திருமறைத்தீபம் 2019 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்
1. வாசகர்களே!
2. கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிறீர்களா?
3. யார் நம்மை ஆளுவது? வேதமா, பண்பாடா!
4. ஆள்பிடிக்கும் கிறிஸ்தவமா? ஆவிக்குரிய மறுபிறப்பா?
5. ஒருவரில் மூவர்; மூவரும் ஒருவரே!
வாசகர்களே!
இன்னுமொரு இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அநேகர் தொடர்ந்து பத்திரிகையை வாசித்து வருகிறார்கள்; புதிய வாசகர்களும் இணைந்துகொள்ளுகிறார்கள். வாக்குத்தத்த வசன துண்டுப்பிரசுரங்களும், காணிக்கைக்காக அலையும் உப்புச்சப்பற்ற இதழ்களுமே மலிந்து காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இப்படியொரு ஆவிக்குரிய வேதவிளக்கமளிக்கும், வாசித்து சிந்திக்கவேண்டிய இதழுக்கு எத்தகைய வரவேற்பிருக்குமோ என்று இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நினைத்தேன். நம்மத்தியிலும் வாசித்து சிந்திக்கிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதைத்தான் கடந்துபோயிருக்கும் காலங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன. நிரப்பப்படாததொரு இடத்தைப் பத்திரிகை நிரப்பிக் கொண்டிருக்கிறதென்ற உளப்பூர்வமான புரிதலோடு தொடர்ந்து உழைக்கிறோம். கர்த்தரின் கிருபையால் பத்திரிகை எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிகிறது. சிலபேருடைய வாழ்க்கையில் ஆவியின் மூலம் அது செய்திருக்கும் ஆவிக்குரிய கிரியைகள் என்னை மலைத்துப்போகச் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் சர்வவல்லவரான அந்த பரலோக நாயகனே காரணம்.
இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வேத இறையியல் பிரிவைச் சார்ந்தவை. இவற்றில் திரித்துவத்தைப்பற்றிய ஆக்கம் இறையியல் போதனை அளிக்கிறது (Theology). கர்த்தரின் பிரசன்னத்தைப்பற்றிய ஆக்கம் நடைமுறை அனுபவ இறையியல் விளக்கமளிக்கிறது (Experimental). ‘நம்மை ஆளுவது எது’ எனும் ஆக்கம் வேதவிளக்கவிதிகள் சம்பந்தமானது (Hermeneutics). நான்காவது ஆக்கம் சுவிசேஷ அடிப்படையில் நம்மினத்துக் கிறிஸ்தவத்தை ஆராய்கிறது (Gospel). இவற்றை எழுதுகிறபோது இந்த முறையில் திட்டமிட்டு நான் எழுதவில்லை. கர்த்தரின் வழிநடத்துதலால் ஆக்கங்கள் இந்த முறையில் வளர்ந்திருக்கின்றன. இவ்வாக்கங்கள் மூலம் கர்த்தர் உங்களோடு பேசி சிந்தித்து செயல்பட வைக்கட்டும்.
இம்மட்டும் எங்களை வழிநடத்தி வந்திருக்கும் கர்த்தர் இந்த இதழையும் நிறைவாகத் தயாரித்து வெளியிட துணைசெய்திருக்கிறார். அவரையே அனைத்து மகிமையும் சாரவேண்டும். இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்
கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிறீர்களா?
கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது பற்றிய விஷயத்தில் அநேகருக்கு பிரச்சனை இருக்கிறதை நான் உணர்கிறேன். பெரும்பாலானவர்கள் இதை உணர்ச்சி வசப்படுவதோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசம் நிச்சயம் மனித உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. கிறிஸ்து தருகின்ற ஆத்மீக விடுதலை நம்மை முழுமையாகவே பாதிக்கிறது. விசுவாசத்தை அடைகிறவர்களுடைய உணர்வுகளும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறவையாக மாறுகின்றன. ஆகவே, மனித உணர்ச்சிகளுக்கும் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வதற்கும் தொடர்பில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இருந்தபோதும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, கர்த்தரின் பிரசன்னத்தை ஒருவர் உணர்கிறாரா, இல்லையா என்பதை தீர்மானித்துவிட முடியாது. உணர்ச்சிகளை மட்டும் வைத்து ஒருவருக்கு விசுவாசம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் தீர்மானித்துவிட முடியாது.
நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டு, உணர்ச்சிகளின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கும் காலமாக இருந்து வருகிறது. இது பெரிய ஆபத்து! மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதை அடிப்படையாக வைத்தே ஒன்று உண்மையா, இல்லையா என்பதை அது தீர்மானிக்கிறது. சமீபத்தில் இஸ்ரேல் பாலாவு என்ற ஆஸ்திரேலிய ரக்பி விளையாட்டு வீரன் தன்னினச் சேர்க்கையாளர்கள் நரகத்திற்கே போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது என்று தன்னுடைய இன்ஸ்டகிரேம் பதிவில் எழுதியதால் அது தன்னினச்சேர்க்கையாளர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி ஆஸ்திரேலிய ரக்பி அமைப்பு இஸ்ரேல் பாலாவுவை அந்த விளையாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலக்கியிருக்கிறார்கள். இஸ்ரேல் பாலாவு இப்படிச் சொல்லியிருக்கலாமா, இல்லையா என்பது இன்னொரு விஷயம். ஆனால், இந்த விஷயத்தில் தன்னினச் சேர்க்கையாளர்களின் உணர்வுகள் புண்படுகின்றன என்பதன் அடிப்படையிலேயே இஸ்ரேல் பாலாவுக்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே போஸ்ட்மொடர்ன் (Postmodern) சமுதாயத்தின் எண்ணப்போக்கு; எது உண்மையென்று ஆராய்ந்து அந்த உண்மைக்கு மதிப்புக்கொடுப்பதில்லை. தனியொருவரின் உணர்வுகளையே போஸ்ட்மொடர்ன் சமுதாயம் உண்மையின் இடத்தில் அமர்த்தியிருக்கிறது.
கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே குழுக்கள் மத்தியில் அதீத உணர்ச்சிகளுக்கே எப்போதும் முதலிடம் கொடுக்கப்படுகிறது. அது இந்தக் குழுக்கள் விடும் பெரும் தவறு. இவர்களே கர்த்தரின் பிரசன்னத்தை உணருகின்ற விஷயத்தில் உணர்ச்சிகளுக்கு மட்டும் முதலிடம் கொடுக்கிறார்கள். இவர்களில் ஒருவரோடு இது பற்றிப் பேசிப்பார்த்தால் அவர்களுடைய விளக்கம் பின்வரும் வகையில் அமையும்: ‘இன்றைக்கு ஆராதனையில் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்தேன், பாடல்களும், இசையும், ஜெபங்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன’ என்று சொல்லுவார்கள். இவர்கள் சொல்வதன் பொருள் என்ன தெரியுமா? ஆராதனையில் பயன்படுத்தப்பட்ட விஷயங்கள் என் உணர்ச்சிகளைப் பாதித்து என்னைச் சந்தோஷப்படுத்தியது அல்லது புல்லரிக்கவைத்து கர்த்தருடைய பிரசன்னத்தை உணரவைத்தன என்பதுதான். இவர்கள் தங்களுக்குள் உருவாகிய அதீத உணர்வுகளை கர்த்தரின் பிரசன்னத்திற்கான அடையாளம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
கர்த்தரின் பிரசன்னம்
கர்த்தரின் பிரசன்னம் என்பது என்ன? என்பதை முதலில் சிந்திப்போம். அது கர்த்தர் மனிதன் அறிந்துகொள்ளும்படி அல்லது உணரும்படி தன்னை வெளிப்படுத்தும் அனுபவம். இதைக் கர்த்தர் பழைய ஏற்பாட்டில் இருந்து கிறிஸ்து இந்த உலகிற்கு வந்து வாழ்ந்து மரிக்கும்வரை பல்வேறு விதங்களில் செய்திருக்கிறார். இதையே எபிரெயர் 1:1-2 வரையுள்ள வசனங்கள் சுருக்கமாக விளக்குகின்றன.
1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.
இந்த வசனங்களில் ‘பூர்வகாலங்கள்’ என்பது சிருஷ்டியில் இருந்து வந்திருந்த பழைய ஏற்பாட்டுக் காலங்கள். அந்தக் காலங்களில் தேவன் தன்னை வெவ்வேறு விதங்களிலும், அதற்குப் பின் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் முன்னோர்களுக்கு வெளிப்படுத்தினார் (திருவுளம்) என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். ‘பங்குபங்காகவும் வகைவகையாகவும்’ என்ற வார்த்தைப்பிரயோகங்கள் தேவன் தானே மனிதன் முன் தோன்றியது, தேவதூதர்கள் மூலம் அவர்களோடு பேசியது, சீனாய் மலையில் மனிதன் கண்களுக்குப் புலப்படாமல் அவன் கேட்கும்படி (மோசேயுடன்) மட்டும் பேசியது போன்ற அவருடைய பல்வேறுவித நடவடிக்கைகள் மூலம் மனிதன் தன்னை அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத்திய முறைமைகளைக் குறிக்கின்றன. இவ்வழிகளிலெல்லாம் தன்னை ஆதியிலிருந்து வெளிப்படுத்தி வந்திருந்த தேவன் இறுதியில் தன்னுடைய ஒரே குமாரன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்தினார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். அதாவது, பழைய வழிகளிலெல்லாம் தன்னை வெளிப்படுத்தி வந்திருந்த தேவன், கடைசிக்காலங்களின் ஒருபகுதியான முதல் நூற்றாண்டில் தன்னுடைய குமாரனும் தேவனுமாகிய இயேசு கிறிஸ்து மூலம் தன்னை வெளிப்படுத்தினார் என்பதே இதற்குப் பொருள். இந்த வழிகளின் மூலம் மனிதன் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்திருந்தான்.
எபிரெயருக்கு எழுதியவரின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கும்போது கர்த்தர் மனிதன் அறிந்துகொள்ளும்படி தன்னை வெளிப்படுத்தியிருந்த வழிகளெல்லாம், அவர் யார் என்பதையும் அவருடைய சித்தம் என்ன என்பதையும் மனிதன் தெளிவாகத் தெரிந்துகொள்ள கர்த்தர் பயன்படுத்தியிருந்த வழிகள் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். அதுவே இந்த வசனங்களில் நாம் கவனிக்க வேண்டிய உண்மை. மனிதன் தன்னைத் தெளிவாக அறிந்துகொள்ளுவதற்காகவே கர்த்தர் தன்னுடைய ஒரே குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்து அவர் மூலமாக மனிதனோடு பேசினார். இயேசு தன்னுடைய போதனைகளின் மூலம் மனிதர்கள் தன்னை அறிந்துகொண்டு விசுவாசித்து வாழ வழி செய்தார். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தபின் கர்த்தர் மனிதனுக்கு, அவன் தன்னை அறிந்து விசுவாசித்து உணரும்படிச் செய்யும் வழியில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது கர்த்தரின் வெளிப்படுத்தல் கிறிஸ்துவின் வருகைக்குப் பின் அவருடைய வார்த்தைகளின் மூலமாகவே இருக்கும்படியாக கர்த்தர் தீர்மானித்தார். அப்போஸ்தலர்களுடைய காலத்திற்குப் பின் கர்த்தரின் வெளிப்படுத்தல் நிறைவுற்று அவருடைய சித்தம் முழுமையாக வேதத்தில் பதிந்திருக்கும்படி கர்த்தர் 66 வேத நூல்களை மனிதனுக்குத் தந்தார். இந்த நூல்கள் மட்டுமே இன்று கர்த்தரின் வெளிப்படுத்தலாக, கர்த்தர் மனிதனுக்கு தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தும் சாதனமாக, மனிதன் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்துகொள்ள உதவும் கருவியாக இருந்துவருகின்றன.
இதுவரை பார்த்து வந்திருக்கும் வேத விபரங்களில் இருந்து, கர்த்தரின் பிரசன்னத்தை நாம் அறிந்துகொள்ள ஆதியில் இருந்து கர்த்தர் பல முறைகளைப் பயன்படுத்தி வந்திருந்த போதும், இந்தக் கடைசிக் காலங்களில் வேதத்தின் மூலம் மட்டுமே அதைச் செய்து வருகிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கர்த்தர் தன் பிரசன்னத்தை மனிதன் அறிந்துகொள்ளச் செய்து வந்திருந்த ஆதி முறைகளை இக்கடைசிக்காலங்களில் அவர் செய்வதில்லை; அதற்குக் காரணம் அவரால் அவற்றைச் செய்ய முடியாது என்பதனால் அல்ல, அவரே அவற்றை நிறுத்திக்கொண்டிருக்கிறார் என்பதுதான். அது மட்டுமல்லாமல் அவருடைய பிரசன்னத்தை நாம் அறியவும் உணரவும் ஒரே வழியாக அவர் வேதத்தை மட்டுமே பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறார் என்பதையும் நாம் உணர்வது அவசியம்.
