1. வாசகர்களே!
2. நுழைவோம் வாருங்கள் கிறிஸ்தவ இலக்கியச் சோலை
3. தகவல் சேகரிப்பு – கற்றறிதல் – எதிர்வினைகள்
4. ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தில் கிறிஸ்தியானின் மனமாற்றம்
5. பாவம் பொல்லாதது – வாசிப்பனுபவம்
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இன்னுமொரு இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். வழமைபோல் இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்த இதழில் ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தின் பிரதான கதாபாத்திரமான கிறிஸ்தியான் எந்தக் கட்டத்தில் மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் அடைந்தான்? என்ற கேள்வியை ஆராய்ந்து விளக்கியிருக்கிறேன். இது பலருக்கும் குழப்பமாக இருந்திருக்கும் கேள்வி. அத்தோடு மோட்சப் பயணம் ஓர் இறையியல் நாவலாக இருப்பதால் அதை வெறும் நாவலாக மட்டும் வாசித்திருப்பவர்களுக்கு இறையியல் போதனைகள் புரியாமல் இருந்திருக்கின்றன. அதுபற்றி இவ்விதழில் வந்திருக்கும் ஆக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும். தொடர்ந்தும் மோட்சப் பயணத்தில் விளக்கப்பட்டிருக்கும் இறையியலை ஆராய்ந்து விளக்கத் தீர்மானித்திருக்கிறேன். கிறிஸ்தவர்கள் அவசியம் வாசித்துப் பயனடைய வேண்டிய கிறிஸ்தவ இலக்கியங்களில் ஒன்று மோட்சப் பயணம். அதுவும் இது சீர்திருத்த, பியூரிட்டன் இலக்கியங்களில் தலைசிறந்தவற்றில் ஒன்றாக இருப்பதையும் வாசகர்கள் உணர்வது நல்லது.
வாசிப்பைப் பற்றியும், வெறும் தகவல் சேகரிப்புக்கும் கற்றறிதலுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு பற்றியும், ஆக்கபூர்வமான எதிர்வினையளிக்க வேண்டிய அவசியத்தையும் ஒரு ஆக்கம் இந்த இதழில் விளக்குகிறது. உங்களுடைய சிந்தனைக்கு அவல் போட்டதுபோல் இந்த ஆக்கம் பலனளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கிறிஸ்தவ இலக்கியங்கள் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பையும், வாசகர்களிடமிருந்து வந்திருக்கும் கடிதங்களின் குறிப்புகளையும் இவ்விதழில் காணலாம். அத்தோடு, நமது தீவிர திருமறைத்தீப வாசகர்களின் ஒருவரான ஷேபா மிக்கேள் ஜோர்ஜ் “பாவம் பொல்லாதது” நூலுக்கான கருத்துரையையும் அனுப்பிவைத்திருக்கிறார். இதுவரை நூலை நீங்கள் வாசிக்காதிருந்தால் அதை வாங்கி வாசிக்க இக்கருத்துரை உதவ வேண்டுமென்பதே என் ஜெபம்.
இந்த இதழோடு 2023 ஐ நாம் முடிவுக்குக் கொண்டுவருகிறோம். வரப்போகும் வருடம் நமக்கெல்லாம் பலனளிக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்க கர்த்தர் உதவட்டும். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி – ஆசிரியர்.
நுழைவோம் வாருங்கள் கிறிஸ்தவ இலக்கியச் சோலை
நான் எழுதி வெளியிட்டிருக்கும் “தோமா கிறிஸ்தவம்” நூல் இப்போது வெளிவந்து விற்பனையாகி வருகிறது. நான் வேகமாக எழுதிய நூல்களில் ஒன்று இது. இதை எழுதவேண்டும் என்ற திட்டம் இருந்ததில்லை.
1980 களில் பிரபலமாக ஆரம்பித்த இந்தப் புராணக்கதை இப்போது மறுபடியும் தலைதூக்கி கிறிஸ்தவர்களைப் பாதித்து வருவதாக சில வாலிபர்கள் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தந்த ஊக்கத்தால் இதை எழுத நேர்ந்தது. இதை எழுதியது அவசியந்தான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஏனெனில், இதுவரை கிறிஸ்தவர்களில் எவரும் “தோமா கிறிஸ்தவம்” என்ற பெயரில் இருந்து வரும் கருத்துக்களுக்கு எதிர்வினையளித்து எழுதிய எதையும் நான் வாசித்ததில்லை. ஆனால், அதற்கு வக்காலத்து வாங்கித் தீனிபோட்டு வளர்த்து வரும் அநேகர் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதோர் மத்தியிலும் இருந்து வருகிறார்கள். எனக்குத் தெரிந்து, கிறிஸ்தவரல்லாத, அதே நேரம் கிறிஸ்தவத்தை அதிகம் மதிக்கும் படைப்பாளி ஜெயமோகன் மட்டுமே மரியாதையோடு இதற்கு மறுப்புத் தெரிவித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் இதன் போலித்தனம் புரிகிறபோது நம்மவர்களுக்கு அது ஏன் புரியாமலிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
தோமாவின் பெயரைப் பயன்படுத்தி எழுந்திருக்கும் போதனைகள் அனைத்தும் எந்தளவுக்கு வேதக் கிறிஸ்தவ சுவிசேஷத்திற்குக் களங்கம் உண்டாக்கியிருக்கின்றன என்பது தெரியாமல் தமிழ் கிறிஸ்தவம் இருந்து வருவது எனக்குப் பெரிய மனவருத்தத்தை உண்டாக்குகிறது. அதேவேளை, இந்துத்துவாக்களுக்கு ஆத்திரமூட்டி அவர்களை உசுப்பிவிடும் கைங்கரியத்தையும் தோமா கிறிஸ்தவம் செய்திருக்கிறது. கிறிஸ்து இயேசுவோ, பவுலோ ஒருபோதும் செய்திராத, சாத்தான் மட்டுமே செய்யும் செயலைத் தோமா கிறிஸ்தவம் செய்திருக்கிறது. வேதத்தில் நல்லறிவில்லாமலும், சிந்திக்கத் தெரியாமலும் இருக்கிறவர்கள் மட்டுமே இந்தப் பிசாசின் வலையில் விழுந்து தங்களுக்குப் பாதிப்பேற்படுத்திக்கொள்ளுவார்கள்.
சர்வ வல்லவரான தேவனின் வெளிப்படுத்தலாகிய வேதத்திற்குத் தரவேண்டிய இடத்தை, வேதத்தில் அடையாளம் காணமுடியாத தோமா கிறிஸ்தவத்திற்கு கிறிஸ்தவர்கள் கொடுத்திருப்பது மாபெரும் தவறு. நான் ஒரு சீர்திருத்த அப்போலஜிஸ்ட். ஒரு பிரசங்கியாக சத்தியத்துக்காக வாதாடி அதை நிலைநிறுத்துவது என்னுடைய கடமை. அதைச் செய்யும் என் அடிப்படை அணுகுமுறைக்குப் பெயர் “முன்னனுமானக் கணிப்பியம்” (Presuppositionalism). அதை ஆங்கிலத்தில் Presuppositional apology என்று கூறலாம். அதாவது, சர்வ அதிகாரமுள்ளது வேதம் மட்டுமே. அதனால் இறையாண்மையுள்ள வேதத்தில் தங்கியிருந்து அதை மட்டுமே பயன்படுத்தி சத்தியத்தை நிலைநாட்டுவது என் “முன்னனுமானக் கணிப்பியம்.” இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தியே நான் தோமா கிறிஸ்தவத்தின் தோலை உரித்துக் காட்டியிருக்கிறேன். இதற்காக நான் தர்க்கத்தையோ, உலக ஆதாரங்களையோ ஒதுக்கிவிடுகிறேன் என்று அர்த்தமல்ல. நம்பத்தகுந்த ஆதாரத்தை மட்டுமே நம்பமுடியும்; புராணக் கதைகளையல்ல. தர்க்கத்தை என் நூலில் நான் பயன்படுத்தாமலில்லை; முழு நூலுமே என் “முன்னனுமானக் கணிப்பியத்” தர்க்கமாகவே அமைந்திருக்கிறது. இதோடு, நின்றுவிடாமல், கிறிஸ்தவர்கள் வேத மூக்குக்கண்ணாடியை அணிந்து இந்த விஷயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் என் ஆய்வுமுறை விளக்குவதாக இருக்கிறது. அநேகருடைய இருதயத்தில் இது சத்திய வெளிச்சத்தை ஏற்படுத்துமானால் அதையே நூலுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாகக் கருதுவேன்.
ஜெயமோகனுக்கு நூலின் ஒரு பிரதியை அனுப்பி அவருடைய கருத்தைக் கேட்டிருக்கிறேன்; பதிலையும் எதிர்பார்த்திருக்கிறேன். பதில் கிடைக்குமானால் நிச்சயம் அது இவ்விதழில் வெளிவரும்.
தோமா கிறிஸ்தவம் – வாசிப்பனுபவம்
தோமா கிறிஸ்தவம் நூலை வாசித்துவிட்டு நமது நூல்களின் புதிய வாசகர், நண்பர் தனபால் தேவராஜ் உடனடியாகப் பின்வரும் செய்தியை வாட்ஸ்அப் ஆடியோ செய்தியாக அனுப்பியிருந்தார்.
“தோமா கிறிஸ்தவம் நூலை வாசித்து முடித்துவிட்டேன். அது கையில் கிடைத்தபோதே மிக மிக ஆனந்தமடைந்தேன். நெடுநாட்களாகவே சாது செல்லப்பா, இன்னும் இந்துப் புராணங்களில் இருந்து கிறிஸ்தவத்தை விளக்குகிறவர்கள் மீது எனக்கு ஒருவகைக் கோபம்கூட இருந்தது. அதேபோல் பிரசங்கங்களில் திருக்குறளைப் பயன்படுத்துகிறவர்கள், புராண வேதங்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீதும், இவர்கள் எந்த வேதத்தைப் படித்திருக்கிறார்கள்? என்ற எண்ணம் ஏற்படும். அதிலெல்லாம் இருந்து எடுத்துக்காட்டுகளை இவர்கள் ஏன் முன்வைக்க வேண்டும்? என்று எண்ணுவேன். நான் கிராமத்தில் வளர்ந்தவன். அந்தப் பாஷையில் சொல்லுவதானால், நீங்கள் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறீர்கள் ஐயா! இந்தப் புத்தகத்தை வாசித்தபோது, உண்மையாய்ச் சொல்லுகிறேன், பல நேரங்களில் எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. பல வேளைகளில் நான் இருக்கையைவிட்டு எழுந்து ஜெபம் செய்து, குதி குதித்து உங்களுக்காக ஆண்டவரைத் துதித்திருக்கிறேன். உங்கள் வீரத்துக்காக, கடவுள் உங்களுக்குத் தந்திருக்கும் எழுத்துத் திறமைக்காக, உண்மையை உடைத்து சிறப்பாய் எழுதியிருப்பதற்காக, கர்த்தரைத் துதிக்கிறேன். தெய்வநாயகம், சாது செல்லப்பா மற்றும் “உடைகிறது இந்தியா” வை எழுதியவர்கள் எல்லாம் செய்யும் பொய்யான பிரச்சாரங்களை விமர்சித்து நீங்கள் சிறப்பாக எழுதியிருப்பது எனக்கு மிக மிக சந்தோஷத்தைத் தருகிறது. தோமா கிறிஸ்தவம் நூலைக் கோடிட்டு வாசித்திருக்கிறேன். நூலை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய நூல்களில் நான் முதல் முதலாக வாசிக்கும் நூல் இது. எனக்கு மிகவும் ஆனந்தமேற்பட்டது; அநேக உண்மைகள் புலப்பட்டன. இந்த ஞானத்தை உங்களுக்குத் தந்த பரிசுத்த ஆவியானவரைத் துதிக்கிறேன். இதைப் பலரும் வாசிக்கும்படியாக நூலை வாங்கி அவர்களுக்குப் கொடுக்கப் போகிறேன். அந்த வேலையைச் சீக்கிரமாகவே ஆரம்பிக்கப்போகிறேன். மறுபடியும் உங்களுக்கு நன்றி.”
இதேபோன்று பெங்களூரில் வாழும், முன்னாள் ஆசிரியரான எலிசபெத் என்பவரும் தோமா கிறிஸ்தவம் நூலை வாசித்துவிட்டுத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதையும் இங்கே தருகிறேன்.
“இந்நூலின் ஆரம்பம் முதல் இறுதிவரை பரிசுத்த ஆவியானவரின் துணை ஆசிரியரோடிருந்திருப்பதை நூல் வழியாக அறியமுடிந்தது. இல்லையெனில் சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோரின் குருட்டுத்தனத்தையும், பொய்களையும் ஆய்வுசெய்து அவற்றின் தன்மைகளை உணர்ந்தபோது கோபத்தைத் தூண்டக்கூடிய சூழலிருந்தபோதும், பொறுமையோடு நிதானமாக வேதவாக்கியங்களின் அடிப்படையில் சரியாக வேதத்தை இந்நூலில் விளக்கியிருப்பது அருமை. ஜீவனுள்ள தேவனாகிய பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்ட பரிசுத்த வேதாகமத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற துடிப்பை ஆசிரியரிடம் காணமுடிகின்றது.
கிறிஸ்தவத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய தோமா கிறிஸ்தவப் போதனைகளில் மயங்கி இரையாகும் மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம். வாசகர்களை நூல் நிச்சயம் சிந்திக்க வைக்கும்; சீர்படுத்தும், போலிப்போதனையாளர்களிடமிருந்து விடுவிக்கும். ரிக் வேதத்தில் இருந்து சாது செல்லப்பா விளக்கும் பிரஜாபதி இயேசு கிறிஸ்து அல்ல. இயேசு கிறிஸ்து யார்? என்பது இந்நூலில் ஐயமற விளக்கப்பட்டிருக்கிறது. நூலை வாசித்தபிறகாவது வாசகர்கள் மெய்க்கிறிஸ்தவத்தை அறிந்துகொள்ள முயலட்டும் (கலாத்தியர் 1:6-8).
ஆசிரியரின் கடின உழைப்பை நூலை வாசித்து அறிந்துகொள்ள முடிகிறது. இவரைப் போன்ற அநேகரை ஆண்டவர் எழுப்பட்டும். இந்நூலை இத்தனை தெளிவாக எழுதத் துணைபுரிந்த கர்த்தருக்கு நன்றிகூறி மகிழ்கிறேன். சரியானபடி எழுதி வெளியிட்ட ஆசிரியருக்கும் என் நன்றிகள்.”
பாவம் பொல்லாதது – ரால்ப் வென்னிங்
ரால்ப் வென்னிங்கின் “பாவம் பொல்லாதது” நூல் ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. தமிழில் பாவத்தை இந்தளவுக்கு நுணுக்கமாக விளக்கும் ஒரு நூலும் இல்லையெனலாம். இதையே இதுவரை நூலை வாசித்திருப்பவர்கள் எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் வேகமாக வாசிக்கும் பழக்கமில்லாதவர்களாக இருப்பதால் பொறுத்திருந்தே கருத்துத் தெரிவிப்பார்கள். ஒரு தீவிர வாசகர் நூல் பற்றிய நீண்ட கருத்துரையை அருமையாக எழுதி அனுப்பியிருக்கிறார். அத்தகையோர் அதிகமாகப் பெருக வேண்டும். இந்நூல் அனைத்துக் கிறிஸ்தவர்களும் வாசிக்க வேண்டிய நூல். திருச்சபைப் பணியில் அக்கறை காட்டி அது பரிசுத்தத்தோடு இருக்கவேண்டும் என்று ஜெபித்து வரும் போதகர்கள் இந்த நூலைச் சபையார் வாசிக்கச் செய்யவேண்டும். நிச்சயம் சபையார் அவர்களை வாழ்த்துவார்கள்.
இதை மொழிபெயர்க்கும்போதே என் இருதயத்தை இது பலவேளைகளில் தொட்டு மனமிளகச் செய்திருக்கிறது. ரால்ப் வென்னிங் பியூரிட்டன் காலத்துப் பிரசங்கி. பரிசுத்தத்தில் அதிக அக்கறைகாட்டியவர்கள் வாழ்ந்த அக்காலத்தில் பாவத்தை அவர்கள் அலட்சியம் செய்யவில்லை. சீர்திருத்தப் பிரசங்கிகளே வரலாற்றில் பாவத்தைப் பற்றி இந்தளவுக்குப் பிரசங்கிக்கவும், எழுதவும் செய்திருக்கிறார்கள். இதையே பதினெட்டாம் நூற்றாண்டு சீர்திருத்தப் பிரசங்கிகளான ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் போன்றோரிடமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பர்ஜன், ஜே.சி. ரைல் போன்றோரிடமும், இருபதாம் நூற்றாண்டில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரிடமும் காண்கிறோம்.
இந்த 21ம் நூற்றாண்டில் பாவத்தைப் பற்றிய உணர்வு கிறிஸ்தவர்களிடம் மந்தமாகவே இருக்கிறது. கர்த்தரின் கிருபையைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறவர்கள், நியாயப்பிரமாண எதிர்ப்பாளர்களாக, ஒழுங்குமுறையற்ற வாழ்க்கையை வாழ்வதிலேயே நாட்டம் காட்டுகிறார்கள். இவர்களுடைய எண்ணத்தில் இறையியல் கோளாறிருக்கிறது; விசுவாசத்திலும் கோளாறிருந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். பரிசுத்தத்தில் ஒழுங்கற்றுக் காணப்படுவதற்கு பாவம் ஒரு பெரிய காரணம் என்பதை இந்நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உணரவேண்டும். பாவத்தோடு போராடி வெற்றி காணாமல் பரிசுத்தம் வளராது.
தெலுங்கு மொழியில் 1689 விசுவாச அறிக்கை
திருப்பதியில் வாழும் நண்பர் ருத்ரா போல் 1689 விசுவாச அறிக்கையை, நண்பர் முரளியோடும் (பெங்களூர்), வேறு சிலரோடும் இணைந்து உழைத்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இது ஒரு கூட்டு முயற்சி. எப்போதோ ஆரம்பித்த பணி, இப்போது பல்வேறு கட்டங்களைத் தாண்டித் தன் இறுதி நிலையை அடைந்திருக்கிறது. அதைக் கூடிய விரைவில் சீர்திருத்த வெளியீடுகள் மூலம் வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன. தெலுங்கு கிறிஸ்தவ சபைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இதைக் கர்த்தர் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.
தமிழில் 1689 விசுவாச அறிக்கை (திருத்திய பதிப்பு)
1995ல் தமிழில் 1689 விசுவாச அறிக்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதை இப்போது திருத்திய பதிப்பாக வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பதிப்பில் சில கடினமான வார்த்தைகளுக்கு இலகுவான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், முடிந்தவரை 17ம் நூற்றாண்டு ஆங்கில மூலத்தில் காணப்படும் விசுவாச அறிக்கையை ஒத்துக் காணப்படுமாறு கவனித்துக்கொள்ளுவதும் முக்கிய இலக்காக இருக்கிறது. இந்த இருபது வருட காலப்பகுதிகளில் விசுவாச அறிக்கை பல பதிப்புகளாக ஆங்கிலத்தில் வந்திருக்கின்றது. அதை எளிமைப்படுத்தி வெளியிடுவதில் பலர் அக்கறை காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது மூலத்தில் காணப்படுகின்ற அழுத்தமும், இறையியல் வார்த்தைகளின் பொருளும் படிப்படியாக உருமாறிவிடுகிற ஆபத்து இருக்கின்றது. விசுவாச அறிக்கை 17ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டதோடு, அக்காலத்து வரலாற்று, இறையியல் சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். ஆகவே, அந்தக் காலத்து நூலை 21ம் நூற்றாண்டின் இறையியல் சூழ்நிலையின் அடிப்படையில் வாசித்துப் பொருள்கொள்ளக் கூடாது. அது எழுதப்பட்ட காலத்து வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும், வரலாற்றுச் சூழ்நிலையையும் மனத்தில் இருத்தி விசுவாச அறிக்கையின் போதனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே புதிய திருத்திய பதிப்பு வெளிவரவிருக்கிறது. திருத்திய பதிப்பில் அதிரடியான மாற்றங்கள் இல்லாமல் போனாலும், அவசியமான மாற்றங்கள் இருக்கப்போகின்றன. அத்தோடு, விசுவாச அறிக்கைக்கான வரலாற்று, இறையியல் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுவான சுருக்க விளக்கமும் இதில் வெளிவரும்.
திருமறைத்தீப வாசகர்கள்
திருமறைத்தீப வாசகர்கள் தென் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகத் தன்னிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்று பாளையங்கோட்டையைச் சேர்ந்த நண்பர் தனபால் தேவராஜ் சமீபத்தில் எனக்கு செய்தி அனுப்பினார். அவர் தீபத்தின் புதிய வாசகர். சீ.எஸ்.ஐ. குருக்களும், ஊழியக்காரர்களும், இறையியல் கற்று வரும் மாணவர்களும் இதழை வாசித்து சந்தோஷமடைந்ததாகவும் அதில் வெளிவரும் சத்தியங்களில் ஆர்வம் காட்டி வருவதாகவும் சொன்னார். ரேனியஸ் பற்றி நான் எழுதிய ஆக்கமும், இதழில் வந்திருக்கும் சத்தியத்தை விளக்கும் ஆழமான ஆக்கங்களும் தனக்கும், பலருக்கும் பெரும் பயனளித்து வருவதாகவும், நான் தொடர்ந்து அதிகம் எழுதவேண்டும் என்றும் என்னை ஊக்குவித்தார். சமீபத்தில் அவர் நாகர்கோவிலில் சீ.எஸ்.ஐ. புத்தகக்கடைக்குப் போயிருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்போல் தோற்றமளித்த ஒருவர் திருமறைத்தீபத்தைப் பற்றியும், நாம் வெளியிட்டிருக்கும் நூல்களைப் பற்றியும் அந்தக் கடையில் விசாரித்துக் கொண்டிருந்தாராம். அது அவருக்குப் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியதாம். தேவராஜ் நாம் வெளியிட்டுள்ள நூல்கள் அனைத்தையும் பெற்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். சில வேளைகளில் எழுதத்தான் வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறபோது, இவரைப் போன்றோரிடம் இருந்து வரும் செய்திகளே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கின்றன.
நண்பர் தேவராஜைப் போலவே, வேலூரைச் சேர்ந்த நண்பர் கிங்ஸ்லியும் மத்தியக் கிழக்கு நாடான ஓமானில் திருமறைத்தீபத்தையும், நமது வெளியீடுகளையும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மத்தியில் அறிமுகப்படுத்தி விநியோகித்து வருகிறார். அதற்காக இருநூறு கி.மீ. பிரயாணம் செய்யவும் அவர் தயங்குவதில்லை. அவர் திருமறைத்தீபத்தின் தீவிர வாசகர்களில் ஒருவர். அவர் மட்டுமல்லாமல் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் அவற்றை ஆர்வத்தோடு வாசித்து வருகிறார்கள். இதழும், நூல்களும் அநேகரைச் சென்றடைய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். முழுநேர அரசுப் பணியில் அவர் இருந்தபோதும் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் அவருடைய வாஞ்சை அதீதமானது; தொற்று போன்றது. அவரிடம் பேசிப் பார்த்தால்தான் அது புரியும்.
