
இதைத்தான் 1 இராஜாக்கள் 21:17-18 வசனங்களிலும் வாசிக்கிறோம்.
“கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ” (1 இராஜாக்கள் 21:17-18).
கர்த்தருடைய தூதன் ஆகாபோடும் அகசியாவோடும் பேசும்படியாக எலியாவிடம் ஒரேவிதமாகத்தான் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இவர்கள் இருவருமே மிகவும் கொடுமையான காரியங்களைச் செய்வதற்குக் திட்டமிட்டார்கள். அதை ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் அறிந்து அதைத் தடுக்கும்படியாக, அவர்கள் செய்ய நினைத்த அந்தக் காரியங்களை அந்த நேரமே நிறுத்தும்படியாக எலியாவை எழுந்து போகச் சொல்லுகிறார். கிருபையுள்ள, அன்புள்ள, மிகுந்த பரிசுத்தமுள்ள தேவன் அநியாயத்தைப் பொறுத்துக் கொண்டு பாவத்தைச் சகித்துக் கொள்ளுகிற தேவனல்ல. மனந்திரும்புகிறவர்களுக்கு அவர் விசுவாசத்தைக் கொடுக்கிறார், மனந்திரும்ப மாட்டோம் என்று இருதயத்தைக் கடினப்படுத்திக் கொள்கிறவர்களுக்கு அவர் நியாயத்தீர்ப்பைத்தான் கொண்டுவருவார் என்பதை இங்கு பார்க்கிறோம். சந்ததி சந்ததியாக தொடர்ந்து முதலாவது கட்டளையை மீறினதாலேயே அகசியாவின் மீது ஆண்டவருடைய உக்கிரமான கோபம் வந்தது.
இரண்டாவதாக, (2 இராஜாக்கள் 1:9-12): கர்த்தர் தன் ஊழியக்காரனைப் பாதுகாக்கிறார்
எலியாதான் இதைச் செய்தான் என்பதை அறிந்தவுடனே அகசியா என்ன செய்கிறான் பாருங்கள்.
“அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது. மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான். எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது”. (2 இராஜாக்கள் 1:10-12).
அகசியா எலியாவைக் கைது செய்யும்படியாக ஆட்களை அனுப்புகிறான். எலியாவினால் அந்த ஆட்கள் அக்கினியினால் அழிக்கப்பட்டார்கள். எலியாவின் இந்தச் செயலை ஒருசில விளக்கவுரையாளர்கள், எலியா கோபப்பட்டு இவ்விதமாகச் செய்திருக்கக் கூடாது என்கிறார்கள். ஆண்டவருடைய தீர்க்கதரிசியாக இருந்தும் கொஞ்சமும் கருணையில்லாமல் நடந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அது ஒரு தவறான விளக்கமாகும். ஏனென்றால் இதை எலியா செய்யவில்லை, இதைச் செய்தவர் ஜீவனுள்ள தேவன். இங்கு எலியா ஒரு கருவிதான், அதை நாம் மறந்துவிடக் கூடாது. அன்றைய தினம் 102 பேர் இறந்து போனார்கள். எலியா அங்கு என்ன சொல்லுகிறார்?
“நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்”.
அதற்கு என்ன அர்த்தம்? ஆண்டவரே என்னைத் தீர்க்கதரிசியாக மாற்றினதே நீங்கள்தான். நான் செய்து கொண்டிருப்பதெல்லாம் உங்களுடைய பணியைத்தான். நீங்கள் போகச் சொல்லும்போதும், வரச் சொல்லும்போதும் அப்படியே செய்கிறேன். நீங்கள் சொன்னதைத்தான் அகசியாவுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் என்னை அழிக்க ஆட்களை அனுப்பி இருக்கிறான். உண்மையிலேயே நீங்கள்தான் என்னைத் தீர்க்கதரிசியாக ஆக்கியிருந்தால் அவர்களை அழித்துப் போடுங்கள் என்கிறார். ஆண்டவர் அதை எப்படிச் செய்யாமல் இருப்பார்? இங்கு எலியா ஒரு போலித் தீர்க்கதரிசியாக ஏமாற்றுக்காரனாக இருந்திருந்தால் அவன் சொன்னபடி நடந்திருக்குமா? அவன் சொன்னது பொய்யாக இருந்திருந்தால் வானத்திலிருந்து நெருப்பு இல்லை, பச்சைத்தண்ணீர் கூடக் கொட்டியிருக்காது. ஆனால் அவன் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்ததால் ஆண்டவர் அவ்விதம் செய்தார்.
முதலாவதாக வந்த படை “தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார்” (2 இராஜாக்கள் 1:9) என்றார்கள். எலியா கேட்டுக்கொண்டபடி அவர்கள் அக்கினியால் அழிக்கப்பட்டார்கள். இரண்டாவதாக வந்த படை மிகவும் தீவிரமாக எப்படியாவது எலியாவைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்கிற நோக்கத்தில், “தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார்” (2 இராஜாக்கள் 1:11) என்று சொன்னார்கள். அவர்களும் எலியா வேண்டிக் கொண்டபடியே அக்கினியால் அழிக்கப்பட்டார்கள். ஆண்டவர் அன்றைய தினம் 102 பேரை அழித்து எலியாவைப் பாதுகாத்திருக்கிறார். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் கர்மேல் மலையின்மேல் போலிப் பாகாலை வணங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு முன்பாக நெருப்பினால் அவர்களுடைய நம்பிக்கைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கர்மேல் மலைமேலும் இங்கும் நெருப்புதான் முக்கிய பங்கு வகித்தது. எலியாவின் தேவன் கர்மேல் மலைமேல் செய்தது போல இங்கும் செய்துகாட்டி அவர் ஜீவனுள்ள தேவன் என்பதை நிரூபிக்கிறார்.
ராஜா அகசியா, எதற்காக எலியாவை கூட்டிக்கொண்டு வரச்சொன்னான்? பெரிய விருந்து செய்து உபசரிக்கவா? அல்லது நாம் பாகால்சேபூ இடத்திற்கு போகாமல் எலியாவினிடத்தில் ஏதாவது நல்ல ஆலோசனை கேட்கலாம் என்றா? நிச்சயமாக அதற்காக அவர்களை அவன் அனுப்பவில்லை. எலியாவை இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில்தான் அனுப்பினான். அவன் இருதயத்தில் தேவனுக்கு இடமில்லை, தேவனுடைய வார்த்தைக்கு இடமில்லை. எலியா எப்படி நான் ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாவாய் என்று சொல்லலாம்? அந்தக் கோபத்தில்தான் அவன் படைகளை அனுப்புகிறான். ஏன் இங்கு நெருப்பு வந்தது? எப்படி கர்மேல் மலையின்மேல் நெருப்பை வரச்செய்து நான் மட்டுமே ஒரே ஜீவனுள்ள தேவன் என்று கர்த்தர் நிரூபித்தாரோ, அதுபோல இங்கும் நெருப்பை அனுப்பி அவர்களை அழித்து நான்தான் ஜீவனுள்ள தேவன் என்பதை அவர் நிரூபித்தார். கர்மேல் மலையின்மேல் நடந்தது முழு நாட்டிற்கும் தெரிந்திருந்தது. முதலில் அனுப்பப்பட்ட படையினர்மேல் நெருப்பு வந்து அழிந்து போனார்கள் என்று கேள்விப்பட்டவுடனேயே புத்தி வந்திருக்க வேண்டும் அல்லவா? நெருப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் கர்மேல் மலையிமேல் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு வந்திருக்க வேண்டும். உடனே மனந்திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவனோ அகங்காரமாய் வேறு 51 பேரை அனுப்புகிறான். ஆண்டவர் அவர்களையும் எரித்துப் போட்டார் என்று நாம் வாசிக்கிறோம்.
இறுதியாக, (2 இராஜாக்கள் 1:13-18): தேவன் ஆணவத்தை அழிக்கிறவராக இருக்கிறார்.
102 பேர் அழிந்து போனார்கள் என்ற செய்தியை அனைவரும் கேள்விப்பட்டார்கள். இது படையிலிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுவும் அவர்கள் சண்டையே போடாமல் நெருப்பினால் அழிந்து போய்விட்டார்கள். மீதியிருந்த படையினருக்கு இது எப்படியிருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் திகைத்து அடுத்து என்ன நடக்குமோ என்றுதான் யோசித்திருப்பார்கள். அகசியா வேறொருவனைக் கூப்பிட்டு இன்னும் ஐம்பது பேரை உன்னோடு கூட்டிக்கொண்டு போ என்றான். இதைக் கேட்டு அவன் எப்படிப் பதறிப்போயிருப்பான் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நாம் போனாலும் இதுதான் நடக்கும் என்பதை அவன் உணர்ந்திருப்பான். படைத்தலைவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். அகசியாவிற்கு வராத புத்தி இவனுக்கு வந்திருந்தது. இவனுக்கும் கர்மேல் மலையில் நடந்ததும், இப்போது எலியா இரண்டு தடவை செய்ததும் நன்றாக தெரிந்திருந்தது. அகசியாவிற்கும் இது தெரிந்தது, ஆனால் அகசியாவோ இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான், இவனோ தன்னைத் தாழ்த்திக் கொண்டான். மற்றவர்கள் செய்தது போல இவன் செய்யவில்லை.
“திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.” (2 இராஜாக்கள் 1:13-14).