கர்த்தரை நான் கடற்கரையில் பார்த்தேன், கர்த்தர் நான் வைத்திருந்த இயேசு படத்தின் மூலமோ, சிலுவையின் மூலமோ என்னோடு பேசினார், நான் பரலோகம் போய் தரிசனத்தில் கர்த்தரை சந்தித்தேன், கர்த்தர் என் பக்கத்தில் வந்து நின்றார் என்ற பிதற்றல்களுக்கெல்லாம் இன்று வழியில்லாதபடி கர்த்தரின் பூரணமான வேதம் இந்த அசட்டுத்தனமான பேச்சுக்களையெல்லாம் நிராகரிக்கிறது. இந்த முறையில் சாட்சிகள் கொடுத்துவருகிறவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுவதோடு பிறரையும் ஏமாற்றுகிறார்களே தவிர அவர்கள் பக்கம் உண்மையில்லை. வேதமே இன்றைக்கு மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தையும், கிறிஸ்தவ வாழ்க்கையையும், சகலவித கிறிஸ்தவ அனுபவங்களையும் ஆராய்ந்து எது உண்மை என்று தீர்மானிக்கின்ற ஆணித்தரமான அதிகாரத்தைத் தன்னில் கொண்ட சத்திய வேதமாக இருக்கின்றது. வேத போதனைகளின் அடிப்படையில் அமையாத எந்த விசுவாசமும், எந்த அனுபவமும் மெய்யான கிறிஸ்தவ அனுபவமாக இருக்க வழியில்லை. வேதம் போதிக்கும் இந்தப் போதனை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறது. கர்த்தரின் வேதத்தைப் போக்குக்குப் பயன்படுத்துவதுபோல் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு அது போதிக்கும் அனைத்துப் போதனைகளுக்கும் முரணான வழியில் கர்த்தரின் பிரசன்னத்தை அறிய முயற்சி செய்துகொண்டிருக்கிறது நம்மினத்து போலிக் கிறிஸ்தவம். உருவங்கள் மூலமும், படங்கள் மூலமும், காட்சிகள் மூலமும், வெறும் உணர்ச்சிகள் மூலமும் கர்த்தர் தன் பிரசன்னத்தை அறியச் செய்வதில்லை என்பதை அது உணர மறுக்கிறது. இந்த விஷயத்தில் வேதபோதனையை நிராகரிப்பது கர்த்தரையே நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.
கர்த்தரின் பிரசன்னத்தை எப்படி உணர்வது?
கர்த்தரின் பிரசன்னத்தை அறியவும், உணரவும் என்ன செய்யவேண்டும்? முதலில், ஒருவர் கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டும். கிறிஸ்துவில் விசுவாசம் இல்லாதவர்களுக்கு கர்த்தரின் பிரசன்னத்தை அறிய வழியில்லை. சமீபத்தில் ஒரு கத்தோலிக்க ஸ்திரீக்கு இதுவே நான் சொன்ன ஆலோசனை. அவருக்கு கிறிஸ்துவில் எவ்வளவோ ஆர்வமிருந்தது; ஜெபிக்கவும் செய்கிறார்; வேத வசனங்களை மனனமும் செய்திருக்கிறார். ஆனால், இன்னும் கிறிஸ்துவை மட்டுமே இரட்சிப்பிற்காக விசுவாசித்து திருமுழுக்கைப் பெறவில்லை. முழுமுற்றாக கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்காதபோது ஆண்டவரின் பிரசன்னத்திற்கு நம் வாழ்வில் இடமில்லை. இரட்சிப்பு அவரிடம் இருந்தே வருகிறது. பழைய ஏற்பாட்டு போதகனான நிக்கொதேமுவுக்கும் அதுவே பதில்; பத்துக்கட்டளைகளுக்குப் பெருமதிப்புக்கொடுத்து வாழ்ந்து வந்திருந்த பணக்கார யூத வாலிபனுக்கும் அதுவே பதில்; யெரொபெயாம் வழியில் போய் கடவுளை ஆராதனை செய்த சமாரியப்பெண்ணுக்கும் அதுவே பதில்; ஒழுக்கங்கெட்டவள் என்று அறிவிக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படும் நிலையில் இருந்த பாவியான பெண்ணுக்கும் அதுவே பதில். கிறிஸ்து தரும் மாபெரும் இரட்சிப்பை அவர் மூலம் இலவசமாகப் பெற்று அவருடைய கட்டளைகளைத் தவறாமல் பின்பற்றி வாழ்கிறவர்கள் மட்டுமே அவருடைய பிரசன்னத்தை அன்றாடம் வாழ்க்கையில் அறிந்துணர முடியும்.
கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது ஒரு ஆத்மீக அனுபவம்; ஆவிக்குரிய அனுபவம். கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் அனுபவம். மறுபிறப்பாகிய ஆவிக்குரிய செயலின் மூலம் ஆவியானவரைப் பெற்று கிறிஸ்துவுக்காக வாழ்கிறவர்கள் அனுபவிக்கும் அனுபவம். இதை அவர்கள் எந்தவகையில் அனுபவிக்கிறார்கள் என்பதை இனி ஆராய்வோம். ஏற்கனவே நான் விளக்கியுள்ளபடி இந்தக் கடைசிக்காலங்களில் (கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை) கர்த்தர் சரீரபூர்வமாக எவருக்கும் நேரடியாகக் காட்சியளிப்பதில்லை. அவர் தூதர்கள் மூலமோ அல்லது மனிதர்களைப் பயன்படுத்தியோ எவரோடும் தொடர்புகொள்வதில்லை. அவர் மோசேயுடன் பேசியதுபோல் எவருடனும் இன்று பேசுவதில்லை. இதையெல்லாம் ஆதியில் இருந்து அவர் செய்திருந்ததற்குக் காரணம் தன்னுடைய சித்தத்தை மனிதனுக்கு வெளிப்படுத்தவே. இன்றைக்கு அவருடைய சித்தமனைத்தும் தெளிவாக வேதத்தில் பதியப்பட்டு தரப்பட்டிருப்பதால் கர்த்தர் முன்பு செய்ததுபோல் மனிதனோடு தொடர்புகொள்ளும் அவசியமில்லாமல் போய்விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பாரிஸில் நோட்டர்டாம் கெதீட்ரல் எரிந்து அதன் கூரை அழிவுற்றது. இன்றைய செய்தியில் வாசித்தேன், கெதீட்ரல் எரிகின்ற நெருப்பின் மத்தியில் ஒருவர் இயேசுவின் உருவத்தைப் பார்த்ததாக சொல்லியிருக்கிறார். அந்த மனிதனுடைய சென்டிமென்டல் மனப்பான்மை எரிகின்ற நெருப்பின் தோற்றத்தின் விதத்தைப் பார்த்து கற்பனையாக இயேசுவின் தோற்றமாக எண்ணவைத்திருக்கிறது. உண்மையில் நாம் படங்களில் காணும்விதத்தில் இயேசு இருந்ததாக எவரும் நிரூபிக்க முடியாது. இதெல்லாம் சிலைவணக்கப் பண்பாட்டில் இருந்து இன்றுவரை தொடர்ந்துவரும் கர்த்தருக்குப் பிடிக்காத செயல்கள்.
கர்த்தரின் பிரசன்னத்தை உணரும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொந்தக் கற்பனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வேதத்தை ஆராய்வது அவசியம். கர்த்தரின் பிரசன்னம் என்கிறபோது நாம் காட்சியையோ, காதில் கேட்கும் ஒலியையோ, தரிசனத்தையோ, கனவையோ குறித்துப் பேசவில்லை. இதெல்லாம் நிகழ்ந்த காலங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இன்றைக்கு கர்த்தரின் பிரசன்னத்தை நாம் அறிந்துகொள்ளுவதற்கு இவைகள் அல்ல வழிகள். அப்படியானால் எவை அதற்கு வழிகள்?
கர்த்தர் இன்று தன்னுடைய பிரசன்னத்தைத் தன்னுடைய மக்களுக்கு திருநியமங்கள் மூலமே அறிந்துகொள்ள வழிசெய்கிறார். திருநியமங்கள் என்று நாம் சொல்வது கர்த்தரே தன்னுடைய வார்த்தையில் நாம் பயன்படுத்தும்படிக் கட்டளையிட்டு நியமித்திருக்கும் நியமங்களாகும். இவை திருநியமங்கள் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இவற்றின் மூலம் நாம் கர்த்தரின் கிருபையை அடைவதால்தான். கர்த்தர் தன்னுடைய மக்களுக்கு நித்தமும் தன்னுடைய கிருபையைத் தந்து போஷிக்கிறார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். (யோவான் 1:16)
இந்தத் திருநியமங்கள் மூலம் கர்த்தர் புதிய வெளிப்படுத்தல்களைத் தருவதில்லை; புதிய அனுபவங்களைத் தருவதில்லை. இவற்றின் மூலம் கர்த்தர் தன்னுடைய பிரசன்னத்தை நாம் உணரும்படிச் செய்கிறார். ஏற்கனவே கிருபையின் மூலம் நாம் அடைந்திருக்கும் இரட்சிப்பின் அநேக ஆசீர்வாதங்களில் ஒன்றே கர்த்தரின் பிரசன்னத்தை நாம் உணரக்கூடிய ஆத்மீக அனுபவமாகும். கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாக நம்மில் ஜீவிக்கிறார் என்பதும், கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்பதும் ஆணித்தரமான சத்தியங்கள். இருந்தபோதும் இவற்றிற்கெல்லாம் இன்னும் ஒருபடி மேலே சென்று நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையில் தம்மோடு நாம் உறவாடும்படியும், அசாதாரண காலங்களான ஓய்வுநாள் ஆராதனை மற்றும் சபைக்கூட்டங்களில் நாம் கூடிவருகின்றவேளை தம்முடைய விசேஷ பிரசன்னத்தைக் கர்த்தர் நாம் உணரச் செய்கிறார். இதற்காக அவர் பயன்படுத்துகின்ற சாதனங்களே திருநியமங்கள்.
வேதவார்த்தைகள்
கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் உணரத் துணைபுரியும் திருநியமங்களில் ஒன்று அவருடைய வார்த்தை. அதாவது, வேதம் அல்லது வேதாகமம். இது எந்த வகையில் நமக்கு கர்த்தரின் பிரசன்னத்தை உணர உதவுகிறது? இதன் மூலமே இன்று கர்த்தர் தன்னுடைய சித்தத்தை எழுத்தில் வடித்துத் தந்திருப்பதால் அதன் மூலமாக கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்று விளக்குகிறது வேதம். வேத வார்த்தைகளை நாம் சிந்தித்து ஆராய்ந்து வாசித்துப் படிக்கிறபோது, அதன் மெய்ப்பொருளை விளங்கி உணருகிறபோது, அது வெளிப்படுத்தும் கர்த்தரைப் பற்றிய சத்தியங்கள் நம் உள்ளத்தில் ஆத்மீக உணர்வுகளைக் கிளறிவிடுகின்றபோது கர்த்தரின் பேச்சை நாம் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. சில வேளைகளில் வேதவார்த்தைகள் நமக்கு ஆறுதலைக் கொடுக்கும், ஆனந்தத்தைத் தரும், அறிவுரை செய்யும். சில வேளைகளில் அவ்வார்த்தைகள் நம்முடைய குறைபாடுகளையும், பாவங்களையும் கண்டித்து உணர்த்தும், திருந்துகிற வழியைக் காண்பிக்கும். இதையெல்லாம் வேதவார்த்தைகளின் ஊடாகப் பரிசுத்த ஆவியானவரின் மூலமாகக் கர்த்தர் நம்மோடு பேசி நம்மில் செய்யும் கிருபையின் செயல்கள். இவையெல்லாம் நம்மில் நிகழ்கிறபோது நாம் கர்த்தரோடு உறவாடுகிறோம், அவருடைய பிரசன்னத்தை உணர்கிறோம். அத்தோடு ஓய்வுநாள் ஆராதனையின் ஒரு பகுதியாக வேதவார்த்தைகளை வாசிக்கும்படி வேதம் அறிவுறுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் இருந்தும் புதிய ஏற்பாட்டில் இருந்தும் தொடர்ச்சியாக வேதம் ஆராதனையின் ஒரு பகுதியாக ஆத்துமாக்கள் அனைவரும் கேட்கும்படி வாசிக்கப்பட வேண்டும். வாசிக்கப்படும் பகுதிக்கு மிகச்சுருக்கமான ஒருவிளக்கத்தை மட்டுமே கொடுத்துவிட்டு வாசிக்கத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பகுதி தெளிவாக வாசிக்கப்பட வேண்டும். இதை நியமித்திருப்பது கர்த்தரே. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? முழு சபையும் பிரசங்கத்தின்போது மட்டுமல்லாமல் வேதவாசிப்பின்போதும் கர்த்தரின் சத்தத்தைக் கேட்பதோடு அவருடைய வல்லமையான பிரசன்னத்தையும் உணர வேண்டும் என்பதால்தான்.
கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்வது என்பது வெறும் மனித உணர்ச்சிகளோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்பது இப்போது புரிகிறதா? அதற்கு வேதமாகிய ஊடகம் அவசியமாக இருக்கிறது; அதன் மூலம் ஆவியானவர் நம்மோடு பேசி வேதவார்த்தைகளை நாம் விளங்கிக்கொள்ளும்படி செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. இதிலிருந்து கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வதில் நம்முடைய மூளைக்கும் அறிவுக்கும் இருக்கும் பிரிக்கமுடியாத அவசியமான தொடர்பையும் கவனியுங்கள். கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது நமது புத்திக்கெட்டாத விஷயமாக, அறிவுபூர்வமாக விளக்கமுடியாத விஷயமாகப் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புத்திக்கெட்டாத விஷயங்களுக்கும் மெய்யான கிறிஸ்தவ ஆத்மீக அனுபவங்களுக்கும் ஒருபோதும் தொடர்பிருந்ததில்லை. கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்வது என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது அறிவுபூர்வமான ஆத்மீக உணர்வு. அதாவது வேத உண்மைகள் நம் இருதயத்தில் ஏற்படுத்துகின்ற அறிவுபூர்வமான ஆத்மீக உணர்வுகளும், அந்த உணர்வுகளுக்கேற்ற முறையில் நாம் ஆத்மீகக் கிரியைகளைச் செய்கிறபோது நம்மோடு கர்த்தர் உறவாடித் தம் பிரசன்னத்தை உணர வைக்கிறார்.
வேத அறிவோடு, நம்மில் ஜீவிக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரே நம்முடைய அனைத்து பரிசுத்தமாக்குதலுக்கும் காரணமாக இருக்கிறார். கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் அறியவும், உணரவும் முடிவதில் அவருக்குப் பெரும்பங்கிருக்கிறது. வேதவார்த்தைகள் நம்மில் ஆத்மீகரீதியில் பதியவும், அதில் நாம் ஆனந்திக்கவும் அவரே காரணமாக இருக்கிறார். அத்தோடு நம்மில் ஏற்பட்டிருக்கும் மறுபிறப்பின் அனுபவமும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதுபற்றி ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இவையனைத்தும் நாம் கர்த்தரின் பிரசன்னத்தை அறிந்துணரக் காரணமாக இருக்கின்றன. இதெல்லாம் நாம் கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்து ஆவிக்குரிய உணர்வுகளை நாம் அடையவும், அவற்றைப் பேச்சிலும், ஜெபத்திலும், நாம் செய்யும் செயல்களின் மூலம் வெளிப்படுத்தவும் உதவுகின்றன.
இத்தகைய பல்வேறுவித ஆத்மீக உணர்வுகளைத்தான் சங்கீதக்காரன் தன் பாடல்களில் சங்கீதப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறான். உதாரணத்திற்கு சங்கீதம் 51ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அது தாவீதின் மனந்திரும்புதலின் பின் பாடப்பட்ட சங்கீதம். அதில் தாவீது எழுதியிருக்கும் ஆத்மீக அனுபவங்களை அவன் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்கின்ற உணர்வோடு எழுதியிருக்கிறான். கர்த்தரின் பிரசன்னத்தை உணர்ந்த உணர்வோடு மட்டுமே ஒருவனால் ‘உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்’ (51:11) என்று எழுத முடியும். இங்கே சங்கீதக்காரனின் மனந்திரும்புதலின் அனுபவம் அறிவுபூர்வமானதாக (சத்தியத்தின் அடிப்படையில்) இருப்பதோடு அவனுடைய உணர்ச்சிகளும் அதற்கேற்றபடி வெளிப்படுகிறவையாக இருக்கின்றன.
வேதப்பிரசங்கம்
இன்னொரு வகையில் கர்த்தரின் பிரசன்னத்தை அசாதாரண விதத்தில் நம்மால் அனுபவிக்கக்கூடிய வசதியைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். நாம் பொதுவாகவே வேதப்பிரசங்கத்தை சத்தியத்தைக் கேட்பதற்கான சாதனமாக மட்டுமே நினைப்பது வழக்கம். ஆனால், கர்த்தர் அதை ஓய்வுநாள் ஆராதனையின் ஒரு முக்கிய பகுதியாக நியமித்திருப்பதற்கு சிறப்பான காரணமிருக்கிறது. ஓய்வுநாளில் சபைகூடிவருகிறபோது கர்த்தர் தம்முடைய மக்கள் மத்தியில் பிரசன்னமாவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பின்வரும் வசனத்தில் பவுல் ஆராதனைவேளையில் சபைகூடிவரும்போது கர்த்தர் பிரசன்னமாகியிருப்பதை கொரிந்தியருக்கு விளக்கியிருப்பதைக் கவனியுங்கள். ‘உங்களுக்குள்ளே’ என்பதை உங்கள் மத்தியிலே என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
1 கொரிந்தியர் 14:24-25
24 அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். 25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
இதேபோல் மத்தேயு 18:20லும் தம்முடைய பிரசன்னம் சபையிலிருப்பதை கிறிஸ்து விளக்குகிறார்.
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
இந்த வசனத்தில் ‘இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தில் எங்குகூடியிருக்கிறார்களோ’ என்ற வார்த்தைப்பிரயோகங்கள் திருச்சபை கூடிவருவதைக் குறிக்கும் வார்த்தைகளாக இருக்கின்றன. தனிநபர்கள் வேறு இடங்களில் ஜெபத்தில் வருவதைக் குறிப்பதாக இதைக் கருதக்கூடாது. இந்த வசனம் காணப்படும் பகுதி இது சபைகூடிவரும்போது நிகழும் விஷயங்களைப்பற்றி இயேசு விளக்குவதை உணர்த்துகிறது.
சபைகூடிவரும்போது கர்த்தரின் பிரசன்னத்தை நாம் எப்படி உணர்கிறோம்? ஆராதனையில் பயன்படுத்தப்படும் கிருபையின் நியமங்களின் மூலமாக கர்த்தர் நாம் அவருடைய பிரசன்னத்தை உணரும்படிச் செய்கிறார். உதாரணத்திற்கு வேதப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்காக நியமிக்கப்பட்டவர் தேவபயத்தோடு பிரசங்கிக்கும்போது, வார்த்தையின் அடிப்படையில் சத்தியத்தைப் பிரசங்கிக்கும்போது, விசுவாசிகள் இதன் மூலம் ஆறுதலையும், சத்திய அறிவையும் பெறுவது மட்டுமல்லாமல் பாவ உணர்த்துதலுக்கும் உள்ளாகிறார்கள். இதை ஆவியானவரே ஆத்துமாக்களில் செய்கிறார். இத்தகைய ஆத்மீக அனுபவத்தை பிரசங்கத்தின் மூலம் அடைகிறவர்கள் கர்த்தரின் பிரசன்னத்தை அறிவுபூர்வமாக உணர்கிறார்கள்; அவருடைய வல்லமையை வார்த்தையின் மூலம் உணர்கிறார்கள். இந்தக் காரணத்தால்தான் ஆராதனையில் பிரசங்கம் எப்போதும் முக்கிய பங்கு வகித்துவருகிறது. இது கர்த்தர் தன் பிரசன்னத்தை ஆத்துமாக்கள் அறியப் பயன்படுத்தும் திருநியமங்களில் ஒன்று. பிரசங்கத்தின் வல்லமையைத் தெளிவாக விளக்கும் பல பகுதிகளில் ஒன்று ரோமர் 10:13-15. ஒருவன் கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைவதற்கு ஆண்டவர் பயன்படுத்தும் வல்லமையான சாதனமாக இந்தப்பகுதி பிரசங்கத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கிறது.
13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
பிரசங்கத்தைக் கர்த்தர் இந்தவகையில் பயன்படுத்தியபோதும் பிரசங்கம் சத்தியத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு தெளிவானதாக, ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கப்படுகிறபோதே கர்த்தர் தன் பிரசன்னத்தை அதன் மூலம் ஆத்துமாக்களில் உணர்த்துகிறார். பிரசங்கம் அதில் இருக்கவேண்டிய தன்மைகளைக் கொண்டிராதபோது அது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படாது; ஆத்துமாக்களையும் தொடாது. கர்த்தரின் பிரசன்னத்தை ஆத்துமாக்கள் உணர உதவும் பிரசங்கம் எப்போதும் தேவபயத்தோடும் அக்கறையோடும் உண்மையோடும் தயாரிக்கப்பட்டு பிரசங்கிக்கப்பட வேண்டும். வெறும் கதை சொல்லுவதும், வேத வார்த்தைகளை ஆராய்ந்து படிக்காமல் தவறான விளக்கங்களைக் கொடுப்பதும், பிரசங்கத்தைப் பயன்படுத்தி சொந்தக் கருத்துக்களை விளக்குவதும், சுயநலத்துக்காகப் பிரசங்கத்தைப் பயன்படுத்துவதும் கர்த்தரின் பிரசன்னத்தை ஆத்துமாக்கள் அறியமுடியாதபடி செய்துவிடும். பிரசங்கமாகிய ஊடகத்தைத் தன் சித்தத்தை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளவும், தன் பிரசன்னத்தை அவர்கள் உணரவும் கர்த்தரே நியமித்திருந்தபோதும் பிரசங்கம் பிரசங்கமாக இல்லாமலிருக்கும்போது கர்த்தர் அங்கிருக்கப்போவதில்லை. பிரசங்கம் எப்போதும் கர்த்தருக்குரிய பயத்தோடு அணுகவேண்டிய ஆத்மீக சாதனம். அதனால்தான் பிரசங்கிகள் புதிய விசுவாசிகளாகவும், தகுதியற்றவர்களாகவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக வேதம் அதைச் செய்யவேண்டியவர்களுக்குரிய இலக்கணங்களைத் தெளிவாக 1 தீமோத்தேயு 3, தீத்து ஆகிய பவுலின் நிருபங்களில் தெளிவாகத் தந்திருக்கிறது.
சபை ஜெபக்கூட்டம்
ஆத்துமாக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்டவிதத்தில் தங்களுடைய ஆத்மீக விருத்திக்காகவும், கர்த்தரோடு உறவாடவும் ஜெபிக்க வேண்டிய கடமை இருந்தபோதும், கர்த்தர் திருச்சபை ஜெபத்திற்காகக் கூடிவரும்படி வேதத்தில் ஆணித்தரமாக அறிவுறுத்தியிருக்கிறார். அதுபற்றி டேனிஸ் கன்டசன் என்பவர் எழுதி வெளியிட்டிருக்கும் ஒரு நூலை (A Praying Church: Neglected Blessing of Corporate Prayer) சமீபத்தில் நான் வாசித்தேன். ஜெபம் பற்றி அநேக நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தபோதும் திருச்சபை ஜெபக்கூட்டத்தைப் பற்றிய நூல்கள் அரிது. அதுவும் திருச்சபையில் ஜெபக்கூட்டமே இன்று அதிகம் உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறது.
சபை ஜெபக்கூட்டத்தின் அவசியம் பற்றி இந்த ஆக்கத்தில் அதிகம் எழுதுவதற்கு இடம் போதாது. இருந்தபோதும் அதைக் கர்த்தர் தன்னுடைய அசாதாரண பிரசன்னத்தை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளப் பயன்படுத்துகிறார் என்பதை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலருடைய நடபடிகள் நூலில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். திருச்சபை புதிய ஏற்பாட்டில் நிறுவப்படுவதற்கு முன் அதற்கு முன்னோடியாக இருந்திருப்பது 120 விசுவாசிகள் எருசலேமில் மேலறையில் கூடிவந்த ஜெபக்கூட்டம் என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் நூல் நமக்கு விளக்குகிறது. பல தடவைகள் அந்நூலில் சபைகூடிவந்து ஜெபித்த உதாரணங்களை நாம் காண்கிறோம். அப்போஸ்தலருடைய நடபடிகள் 4ம் அதிகாரத்தில் அப்போஸ்தலர்கள் தங்களுடைய சுவிசேஷப்பணிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டபோது சபையாகக் கூடிவந்து கர்த்தரிடம் ஜெபத்தில் மன்றாடியபோது அவருடைய பிரசன்னத்தை அவர்கள் அறியமுடிந்தது மட்டுமல்லாமல் அவர்களுடைய ஜெபத்தைக் கர்த்தர் ஆசீர்வதித்து சுவிசேஷத்தை அதிக வல்லமையோடு பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலையும் அவர்களுக்குக் கொடுத்தார். அதன் காரணமாக திருச்சபை ஆசீர்வதிக்கப்பட்டு சுவிசேஷமும் பரவியது.
23 அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். (அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:23-32)
இதுபோன்ற திருச்சபை ஜெபக்கூட்டம் பற்றிய பல உதாரணங்களைப் புதிய ஏற்பாட்டில் நாம் காண்கிறோம். சபைகூடிவருகிறபோதெல்லாம் கர்த்தர் சபையில் பிரசன்னமாகி தன்னுடைய வல்லமையை ஆத்துமாக்கள் உணரச் செய்கிறார்.
திருவிருந்து
அடுத்ததாக திருநியமங்களில் ஒன்றான திருவிருந்தும் கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் அறிந்துணரக் கிறிஸ்துவால் சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுநாளில் தேவ பயத்தோடும், சகல மரியாதைகளுடனும் திருவிருந்தில் ஆத்துமாக்கள் பங்குகொள்கிறபோது அங்கு கர்த்தர் பிரசன்னமாகி ஆத்துமாக்களை ஆசீர்வதிக்கிறார். திருவிருந்துபற்றித் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும் 1 கொரிந்தியர் 11வது அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். கொரிந்தியர் சபை திருவிருந்தை உதாசீனப்படுத்துவதுபோல் நடந்துகொண்டபோது கர்த்தர் அவர்களைத் தண்டித்தார். திருவிருந்தின்போது அவர்கள் நடந்துகொண்ட முறை பாவகரமானதாக இருந்ததால் சிலர் உடனடியாக மரித்துப்போனார்கள். சிலருக்கு தீராத வியாதிகள் வந்தன, சபையின் சாட்சியும் பாதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் திருவிருந்தில் கவனத்தோடு நிதானித்து பங்குகொள்ளாதது மட்டுமல்ல; அது நிகழ்ந்தபோது சர்வவல்லமையுள்ள கர்த்தரின் பிரசன்னம் அந்த இடத்தில் இருந்ததுதான் காரணம். கர்த்தரின் பிரசன்னத்தை சட்டைசெய்யாமல் அலட்சியப்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் வேறென்ன செய்வார்?
சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் திருவிருந்தின்போது கர்த்தரின் மெய்யான வல்லமையான ஆவிக்குரிய பிரசன்னம் சபையில் இருப்பதாக விளக்கியிருக்கிறார். வெறுமனே கிறிஸ்துவின் மரணத்தை, அந்த நிகழ்ச்சியை மனதில் கற்பனை செய்து பார்ப்பதற்காக, ஜீவனற்ற சடங்கைப்போல் திருவிருந்தை எடுப்பதற்காக நாம் திருவிருந்தில் கலந்துகொள்வதில்லை. ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் விசுவாசத்தோடு நினைவுகூர்வதோடு கிறிஸ்துவின் வல்லமையான பிரசன்னத்தை விசுவாசத்தின்மூலம் உணரவும் நாம் திருவிருந்தில் கலந்துகொள்கிறோம். அந்தப் பிரசன்னமே திருவிருந்தை உதாசீனம் செய்கிறவர்களைப் பாதித்துத் தண்டிக்கிறது.
29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். (1 கொரிந்தியர் 11:29-31)
ஓய்வுநாள்
இந்தக் கடைசிக்காலங்களில் ஓய்வுநாளுக்கு மதிப்புக்கொடுத்து வரும் திருச்சபைகள் மிகக் குறைவு; அதுவும் நம்மினத்தில் அத்தகைய சபைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஓய்வுநாளுக்கும் ஏனைய நாட்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், நடைமுறை வசதிக்காகவே அந்நாளில் ஆராதனை செய்கிறோம் என்ற எண்ணமே பரவலாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தத் தவறான டிஸ்பென்சேஷனலிச, அன்டிநோமியனிச எண்ணப்போக்கு அநேகரை ஓய்வுநாளுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்காமல் அந்நாளில் கர்த்தரின் வார்த்தையை மீறவைத்துக்கொண்டிருக்கிறது. ஓய்வுநாளை உருவாக்கியது தனி மனிதனோ, சமுதாயமோ அல்ல; அதைக் கர்த்தரே உருவாக்கி ஆசீர்வதித்து மானுட நன்மைக்காகத் தந்திருக்கிறார். அது பழைய ஏற்பாட்டோடு முடிந்துபோன நாளல்ல; புதிய ஏற்பாட்டிலும் தொடரும் ஆராதனை நாள். அது கர்த்தரின் நாள். அவருடைய பிரசன்னத்தை ஆத்துமாக்கள் விசேஷ முறையில் அறிந்துணரக்கூடிய ஆசீர்வாதமான நாள். ஓய்வுநாள் பற்றிய வேதஉண்மைகளில் நம்பிக்கைகொண்டு விசுவாசத்துடனும், வைராக்கியத்துடனும் நடந்துவருகிறவர்களுக்கே அது ஆசீர்வாதமான நாள். அவருடைய வல்லமையான பிரசன்னத்தை அத்தகையவர்களே அந்நாளில் அனுபவிப்பார்கள். விசுவாசத்தோடு அந்நாளில் ஆத்துமாக்கள் கூடிவந்து ஆராதிக்கும்போதும், குடும்பமாக வீட்டில் ஆராதிக்கும்போதும் கர்த்தரின் பிரசன்னத்தை அவர்கள் உணர்கிறார்கள். அந்நாளில் செய்யக்கூடாதவைகளைச் செய்யாது ஏசாயா 58:13-14ல் சொல்லியிருப்பதுபோல் நடந்துகொள்கிறபோது கர்த்தர் அந்நாளை மனமகிழ்ச்சியுள்ள நாளாக்கி தன் மக்கள் அந்நாளில் தன்னுடைய பிரசன்னத்தை உணரும்படிச் செய்கிறார்.
13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், 14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
இனியாவது கர்த்தரின் வல்லமையான பிரசன்னத்தை உணர்வது பற்றிய ஆவிக்குரிய அனுபவத்தைக் கொச்சைப்படுத்தாமல் கர்த்தர் நமக்களித்துள்ள திருநியமங்களை விசுவாசத்துடன் பயன்படுத்தி ஆவிக்குரிய ஆத்துமாக்களைப்போல் நடந்துகொள்வீர்களா? சிலைவணக்கத்தில் ஈடுபட்டு வாழ்கிற அவிசுவாசிகள்போல் நாம் அறிவற்று கர்த்தரின் பிரசன்னத்தை அவர்கள் நாடுவதுபோல் நாடக்கூடாது. சாமி வந்துவிட்டது என்று கோவிலிலும், கூட்டத்திலும் அவர்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு புத்திக்கெட்டாத விதத்தில் சாமியாடுவதுபோல் நாம் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது பற்றிய விஷயத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அநேக கெரிஸ்மெட்டிக் கூட்டங்களில் நம்மினத்தில் இதுவே நடந்துவருகிறது. அவிசுவாச மதத்தார் நடவடிக்கைகளுக்கும் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்த விஷயத்தில் வித்தியாசமில்லாமல் இருக்கிறது. வேதமே நம்முடைய விசுவாச அனுபவங்கள் அனைத்திற்கும் ஆதாரமும் முடிவுமாக இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். சத்திய வேதத்தில் முழுமுற்றுமாகத் தங்கியிருந்து நம்மாண்டவர் கிறிஸ்துவை நித்தமும் ஆராதித்து அவருடைய பிரசன்னத்தை புத்திரீதியாக அன்றாடம் அறிந்துணர்ந்து ஆசீர்வாதமான கிறிஸ்தவ வாழ்க்கையை வேதமனிதர்களாக வாழ முற்படுங்கள்.
யார் நம்மை ஆளுவது? வேதமா, பண்பாடா!
‘நம்ம ஊருக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது’ அல்லது ‘நம்ம பண்பாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராது’ என்ற வார்த்தைகளை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவை அதிகம் கேட்டுக்கேட்டுக் காது புளித்துப்போன வார்த்தைகள். இந்தப் பண்பாடே அநேக மிஷனரிகளுக்கு நம்மினத்தில் அடிபதிக்க முடியாதபடி ஆபத்தாக இருந்திருக்கிறது. போப் ஐயரும், கால்ட்வெல்லும் இன்று உயிரோடிருந்தால், ஏன்! சீகன்பாலும், வில்லியம் கேரியுங்கூட இதைப்பற்றி அதிகம் சொல்லிச் சலித்திருப்பார்கள். இந்த வார்த்தைகளை வாசிக்கிறபோதே, மேலைத்தேசத்து கிறிஸ்தவ தலைவர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக ஒருசில குரல்கள் நம்மினத்தில் எழும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளுவதெல்லாம், இயேசு நம்மினத்தில் பிறக்கவில்லை என்பதைக் கொஞ்சம் உணருங்கள் என்பதுதான். வேறொரு இனத்தில் பிறந்த இயேசு வேண்டும், ஆனால் வேறு இனங்களில் பிறந்த கிறிஸ்தவ தலைவர்கள் தேவையில்லையா? வெளிதேசத்தில் இருந்து நம்மினத்துக்கு வந்ததுதான் கிறிஸ்தவம். அதேநிலைதான் உலகத்திலுள்ள ஏனைய தேசங்களுக்கும். யார், எங்கிருந்து வந்¢தார் என்பதல்ல முக்கியம்; சத்தியமும் சத்திய தேவனும் மட்டுமே நமக்குத் தேவை.
பண்பாடு என்பது ஒவ்வொரு இனத்தோடும் இணைந்தது. பண்பாடில்லாத இனமே இல்லை. சுவிசேஷப் பணியைக்கூட பண்பாட்டை அடியோடு ஒதுக்கிவைத்துவிட்டு பயனுள்ள முறையில் செய்துவிட முடியாது. ஆனால், பண்பாடு கிறிஸ்தவ திருச்சபைகளை ஆளமுற்படுகிறபோது, அது கர்த்தரின் வேதத்தைவிட அதிகாரமுள்ளதாக மாறிவிடுகிறபோது, வேதபோதனைகளைவிட அதற்கு ஓர் இனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றபோது, அதன் அடிப்படையில் வேதபோதனைகள் மாற்றியமைக்கப்படுகிறபோது எந¢த இனத்திலும் கிறிஸ்தவம் உயிர்வாழ வழியேயில்லை.
சிலைவணக்கத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழ்கிறவர்களின் பண்பாடு அம்மதக் கோட்பாட்டின், அதன் வழிமுறைகளின் செல்வாக்கைப் பெருமளவுக்குக் கொண்டிருக்கும். அவ்வின மக்களின் மதவழக்கங்களை அவர்களுடைய பண்பாட்டில் இருந்து பிரித்துவிடுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. அது அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும்; அந்தளவுக்கு அதன் செல்வாக்கு அவர்களில் காணப்படும். ஒரு சாதாரண உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோமே. எனக்குத் தெரிந்த ஒரு பிராமணப் பின்னணியில் இருந்து வந்த இந்தியக் கிறிஸ்தவர் இன்றுவரைக் கறியை (இறைச்சி) வாயில் வைத்ததில்லை. அதற்குக் காரணம், கிறிஸ்தவரான பின் அவருடைய மனம் இந்த விஷயத்தில் அறிவோடு இருந்தபோதும், வளர்ந்துவந்த முறை அவரைக் கறியின் பக்கம் போகவிடாமல் வைத்திருக்கிறது. நல்ல வேலை, வேதம் கறி சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டளையிடவில்லை. அப்படியொரு கட்டளை இருந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பாரோ தெரியவில்லை. அவர் வளர்ந்து வந்திருந்த பண்பாட்டு முறை கிறிஸ்தவரான பின்னரும் அவரைவிடாமல் பிடித்திருக்கிறது.
எந்த இனப்பண்பாட்டிலும் நல்லவையும் இருக்கும்; கேடானவையும் இருக்கும். அதுவும் சிலைவணக்கப் பண்பாட்டைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை. உதாரணத்திற்கு, நம்மினத்து இந்துப்பண்பாட்டில் ஆணாதிக்கம் அளவுக்கு மீறியதாக இருக்கிறது. ஆண்பிள்ளைதான் தலைப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்பதும், ஆண் பிள்ளையை அதிகம் படிக்கவைப்பதும், அவனுக்கே அதிக சொத்தை எழுதிவைப்பதும் பொதுவாகவே இந்துப்பண்பாட்டில் வழக்கம். வளர்கிறபோதுகூட வீட்டில் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் ஆண் பிள்ளைகளுக்கே விசேஷ கவனிப்பும், அக்கறையும் காட்டப்படும். இந்தப் பண்பாட்டில் வளர்கின்ற நம்மினத்து ஆண் வாலிபர்களுக்கு பெண்களைப்பற்றிய தாழ்வான ஒரு எண்ணம் சிறுவயதில் இருந்தே பதிந்துவிடுகிறது. உண்மையில் பெண்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் இருக்கின்றன என்ற உணர்வே இல்லாமல் அவர்களைத் தரத்தில் ஓரிடம் குறைத்து வைத்துப்பார்த்தே நம்மினத்து வாலிபர்கள் வளர்கிறார்கள். பெற்றோர்களும் அப்படியே வளர்க்கிறார்கள். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான 25 வயதுள்ள ஹிரிதிக் பாண்டியா பெண்களைப் பற்றி அசிங்கமான கருத்துக்களை டிவியில் எல்லோரும் பார்க்கிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் பேசிவிட்டான். அவனுடைய செயல் தவறுதான். ஆனால், பெண்களைப்பற்றிய இந்தத் தாழ்வான எண்ணமே பொதுவாக நம்மினத்து வாலிபர்கள் மத்தியில் இருக்கிறது.
கிறிஸ்துவை விசுவாசிக்கும் வாலிபர்களுக்கு பெண்களைப்பற்றி அவிசுவாசியான ஹிரிதிக் பாண்டியாவைப்போல அசிங்கமான எண்ணங்கள் இல்லாமல் இருந்தாலும், ஆணாதிக்கப் பார்வை இருதயத்தில் ஊறிப்போயிருந்து அவர்கள் திருமணத்திற்காக பெண்தேடுகிறபோது வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். இந்துப் பண்பாட்டில் இருந்து வந்திருக்கும் இந்த ஆணாதிக்கப் பார்வை வேதத்திற்கு முற்றிலும் முரணானது. வேதம் இதை நல்லதாகப் பார்க்கவில்லை; உண்மையில் அருவருப்போடு பார்க்கிறது. பெண்ணைப்பற்றிய இந்த இழிவான பண்பாட்டுப் பார்வையையும் நடத்தையையும் தன் வாழ்வில் இருந்து போக்கிக்கொள்ளாத கிறிஸ்தவன் பரிசுத்தத்தில் குறைபாடுள்ளவனாகவே இருப்பான். ஆணாதிக்க மனப்போக்கு ஒரு கிறிஸ்தவன் வாழ்வில் தொடர்ந்தால் அவனால் கிறிஸ்தவ குடும்பவாழ்க்கையைப் பரிசுத்தத்தோடு, கர்த்தரின் மகிமைக்காக நடத்தவே முடியாது. இதிலிருந்து பண்பாட்டில் இருக்கும் தீய அம்சங்களை வேதபோதனையின் அடிப்படையில் அடியோடு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்கிறீர்களா? கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பழைய பண்பாட்டில் இருந்து விடவேண்டியவைகள் ஏராளம். இந்தச் சிலைவணக்கப் பண்பாட்டில் இருந்து விலகி கிறிஸ்துவை விசுவாசித்தவன் என்பதால் இதுபற்றி எனக்கு அதிக அறிவும், அனுபவமும் இருக்கிறது.