சமீபத்தில் திருமறைத்தீபத்தையும், நமது வெளியீடுகளையும் பற்றி அறிந்துகொண்ட பிரான்ஸில் இருக்கும் ஒரு தமிழ்ச் சபை நமது வெளியீடுகள் அனைத்திலும் பல பிரதிகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டது. அவற்றை சபையார் வாசிக்கும் ஏற்பாடுகளை அது செய்துவைத்திருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்படும்போது கர்த்தரின் செயல்களின் மகத்துவத்தை எண்ணிப்பார்க்கச் செய்கிறது. உண்மைதான், கருத்தோடு திருமறைத்தீபத்தை வாசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக் கிறிஸ்தவர்கள் பல நாடுகளில் இருந்து வருகிறார்கள். இவர்கள் ஏனோதானோவென்று கடமைக்காக வாசிக்கிறவர்களாக எனக்குத் தெரியவில்லை. ஆர்வத்தோடும், சத்திய வாஞ்சையோடும் வாசிக்கின்ற அநேகரை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் அடிக்கடி தொடர்புகொண்டு வருகிறார்கள். இவர்களில் பலருடைய வாழ்க்கையில் திருமறைத்தீபம் பெரும் சத்திய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது; இறையியல் நம்பிக்கைகளில் மட்டுமல்லாது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு மேல் ஓர் இதழுக்கு என்ன தேவை? பொதுவாகத் தமிழிலக்கியத்துக்கு சிற்றிதழ்கள் செய்து வந்திருக்கும், செய்து வரும் பணியைக் கிறிஸ்தவத்திற்கு திருமறைத்தீபம் செய்து வருவதாக அறிகிறேன். கர்த்தருக்கே எல்லா மகிமையும்!
ரேனியஸ் வாழ்க்கை வரலாறு – தனபால் தேவராஜ், விலை ரூபாய் 150/-
தனபால் தேவராஜ் “ரேனியஸ் வாழ்க்கை வரலாறு” என்ற நூலை வரைந்திருக்கிறார். அதுபற்றி நான் ஏற்கனவே ரேனியஸ் பற்றிய “நெல்லை கண்ட அப்போஸ்தலன்” எனும் ஆக்கத்தில் இதழில் விளக்கியிருந்தேன். இப்போது, என் ஆலோசனைகளை ஏற்று, நூலுக்கான ஆதார நூல்களின் பட்டியலைத் தந்து மறுபடியும் அந்த நூலை வெளியிட்டிருக்கிறார் தேவராஜ். முதல் வெளியீட்டில் ஆதார நூல்களில் பட்டியல் இருக்கவில்லை. இந்நூலில் ரேனியஸ் உருவாக்கியதும், பணியாற்றியதுமான 406 சபைகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. நூலின் விலை ரூபாய் 150. சி.எஸ்.ஐ. புத்தகக் கடைகளில் நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
வாழ்த்துரை, அணிந்துரை, கருத்துரை என்று பல சி.எஸ்.ஐ. முக்கியஸ்தர்கள் அளித்திருந்த அநாவசியக் குறிப்புகளை நூலில் இருந்து அகற்றிவிடும்படியும் அவருக்கு நான் ஆலோசனை தந்திருந்தேன். சி.எஸ்.ஐ. ஊழியக்காரராக அவரிருப்பதால் அவற்றை நூலில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கிருந்திருக்கிறது. என்ன செய்வது, இதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நூலை வாங்கும் வாசகர்கள் அந்த மனிதர்களின் குறிப்புகளை ஒதுக்கிவிட்டு நூலை மட்டும் வாசியுங்கள் என்று மட்டுந்தான் என்னால் சொல்லமுடியும். ரேனியஸ் போன்ற விசுவாசமும், வைராக்கியமுள்ள தேவ ஊழியருடைய நூலுக்கு அணிந்துரை அளிக்க ஒருவருக்குத் தகுதி வேண்டும். குறைந்தது, ரேனியஸ் விசுவாசித்த சீர்திருத்த இறையியல் கோட்பாடுகளில் வாஞ்சையும், நம்பிக்கையும் ஒருவருக்குத் தேவை. அத்தகைய நம்பிக்கையுள்ள ஒரு சி.எஸ்.ஐ. முக்கியஸ்தராவது இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. தனபால் தேவராஜின் நூல் சி.எஸ்.ஐ. சபையைச் சேர்ந்தவர்களைச் சிந்திக்க வைக்குமானால் கர்த்தருக்கே எல்லா மகிமையும்.
அத்தோடு இப்புதிய பதிப்பில் ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. பதினைந்தாம் பக்கத்தில் கத்தோலிக்க மத சமூக சேவையாளராகப் பணியாற்றி மறைந்த அன்னை தெரேசாவின் குறிப்பு தரப்பட்டிருக்கிறது. இது யார் விட்ட தவறு என்று தெரியவில்லை. ஒரு கிறிஸ்தவ நூலில் இத்தகைய தவறு நேரக்கூடாது. கத்தோலிக்க மதமும், கிறிஸ்தவமும் ஒன்றல்ல. தன்வாழ்நாள் முழுதும் அன்னை தெரேசா கத்தோலிக்கராகவே இருந்து மறைந்தவர்; மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அடையவில்லை. மதங்களைப் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “நான் எல்லா மதங்களையும் நேசிக்கிறேன் . . . மக்கள் நல்ல இந்துக்களாகவும், நல்ல இஸ்லாமியர்களாகவும், நல்ல புத்தமதத்தவர்களாகவும் மாறினால் அங்கே ஏதோ வளர்கிறதென்றுதான் அர்த்தம்; எல்லோருமே ஒரே கடவுளோடுதான் தொடர்புகொள்கிறார்கள்.” இதை ஒரு கிறிஸ்தவன் சொல்லுவானா? இதையும்விட மேலும் மோசமான நம்பிக்கைகளையும் அன்னை தெரேசா கொண்டிருந்தார். டிம் செல்லிஷ் இதைப்பற்றி விளக்கியிருப்பதை இணையத்தில் பின்வரும் பதிவில் வாசிக்கலாம். (https://www.challies.com/articles/the-myth-of-mother-teresa/).
நூலாசிரியரிடம் இதுபற்றி நான் விளக்கினேன். அவர் மிகுந்த தாழ்மையோடு நூல்கள் அனைத்திலும் ஒரு வெள்ளைப் பேப்பரை அந்தக் குறிப்பின் மேல் ஒட்டி இனி நூல்களை விற்கப்போவதாகச் சொன்னார். அந்தக் குறிப்பு அவருக்குத் தெரிந்து நூலில் வரவில்லையாம். நூலைத் தயாரிக்கத் துணை செய்தவர் இடத்தை நிரப்ப அதைப் போட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தபோதும் இத்தகைய தவறுகள் தவிர்க்கப்படுவது நல்லது.
சீர்திருத்த வெளியீடுகள், சென்னை
திருமறைத்தீபம் இதழையும், நமது ஏனைய வெளியீடுகளையும் சென்னையில் இருந்து இயங்கும் சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. அதன் நிர்வாகியாக சகோதரர் ஜேம்ஸ் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். பதினைந்து வருடங்கள் அச்சகத்துறையில் நல்ல அனுபவமுள்ள அவர், இப்போது சுயாதீனத் தொழிலாக அதைக் கணிப்பொறியில் செய்து வருகிறார். அத்தோடு திருச்சபைப் போதகராகவும் இருந்து வருகிறார். திருமறைத்தீபத்தை அச்சிட்டு விநியோகிப்பது முதல் ஏனைய நூல்களை அச்சுக்குத் தயாரித்து வெளியிடுவது முதலான சகல பணிகளும் அவருடைய மேற்பார்வையின் கீழேயே நடந்து வருகின்றன. அவருடைய பணிகளுக்குத் துணையாக அவர் பணியாற்றும் கிருபை சீர்திருத்த திருச்சபை (வில்லிவாக்கம், சென்னை) இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அவசியமான ஒரு சில நூல்களையாவது கர்த்தரின் கிருபையால் வெளியிடுவது எமது நோக்கம். நாம் வெளியிடும் நூல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் இவ்விதழில் தரப்பட்டுள்ள சீர்திருத்த வெளியீடுகளின் முகவரியோடோ அல்லது தொலைபேசி எண்ணோடோ தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
வரவிருக்கும் கிறிஸ்தவ இலக்கியங்கள்
எப்போதுமே வெளியிட வேண்டிய சில நூல்கள் அரைவாசிப் பணிகள் முடிந்த நிலையில் இருந்து வருவது வழக்கம். “சிக்கலான வேதப்பகுதிகள்” என்ற தலைப்பில் ஒரு நூலை எப்போதோ எழுதி முடித்திருக்கிறேன். அதில் மேலும் திருத்த வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. திருச்சபை பற்றிய ஒரு நூலும் விரிவாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. வெளிப்படுத்தல் விசேஷத்திற்கான விளக்கவுரையாக ஒரு நூலும் அரைவாசிப் பணிகள் முடிந்த நிலையில் இருக்கின்றது. பல வருடங்களாக அச்சிலில்லாமல் இருந்து வரும் பத்துக்கட்டளைகள் நூலையும் விரிவாக்கி வெளியிடும் திட்டம் இருக்கிறது. கர்த்தரின் பிரசன்னத்தை விளக்கி ஒரு சிறு நூலை தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுத்திருந்தேன். அதையும் விரிவாக்கி வெளியிடும் எண்ணம் இருக்கிறது. இவற்றிற்கு முதலிடம் தந்து முடித்து அச்சிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு பல வேலைகளுக்கும் மத்தியில் நேரத்தைக் கொடுத்து வருகிறேன். அச்சில் இல்லாத ஒரு சில நூல்களும் மறுபதிப்பு செய்யப்படுகின்றன. முக்கியமாக, திருமறைத்தீபத்தின் எட்டாவது தொகுதி அடுத்த வருடம் வெளிவரும். இம்மட்டும் நம்மை வழிநடத்தியிருக்கும் கர்த்தருக்கே எல்லா மகிமையும். இவ்விலக்கியப்பணியில் என்னோடிணைந்து உழைப்பவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ரேனியஸின் தமிழ்வேத மொழிபெயர்ப்பு
ரேனியஸின் புதிய ஏற்பாட்டுத் தமிழ் மொழிபெயர்ப்பைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். அன்றிருந்த பெப்ரீஸியஸின் மொழிபெயர்ப்பைவிட இது சிறந்தது என்பது பரவலாக இருந்து வரும் கருத்து. இருந்தபோதும் ரேனியஸின் மொழிபெயர்ப்பும் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ் வார்த்தைகளையும், நடையையுமே கொண்டிருக்கிறது. அப்போதிருந்தவர்களுக்கு ரேனியஸின் மொழிபெயர்ப்பு இலகுவாக வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ற தமிழில் அது இல்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. அன்றைய தமிழ் அளவுக்கு மீறி வடமொழியான சமஸ்கிருத மொழியைத் தழுவிக் காணப்பட்டது. அதுவே அன்று கற்றவர்கள் பயன்படுத்திய மொழிநடை. அன்றைய வார்த்தைகளை இன்றைய தமிழ் சமுதாயம் விளங்கிக்கொள்ளத் தடுமாறும். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாகப் பெரும்பாலும் வடமொழியைத் தவிர்த்துத் தனித் தமிழில் எழுதவும் பேசவும் பழகி வந்திருக்கிறோம். வேதம் இன்று மொழிபெயர்க்கப்படுமானால் இன்று நாம் பேசி, எழுதப் பயன்படுத்தும் நடையிலேயே அது இருப்பது அவசியம். அதுவும் மூலமொழிகளைத் தழுவியதாகத் தவறுகளற்றதாக அது அமைந்திருக்கவேண்டும். ஆகவே, ரேனியஸின் மொழிபெயர்ப்பு தமிழ் வேதம் பற்றிய ஆய்வுகளுக்கு இன்று நிச்சயம் உதவும்; பொதுவான சபைப் பயன்பாட்டிற்கும், வாசிப்புக்கும் இன்று பயனுள்ளதாக இருக்காது. இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய திருப்புதலும் அதேநிலையில் இருப்பதுதான் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் துன்பமாக இருக்கிறது. கிறிஸ்தவர்களல்லாதவர்கள் அதை வாசிக்கும்போது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கும்.
தகவல் சேகரிப்பு – கற்றறிதல் – எதிர்வினைகள்
சிறு வயதில் இருந்தே என் தந்தையைப் பார்த்தும், எனக்குப் பள்ளி ஆசிரியர்களாக இருந்த சில இலக்கியவாதிகளின் செல்வாக்காலும் நான் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். அக்காலத்தில் வாசிப்பு எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல் இருந்து வந்தது.
எத்தகைய நூல்களை வாசிக்க வேண்டும், யாருடைய நூல்களை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் நானே கற்றுக்கொண்டேன். எதைத் தள்ளிவைக்கவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். என் வாசிப்புப் பழக்கம் என் ஆர்வங்களுக்கும், சிந்தனைக்கும் ஏற்ப என்னோடு இணைந்து வளர்ந்தது. வாசிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டிய இரண்டு நண்பர்கள் மட்டுமே அன்றெனக்கிருந்தனர். ஒருவர் இப்போது உயிரோடில்லை. இன்னொருவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அக்காலங்களில் நூலகங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கவில்லை. இருப்பவற்றில் அங்கத்தவராக இணைவதும் சுலபமாக இருக்கவில்லை. இருந்தும் என் வாசிப்புத் தாகம் எல்லாத் தடைகளையும் மீறி என்னை வாசிப்பில் ஈடுபட வைத்தது. அந்த வாசிப்பே எழுதவும் கற்றுத் தந்தது. இது பற்றியெல்லாம் “சட்டையை விற்றாவது நூல்களை வாங்கு” என்ற நூலில் விளக்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டியதன் அவசியத்தை “இன்றியமையாத வாசிப்பு” – நவம்பர் 2015, ஆக்கத்திலும் விளக்கியிருக்கிறேன்.
இன்று அத்தகைய வாசிப்பைக் கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அதிகம் காண்கிறேன். கிறிஸ்தவர்களோடு ஒப்பிடும்போது, அவர்கள் அதிகம் வாசிக்கிறார்கள்; சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள், பகிர்ந்துகொள்கிறார்கள். இது பெரும்பாலும் கிறிஸ்தவர்களிடம் இல்லை. ஏன், பெரும்பாலான போதகர்களிடமே இல்லை. அதாவது, நான் காணக்கூடியவிதத்தில், அறிந்துகொள்கிறவிதத்தில் இல்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே அத்தகைய தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை உணர்கிறேன். இதற்கான காரணங்கள் அநேகம் இருக்கலாம். எதுவிருந்தாலும் தற்கால கிறிஸ்தவ வளர்ச்சிக்கும், எதிர்கால கிறிஸ்தவ சமுதாய வளர்ச்சிக்கும் இது நிச்சயம் உதவாது என்பது எனக்குத் தெரிகிறது. நிச்சயமாக சீர்திருத்த கிறிஸ்தவ வளர்ச்சிக்கு இது பெருந்தடை. சமுதாயத்தில் கிறிஸ்தவரல்லாதவர்கள் இன்று புத்தகக் கண்காட்சிகளைப் பெருநகரெங்கும் நடத்தி, ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுகிறார்கள். ஒரு கிறிஸ்தவ புத்தகக் கண்காட்சியாவது நம்மினத்தில் நடத்தப்பட்டிருக்கிறதா? ஏனில்லை? வாசிக்கிறவர்களும் இல்லை; எழுதுகிறவர்களும் இல்லை; நூல்களும் இல்லை. அதுதான் காரணம். வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் தூபமிட்டு, உப்புச்சப்பில்லாத, சிந்திக்க இடந்தராத பிரசங்கங்களை அளித்து வரும் சராசரிப் பிரசங்கிகள் மலிந்து காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் ஆத்துமாக்களை வாசிக்கத் தூண்டுகிற ஒரு சபையாவது, பிரசங்கியாவது உண்டா?
வாசிக்கும் நூல்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க இயலாமல் இருப்பவர்களைப் பற்றி ஒரு ஆக்கத்தில் ஜெயமோகன் எழுதுகிறார், “ஏன் யாரும் பேசுவதில்லை? ஒன்று, பேசத் தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவில்லை, என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆகவே, சும்மா இருக்கிறார்கள். அது ஓரளவு உண்மை. அத்துடன் வேறு ஏதோ ஒன்றும் உள்ளது. அது ஆரோக்கியமான மனநிலையே அல்ல. அந்த மனநிலையில் உள்ள கீழ்மையைப் பற்றி நம்மை நாமே விசாரணை செய்துகொள்ள வேண்டும்.”
சிங்கப்பூரை உலகத்தில் ஒரு சிறப்பான நாடாக மாற்றியமைத்த அந்நாட்டின் முதல் பிரதமராக இருந்த லி வான் கியூ அறிவாளி; கற்றுத்தேர்ந்திருந்த மனிதர். தன் நாடு முன்னேற வேண்டுமானால் தன் மக்கள் வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கான வழிகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்தார். இப்படியெல்லாம் சிந்திக்கின்ற நாட்டுத் தலைவர்கள் இன்று மிகக் குறைவு. கடவுளை நம்பி வாழ்ந்திராத லி வான் கியூ வுக்கே வாசிப்பின் அருமை தெரிந்திருந்தது. கிறிஸ்து மட்டுமே தேவன் என்று நம்பி வாழ்க்கை மாற்றமடைந்தவர்களுக்கு, அதுவும் வேதத்தில் அன்றாடம் முத்துக்குளிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியாது என்பது தெரிந்திருக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் வாசிப்பு குப்பையில் குண்டுமணி எடுப்பதுபோல் குறுகிக் காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை எவராவது எனக்கு எழுதி விளக்குவீர்களா?
அமெரிக்காவில் தன் ஆட்சிக்காலம் முடிந்தவுடனேயே அந்நாட்டுப் பிரசிடன்ட் தன் பெயரில் ஒரு அதிகாரபூர்வமான நூலகத்தைப் பெரும் பணச்செலவில் உருவாக்குவார். பெரும்பாலான அந்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அத்தகைய நூலகங்கள் காணப்படுகின்றன. அதை அவர்கள் செய்வதற்குக் காரணமென்ன தெரியுமா? தற்காலச் சந்ததியும், பின்வரப்போகும் சந்ததியும் தன் ஆட்சிக்காலக் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் பற்றிக் கற்றுக்கொள்ளவும், ஆய்வுகளைச் செய்யவும் துணையாக இருப்பதற்காக அதைச் செய்கிறார்கள். அந்தளவுக்கு அந்நாட்டை உருவாக்கியிருப்பவர்கள் சமுதாயத்தில் வாசிப்புக்கும், சிந்திப்பதற்கும் முக்கிய இடமளித்திருப்பதாலேயே இத்தகைய நூலகங்களை உருவாக்கும் வழக்கம் உருவாகியது.
“வாசலில்லாத வீடும், வாசிப்பில்லாத வாழ்நாளும் பயனற்றவை” என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில், வேலைக்காக மட்டுமே கல்வி என்ற நடைமுறைக் கொள்கை பொதுவாக எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்திருப்பதாலேயே வாசிப்புக்கு சமுதாயத்தில் சாவு மணி அடிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். எத்தனை கிறிஸ்தவப் பெற்றோர்கள் நல்ல கிறிஸ்தவ நூல்களை வாங்கித் தங்களுடைய பிள்ளைகளை வாசிக்கச் செய்கிறார்கள்? எத்தனை வீட்டுத்தலைவர்கள் நல்ல கிறிஸ்தவ நூல்களை வாங்கி வாசித்து, மனைவியையும் வாசிக்க வைத்து வாசிப்பனுபவத்தை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள்? இதற்கான பதிலிலேயே ஒரு கிறிஸ்தவ சபையின் தரத்தை அறிந்துகொள்ளலாம். வாசிப்பும், வாசிப்புக்கேற்ற சிந்தனை வளர்ச்சியும் இல்லாத சமுதாயம் தனக்கு அழிவை மட்டுமே தேடிக்கொள்ளும்; அதுபோல்தான் கிறிஸ்தவ சமுதாயமும் தன்னை அழித்துக்கொள்ளும்.
தெரிந்துகொள்ளுதலும், கற்றறிதலும்
நம்முடைய கல்வி முறை எதையும் தெரிந்துகொள்ளுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. தெரிந்துகொள்ளுவதற்கும், கற்றுக்கொள்ளுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடுண்டு. ஒரு காரின் இயந்திரத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்க முடியும்; அதனால் ஒருவன் மெக்கானிக் ஆகிவிட முடியாது. இதில் என்ன வேறுபாடு? முதலாவது, கார் இயந்திரத்தைப் பற்றிய தகவல் சேகரிப்பு மட்டுமே. இதை எவரும் செய்துவிட முடியும். வெறும் தகவல் சேகரிப்பால் ஒருவர் மெக்கானிக் ஆகமுடியாது. இந்தத் தகவல் சேகரிப்பே இன்று கல்வி என்ற பெயரில் பரவலாக இருந்து வருகிறது. தகவல் சேகரிப்பவர்கள் அவற்றை ஒப்புவிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் அத்தகவல்களைப் பற்றிச் சுயமாக சிந்திக்க மாட்டார்கள். தகவல் சேகரிப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் சிந்திப்பதில் இருப்பதில்லை. தவறான நம் கல்வி முறையால் சமுதாயத்தில் இது பழக்கமாக ஊறிவிட்டிருக்கிறது. சேகரித்த தகவல்களைத்தான் பரீட்சை பேப்பரில் கொட்டித் தீர்த்து அதிக மார்க்கு வாங்க மாணவர் பட்டாளம் இன்று அலைந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கல்வி முறையே கிறிஸ்தவர்களைக் கற்றறிந்தவர்களாகவும், சிந்திக்கிறவர்களாகவும் இல்லாமல் செய்திருக்கிறது என்பது என் கருத்து. கல்லூரிகள் பக்கம் கால் வைக்காதவர்கள்கூட சிந்தனாவாதிகளாக மாறியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் தகவல் சேகரிப்பதில் நாட்டம் காட்டாமல் எதையும் கூர்ந்து அவதானித்துக் கேள்விகள் கேட்டுக் கற்றுக்கொள்ளுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்ததால்தான். ஆரம்பத்தில் நீச்சல் பழக ஆரம்பிக்கிறவர்களுக்கு தண்ணீரில் மிதப்பது மிகக் கஷ்டமாக இருக்கும். அதற்குப் பல நாட்களாகும். ஏன் தெரியுமா? மிதப்பதைப் பற்றிய தகவல் சேகரிப்பதில் மனம் ஈடுபட்டு வருவதால் மிதக்கும் முயற்சியில் அது ஈடுபடுவதில்லை. உடலை இலகுவாக்கி, மனத்தைக் கட்டுப்படுத்தி மிதக்க முயற்சிக்கிறபோது மிதப்பது இலகுவாகிவிடுகிறது. பயிற்சியும், அனுபவமும் அதைச் செய்ய உதவுகிறது. இதுதான் தகவல்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பதற்கும், கற்றுக்கொள்ளுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு. பள்ளிக்கூடம் போகாதவர்கள்கூட சிந்தனாவாதிகளாக மாற முடிந்திருப்பதற்கு இதுவே காரணம்.
கற்றறிதலுக்கு சோம்பேறித்தனம் உதவாது. தகவல்களைச் சேகரிக்கிறவர்கள் சோம்பேறிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஆற அமர்ந்து சிந்திப்பதை விரும்பமாட்டார்கள். அவர்களுக்குக் கற்றுக்கொள்ளுவதற்குப் பொறுமை இருக்காது. இணையத்தை நாடி அதிக தகவல்களைக் குறைந்த நேரத்தில் சேகரிப்பார்கள்; பெரும்பாலும், முகநூல், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், யூடியூப் குறுஞ்செய்திகளில் தகவல்களுக்கு தவமிருப்பவர்களாக இருப்பார்கள். அவ்வாறு தெரிந்துகொள்வதைக் கற்றதற்கு அடையாளமாகக் கருதுவார்கள். இவர்களுடைய குட்டு எங்கு உடையும் தெரியுமா? அவர்கள் தெரிந்துவைத்திருப்பவற்றில் இருந்து சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். தெரிந்து வைத்திருப்பதை மட்டுமே அவர்கள் பதில்களாக ஒப்புவிப்பார்கள். ஏன்? அவர்கள் எதைப்பற்றியும் அமைதியாக எப்போதுமே சிந்தித்ததில்லை.