இதற்குப் பெயர்தான் தாழ்மை. அகசியா மோசமானவனாக இருந்தபோதும், அவனுக்குக் கீழ் இவன் வேலை செய்தாலும் நடந்ததை எல்லாம் கவனித்து இவன் யோசிக்கிறவனாக இருந்தான். மரண பயத்தினால் இவன் இப்படிச் செய்தான் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், இவனுக்குச் சாக விருப்பமில்லை. ஆனால் அவன் என்ன செய்தான் என்பதுதான் முக்கியமே தவிர எதனால் அதைச் செய்தான் என்பது முக்கியமில்லை. ஏனென்றால் ஆண்டவர் எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி ஒரு மனிதனைத் தன் பக்கம் திருப்பிக் கொள்ளுவார். பெரிய காரியங்களைப் பயன்படுத்தி சிலரை இரட்சிக்கவும் செய்வார். பவுலின் இரட்சிப்பைப் பாருங்கள். குதிரையிலிருந்து கீழே விழுந்து கண்ணும் தெரியாமல் போக ஆண்டவர் அவனோடு நேராகப் பேசி அவன் மனந்திரும்பும்படிச் செய்தார். நமக்கும் கூட இதுபோல நடந்தால் நன்றாய் இருக்குமே என்று ஆசைப்படலாம். ஆனால் என்ன செய்வது, எல்லாருக்கும் அதுபோல நடக்காது. அவருடைய இறையாண்மையின்படியே எதுவும் நடக்கும். நமக்கு சாட்சி சொல்ல அதிசயமாய் ஒன்றும் இருக்காது, குருடனாக இருந்தேன் இப்போது கண்கள் திறந்துவிட்டது என்று மட்டுந்தான் சொல்ல முடியும். ஆண்டவர் இப்படியும் செய்வார், அப்படியும் செய்வார், அவரால் எதையும் செய்ய முடியும்.
இங்கே இந்தப் படைத்தலைவன் மரணபயத்தினால் எலியாவோடு பேசியிருந்தாலும் அவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறான். அதுதான் முக்கியம். இங்கிருந்து திரும்பிபோனால் அகசியா இவன் தலையை எடுத்துவிடுவானே, ஆனால் அவன் அதற்குப் பயப்படவில்லை. இவன் யாருக்குப் பயப்பட வேண்டுமோ அவருக்குப் பயப்பட்டான்; இவன் ஜீவனுள்ள தேவனுக்குப் பயப்பட்டான். சிலர், பயத்தினால் மனந்திரும்பக் கூடாது, அது சரியான மனந்திரும்புதலாக இருக்காது என்று சொல்லுவார்கள். அது தவறு. இவனை மனந்திரும்ப வைத்தது கர்த்தருடைய பயங்கரம். அது பயங்கரமாக இருந்தாலும் நன்மையாக முடியுமானால் அது நல்லதுதான். மனந்திரும்புவதுதான் அவசியமே தவிர அது எதனால் ஏற்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. நானும் (ஆசிரியர்) இருதயம் கடினப்பட்டுப் போய் இந்துவாக இருந்தவன்தான். நான் பாரம்பரிய முறைப்படி இந்து வெறியனாகத்தான் இருந்தேன். வேதத்தின் மீதும், ஆண்டவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆண்டவர் என்னை அசைப்பதற்குப் பயன்படுத்தியவற்றில் ஒன்று என்னுடைய தாயின் மரணம். அம்மாவும் நானும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். அவர்களுடைய மரணம் என்னை என்னென்னவோ செய்துவிட்டது. ஏதேதோ கேள்விகளையெல்லாம் கேட்க வைத்தது. நான் மரித்தால் எங்கே போவேன் என்று யோசிக்க வைத்து கடைசியில் இயேசுவிடம் கொண்டுவந்து விட்டது. ஒருவரை இரட்சிப்பதற்கு சிலநேரம் ஆண்டவர் மரணபயத்தையும் பயன்படுத்துவார்.
ஜோர்ஜ் விட்ஃபீல்டு நான்காயிரம், ஐயாயிரம் பேர் இருந்தாலும் ஒலிவாங்கி (Mic) இல்லாமல் எல்லாருக்கும் நன்றாகக் கேட்கும்படிப் பேசுவார். அவரால் அது எப்படி முடிந்ததோ எனக்குத் தெரியாது. அமெரிக்காவில் அவர் பிரசங்கம் செய்த இரண்டு இடத்தை நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். 1756 இல் இங்கிலாந்தில் உள்ள யோர்க்க்ஷயர் என்ற இடத்தில் வில்லியம் கிரிம்ஸ்வேல் என்ற போதகர் பணியாற்றிய சபையில் ஒரு கூட்டம் நடந்தது. ஜோர்ஜ் விட்ஃபீல்டுக்காக வெட்டவெளியில் பெரிய பிரசங்க மேடை அமைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய பிரசங்கத்தைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதிக் கொண்டு வந்தனர். விட்ஃபீல்டு ஜெபம்பண்ணி முடித்துவிட்டு, பிரசங்கத்திற்காக எபிரெயர் 9:27 ஐ வாசித்தார்.
“அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்ற வசனம் அது.
வசனத்தை வாசித்து முடித்து பிரசங்கத்தை அவர் ஆரம்பித்தபோது, திடீரென்று கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. கிரிம்ஸ்வேல் விட்ஃபீலிடம் ஓடிவந்து கூட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். சற்று நேரம் கழித்து மீண்டும் அதே வசனத்தை வாசித்து, விட்பீல்ட் பிரசங்கத்தை ஆரம்பித்தபோது கூட்டத்தின் மத்தியில் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. மீண்டும் கிரிம்ஸ்வேல் ஒடிவந்து இன்னொருவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். ஆண்டவர் ஒரு மனிதனை இரட்சிக்க எதையும் பயன்படுத்துவார். இங்கு அவர்கள் மரித்ததற்கு விட்ஃபீலின் ஜெபம் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது அந்த வசனத்தை அவர் அழுத்தங்கொடுத்து வாசித்த விதம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பிரசங்கம் நடப்பதற்கு முன்பாகவே மக்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். வசனத்தை அறிவித்து அதற்கு பிறகு விட்பீல்ட் பிரசங்கம் செய்தார். நிச்சயமாக அநேகர் அன்றையதினம் ஆண்டவரிடம் மனந்திரும்பி வந்திருப்பார்கள். அதை யார் செய்தது? விட்ஃபீல்டு அல்ல, எலியாவைக் கொண்டு ஆண்டவர் செய்தது போல இங்கு விட்பீல்டைப் பயன்படுத்தி ஆண்டவர் கிரியை செய்திருக்கிறார். கர்த்தர் எதையும் பயன்படுத்தி எங்கேயும் எதையும் செய்ய முடியும்.
இங்கு படைத்தலைவனை மாற்றியது நெருப்புதான். 102 பேர் மரித்தது அவனுக்குப் புத்தியைக் கொண்டுவந்தது. அதேநேரத்தில் அகசியாவிற்கு புத்தி வந்ததா? அவனுந்தான் இதே செய்தியைக் கேள்விப்பட்டான். ஆனால் அவன் மனம் மாறவில்லை. அவனுக்குக் கோபம் அதிகரித்தது, இவனுக்கு மனந்திரும்புதல் ஏற்பட்டது. ஆகவே அந்தப் படைத்தலைவன் எலியாவிடம் வந்து மிகவும் பணிவாகப் பேசுகிறான். அவ்வாறு அவன் சொன்னவுடன் ஆண்டவர் எலியாவை அவனோடு போகச் சொல்லுகிறார். உடனே எலியா அவனோடு சென்று அகசியாவிடம் கர்த்தர் சொன்னதைச் சொல்லுகிறார். இங்கே அனைத்தையும் கர்த்தர் தன் வார்த்தையின்படியே செய்தார் என்பதைப் பார்க்கிறோம்.
“அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.” (2 இராஜாக்கள் 1:15-18).
ஆண்டவருடைய வாக்குறுதிகள் என்றைக்கும் நிறைவேறும். சிலநேரம் சற்று கால தாமதம் ஏற்படலாம், ஆனால் அது நிச்சயமாக நிறைவேறும். மூன்று முறை இங்கு ஆண்டவர் சொன்னார், அதேபோல அனைத்தும் நிகழ்ந்தன.
கடைசியாக நான் உங்கள் முன் சில கேள்விகளை வைக்கிறேன்.
- அகசியா மாதிரி நீங்கள் இருக்கிறீர்களா?
பாவத்தை சாதாரணமாக நினைக்காதீர்கள். பாவம் மிகவும் கொடுமையானது. அது இருதயத்தை ஆண்டு, தவறான வழியில் போக வைத்தும், சிலைகளை எல்லாம் வணங்க வைத்தும் நம்மைக் கேடான வழிகளில் கொண்டு செல்லும். பிசாசு நம்மை அவ்விதமாகத்தான் வழிநடத்துவான்.
- நீங்களும் எவ்வளவுதான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும் இருதயம் கடினப்பட்டுப் போயிருக்கிறீர்களா?
தேவன் ஜீவனுள்ளவர், அவர் மலையில் இருப்பதில்லை. அவரை மரத்திலும் கல்லிலும் கொண்டுவந்து அடைக்க முடியாது. அவர் மனிதனுடைய இருதயங்களில் வாழுகிற தேவனாக இருக்கிறார். உங்கள் இருதயம் கடினப்பட்டுக் கல்லையும் மண்ணையும் வணங்குவதற்கு காரணம் உங்களில் இருக்கிற பாவம்தான். பாவம் உங்களுடைய கண்களை மறைக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் ஆண்டவரைப் பற்றிக் கேள்விப்ட்டாலும் இருதயம் மனந்திரும்பவில்லை. உங்கள் அருகில் உட்கார்ந்து இருப்பவர்கள் மனந்திரும்புகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மாற்றப்பட்டுள்ளது. எப்படியோ இருந்தவன் இப்போது நல்ல வழியில் போகிறான், அவன் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பார்க்கிறீர்கள். இதைல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தும் இன்னும் இருதயம் கடினப்பட்டுபோய் ஆண்டவரிடம் திரும்பாமல் இருக்கிறீர்களா? ஆகாப் ராஜா இப்படித்தான் இருந்தான், அவன் இறந்து போனான். அவன் மகனான அகசியா அவன் வழியிலேயே சென்று அவனும் இறந்துபோனான். ஆண்டவர் உங்களுக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கையும் ஆகாபை போல, அகசியாவை போல, யெரொபெயாமை போல முடிய வேண்டுமா? ஆண்டவருடைய வார்த்தையும் அவருடைய கோபமும் நிலையானது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டுமானால் தொடர்ந்து இருதயத்தைக் கடினப்படுத்தாதபடி, எப்படி அந்த படைத்தலைவன் தன்னைத் தாழ்த்தினானோ அதேபோல நீங்களும் ஆண்டவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். இயேசு மட்டுமே ஜீவனுள்ள தேவன். அவரை மட்டுமே இன்றிலிருந்து வழிபடப் போகிறேன், அவர் மட்டுமே எனக்கு ஆண்டவர், என்று அறிவித்து வேறு தேவர்களாக இருக்கிற கல், மண், சிலை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பு உண்டு. இந்தப் படைத்தலைவனுக்கு அன்றைக்கு விடுதலை வந்தது. சுற்றியிருக்கிற எத்தனையோ பேருக்கு வராத விடுதலை அவனுக்கு வந்தது. ஏனென்றால் ஆண்டவர் அவனோடு பேசினார்.