சிலைவணக்க இனப்பண்பாட்டில் அல்லது புறஜாதி இனத்தில் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்து திருச்சபை அமைக்கின்றபோது நாம் முகங்கொடுக்கின்ற ஒரு வார்த்தைப்பிரயோகந்தான் ‘சூழிசைவுபடுத்தல்.’ இதை ஆங்கிலத்தில் Contexualisation என்று அழைப்பார்கள். இந்த வார்த்தைப்பிரயோகம் 20ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஓர் இனத்துப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் சத்தியத்தை இன்னொரு இனத்துப் பண்பாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எப்படி விளங்கிக்கொள்ளுவது என்ற ஆய்வு எழுகிறபோதே சூழிசைவுபடுத்தல் ஆரம்பிக்கிறது. சிலர் இதை வேதவிளக்கவிதிமுறையாகக் காண்கிறார்கள். வேறு சிலர் அதை மறுத்து இதை செய்திப்பறிமாற்றத்தோடு தொடர்புடையதாக மட்டுமே பார்க்கவேண்டும் என்கிறார்கள். அதாவது, சுவிசேஷத்தை அறிவித்து சபை நிறுவும் பணியில் ஈடுபடுகிறபோது இதன் பங்கு அவசிமாகிறது என்பது அவர்களுடைய கருத்து.
கர்த்தரின் மீட்புப்பணியின் வரலாற்றை விளக்கும் வேதம், யூத-கிரேக்க வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த கர்த்தரின் வெளிப்படுத்தலாக இருக்கிறது. அவ்வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை இன்னொரு நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் பிரசங்கித்து திருச்சபை நிறுவுகிற விஷயம்பற்றி விவாதிக்கும்போதே சூழிசைவுபடுத்துதல் என்ற வார்த்தைப்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு அப்போஸ்தலன் பவுல் புறஜாதியினர் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து திருச்சபை நிறுவும் பணியில் ஈடுபட்டபோது யூதப்பண்பாட்டுச் சூழலில் வளர்ந்திருக்கும் வேதத்தை கிரேக்கப் பண்பாட்டுச் சூழலுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது என்ற அவசியத்தை உணர்ந்தவராக அதைக் கவனத்தோடு செய்யும் பணியில் ஈடுபட்டார். ஆகவே, சூழிசைவுபடுத்துதல் என்பது சுவிசேஷத்தைப் புறஜாதிக் கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தும்போது அவசியமாகிறது. ஆனால், இதற்கும் Syncretism (சின்கிரிடிஷம்) என்றழைக்கப்படுகின்ற ‘சமயசமரசப் பிணைப்பிற்கும்’ இடையில் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டு, ஆபத்தைத் தவிர்க்க வேண்டும். சுவிசேஷப் பணியில் ஓரளவிற்கு வேதஅடிப்படையிலான சூழிசைவுபடுத்தல் அவசியமாகிற அதேவேளை, சமயசமரசப் பிணைப்பு சுவிசேஷத்தை அடியோடு அழிக்கின்ற ஆபத்தாக இருக்கின்றது.
சமயசமரசப் பிணைப்பு (Syncretism)
முதலில், சமயசமரசப் பிணைப்பை விளக்கிவிடுகிறேன். இதுவே பிசாசின் வழிமுறை, இது சுவிசேஷத்தை அழிக்கும் ஆபத்து. சுருக்கமாக விளக்கப்போனால் சமயசமரசப் பிணைப்பு என்பது இரு மதப்போதனைகளை ஒன்றாக இணைத்து விளக்குவது. கிறிஸ்தவ வேதபோதனைகளோடு வேறு மதப்போதனைகளை சரிசமமாகப் பிணைப்பது பிசாசின் கைங்கரியம். இந்தியாவில் வட தென்பகுதிகளில் சாது செல்லப்பா, புலவர் தெய்வநாயகம் போன்றோர் சமயசமரசப் பிணைப்பைப் பயன்படுத்தி பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப கிறிஸ்தவத்தை மாற்றி அமைத்து மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள். இவர்கள் அப்போஸ்தலன் தோமா இந்தியாவுக்கு வந்தபோது தென்பகுதி மக்கள் சிலைவணக்கத்தில் ஈடுபட்டிருந்ததைக் கவனித்து வேதம் போதிக்கும் கடவுள் வழிபாடு இந்தியப் பண்பாட்டுக்கு ஒத்துப்போகாது என்று தீர்மானித்து இயேசுவை சிலைவடிவத்தில் வணங்கும் முறையை ஏற்படுத்தினார் என்று விளக்குகிறார்கள் (புலவர் தெய்வநாயகம்). இது வேதத்தையும் வேதமனிதனான தோமாவையும் நிந்திக்கும் தவறான போலிவிளக்கம். பத்துக்கட்டளைகளும், வேதத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் சிலைவணக்கத்தை வெளிப்படையாக ஆணித்தரமாகக் கண்டித்து நிராகரிக்கின்றன. கீழைத்தேய நாடுகளில் அதுவே மதப்பண்பாடாக இருக்கிறதென்பதற்காக கீழைத்தேய நாட்டுக் கிறிஸ்தவர்கள் வேதம் சிலைவணக்கத்தை நிராகரிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் தற்காலப் பண்பாட்டிற்கேற்றபடி விளக்கங்கொடுப்பது வேதமறியாதவர்களும், வேதத்தைக் கர்த்தர் தெய்வீக வழிநடத்தலின்படித் தந்திருக்கும் முறையை நிராகரிக்கிறவர்களும் செய்யும் செயல்.
இதுபற்றி விளக்கி, தெய்வநாயகம் மற்றும் சாது செல்லப்பா ஆகியோருக்கு பதிலளித்து ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலைப் பலவருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். (இந்நூல் தற்போது பதிப்பில் இல்லை. திருமறைத்தீப வலைப்பூவிலிருந்தோ அல்லது திருமறைத்தீபத்தில் இவ்வாக்கம் வெளிவந்த இதழிலிருந்தோ படித்தறியலாம். திருமறைத்தீபம் மலர் 6 – இதழ் 3-4, 2000 (Unicode) (PDF)) இதை எழுதி வெளியிட்டதற்குக் காரணம் கோயம்புத்தூரில் இருந்த சில போதகர்கள், ‘ஐயா, இதற்கு பதிலளிக்கும் ஞானம் இல்லாத நிலையில் இருக்கிறோம். நீங்கள்தான் இதற்கு பதில்கூறி எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுதான். சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் இந்துமத இந்திய வேத நூல்களிலும், சங்க இலக்கியங்களிலும் காணப்படும் போதனைகளுக்கு கிறிஸ்தவ விளக்கத்தைக் கொடுத்து இந்தியர்கள், இந்திய வேதநூல்களிலும், தங்களுடைய மதத்திலும் கிறிஸ்துவைப்பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை அறிந்துணர்ந்தாலே கிறிஸ்தவர்களாகி விடலாம் என்று விளக்கியிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை அடியோடு நாசப்படுத்தும் பிசாசின் போதனை. இது சமயசமரசப் பிணைப்பிற்கு ஒரு நல்ல உதாரணம்.
வேதத்தில் இருந்து ஆவியின் பலத்தோடு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காமல், வேதத்தின் சத்தியங்களை புறஜாதி மத எழுத்துக்களில் பார்க்க முனையும் வேதநிந்தனை செய்யும்முறை என்று இதன் போலித்தனத்தை ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலில் தோலுரித்துக் காட்டியிருந்தேன். அத்தோடு தமிழகத்தில் தெய்வநாயகத்தைப் பின்பற்றி இந்துத் தமிழ் இலக்கியங்களிலும், அவிசுவாசிகளான திருவள்ளுவர், இராமலிங்க அடிகள் போன்றோரின் எழுத்துக்களிலும், சித்தர் பாடல்களிலும் கிறிஸ்தவ போதனைகளைக் காண முயல்கின்ற வேறு சிலரையும் அடையாளங் காண்பித்து திருமறைத்தீபத்தில் எழுதியிருந்தேன். இந்த சமயசமரசப் பிணைப்பாளர்களின் போலிப்போதனைகள் தமிழகத்து இந்துக்கோவில்களைப்போல் அதேவடிவில் உயரமாக திருச்சபைக் கட்டடங்களைக் கட்டும் அளவுக்கு கொண்டுபோய்விட்டிருக்கிறது. இந்த ஆபத்தான போதனையை நான் அநேக வருடங்களுக்கு முன் என் நூலில் விளக்கியிருந்தபோதும் அதன் எச்சங்கள் இன்னும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் தொடரத்தான் செய்கின்றன. வேதபோதனையான கிருபையின் போதனைகளிலிருந்தும் இந்துமத விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள் ஒரு சிலர். சமயசமரசப் பிணைப்பாகிய பாம்பு எந்த நாட்டிலிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும் அது கிறிஸ்தவத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதைத் தோலுரித்துக்காட்டி கிறிஸ்தவர்கள் அந்த விஷப்பாம்பினால் கடியுண்டு ஆவிக்குரிய மரணத்தை சந்திக்காமல் இருக்கவே நான் அந்த நூலை எழுதவேண்டியிருந்தது.
இதேபோல, பங்ளாதேஷில் (Bangladesh) ஒரு சில கிறிஸ்தவ மிஷனரி நிறுவனங்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக அவர்களுடைய இஸ்லாமிய நடைமுறைகளான ஐந்துவேளை ஜெபம் செய்வது, தொழுகை செய்வது, அவர்கள் தொழுகைக்குப் போகும்போது அணியும் உடை மற்றும் கைகால் கழுவுதல் போன்றவற்றைச்செய்து இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முயற்சிப்பதோடு, இஸ்லாமிய மசூதியைப்போலத் தோற்றமளிக்கும் கிறிஸ்தவ ஆராதனைத் தளத்தை அமைத்து, இஸ்லாமிய ஆராதனையைப்போலத் தோற்றமளிக்கும் ஆராதனையையும் கிறிஸ்துவின் பெயரில் செய்துவருகிறார்கள். இதற்குப் பெயர் நிச்சயம் சூழிசைவுபடுத்தல் அல்ல; சமயசமரசப் பிணைப்பே.
பவுலும், பேதுருவும் இதுபற்றி விளக்கி எச்சரித்திருப்பதைக் கவனியுங்கள்.
2 கொரிந்தியர் 11:13-15
13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
1 தீமோத்தேயு 6:3-5
3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, 5 கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
2 பேதுரு 2:1-3
1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
இன்னும் எத்தனையோ வேதவசனங்களை சமயசமரசப் பிணைப்பிற்கும் அதுபோன்ற போலிப்போதனைகளுக்கும் எதிராக உதாரணங்காட்டலாம். இதில் இருக்கும் பேராபத்து என்ன தெரியுமா? சர்வவல்லவரான கர்த்தரின் சத்தியவேதத்தை அதனுடைய பரிசுத்தமானதும், தவறுகளற்றதும், எக்காலத்துக்கும் அவசியமானதுமானதும், போதுமானதும், அதிகாரமுள்ளதுமான தன்மையைப்பற்றிய எந்த ஞானமும் இல்லாமல், வெறும் மானுடனான சாதாரண தமிழக எழுத்தாளன் எழுதிய ஒரு கதைப்புத்தகத்தைப்போல் பயன்படுத்தி மனதில் தோன்றியவிதத்தில் அரட்டும் புரட்டுமான கருத்துக்களை அதில் திணித்து விளக்கங்கொடுப்பதுதான். கொஞ்சநஞ்சமாவது தேவபயமும், வேதபயமும் மனதில் இருக்கின்ற எந்தக் கிறிஸ்தவனும் வேதத்தைப் பயன்படுத்தி இத்தகைய புரட்டல் கதைகளை உலவவிட மாட்டான்.
ஆபத்தை விளைவிக்கும் எதிர்மறை சூழிசைவுபடுத்தல் (Dangerous negative contexualisation)
சூழிசைவுபடுத்தல் என்பது அதன் நேர்மறைப் பயன்பாட்டைவிட எதிர்மறைக் காரணங்களுக்காகவே அதிகம் பெயர்போயிருக்கிறது. முதலில் சூழிசைவுபடுத்தல் எப்படி இருக்கக்கூடாது, எதில்போய் முடியக்கூடாது என்பதைக் கவனிப்போம்.