இணையமும், வாசிப்பும்
இணையம் வசதியானது; அநேக நன்மைகளைத் தருகிறது. இருந்தபோதும் இணையக் கல்வி ஆபத்தானது என்று எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். இணையம் கத்தி போன்றது. கத்தியைப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும். கத்தியைக் கவனமாக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அதுதான் காரணம். இணையத்தைப் பயன்படுத்தும் பக்குவமில்லாதவர்கள் தங்களுக்குப் பங்கம் விளைவித்துக்கொள்ளும் ஆபத்திருக்கிறது. யூடியூபில் மட்டுமே எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுவேன், வாசிக்க மாட்டேன் என்று ஒருவர் அடாப்பிடியாக இருந்தார். அது தவறு என்று அவருக்கு அடிக்கடி அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால், அவர் கேட்பதில்லை. மனத்தை ஒருமுகப்படுத்தி சில நூறு பக்கங்களுள்ள நூல்களை வாசிப்பதற்கு சோம்பேறித்தனம் காரணம். உழைக்காமலும் சிந்திக்காமலும் யூடியூபில் இலகுவாக எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுவதையே மனம் விரும்புகிறது. யூடியூபைப் பயன்படுத்தும் பக்குவமில்லாததால் கண்டதையும் கேட்டுத் தவறான முடிவுகளுக்கு அவர் வந்துவிடுகிறார். யூடியூபாகிய கத்தியை அவருக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை.
பத்து இருபது நிமிட யூடியூப் செய்தியால் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாது. தெரிந்துகொள்ள மட்டுமே அது துணைபோகும். முழுமையான அறிவைப் பெற அது உதவாது. முழுமையான அறிவைத் தரும் நோக்கமில்லாமல், உணர்ச்சிகளை மட்டுமே பாதித்து நாம் ஒரு பொருளை வாங்க வைத்துவிட வேண்டுமென்பதற்காகத்தான் பொருள் விற்பனையாளர்கள் மூன்று நிமிடங்களுக்குக் குறைவான விளம்பரங்களைத் தொலைக்காட்சியில் கொடுக்கிறார்கள். அது அறிவைக் கொடுக்காது; நம் உணர்வுகளை மட்டுமே பாதிக்கும். முழுமையான அறிவு இல்லாமல் உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டு ஒரு பொருளை வாங்குவதால் ஆபத்து இருக்கிறது. அழகான அட்டைப்படம் இருக்கிறது என்பதால் ஒரு நூல் அருமையானதாகிவிடுமா? சோம்பேறித்தனம் நம்மை யூடியூப்வாதிகளாக மாற்றியிருக்கிறது. அரைகுறை அறிவு அடுப்பெரிக்க உதவாதென்பார்கள். அதுதான் வெறும் தகவல் சேகரிப்பால் நேருகிறது.
கற்றுக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கி, நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, மனதை ஒருநிலைப்படுத்தி வாசிக்க ஆரம்பிக்கவேண்டும். பத்துப் பக்கங்களை வாசித்தாலும் அது சிந்தனைபூர்வமான வாசிப்பாக இருக்கவேண்டும். என்ன வாசித்திருக்கிறோம் என்பதை மனதில் அலசிப்பார்த்து அது எதைக் கற்றுத்தந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். குறிப்பெடுத்தும் வைத்துக்கொள்ளலாம். இது நூலை வாசித்து முடியும்வரை தொடரவேண்டும். நூலை வாசித்து முடித்த பிறகு அதன் வாதத்தை, அது முன்வைக்கும் உண்மை சரியானதுதானா, ஆசிரியர் எக்கோணத்தில் அதை அணுகி ஆதாரங்களோடு நம்முன் வைக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்; மாடு தன் வாய்க்குள் சேகரித்து வைத்திருக்கும் வைக்கோலை அசைபோடுவதுபோல். ஆசிரியர் முன் வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றால் எதனால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பதற்கான காரணங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றால், அதற்கான நம்பத்தகுந்த காரணங்களை நாம் முன்வைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். எந்த நூலையும் அலசி ஆராய்ந்து வாசித்துக் கற்கவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது முழுமையான வாசிப்பாகாது.
நல்ல நூல் வாசிப்பு ஒரு தடவையோடு நின்றுபோகாது. இரண்டாம் தடவை வாசிக்கும்போதே அதிக விளக்கம் நமக்குக் கிடைக்கும். முழுமையான வாசிப்புக்கான அடையாளம் நூலைப்பற்றிக் கருத்தோடு இன்னொருவரோடு பகிர்ந்துகொள்ளும்போதுதான் தெரிய வரும். ஒரே விஷயத்தைப் பற்றிய இரு நூல்களை வாசித்துவிட்டு ஒருவரோடு கடந்த சில நாட்களாக விவாதித்து வருகிறேன்; பல கோணங்களில் நூலின் பொருளை, ஆசிரியரின் நோக்கத்தை அலசி வருகிறோம். அது நூலை எந்தளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறோம், சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள உதவுகிறது.
பெரும்பாலானோர் முதல் வாசிப்பை முடித்துவிட்டு சராசரியாக நூலிலிருப்பதை ஒப்புவிப்பவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் சிந்தித்து வாசிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். இவர்களால் ஆக்கபூர்வமான கருத்துத்தெரிவிக்க முடியாது. ஒரு நூலாசிரியரின் எழுத்தை நாம் பலகோணங்களில் ஆராயமுடியும். அதைத்தான் வாசகன் செய்யவேண்டும். அறிவுபூர்வமாக வாசிக்கிறவர்கள் எப்போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சிந்தித்து வாசிப்பார்கள். வாசிக்கும்போதே நூலாசிரியரோடு மனதில் தர்க்கத்தில் ஈடுபடுவார்கள். அறிவுபூர்வமான வாசகன் உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நூலைப்பற்றிய அரைகுறை முடிவுகளுக்கு வந்துவிட மாட்டான். நூலின் முடிவுகளோடு கருத்துவேறுபாடு இருந்தாலும், அது அறிவுபூர்வமானதாக இருப்பதில் நல்ல வாசகன் கவனம் செலுத்துவான்.
வாசகன் வாசிப்பின்போது நூலாசிரியனோடு பயணிக்க வேண்டும். நூலாசிரியனின் போக்கையும், அவன் விளக்கமுனையும் கருத்தையும் உய்த்துணர முயலவேண்டும். ஒருவருடைய வாசிப்பு நூலாசிரியனின் நோக்கத்தோடு இணையும்போதே அவன் நூலையும் நூலாசிரியனையும் புரிந்துகொள்கிறான். வாசகன் நூலோடு ஒன்றிணைந்து பின்னிப் பிணைந்து பயணிக்கும்போதே வாசிப்பில் இன்பம் காண்கிறான். நூலோடு ஒன்றிணையாத வாசகன் அர்த்தமற்ற வாசிப்பில் ஈடுபட்டவனாயிருப்பான். கடமைக்காக வாசிக்கிறவன் நல்ல வாசகன் அல்ல. தரமான வாசிப்பு கருத்தோடு வாசிப்பவனிடமே காணப்படும்.
சமீபத்தில் ஒரு சிறு நூலை வாசித்தேன். அதை எழுதிய ஜெப்ரி தோமஸின் ஏனைய சில நூல்களை வாசித்திருக்கிறேன். இருந்தபோதும் இந்த நூலின் எழுத்து நடை விசேஷமாக இருந்தது. அதில் எளிமை மட்டுமல்லாது அருவியோடும் அழகும் இருந்தது. நூலில் அந்த அம்சங்களை என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை. நிச்சயம் ஜெப்ரி தோமஸின் எழுத்து நடை இந்நூலில் இன்னொரு படி வளர்ந்திருந்தது. சொல்ல வந்த சத்தியமும் தெளிவாகவும், நெஞ்சைத் தொடுவதாகவும் இருந்தது. அதை வாசித்தபோது எழுத்தோடு நான் கலந்து விட்டதாக உணர்ந்தேன். ஆசிரியரின் உணர்வுகளோடு என்னால் உறவாட முடிந்தது. என்னைப் பாதித்த அந்த நூலை சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நல்ல நூல்கள் நல்ல நண்பர்களைப்போல. அதேபோல்தான் நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் எழுத்தும். அல்பர்ட் என். மார்டினின் போதக இறையியல் நூல்களை வாசிக்கும்போதும் இதே அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன். ஆசிரியரோடு என்னால் இணைந்து பயணிக்க முடிந்திருக்கிறது.
நூல்கள் தரமானதாகவும், அருமையானதாகவும் இருந்தும் வாசகனின் தரமற்ற வாசிப்பால் அவன் பயனடையாமல் போகலாம். அது நூலின் தவறல்ல; நூலாசிரியனின் தவறுமல்ல. எல்லாவகை நூல்களையும் வாசகனின் தரத்திற்கு எழுதிவிட முடியாது. அப்படிச் செய்வதும் நூலாசிரியனின் கடமையல்ல. இது கல்லூரிப்படிப்பை மூன்றாம் வகுப்பு மாணவனிடம் கொண்டு சேர்க்கும் அறிவற்ற, பயனற்ற செயல். முறைப்படுத்தப்பட்ட இறையியலை சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும்படி எழுதுவது அவ்வகை நூலுக்குப் பொருத்தமற்றது. நூலுக்கேற்ற ஆய்வும், எழுத்துநடையும், விளக்கமும் அதிலிருக்க வேண்டும். வாசிக்கும் வாசகன் அதனளவுக்கு உயர்ந்து தரமான வாசிப்பில் ஈடுபட வேண்டும். வாசகன் இருக்குமிடத்துக்கு எல்லா வகை நூல்களும் இறங்கி வரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதற்கு நூல்களை எழுதாமல் இருந்துவிடுவதே மேலானது. இலக்கிய நூலை மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு எவரும் எழுதுவதில்லை. இலக்கிய ஞானசூனியங்களினால் ஒருபோதும் இலக்கியத்தை இரசிக்கவும் முடியாது. இலக்கியமிருக்கும் இடத்திற்கு வாசகன் படியேற வேண்டும்; வாசிப்பில் வளர வேண்டும்; முதிர்ச்சியடைய வேண்டும்.
நூல்கள் பலவகைப்பட்டவை; பல்வேறு தளங்களையும், கருத்தாழத்தையும் கொண்டவை. சாதாரணமாக எல்லோரும் வாசிக்கும் வகையில் எழுதப்பட்ட எளிமையான நடையுள்ள அம்புலிமாமா போன்ற நூல்கள் இருக்கின்றன. அதேவேளை, பொறுமையோடு வாசிக்கவேண்டிய இறையியல் ஆழமும், ஆய்வும், நுணுக்கமான பதங்களும், வார்த்தைப் பிரயோகங்களும் நிறைந்த நூல்களும் இருக்கின்றன. வாசகன் ஒரேவகை நூல்களை மட்டும் வாசிப்பதில் நின்றுவிடக்கூடாது. பல்வேறுவகை நூல்களையும் கற்றுத்தேறுமளவுக்கு அவன் வாசிப்பில் ஈடுபாட்டுடன் ஈடுபட வேண்டும். காலம் போகப்போக அவனுக்கே தன் வளர்ச்சி தெரியவரும். வாசிப்பில் தேர்ச்சியடைய வேண்டும். வாசிப்பு வளரும்போது வாசகனும் வளருகிறான். சோம்பேறிகளும், வாசிப்பு ஆர்வமில்லாதவர்களுமே ஆழமான போதனைகளைத் தராத, புரிந்துகொள்ள இலகுவான நூல்களை மட்டும் நாடுவார்கள். அவர்கள் தரமான வாசகர்கள் அல்ல. இவர்களே தியானச் செய்திகளை மட்டும் சுமந்து வரும் அன்றாட அப்பம் போன்றவற்றில் தஞ்சமடைந்திருப்பார்கள். இவர்களுக்குக் கற்றறிவதில் ஈடுபாடு இல்லை. அமாநுஷ்ய குறுஞ்செய்திகளை மட்டும் நாடி மூளைக்கு ஓய்வு கொடுத்து வாழ்கிறவர்கள் இவர்கள்.
எழுதப் படிக்கத் தெரியாமல், சாதாரண வார்த்தைகளை மட்டுமே பேச்சில் பயன்படுத்தக்கூடிய நிலைமையில், பெருங்கல்வி எதையும் பெற்றுக்கொள்ள வசதியில்லாமல் இருந்த பியூரிட்டனான ஜோன் பனியன் இரண்டே கிறிஸ்தவ நூல்களை மட்டுமே கிறிஸ்தவரான புதிதில் கஷ்டப்பட்டு வாசித்தார். கர்த்தரின் கிருபையால் அவர் எழுதித் தந்திருக்கும் நூல்களின் இலக்கிய நடையையும், வார்த்தைப் பிரயோகங்களையும் சிந்தித்துப் பாருங்கள். இது அவரால் எப்படி முடிந்தது? கடுமையான, தொடர்ச்சியான வாசிப்பு மட்டுமே அவர் அதை அடையச் செய்தது. வாசிப்பு ஒரு பயிற்சி; உடற்பயிற்சி போன்றது. உடற்பயிற்சி ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை. ஒரு வாரத்தில் பல தடவைகள் அதில் ஈடுபடுவார்கள். பல்வேறு வகைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். புதியவைகளைக் கற்றுக்கொள்ளுவார்கள். அதில் உழைப்பு இருக்கிறது; வியர்வை சிந்தவேண்டியிருக்கிறது. எத்தனை வருடம் சென்றாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கிறது. இதில் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு அது தொல்லையாகத் தெரியாது. அதுவே இன்பமானதாகிவிடுகிறது. இதுபோன்றதே வாசிப்பும். உடற்பயிற்சி உடல் நலத்துக்கு அவசியமானது; வாசிப்பு சிந்திப்பதற்கும், மனவளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
தர்க்கரீதியிலான விமர்சனமும், எதிர்வினையும்
பொதுவாக அரைகுறை வாசிப்பில் ஈடுபடுபவர்களே ஒரு நூலைப்பற்றி அறிவற்ற கருத்துத்தெரிவிப்பார்கள். அவர்களால் சிந்தனைபூர்வமாக, அறிவார்ந்த வாதங்களை முன்வைக்க முடியாது. உணர்ச்சிகள் ததும்ப அரசியல்கட்சிக்காரர்கள் போல் அலறத்தான் முடியும். சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பெருமாள்முருகன் என்பவர் எழுதிய ஒரு நாவலை இந்தவிதத்தில்தான் குறைகண்டு அவரோடு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கொதித்தெழும் உணர்ச்சிகளுக்கு அவர்கள் அடிமைகளாகி சிந்தனையை ஓரங்கட்டிவிடுவதால் இவ்வாறு நடக்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்பு வெறியினால் வருகின்ற ஆபத்து. இந்த விஷயத்தில் இந்திய உயர்நீதிமன்றம் பெருமாள்முருகன் பக்கம் நின்று அவர் சார்பாகத் தீர்ப்புக்கூறியது. இதுதான் உணர்ச்சிப் பிழம்புக்கு அடிமையாகிவிடும் அரைகுறை வாசகனுக்கும், சிந்தித்து வாசிப்பவர்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு.
கிறிஸ்தவர்களும் முட்டாள்த்தனமாக மேலே விளக்கியவிதத்தில் நடந்துகொள்வதுதான் வெட்கத்துக்குரியது. இப்படி நடந்துகொண்டால் அறிவுபூர்வமான விமர்சனத்தோடு எதையும் எழுத முடியாது. கிறிஸ்தவ நூல்கள் சத்தியத்தை வெளிப்படையாக ஆதாரங்களோடு விளக்குவனவாக மட்டுமில்லாமல், அசத்தியத்தை ஆதாரங்களோடு தோலுரித்துக் காட்டுபவையாகவும் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களிடம் காண்கிறோம். இயேசு தன் பிரசங்க ஊழியம் முழுவதும் இதைச் செய்திருக்கிறார். யாரையும், எதையும் குறைகூறக்கூடாது என்ற மிகத்தவறான, ஆரோக்கியமற்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருக்கின்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கிறிஸ்துவுக்கு மகிமையளிக்கும் வகையில் வாழமுடியாது. அன்னப் பறவையைப்போலப் பாலைத் தண்ணீரிலிருந்து பிரித்துப் பார்க்கும் பக்குவமில்லாத அவர்கள் சத்தியத்தையும், அசத்தியத்தையும் ஒன்றாக ஏற்று தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பங்கமேற்படுத்திக் கொள்ளுகிறார்கள். கிறிஸ்தவர்கள் சத்தியத்தை மட்டுமே விசுவாசித்து வாழும் வைராக்கியம் கொண்டவர்களாக இருந்தால், அசத்தியத்தையும், அதைப் பரப்புபவர்களையும் அடையாளம் கண்டு அவற்றிற்கு ஒதுங்கி நிற்கும் பக்குவத்தை அடைய வேண்டும்.
ஆங்கிலத்தில், கிறிஸ்தவக் கோட்பாடுகள் வரலாற்றில் வளர்ந்த விதத்தை விளக்கி லூயிஸ் பேர்கோவ் ஒரு நூலை எழுதியிருக்கிறார் (The History of Christian Doctrines). முதலாம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ வேத சத்தியங்களுக்கு எதிராகத் தோன்றிய அசத்தியப் போதனைகளை அக்குவேறாக விளக்கி அவற்றை திருச்சபை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை இந்நூல் முன்வைக்கிறது. சத்தியத்திற்கு எதிரான கருத்துக்களை விமர்சிக்கிறது இந்நூல். அதை எப்படித் தவறு என்று சொல்லமுடியும்? எதிர்மறையாக அசத்தியங்களுக்கு எதிர்வினையளித்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் மேலைநாட்டு இறையியல் கல்லூரிகளில் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிறது. சத்தியத்தை சத்தியமாகக் கற்றுத்தேர்வதற்கு இந்நூல் துணைபோகிறது. இறையியல் மாணவன் அசத்தியம் எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதாலேயே இந்நூல் பாடநூலாக இருக்கிறது.
எதிர்வினை என்பதால் அது தவறானது, மோசமானது என்று கூச்சலிடக்கூடாது. அது ஆதாரபூர்வமானதாக, சிந்தனைபூர்வமானதாக, அறிவார்ந்ததாக இருக்கிறதா? என்றே ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தவிதமாக இறையியல் எதிர்வினையளித்து எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கணக்கான ஆங்கில நூல்கள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இதற்காக யாரும் கொதித்துக் கல்லைக் கையில் எடுப்பதில்லை. ஏன் தெரியுமா? அவர்கள் சிந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள்; எதையும் அலசி ஆராய்கிறார்கள். அரிசியில் கல்லிருக்கக்கூடாது என்பது அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம்; அத்தத்துவத்தை நாம் அரிசிக்கு மட்டுமே ஒதுக்கியிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் நூல்களை எழுதுகிறவர்கள் விமர்சனங்களையும், கருத்துரைகளையும் எதிர்பார்க்கிறார்கள். தரமான இலக்கிய விமர்சனங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு அவசியமானவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். விமர்சனம் எழுதுகிறவர்கள் முதிர்ச்சியுள்ளவர்களாகக் கவனத்தோடு அதை எழுதுவார்கள். நல்ல விமர்சகர்களுடைய விமர்சனம் பேருதவி செய்யும். சில வருடங்களுக்கு முன் பேனர் ஆவ் டுருத் பதிப்பகம் தேர்ந்தெடுத்த கற்றறிந்த சிலரைப் பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் துணைபோன, அவர்களைப் பாதித்திருக்கும் நூலொன்றைப் பற்றி விமர்சித்து எழுதும்படிக் கேட்டு, அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்தது. இந்த நூல் ஆக்கபூர்வமான விமர்சன நூல். தான் வாசித்த ஆயிரக்கணக்கான நூல்களுக்கான விமர்சனத்தைத் தொகுத்து சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஒரு நூலை, “விளக்கவுரைகளுக்கான விளக்கம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். விமர்சனங்களினதும், எதிர்வினைகளினதும் அவசியத்தை உணர்ந்திருப்பதாலேயே இவர்கள் இதைச் செய்தார்கள். இன்றும்கூட முடிந்தவரை ஒரு ஆங்கில நூல் பற்றிய தகுந்த விமர்சனத்தை (Review) வாசிக்காமல் அந்த நூலை நான் வாங்குவதில்லை.
சீர்திருத்த கிறிஸ்தவரான பிரான்ஸிஸ் சேபர் (Francis A. Schaeffer) காரணகாரியங்களோடு சிந்திப்பதன் அவசியத்தைச் சுட்டி ஒரு நூலை 1968ல் எழுதியிருந்தார். அது ஒரு சிறு நூல்தான். இருந்தபோதும் மிக அருமையானது. உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு சிந்திக்காமல் இருந்துவிடுகின்ற தன்மை 20ம் நூற்றாண்டுச் சமுதாயத்தில் தலைதூக்குவதை உணர்ந்தே அந்நூலை அவர் எழுதினார். அந்நூலுக்குப் பெயர், Escape from Reason. இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் இந்நூல் வாசிக்கப்பட வேண்டியது. காரணகாரியங்களோடு சிந்தித்து முடிவெடுப்பதை நிராகரிக்கிறது பின்நவீனத்துவம். இந்தப் பின்நவீனத்துவக் கூவத்தில் போராடி நீச்சலடித்து கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது. சிந்திக்க மறுப்பவர்களால் அது முடியாது. அவர்களால் கிறிஸ்தவத்திற்கு எந்த நன்மையுமில்லை.
விசுவாச வாதநிலைநாட்டல் (Apologetics)
இறையியலில் சத்தியத்திற்காகக் காரணகாரியங்களோடு வாதிடுதல் (Apologetics) என்ற ஒரு பாடம் இருக்கிறது. இதை Defending the faith (விசுவாசத்தைப் பாதுகாத்தல்) என்று எழுத்துபூர்வமாக விளக்கலாம். இதன் பணி சத்தியத்தைப் பிரித்துக்காட்டி அதை வாதத்தினால் நிலைநிறுத்துவதுதான். இதை “விசுவாச வாதநிலைநாட்டல்” என்று கூறலாம். விசுவாச அல்லது சத்திய வாதநிலைநாட்டியே அப்போலஜிஸ்ட். கோர்டன் கிளார்க், கோர்னேலியஸ் வென் டில் ஆகியோர் சிறந்த சீர்திருத்த அப்போலஜிஸ்ட்டுகள்; விசுவாச வாதநிலைநாட்டிகள். பவுல் அப்போஸ்தலன் இதையே அரசன் அகிரிப்பா முன் செய்தார் (அப்போஸ்தலர் 26). அது ஒரு அப்போலஜெட்டிக்கள் பிரசங்கம். பவுலின் நிருபங்களில் பல பகுதிகளில் அவருடைய சத்திய வாதநிலைநாட்டலைக் கவனிக்கலாம்.
பேதுரு பெந்தகொஸ்தே தினத்தில் செய்த பிரசங்கமும் அவ்வகையில்தான் அமைந்திருந்தது. இயேசுவின் மலைப்பிரசங்கம் அருமையான அப்போலஜெட்டிக்கள் பிரசங்கம். பரிசேய நீதியைவிட கிறிஸ்தவர்களின் நீதி மேலானதாக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் மலைப்பிரசங்கப் போதனை.