- உங்களோடும் ஆண்டவர் பேசுகிறாரா?
- உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கிறது?
- அகசியாவைப் போல அப்படியே தொடர்ந்து போய் ஆண்டவர் இல்லாமல் இறக்கப் போகிறீர்களா? இப்போது மனந்திரும்பாமல் எப்போது மனந்திரும்பப் போகிறீர்கள்?
இயேசுவின் வழி நீதியான வழி. இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் ஜீவனைக் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அவரை விசுவாசியுங்கள், அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்!
எலியாவின் முடிவும், எலிசாவின் ஆரம்பமும்
இந்த ஆக்கத்தில் நாம் 2 இராஜாக்கள் 2:1-22 வசனங்கள்வரை சிந்திப்போம். கடந்த ஆக்கத்தில் பார்த்த முதலாவது அதிகாரத்தைப் போலவே இந்த இரண்டாம் அதிகாரமும் மிகவும் அதிரடியாக ஆரம்பிக்கிறது. முதலாவது அதிகாரத்தில் ஆகாப் மரணமடைந்தான் என்ற அறிவிப்போடு அது ஆரம்பித்ததைப் பார்த்தோம். இந்த அதிகாரம் எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறான் என்று ஆரம்பிக்கிறது.
“கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது” (2 இராஜாக்கள் 2:1)
திரைக்கதையிலோ அல்லது நாடகத்திலோ காட்சிகள் மாறி மாறி வருவது போலவே 2 இராஜாக்கள் புத்தகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படப்போவது எல்லாருக்கும் தெரிந்ததொன்றாக இருந்தது. ஏனென்றால் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் அடிக்கடி எலிசாவினிடத்தில் அதை விளக்குவதை நாம் பார்க்கிறோம். ஆகவே அது இரகசியமாக இருந்த விஷயமல்ல. அதைக் குறித்து 3, 5, 9 வது வசனங்களில் நாம் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம். அதற்குப் பதிலாக எலிசா அவர்களைப் பார்த்து நீங்கள் சும்மா இருங்கள் என்று சொல்லுகிறார். இதைப் பற்றி யாருமே வெளிப்படையாகப் பேசுவதற்கு விரும்பவில்லை என்பதைக் காண முடிகிறது. இந்த இடத்தில் அமைதியான ஒரு பதற்றம் இருப்பதை நாம் பார்க்கிறோம். கர்த்தரை அன்றைக்கு விசுவாசித்திருந்த இஸ்ரவேலரின் மத்தியில் ஒரு அமைதியின்மை இருந்ததைக் காண முடிகிறது, குறிப்பாக இந்த விஷயத்தில் அதற்குக் காரணமிருந்தது. எலியா இஸ்ரவேலரின் மத்தியில் அத்தனை முக்கியமானவராக இருந்திருக்கிறார். அவர் இப்போது நம்மைவிட்டுப் போகப் போகிறார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது.
12வது வசனத்தில் எலிசா சொல்லுவதிலிருந்து எலியா எந்தளவுக்கு நாட்டில் மதிக்கப்பட்டவராக இருந்தார் என்பதை உணர முடிகிறது.
“அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்;” (2 இராஜாக்கள் 2:12).
இரதமும், குதிரையும் போர் வீரர்களோடும் படைகளோடும் சம்மந்தப்பட்ட வார்த்தைப் பிரயோகமாகும். இதிலிருந்து என்ன தெரிகிறது? எலியா நாட்டிலிருந்தது, ஒரு பெரும் படையே அந்த நாட்டோடு இருந்ததற்குச் சமமாக இருந்திருக்கிறது. அந்த நாட்டிற்குப் பெரும் பாதுகாப்புப் படையைப் போல எலியா இருந்திருக்கிறார். அது பற்றி விளக்கவுரையாளர் ஒருவர் சொல்லுகிறபோது, “எலியா நாட்டில் இருந்தது பலமடங்கு போராளிகள் இருப்பதுபோலத்தான் இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்போது இஸ்ரவேலுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருந்த எலியா பரலோகம் போகப் போகிறார்.
நாட்டில் பாகாலின் காலைப் பிடித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கும், தீர்க்கதரிசிகளைக் கொன்று குவிக்கும் கூட்டத்திற்கும் மத்தியில் எலியா இருந்தார். அந்த எலியா எடுத்துக் கொள்ளப்படப் போகிற நேரம் வந்தது. இஸ்ரவேலில் மீதியாக இருந்த கர்த்தரின் மக்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் எப்படி இனித் தொடர்ந்து நாட்டில் வாழ்க்கை நடத்தப்போகிறார்கள்? இப்போது ஒரு சகாப்தம் முடிவுக்கு வரப்போகிறது. தேவ ராஜ்ஜியத்தில் ஒரு மாறுதல் ஏற்படப்போகிற கட்டத்தில் நாடு இருந்தது. நாட்டில் சிங்கம் இல்லாமல் போகப் போகிற நேரம் வந்துவிட்டது.
அமெரிக்காவில் அதிபர்களாக இருந்தவர்களில் தியோடர் ரூஸவெல்ட் (Theodore Roosevelt) ஒருவர் ஆவார். தியோடர் ரூஸவெல்ட் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வேத விளக்கவுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். 1912 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விஸ்கான்சின் மாநிலத்திலுள்ள மில்வாக்கி என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசப் போனார். அவர் காரில் ஏறும்போது ஒருவன் அவரைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். அருகிலிருந்த எல்லாருமே உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் ரூஸவெல்ட் அதற்கு இடங்கொடுக்கவில்லை. அவர் காரில் ஏறி கூட்டம் நடக்கிற இடத்திற்கு போகும்படி வலியுறுத்தியிருக்கிறார். அப்படி அவர் அந்த கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தவுடனே அந்த கூட்டத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து அவர்: நான் நீண்ட ஒரு செய்தியைக் கொடுக்கப் போகிறேன், ஆகவே நீங்கள் எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்து அதைக் கேட்க வேண்டுமென்று சொன்னார். தனது கோட்டிற்கு உள்ளறையில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்த போதும் அதிலிருந்து கூட்டத்தில் பேசுவதற்காக வைத்திருந்த தாள்களை வெளியே எடுத்து ஒன்றரை மணி நேரம் பேசினார். அதற்குப் பிறகுதான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அது நிகழ்ந்து எழு வருடங்களுக்குப் பிறகு தியோடர் ரூஸவெல்ட் 1919 ஆம் ஆண்டு இறந்து போனார். அவர் இறந்த செய்தியை அவரது கடைசி மகன் ஐரோப்பாவில் போர்க்கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தன்னுடைய சகோதரர்களுக்கு அனுப்பினார். அந்தச் செய்தியில் சிங்கம் இறந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தியோடர் ரூஸவெல்ட் அமெரிக்காவில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். ஒரு சிங்கத்தைப்போல இருந்திருக்கிறார். இந்தியாவில் மகாத்மா காந்தி இறந்தபோதும் அப்படிதான் மக்கள் நினைத்திருப்பார்கள். காந்தி, நாட்டை ஒருங்கிணைத்துக் கட்டியிருக்கும் ஒரு கயிறு போல இருந்தார். அவர் இறந்தபோது சிங்கம் போய்விட்டது என்றுதான் மக்கள் நினைத்திருப்பார்கள். என்னைப் பொறுத்தளவில் இந்திரா காந்தியும் அப்படிதான் இருந்திருக்கிறார். உண்மையிலேயே ஒரு திறமை வாய்ந்த தலைவராக அவர் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு சகாப்தம் மடிந்துவிட்டது என்றுதான் எல்லாரும் நினைத்திருப்பார்கள்.
2 இராஜாக்கள் 2 வது அதிகாரத்தில் எலியா எடுத்துக்கொள்ளப்பட போகிறார், ஒரு சிங்கம் போகப் போகிறது. தீர்க்கதரிசி புத்திரர்களின் நடுவில் இதன் காரணமாக ஒரு அமைதியின்மை காணப்பட்டது. எலிசாவாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான் அவர் இரண்டொரு தரம் எலியாவைப் போகவிடாமல் பின் தொடர்ந்ததை நாம் பார்க்கிறோம். இந்த இடத்தில் 2 இராஜாக்கள் நூலைப் பற்றி வேத விளக்கவுரையாளர்கள் மத்தியில் பிரச்சனை இருந்திருக்கிறது. 2ம் அதிகாரத்தை அவர்கள் ஒரு இடைச்செருகலாகக் கணித்தார்கள். அதாவது 2 இராஜாக்களை எழுதியவர் இந்த அதிகாரத்தை எழுதவில்லை, இது ஒரு இடைச்செருகல் என்று சொன்னார்கள். அனைத்து விளக்கவுரையாளர்களும் அப்படிச் சொல்லாவிட்டாலும் சிலர் அவ்விதம் சொல்கிறார்கள். அதற்குக் காரணமென்ன? எலியா சால்வையை வைத்து தண்ணீரை இரண்டாக பிளந்தது, அவர் சுழல் காற்றினாலே எடுத்துக் கொள்ளப்பட்டது, எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு எலிசா அவருடைய சால்வையைப் பயன்படுத்தி தண்ணீரை அடிப்பது போன்றவற்றை வாசித்து விட்டு இதெல்லாம் மனிதன் நம்பும்படியாக இல்லை, இதெல்லாம் கற்பனை கதை (fiction), அதனால் இந்த அதிகாரம் இடைச்செருகலாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். வேறுசிலர் இது ஒரு கர்ண பரம்பரைக் கதை, வேதத்தில் காணப்படுகின்ற இம்மாதிரியான நிகழ்வுகளை நாம் வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்கக்கூடாது, அவை ஒரு லெஜென்ட் (legend), புராணக் கதைகளாக வந்தவை, ஆகவே அவற்றின் மூலம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம், அந்தப் பாடத்தைப் கற்றுக்கொண்டு ஏனையவற்றை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் இதிலிருக்கிற அற்புதங்களை எல்லாம் நாம் அற்புதங்களாகவே பார்க்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள். இதெல்லாம் காலத்திற்கு பொருந்தி வருவனவாக இல்லை என்கிறார்கள்.