(1) ஒரு நாட்டுப் பண்பாட்டு, மதம் மற்றும் நடைமுறை வழக்கங்களுக்குப் பொருந்திப்போகும்படி சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனைகள் எந்தவிதத்திலும் அதன் உள்ளடக்கத்திலோ, பிரசங்கத்திலோ மாற்றியமைக்கப்படக்கூடாது. அப்படி மாற்றியமைக்கும்போது அது மெய்யான சூழிசைவுபடுத்தல் அல்ல; அது சமயசமரசப் பிணைப்பாக (Syncretism) மாறிவிடுகிறது. இப்படியாக சூழிசைவுபடுத்தல் என்ற பெயரில் நடக்கும் சமயசமரசப் பிணைப்பை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இதேவகையில் ஒரு நாட்டு, இனத்துப் பண்பாடு, நடைமுறை வழக்கம் என்பவற்றை முதனிலைப்படுத்தி சுவிசேஷத்தையும் வேதபோதனைகளையும் எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல் அவ்வினத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்று ஆராதிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக மாற்றிப்பயன்படுத்துகிறபோது அது மெய்யான சூழிசைவுபடுத்தல் அல்ல, சமயசமரசப் பிணைப்பே. உதாரணத்திற்கு,
- இந்து மத வேதங்களில் இருந்து சுவிசஷத்தைப் பிரசங்கிக்க முயல்வது.
- ஓர் இனத்தில் இரத்தப்பலி கொடுப்பது கொடுமையாகக் கருதப்பட்டால் கிறிஸ்துவின் சிலுவைபலியை அடியோடு மாற்றி அந்த இனத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியவிதத்தில் அல்லது அதற்கு ஒத்துப்போகக்கூடியவிதத்தில் சிலுவைப்பலிக்கு விளக்கங்கொடுப்பது.
- கீழைத்தேய இனங்களில் பல தெய்வ வழிபாட்டுப் பண்பாடு இருப்பதால் திரித்துவப் போதனையை மாற்றி கிறிஸ்தவத்தில் மூன்று கடவுள்கள் வழிபாடிருப்பதாகப் போதிப்பது.
(2) இத்தகைய தவறான, ஆபத்தான அல்லது எதிர்மறையான சூழிசைவுபடுத்தல் பலவிதங்களில் நிகழ்ந்து வருகின்றது. முக்கியமாக வேதமொழிபெயர்ப்பு செய்கிறவர்கள் இதைச் செய்கிறார்கள். எபிரெய, கிரேக்க மொழிகளில் இருக்கும் சத்திய வேதத்தை மொழிபெயர்க்கும்போது எந்தவித அக்கறையும் இல்லாமல் இந்த 21ம் நூற்றாண்டு மக்களை மட்டுமே மனதில் கொண்டு வேத மொழிநடையையும், போதனைகளையும் கண்மூடித்தனமாக மாற்றியமைத்துள்ள ஓர் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பெயர் ‘மெசேஜ்’ (Message). இதை மொழிபெயர்ப்பு என்றே அழைக்கமுடியாது. கடவுளைத் தகப்பனாகவும், தாயாகவும் வர்ணிக்கும் மொழிபெயர்ப்புகள், எபிரெய, கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்தில் All men, Man என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களை ஆண், பெண் என்று மொழிபெயர்க்கும் gender-inclusive language மொழிபெயர்ப்புகள், அத்தோடு தன்னினச் சேர்க்கை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெருகிவரும் பண்பாடு பல சமுதாயங்களில் இன்று காணப்படுவதால் அதை வேதம் அனுமதிப்பதாகக் காட்டும்விதத்தில் மாற்றி அமைத்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. இவையனைத்தும் எதிர்மறை சூழிசைவுபடுத்தலுக்கு உதாரணங்கள்.
(3) இன்னுமொருவிதத்தில் எதிர்மறை சூழிசைவுபடுத்தலை நம்மினத்தில் நான் காண்கிறேன். வேதத்தின் தன்மைபற்றிய அடிப்படை ஞானமில்லாமல், அதன் போதனைகள் எப்போதும் நம்மினத்துப் பண்பாட்டிற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே அனுமானத்தோடு எதிர்மறை சூழிசைவுபடுத்துதலில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது, அவர்களைப் பொறுத்தவரையில் வேதவசனங்களின் பொருளைத் தீர்மானிப்பது அவர்களுடைய பண்பாட்டு நடைமுறை மட்டுமே. இவர்கள் வேதம் எப்போதும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுக்கேற்ப விளக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய வேதவிளக்கவிதியாக இருக்கிறது. இவர்களில் அநேகர் வேதஅறிவின்மையால் அதைச் செய்கிறார்கள்; வேறு பலர் சுவிசேஷம் மக்களை அடையவேண்டுமானால் சூழிசைவுபடுத்தியே தீரவேண்டும் என்ற தீவிரத்தில் அந்தத் தவறைச் செய்கிறார்கள். ஏனையோர் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் காணப்படும் லிபரல் பெயர் கிறிஸ்தவர்கள். இதற்குப் பல உதாரணங்களைத் தரமுடியும். இருந்தாலும் ஒன்றையாவது பார்ப்போம். கர்த்தர் வேதத்தில் ஆராதனையை அறிமுகப்படுத்தி அது எப்படி அமைய வேண்டும் என்று அதுபற்றிய அடிப்படைப் போதனைகளை விபரமாகத் தந்திருக்கிறார். இவையெல்லாம் பல பகுதிகளில் பழைய புதிய ஏற்பாடுகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்கள், அதற்குரிய சந்தர்ப்பங்கள் என்று பிரிக்கவேண்டும். இவற்றில் இரண்டாவதான ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்களில் ஒரு தேசத்துக்குரிய மாற்றங்களைச் செய்ய அனுமதியுண்டு. அதாவது, ஆராதனைக்காக கூடும் நேரம், கூடும் இடம், எத்தனை பாடல்கள் பாடுவது, நிலத்தில் அமர்வதா, இருக்கையில் இருப்பதா? போன்றவையே ஆராதனைக்குரிய சந்தர்ப்பங்கள். ஆனால், ஆராதனைக்குரிய அடிப்படை அம்சங்களில் நாம் ஒருபோதும் ஒரு தேசத்திற்கோ, இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ ஏற்றபடி மாற்றங்களைச் செய்துகொள்ள முடியாது. அவற்றை ஆண்டவரே வேதத்தில் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார். ஆராதனையின் அடிப்படை அம்சங்கள்: பிரசங்கம், ஜெபம், பாடல்கள், வேதவாசிப்பு ஆகியவையாகும். இவற்றில் ஒன்றையும் குறைக்கவோ, வேறு எதையும் இந்தப் பட்டியலில் திணிக்கவோ, இவற்றில் எதையாவது பண்பாட்டிற்குத் தகுந்தபடி மாற்றியமைக்கவோ நமக்கு அனுமதியில்லை. இருந்தபோதும் நம்மினத்தில் பெரும்பாலான சபைகள் இவற்றை வேதபூர்வமாக ஆராதனையில் அமையும்படிப் பார்த்துக்கொள்ளாமல் இனப்பண்பாட்டிற்கும், நடைமுறைகளுக்கும் தகுந்தபடி இவற்றை மாற்றியோ, வேறு விஷயங்களை ஆராதனையில் திணித்தோ ஆண்டவருக்கு முன் ஓய்வுநாள்தோறும் அந்நிய அக்கினியைப் படைக்கிறார்கள். ஆராதனையில் கைத்தட்டல் அதன் அடிப்படை அம்சமாக இருக்கவேண்டும் என்று வேதத்தில் எந்தப் பகுதியில் வாசிக்கிறோம்? ஆராதனையின்போது கைதட்டுவது ஆண்டவருக்கு எந்த மகிமையைத் தருகிறது? அதுமட்டுமல்லாமல் ஆராதனை வேளையில் அதன் பகுதியாக எல்லோரும் சேர்ந்து ஒரேநேரத்தில் குரலை அதிகம் உயர்த்தி ‘அல்லேலூயா, ஆண்டவர் பெரியவர், வல்லவர்’ என்று காரணமில்லாமல் ‘துதி’ என்ற பெயரில் சபை சபையாக நம்மினத்தில் செய்து வருகிறார்களே, இது எங்கிருந்து முளைத்தது? இதற்கும் ஆராதனைக்கும் என்ன சம்பந்தம்? நம் பண்பாட்டிற்கும், மனித இச்சைக்கும் இது பொருந்தி வருகிறது என்று அநேகர் இதற்குப் பதில் சொல்லுவதை நான் காதில் கேட்டிருக்கிறேன். உன்னைப் படைத்த, உனக்கு இலவசமாக இரட்சிப்பை அளித்த சர்வவல்லவரான ஆண்டவர் கேட்பதை மட்டும் அவருக்குக் கொடுப்பதைவிட இந்த உலகத்தில் நிலைத்திராத, குறைபாடுகள் கொண்ட பண்பாடு உனக்கு அத்தனை முக்கியமாகப் போய்விட்டதா?
சூழிசைவுபடுத்தலும் வேதவிளக்க விதிமுறையும்
வேறொரு காலத்துப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்திருக்கும் மீட்பின் வரலாறான வேதத்தை இன்னுமொரு காலத்து சமூகப் பண்பாட்டில் வாழும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும்போது சூழிசைவுபடுத்தல் அவசியமாகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது சூழிசைவுபடுத்தலை வேதவிளக்கவிதியாகப் பயன்படுத்தும்போது ஏற்படும் ஆபத்துக்களை விளக்க விரும்புகிறேன். முதலில் இதுபற்றி பிரைன் எட்வர்ட்ஸ் (Brain Edwards) எனும் நூலாசிரியர் தன் நூலில் (Nothing but the truth) விளக்கியிருப்பதைக் கவனியுங்கள்.
‘ஒரு பண்பாட்டில் வளர்ந்திருக்கும் வேதவசனங்களை இன்னொரு காலப்பண்பாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதத்தை விளக்குகிறவன் நேர்மையோடும், உண்மையோடும் செய்யவேண்டிய கடுமையான வேலையைத் தவிர்த்துவிடுகிற ஆபத்து இதில் (சூழிசைவுபடுத்தல்) இருக்கிறது. அத்தோடு, வேதத்தை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் ஒருவர் வாழ்கின்ற காலப்பண்பாடு வேதவசனங்கள் மேல் அதிகாரம் செலுத்துகிற நிலைமையையும் உருவாக்கிவிடுகிறது. இத்தகைய சூழிசைவுபடுத்தலே, செழிப்பான (வசதியுள்ள) வாழ்க்கையை நாடி அலையும் இச்சைகொண்டிருக்கும் (மேலைத்தேச) சமுதாயப்பண்பாடு அதை நியாயப்படுத்தி வேதவசனங்களுக்கு தனக்கேற்றமுறையில் விளக்கங்கொடுத்து ‘செழிப்புபதேசப் போதனையை’ (prosperity gospel) உருவாக்கிவிட்டிருக்கின்றது. இதேபோல மோசமான நீதியற்ற அடக்குமுறையையும், சமுதாயத்தின் சகல தளங்களையும் பாதித்திருக்கும் ஊழலையும் கொண்டிருக்கும் சமுதாயப்பண்பாடு வேதத்தின் மீது அதிகாரம் செலுத்தி தீவிரவாதத்திற்கும், அரச அடக்குமுறைக்கும் எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் ‘விடுதலை இறையியலை’ (theology of liberation) உருவாக்கிவிட்டிருக்கின்றது. இதேபோல் உருவானதுதான் கருப்பு இறையியலும் (Black theology). நம்கால சமுதாயப்பண்பாட்டிற்கு இணங்கிப்போகிறபடி வேதத்திற்கு விளக்கங்கொடுக்கின்ற பேராபத்து சூழிசைவுபடுத்தலைத் தவறான முறையில் பயன்படுத்தும்போது உருவாகின்றது.’
கர்த்தர் சர்வவல்லவராக இருந்து அந்தந்தக் காலத்து உலக வரலாற்று, பண்பாட்டுச் சந்தர்ப்பங்களில் தான் நிகழ்த்திய மீட்பின் வரலாற்றை வார்த்தைகளாக நமக்குத் தந்திருக்கிறார். அந்த வார்த்தைகளின் மூலப்பொருளை அதை நமக்குக் கொண்டுவந்திருக்கும் வரலாறு மற்றும் மொழிஇலக்கணத்தின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது வேத விளக்கவிதிகளில் ஒன்று. ஆனால், அவற்றின் மூலம் ஆவியானவர் நமக்குத் தரும் போதனை எக்காலத்துக்கும் உரியது. அப்போதனை காலங்களைத் தாண்டியது. அது ஒரு நாட்டு வரலாற்று, நடைமுறைப்பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றி விளக்கப்படக்கூடாது. உதாரணத்திற்கு, கர்த்தர் திருமணத்தை ஆதியில் (ஆதியாகமம்) ஏற்படுத்தினார். அது ஏற்படுத்தப்பட்டது ஆதாம், ஏவாளை அவர் படைத்தகாலத்தில். அதற்குப்பிறகு வந்திருக்கும் வரலாற்று மாற்றங்கள், நடைமுறை சமுதாயப்பண்பாட்டு மாற்றங்களுக்கு இசைந்துபோகும்விதத்தில் திருமணத்திற்கு நாம் புது விளக்கங்கொடுக்க முடியுமா? கூடாது.