ஜெப்ரி ஜொன்சன் என்பவர் எழுதிய The Absurdity of Unbelief எனும் நூல் என் கையில் இருக்கிறது. இந்நூலில் ஜொன்சன் அவிசுவாசம் எந்தெந்தக் கோணத்திலெல்லாம் இந்த உலகத்தில் பல்வேறு பெயர்களைச் சூட்டிக்கொண்டு சத்தியத்துக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விளக்கி அவை ஒவ்வொன்றையும் சத்தியத்தின் அடிப்படையில் தகர்க்கிறார். இந்த நூலை என்ன செய்வது? அறிவற்றவர்களே இந்த நூலை எரிக்க முனைவார்கள்; நூலாசிரியரை வைய ஆரம்பிப்பார்கள். இத்தகைய தர்க்கமுறை சமுதாய வளர்ச்சிக்கு அவசியமென்பதை மேற்கத்திய சமுதாயம் அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவமும் அத்தகைய அறிவுபூர்வமான தர்க்கத்தைப் பயன்படுத்தி அசத்தியத்தை எதிர்க்கிறது. சமுதாயத்தில் நிகழாத, சமுதாயம் ஏற்றுக்கொள்ளாததொன்றை ஜொன்சன் செய்யவில்லை. அறிவார்ந்த சமுதாயம் தர்க்கரீதியிலான, வரம்புமீறாத எதிர்வினையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறது.
கிறிஸ்தவத்தை எதிர்த்து “உடைகிறது இந்தியா” என்ற ஒரு நூலை ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் வெளியிட்டபோது அதை நான் திருமறைத்தீபத்தில் விமர்சனம் செய்தேன். விமர்சனம் எந்தவிதமான காழ்ப்புணர்வினாலும் எழுதப்பட்டதல்ல. அந்த நூலின் ஆதாரமற்ற, வரலாற்றுக்குப் புறம்பான, அறிவுபூர்வமானதாக இல்லாத அம்சங்களை விளக்கி கிறிஸ்தவத்திற்காகச் சாட்சியளிக்கும் ஆரோக்கியமான பணியையே என் எதிர்வினை செய்தது. அது அவசியமானது. எழுதியவர்கள் மேல் எனக்குத் தனிப்பட்டவிதத்தில் எந்தக் கருத்தோ, காழ்ப்புணர்வோ இல்லை. இதையே நான் ஜெயமோகனின் “சிலுவையின் பார்வையில்” என்ற நூலை விமர்சித்தபோதும் செய்திருந்தேன். அது, எது மெய்யான வேதகிறிஸ்தவம் என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டுமே சத்தியப் பாதுகாவல் முறையிலான எதிர்வினைகள்; விசுவாச வாதநிலைநாட்டல் ஆக்கங்கள் (Apologetic writings). என் புதிய நூலான “தோமா கிறிஸ்தவம்” இந்தவகையிலேயே தர்க்கரீதியில் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோல் பல ஆக்கங்களுக்கு ஆரோக்கியமான விமர்சனத்தை இந்த இதழில் ஆரம்பத்திலிருந்தே தந்திருக்கிறேன். பெந்தகொஸ்தே பரவசக் குழுக்கள் பற்றியும், வில்லியம் பார்க்கிளே பற்றியும், சார்ள்ஸ் பினி பற்றியும், பில்லிகிரெகம் பற்றியும், ஜோர்ஜ் முல்லர் பற்றியும், ஏமி கார்மைக்கள் பற்றியும், ஜே.ஐ. பெக்கர் பற்றியும், ஏன் நான் மதிக்கின்ற மார்டின் லொயிட் ஜோன்ஸ் பற்றியும் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளியிட்டிருக்கிறேன். கத்தோலிக்க மதத்தை விமர்சனம் செய்து நான் எழுதியிருந்த ஆக்கத்தை ஒரு சிலர் வலைதளத்தில் வாசித்து இன்றும் ஆக்ரோஷமாக எழுதுவார்கள். அந்த ஆக்கத்தை வாசித்துப் பார்த்து அதில் அப்படி என்னதான் கீழ்த்தரமாக எதையாவது எழுதிவிட்டேன்? என்று சிந்தித்திருக்கிறேன். அந்தவிதத்தில் எதையும் நான் எழுதவில்லை. சீர்திருத்த கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவமல்ல என்பதைக் காரணகாரியங்களோடு விமர்சித்து விளக்கியிருக்கிறேன். அதை முதிர்ந்த இலக்கியத் தரத்தோடு விமர்சனம் செய்து அந்த ஆக்கத்தில் எழுப்பப்பட்டிருக்கும் உண்மைகள் தவறானவை என்று நிரூபிக்கும் ஆற்றல் இந்தச் சிலருக்கு இல்லை; அவர்களால் உணர்ச்சிவசப்பட மட்டுமே முடிகிறது. இது முதிர்ச்சிக்கு அடையாளமல்ல.
எதிர்வினை இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஜனநாயக நாடுகளில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றன. அவர்களுடைய பணி ஆதாரபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் வாதிட்டு அரசைக் கணக்குக்கொடுத்து பொறுப்போடு நிர்வாகம் செய்யுமாறு பார்த்துக்கொள்ளுவது மட்டுமே. பிரச்சனை என்னவென்றால் சுயநலத்தோடு எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்பை அறிவற்றவிதத்தில் செய்வதுதான். எதிர்க்கட்சி என்றாலே எல்லாவற்றையும் எதிர்ப்பது மட்டுமே எங்கள் கடமை என்று அவர்கள் நடந்துகொள்கிறார்கள். இந்தச் சிந்தனையே நம் சமுதாயத்தில் பரவி பெரும்பாலானோரை உணர்ச்சிவசப்பட்டு எதையும் எதிர்க்கிறவர்களாக மட்டும் மாற்றியிருக்கிறது. சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ சின் லுங் (Lee Hsien Loong) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பணி பற்றி ஒருமுறை அருமையாக விளக்கினார். “நாங்கள் செய்வதை மட்டுமே எதிர்த்துக்கொண்டிருக்காதீர்கள். நாங்கள் செய்வதற்கு மேலாக நல்ல திட்டம் உங்களிடம் இருந்தால் உடனடியாகக் காட்டுங்கள். அதை வரவேற்று அதன்படி செய்வோம். அதுவே உங்கள் பணியாக இருக்கவேண்டும்” என்றார் லீ. ஒரு கிறிஸ்தவன் சிந்திக்காமல் எதையும் எதிர்ப்பவனாக இருக்கக்கூடாது. அறிவுக்குப் புறம்பான விதத்தில் வாதிடுவதும், உணர்ச்சிவேகத்தோடு எதிர்ப்பதும் குண்டர்கள் செய்யும் செயல். அதாவது, சிந்தனையை அடகுவைத்துவிட்டுச் செயல்படுகிறவர்களின் செயல். கிறிஸ்தவத்தில் குண்டர்களுக்கு இடமில்லை.
நம்மவர்களில் பெரும்பாலானோருக்கு வாசிப்பிலும், எதிர்வினைகளை சந்திப்பதிலும் வளர்ச்சியோ, முதிர்ச்சியோ இல்லை. நம் சமுதாயமே அந்நிலைமையில்தான் தொடருகிறது. அதற்குக் கல்வி மட்டும் காரணமல்ல; சமுதாய சூழ்நிலையும், வளர்ப்பு முறையும் காரணங்களாக இருக்கின்றன. எதற்கு எதிர்க்கிறோம் என்ற உணர்வேயில்லாது எந்த விமர்சனத்தையும் சந்திக்கிறவர்களே நம்மத்தியில் அநேகம். கிராமங்களில் சாவு வீட்டில் வயதான பெண்கள் கூடி ஒப்பாரி வைப்பார்கள். அவர்கள் செத்தவருக்கு சொந்தக்காரர்கள் அல்ல; பணத்திற்காக ஒப்பாரி வைப்பவர்கள். பிணத்தைக் கண்டாலே அவர்களுக்கு அழுகை பொத்துக்கொண்டு வரும். அதுபோல்தான் நம்மவர்களில் சிலர் விமர்சனங்களைச் சந்திக்கிறார்கள். விமர்சனம் என்றாலே அதற்கெதிராக ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
எதிர்வினைகளை எதிர்ப்பது கிறிஸ்தவத்திற்கு அழகல்ல; முதிர்ச்சியான நடைமுறையுமல்ல. விமர்சனங்களைக் காதுகொடுத்து கேட்கவேண்டும்; வாசிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், ஆராயவேண்டும். தர்க்கரீதியில் அவற்றை அணுகவேண்டும். பதிலளிப்பதானால் சிந்தனைபூர்வமாக, அறிவுபூர்வமாக, நாகரீகத்துடன் அதைச் செய்யவேண்டும். அறிவற்ற விமர்சனமும், அசிங்கத்தனமான எதிர்வினையும் முதிர்ச்சியற்றவர்களிடம் மட்டுமே தஞ்சமாகியிருக்கும். வாசகர்களே! நிதானத்தோடு எதையும் வாசியுங்கள்; நிதானமிழக்காமல் சிந்தித்து எதிர்வினையளியுங்கள். தரமான எதிர்வினை விமர்சன நூல்களும், தரமான எதிர்வினைகளும் கிறிஸ்தவ இலக்கியத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்தும்.
ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தில் கிறிஸ்தியானின் மனமாற்றம்
ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணம் ஒரு பியூரிட்டன் இலக்கியம். அநேகருக்கு அதுபற்றிய புரிதல் இல்லை. காரணம், வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடையாளமே இல்லாததொரு கிறிஸ்தவம் நம்மினத்தில் இருந்து வருவதுதான்.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவப் பெருமகன்களே பியூரிட்டன்கள் என்று கிறிஸ்தவ வரலாற்றில் அழைக்கப்படுகிறார்கள். ஜோன் பனியன் ஒரு பியூரிட்டன் பாப்திஸ்து. தற்கால மொழிநடையில் அவர் ஒரு சீர்திருத்த பாப்திஸ்து. சீர்திருத்தப் போதனைகளில் ஊறித்திளைத்திருந்தவர் ஜோன் பனியன். பியூரிட்டனான ஜோன் ஓவனைப்போலக் கல்வியில் தேர்ந்தவராக இராதிருந்துவிட்டாலும் ஜோன் ஓவனுக்குப் பரிச்சயமானவர்; வேதத்தில் ஊறித்திளைத்தவர். ஜோன் ஓவன், பனியனில் பெருமதிப்பு வைத்திருந்தார். பனியனின் பிரசங்க வரம் தனக்குக் கிடைக்குமானால், தன்னுடைய கல்வியனைத்தையும் தாரைவார்த்துப் பனியனுக்குத் தந்துவிடத் தயாராக இருக்கிறேன் என்று ஓவன், இங்கிலாந்தின் பாராளுமன்றத் தலைவராக இருந்த ஒலிவர் குரோம்வெல்லிடம் கூறியிருக்கிறார். இது பனியனுடைய பிரசங்கத்தைக் கேட்டபின் ஓவன் சொன்னது. மோட்சப் பிரயாணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தபோது பனியனைப் பற்றிய விபரங்களையோ, அவருடைய இறையியல் பின்னணியையோ அறியாதவர்கள் அவற்றை விளக்கமுயலவில்லை. மோட்சப் பிரயாணத்தை வாசித்திருக்கிறவர்களும் ஜோன் பனியனின் இறையியல் பின்னணியை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
பிரபல பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் வேதத்திற்கு அடுத்தபடியாக விரும்பிப் படித்த நூல் மோட்சப் பிரயாணம். அதைக் குறைந்தது நூறு தடவையாவது வாசித்திருப்பேன் என்று ஸ்பர்ஜன் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் மோட்சப் பிரயாணம் வேதத்தில் தோய்த்தெடுக்கப்பட்டிருந்ததுதான். அந்தளவுக்கு வேத வசனங்கள் நிறைந்து காணப்படுகின்றன மோட்சப் பயணத்தில். “ஜோன் பனியனுடைய நூலில் எதையும் நீங்கள் வாசியுங்கள். அவற்றை வாசிக்கும்போது வேதத்தை வாசிக்கின்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றும். அவர் ஒரு வாழும் வேதம்” என்று ஸ்பர்ஜன் பனியனைப் பற்றிக் கூறியிருக்கிறார். “அவருடைய சரீரத்தில் எங்கு குத்தினாலும் வேதம் பீறிடும்” என்றார் ஸ்பர்ஜன். ஸ்பர்ஜன் விரும்பி வாசித்த நூலாசிரியர் பனியன். ஸ்பர்ஜனும், பனியனும் வேதத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தனர். பனியனின் மோட்சப் பயணத்திற்கு ஸ்பர்ஜன் விளக்கவுரை எழுதியிருந்தார். “வேதத்திற்கு அடுத்தபடியாக நான் மதிக்கும் நூல் மோட்சப் பயணம்” என்று ஸ்பர்ஜன் அதன் முதல் அதிகாரத்திலேயே கூறியிருக்கிறார்.
சுவிசேஷ ஊழிய நூல்நிலையம் மொழிபெயர்ப்பு (ELS)
தமிழில் 19ம் நூற்றாண்டில் மோட்சப் பயணம் மொழிபெயர்க்கப்பட்டபோது சாமுவேல் ஐயர் மூலத்திலிருந்தவாறு ஒன்று தவறாமல் அனைத்து வேதக்குறிப்புகளையும், நாவலின் பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களையும் தன் மொழிபெயர்ப்பில் தந்திருந்தார். இன்று புழக்கத்தில் இருந்து வரும் ELS ன் புதிய மொழிபெயர்ப்பு (1993) அவையனைத்தையும் தங்கள் மொழிபெயர்ப்பில் தரவில்லை. ஒருசில வேதவசனங்களை மட்டுமே தந்திருக்கின்றனர். முக்கியமாக கதாபாத்திரங்களுக்கான எந்தவிளக்கத்தையும் அவர்கள் மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புக்களாகத் தரத் தவறிவிட்டனர். இதனால் ஏற்படும் இரண்டு பாதிப்புகள் என்ன தெரியுமா?
- வேதத்தில் தோய்த்தெடுக்கப்பட்டிருக்கிறது மோட்சப் பயணம், என்ற ஸ்பர்ஜனின் வார்த்தைகளை இவர்கள் பொய்யாக்கிவிடுகிறார்கள். வாசகர்களுக்கு இந்த மொழிபெயர்ப்பில் வேதத்தின் ஆக்கிரமிப்பை அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிறது.
- தான் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு மூல ஆசிரியர் தந்திருந்த விளக்கங்கள் ஒன்றையும் மொழிபெயர்ப்பில் தராமல் போய்விட்டதால் அந்தக் கதாபாத்திரங்களை வாசகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு புரிந்துகொள்ள வேண்டிய ஆபத்து ஏற்படுகிறது.
நூலை எழுதியவனின் நோக்கத்திற்கு மாறாக எந்தக் கதாபாத்திரத்தையும் புரிந்துகொள்ள முயலக்கூடாது. ஆசிரியரோடு இணைந்து பயணிக்க வேண்டியதே வாசகனின் கடமை. இந்தப் பெரிய தவறுகள் புதிய பதிப்புகளில் திருத்தப்பட வேண்டும். மோட்சப் பயணத்தின் பலனை இந்தத் தவறுகள் முக்கால்வாசி வீதம் குறைத்துவிடுகின்றன; அதன் இறையியல் போதனைகளையும் அடியோடு மறைத்துவிடுகின்றன. மோட்சப் பயணம் சீர்திருத்த கிறிஸ்தவ இறையியல் புதினமாக இருப்பதால் அப்போதனைகளைப் புரிந்துகொள்ள இந்தத் தவறுகள் மேலும் இடையூறுகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஒருவனிடம் ஒரு நூலை வாசிக்கும்படிச் சொல்லிவிட்டு அவனுடைய கண்களைத் துணியால் கட்டிவிட்டால் எப்படியிருக்கும்? அதைப்போலத்தான் இருக்கிறது தமிழில் காணப்படும் மோட்சப் பிரயாணம் நூலும். வாசகன் அதில் வெறும் கதையை மட்டுந்தான் காணமுடியும். வர்த்தகரீதியில் கவனத்தோடியங்கும் பதிப்பகத்தார் இத்தகைய மொழிபெயர்ப்புத் தவறுகளுக்கு இடங்கொடுக்கமாட்டார்கள்.
உருவக இறையியல் நாவல்
சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் விசுவாசித்த சுவிசேஷத்திற்கும் இன்று நடைமுறையில் சபை சபையாகப் பிரசங்கிக்கப்பட்டுவரும் சுவிசேஷத்திற்கும் பெரும் வேறுபாடுண்டு. கிறிஸ்துவுக்காக கையைத் தூக்கு, உன்னை அர்ப்பணம் செய், அவரை ஏற்றுக்கொள் போன்ற வார்த்தைப்பிரயோகங்களுக்கு பியூரிட்டன் அகராதியில் இடமில்லை. “இயேசுவிடம் வா, உனக்கு நல்வாழ்வு கிடைக்கும். இந்த நிமிடமே அவர் உன்னைப் பரலோகத்தில் சேர்ப்பார், அது உன் கையில்தான் இருக்கிறது, நீ எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. தூக்கு உன் கையை இயேசுவுக்காக” என்றெல்லாம் பியூரிட்டன்கள் ஆர்மீனிய இறையியலை ஒத்துப் பிரசங்கித்ததில்லை. அவர்களுடைய சுவிசேஷம் எழுத்துச் சுத்தமான வேத சுவிசேஷம். அதை எந்தவிதத்திலும் அவர்கள் கொச்சைப்படுத்தியதில்லை. தற்கால சுவிசேஷ வித்தைகள் உருவாக ஆர்மீனியன்களான சார்ள்ஸ் பினியும், பில்லி கிரெகமுந்தான் அடிப்படைக் காரணம். அதுவே பரவலாக இருபதாம் நூற்றாண்டில் நடைமுறையாகிவிட்டது. பியூரிட்டன்கள் மனித இரட்சிப்பு இறையாண்மையுள்ள கர்த்தரின் கையில் இருப்பதாக நம்பி விசுவாசித்தார்கள். அவர் மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட பாவிகளை இரட்சிக்கக்கூடியவர் என்றும், அவர்களுக்காகவே கிறிஸ்து சிலுவைப் பலியைச் சுமந்தார் என்றும் விளக்கியவர்கள். அந்த இரட்சிப்பை அடைவதற்கு மனிதன் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விக்கான பியூரிட்டனின் பதில் என்ன தெரியுமா?
பியூரிட்டனான ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தை வாசியுங்கள். 19ம் நூற்றாண்டுத் தமிழில் சாமுவேல் ஐயர் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த மோட்சப் பிரயாணம் வேத வசனங்களையும், அதில் வரும் பாத்திரங்களுக்கான விளக்கத்தையும் கொண்டிருக்கிறது. மோட்சப் பயணம் ஒரு கிறிஸ்தவ இறையியல் நாவல் (Theological novel). அதுவும், அடையாளமொழி அல்லது உருவகத்தைப் (Allegory) பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல். இந்நாவல் கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையை விளக்குகின்றது. அதனால் நாவலின் சம்பவங்கள், எந்தப் பகுதியில் எந்தக் கிறிஸ்தவ அனுபவத்தை விளக்குகிறது என்று கேட்காமல் இருக்கமுடியாது. இது வெறும் கற்பனைக் கதையல்ல. பனியன் தன் நாவலைக் கனவில் கண்டதுபோல் வர்ணிக்கிறார். இருந்தாலும், கிறிஸ்தவ விசுவாசத்தை அவரது நாவல் தெளிவாக வேதரீதியில் விளக்குகிறது. கிரேச்சம் மேச்சன், “மென்மையான, அதேநேரம் ஒவ்வொரு வார்த்தையிலும் துடிக்கும் ஜீவனைக் கொண்டிருக்கும், நூல்களனைத்திலும் அதிகமாக இறையியலைக் கொண்டிருக்கும் நூல்” என்று மோட்சப் பயணத்தைக் குறித்து விளக்கியிருக்கிறார். “வேதத்தை இன்னொரு விதத்தில் தந்திருக்கிறது” மோட்சப் பயணம் என்று ஸ்பர்ஜன் கூறியிருக்கிறார். அதனால் இந்நாவலை வெறும் கதையாக மட்டும் நினைத்து வாசிக்கிறவர்கள் அதனால் பயனடைய முடியாது; இதற்குப் பின்னால் காணப்படும், இது விளக்கும் இறையியல் போதனைகளை விளங்கிக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். வெளிப்படுத்தல் விசேஷத்தைப் போல அடையாளமொழி நடையில் கிறிஸ்தவ இறையியலை விளக்குகிறது பனியனின் நாவல்.
முதல் காட்சியில் கிறிஸ்தியான்
ஜோன் பனியன் கிறிஸ்தியான் என்ற தன் கதாநாயகனோடு இக் கிறிஸ்தவ நாவலை ஆரம்பிக்கிறார். இதில் ஆரம்பக் காட்சியிலேயே கிறிஸ்தியான் கந்தையைக் கட்டிக்கொண்டு தன் முதுகில் ஒரு பெரும் பாரத்தையும், கையில் ஒரு நூலையும் (வேதம்) சுமந்து நிற்கிறான். இதற்கான விளக்கத்தை பனியனே தருகிறார். “சத்திய வேதத்தை வாசிக்கிற ஒருவன் தன் முதல்தரமான கிரியைகள் முதலாய்க் கந்தைக்குச் சமமாய் இருக்கிறதென்றும், பாவமானது ஒரு பாரச்சுமையைப் போல் தன்னை இருத்துகிறதென்றும் அறிந்து உணர்ந்திருக்கிறதைக் காட்டுகிறது” என்று சாமுவேல் ஐயர் மொழிபெயர்த்திருக்கிறார். கந்தை என்பதைத் தற்காலத் தமிழில் சாக்கு என்போம். முதுகில் இருந்தது பாவமல்ல; பாவத்தின் பாரத்தை உணர்ந்ததால் ஏற்பட்ட பாவ உணர்த்துதலுக்கு அது அடையாளம். இது எத்தனை அருமையான அறிமுகம் தெரியுமா? முதல் காட்சியிலேயே பனியனுடைய இரட்சிப்பிறையியல் (Salvation theology) தன்னை அப்பட்டமாக அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறது.
கிறிஸ்தியானில் பாவ உணர்த்தல்
பாவியாகிய எந்த மனிதனும் இயற்கையாக இந்தக் காட்சியில் கிறிஸ்தியான் நிற்பது போல் இருப்பதில்லை. மனிதனின் பாவம் அவனைக் கர்த்தருக்கு எதிரியாக்கி சத்தியத்தைவிட்டு விலகி நிற்க வைத்திருக்கிறது (ரோமர் 3:23). மனிதனில் இயற்கையாகவே நன்மை காணப்படுகிறது என்ற சாக்கிரடீஸ், பிளேட்டோ ஆகியோரின் தத்துவஞானமும், பாவமே இல்லை என்று பறைசாற்றும் பெலேஜியனியமும், மனிதன் முழுமையாகப் பாவத்தால் பாதிக்கப்படவில்லை என்று கச்சைகட்டி நிற்கும் தற்கால ஆர்மீனியனிய சிந்தனைகளும் இங்கே அடிவாங்குகின்றன. பாவத்தில் தொடரும் மனிதன் தன் நிலையை உணரான்; பரிசுத்த ஆவியின் கிரியையால் வேதவசனங்களை வாசித்து அதனால் பாதிக்கப்படுகிறபோதே அவன் தன் நிலையை உணர்கிறான். கிறிஸ்தியான் இந்த முதற்காட்சியில் முதுகில் பாரச்சுமையோடும், கந்தை உடுத்திக் கையில் வேதத்தோடும் நிற்பதற்கு இதுவே காரணம். அவனில் பாவ உணர்தல் ஆரம்பமாகிவிட்டது. சுவிசேஷத்தை வாசிக்கும் வாய்ப்புக்கிடைத்து அதனால் இருதயம் ஆவியினால் பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தியான் இக்காட்சியில் நிற்பதைக் காண்கிறோம்.