இந்தியாவில் நீங்கள் எந்த இறையியல் கல்லூரிக்குப் போனாலும் அங்கிருக்கும் நூலகத்தில் 2 இராஜாக்கள் புத்தகத்திற்கு விளக்கவுரைகளை எடுத்து வாசித்துப் பார்த்தால் நான் சொன்ன விதத்தில்தான் அதில் விளக்கமளிக்கப்பட்டிருக்கும். வேதத்தைக் கர்த்தரின் வேதமாக மட்டும் கணித்துப் பயன்படுத்துகிற ஒரு இறையியல் கல்லூரியைப் பொதுவாக இந்தியாவில் காண முடியாது. வேதம் தேவனுடைய சத்தியமாக இருக்கிறது, அது கர்த்தர் பேசிய, வெளிப்படுத்திய அவருடைய வார்த்தைகள், அவருடைய சித்தத்தின் தொகுப்பு. அதில் அவர் தருகின்ற போதனைகள் மட்டுமல்ல, அதில் காணப்படும் அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் உண்மையானவை. அவற்றை நாம் இடைச்செருகல்கள் என்றோ, கர்ண பரம்பரைக் கதைகள் என்றோ, யாரோ அவற்றைத் திணித்துள்ளார்கள் என்றோ விளக்கமளித்தால் நம்முடைய கண்ணும் இருதயமுந்தான் குளறுபடியாக இருந்து இந்த உலகத்தின் அடிப்படையில் அதற்கு விளக்கமளிக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.
வேதம் கர்த்தருடைய வார்த்தை என்று நம்புகிறவர்கள் கர்த்தர் வேதத்தைச் சரியாகத்தான் எழுதியிருப்பார் என்று நம்புவார்கள். ஆகவே நாம் வேதத்தை சத்திய வேதமாகப் பார்க்க வேண்டும், உலகத்தான் அணுகுவதைப்போல நாம் வேதத்தை அணுகக்கூடாது. இந்த இரண்டாவது அதிகாரத்தில் வருகிற நிகழ்ச்சிகள் பெத்தேல், எரிகோ, யோர்தான் ஆகிய மூன்று நகரங்களில் நடக்கின்றன. எலியாவும், எலிசாவும் பெத்தேலிலிருந்து எரிகோ சென்று, பிறகு அங்கிருந்து யோர்தானுக்குப் போகிறார்கள். எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு எலிசா யோர்தானிலிருந்து எரிகோவிற்குப் போகிறார், அங்கிருந்து பெத்தேலுக்குப் போகிறார். 2 வது அதிகாரத்தின் முதலாவது வசனம் பெத்தேலில் ஆரம்பித்து, இறுதியில் பெத்தேலிலேயே முடிகிறது. இந்த அதிகாரத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பூலோக வரைபட அமைப்பு நமக்கு உதவியாக இருக்கிறது. ஆண்டவர்தான் அதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆகவே இதை எழுதினவர் ஒரு காரணத்தோடுதான் இதை எழுதியிருக்கிறார்.
முதலாவது அதிகாரத்தை நாம் பார்க்கிறபோது ஆகாபின் மகன் அகசியாவின் ஆட்சிக் காலத்தோடு அது முடிகிறது, மூன்றாவது அதிகாரத்தை வாசிக்கிறபோது அகசியாவிற்குப் பிறகு வந்த அரசனோடு அது ஆரம்பிக்கிறது. இந்த இரண்டாவது அதிகாரம் இந்த நூலில் இல்லாமல் இருந்திருந்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் போயிருக்கும். இருந்தபோதும் அது இருப்பதற்குக் காரணம், கர்த்தர் இதை எழுதினவருக்குத் துணை நின்று இவ்வதிகாரம் இந்த இடத்தில் அமையும்படிப் பார்த்துக் கொண்டார். தேவனுடைய மக்களைப் பொறுத்தளவில் இது ஒரு முக்கியமான அதிகாரமாகும்.
இந்த அதிகாரத்தில் (2 இராஜாக்கள் 2:1-22) மூன்று முக்கிய விஷயங்களைக் கவனிப்போம்.
1. நம்மை ஆளும் கர்த்தர் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார் (2 இராஜாக்கள் 2:1-15)
எலியா எடுத்துக்கொள்ளப் போகிற நேரம் வந்தது.
“எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.” (2 இராஜாக்கள் 2:2).
பிறகு பெத்தேலிலும் எரிகோவிலும் தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவிடம் எலியா எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உனக்குத் தெரியுமா என்று கேட்பதை நாம் பார்க்கிறோம். 7 வது வசனத்தில்,
“தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்” (2 இராஜாக்கள் 2:7) என்று நாம் வாசிக்கிறோம்.
இங்கு நாம் கவனிக்கும் சம்பவம் யோர்தான் கரையில் நடந்திருக்கிறது. அவர்கள் யோர்தானுக்கு வந்தபோது எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி அதைத் தண்ணீரில் அடிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அவ்வாறு அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிகிறது, அவர்கள் தண்ணீரின் நடுவில் நடந்து அக்கரைக்குப் போனார்கள் என்றும் வாசிக்கிறோம். இதைப் பின்வருமாறு 2 இராஜாக்கள் 2:8 விளக்குகிறது,
“அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.”
இந்த நிகழ்வை நாம் கவனிக்கிறபோது எப்படி கர்த்தர் வனாந்தரத்தில் இஸ்ரவேல் மக்களை கானானுக்கு அழைத்துப் போகிறபோது அங்கிருந்த செங்கடலை இரண்டாகப் பிரித்தாரோ அதேபோல இங்கும் நடந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. அவர்கள் அக்கரைக்குப் போன பிறகு 9 வது வசனத்தில்,
“அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்” என்று நாம் வாசிக்கிறோம்.
அவ்வாறு கேட்டது எலியாவிற்குப் பிடித்திருந்தது. அப்போது 10 வது வசனத்தில்,
“அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.” என்று சொல்லுவதை நாம் காண்கிறோம்.
11-14 வரையுள்ள வசனத்தில்
“அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.” (2 இராஜாக்கள் 2:11-14)
இங்கு ஒரு பெரிய அருமையான காரியத்தை வேதம் நமக்கு விளக்குகிறது. கர்த்தர் எத்தனை பெரியவர், எத்தனை வல்லமையானவர் என்பதை நாம் இங்கு பார்க்கிறோம்.
நான் ஏற்கனவே அநேக தடவை விளக்கியது போல எலியாவும் எலிசாவும் எங்கு இருக்கிறார்களோ அங்கு ஆண்டவர் இருந்திருக்கிறார். அவர்கள் ஆண்டவரால் தயார் செய்யப்பட்டு அவரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள். இரண்டு பேரும் இஸ்ரவேலின் வரலாற்றில் மிக முக்கியமான தீர்க்கதரிசிகள். அவர்கள் இருந்த இடத்தில்தான் தேவ வசனம் இருந்தது. அந்நாட்களில் எங்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்களோ அங்கு தேவ வசனம் இருந்தது. எங்கு தேவ வசனம் இருந்ததோ அங்கு ஆண்டவர் இருந்தார். எங்கு மக்கள் தேவ வசனத்தை விசுவாசித்தார்களோ அவர்களோடு தேவன் இருந்தார். இந்தவிதத்திலேயே அன்று கர்த்தர் தன்னுடைய சித்தத்தை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்தினார். இதை நாம் மறுக்க முடியாது. இங்கே நாம் கர்த்தருடைய வல்லமையைப் பார்க்கிறோம். கர்த்தர் எலியாவோடும் இருந்தார், எலிசாவோடும் இருந்தார். அவர்கள் மூலம் நடைபெற்ற காட்சிகளைப் பார்த்து வியந்துவிட்டு அவற்றிற்குப் பின்னால் இருக்கும் கர்த்தரை நாம் மறந்துவிடக் கூடாது. இஸ்ரவேல் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதும் ஆண்டவர் அன்றைக்கு அவர்களோடு (தீர்க்கதரிசிகளோடு) இருந்தார்.
கர்த்தர் தன்னை வெளிப்படுத்திய விஷயத்தில் புதிய ஏற்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. எபிரெயர் 1:1-3 விளக்குவதுபோல் இயேசு கிறிஸ்துவின் வருகையோடு வேதம் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டிருப்பதால், பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி வந்திருந்த அற்புத செயல்கள் அனைத்தும் முதல் நூற்றாண்டோடு நிறுத்தப்பட்டுவிட்டன; இதைத் தேவனே செய்திருக்கிறார்.
எபிரெயர் 1:1-3
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
[1 கொரிந்தியர் 13:8-10; இதற்கான விளக்கத்தைப் பெற நான் எழுதிய “ஆதிசபையின் அற்புத வரங்கள்” நூலைப் பெற்று வாசியுங்கள்.] நாம் வாழும் புதிய உடன்படிக்கைக் காலத்தில் தீர்க்கதரிசிகள் இல்லை, வேதம் மட்டுமே கர்த்தரின் தீர்க்கதரிசனமாக நம் கையில் இருக்கிறது.