ஆண்டவர் ஆதியில் மனித சமுதாயத்தில் ஆணையும் பெண்ணையும் மட்டுமே படைத்தார். இன்று உலக சமுதாயங்கள் போட்டி போட்டுக்கொண்டு மூன்றாம் பால் என்று ஒன்றை உண்டாக்கி, பிறக்கின்ற எவரும் தங்கள் விருபத்திற்கேற்ப தங்களை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்றும், தன்னினச் சேர்க்கையும், தன்னினத் திருமணமும் செய்துகொள்வதில் தப்பில்லை என்றும் கூறி சமுதாயத்தில் இந்த மோசமான, இழிவான நடத்தைகளைத் திணிக்கப் பார்க்கின்றபோது வேதம் போதிக்கும் ஆண், பெண் வேறுபாட்டிற்கும், திருமணத்திற்கும் நாம் காலத்திற்கும் பண்பாட்டு மாற்றங்களுக்குமேற்றபடி சூழிசைவுபடுத்தி விளக்கங்கொடுக்க முடியுமா? முடியவே முடியாது. அப்படிக் கொடுப்பது வேத விளக்கவிதியாக, தவறாக சூழிசைவுபடுத்தலைப் பயன்படுத்துவதோடு, வேதத்தை நாம் நினைத்தபடி மாற்றி அமைத்துக்கொள்ளும் பாவச்செயலுமாகும்.
கர்த்தர் வேதத்தின் மூலம் தரும் கட்டளைகளையும், போதனைகளையும் அவை தரப்பட்ட கால வரலாற்று, மொழிஇலக்கண அடிப்படையில் ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றபோதும், அந்தப்போதனைகளை நம்காலத்து பண்பாட்டு நடைமுறைக்கேற்ப மாற்றிக்கொள்ளுவது வேதவிளக்கவிதிகளுக்கு முரணான செய்கை. உதாரணத்திற்கு, 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும், திருச்சபையில் போதகர்களை நியமிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் நமக்குப் போதிக்கிறார். போதகர்கள் அல்லது மூப்பர்கள் என்ற பெயர்கள் நம் காலத்துக்குப் பொருந்தாது என்று நாமே தீர்மானித்து, அவை சூழிசைவுபடுத்தப்பட வேண்டும் என்று, நம் காலத்தில் ‘தலைவர்’ (President) என்ற பெயரே பொதுவில் இருக்கிறது என்பதற்காக நாம் சபைப்போதகர்களை பிரசிடென்ட் என்று அழைக்க முடியுமா? முடியாது, அப்படிச் செய்வது வேதத்தை சிதைத்து அதை மீறுகிற செயல். கர்த்தரின் சித்தம் இதுதான் என்று தீர்மானிப்பது நம்காலத்து வழக்கமோ, பண்பாடோ அல்ல. அதை வேதமே தீர்மானிக்கிறது. இதேபோலத்தான் உதவிக்காரர்கள் என்ற திருச்சபைப் பணிக்கும், நம்காலத்துக்குரிய வேறுபெயரைப் பயன்படுத்தும் அதிகாரம் நமக்கில்லை. இவற்றில் இருந்து வேதவிளக்க விதிமுறையாக சூழிசைவுபடுத்தும் பெருந்தவறைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.
புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளில் (1 கொரிந்தியர் 7:20-24; எபேசியர் 6:5-8; 1 தீமோத்தேயு 6:1:2; 1 பேதுரு 2:18-21) அன்று அடிமைகளாக (slaves) இருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய நிலையிலேயே இருக்கவேண்டும் என்றும், தங்களுக்கு மேலாளர்களாக இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் தமிழ் வேதத்தில் ‘அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர்’ (1 கொரிந்தியர் 7:20-24) என்றும், வேலைக்காரர் (எபேசியர் 6:5; 1 பேதுரு 2:18) என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சரியல்ல. இந்த இடங்களில் மொழிபெயர்ப்பாளன் (Translator) தன் கடைமையைச் செய்யாமல் வேதத்திற்கு விளக்கங் கொடுக்கிறவனாகிவிடுகிறான் (Interpreter). வேதமொழிபெயர்ப்பாளனின் பணி உள்ளதை உள்ளபடி எபிரெய, கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பது மட்டுமே; வியாக்கியானம் செய்வதல்ல. இந்த இடங்களில் மொழிபெயர்ப்பாளன் உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்காமல் அந்த வார்த்தைக்கு அவனுடைய காலத்து சமூகபண்பாட்டின் அடிப்படையில் ஆபத்தான சூழிசைவுபடுத்தலைச் செய்து விளக்கியிருக்கிறான். அதாவது, அவன் வாழ்ந்த காலத்து சமூகப் பண்பாடு இந்த இடத்தில் வேதத்தை ஆள்கிறதாக இருக்கிறது. இதே தவறை சில ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் காண்கிறோம்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் முதல் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்த அடிமைகளைப்பற்றி விளக்குகிறதே தவிர தற்காலத்தில் இருக்கும் ‘வேலைக்காரர்களைப்’ (servants) பற்றியல்ல. தற்காலத்தில் சமூகப்பண்பாட்டில் அடிமைத்தனம் அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவும், இன்று நம் மத்தியில் வேலைக்காரர்களைத்தான் காண்கிறோம் என்பதற்காகவும் வேதத்தை மாற்றி எழுதவோ அதற்கு மறுவிளக்கம் கொடுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அப்படிச் செய்வதே ஆபத்தான சூழிசைவுபடுத்தல். அப்படியானால் இந்தப் பகுதிகளை 21ம் நூற்றாண்டு சமூகப் பண்பாட்டில் எப்படி விளங்கிக்கொள்ளுவது? அந்தக் காலத்தில் அடிமைகள் எப்படித் தங்களுக்கு மேலாளர்களாக இருந்தவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படிந்து நடந்துகொண்டார்களோ அதேவிதமாக நாமும் (அதிகார அமைப்புக்குக் கீழிருக்கும் அனைவரும்) இன்று அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால்தான் இந்தப் பகுதிகள் இயேசு கிறிஸ்துவை நமக்கு இந்த விஷயத்தில் உதாரணம் காட்டுகின்றன. ஏனெனில், இறையாண்மைகொண்ட இயேசு தேவனும் மனிதனுமாக இந்த உலகத்தில் இருந்தபோதும் அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்காமல் அவற்றிற்கு கீழ்ப்படிந்து நடந்தே தனக்குப் பிதா அளித்திருந்த பொறுப்பைப் பூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஆபத்தான சூழிசைவுபடுத்தலில் ஈடுபடுகின்ற அதிகப்பிரசங்கிகள் அதிகாரங்களை எதிர்ப்பது இன்றைய சமூகப்பண்பாடாயிருப்பதாலும் (பின்நவீனத்துவம¢), தீய அதிகாரங்களை எதிர்ப்பதில் தப்பில்லை (Liberation theology) என்ற உலகக் கண்ணோட்டத்தாலும் இந்தப் பகுதிகளில் தங்கள் சொந்தக் கருத்தைத் திணித்து விளக்கங்கொடுக்கப் பார்க்கிறார்கள். அது வேதநிந்தனை செய்யும் விளக்கமாகும்.
1 கொரிந்தியர் 11:2-16 வரையுள்ள வசனங்களில் முதல் நூற்றாண்டு சமூகப் பண்பாட்டில் மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும், பெண் ஆணுக்கு முன் அமைதலோடு நடந்துகொள்வதையும் வெளிப்படுத்த தலையை மறைத்துக்கொள்ளும் வழக்கமிருந்ததை பவுல் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் அதற்கு வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை “cover”. ஆங்கில வேதநூல்களில் அப்படியே இருக்கிறது. ஆனால், அது எத்தகையது என்பதை பவுல் நமக்கு விளக்கவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பில் முக்காடு (மறைத்தல், மூடுதல் என்றிருந்திருக்க வேண்டும்) என்றிருக்கிறது. அது என்ன என்பதை அறிந்துகொள்ள அன்றைய பண்பாட்டை ஆராயவேண்டியிருக்கிறது. அதைத் தவிர்க்கமுடியாது. இருந்தபோதும், அந்தத் தலையை மூடுதல் அல்லது மறைத்தல் ஓர் அடையாளமாகவே இருந்திருக்கிறது. அந்த அடையாளம் தலையை மறைக்கும் துணியாக இருந்திருக்கலாம் அல்லது தலையை இயற்கையாக மறைக்கும் தலைமயிராகவும் இருந்திருக்கலாம். அந்த அடையாளத்துக்குக் காரணம் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியவேண்டும் என்ற வேதபோதனையே. ஏனெனில், இந்த வேதப்பகுதி ஆணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைமை ஸ்தானத்தைப்பற்றியே விளக்குகிறது. அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவதன் அடையாளமே அந்த மறைத்தல். இதை இன்றைய சமூகப்பண்பாட்டில் எப்படி நடைமுறையில் பின்பற்றுவது என்று சிந்திக்கும்போது நாம் உடனடியாக இன்று எந்தவிதமாக தலையைப் பெண்கள் மறைத்துக்கொள்கிறார்கள் என்று சுற்றிவரப்பார்த்து முக்காட்டைப் போட்டுக்கொள்ளுவது தவறான சூழிசைப்படுத்துதலுக்கு உதாரணம். இந்தப் பகுதி முக்காடு போடுவதை முக்கியப்படுத்தவில்லை; அதிகாரத்துக்கு அடங்கி நடப்பதையே விளக்குகிறது. இன்றைய சமூகப் பண்பாட்டில் எந்தப் பெண்ணும் கணவனின் தலைமைத்துவத்துக்கு பணிந்து நடப்பதை அடையாளமாகக் காட்ட முக்காடு போடுவதில்லை. உண்மையில் இந்தப் பகுதிக்கும் முக்காட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்படி நான் சொல்வதுகூட சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக உண்மையை மறைக்க முடியாது. மாட்டைவிட்டுவிட்டு அதன் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் கதைதான் பெண்கள் சபைக்கு வரும்போது முக்காடு போடுவது. இது தவறான சூழிசைவுபடுத்தலுக்கு இன்னொரு உதாரணம்.
வேதத்தின் சில இடங்களில் ஒருவிஷயத்தை நேரடியாக விளக்காமல் மறைவாக வித்தியாசமான மொழிநடையில் விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். உதாரணத்திற்கு 1 தீமோத்தேயு 2:8ல், ‘பரிசுத்தமான கைகளை உயர்த்தி’ என்ற பதங்களைக் காண்கிறோம். இது திருச்சபையில் ஜெபிக்கும்போது செய்யவேண்டியதாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பரிசுத்தமான கைகள் என்ற வார்த்தைப்பிரயோகம் எழுத்துபூர்வமாக (literal) எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஏனெனில் பரிசுத்தமான கைகளைக் கொண்டவர்கள் எவரும் இல்லாதது மட்டுமல்ல, அந்தமுறையில் மனிதனுடைய கரங்கள் வேதத்தில் ஏனைய பகுதிகளில் விளக்கப்படவில்லை. ஆகவே, இந்த வார்த்தைப்பிரயோகம் எதைக்குறிக்கிறது என்பதை அது காணப்படும் ஜெபம் குறித்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது நம்முடைய பரிசுத்தமான இருதயத்தின் அவசியத்தையும், பரிசுத்தமான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டியதையும், பரிசுத்தத்தை நினைவூட்டும் வகையில் நம்முடைய அங்க அசைவுகளும், செயல்களும் ஜெபத்தின்போது இருக்கவேண்டியதை விளக்குவதற்காக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருச்சபை ஜெபத்தில் ஈடுபடுகிற திருச்சபைத் தலைவர்கள் பரிசுத்தமான மனிதர்களாக இருக்கவேண்டும் என்பதையும் குறிப்பதாக இருக்கிறது. இந்த இடத்தில் நாம் இந்தப்பகுதியை சூழிசைவுபடுத்தவில்லை. அதற்குரிய நியாயமான விளக்கத்தையே அறிந்துகொள்ளுகிறோம்.
மேலே விளக்கியதுபோலவே புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் (ரோமர் 16:16; 1 கொரிந்தியர் 16:20; 2 கொரிந்தியர் 13:12; 1 தெசலோனிக்கேயர் 5:26) ‘பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதையும் நாம் ஒருபோதும் எழுத்துபூர்வமாக எடுத்து விளக்கக்கூடாது. ஏனெனில், முதலில் அப்படியொரு முத்தத்தைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை. வேதமும் அப்படிப்பட்டதொரு முத்தம் இருப்பதாக வேறெந்தப்பகுதிகளிலும் விளக்கவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்ளுவது? இந்த இடத்தில் சூழிசைவுபடுத்தலைச் செய்து நம் பண்பாட்டிற்கு ஏற்ற ஒன்றை அறிமுகப்படுத்துவது முறையான வேதவிளக்க விதியாகாது. அப்படிச் செய்வது தவறு. இந்த முத்தம் நிச்சயமாக இது உலக சுகத்துக்குரிய முத்தத்திலிருந்து வேறுபட்டது. அத்தோடு அது புதிய ஏற்பாட்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுவதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. நவீனகால சமுதாயத்தில் வாழ்த்துத் தெரிவிக்கும்போது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறோம் அல்லது கைகுலுக்குகிறோம். அதற்கு இணையானது இந்த வாழ்த்துத்தெரிவிக்கும் முறை. அத்தோடு இது கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கவேண்டிய அந்நியோன்யமான உறவின் அடையாளமான பாசத்துக்குரிய வாழ்த்துதலையும் குறிக்கும். இந்தவகையில் சில விஷயங்கள் வேதத்தில் நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் அவை எதைக் குறிக்கின்றன என்பதைக் கவனத்தோடு ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவற்றிற்கும்கூட வேதமே ஏனைய பகுதிகளில் காணப்படும் விளக்கங்களின் மூலம் அவை எதைக்குறிக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ளத் துணை செய்கின்றது. இந்தப் பகுதிகளை விளங்கிக்கொள்ளாமல் தவறாக சூழிசைவுபடுத்துகிறோம் என்று கன்னாபின்னாவென்று எதையாவது அறிமுகப்படுத்துவது வேதத்தை சிதைக்கும் காரியத்தில்போய் முடியும்.