கிறிஸ்தியான் கையிலிருந்த நூலை வாசித்து, அதன் செய்தியை உணர்ந்து அலறுகிறான். அக்கினியால் அழியப்போகும் இந்த உலகத்தைப் பற்றி அவன் வேதத்தில் வாசித்ததே அவனுடைய அலறலுக்குக் காரணம். வேத சிந்தனைகளால் அவனுடைய முதுகில் இருந்த பாவச்சுமை வரவர அதிகரித்து அவனுக்குப் பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்துகிறது. மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிகிறான். உடம்பு சிலிர்த்தது. இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அவன் வாய்விட்டுக் கதறி அழுகிறான். பெந்தகொஸ்தே தினத்தில் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு இருதயம் குத்தப்பட்டு இப்படித்தான் அலறியிருக்கிறார்கள் மக்கள் (அப்போஸ்தலர் 2). தற்காலத்தில் இத்தகைய பாவ உணர்தலாகிய அனுபவத்தைக் கடைசியாக எங்கு கண்டிருக்கிறீர்கள்? இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று சொல்வதற்கும், கல்தோசை நன்றாக இருக்கிறது என்று சொல்லுவதற்கும் வேறுபாடு தெரியாத ஒரு கூட்டம் கிறிஸ்தவ கூட்டம் என்று தன்னை அழைத்துக்கொண்டல்லவா திரிகிறது.
கிறிஸ்தியானுக்கு பாவச்சுமை பற்றிய உணர்த்தல் ஏற்பட்டதற்குப் பரிசுத்த ஆவியானவரே காரணம். வேதத்தை வாசிக்கின்றவர்களிலும், சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களிலும் அவரே பாவ உணர்வை ஏற்படுத்துகிறவராக இருக்கிறார் (யோவான் 16:8). இப்பாவவுணர்வினாலேயே கிறிஸ்தியான் மனங்கலங்கி வருந்தினான். இரட்சிப்பை நாடி நின்றான். கர்த்தருக்கு முன் எந்த நீதியும் இல்லாமல், தேவகோபத்தைச் சுமந்து நித்திய தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் நிற்கிறேன் என்பதை உணர்வதுதான் பாவ உணர்தல். இந்தப் பாவ உணர்தலே அவனை இரவு முழுதும் தூங்கவிடாமல், தன்னுடைய குடும்பத்தாரையும் தன்னோடு இரட்சிப்பை நாடி வரும்படி மன்றாடுவதற்குக் காரணமாக இருந்தது. அவனுடைய வார்த்தைகளை, செவிட்டுக் காதில் விழுவதுபோல் எவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கிறிஸ்தியான் இரவு முழுதும் தன் குடும்பத்தாருக்காகவும், ஊராருக்காகவும் ஜெபித்தான். அவனுடைய நாட்கள் ஜெபிப்பதிலும், வேதம் வாசிப்பதிலும், மனங்கலங்கி நிற்பதிலுமே போய்க்கொண்டிருந்தது. இந்த இடத்தில் கிறிஸ்தியான் இன்னும் இரட்சிப்படைந்து தேவசமாதானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவுகொள்ள வேண்டும். இருந்தபோதும் அவன் மற்றவர்கள் தன்னைப்போல இரட்சிப்பை நாடவேண்டும் என்று மன்றாடியதில் இருந்து அவனில் ஏற்பட்டுள்ள பாவ உணர்தலின் தாக்கத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.
சுவிசேஷகனும், திட்டிவாசலும்
பாவச்சுமையின் பாரத்தோடு வயல்வெளிகளில் கிறிஸ்தியான் உலாவிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் சுவிசேஷகனைச் (நற்செய்தியாளன்) சந்திக்கிறான். இந்தச் சுவிசேஷகன் உண்மையுள்ள தேவஊழியன் என்று ஜோன் பனியன் விளக்கமளிக்கிறார். தன்னுடைய பாவ உணர்தலையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பில் தான் அழிந்துபோகாமல் இருக்க என்ன வழி என்பதையும் கிறிஸ்தியான் சுவிசேஷகனிடம் விளக்கினான். அதற்கு சுவிசேஷகன், தூரத்தில் தெரியும் பிரகாசிக்கிற வெளிச்சத்தைப் பின்பற்றித் திட்டிவாசலை நோக்கிப் போ, அங்கு போய் அந்த வாசலின் கதவைத் தட்டினால் நீ என்ன செய்யவேண்டுமென்பதற்கு அங்கு பதில் கிடைக்கும் என்றான்.
திட்டிவாசல் என்றால் என்ன தெரியுமா? பழங்காலக் கோட்டைகளில் அதற்குள் போவதற்கு பிரம்மாண்டமான பெருங் கதவுகள் இருக்கும். அந்தக் கதவுகள் மாலைவேளையில் மூடப்பட்டுவிடும். பெருங்கதவுகள் மூடப்பட்ட பின் கோட்டைக்குள் யானைகளோ, ஒட்டகங்களோ, பெரும் வாகனங்களோ போக முடியாது. ஆட்கள் போவதற்காக மட்டும் அந்தப் பெருங்கதவுகளுக்குப் பக்கத்திலேயே ஒரு நுழைவாயில் (சிறுகதவு) காணப்படும். அதையே திட்டிவாசல் என்று அழைப்பார்கள். திட்டிவாசல் என்பது பழைய தமிழ். ஆங்கிலத்தில் இதைப் பனியன் Wicket gate என்று அழைத்தார். இது பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்குள் நுழைந்த வார்த்தை. இதைத் தமிழாக்கியவர்கள் சரியாகவே திட்டிவாசல் என்று பழைய மோட்சப் பிரயாண மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார்கள். புதிய மொழிபெயர்ப்பு (ELS) இதைக் “குறுகிய வாசல்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. உண்மையில் இன்றைய தலைமுறைக்கு அதுவே சரியான மொழிபெயர்ப்பு. திட்டிவாசல் குறுகியதாகவே இருக்கும். ஒரு சிலர் நுழையும் அளவுக்குக் குறுகிக் காணப்படும்.
இந்தத் திட்டிவாசல் நெருக்கமாய் இருப்பதால் அதன் வழியில் ஒருவன் மூட்டை முடிச்சோடு நுழைய முடியாது. அதன் வழியில் போகிறவன் தன் பாவங்களை வெறுத்துப் பின்னால் தள்ளிப்போடவேண்டும் என்று பனியன் நூலில் விளக்கமளிக்கிறார். சுவிசேஷகன், கிறிஸ்தியானைப் பார்த்து, அந்தத் திட்டிவாசலை நீ அடைந்து வாசல் கதவைத் தட்டினால் அங்கிருப்பவர் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுவார் என்கிறான். தன் முதுகுச் சுமையைச் சுமந்து கிறிஸ்தியான் திட்டிவாசலை நோக்கிப் பயணிக்கிறான்.
இதென்னடா, இரட்சிப்பை அடைவதற்கு சுவிசேஷகன் சொன்ன விளக்கம் வித்தியாசமாக இருக்கிறதே. தற்கால சுவிசேஷகர்கள் இந்நேரத்துக்கு கிறிஸ்தியானை இயேசுவுக்காகக் கையை உயர்த்தச் சொல்லி ஞானஸ்நானத்தையும் கொடுத்து முடித்திருப்பார்களே. இந்தச் சுவிசேஷகன் நீட்டி முழக்கி கிறிஸ்தியானை அலைக்கழியச் செய்கிறான் போல் தெரிகிறதே என்று தற்காலத்தார் நினைக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், சுவிசேஷத்தில் ஆர்வம் காட்டுகிற எவரையும், அவர்கள் மனம் நோகாமல் இரட்சிப்படைய உதவி செய்யவேண்டும் என்ற போக்கில், தேவ ராஜ்ஜியத்துக்குள் நுழையும் வழியைத் தற்கால சுவிசேஷகர்கள் வாழைப் பழத்திற்குள் ஊசி நுழையும் அளவுக்குச் சுலபமானதாக்கியிருக்கிறார்கள். இதுவே இன்றைய சுவிசேஷ வழியாக இருக்கிறது. மாறாக பியூரிட்டனான பனியனின் நூலின் சுவிசேஷகன் திட்டிவாசலுக்குப் போ, அதன் கதவைத் தட்டு அங்கே பதில் கிடைக்கும் என்கிறான். இதுவே பியூரிட்டன்கள் காட்டிய வழி; காரணம் அதுவே வேதம் காட்டும் வழி. இந்தத் திட்டிவாசல் எதைக் குறிக்கிறது என்பதைப் பின்னால் கவனிப்போம்.
சமீபத்தில் என் சபையில் இருவர் அங்கத்துவத்திற்காக விண்ணப்பித்தார்கள். இருவரின் சாட்சியும் தெளிவானதாக இருக்கவில்லை. அதிலிருக்கவேண்டிய மனந்திரும்புதலுக்கான அடையாளங்களைக் காணமுடியவில்லை. சாட்சியை மறுபடியும் திருத்தி எழுதித் தரும்படிக் கேட்டேன். மெய்யான மனந்திரும்புதல் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவர்களில் ஒருவரின் மனந்திரும்புதலில் எனக்குப் பெரிய சந்தேகம் ஏற்பட்டது. இப்போது இருவருமே அங்கத்துவத்தை உடனடியாக அடைய முடியாத நிலையிலிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழ் வரவேண்டிய நிலையிலிருக்கிறார்கள். நான் செய்திருக்கும் இந்தக் காரியத்தைத் தற்கால சுவிசேஷப் பிரசங்கி கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டான். தேவராஜ்ஜியத்துக்குள் வந்துவிட்டவர்களை நான் தள்ளிவைப்பதாக நினைப்பான். உண்மையில் அவனே தவறு செய்கிறான். தேவராஜ்ஜியத்துக்குள் நுழையும் வாசல் நெருக்கமான திட்டிவாசல் என்பதை அவன் உணரவில்லை. அந்த வாசலைப் பெருங்கோட்டை வாசல்போல் அவன் அகலத் திறந்துவிட்டிருப்பதனாலேயே மெய்யாக மனந்திரும்பாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாக அறிவித்து வருகிறான்.
மோட்சப் பிரயாணத்தில் சுவிசேஷகன், ஏன் உடனடியாக இரட்சிப்புக்காகத் தானே முயற்சியெடுத்து எதையும் செய்யும்படிக் கிறிஸ்தியானிடம் சொல்லாமல், அவனைத் திட்டிவாசலை நோக்கிப் போகச் சொன்னான்? அதற்குக் காரணம் அந்தத் திட்டிவாசல் வழியே ஜீவனுக்குரிய வழி. அங்கேயே அவனுக்கு விடுதலை கிடைக்கும். கிறிஸ்தியானுக்கு பாவ உணர்தல் ஏற்பட்டிருந்தபோதும், அதன் காரணமாகத் தன்னைச் சீர்படுத்திக்கொண்டு பரலோகம் போய்விடும் ஆற்றல் அவனில் இருக்கவில்லை. இரட்சிப்புக்காக அவன் செய்யக்கூடியதெதுவும் அவனில் இருக்கவில்லை. சுவிசேஷகன் சுட்டிய அந்தக் குறுகிய, நெருக்கமான வாசலை நோக்கிக் கிறிஸ்தியான் பயணிக்கும்போது அவனுடைய குடும்பமும், நண்பர்களுக்கு அவனைப் போகாதே! போகாதே! என்கிறார்கள். உலக ஆசைக்குள் மூழ்கிக்கிடக்கும் அவர்களுக்கு இரட்சிப்பைப் பற்றிய கவலை இல்லை. கிறிஸ்தியானின் மனம் பாதிக்கப்பட்டதுபோல் அவர்களுடைய இருதயம் பாவச்சுமையால் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தியான் இதையெல்லாம் மீறித் திட்டிவாசலை நோக்கி ஓடுகிறான்.
இந்த இடத்தில் கிறிஸ்தியானின் நிலையை ஒருமுறை திரும்பவும் கவனியுங்கள். அவன் தன் கையிலிருக்கும் நூலை (வேதத்தை) வாசித்து அவனுக்குப் பாவச்சுமையின் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதன் பாரத்தால் அவன் அவதிப்படுகிறான். இந்தப் பாவ உணர்த்தல் மட்டுமே இரட்சிப்படைந்ததற்கு அடையாளமாகிவிடாது. அந்தப் பாரச்சுமை எத்தனை ஆழமானதாகவும், பயங்கரமானதாக இருந்தாலும் அது இரட்சிப்பின் அறிகுறியாகிவிடாது. அது நல்ல ஆரம்பம்; மிக அவசியமான ஆரம்பம். அதுவே முடிவாகிவிடாது. இதை ஆங்கிலத்தில் Conviction of Sin என்று சொல்வார்கள். கிறிஸ்தியான் தன் ஆத்மீக அனுபவத்தில் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கிறது. தற்கால சுவிசேஷகர்கள் இந்தப் பாவச்சுமையால் ஒருவன் பாதிக்கப்படும் அனுபவத்தைப் பற்றிய இறையியலறிவற்றவர்களாக இருக்கின்றனர்; அதை அவர்கள் உதாசீனம் செய்துவிடுகிறார்கள். சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதையே வேதமும் விளக்குகிறது.
குற்றவுணர்வும், பாவ உணர்தலும்
இந்தப் பாவச்சுமை உண்டாக்கும் பாவ உணர்த்தலை சுவிசேஷத்தைக் கேட்கும் எல்லோருமே ஏதோவொரு வகையில் அடையக்கூடும்; இருந்தும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் மட்டுமே அது இரட்சிப்பில் போய் முடியும். பாவ உணர்தலைப் பற்றி அதிகம் விளக்கியவர்கள் பியூரிட்டன்கள். சீர்திருத்தவாத சுவிசேஷம் இதற்கு மிக முக்கிய இடத்தை அளிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வருகிறபோது மனிதர்களின் பாவத்தை உணர்த்துவது அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்று என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 16). பாவ உணர்தல் உலகத்துப் பொருள்களால் வருவதில்லை. சாதாரணமாக ஒரு தவற்றைச் செய்துவிடும்போது மனிதனில் ஏற்படும் குற்றவுணர்வுக்கும், பாவ உணர்தலுக்கும் வேறுபாடு உண்டு. குற்ற உணர்வு, கர்த்தர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் மனச்சாட்சியினால் உண்டாவது. அது இயற்கையாக ஏற்படுவது. தேவசாயலில் இருக்கும் மனிதன் சிலவேளைகளில் குற்றங்களை உணர்ந்து வருந்துவான். இந்தக் குற்றவுணர்வை மனிதர்களாகிய அனைவரும் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள். தெருவில் அருமையாகக் கார் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஒருவன் ஒருநாள் வேகத்தோடு ஓட்டியதற்காக போலிஸிடம் மாட்டிக்கொள்கிறான். இப்படி நடந்துவிட்டதே, நான் தவறுசெய்துவிட்டேனே, என்று அவன் மனம் பதறுகிறான். அவனுக்குச் சில நாட்களுக்கு மனத்தில் சமாதானமும் இல்லாமல் இருக்கும். இதுவே குற்றவுணர்வு. இது எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுவது. இதைப் பாவ உணர்த்தலோடு தொடர்புபடுத்தி நம்மைக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
பாவத்தை உணர்தல் வேதத்தை வாசிக்கும்போது அல்லது சுவிசேஷத்தைக் கேட்கும்போது நம் இருதயத்தில் ஏற்படுவது. அதற்குக் காரணம் பரிசுத்த ஆவியானவர் வேத வசனங்களைப் பயன்படுத்தி நம் இருதயத்தில் பாவத்தைப் பற்றியும், வரப்போகும் நியாயத்தீர்ப்பைப் பற்றியும் உணர்த்தி நம் இருதயத்தை அசைப்பதுதான். இந்த ஆவியானவரின் பாவ உணர்த்துதலாகிய செயல் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், தெரிந்துகொள்ளப்படாதவர்கள் ஆகிய இருபகுதியாரிலும் நிகழும். தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் நிகழும்போது அவர்கள் அதில் தொடர்ந்து நித்திய ஜீவனை அடைவார்கள். அந்தப் பாவ உணர்த்துதல் அவர்களில் ஜீவனில் போய் முடிகிறது. அதேவேளை, தெரிந்துகொள்ளப்படாதவர்களில் அது பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியையாக மட்டுமே காணப்படுகிறது (Common operation of the Spirit of God). அதனால்தான் சுவிசேஷத்தைக் கேட்டுப் பாவ உணர்தலை மட்டும் அடைகின்ற பலர் நித்திய ஜீவனை அடைவதில்லை. ஏரோது ராஜாவுக்கு நித்திய ஜீவனில் ஆவலிருந்தது; அவன் தான் செய்த பாவத்தை யோவான் ஸ்நானனால் உணர்த்தப்பட்டு வருந்தவும் செய்தான். இருந்தபோதும் அந்தப் பாவ உணர்வு அவனில் தொடர்ந்து அடையவேண்டிய இடத்தை அடையவில்லை. இதுவே யூதாசிலும் நிகழ்ந்தது. இயேசுவுக்கெதிராகப் பாவம் செய்துவிட்டேன் என்று அவன் வருந்தினான்; ஆனால் தற்கொலை செய்துகொண்டான். இந்தப் பாவ உணர்தல் தெரிந்துகொள்ளப்படாத சிலரில் சில காலம் தொடரலாம்; ஏரோதுவிலும், யூதாசிலும் இருந்ததுபோல. அவர்கள் அதன் துன்பத்தையும் அனுபவிக்கலாம். இருந்தபோதும் அது ஜீவனை அடைவதில் போய் முடிவதில்லை (எபிரெயர் 6:4-6).
பனியனின் நூலின் சுவிசேஷகன் சரியான ஆலோசனையைத்தான் தந்திருக்கிறான். திட்டிவாசலை நோக்கி கிறிஸ்தியானை அவன் காரணத்தோடேயே போகச்சொன்னான். கிறிஸ்தியானின் பாவச்சுமையின் பாரம் எந்தளவுக்கு உண்மையானது என்பதை இனித்தான் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்தப் போதனையைத் தான் 19ம் நூற்றாண்டில் சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், 20ம் நூற்றாண்டில் மார்டின் லோயிட் ஜோன்ஸும் தந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரசங்க ஊழியத்தில் அநேகர் பாவச்சுமையால் அவதிப்பட்டிருப்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இருந்தும் அவர்களில் எல்லோருமே இரட்சிப்பை அடையவில்லை. இந்த விஷயத்தில் ஜோன் பனியனைப்போலவே ஸ்பர்ஜனும், மார்டின் லொயிட் ஜோன்ஸும் பியூரிட்டன்களின் பாணியிலேயே சுவிசேஷத்தை அணுகியிருக்கிறார்கள்.
திட்டிவாசலை நோக்கி: பிடிவாதனும், இணங்குநெஞ்சனும்
இப்போது மறுபடியும் கிறிஸ்தியானிடம் வருவோம். சுவிசேஷகனின் அறிவுரையைக் கேட்டு அவன் திட்டிவாசலை நோக்கிப் போகும் வழியில் ஓடாக்குறையாக நடக்கிறான். வழியில் அவன் பிடிவாதன், இணங்குநெஞ்சன் (விட்டுக்கொடுப்பவன்) ஆகிய இருவரையும் சந்திக்கிறான். பிடிவாதன் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து கர்வத்தோடு வாழ்கிறவன். வேதவார்த்தையை அவன் காதில் போட்டுக்கொள்ளுவதில்லை. பவுல் ரோமர் 1:25ல் விளக்கும் சத்தியத்தை அடக்கி வைக்கிறவன் பிடிவாதன். இணங்குநெஞ்சன், மத்தேயு 13ல் காணப்படும் விதைக்கிறவனின் உவமையில் வரும் நாலு நிலங்களில் ஒன்றை நினைவுபடுத்துகிறான். இவன், பனியனின் அடையாளமொழியின்படி எதற்கும் இலகுவாக வளைந்து கொடுத்துவிடக்கூடியவன். அதுவே அவனுடைய பிரச்சனையும். இவன் சத்தியத்தைக் காதில் கேட்டு அதற்கு ஆர்வத்தோடு தலை சாய்க்கிறவன்; அந்த வழியில் கொஞ்சக்காலம் போகவும் செய்வான். இருந்தபோதும் தாங்காத் துன்பம் வருகிறபோது அடியோடு விட்டுவிட்டு விலகி ஓடிப்போவான். பிடிவாதனோடு ஆரம்பத்தில் இருந்த இணங்குநெஞ்சன், பிடிவாதனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சத்தியத்தின் வழியில் தொடர ஆர்வம் காட்டிப் பிடிவாதனைவிட்டு விலகிவிடுகிறான். ஸ்பர்ஜன் சொல்கிறார், “கர்த்தரின் கிருபையை அனுபவித்திராதபோதும், இந்த உலகத்தில் சிலர், கேடானவர்களோடு சேரக்கூடாது என்பதை உணர்ந்து குறிப்பிட்டகாலத்துக்கு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.” இதைத்தான் இணங்குநெஞ்சனும் சிலகாலம் தன் வாழ்வில் செய்திருக்கிறான்.
இணங்குநெஞ்சர்களை நாம் சமுதாயத்தில் எங்கும் காணலாம். அவர்கள் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தால் கிறிஸ்தவர்களைப் போல வாழ முயற்சிப்பார்கள். மரியாதையோடு வாழ்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களால் மதிக்கப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்கள் மத்தியில் அவர்கள் இருக்க நேர்ந்தால் இலகுவாக கெட்டவழிக்கு இணங்கிவிடுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களில் உறுதி இருக்காது. கடலில் தண்ணீர்போகும் போக்கெல்லாம் வளைந்துகொடுத்துச் செல்லும் ஜெல்லிமீன் போன்றவர்கள் இவர்கள். ஜெல்லிமீனுக்கு இழுது மீன், சொறிமீன் என்றெல்லாம் தமிழில் பெயரிருக்கிறது. இந்த வளைந்துகொடுத்துப் போகும் போக்கே இணங்குநெஞ்சனில் காணப்படும் ஆபத்தான குணம். கிறிஸ்தியானுக்கும், இணங்குநெஞ்சனுக்கும் இடையில் பெரிய வேறுபாடொன்றைக் காண்கிறோம். கிறிஸ்தியானின் முதுகில் இருந்த பாரமாகிய பாவ உணர்த்தல் இணங்குநெஞ்சனின் முதுகில் இல்லை! இதிலிருந்து என்ன தெரிகிறது? இணங்குநெஞ்சன் சுவிசேஷ வாழ்க்கையில் காட்டிய ஆர்வம் அவனுடைய இருதய மாற்றத்தில் இருந்து உருவாகவில்லை என்பதுதான். ELS புதிய மொழிபெயர்ப்பு இவனை “விட்டுக்கொடுப்பவன்” என்று அழைக்கிறது. வளைந்துகொடுப்பவன் என்பது எழுத்துபூர்வமான மொழியாக்கம். புறத்தில் இருந்து வரும் செல்வாக்கிற்கு தன்னை ஒப்படைக்கிறவன் இவன். சாமுவேல் ஐயரின் மொழிபெயர்ப்பான இணங்குநெஞ்சன், என்பது எதற்கும் இணங்கிப்போகிறவன் என்ற அர்த்தத்தில் சரியாகவே இருக்கிறது.