அன்று இஸ்ரவேல் எந்தவிதத்தில் மோசமாக இருந்தது? அவர்கள் தேவனை விசுவாசிக்கவில்லை. தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு எந்தவித மதிப்பையும் அளிக்கவில்லை. உடன்படிக்கையின் தேவனையே அவர்கள் நிராகரித்து வாழ்ந்தார்கள். வெறும் கல்லாக இருக்கிற பாகால்சேபூவை வணங்கிக் கொண்டிருந்தார்கள். முதலாம் அதிகாரத்தில் நாம் அதைப் பார்த்தோம். கர்த்தருக்கு நாட்டில் இடங்கொடுக்க மறுத்தார்கள், அது மிகவும் மோசமான பாவம். பத்துக் கட்டளைகளின் முதலாவது கட்டளையை அவர்கள் மீறிக்கொண்டிருந்தார்கள். ஆண்டவர் வேறெந்த தேவனையும் வழிபடக்கூடாது என்று சொன்னபோதும் அவர்கள் அதை மதிக்கவில்லை. இருந்தபோதும் இஸ்ரவேல் கர்த்தருடைய நாடாக இருந்தது. அவர் உருவாக்கிய நாடாக இருந்தது. அவர் ஒரு உடன்படிக்கையை அந்நாட்டோடு ஏற்படுத்தியிருக்கிறார், அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் மோசமாக நடக்கிறார்கள் என்பதற்காக கர்த்தர் அந்நாட்டை விட்டு ஓடிப்போக முடியாது. ஏதோ அந்த நாட்டைவிட்டு விரட்டப்பட்டது போல தோல்வியடைந்தவராக நடந்துகொள்ள முடியாது. அவர் தேவன், வல்லைமையுள்ளவர், இறையாண்மையுள்ளவர். அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருநாளும் பொய்யாகாது. அந்த நாட்டின் மூலம் அவர் என்னென்ன காரியங்களைச் செய்ய நினைத்தாரோ, என்னென்ன வாக்குறுதிகளை அளித்தாரோ அவைகள் நிகழ்ந்தே தீரும். ஆண்டவர் அதை நமக்கு இங்கு நினைவுபடுத்துகிறார். எலியா அன்றைக்கு தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகிறவனாக இருந்தான். நாட்டிற்கு வந்த பலவித ஆபத்துகளிலிருந்து எலியா ஆண்டவர் மூலம் அவர்களைத் தப்புவித்தான். அதேபோலத்தான் எலியா போன பிறகு அந்த ஆவியானவரின் வல்லமை எலிசாவில் இறங்குவதை இங்கு நாம் பார்க்கிறோம்.
இன்றைக்கு நாம் புதிய உடன்படிக்கையின் காலத்தில் இருக்கிறோம். இன்று தேவனுடைய சபை இந்த உலகத்தில் இருக்கிறது. உண்மையான சபைகள் இந்த உலகத்தில் இருந்து, அந்த உண்மையான சபைகள் வேதம் போதிக்கின்ற போதகர்கள், மூப்பர்களைக் கொண்டிருந்து, அந்த சபைகள் மெய்யாகவே ஆண்டவரை விசுவாசிக்கிற அங்கத்தவர்களைக் கொண்டிருந்து, உலகத்தையும் உலகத்தின் சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கர்த்தரை மட்டுமே நம்பி கர்த்தருடைய வழிகளில் நடந்துவருகிற பரிசுத்தமான சபைகளாக இருந்து வந்தால் அங்கு ஆண்டவர் இருக்கிறார். அந்த சபையை உலகம் ஒன்றும் செய்ய முடியாது. அதுதான் தேவனுடைய சபை, அங்கு ஆண்டவருடைய வல்லமை இருக்கிறது. சபை வரலாற்றில் எலியா, எலிசா போன்று வேறு மக்களையும் ஆண்டவர் எழுப்பியிருக்கிறார். ஜோர்ஜ் விட்ஃபீல்டு என்ற பெரிய அருமையான மனிதனை இங்கிலாந்தில் ஆண்டவர் எழுப்பினார், அவர் பெரிய அதிரடிப் பிரசங்கியாக இருந்தார். மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி அவருடைய செய்தியைக் கேட்டார்கள். அவருடைய பிரசங்கங்கள் மூலம் அதிரடியான மனந்திரும்புதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த ஆக்கத்தில் கூட அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தேவனுடைய மனிதர்கள் இஸ்ரவேலில் மட்டுமல்ல இன்றும் தொடர்ந்திருக்கிறார்கள். வல்லமையான பிரசங்கிகளை இன்றும் ஆண்டவர் எழுப்புகிறார். அவ்விதமானவர்களை எழுப்பி ஆண்டவர், நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்று சபைக்குக் காட்டுகிறார். ஆண்டவருடைய வார்த்தைகள் சரியானவிதத்தில் தெளிவாகவும், உண்மையாகவும் பிரசங்கிக்கப்படுகிறபொழுது ஆண்டவர் அங்கு இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இஸ்ரவேலில் அன்று விசுவாசிகள் அதிகமானோர் இருக்கவில்லை. அன்று தீர்க்கதரிசிகள் அதிகம் பேர் இல்லை, ஏனென்றால் ஆகாபும் அவனுடைய மகனும் தீர்க்கதரிசிகள் எல்லாரையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் அங்கிருந்த தீர்க்கதரிசிகளோடு தேவன் இருந்தார் என்று நாம் பார்க்கிறோம். இன்றைக்கு நம் காலத்திலும் நல்ல சபைகளும், ஆத்தும அக்கறை இருந்து வல்லமையாகப் பிரசங்கத்தை பிரசங்கிக்கிற போதகர்களும் கைவிட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சபைகள் என்ற பெயரை வைத்துக்கொண்டு அநேகர் சுயநலத்தோடு என்னென்னவோ செய்து வருகிறார்கள். ஊழியக்காரர்களாகத் தங்களை அறிவித்துக்கொள்கிறவர்கள் தேவனுக்கேற்ற பயத்தோடு சத்தியத்தைத் தெளிவாக, சரியாக விளக்கி வருகிறவர்களைக் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். இருந்தாலும் கூட ஆண்டவர் ஒரு சில நல்ல பிரசங்கிகளைக் கொடுத்து நம்மோடு இருக்கிறார் என்பதைக் காட்டுகிறார். வசனப் பஞ்சம் இன்றிருக்கிறது; அதன் மத்தியிலும் வசனம் போகவேண்டியவர்களைப் போயடைவதற்கான வழியை ஆண்டவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஆண்டவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.
2 இராஜாக்கள் 2 வது அதிகாரத்தில் நாம் கவனித்த, ஆண்டவர் வல்லமையாகச் செய்த காரியம் தீர்க்கதரிசியின் புத்திரருக்கு எத்தனை பெரிய பெலத்தைக் கொடுத்திருக்கும்! எலிசாவிற்கு அது எவ்வளவு பெரிய சந்தோஷத்தையும் பெலத்தையும் கொடுத்திருக்கும்! அதன் மூலம் நான் உன்னோடு இருக்கிறேன் என்று கர்த்தர் அங்கு எலிசாவுக்குக் காட்டுகிறார்.
14 வது வசனத்தில் நாம் இன்னொரு பாடத்தைப் படிக்க முடியும், கர்த்தரின் வல்லமை ஒரு காலப்பகுதியோடு மட்டும் தொடர்புடையது அல்ல என்பதே அது.
“எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.” (2 இராஜாக்கள் 2:14) என்று நாம் வாசிக்கிறோம்.
கர்த்தரின் வல்லமை என்பது அந்தக் காலத்தில் எலியாவோடும் எலிசாவோடும் மட்டும் இருந்தது, ஆகவே இதுபோல ஆண்டவர் இனிமேல் வல்லமையானவர்களைக் கொடுக்க மாட்டார் என்று நாம் நினைக்கக்கூடாது. வேதத்தை நாம் ஆரம்பத்திலிருந்து வாசித்துப் பார்க்கிறபோது ஆண்டவர் அநேக தேவமனிதர்களை எழுப்பியிருக்கிறார். ஆபிரகாம், மோசே, தாவீது, சாலொமோன், தீர்க்கதரிசிகள் என்பவர்களையும், பிறகு இருண்ட காலம் முடிந்த பிறகு யோவான் ஸ்நானனை எலியாவை நினைவுபடுத்தும் விதமாக அனுப்பி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு உலகத்திலிருக்கும் எல்லாப் பிரசங்கிகளையும் விட மேலான பிரசங்கியான இயேசு கிறிஸ்துவே மனிதனாக இந்த உலகத்திற்கு வந்தார் என்று நாம் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து போன பிறகும் கூட அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களை உலகத்திற்குக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆகவே கர்த்தருடைய வல்லமை என்பது ஒரு காலப் பகுதியோடு மட்டும் தொடர்புடையது அல்ல. 2 இராஜாக்கள் புத்தகத்தில் நடந்திருக்கும் அற்புதமான காரியங்கள் அந்தக் காலத்தோடு மட்டும் தொடர்புடையவையல்ல, அதற்கு முன்பும் அதுபோல நடந்திருக்கிறது, அதற்கு பின்பும் நடந்திருக்கிறது. சபை வரலாற்றில், இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நடக்காத அற்புதங்களா? அவர் சென்ற பிறகு அவருடைய அப்போஸ்தலர்கள் செய்யாத அற்புதங்களா? இன்றைக்கு முதல் நூற்றாண்டில் நடந்தது போன்ற அற்புதங்களைச் செய்யக்கூடிய வல்லமையை ஒரு மனிதனுக்கு ஆண்டவர் கொடுக்காமல் இருந்தபோதும், நாம் சபையாகக் கூடி வியாதியாக இருக்கிற ஒருவருக்காக ஜெபிக்கிறபோது, அந்த ஜெபத்தைக் கேட்டு ஆச்சரியமான விதத்தில் ஆண்டவர் வியாதிஸ்தனுக்கு விடுதலையைக் கொடுக்கிறார். அது கர்த்தரிடத்தில் இருந்து வந்த வல்லமையாக இருக்கிறது. ஆண்டவர் தனது வல்லமையை எல்லாக் காலங்களிலும் காண்பிக்கிறார்.
இந்த உலகத்தில் நாம் இந்நாள் மட்டும் நன்றாக வாழ்ந்து வருகிறோம். உலகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ வியாதிகளாலும், விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டு இந்த உலகத்தை விட்டே போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் இந்நாள் மட்டும் நம்மை காத்து வருகிறார், இதையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்று நாம் நினைக்கலாமா? கொஞ்சக் காலத்திற்கு முன்பு ஒரு சிறிய புள்ளி போன்ற கொரோனா என்ற கிருமி உலகத்தையே நடுங்க வைத்தது அல்லவா! கர்த்தர் அதிலிருந்து நம்மை காப்பாற்றினார் அல்லவா! அதில் ஆண்டவருடைய செயல் இல்லையென்று நினைக்கிறீர்களா? நாம் அணிந்த முகக் கவசத்தினாலும், பயன்படுத்திய கிருமி நாசினியினாலும் தப்பினோம் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஆண்டவருடைய சித்தத்தினாலே நாம் அதிலிருந்து காக்கப்பட்டிருக்கிறோம். எலியாவை ஆண்டவர் சுழல் காற்றின் மூலம் எடுத்துக்கொண்டு போனதுபோல இல்லாமல் இருந்தாலும் நாம் கொரோனாவில் இருந்து தப்பினது அற்புதம் இல்லையா? அது ஒரு பெரிய அற்புதம். இன்றுவரையும் ஆண்டவர் நம்மைப் பாதுகாத்து வருவதும் பெரிய அற்புதமாகும். கர்த்தருடைய வல்லமை ஒரு காலத்தோடு மட்டும் தொடர்புடையதல்ல. அதை நாம் நம்ப வேண்டும், நம் மக்களில் பலர் எலியா சுழல்காற்றில் எடுத்துக் கொண்டு போனதுபோல் ஏதாவது நடந்தால்தான் அற்புதமே தவிர வேறெதுவும் அற்புதமல்ல என்று தவறாக எண்ணுகிறார்கள். அற்புதம் அந்தவிதத்தில்தான் நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நாம் செய்கிற ஜெபத்தைக் கேட்டே ஆண்டவர் அற்புதங்களைச் செய்வார். அவற்றை சாதாரணமாக நாம் நினைத்துவிடக் கூடாது. உண்மைதான், அவர் எதையும் தம்முடைய சித்தப்படித்தான் செய்வார், இருந்தபோதும் தம்முடைய சித்தபடி நம்முடைய ஜெபத்தைக் கேட்டு பதில் தருவதும் அவர் செய்கிற அற்புதமாக இருக்கிறது. ஆண்டவர் எவ்வாறு அந்தக் காலங்களில் அற்புதங்களைச் செய்தாரோ அதேபோல இன்றைக்கும் தொடர்ந்து செய்கிறார். ஆண்டவர் செய்கிற அற்புதங்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.
நாம் ஒவ்வொரு வாரமும் சபைக்குச் சென்று ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கிறோம், அதன் மூலம் நம்மோடு பேசி நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டு வருகிறார், நம்மை திருந்தி வாழும்படி செய்கிறார், மனமாற்றங்களை சில பேருடைய வாழ்க்கையில் கொடுக்கிறார், நம் வாழ்க்கையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது அற்புதமில்லையா? ஆண்டவர் வேத பிரசங்கம் மூலம் தொடர்ந்து நம்மோடு பேசுகிறார் இது அற்புதமில்லையா? அவர் அற்புதங்களின் தேவன் ஒரு காலத்திற்கு மட்டும் தம்முடைய வல்லமையைக் காட்டவில்லை எல்லா காலத்திலும் அவர் தொடர்ந்து செய்கிறார். அப்போஸ்தலருடைய காலத்திற்கு பிறகு வரலாற்றை வாசித்துப் பார்க்கிற போது அற்புதங்கள் நடந்திருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஜோன் கல்வின், மார்டின் லூத்தர் மூலமாக பெரிய அற்புதங்களை ஆண்டவர் செய்தார். 18 வது நூற்றாண்டில் ஜோர்ஜ் விட்ஃபீல்டு இங்கிலாந்திலும், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அமெரிக்காவிலும் ஆண்டவர் எழுப்பி பெரிய அற்புதங்களைச் செய்தார். அந்தந்தக் காலத்திற்கு ஏற்றபடி தம்முடைய மக்களை எழுப்பி தன் வல்லமையை வெளிப்படுத்தி வருகிறார். சத்தியம் தொடர்ந்து பிரசங்கிக்கும் படியாக எலியாவிற்கும் எலிசாவிற்கும் வரங்களைக் கொடுத்ததுபோல தம்முடைய பிரசங்கிகளுக்கும் வரங்களைக் கொடுத்து பிரசங்கிக்க வைக்கிறார்.
14 வது வசனத்தில் இன்னொரு காரியத்தைப் பார்க்கிறோம், கர்த்தருடைய வல்லமை ஒரு மனிதனோடு மட்டும் தொடர்புடையதல்ல. எலியா உயர எடுத்துக் கொள்ளப்படுவது எலிசாவிற்கே பிடிக்கவில்லை. மூன்று முறை அவரைப் போகவிடாமல் தடுத்ததை நாம் பார்க்கிறோம். ஏன் அப்படிச் செய்தார்? ஒரு பெரிய படையைப் போல நாட்டைப் பாதுகாத்துக் கொண்டு வந்தவர் போய்விட்டால் இனி என்ன செய்யப் போகிறோம் என்று தான் அவ்வாறு செய்தார். அதுமட்டுமல்ல எலியாவின் மீது நிச்சயம் நல்ல பாசம் இருந்திருக்கும். ஆனால் ஆண்டவர் இங்கு 14 வது வசனத்தில், எலியா போனாலும் நான் இல்லாமல் போகப் போவதில்லை, என்னுடைய வார்த்தை இல்லாமல் போகப்போவதில்லை, என்னுடைய வல்லமையை நான் காட்டாமல் இருந்துவிடப் போவதில்லை என்று காண்பிக்கிறார். அதனால் எலியாவில் இருந்த ஆவி எலிசாவின் மேல் வந்து இறங்கியதைப் பார்க்கிறோம். அதைத்தான் எலிசாவும் கேட்டார், அதேவிதமாக ஆவி வந்து இறங்கியது. அப்படி இறங்கியதற்கு அத்தாட்சியாகத்தான் எலியாவின் சால்வையை எலிசா தண்ணீரில் அடித்தபோது அது இரண்டாகப் பிரிந்தது. அப்பொழுது உடனே தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவின் ஆவியும் அதன் வல்லமையும் எலிசாவின்மேல் வந்திறங்கியிருக்கிறது என்று நன்றாக விளங்கிக் கொண்டனர். ஆகவே கர்த்தருடைய வல்லமை ஒரு மனிதனோடு மட்டும் தொடர்புடையது அல்ல என்பது இதன் மூலம் விளங்குகிறது. கர்த்தருடைய வல்லமையினால் ஆபிரகாம், மோசே, தாவீது, சாலொமோன் போன்று பல மனிதர்களை ஆண்டவர் எழுப்பி வெவ்வேறு காலங்களில் பயன்படுத்துகிற தேவனாக இருக்கிறார். எலியா போக வேண்டிய நேரம் வந்தது, இருந்தபோதும் எலியா எவ்விதம் அதிரடியாக அற்புதங்களைச் செய்தாரோ அதேவிதமாக எலிசாவும் அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தார் என்று 2 இராஜாக்கள் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கிறபோது அறிந்துகொள்ள முடிகிறது. அந்த இரண்டு பேரோடும் இருந்தது யார்? அவர்களோடு இருந்தது ஜீவனுள்ள ஒரே தேவன்.
16 ஆம் நூற்றாண்டில் கல்வின், மார்டின் லூத்தர் எனப் பலவிதமான மனிதர்களை ஆண்டவர் எழுப்பினார். அன்றைக்கு இருந்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் குறைவானவர்களாக இருந்தனர். ஆனாலும் அவர்களுடைய பெயர் இன்றைக்கும் கேள்விப்படுகிற விதம் எலியா, எலிசாவைப் போல ஆண்டவர் அவர்களையும் பயன்படுத்தினார். 17 ஆம் நூற்றாண்டில் பியூரிட்டன் பெரியோர்களான ஜோன் ஓவன், ஜோன் பனியன் எனப் பலரை ஆண்டவர் எழுப்பியிருக்கிறார். தேவன் வித்தியாசமான மனிதர்களை எழுப்பித் தனது வல்லமையை சபைக்குக் காட்டுகிறார். நம்மில் சிலர் ஒருவரை மிகவும் உயர்வாக ஹீரோவைப் போலப் பார்ப்பார்கள். ஒருவரின் மீது அன்பு இருக்கலாம், பாசம் இருக்கலாம் ஆனால் கடவுளைப் போல் எவரையும் கணிக்கக்கூடாது. எல்லாரும் சாதாரண மனிதர்கள்தான். எல்லா மனிதர்களுக்கு இருக்கின்ற பலவீனம் அவர்களுக்கும் இருக்கும். நிச்சயம் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மேலாகச் சென்று கடவுளை வைக்க வேண்டிய இடத்தில் அவர்களை வைத்துவிடக் கூடாது. நாம் ஆராதிக்க வேண்டியது கர்த்தரை மட்டுமே. மனிதர்களை நாம் மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். ஆனால் கடவுளின் இடத்தில் அவர்களைத் தூக்கி வைத்துவிடக் கூடாது. ஆண்டவர் எலியாவின் மூலம் பெரிய அற்புதங்களைச் செய்தது போல எலிசாவைக் கொண்டும் செய்தார். அதை வரலாறு முழுக்க நாம் பார்க்கிறோம்.