திட்டிவாசலை நோக்கிப் போகும் வழியில் பிடிவாதனும், இணங்குநெஞ்சனும் கிறிஸ்தியானோடு சம்பாஷனையில் ஈடுபடுகிறார்கள். ஜோன் பனியன் இங்கே என்ன செய்கிறார்? இந்தக் கதாப்பாத்திரங்கள் மூலம் சுவிசேஷம் விளக்கும் இரட்சிப்பின் அருமையையும், அதை அடைவதற்கான வழிமுறையையும், இடையில் நிகழப்போகும் இடையூறுகளையும் நாம் நினைத்துப் பார்க்கச் செய்கிறார். நாவல் மூலம் சீர்திருத்த சுவிசேஷ இறையியல் நம்மோடு உறவாடுகிறது. இந்தப் பாத்திரங்களை வெளிப்புறமாக மட்டும் கவனிக்காமல் இவை இனங்காட்டும் சத்தியங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பிடிவாதன் கிறிஸ்தியானின் இரட்சிப்பின் விளக்கத்தைக் கேட்க மறுத்ததோடு இணங்குநெஞ்சனின் மனத்தையும் குழப்ப முயற்சிக்கிறான். அதையே சுவிசேஷத்தை எதிர்ப்பவர்கள் இயற்கையாகச் செய்வார்கள். தானும் உண்ணாது, அடுத்தவனையும் உண்ணவிடாமல் செய்யும் சுயநலம் பிடித்த நாயைப் போன்றவர்கள் அவர்கள். இருந்தும் இணங்குநெஞ்சன் அவன் பேச்சுக்குத் தலை சாய்க்காமல் உறுதியோடு கிறிஸ்தியானோடு பயணிக்கிறான். “அடடா, இவன் பரவாயில்லை போலிருக்கிறதே, சத்தியத்தில் ஆர்வம் காட்டுகிறானே” என்று உணர்ச்சிவசப்பட ஆரம்பிக்கிறீர்களா? கொஞ்சம் பொறுத்திருங்கள். பிடிவாதன், கிறிஸ்தியானையும் இணங்குநெஞ்சனையும் புத்திகெட்டவர்கள் என்று கூறிவிட்டுப் பாதிவழியில் திரும்பி விடுகிறான். கிறிஸ்தியானும், இணங்குநெஞ்சனும் அந்தப் பெரும் வனத்தில் பயணித்துத் திட்டிவாசலை நோக்கிப் போகிறார்கள். அவர்கள் வழியில் சம்பாஷனையில் ஈடுபடுகிறார்கள். கிறிஸ்தியான் இணங்குநெஞ்சனுக்குப் பரலோக வாழ்வின் அற்புதத்தைப் போகும் வழியில் விளக்குகிறான். வேதத்தில் அவை பற்றி விளக்கியிருக்கும் பகுதிகளை வாசித்துக் காட்டுகிறான். இரட்சிப்பை இன்னும் அடைந்திராவிட்டாலும் கிறிஸ்தியான் தான் அடைந்திருக்கும் அனுபவத்தை மற்றவர்களும் அடையவேண்டும் என்ற ஆவல் உள்ளவனாக இருக்கிறான்.
கிறிஸ்தவர்களான நாம் கிறிஸ்தியானிடம் பாடம் கற்கவேண்டும். இதற்கு ஸ்பர்ஜன் மோட்சப் பயணத்திற்கான தன் விளக்கவுரையில் அருமையான விளக்கமளிக்கிறார். எவரையும் நாம் குறைத்து மதிப்பிட்டு அவர்கள் கிறிஸ்துவிடம் வரமாட்டார்கள் என்று தீர்மானித்து பேசாமல் இருந்துவிடுவதை விட, அவர்களை ஊக்குவித்து கிறிஸ்துவிடம் போகுமாறு வலியுறுத்த வேண்டுமென்கிறார் ஸ்பர்ஜன். பரிசுத்த ஆவியினால் பாவ உணர்த்தலை மட்டுமே இதுவரை அடைந்திருந்த கிறிஸ்தியான் இங்கே நமக்கு சுவிசேஷம் சொல்லுவதில் வழிகாட்டியாக இருக்கிறான். “சுவிசேஷ வலையை நிரப்ப வேண்டியது பரிசுத்த ஆவியின் கிரியை. வலையை வீசியெறிந்து, ஆழத்தில் இருந்து அதைக் கரைவரை இழுத்து வரவேண்டியது நம் வேலை. நல்ல மீனைப்பிடித்திருக்கிறோமா அல்லது மோசமானதைப் பிடித்திருக்கிறோமா என்பது நம் ஆண்டவரின் கையில்தான் இருக்கிறது” என்கிறார் ஸ்பர்ஜன். இந்த விஷயத்தில் கிறிஸ்தியான் மற்றவர்கள் மேல் வைத்திருந்த அன்பு பாராட்டவேண்டியது. கிறிஸ்துவை விசுவாசித்து சமாதானத்தைப் பெற்று சந்தோஷத்துடன் வாழும் நாம், “இணங்குநெஞ்சர்களே வாருங்கள்” என்று மற்றவர்களைக் கிறிஸ்துவிடம் வருமாறு அழைக்கிறோமா?
சம்பாஷனைக்கு மத்தியில் கிறிஸ்தியானும் இணங்குநெஞ்சனும் திட்டிவாசலை நோக்கி வேகமாக அந்தப் பெருவனத்தில் நடந்து போனார்கள். இணங்குநெஞ்சனுக்கு கிறிஸ்தியான் பரலோக வாழ்வைப் பற்றி விளக்கிய நல்ல விஷயங்கள் பெரும் ஆனந்தத்தைக் கொடுக்கின்றன. அடடா! எத்தனை பெரிய வாழ்க்கை, அருமையான வாழ்க்கை என்று ஆனந்தத்தோடு சொல்லிக்கொண்டு இணங்குநெஞ்சன் வனத்தில் நடக்கிறான். கிறிஸ்தியானும் பாவ உணர்த்தலாகிய பாரத்தை சுமந்தபடி முடிந்தவரை அவனோடு வேகமாக நடக்க முயற்சிக்கிறான்.
நம்பிக்கையிழவு
இவ்வேளையில் பனியன் தன் கனவில் அவர்கள் இருவரும் கவனக்குறைவினால் ஒரு உளையில் விழுவதைக் காண்கிறார். இந்த உளைக்கு நம்பிக்கையிழவு (நம்பிக்கையிழப்பு) என்று பெயர். இது எதைக் குறிக்கிறது? பனியன் விளக்குகிறார், “புதிதாய் மனந்திரும்புகிறவர்களுக்கு உண்டாகும் பலவித பயங்கரங்களை இது குறிக்கிறது.” பனியன் இது பாவஉணர்த்தலை அடைந்தவர்கள் சந்திக்கும் அனுபவமாக விளக்குகிறார். “பாவ உணர்த்துதலோடு தொடர்ந்து ஒருவனில் பாவத்தின் நாசத்தையும், அழுக்குகளையும் உணரும்படியாக இது நிகழ்ந்து அவனில் தொடருகிறது. இதற்குப் பெயர்தான் நம்பிக்கையிழவு” என்கிறார் பனியன். தொடர்ந்து பனியன், “பாவி தன் நிர்ப்பந்த நிலைமையை அறிந்து உணர்கிறபோது அவன் ஆத்துமாவில் மகா பயங்கரங்களும், சந்தேகங்களும் தளர்ச்சிகளும் உண்டாகி அவனை அதைரியப்படுத்துகின்றன” என்கிறார். இந்த உளையின் சேற்றில் இருவரும் தத்தளித்தார்கள். அதிலிருந்து மீண்டுவருதற்கு அவர்கள் பெருமுயற்சி எடுத்தார்கள். கிறிஸ்தியானின் முதுகில் ஏற்கனவே பாவச்சுமை இருந்து அழுத்தியதால் அவன் சேற்றில் அதிகமாக மூழ்கிவிட்டான். அவனால் நகரவும் முடியவில்லை. உளையிலிருந்து எப்படி வெளிவருவது என்று கிறிஸ்தியான் தவித்துக் கொண்டிருந்தான்.
இவ்வேளையில் அவனோடு உளையில் விழுந்திருந்த இணங்குநெஞ்சன் கிறிஸ்தியானிடம், ஐயா நீர் எங்கேயிருக்கிறீர்? என்று கேட்கிறான். அதற்குக் கிறிஸ்தியான் அது தனக்குத் தெரியவில்லை என்று பதிலளிக்க இணங்குநெஞ்சனுக்கு அதிக கோபம் வந்துவிடுகிறது. உன் பேச்சைக்கேட்டுத்தானே இந்தப் பயணத்தில் வந்தேன். இத்தனை துன்பங்களை நான் சந்திக்கவேண்டி வரும் என்று ஏற்கனவே நீ சொல்லியிருந்தால் நான் உன்னோடு வந்திருக்கவே மாட்டேன் என்று கத்திவிட்டு, முழுப்பலத்தோடு எப்படியோ தட்டுத்தடுமாறி சேற்றில் இருந்து வெளிவந்து தன் வீடு இருந்த நகரத்தை நோக்கி வேகமாக ஓடத்தொடங்கினான். அதற்குப் பிறகு அவன் கிறிஸ்தியானுடைய பார்வையில் பட்டதேயில்லை. இணங்குநெஞ்சன் துன்பங்களில்லாத வாழ்க்கையை எதிர்பார்த்தான். அவனால் துன்பங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விதைக்கிறவனின் உவமையில் (மத்தேயு 13) வருகிற சிலரை இவன் நினைவுறுத்துகிறான். குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் சுவிசேஷத்திலும், வேதத்திலும், சபையிலும் ஆர்வம் காட்டியிருந்தாலும் அவற்றின் காரணமாக ஏற்படும் துன்பங்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நல்ல நிலமாக இல்லாதிருந்ததால்தான் இணங்குநெஞ்சனால் திட்டிவாசலை நோக்கிப் போகும் பயணத்தில் தொடரமுடியவில்லை. மெய்யான பாவஉணர்த்தல் அவனில் இருக்கவில்லை. அவன் கதை அதோடு முடிவடைந்துவிடுகிறது. பழைய வாழ்க்கைக்கே அவன் திரும்பிவிடுகிறான்.
உளையில் இருந்து பாவச்சுமையின் பாரத்தால் வெளியே வர முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த கிறிஸ்தியான் சகாயர் என்ற இன்னுமொரு பாத்திரத்தைச் சந்திக்கிறான். சகாயர் என்றால் உதவிசெய்கிறவர் என்று அர்த்தம்.
இவர் ஆத்தும ஆபத்தால் வருந்துகிறவர்களுக்கு ஆறுதலளிப்பதற்காக இயேசு கிறிஸ்து பயன்படுத்தும் பல ஏதுக்களைக் குறிக்கிறவராக இருக்கிறார். சகாயர், கிறிஸ்தியான் அந்த உளையில் இருந்து வெளிவர உதவுகிறார். அதற்கு முன், உளையில் இருக்கும் படிகளை நீ கவனிக்கவில்லையா? என்று அவர் கிறிஸ்தியானைப் பார்த்துக் கேட்கிறார். பயத்தினால் அவற்றைக் கவனிக்காமல் போய்விட்டேன் என்றான் கிறிஸ்தியான். சகாயர், “அந்தப் படிகள் உளையின் களிம்புகளால் சிலவேளைகளில் மறைந்து காணப்படும். தெரிந்தாலும் இந்த வழியில் வருகிற சிலர் மயக்கத்தால் படிகளைக் கூர்ந்து கவனிக்காமல் போய்விடுகிறார்கள்; சேற்றில் மேலும் விழுந்து அழுக்கடைவார்கள். படியை மிதித்துவிட்டால் அப்புறம் நல்ல பாதைதான்” என்கிறார்.
லோகஞானி
சகாயரின் துணையோடு நம்பிக்கையிழவில் இருந்து வெளிவந்த கிறிஸ்தியான் தனியே அந்த வனத்தில் நடக்கிறான். அவன் அடுத்துச் சந்திப்பது லோகஞானி. இவன் மாமிசநேசபுரி எனும் பட்டணத்தில் வாழ்கிறவன். லோகஞானி பாத்திரம் இந்த உலகத்தில் தேவனுக்கும், உலகத்துக்கும் ஊழியம் செய்யப் பிரயாசைப்படுகிறவர்களைக் குறிக்கிறது. இவனைப்போன்றவர்கள் முடிந்தவரையில் மதவாழ்க்கை வாழ்ந்து தேவபக்தியை அடையாளங்காட்டும் சில நல்ல செயல்களை மட்டும் செய்துவருவார்கள். ஆனால், இந்த உலக வாழ்வை இவர்கள் விடாமல் பற்றிக்கொண்டிருப்பார்கள். அதிலிருந்து விடுபட உதவும் ஆத்தும விஷயங்களுக்கு தங்கள் வாழ்வில் இடங்கொடுக்க மாட்டார்கள். இந்த லோகஞானி கிறிஸ்தியானிடம் சுவிசேஷகனைப் பற்றி இழிவாய்ப் பேசி, உன்னை அந்த மனிதன் தவறான வழிக்கு அடையாளம் காட்டியிருக்கிறான் என்றும், நன்மார்க்கத்திற்கு வழி தனக்குத் தெரியும் என்று அவன் மனத்தை மாற்ற முயல்கிறான். கிறிஸ்தியானும் அவனுடைய பேச்சில் விழுந்துபோய்விடுகிறான். லோகஞானி ஒரு போலிச் சுவிசேஷகன். லோகஞானி காட்டிய பாதை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதன் மூலமாக சீயோனை அடைய முயற்சி செய்யும் பாதை. லோகஞானி நல்லறம் என்ற பட்டணத்தில் வாழும் நியாயப்பிரமாணிக்கனைப் பற்றிச் சொல்லுகிறான். இவன் நற்கிரியைகளினால் இரட்சிப்பை அடையலாம் என்று போதிக்கிறவர்களுக்கு அடையாளமாக இருக்கிறான். இவனுடைய மகன் மரியாதை. இவன் நல்வாழ்க்கை வாழ்ந்து பரலோகம் அடைய முயற்சிக்கிறவர்களைக் குறிக்கிறான். இந்தவிதமாகக் கிரியையினால் பரலோகத்தை அடைய உதவும் நல்லறப் பட்டணத்திற்கு கிறிஸ்தியான் குடும்பத்தோடு போய் வாழ்ந்தால் அவனுக்கு வாழ்வுண்டு என்று லோகஞானி மோசமான வழியைக்காட்டினான்.
லோகஞானியின் பேச்சைக்கேட்டுத் தான் போய்க்கொண்டிருந்த பாதை மாறி கிறிஸ்தியான் நல்லறப் பட்டணத்தை நோக்கிப் போனான். இது இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஆத்தும இரட்சிப்பை நாடாமல் சொந்தக் கிரியைகளின் மூலம் அதை அடைய முயற்சி செய்வதற்கு அடையாளம். கிறிஸ்தியான், லோகஞானி விளக்கிய மலை அடிவாரத்தை அடைந்தபோது அதன் சிகரம் தன் மேல் விழுவதுபோலிருந்ததைப் பார்த்துப் புலம்பினான். தான் ஏற்கனவே சுமந்த பாரத்தைவிட மேலும் அதிகமான பாரத்தை போன பாதையில் உணர்ந்த கிறிஸ்தியான் கலங்கிப்போனான். அவனுடைய தேகம் குலுங்கியது; சரீரமெல்லாம் வியர்வை வழிந்தது. லோகஞானி மோசம் செய்துவிட்டான், அவன் பேச்சைக் கேட்டு நான் பாதை மாறியது எத்தனை முட்டாள்த்தனம் என்று கிறிஸ்தியான் உணர்ந்தான். இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்பை அடைவதை விடுத்து தன் சொந்தக் கிரியைகளின் மூலமாக அதைப் பெற்றுக்கொள்ள முயன்றதே கிறிஸ்தியான் விட்ட பெருந்தவறு. நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றி இரட்சிப்பைத் தேட முயன்று அதன் தேவகோபத்தின் பாரம் முன்பிருந்த பாவச்சுமையையும்விட அதிகமாகத் தொல்லை தந்ததை கிறிஸ்தியான் உணர்ந்தான். தேவகோபம் அதிகமாகத் தன்மேல் இருப்பதை உணர்ந்து கலங்கினான்.
திட்டிவாசல் கோட்டைக்குள் நுழைதல்
நம்பிக்கையிழவைவிட்டு வெளியே வந்து குற்றவுணர்வோடும், தடுமாற்றத்தோடும் கிறிஸ்தியான் நின்றுகொண்டிருந்தபோது அவனைச் சந்திக்க, இரண்டாம் தடவையாக சுவிசேஷகன் வந்தான். (மோட்சப் பயணத்தில் வழிதெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுக்கு சரியான வழியைக் காட்டி உதவி செய்கிறவர்களுக்கு அடையாளமே சுவிசேஷகன்). கிறிஸ்தியானைப் பார்த்ததும் சுவிசேஷகனுக்கு கோபம் வந்தது. கிறிஸ்தியான் நடுங்கினான். சுவிசேஷகன் கிறிஸ்தியானோடு ஒரு நீண்ட சம்பாஷனையில் ஈடுபடுகிறான். நடந்த அனைத்தையும், தன் தவற்றையும் கிறிஸ்தியான் விளக்கிச் சொன்னான். சுவிசேஷகன் அவனுக்கு நித்திய ஜீவனுக்குரிய வழியைப்பற்றி விளக்கமாக எச்சரிப்போடு சொல்கிறான். அதையெல்லாம் கேட்டு கிறிஸ்தியான் தன் தவறுகளுக்காக மிகவும் மனம் வருந்தி, எனக்கு விமோசனமே இல்லையா? என்று கேட்டு அழுகிறான். லோகஞானியின் பேச்சைக் கேட்டு நடந்த தன் மூடத்தனத்திற்காக மிகவும் வருந்துகிறான். சுவிசேஷகன் அவனைப் பெரிதும் கண்டித்து, எச்சரித்து சரியான பாதையில் போவதற்கு இனி மிகவும் கவனமாக இரு என்று கூறி, அவனுக்கு ஆறுதல் கூறித் தழுவி வழியனுப்புகிறான்.
அதற்குப் பிறகு கிறிஸ்தியான் தன் கவனத்தைப் போகவேண்டிய பாதையில் மட்டுமே செலுத்தி, எவரோடும் வழியில் பேசாமல், பேசுகிறவர்களுக்கு காதையும் கொடுக்காமல், சுடுமணலில் நடக்கிறவனைப்போல நடந்து திட்டிவாசல் வழியில் போய் திட்டிவாசலின் படியில் ஏறினான். வாசலின் கதவை மூன்று தடவைத் தட்டினான். அங்கிருந்தவர் அவன் யார் என்று விசாரித்தபிறகு கதவைத் திறந்தார். கிறிஸ்தியான் உடனே மெதுவாகக் காலெடுத்து உள்ளே போகப் போனான். ஆனால் கோட்டைக்குள் இருந்த பட்சதாபன் அவன் கையைப் பிடித்து சட்டென்று உள்ளே இழுத்துக்கொண்டார். பட்சதாபனுக்கும் கிறிஸ்தியானுக்கும் இடையில் சிறு சம்பாஷனை நிகழ்கிறது. பட்சதாபனும், கிறிஸ்தியானும் நடந்துசெல்ல கிறிஸ்தியானுக்கு இனிப்போக வேண்டிய வழியைப் பட்சதாபன் விளக்குகிறான். முன்னால் தெரியும் இடுக்கமான வழியில் தான் நீ இனி நடக்கவேண்டும் என்றும், அது நூலைப்போல நேரான வழி என்றும் பட்சதாபன் விளக்குகிறான். ஆனால், கோணலும் விசாலமுமான தவறான வழிகள் காணப்படும், அதில் போய்விடாதே என்றும் அவன் விளக்குகிறான். கிறிஸ்தியானுக்குத் தன் முதுகில் இருக்கும் பாரச்சுமையைப் பற்றிய கவலை தொடர்ந்திருந்தது. அதை இறக்கக்கூடிய வல்லமை அவனிடம் இருக்கவில்லை. நீ, நேராக நடந்து போ, விரைவில் ஓரிடத்தை அடையும்போது அது தானாகவே விழுந்துவிடும். அந்த இடத்துக்குப் போகும்வரை பொறுமையோடு நீ அதைச் சுமந்து திரிய வேண்டும், என்று பட்சதாபன் விளக்குகிறான்.
கிறிஸ்தியான் தொடர்ந்து இடுக்கமானதும், நேரானதுமான வழியில் நடந்து, போகும் வழியில் வியாக்கியானியைச் சந்திக்கிறான் (சத்தியவேதத்தின் மூலம் அனைத்தையும் கிறிஸ்தவர்களுக்கு விளக்கும் பரிசுத்த ஆவியானவரே வியாக்கியானி). வியாக்கியானியிடம் மேலும் தெளிவான வேதவிளக்கங்களைப் பெற்றுக்கொண்ட பின் கிறிஸ்தியான் நேரான பாதையில் நடந்துபோக ஆரம்பித்தான். அவன் முதுகில் இருந்த பாரச்சுமையால் அதிக துன்பத்தை அடைந்தான். இருந்தும் ஓட்டமும் நடையுமாக அவன் இறுதியில் ஒரு மேட்டின் அடிவாரத்தை அடைந்தான். அதன் உச்சியில் ஒரு சிலுவையும், அதன் அருகே ஒரு சமாதியும் இருந்தன. கிறிஸ்தியான் மெதுவாக அந்த மேட்டில் ஏறி சிலுவை அருகே வந்தான். அப்போது அவனுடைய முதுகில் இருந்த பாரச் சுமையின் கயிறுகள் அறுந்து, பாரச்சுமை சமாதிவரை உருண்டோடி அதனுள் விழுந்து காணாமல் போயிற்று. அதுமுதல் கிறிஸ்தியான் மலர்ந்த முகத்துடன் பேரானந்தமடைந்தான். அன்றோடு அவனுடைய பாவ உணர்த்துதலின் பாரச்சுமை நீங்கியது. அவன் ஆனந்தப் பரவசம் அடைந்து பாடினான்.
கிறிஸ்தியான் இனி சீயோனுக்குப் போகவேண்டிய பாதை நீண்டதாக இருந்தது. இனியே அவன் இதுவரை சுமந்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த பாவ உணர்த்துதலின் பாரமின்றி நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் சீயோனை நோக்கி நடைபோட முடியும். இதுவே மோட்சப் பயணம் விளக்கும் கிறிஸ்தியானின் மனமாற்றமாகிய அனுபவம்.
மோட்சப் பயணத்தில் கிறிஸ்தியானில் நிகழ்ந்த மனமாற்றத்தை சுருக்கமாகப் பின்வருமாறு விளக்கலாம்:
- பாவத்தை உணர்ந்து வருந்துதல்
- கிறிஸ்துவிடம் வழி காட்டப்படுதல்
- பாவ உலக வாழ்க்கையை விட்டு விலகியோடுதல்
- நம்பிக்கையையும், தைரியத்தையும் இழத்தல் (நம்பிக்கையிழவு)
- கிரியைகளால் இரட்சிப்பை அடையும் முயற்சியில் இருந்து மனந்திரும்புதல்.
- கிறிஸ்துவை நாடிப், பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு இரட்சிப்பை அடைதல் (திட்டிவாசல்).
- ஆவியினால் போதிக்கப்படுதல்.
- சிலுவையின் கீழ் இரட்சிப்பின் நிச்சயத்தை கிறிஸ்துவிடமிருந்து அடைதல்.
மேலே காணப்படும் பட்டியலில் 1-6 வரையுள்ள ஆத்மீக அனுபவங்கள் கிறிஸ்தியான் மனமாற்றத்தை அடையும்வரை நிகழ்ந்தவை. 7-8 வரையுள்ளவை மனமாற்றத்தை அடைந்தபிறகு நிகழ்ந்தவை.
இனி மோட்சப் பயணம் விளக்கும் அதிமுக்கியமான வேத சத்தியங்களைக் கவனிப்போம்.
1. மோட்சப் பயணம் பனியனின் சொந்த மனமாற்றத்தை விளக்கும் நூல்.