ஸ்காட்லாந்தில் இருந்த இரண்டு பிரசங்கிகள் எனக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வருவார்கள். ஒருவர் ரொபர்ட் மரே மெக்செயின். அவர் 29 வயதில் இறந்துபோனவர். வாழ்ந்த அந்தக் கொஞ்சக் காலத்தில், ஆண்டவர் அவர் ஊழியத்தின் மூலம் செய்த அற்புதங்களை அநேக காலம் வாழ்ந்த ஊழியர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கவில்லை. மரே மெக்செயினுடைய பிரசங்கத்தின் மூலம் அநேகர் ஆண்டவரிடத்தில் வந்திருக்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற பிரசங்கங்கள் போலல்லாமல், உண்மையான சீர்திருத்த வேதப் பிரசங்கங்களை அவர் செய்திருக்கிறார். ரொபர்ட் மரே மெக்செயினுடைய சம காலத்தில் வாழ்ந்தவரும், அவருடைய நெருங்கிய நண்பருந்தான் ஆண்ட்ரூ போனர். ஆண்ட்ரூ போனர் 82 வயது வரைக்கும் வாழ்ந்தார். இந்த ஆண்ட்ரூ போனர் எவ்வாறு பிரபலமானார் என்றால் ரொபர்ட் மரே மெக்செயினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியே பிரபலமானார். மெக்செயினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ போனர் என்றே அவர் பலராலும் அழைக்கப்பட்டார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆண்டவர் ரொபர்ட் மரே மெக்செயினைப்போல ஆண்ட்ரூ போனரைப் பயன்படுத்தவில்லை. அப்படி இருந்த போதும் ஆண்ட்ரூ போனர் ஆண்டவருடைய கருவியாக இருந்திருக்கிறார். ஆண்டவர் அவரை இன்னொருவிதத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஆண்ட்ரூ போனர், தன் நாட்குறிப்பில் தன்னுடைய தியானத்தையும், அன்றாட நடவடிக்கைகளையும் எழுதி வைத்திருக்கிறார். அது அருமையானது, தமிழில் இல்லை, ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய ஆவிக்குரிய மனிதனாக எந்தளவுக்கு ஆண்டவரை விசுவாசித்து வாழ்ந்திருந்தார் என்பதை எல்லாம் அதில் எழுதி வைத்திருக்கிறார். ஆண்டவர் ரொபர்ட் மரே மெக்செயினை ஒருவிதத்தில் பயன்படுத்தினார், அதே ஆண்டவர் ஆண்ட்ரூ போனரை இன்னொரு விதத்தில் பயன்படுத்தினார். ஆண்டவர் வித்தியாசமான வரங்களை வெவ்வேறு மனிதர்களுக்குக் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் ஒருவரைப் பார்த்து ஒருவர் எரிச்சலடையக்கூடாது. ஆண்டவர் தன்னுடைய வல்லமையை வெவ்வேறு மனிதர்களில் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகிறார். ஆகவே கர்த்தருடைய வல்லமை ஒரு மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல; ஒரேயொரு மனிதனை அடிப்படையாகக்கொண்டும் அமைந்ததல்ல.
சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் இறக்குமுன் தனது கல்லறை பெரிதாகத் தெரியக்கூடாது, அதில் எதையும் தன்னைப்பற்றிப் பாராட்டி எழுதக்கூடாது என்று சொன்னார். அது இருந்த இடமே பெரியளவில் தெரியும்படி இருக்கக்கூடாது என்று எழுதி வைத்துவிட்டுப் போனார். ஏனென்றால் என்னைவிட எனக்கு இரட்சிப்பைக் கொடுத்துப் பயன்படுத்திய ஆண்டவருடைய பெயர்தான் பெரிதாகத் தெரிய வேண்டுமே தவிர என் பெயர் பெரிதாகத் தெரியக்கூடாது என்று கல்வின் நினைத்தார். அவ்விதமான தாழ்மை நமக்கு இருக்கிறதா? சிந்தித்துப்பாருங்கள். இன்றைக்கு இருபது வயதிற்கு முன்பே கிறிஸ்தவனாக வந்தவன் ஆறுமாதத்தில் ஜோர்ஜ் விட்ஃபீல்டு போல ஆகிவிட வேண்டும் என்று கனவு காண்கிறான். முறையாகக் கற்றுக்கொண்டு, நடைமுறையில் தவறிழைத்து, பின்பு அதைப் பக்குவமாய் சரிசெய்து கொண்டு முன்னேறி வர வேண்டும் என்கிற பொறுமை இல்லாமல் இருக்கிறான். உடனடியாக உயர்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவது எத்தனை பெரிய தவறு. மனிதனுக்குப் பொறுமை அவசியம், தாழ்மை வேண்டும், பக்திவிருத்தியில் அவன் வளரவேண்டும், அவ்வாறு வளரும்போது அனுபவம் வளரும். இளம் வயதிலேயே ஒருவனுக்கு எல்லாம் கிடைத்துவிடாது. ஒருமுறை அமெரிக்காவில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரிக்குச் சென்று மாபெரும் கிறிஸ்தவப் பிரசங்கிகளுடைய கல்லறைகளும் ஒரே இடத்தில் இருந்ததைப் பார்த்தேன். அங்கு அவர்களைப் பற்றி பெரியதாக அக்கல்லறைகளில் ஒன்றிலாவது எழுதி வைக்கப்படவில்லை. வரலாற்றில் அவர்களைப் பற்றிப் படித்ததனால் அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்கள் என்று அறிந்து கொண்டேனே தவிர அவர்களுடைய கல்லறைகளில் ஒன்றும் எழுதி வைக்கப்படவில்லை. அவர்களிடத்தில் தாழ்மை மிகவும் அதிகமாக இருந்தது.
2. இப்பகுதி கர்த்தருடைய ஞானம் எத்தனை பெரியது என்பதைக் காட்டுகிறது (2 இராஜாக்கள் 2:15-18)
“எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி: இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.” (2 இராஜாக்கள் 2:15-16).
இங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவைத் தேடும்படி எலிசாவிடம் கேட்கிறார்கள். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் ஆண்டவருடைய இரதம் நாம் ஓட்டுகிற வண்டியைப்போலப் பாதியிலேயே எங்காவது நின்று போயிருக்கும் என்று எண்ணியது போலிருக்கிறது. அதனால் அவர்கள் அவரைத் தேடும்படி எலிசாவிடம் கேட்கிறார்கள். எலிசா அவர்களை அனுப்ப வேண்டாம் என்று பதில் சொன்னார். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தபடியால் போய்த் தேடுங்கள் என்று எலிசா சொன்னார்.
“அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாள் அவனைத் தேடியும் காணாமல், எரிகோவிலிருந்த எலிசாவிடம் திரும்பிவந்தபோது, அவர் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றார்.” (2 இராஜாக்கள் 2:17-18).
இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? கர்த்தருடைய ஞானம் எவ்வளவு பெரியது என்பதைக் கற்றுக்கொள்கிறோம். எலியாவுக்கு இருந்த ஞானம் எலிசாவிடம் இருந்தது. எலிசாவிடம் அவர்கள் கேட்டபோது போக வேண்டாம் என்று அவர் சொன்னது ஞானமான வார்த்தை. எலிசாவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தது எலியா போனது கர்த்தருடைய செயல் என்று. எலியா போனது தனக்கே விருப்பமில்லாததாக இருந்தபோதும் எலியா போன பிறகு அவர் திரும்பி வரமாட்டார் என்று எலிசாவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அப்போது எலிசா அவர்களுக்குப் புத்தி சொல்லியும் அவர்கள் கேட்க மறுத்தார்கள். கடைசியில் தேடிச் சலித்துப் போய்த் திரும்பி வந்தார்கள்.
கிறிஸ்தவர்களுக்கு ஞானம் வேண்டும். சபையில் இருக்கிற வாலிபரை நான் கவனித்துப் பார்க்கிறேன். அவர்கள் எப்போதும் ஒரு காரியத்தை சொன்னவுடனே சரியாகக் காதுகொடுத்துக் கேட்காமல் தங்கள் வழியில்தான் போகப் நினைப்பார்கள். ஏனென்றால் அவர்களிடம் ஞானம் இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். சொன்னவுடனேயே கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும், ஞானம் இல்லாதவர்கள் தவறாகத்தான் நடக்க முடியும். இங்கு இவர்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரராக இருந்தபோதும் ஞானம், நிதானம் எல்லாம் குறைவாகவே அவர்களிடம் இருந்தது. ஞானம் இல்லாமல் நடப்பது மிகவும் மோசமானது. அதற்குதான் ஆண்டவர் நமக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த வேதத்திலிருந்து தேவனுடைய சத்தியத்தையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளுகிறோம். எல்லா காரியங்களிலும் சத்தியத்தைப் பயன்படுத்த வேண்டும், ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் ஆண்டவருடைய வல்லமையைக் கண்டார்கள், ஆனால் ஞானம் இல்லாததனால் எலியாவை எடுத்துக் கொண்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலிசா சொன்னதை அவர்களால் நம்ப முடியவில்லை. எலிசா ஞானமாகப் புத்தி சொன்னபோதும் அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து அவர் சலித்துப் போகிறவரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது மிகவும் தவறு. ஞானம் இல்லாததனால் அது எங்கு சென்று முடிந்தது? மூன்று நாட்களை அவர்கள் வீணாக்கினார்கள்.
ஞானம் இல்லாததனால் தங்கள் வாழ்க்கையையே வீணாக்கிக் கொள்ளுகிறவர்களும் உண்டு. ஆண்டவரை அறியாத பெண் மீது ஆசைப்படுவது மிகவும் தவறு என்று வாலிபர்களுக்கு புத்தி சொன்னால் உடனே அதைக் கேட்டுச் சிந்திக்க வேண்டும் அல்லவா? கேட்டுச் சிந்தித்து இது ஆபத்தான வழிதான் என்று உணர்ந்து அதிலிருந்து மனந்திரும்ப வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் தங்கள் இச்சைக்கு இடம் கொடுத்து வாழ்க்கையையே அழித்துக் கொண்டவர்கள் அநேகர். நமக்கு ஞானம் இருக்க வேண்டும், அதற்காக ஜெபிக்க வேண்டும். அதுமட்டுமல்ல வாழ்க்கையில் பல காரியங்களில் போதகர்கள் ஆலோசனை சொன்னால் அவர்கள் கேட்பதில்லை. ஏனென்றால் இறுமாப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், அதைவிட மோசமானது ஒன்றுமில்லை. இறுமாப்பு உள்ளவர்களுக்கு ஞானம் வராது, அவர்கள் எப்போதும் தங்கள் முடிவுதான் சரி என்று நினைப்பார்கள். இறுமாப்பு உள்ள இடத்தில் தாழ்மை இருக்காது. ஞானமாய் சொல்லுகிற காரியத்தை அவர்கள் தங்களுக்கு விரோதமாய் அது இருக்கிறது என்று பார்ப்பார்கள். அவர்களுடைய இருதயம் சரியில்லை, ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். ஒரு காரியத்தில் நாம் ஞானமாக நடக்கிறபோது தவறான வழியில் போகாமல் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆண்டவருடைய வார்த்தையின் மூலம் எலிசாவிடம் ஞானம் இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. ஆண்டவர் கொடுக்கும் ஞானம் மிகவும் பெரியது.
3. இப்பகுதியில் கர்த்தருடைய கிருபையின் மகத்துவத்தைக் காண்கிறோம் (2 இராஜாக்கள் 2:19-22)
இந்தப் வேதப் பகுதியிலிருந்து மட்டுமே கர்த்தருடைய கிருபை எவ்வளவு பெரியது என்று ஒரு செய்தியைக் கொடுத்துவிட முடியும்.
“பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.” (2 இராஜாக்கள் 2:19-22).
இங்கு இந்தப் பட்டணம் என்று எரிகோ பட்டணத்தைக் குறித்து சொல்லப்படுகிறது. இங்கு “இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம்” என்று சொல்லுவதை சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். உண்மையிலேயே தண்ணீரும் நிலமும் மோசமாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இந்த நிலம் பாழ்நிலம் என்று சொல்லப்படுவது அங்கிருந்த மக்களுக்கு அடையாளமாக இருக்கிறது. அங்கிருந்த மக்கள் மோசமான நிலையில் இருந்தார்கள். என்ன மோசமான நிலையில் இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, பாழ்நிலம் என்று சொல்லப்படும் வார்த்தைக்கு மூல மொழியை ஆராய்ந்தால், அந்தத் தண்ணீர் அந்த நிலத்தையும் மக்களையும் மிகவும் பாதித்திருந்தது என்று சொல்லப்படுகிறது. என்ன பாதிப்பு என்றால் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் இருந்து அந்த நிலத்தையும் அங்கிருந்த மனிதர்களுக்கும், மாடுகள் போன்ற ஜீவன்களுக்கும் ஆபத்தாய் போய் முடிந்தது. அந்தத் தண்ணீரைக் குடித்த மிருக ஜீவன்கள் இறந்து போயின. அதுமட்டுமல்ல அந்த தண்ணீரைக் குடித்த பெண்களுக்கு குழந்தைகள் இல்லாமல் மலட்டுத்தன்மை ஏற்பட்டது.
ஏன் இவ்வாறு ஏற்பட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைப் பற்றி அறிந்துகொள்ள நாம் யோசுவா புத்தகத்தைத் வாசிக்க வேண்டும். இதெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை.
“அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.” (யோசுவா 6:26) என்று நாம் வாசிக்கிறோம்.
இங்கு யோசுவா தன் படையோடு எரிகோ பட்டணத்தைக் கைப்பற்றிய பிறகு இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். எரிகோ பட்டணத்திற்கு உள்ளே போகும் போது யோசுவா அதிலிருந்து ஒன்றையும் எடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தார். ஆனால் ஆகான் அதையும் மீறி சில பொருட்களை எடுத்து மறைத்து வைத்து மாட்டிக்கொண்டு அழிந்து போனான். ஆண்டவர் அந்த எரிகோ பட்டணத்தைச் சபித்தார். இதெல்லாம் நடந்து அநேக ஆண்டுகளுக்குப் பிறகு 1 இராஜாக்கள் 16:34 வது வசனத்தில்,
“அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்” என்று சொல்லப்படுகிறது.
இங்கு எரிகோ பட்டணம் மீண்டும் கட்டப்பட்டது என்பதையும், அப்போது யோசுவா சொன்னபடி அங்கு நடந்ததென்பதையும் அறிந்துகொள்கிறோம். பிறகு 2 இராஜாக்கள் புத்தகத்திற்கு நாம் வரும்போது அதில், தண்ணீர் சரியில்லை, மிருக ஜீவன்கள் எல்லாம் இறந்து போயின, பெண்கள் எல்லாருக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட்டது என்பதை வாசிக்கிறோம். இந்த நிலையில் பல காலங்களுக்குப் பிறகு அந்தப் பட்டணத்திற்கு விடுதலை வருகிறது.
“அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” (2 இராஜாக்கள் 2:20-21).
இங்கு எலியாவோடு இருந்த ஆண்டவர் எலிசாவோடு இருக்கிறதைப் பார்க்கிறோம். வெறும் உப்பை அந்தத் தோண்டியில் போட்டு அவர் செய்த செயல் ஒரு மாபெரும் அற்புதம். அதுவரை சபிக்கப்பட்டிருந்த எரிகோவிற்கு அன்றைக்கு விடுதலை வந்ததைக் காண்கிறோம்.
அதே எரிகோ நகருக்கு மனித குமாரனாகிய இயேசு புதிய ஏற்பாட்டுக் காலத்தில் போனதை வாசிக்கிறோம், “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்” (லூக்கா 19:1) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு இயேசு எரிகோ வழியாகப் போகிறார். அங்கே அவர் சகேயுவைப் பார்க்கிறார். கிருபையின் மூலமாக, மிக மோசமானவனாக, யூதர்களின் வெறுப்புக்குள்ளாகியிருந்த சகேயுவுக்கு அன்று மனந்திரும்புதலாகிய விடுதலை வந்தது. சபிக்கப்பட்ட இடங்களுக்கும் ஆண்டவர் விடுதலையைக் கொடுத்திருக்கிறார். அவ்விடங்களில் தேவகோபத்தைச் சுமந்து நின்ற மனிதர்களுக்கும் அவர் விடுதலையை அளிக்கிறார்.
மனிதர்கள் சபிக்கப்பட்டவர்களைப் போல பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் கண்களைக் குருடாக்கியிருக்கிறது, அவர்கள் போகிற இடமெல்லாம் தீமையாக இருக்கிறது, தீமையைத் தவிர நல்லதைச் சிந்திக்க அவர்களால் முடிவதில்லை. யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்றளவுக்கு பாவம் அவர்களை மோசமான நிலையில் வைத்திருக்கிறது. ஆண்டவரை விசுவாசிக்காத நம் பிள்ளைகள் அப்படித்தான் இருக்கிறார்கள். நம்முடைய அப்பாவோ, அம்மாவோ உறவினர்களோ அவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவரை அவர்கள் விசுவாசிக்காதபோது மிகவும் மோசமாக எரிகோ பட்டணம் இருந்தது போலதான் இருக்கிறார்கள். பாவம் அவர்களை ஆண்டவரை விசுவாசிக்காமல் இருக்கச் செய்கிறது. ஆண்டவரை விசுவாசிக்காதவர்களை எல்லாம் அழித்திருக்கலாம், அவ்வாறு அவர் அழித்திருந்தாலும் அது நீதியாகத்தான் இருந்திருக்கும். அவரிடத்தில் நீதிக் குறைவையோ பரிசுத்தக் குறைவையோ பார்க்க முடியாது. ஆண்டவர் எவ்வளவு கிருபையாக இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.
நாம் செய்த பாவத்தினால் நாம் பாவிகளாகவும் மீறினவர்களாகவும், கர்த்தரை நேசிக்காதவர்களாகவும், அன்பு காட்டாதவர்களாகவும் இருக்கிறோம். அது ஆண்டவருடைய தவறல்ல, நாம் செய்த பாவத்தின் விளைவு. நாம் பாவஞ் செய்தபடியால் நிச்சயமாக தண்டித்து அழிக்கப்பட வேண்டியவர்களாக இருந்தபோதும் ஆண்டவர் நம்மை அழிக்காமல் தன்னுடைய ஒரே குமாரனை நம்முடைய விடுதலைக்காகப் பலியாக மரிக்க ஒப்புக்கொடுத்தார். நாம் யாரும் கெட்டழிந்து போவது அவருடைய விருப்பமாக இருக்கவில்லை. அவர் தொடர்ந்து நம்மீது நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறார். அவருடைய சுவிசேஷம் உலக நாடுகள் முழுவதும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்படியாக அதற்கான வழிகளை அவர் ஏற்படுத்தினார். அவ்வாறு சாட்சியாக அறிவிக்கப்பட்ட பின்பு இயேசு நான் மீண்டும் வருவேன் என்று சொல்லியிருக்கிறார். சுவிசேஷம் எல்லோருக்கும் அறிவிக்கும்படியாக அவர் ஏன் செய்தார்? நாம் மனந்திரும்ப வேண்டும், தொடர்ந்து பாவ நிலையிலேயே இருந்து அழிந்துபோகக் கூடாது, இருதயம் கடினப்பட்டுப் போய்விடக்கூடாது, ஆகாபைப் போல அகசியாவைப் போல இல்லாமல் போய்விடக் கூடாது, நாம் பரலோகம் போக வேண்டும், ஆண்டவரோடு இருக்க வேண்டும், அவரோடு பேசி உறவாடி சந்தோஷப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தொடர்ந்து நம்மோடு வார்த்தையின் மூலம் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஜீவனுள்ள இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு எரிகோவிற்கு வந்த விடுதலை வரும், சகேயுவிற்கு வந்த விடுதலை வரும். சகேயுவிற்கு ஆண்டவரின் மீது அன்பு ஏற்பட்டது. ஆண்டவராகிய இயேசுவின்மீது ஏன் உங்களுக்கு அன்பு இல்லாமல் இருக்கிறது? அவருடைய அன்பை அறிந்து, வாழ்க்கையில் அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு வாழுகிறவர்கள் உங்களைச் சுற்றி அநேகர் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் இருதயம் இன்னும் மாறாமல் இருப்பதற்கு காரணம் ஆண்டவர் அல்ல, நீங்கள்தான். இருதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். இயேசுவை நேசிக்கப் பாருங்கள், அவர் ஒருநாளும் உங்களைக் கைவிடமாட்டார். தன்னுடைய வல்லமையான கரங்களினால் உங்களை கடைசி வரையிலும் பாதுகாப்பார். ஆகாப் என்னென்னவோ முயற்சி செய்து எலியாவை இல்லாமல் ஆக்கிவிட பார்த்தான். ஆனால் ஆண்டவர் எலியாவோடு இருந்தார். அவனைப் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார். இறக்காமல் பரலோகம் போன இரண்டு மனிதர்களில் எலியாவும் ஒருவர். தேவன் உங்களையும் பாதுகாப்பார். இறக்காத ஆத்துமாவை உங்களுக்கு கொடுத்திருக்கிற தேவன், உங்கள் ஆத்துமா பாவத்தினால் நரகத்தில் அழியாதபடி பரலோகத்திற்கு கொண்டுபோவதற்காகதான் தன்னுடைய ஒரே குமாரனை அனுப்பினார். இனி இருக்கிற நாட்களில் அவரை விசுவாசித்து அவரில் அன்பு காட்டி அவருக்காக வாழுங்கள். அதைவிட பெரிய கிருபை வேறெதுவும் இருக்க முடியாது.