ஹியூ மார்டின், “மோட்சப் பயணம் பனியன் எழுதிய Grace Abounding to the chief of sinners என்ற நூலின் நாடக உருவம்” என்கிறார். Grace Abounding நூல் பனியன் மனமாற்றம் அடைந்த அனுபவத்தை விளக்குகிறது. அதை பனியன் அந்நூலுக்கான உப தலைப்பிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறார். பனியன் இதை மோட்சப் பயணத்தில் குறிப்பிடவில்லை; குறிப்பிட்டிருந்தால் தமிழ் வாசகர்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கும். இரண்டு நூல்களையும் வாசிக்கிறவர்கள் இதைப் புரிந்துகொள்ளத் தவறமாட்டார்கள். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் பனியன் மோட்சப் பயணத்தில் விளக்கும் அவருடைய மனமாற்றம் வேதபூர்வமானதாக இருந்தபோதிலும், கிறிஸ்துவை விசுவாசிக்கும் எல்லோரிலும் அதே அளவில் ஆழமாக நிகழ்வதை எதிர்பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத்தான். பனியனின் நூல் 1678ல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோதே சிலர் நூலைப்பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பனியனில் மனமாற்றம் நிகழ்ந்தவாறு மனமாற்றத்தை அவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்திருந்திராததுதான். அதனால் கிறிஸ்தியானின் மனமாற்றத்தை எல்லோருடைய மனமாற்றத்திற்கான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தவகையில் சிந்தித்து அநேகர் மோட்சப் பயணத்தில் கிறிஸ்தியான் எப்போது மெய்யான மனமாற்றத்தை அடைந்தான் என்பதைப் புரிந்துகொள்ளத் தடுமாறியிருக்கிறார்கள். பனியனும் கிறிஸ்தியானுடைய கிறிஸ்தவ அனுபவத்தைப்போலவே எல்லோருடைய அனுபவமும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தக் காரணத்தால்தான் மோட்சப் பயணத்திற்கு தமிழில் ஒரு நல்ல இறையியல் விளக்கவுரை அவசியம் என்று நான் இந்த இதழில் மோட்சப் பயணத்தை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். மோட்சப் பயணம் நாவலாக இருப்பதால் இதையெல்லாம் பனியன் அதில் விளக்கியிருக்கமுடியாது.
2. பனியன் தன் மனமாற்றத்தில் அனுபவித்த “நம்பிக்கையிழவு” அனுபவம் பற்றிய விளக்கம்.
கிறிஸ்தியான், சுவிசேஷத்தை வாசித்து பாவ உணர்த்துதலை அனுபவிக்க ஆரம்பித்துத் திட்டிவாசல் கோட்டையை நோக்கி நடந்தபோது வழியில் நம்பிக்கையிழவு எனும் உளையில் விழுந்துவிடுகிறான். பிடிவாதனும் அவனோடு அதில் விழுந்துவிடுகிறான். இது நாவலில் கிறிஸ்தியானின் மனமாற்றத்தின் ஆரம்பக் கட்டத்தில் நிகழ்கிறது. அத்தோடு, ஒரு குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட கால அளவுக்கு அது மிகவும் ஆழமாக அவனில் நிகழ்ந்திருக்கிறது. இவ்வனுபவத்தில் கிறிஸ்தியான் கடும் ஆத்மீகத் துன்பத்தை அனுபவித்து தனக்கு எந்த விமோசனமும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறான்; சகல நம்பிக்கையையும் இழக்கிறான். பாவ உணர்த்துதலை அடைந்து கிறிஸ்துவை நோக்கிப் போகிறவர்களின் வாழ்க்கையில் இத்தனை ஆழமாகக் குறிப்பிட்ட கால அளவுக்குக் கடுமையான ஆத்மீகத் துன்பத்தை அவர்கள் அனுபவிப்பது மனமாற்றத்தின் ஒரு அங்கமா? அதை எல்லோரும் அனுபவிக்க வேண்டுமா? அதை அனுபவிக்காமல் விசுவாசத்தை அடைய முடியாதா? இது விசுவாசத்தை அடைவதற்கான ஒரு நிபந்தனையா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய அனுபவத்தைப் பற்றி பியூரிட்டன்கள் அதிகம் எழுதியிருப்பதால் அவர்கள் முன்னேற்பாட்டியம் (Preparationism) மற்றும் சட்டவாதப் போதனையைத் (Legalism) தருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் எழுந்திருந்தது. இதைத்தான் பனியன் தன் நாவலில் செய்திருக்கிறாரா?
ஆரம்பத்திலேயே நான் விளக்கியதுபோல் இந்த அனுபவம் ஜோன் பனியனின் வாழ்க்கையில், அவர் மனமாற்றத்தை அடைவதற்கு முன் மிக ஆழமாக நிகழ்ந்திருக்கிறது. அதையே அவர் உருவகப்படுத்தி கிறிஸ்தியானின் அனுபவமாக விளக்கியிருக்கிறார். பனியன், இந்த அனுபவம் குறித்த காலப்பகுதியில், குறிப்பிட்ட கால அளவுக்கு விரிவாகக் கிறிஸ்தியானில் நிகழ்ந்திருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். அதனால், பாவ உணர்த்துதலை அடைந்திருப்பவர்கள் மனமாற்றத்திற்கு முன் ஒரு குறித்த காலகட்டத்தில், குறிப்பிட்ட காலத்துக்கு இத்தகைய ஆழமானதும், விரிவானதுமான கடும் ஆத்மீகத் துன்பத்தை அனுபவிப்பது இரட்சிப்பை அடைவதற்கு அவசியமானது என்ற தவறான எண்ணத்தை இது உருவாக்கிவிடுகிறது. அதனால் மனமாற்றமடைந்தவர்களில் இத்தகைய அனுபவத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்களா? என்று ஆராய்ந்து, அடையாதவர்கள் இரட்சிப்பை அடையவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடும் ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. முதலில் இரட்சிப்பை அடைவதற்கு எந்தப் படிமுறையையும் எவரும் பின்பற்ற வேண்டும் என்று வேதம் விளக்கவில்லை; அப்படிச் செய்வது சட்டவாதப் போதனையாகிவிடும். நிச்சயம் பனியன் அதைச் செய்யவில்லை. பனியனுடைய ஆழமான சொந்த அனுபவமாகிய நம்பிக்கையிழவு தவறானதா? இல்லவேயில்லை! அது அவரது தனிப்பட்ட அனுபவம்; கிறிஸ்துவை அடையுமுன் அவர் அனுபவித்தது, அதில் தவறில்லை. அத்தகைய அனுபவத்தை எல்லோரும் அடையவேண்டுமென்று பனியன் சொல்கிறாரா? இல்லை! ஆனால், அவருடைய கதாபாத்திரத்தின் அனுபவம் அத்தகைய தவறான புரிதலை வாசகர் அடையுமாறு செய்துவிடுகிறது. இதை எப்படித் தவிர்த்துக்கொள்ளுவது? கிறிஸ்தியானின் அனுபவத்தைப் பனியனுடைய தனிப்பட்ட சொந்த அனுபவமாக மட்டும் பார்ப்பதன் மூலம் அதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
பியூரிட்டன்கள் சட்டவாத முன்னேற்பாட்டியத்தை சுவிசேஷத்தின் மூலம் முன்வைத்தார்களா? அதாவது, ஒருவன் கிறிஸ்தவனாவதற்கு முன் மிகக் கடுமையான பாவ உணர்த்துதலைத் தன் வாழ்வில் குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர்கள் விதித்திருந்தார்களா? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அவசியம். உண்மையில் பியூரிட்டன்கள் இந்த விஷயத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தகைய நிபந்தனையை விதித்ததில்லை; முன்னேற்பாட்டியத்தை வலியுறுத்தியதுமில்லை. அவர்கள் விளக்கியதெல்லாம், பாவத்தை அடியோடு வெறுக்கின்ற ஒருவன் மட்டுமே முழு இருதயத்தோடும் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியும் என்பதுதான். பாவத்திற்காக மனம் வருந்துதலை வலியுறுத்துகிற வேதம், ஆழமான மனம் வருந்துதலை சுவிசேஷ செய்தியில் நிபந்தனையாக விதிக்கவில்லை; சுவிசேஷம் ஒருவன் நேரடியாக கிறிஸ்துவிடம் வரும்படி மட்டுமே அழைக்கிறது. வீழ்ச்சியினால் பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனித இருதயமே அந்தப் பாவத்திற்காக ஒருவன் ஆழமாக மனம் வருந்தவேண்டும் என்பதை அவசியமாக்குகிறது. பாவ உணர்த்துதல் மனமாற்றத்தின் ஒரு அங்கம்; அதுவே மனமாற்றத்திற்கு அடையாளமாக இருக்கிறது. பாவ உணர்த்துதலை அடையாமல் ஒருவரும் மனமாற்றத்தை அடைவதில்லை.
நம்பிக்கையிழவு போன்ற அதிரடி மனந்திரும்புதலை ஒருவர் தன் வாழ்வில் எக்காலத்திலாவது அனுபவித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சட்டவாதப் போதனையை நோக்கி அழைத்துச் செல்வதாகிவிடும். இத்தகைய அனுபவத்தை நாம் கட்டாயப்படுத்த முடியாது. வேதம் இதை எவரிலும் எதிர்பார்க்கவில்லை. மோட்சப் பயணத்தில் இது நேரடியாக விளக்கப்படாததால், வாசகர்கள் இந்த நம்பிக்கையிழவு அனுபவத்தைத் தாங்கள் அடையவில்லையே என்று ஆதங்கப்படலாம்; அத்தகைய ஆதங்கம் அவசியமற்றது. ஒவ்வொருவருடைய மனமாற்ற அனுபவமும் வித்தியாசமானதாகக் காணப்படும். ஒருவருடைய அனுபவத்தை மட்டும் அனைவருக்குமான அளவுகோலாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. ஆத்மீக எழுப்புதல் நிகழும் காலங்களில் பலருடைய பாவ உணர்த்துதல் மிக ஆழமாகக் காணப்பட்டிருப்பதை கிறிஸ்தவ வரலாறு விளக்குகிறது. 20ம் நூற்றாண்டில் தன் ஆரம்பகால ஊழியத்தில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் இதை அனுபவபூர்வமாக சிலரில் கண்டிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் கிறிஸ்துவை சந்தித்தபோது இத்தகைய ஆழமான அனுபவத்தை சில நாட்களுக்குத் தன் வாழ்வில் அனுபவித்திருக்கிறார். பனியன் மட்டுமல்லாமல் ஜோன் நியூட்டனும் இத்தகைய ஆழமான பாவ உணர்த்துதலைத் தன் வாழ்வில் அனுபவித்ததாக எழுதியிருக்கிறார். மோட்சப் பயணத்திற்கான விளக்கவுரையை எழுதிய ஸ்பர்ஜன், நம்பிக்கையிழவாகிய ஆழமான ஆத்மீகத் துன்பத்தை கிறிஸ்துவை விசுவாசித்த பின்னே ஒருவன் அனுபவிக்கலாம் என்றும், பனியன் இதை விசுவாசிப்பதற்கு முன் ஒருவன் அடையும் அனுபவமாகக் காட்டியிருப்பது சரியல்ல என்றும் எழுதியிருக்கிறார். தன் விசுவாச வாழ்வில் சிலவருடங்களுக்கு அத்தகைய அனுபவத்தைத் தான் அடைந்திருந்ததாக ஸ்பர்ஜன் கூறியிருக்கிறார். இத்தகைய காரணங்களினால் ஜோன் பனியன் தன்னுடைய சொந்த ஆத்மீக அனுபவத்தையே மோட்சப் பிரயாணத்தில் விளக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்து நாவலை வாசிப்பது வாசகனுக்கு உதவும். தன்னுடைய ஆத்மீக அனுபவத்தின் பல அம்சங்கள் அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தபோதும், தன்னுடையதையே அளவுகோலாகப் பயன்படுத்தவேண்டும் என்று பனியன் ஒருபோதும் கருதவில்லை.
3. கிறிஸ்தியான் திட்டிவாசல் கோட்டையை அடைந்தபோதே விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை அடைந்தான்.
இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்ததை நான் கவனித்திருக்கிறேன். (1) ஏனெனில் பனியன் திட்டிவாசல் கோட்டையை அடையும்போதுதான் ஒருவன் விசுவாசத்தை அடைகிறான் என்பதை நாவலில் தெளிவாக விளக்கவில்லை. இது நாவல் என்பதால் அதை நாமே புரிந்துகொள்ளும்படி அவர் எதிர்பார்க்கிறார். (2) திட்டிவாசல் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அவனுடைய பாரச்சுமையாகிய பாவ உணர்த்துதல் அவனில் தொடர்ந்தது பலரையும் குழம்பச் செய்திருக்கிறது. இந்தப் பாரச்சுமை கிறிஸ்தியான் சிலுவை காணப்பட்ட மேட்டை அடைந்தபோதே அவனை விட்டுவிலகி சமாதிவரைப் போய் காணாமல் போனது. அதனால் கிறிஸ்தியான் திட்டிவாசல் கோட்டையை அடைந்தபோதா? அல்லது மேட்டுப் பகுதியில் இருந்த சிலுவையை அடைந்தபோதா? கிறிஸ்தவ விசுவாசத்தை அடைந்தான் என்ற கேள்வி எழுகிறது.
திட்டிவாசல் கோட்டையை கிறிஸ்தியான் அடைந்தவுடன் அவன் வாசலின் கதவைத் தட்டினான். கதவு திறந்தபோது அவன் உள்ளே நுழையவில்லை. மாறாக அதற்குள்ளிருந்த பட்சதாபன் கிறிஸ்தியான் கையைப் பிடித்து சட்டென்று உள்ளே இழுத்துக்கொண்டான். இதிலிருந்து கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைய கிறிஸ்தியான் சுயமாக எதையும் செய்யவில்லை, செய்யமுடியவில்லை என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அவன் கோட்டைக்குள் நுழைய இன்னொருவரால் இழுக்கப்பட வேண்டியிருந்தது. கர்த்தரே நம்மை விசுவாசத்தின் மூலம் தன்னிடம் இணைத்துக்கொள்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். அத்தோடு சீயோன் என்று நாவலில் குறிப்பிடப்பட்டிருப்பது பரலோகம். பரலோகத்தை அடைய கிறிஸ்தியானுக்கு விசுவாசம் தேவை. அதையே அவன் திட்டிவாசல் கோட்டையில் கிறிஸ்துவிடமிருந்து அடைந்து தன் கிறிஸ்தவ வாழ்க்கையில் சீயோனுக்கான பயணத்தைத் தொடர்கிறான். வாசல் திறக்கப்படுகிறது என்பதற்கு பனியன் அடிக்குறிப்பில், “சரியான வழியில் இயேசுவிடம் வருகிற ஒவ்வொருவனும் ஏற்றுக்கொள்ளப்படுவான் என்பதைக் குறிக்கிறது” என்று விளக்கமளிக்கிறார். கிறிஸ்தியானுடைய பாடலான “ஐயையா, நான் பாவி திட்டிவாசல் திறவும் ஐயா!” என்பதும், திட்டிவாசல் கோட்டையை அடைந்ததுமே அவன் மனமாற்றத்தை அடைந்தான் என்பதை உணர்த்துகிறது. அந்தப் பாடலில், “பாரஞ்சுமந்து வந்தேன் ஐயா, நேசமாய் வாசல் திறந்திடுவீரானால் பாரம் இறக்கிக்கொள்வேன்” என்கிறான் கிறிஸ்தியான். நாவலின் இரண்டாம் பாகத்தில் கிறிஸ்தீனாள் விசுவாசத்தை அடைந்தது திட்டிவாசல் கோட்டையை அடைந்தபோது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவளும் அவளுடைய பிள்ளைகளும் திட்டிவாசல் கோட்டைக்குள் நுழைந்து இரட்சிப்படைந்தார்கள். ஸ்பர்ஜனும், மோட்சப் பயணத்துக்கு விளக்கமளித்து எழுதியிருக்கும் பலரும் இந்தக் கருத்தையே முன்வைத்திருக்கிறார்கள்.
பெரும் பிரசங்கியும், இறையியல் அறிஞருமான ஸ்பர்ஜன் மோட்சப் பிரயாணத்தில் இரண்டு அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாவது, கிறிஸ்தியானை சுவிசேஷகன் பிரகாசமான ஒளிவீசும் இடத்தை நோக்கிப் பயணிக்கும்படி அறிவுறுத்தியது. இரண்டாவது, சிலுவையைத் திட்டிவாசல் கோட்டையில் வைக்காமல், தூரத்தில் தள்ளி வைத்தது. ஒருவன் கிறிஸ்துவை அடைவதற்கு சில கிரியைகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை இவை ஏற்படுத்திவிடுவதாக ஸ்பர்ஜன் எண்ணினார். இதை 1 கொரிந்தியர் 2:2 என்ற வசனத்தின் அடிப்படையில் அவரளித்த பிரசங்கத்தில் ஸ்பர்ஜன் குறிப்பிட்டிருக்கிறார் (John Bunyan’s Pilgrims Progress: Themes and Issues, Barry Horner, pg 131-132). ஸ்பர்ஜனைப் பொறுத்தவரையில், “எந்தப் பிரசங்கியும் திட்டிவாசலை நோக்கி ஓடு என்று சொல்லாமல் சிலுவையை நோக்கி ஓடு என்றே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும். சிலுவை திட்டிவாசலுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.” கிறிஸ்துவிடமிருந்து வரும் இரட்சிப்பை அடைய ஒருவன் கிறிஸ்துவை நோக்கித்தான் ஓடவேண்டும் என்றும், ஞானஸ்நானமோ, சபையோ, வேறெதுவுமே இடையில் வரக்கூடாது என்கிறார் ஸ்பர்ஜன். “பனியன் விளக்கியிருப்பது சாதாரணமாக வாழ்க்கையில் நிகழ்வது என்பதாக இருந்தால் அவர் விளக்கியிருப்பது சரியே; எது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று பனியன் சொல்வதாக இருந்தால் அது முழுத்தவறு” என்று ஸ்பர்ஜன் குறிப்பிட்டிருக்கிறார். சுவிசேஷப் பிரசங்கத்தைப் பற்றி ஸ்பர்ஜன் சொல்லியிருப்பது நூறு வீதம் சரியே. இருந்தபோதும் ஜோன் பனியன் திட்டிவாசல் கோட்டைக்கு சிறிது தொலைவில் சிலுவையை நாவலில் நிறுத்தியிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அதை அடுத்த தலைப்பில் விளக்கப் போகிறேன். இருந்தபோதும், பனியன் திட்டிவாசல் கோட்டையை அடைந்தே ஒருவன் விசுவாசத்தை அடைகிறான் என்றும், திட்டிவாசல் கோட்டையே கிறிஸ்துவை அடைவதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும் தன் நாவலில் குறிப்பிடாமலில்லை. தற்போதிருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பில் பனியனின் விளக்கங்கள் காணப்படாதிருப்பதால் நாவலின் இறையியல் போதனைகளை வாசகர்கள் விளங்கிக்கொள்ளுவது கடினமே.
4. கிறிஸ்தியான் சிலுவையை அடைந்தபோது பாரச்சுமை நீங்கி விடுதலை அடைந்தது அவன் இரட்சிப்பின் நிச்சயமாகிய (Assurance of salvation) அனுபவத்தைப் பெற்றதற்கு அடையாளமாக இருக்கிறது. மோட்சப் பயணம் நாவலில் அநேகரைக் குழப்பும் சம்பவம் இது. பெரும்பாலானோர் இந்த அனுபவத்தை கிறிஸ்தியான் திட்டிவாசல் கோட்டையில் இரட்சிப்பை அடைந்தபோதே அடைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். அதற்குக் காரணம் விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரியாதிருப்பதால்தான். ஆர்மீனியனியப் போதனைகள் மலிந்து காணப்படும் நம்மினத்தில் இரட்சிப்பை அடைந்தும் அதைப் பாவம் செய்து இழந்துபோகலாம் என்றும், இழந்ததை மீண்டும் அடைந்துவிடலாம் போன்ற நம்பிக்கைகள் மலிந்து காணப்படுவதால் இரட்சிப்பின் நிச்சயமாகிய வேத போதனை அந்நம்பிக்கைகளில் அடியோடு இல்லாமல் இருக்கின்றது.
ஜோன் பனியன் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இரட்சிப்பை அடைந்து சில காலத்திற்குப் பின்பே இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவித்திருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயத்தை அடைந்தபோதே பனியன் நீதிமானாக்குதலின் முழுத் தாற்பரியத்தையும், கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் ஆழமான பலன்களையும், பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் அடைந்திருக்கிறார் என்பதை மேட்டிலிருந்த சிலுவையை அவர் அடைந்தபோது நிகழ்ந்த காரியங்களை மோட்சப் பயணத்தை வாசித்து அறிந்துகொள்கிறோம்.
ஜோன் பனியன் மனமாற்றத்தை, மறுபிறப்பைப் போல ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிடாமல் ஒருவனில் வளர்ந்து தொடருகின்ற அனுபவமாக நாவலில் வர்ணித்திருக்கிறார். அதனால்தான் கிறிஸ்தியான், திட்டிவாசல் கோட்டையை அடைந்தவுடன் இரட்சிப்பை அடைந்தபோதும் அதன் நிச்சயத்தை உடனடியாக அடையாமல் சில காலத்திற்குப் பின்பு அடைந்ததாக விளக்கியிருக்கிறார். பனியனுடைய வாழ்க்கையிலும் அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது. இந்த இடத்தில் பியூரிட்டன்கள் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றி விளக்கியிருக்கும் இறையியல் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பியூரிட்டன்களின் விளக்கத்தை 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு தருகிறது.
“. . . இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல. மாறாக மெய்யான விசுவாசி அதை அடைவதற்கு அநேக காலம் காத்திருந்து பலவிதமான துன்பங்களுக்கூடாகவும் செல்ல நேரிடும் . . .” (1689, 18:3).
தற்காலத்து பிரெஸ்பிடீரியன் இறையியல் அறிஞரான ஜொயல் பீக்கி இதைக்குறித்து விளக்கும்போது, “இரட்சிப்பின் நிச்சயம் ஒருவருடைய ஆழமான தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்லாது, ஆழமான இறையியல் போதனையுமாகும்” என்கிறார். அதாவது, இரட்சிப்பின் அனுபவம் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஆழமான இறையியல் போதனை. அத்தோடு, அது ஒருவரின் தனிப்பட்ட ஆழமான ஆத்மீக அனுபவத்தைப் பற்றியது. இதை மேலும் விளக்கும் பீக்கி, “இயற்கையாகவே ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிள் பழங்கள் உருவாவதுபோல், விசுவாசத்தின் சாரத்தில் இருந்து எழுவது இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசத்தின் சிறப்பான பகுதி இரட்சிப்பின் நிச்சயம்” . . . “இரட்சிப்பின் நிச்சயம் தானாக வருவதில்லை. ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிராது பல குழப்பங்களை அனுபவிக்கலாம். இரட்சிக்கும் விசுவாசத்தின் கனியே இரட்சிப்பின் நிச்சயம். பனிக்காலத்தில், பனியால் ஒரு மரம் கனிகொடுக்க முடியாதிருப்பதுபோல், விசுவாசத்தைக் கொண்டிருக்கும் ஒருவரில் இரட்சிப்பின் நிச்சயம் காணப்படாமல் போகலாம்; சிலகாலத்துக்கு இல்லாமலுங்கூடப் போகலாம்” என்கிறார் (https://www.ligonier.org/learn/articles/faith-and-assurance).
இந்தப் பியூரிட்டன் இறையியல் போதனையை விளக்கும் 19ம் நூற்றாண்டு அறிஞரான ஜே.சி. ரைல் எழுதுகிறார், “ஒரு மனிதன் கிறிஸ்துவில் இரட்சிக்கும் விசுவாசத்தைக் கொண்டிருந்தும், தன் வாழ்நாளில் ஒருபோதும் அதைப்பற்றிய நிச்சயத்தினால் உண்டாகும் நம்பிக்கையைப் பவுல் அனுபவித்ததைப்போல அனுபவிக்காமல் இருந்துவிடலாம். விசுவாசத்தை நம்மில் கொண்டிருந்து அதனால் உண்டாகும், கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற மெல்லிய நம்பிக்கை ஒருரகம்; விசுவாசத்தில் ஆனந்தத்தையும் சமாதானத்தையும் கொண்டிருந்து, நம்பிக்கையில் மேலதிகமாக உயர்வது என்பது இன்னொரு ரகம். கடவுளின் பிள்ளைகள் அனைவருமே விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் எல்லோரும் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருப்பதில்லை. இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.”
கிறிஸ்தவ விசுவாசத்தை நீரூற்றுக்கு ஒப்பிடலாம். ஊற்றில் இருந்து வருவதே தண்ணீர். அந்தத் தண்ணீரை இரட்சிப்பின் நிச்சயத்துக்கு ஒப்பிடலாம். சிலவேளைகளில் ஊற்றில் இருந்து தண்ணீர் பீறிட்டுப் பொங்கிப் பாய்ந்து வெளிவரும். சிலவேளைகளில் தண்ணீர் மிகக் குறைவாகக் காணப்படும். சிலவேளைகளில் ஊற்றில் தண்ணீரையே காணமுடியாது. அதுபோலத்தான் இரட்சிப்பின் நிச்சயமும். ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்து என்னுடையவர் என்பதையும், அவரளிக்கும் ஆனந்தத்தையும் அனுபவரீதியாகத் தன்னில் உணர்ந்தனுபவிப்பதே இரட்சிப்பின் நிச்சயம். ரைல் சொல்கிறார், “விசுவாசமே வேர்; இரட்சிப்பின் நிச்சயம் மலர். சந்தேகமில்லாமல் வேரின்றி ஒருபோதும் மலர் இருக்கமுடியாது; அதேவேளை வேரிருந்தும் மலரில்லாமல் இருந்துவிடலாம் என்பதும் உண்மை.”
பாவத்தைச் செய்து மனந்திரும்பாத நிலையில் இருக்கும்போதோ, ஆத்மீகப் பிரச்சனைகளோடு இருக்கும்போதோ, குழப்பத்துக்குள்ளாகிய நிலையில் இருக்கும்போதோ இரட்சிப்பின் நிச்சயம் கிறிஸ்தவனில் மிகத் தளர்ந்த நிலையிலேயே காணப்படும்; சிலவேளைகளில் அதை அவன் உணராமலேயே இருந்துவிடலாம். ஜோன் பனியன் இத்தகைய பலவீனமான குழப்ப நிலையில் இருந்தபோதே அவர் விசுவாசியாக இருந்தபோதும், இரட்சிப்பின் நிச்சயத்தை உணர்ந்திராத நிலையில் இருந்திருக்கிறார். அவர் கிறிஸ்துவோடு நெருங்கி, அவரில் தங்கியிருந்தபோது இரட்சிப்பின் முழு நிச்சயத்தையும் அவர் உணர்ந்தார் என்பதையே மோட்சப் பயணம் கிறிஸ்தியானின் அனுபவத்தின் மூலம் நமக்கு விளக்குகிறது.
கிறிஸ்தவனின் விசுவாசம் ஒருபோதும் அவனை விட்டு அகலாது; ஆனால், இரட்சிப்பின் நிச்சயம் குறைவடையலாம், இல்லாமலேயே போகலாம். அதை மீண்டும் அடைந்து அனுபவிக்க அவன் கிறிஸ்துவை நோக்கி முன்னேறிக், கீழ்ப்படிவோடு, கிருபையின் நியமங்களை முறையாக விசுவாசத்தோடு பயன்படுத்துகிறபோது இரட்சிப்பின் நிச்சயத்தை அவன் மீண்டும் அடைய முடியும். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து மனந்திரும்பும்போதே இரட்சிப்பின் நிச்சயத்தை ஒருவர் அதிகமாக உணரமுடியும். கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பது தொடர்ச்சியான மனந்திரும்புதலையும், கீழ்ப்படிதலையுந்தான். இரட்சிப்பின் நிச்சயத்தை நாடியோடுவது கிறிஸ்தவனின் கடமை. அதில் வளரும்போது அவன் சுற்றியிருப்பவர்களுக்கும் பயனுள்ளவனாகிறான். இரட்சிப்பின் நிச்சயம் அனைத்துக் கிறிஸ்தவர்களிலும் ஒரேநிலையில் காணப்படுவதில்லை. இரட்சிப்பின் நிச்சயத்தை அதிகமாக, அதன் உயர்நிலையில் அனுபவிப்பவர்கள் கிறிஸ்துவை மிகவும் நெருங்கியவர்களாக, அவரோடுள்ள ஐக்கியத்தில் மேலான நிலையில் உள்ளவர்களாகவே இருப்பார்கள். அனைத்துக் கிறிஸ்தவர்களும் இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவிக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டிருந்தபோதும், அதை முழுமையாக அனுபவிக்காமலேயே ஒருவன் பரலோகத்தை அடைந்துவிடலாம்.
நவீன காலத்தில் ஆத்துமாவின் தோலைக்கூடத் தொட்டுரச முடியாத, பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு பிரசங்கிக்கப்படும் பிணிதீர்க்கும், தரங்குறைந்த சுவிசேஷ செய்திகளைக் கேட்டு, மனமாற்றம் அடைந்ததாகக் கற்பனையுலகில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கானோர் அடையாத இரட்சிப்பை அடைந்ததாக எண்ணிப் பெரும் மனக்குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோர் பெருகிக் காணப்படும் நம்மினத்தில் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய தெளிவான வேதபோதனைகளைக் கேட்கமுடியாமலிருப்பதும், கேட்டாலும் புரிந்துகொள்ள முடியாமல் அநேகர் இருப்பதிலும் ஆச்சரியமில்லை. அதனால் ஜோன் பனியனின் மோட்சப் பயணத்தில் அவர் விளக்கும் போதனை பலருக்குப் புதிதாகக்கூடத் தெரியலாம். பனியன் தன் சொந்த அனுபவத்தைக் கிறிஸ்தியான் பாத்திரத்தின் மூலம் விளக்கியிருந்தாலும், அது வேதம் போதிக்கின்ற மெய்யான சத்தியமே.
ஜோன் பனியனின் அனுபவத்தில் இருந்து இரட்சிப்பின் நிச்சயமாகிய அனுபவத்தை அறிந்துகொள்ளுகிறபோதும், அவருடைய அனுபவத்தை நாம் எல்லோருக்குமான அனுபவமாக, அளவுகோலாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்யுமாறு பனியன் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. இன்னுமொரு எச்சரிப்பையும் தரவிரும்புகிறேன். புதிதாக இயேசுவை நாடி வந்து இரட்சிப்படைகிறவர்களில் நாம் இரட்சிப்பின் நிச்சயத்தைவிட, அவர்கள் இரட்சிப்படைந்திருக்கிறார்களா என்பதை மட்டுமே ஆராயவேண்டும். அப்படிச் செய்யும்வேளையில் அவர்களுடைய பரிசுத்தமாகுதலின் அளவை எடைபோட்டு, நம் மனத்தில் காணப்படும் அளவுக்கு அவர்களில் அது காணப்படவில்லை என்று தீர்மானித்து, ஞானஸ்நானமளிப்பதைக் காலந்தாழ்த்திவிடலாம். இயேசு கிறிஸ்து ஒருவனை பாவத்தில் இருந்து மனந்திரும்பித் தன்னைத் தேவனாக விசுவாசிக்கும்படி மட்டுமே வலியுறுத்தினார். அதுவே ஒருவனிடம் இரட்சிக்கப்பட்டதன் அடையாளமாகத் தெளிவாகக் காணப்படவேண்டும். அதற்குமேலாக எதையும் ஒருவனில் நிபந்தனையாக எதிர்பார்க்கக்கூடாது. இந்த இடத்தில் நாம் சட்டவாதத்தைப் பின்பற்றுகிற ஆபத்தில் இருந்தும், ஆர்மீனியனியத்தைப் பின்பற்றும் ஆபத்திலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை விசுவாசித்தவன் தன் மனமாற்ற வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கீழ்ப்படிதலிலும், பரிசுத்தமாகுதலிலும் படிப்படியாகவே வளர்ந்து வருவான். அதோடு தொடர்புடையதே இரட்சிப்பின் நிச்சயமாகிய இறையியல் அனுபவம்.
பாவம் பொல்லாதது – வாசிப்பனுபவம்
“பாவம் பொல்லாதது” நூல் எனது கரத்தில் கிடைத்திருப்பதைக் கர்த்தருடைய பராமரிப்பின் ஆச்சரியங்களின் வரிசையில் எனக்கு கிடைத்த மற்றொரு புதையலாகப் பார்க்கிறேன்.
முழுப் புத்தகத்தையும் வாசித்த பின்பு அதன் தலைப்பை உச்சரிக்கும் போதெல்லாம் அதனோடு சேர்ந்து பழைய பாம்பின் ஒரு வஞ்சகச் சீறலும் நினைவில் தோன்றி பாவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடாமல் அதைக் குறித்த சரியான பார்வையோடு தீவிரமாகச் செயல்பட்டு முற்றாக அழிக்க வேண்டும்! என்ற வைராக்கிய உணர்வை ஏற்படுத்துகிறது.
நூலின் அறிமுகப் பகுதி முதல் இறுதிப் பயன்பாடு வரை ஒவ்வொரு பக்கமும் பாவத்தைப் போலவே தீவிரமாக எண்ணிக் கவனமாக ஆராய்ந்து வாசிக்கப்பட வேண்டியவை. நூல் விபரிக்கும் எதிரியாகிய பாவத்தின் ஆக்ரோஷமான தாக்குதலை ஒவ்வொரு ஆத்துமாவும் தனிப்பட்ட விதத்தில் அனுபவித்திருப்பதால் சிந்தனையிலும், உணர்விலும் நூல் ஏற்படுத்தும் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. கண்களைக் கண்ணீரால் நிறைத்து வாசிப்புக்குத் தடை ஏற்படுத்திய வாக்கியங்கள் அதிகம்; பாவத்தின் மீது தீராத வெறுப்பை ஏற்படுத்திய பக்கங்கள் அதிகம். அத்தோடு அதிகமான மனத்துக்கத்தினால் எரிந்து அழிந்து போகாமல் புராணக் கதைகளில் வரும் “பீனிக்ஸ்” பறவையைப் போல வீறு கொண்டு பறந்து கிறிஸ்துவிடம் தஞ்சம் அடைய உந்தித் தள்ளும் பக்கங்களும் மிக அதிகமாக உள்ளன.
நூலின் அறிமுகப் பகுதியிலே பாவத்தின் கோரத் தாண்டவத்தை இன்றைய உலகின் தீமையான நிகழ்வுகளில் இருந்து கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர். அதனைத் தொடர்ந்து, ஆத்துமாவைக் கொடூரமாகப் பாதித்து நித்தியமான அழிவுக்கு இழுத்துச் செல்லும் இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக இன்றைய உலகில் காணப்படும் போலித் தயாரிப்புகளான, செழிப்பு உபதேச போதனைகள், தாராளவாத எண்ணப்போக்கு மற்றும் உளவியல் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வைக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறார். அத்தோடு பாவத்தின் தன்மையைப் படைப்பு, வீழ்ச்சி, கிருபை மற்றும் மீட்பின் திட்டம் மூலமாக விபரித்துக் கூறி, அதற்கான ஒரே மருந்தாக இருக்கும் கிறிஸ்துவின் கோப நிவாரணப் பலியின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறார். மேலும் மூல நூலின் ஆசிரியரான பியூரிட்டன் பெரியவர் ரால்ப் வென்னிங்கின் உறுதியான கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் ஆழமான வேத ஞானம் குறித்த சில குறிப்புகளையும் சேர்த்துத் தந்திருப்பது நூலை அரசல் புரசலாக மேலோட்டமாக வாசிக்காமல் ஆராய்ந்து வாசிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது.
அடுத்ததாக வரும் இரண்டு பிரிவுகளிலும் பாவம் என்றால் என்ன? என்பதும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதன் பொல்லாத தன்மைகளும் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதி “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போல பாவத்தின் மீது தீராத வெறுப்பையும், அதேசமயம் இரட்சகர் மீது உருக்கமான அன்பையும் ஏற்படுத்தி வாசிப்பவர்களின் மனதைக் கிறிஸ்துவுக்குள் வெற்றி கொள்கிறது. இதை வாசித்துக் கொண்டிருந்த போது எச்.ஐ.வி. வைரஸ் குறித்து பாடம் நடத்திய ஒரு மருத்துவரின் கூற்று நினைவில் வந்தது. அதாவது “எச்.ஐ.வி. வைரசின் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை என்னவென்றால், அது நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிந்து, சின்னச் சின்ன நோய்க்கிருமிகளும் சுலபமாக உள்ளே புகுந்து உடல் நலத்தைச் சின்னாபின்னமாகச் சீரழிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்து விடுவதுதான்!” என்று விளக்கம் கொடுத்தார். இந்த எச்.ஐ.வி. வைரஸை விட மில்லியன் மடங்கு மோசமானது பாவத்தின் பாவம்! என்பது நூலை வாசித்தால் புரியும்.
தேவ சாயலில் மேன்மையாகப் படைக்கப்பட்ட மனிதனை ஒரு மிருகத்தை விடவும் தரம் தாழ்த்தி, அவனது எண்ணம், அறிவு, உணர்ச்சி, ஒழுக்கம் அத்தனையையும் பாதித்து, சரீரத்திலும் ஆத்துமாவிலும் மீளமுடியாத துன்பத்தை உண்டாக்கி, படைத்த தேவனுக்கு அவனை நிரந்தர எதிரியாக்கியதோடு விட்டுவிடாமல், மரணத்தைத் தாண்டியும் தொடர்ந்து வந்து நித்திய நரகத்தைப் பரிசளிக்கும் பாவத்தின் பொல்லாத் தன்மையை மிகவும் துல்லியமாக விபரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். அவிசுவாசிகளில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவை விசுவாசித்து தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கும் விசுவாசிகளிலும் எஞ்சியிருக்கும் பாவத்தின் ஆக்ரோஷம் எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கி விடுகிறது! அது விசுவாசிகளில் சமாதானக் குறைவுகளையும், நன்றியற்ற தன்மையையும், குறைகூறுதலையும் அதிகரிக்கச் செய்து அதன் காரணமாக கர்த்தரின் சிட்சையையும் அனுபவிக்க வைத்து விடுகிறது என்ற உண்மையை நூல் ஞாபகப்படுத்துகிறது. “நரகத்தின் நித்திய அழிவு என்பது பகற்கனவல்ல” என்ற பகுதியில் நரகத்தின் மெய்த்தன்மையை நிரூபிக்கும் ஆணித்தரமான சான்றுகளை வேதத்தில் இருந்து தருவதோடு, கிறிஸ்தவச் சூழலில் வளர்ந்து வந்தும் கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுக்கும், மாய்மால மனிதர்களுக்கும், விசுவாசத் துரோகிகளுக்கும் நரகம் எத்தனை மோசமானதாக இருக்கப் போகிறது என்ற பயங்கரமான எச்சரிப்பையும் தருகிறது இந்நூல்.
மூன்றாவதாக, பாவத்தின் நிதர்சனமான கோரத்தன்மையை நாம் உறுதியாக நம்பி எச்சரிப்பு அடையும் விதத்தில் அதன் தீமைகளை விபரமாக எழுதுகிறார் ஆசிரியர். அதற்கான சாட்சியங்களைத் தர்க்கரீதியில் எடுத்துக் காட்டும் முகமாக கடவுள், கிறிஸ்து, தேவதூதர்கள், விசுவாசிகள் அவிசுவாசிகள் . . . என்ற நீண்ட பட்டியலை நம் முன் வைத்து இறுதியில் பாவமே பாவத்தின் கேடான தன்மையை எப்படி உறுதிப்படுத்துகிறது என்று சுட்டிக் காட்டி இந்த பகுதியை முடிவுக்குக் கொண்டு வருகிறார் ஆசிரியர். பாவத்தின் தீமைகள் குறித்த உண்மைகளை எந்த விதத்திலும் நிராகரிக்க முடியாதபடி நம் சிந்தனைகளைச் சிறைப்பிடித்து சத்தியத்தின் முன் நம்மை மண்டியிடச் செய்யும் நூலின் அதீத பலம் இந்த மூன்றாவது பிரிவுக்குள்ளேதான் காணப்படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
பாவத்தைக் கண்டிக்க உலகிற்கு வந்த கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளின் கோரத்தின் அளவை மேலும் பல கன அடிகள் ஆழமாக சென்று அறிந்து கொள்ள இப்பகுதி உதவி செய்தது; என் பாவம் தானே என் நேச இரட்சகருக்கு இத்தனைக் துன்பத்தைக் கொடுத்தது என்ற நினைவு தந்த வேதனை மிகவும் அதிகமாக இருந்தது. பாவம் செய்யத் தூண்டும் பிசாசினுடைய வஞ்சகத்தின் பல்வேறு அவதாரங்களை இனம் கண்டு கொள்ள முடிந்தது. பரிசுத்தமாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் பாவத்துடனான மல்யுத்தத்தில், ஒரு விசுவாசியின் மனநிலை, ஏக்கம், ஆத்மீக மற்றும் சரீர முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள நூல் உதவி செய்கின்றது. “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்ற பவுலின் அங்கலாய்ப்பில் இருக்கும் உண்மையான ஆதங்கம் நூலை வாசித்த பின்புதான் சரியாகப் புரிந்தது.
பாவத்துக்கு விரோதமாகப் படைப்பும், நியாயப்பிரமாணமும், சுவிசேஷ செய்தியும் தரும் சாட்சிகள் நிராகரிக்க முடியாதவையாக இருக்கின்றன. முழு உலகையும் ஆக்ரமித்து மொத்த மனுக்குலமும் அதன் பாதிப்பை அனுபவிக்கும் விதத்தில் தனது தீமையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது பாவம். அத்தோடு அது பயமுறுத்துகிற விதத்தில் மனிதனின் அனுபவம், அறிவு, நாகரீக விஞ்ஞான வளர்ச்சியின் ஊடாகத் தொடர்ந்து வளர்வது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது. பாவத்தின் தீமையை விவரிக்கும் நூலாசிரியர் “பாவம் வெறுமனே அவலட்சணமானதல்ல; அதுவே அவலட்சணம். அது அருவருப்பானது மட்டுமல்ல; அருவருப்பின் சாராம்சமே அதுதான். அது ஒழுக்கக்கேடானது மட்டுமல்ல; சகல ஒழுக்கக்கேடுகளினதும் ஊற்றாக இருக்கிறது.” என்கிறார், உண்மைதான், பாவதின் தீங்கை விமர்சிப்பதற்கு தமிழில் இதை விடவும் மோசமான வார்த்தைகள் இருக்க வாய்ப்பில்லை அத்தனை தூரம் பாவம் பொல்லாதது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.
அடுத்ததாக, இதுவரை வாசித்த பகுதியிலிருந்து அறிந்துக் கொண்ட பாவத்தின் தீமைகள் குறித்த எச்சரிப்புகளால் மனதில் பயம் ஏற்பட்டு, சோர்ந்து போய் “மோட்சப் பிரயாணம் நூலில்” அலங்கார மாளிகையின் வாசலின் அருகே சிங்கங்களைப் பார்த்ததும் பயந்து போய்த் திரும்பி ஓடிய கோழைகளைப் போல ஓடவிடாமல், கண்களைக் கிறிஸ்து மீது வைத்தவனாக சிங்கங்களின் நடுவே சீறிப்பாய்ந்து அலங்கார மாளிகைக்குள் தஞ்சமடைந்த கிறிஸ்தியான் போல நம்மைத் தைரியப்படுத்தி கிறிஸ்துவிடம் இழுத்துச் செல்லுகிறது கடைசியாக வரும் இரு அதிகாரங்களும்.
இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் பாவம் எந்த விதங்களில் உலகத்தின் துன்பம், மரணம், பிசாசு மற்றும் நரகத்தை விடவும் மோசமானதாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அதைத் தொடர்ந்து கர்த்தருடைய நீடிய பொறுமை, கிருபையின் உடன்படிக்கை, வாக்குத்தத்தம், மீட்பு, மன்னிப்பு, மனந்திரும்புதல் ஆகிய ஊக்கப்படுத்தும் சத்தியங்களைத் தந்து வாசிக்கும் ஆத்துமாக்கள் விசுவாசத்தோடு தேவனிடம் மனந்திரும்புவதற்கு ஏதுவாக வழிநடத்துகிறார். இறுதியாக இவ்வுலகில் பாவத்தைத் தொடர்ச்சியாக அழித்து, பக்தி விருத்தியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ அவசியமான சில நடைமுறைப் பயன்பாடுகளுடன் நூலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.
முதல் முறையாக கடவுளின் நீடிய பொறுமையைக் குறித்த சத்தியங்களை விரிவாகப் படித்து அறிந்துகொள்ள நூல் உதவி செய்தது. எனது இருதயத்தின் தீய தன்மையை உணர்ந்து அகஸ்டின் போல “தீய மனிதனிலிருந்து என்னை விடுவியும்; அந்தத் தீயமனிதனே நான்தான்” என்று அதிகாலை ஜெபங்களில் மன்றாட வைக்கிறது. “கடவுளுக்காக வாழ்வதற்குப் பயன்படுத்தப்படாத நேரங்கள் தவறாகச் செலவழிக்கப்பட்டவை; அவை வெறுமனே வீணடிக்கப்பட்ட நேரங்களை விடவும் மோசமானவை.” என்ற சொற்றொடர்கள் அதிகமாக யோசிக்க வைத்தன. எண்ணம், சொல், செயல்களைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்வதற்காக நூல் வழங்கும் ஆலோசனைக் குறிப்புகளை நகல் எடுத்து வீட்டில் அதிகமாக பயன்படுத்தும் பகுதியில் ஒட்டி வைத்து அடிக்கடி வாசித்து வருவது மிகவும் உபயோகமாக உள்ளது; கிறிஸ்தவ கடமைகளைத் தொடர்ச்சியாக நிறைவேற்றுவதில் அதிகப்படியான ஜாக்கிரதை உணர்வை அது ஏற்படுத்தியுள்ளது; நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகச் செய்யாமல் விடும் கடமைகள் அதிக மன வருத்தத்தைத் தந்து அத்தகைய தவறுகளைத் தொடர்ந்து செய்யாமல் இருக்கப் பயிற்சியளிக்கின்றது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால், என்னிலும் மற்றவர்களிலும் பாவத்தைப் பாவமாகவே பார்க்கும் எனது பார்வை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் வண்ணம் ஆழ்ந்த பாதிப்பை நூல் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை.
“எதிரியைக் குறைத்து மதிப்பிடல் அசட்டுத் துணிவெனக் கருதப்படல் வேண்டும்” என்பது உலகத்தின் யுத்த நியதிகளுள் ஒன்று. பரிசுத்தத்தைப் பறித்து, நிம்மதியைக் கெடுத்து, ஆசையாகப் படைத்த தேவனையே மறந்து நித்திய நரகத்தை நாடிப்போகச் செய்யும் இந்த “அம்னீஷியா” நிலைக்கு நம்மைத் தாழ்த்திய நமது பரம்பரை விரோதியான பாவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அசட்டுத் துணிவு மட்டுமல்லாமல் அது அபாயத் துணிவும் கூட. “பாவம் பொல்லாதது” நூலைக் கருத்தோடு வாசிக்கும் ஒருவருக்குக் கூட அத்தகைய துணிவு வராது என்று உறுதியாக நம்புகிறேன். அவிசுவாசி, விசுவாசி, மூப்பர், போதகர் என எந்தத் தகுதி வரம்புகளுமின்றி, வாசிக்கும் அனைவருக்கும் அவரவர் ஆத்மீக நிலைக்கு ஏற்பப் பிணிதீர்க்கும் “சமய சஞ்சீவி” இது. நூலை அதிகமானோர் வாசித்து அதனாலுண்டாகும் நிவாரணத்தை முழுமையாக எல்லாரும் அனுபவிக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் ஜெபமும்.
இத்தகைய அருமையான ஒரு நூல் தமிழில் வெளிவருவதற்கு, அதனை மொழியாக்கம் செய்வது முதல் அச்சுக்குச் சென்று வெளிவரும் வரைக்கும் உழைத்த அனைவருக்கும், பதிப்பாசிரியருக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.