வேதபூர்வமான சூழிசைவுபடுத்தல்
பழங்காலத்து சமூகப்பண்பாட்டில் வளர்ந்திருக்கும் கர்த்தரின் மீட்பின் வெளிப்படுத்தலை அந்தக் காலத்துக்கு முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும் இன்னொரு காலத்துக்குக் கர்த்தர் தந்திருப்பது மட்டுமல்லாமல், இந்த இரு காலங்களுக்கும் வித்தியாசமான காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளனோ அல்லது பிரசங்கியோ அதை எப்படி விளங்கிக்கொள்ளுவது? இங்கே மூன்றுவித கலாச்சாரப் பண்பாடுகள் இருப்பதைக் கவனிக்கிறோம். இந்தக் கலாச்சாரப் பின்னணியில் தரப்பட்டிருக்கும் வேதவசனங்களை உண்மையாக தவறற்ற முறையில் விளங்கிக்கொள்ள வேண்டிய பெரும் கடமை நம்முன் நிற்கிறது.
வேதத்தில் எந்தப் பகுதியிலும் சூழிசைவுபடுத்தல் என்ற பதத்தைக் காணமுடியாது; இது 20ம் நூற்றாண்டில் வழக்குக்கு வந்த சொற்பிரயோகம் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதற்குரிய ஆங்கில வார்த்தையான contexualisation, இலத்தீன் வார்த்தையான contextus என்ற மூல வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு எழுத்துபூர்வமான அர்த்தம் ‘இரண்டைச் சேர்த்து நெய்வது’ என்பதாகும். கிறிஸ்தவத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறபோது சாதாரணமாக அவிசுவாச உலகில் இதற்கு இருக்கும் அர்த்தத்தோடு பயன்படுத்தக்கூடாது. அத்தகைய கருத்து வேதத்தோடு பொருந்திவராது. இரண்டைச் சேர்த்து இணைப்பது என்பது சமயசமரசப் பிணைப்பாகிவிடும் (syncretism). கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இந்தப் பதம், சுவிசேஷத்தைப் புறஜாதி இனங்கள் மத்தியில் அறிவிக்கும்வேளையில் அந்த இனத்துப் பண்பாட்டு, நடைமுறைகளை மனதில் வைத்து வேதவசனங்களையும், போதனைகளையும் அந்த இனத்தாருக்குப் புரிகின்றவகையில் விளக்கவேண்டும் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த அர்த்தத்திற்கு மேல்போய் இதற்கு விளக்கங்கொடுப்பது பேராபத்தில் முடியும். இதற்கு ஓர் உதாரணத்தைத் தரலாமென்று நினைக்கிறேன்.
புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் பெண்கள் கணவன்மாருக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிக்கிறது. அதேவேளை பொது இடங்களிலும் ஆண்களை மதித்தே நடக்கவேண்டும் என்ற போதனை இருக்கிறது. இது முதல் நூற்றாண்டும் காலத்து சமூகப்பண்பாட்டின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. இதேபோதனை ஆதியாகமத்தில் இருந்து பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் அந்தந்த காலத்து சமூகப்பண்பாட்டிலும் விளக்கப்பட்டிருக்கிறது. நம்காலத்து சமூகப்பண்பாடு முன்னே குறிப்பிட்ட சமூகப்பண்பாட்டைவிட வேறுபட்டது. இங்கே மூன்று சமூகப்பண்பாடுகளைக் காண்கிறோம். சமூகப்பண்பாடுகள் மூன்றிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன, அவை அடிக்கடி மாறியிருக்கின்றன; ஆனால் போதனை ஒன்றுதான். மூன்றாவதான நம்காலத்து சமூகப்பண்பாட்டில் இதேபோதனையை (பெண்கள் ஆண்களை மதித்து நடக்கவேண்டும் என்பதை) விளக்கும்போது வேதப்பிரசங்கி நம்காலத்து சமூகப்பண்பாட்டில் ஆண்கள், பெண்கள் உறவுமுறையில் காணப்படும் அம்சங்களை கவனத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது, இன்று பெண்ணீயம், ஆணுக்கு சமமான உரிமையைப் பெண்கள் கோருதல், ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்தல், ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்தபின் ஒருவர் தன்மையை மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை, மூன்றாம் பால் என்பது பிறப்பிலேயே உண்டாகும் ஒன்று, அதிகாரங்களுக்கு அடங்கக்கூடாது என்ற egalitarian (எல்லோரும் சமம்) மனப்பான்மை என்பதுபோன்ற புதிய அம்சங்களெல்லாம் நாம் வாழும் சமுதாயத்துப் பண்பாட்டு நம்பிக்கையாக இருக்கிறது. அத்தோடு நம்முன்னால் சபையிலோ கூட்டங்களிலோ அமர்ந்து செய்திகேட்கும் அவிசுவாச மக்களிலும், இளைஞர்களிலும்கூட இதெல்லாம் ஆழமான நம்பிக்கையாகப் பதிந்திருக்கலாம் என்ற அறிவார்ந்த உணர்வோடு அத்தகைய சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்கு மத்தியில் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடக்கவேண்டும், பெண்கள் ஆண்களை மதித்து நடக்கவேண்டும் என்ற கர்த்தரின் மாற்றமுடியாத எக்காலத்துக்கும் உரிய போதனையை, ஏன் அந்தப்போதனை இன்றைய சமூகத்துப் போக்குக்கு வளைந்து போகக்கூடாது, தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை உதாரணங்களோடு விளக்கி அதன் பயன்பாட்டையும் பிரசங்கிக்க வேண்டும்.
இந்த 21ம் நூற்றாண்டு இனப்பண்பாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட அதிகம் மாற்றமடைந்திருக்கிறது. இந்நூற்றாண்டு மக்களின் சிந்தனைகள் மட்டுமல்லாது நடைமுறைகளும் மாற்றமடைந்திருக்கின்றன. அக்காலங்களில் மக்கள் பேசக்கூச்சப்பட்டிருக்கின்ற மொழிநடை, எழுத்தில்வடிப்பதற்கு அனுமதியில்லாமலிருந்த சிந்தனைப்போக்கு மற்றும் நடைமுறைகள் மட்டுமல்லாது புதிய அம்சங்களும் இந்நூற்றாண்டு சமுதாயத்தில் புகுந்திருக்கின்றன. அன்றில்லாமலிருந்த தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள், செய்திப்பறிமாற்றக் கருவிகள், மொழிநடை என்று புதிதாக உருவாகியுள்ள மாற்றங்களுக்கும் அளவில்லை. இவைமட்டுமல்லாமல் சமூகப் பண்பாட்டிலும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. பின்நவீனத்துவ சமுதாயமாக தற்கால சமுதாயம் இருந்துவருகிறது. இத்தகைய மாற்றங்களைத் தன்னுள்கொண்டு வாழ்கின்ற இன்றைய சமுதாயத்தில், யூத-கிரேக்க வரலாற்று சமுதாயப்பின்னணியில் வளர்ந்த சுவிசேஷத்தையும், வேதபோதனைகளையும் விளக்குகின்றபோது அவற்றில் எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்யாமல், இன்றைய சமுதாயம் அவற்றைப் புரிந்துகொள்ளும்படியாக இன்றைய சமுதாய சூழ்நிலையில், அதன் மொழியில், அதன் பாணியில் விளக்கவேண்டிய அவசியத்தையே கிறிஸ்தவத்தில் சூழிசைவுபடுத்தல் என்ற பதத்தின் மூலம் குறிப்பிடுகிறோம். உதாரணத்திற்கு, தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் நான் சுவிசேஷ செய்தியளித்திருக்கிறேன். அவற்றில் சில கிராமங்களில் வாழும் மக்களுக்கு நகரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் பொதுஅறிவுகூட கிடையாது. நகரத்தையே பார்க்காதவர்களும் அங்கிருந்தார்கள். இவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கின்றபோது, எந்தப் பகுதியைப் பயன்படுத்தி அதைச் செய்கிறேனோ அந்தப் பகுதியின் அடிப்படை அம்சங்கள், போதனைகள் எதையும் நான் மாற்றியமைக்காமல், அந்த மக்களுக்குப் புரியக்கூடிய, அவர்களுக்குப் பரிச்சயமான மொழிநடையில், அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அன்றாட கிராமத்து உதாரணங்களைப் பயன்படுத்தியே எப்போதும் பிரசங்கித்திருக்கிறேன். சுவிசேஷம் அவர்களைப் போய் அடையவேண்டுமானால் எனக்கு அவர்களைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இருந்தது. அவர்களுடைய எண்ணப்போக்குகள், அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய குடும்ப, சமூக வாழ்க்கை, அவர்கள் பயன்படுத்தும் அன்றாட மொழிநடை அனைத்திலும் எனக்குப் பரிச்சயம் இருக்கவேண்டியிருந்தது. வேத சுவிசேஷத்தை (அதன் வரலாறு, சமூகப்பின்னணி, இறையியல் எதையும் மாற்றாமல்), இக்காலத்து சமுதாயத்துக்கு இன்றியமையாத போதனை என்பதை அவர்களுக்குப் புரியும்படி அவர்கள் பாஷையில் இருதயத்தைத் தொடுகின்றவிதத்தில் சொல்வதையே சூழிசைவுபடுத்தல் என்று அடிப்படையில் கிறிஸ்தவத்தில் விளக்குகிறோம். இதற்கு அப்பால் போவது வேதபூர்வமான சூழிசைவுபடுத்தல் அல்ல.
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்குப் பலியாகியிருக்கும் தற்கால கிறிஸ்தவர்களில் ஒருபகுதியினர் நம்காலத்துப் பண்பாட்டுக் கண்ணாடியை அணிந்து, அந்தப்பண்பாட்டிற்கு வக்காலத்து வாங்கி, அதை நியாயப்படுத்தி அந்தப் பண்பாட்டிற்கு ஏற்றமுறையில் அதற்கு இணங்கிப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் மேலைத்தேய இசையில் ராப், ஹிப்ஹொப், ஹெவி மெட்டல் போன்றவை அறிமுகமாகியிருக்கின்றன. இவற்றை நியாயப்படுத்தி இசையில் நல்லது கெட்டது இல்லை என்ற அனுமானத்தில் திருச்சபை ஆராதனையில் இத்தகைய இசையைப் பயன்படுத்தி வருவதை சபைசபையாகக் காணுகிறோம். இன்று பெண்ணீயம், பெண்களுக்கு சமஉரிமை மற்றும் ‘மீ-டூ’ இயக்கம் (பெண்கள் தாங்கள் எவ்வாறு ஆண்களால் அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் அறிவிப்பது) போன்றவை சமூகத்தில் வழமையாக இருப்பதால் சமூகப்பண்பாட்டிற்கு ஏற்ப வேதவிளக்கமளித்து பெண்களுக்குச் சம இடத்தைக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பெண்களைச் சபைகளில் பிரசங்கம் செய்யவிடுவதும், வேதத்தை வாசிக்க வைப்பதும், ஏன் போதகர்களாக நியமிப்பதும் மோசமான சூழிசைவுபடுத்தலின் விளைவு. இதற்கு மாறாக வல்லமையான கர்த்தரின் வேதவசனங்களை அவர் தந்திருக்கும் அடிப்படைப் போதனைகளில் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நம்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளுகிறவகையில் விளக்கவேண்டியதே நம்கடமை. வேதபோதனைகளின்படி பண்பாட்டுச் சீரழிவுகளைத் திருத்தியமைத்து வாழமறுத்து, ‘இதெல்லாம் நம்ம ஊருக்கு சரிப்பட்டு வராது’ என்கிற உதாசீனப்போக்கு இயேசுவை நேசிக்கும் கிறிஸ்தவனுக்கு இருக்கக்கூடாது. எந்தக் காலமாக இருந்தாலும், எத்தகைய மாற்றங்கள் பண்பாட்டில் ஏற்பட்டாலும் நம்மை ஆளுவது வேதமாகத்தான் இருக்கவேண்டும். வேதபோதனைகள் காலத்தைக் கடந்தவை. அவற்றைப் பண்பாடு ஆளவிடக்கூடாது.
ஆள்பிடிக்கும் கிறிஸ்தவமா? ஆவிக்குரிய மறுபிறப்பா?
கிறிஸ்தவத்தைப்பற்றிய சரியான விளக்கத்தைக்கொண்டிராத அநேகரை நான் கிறிஸ்தவ சமுதாயத்தில் அடிக்கடி காண்கிறேன். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக மனதில் மட்டும் கொண்டிருந்து ஆலயத்துக்கு ஆராதனைக்குப் போய்வருவதல்ல கிறிஸ்தவம். கிறிஸ்துவை நேசிக்கிற அதேநேரத்தில், மனந்திரும்புவதற்கு முன்பிருந்த சமுதாயப் பண்புகளுக்கு வக்காலத்துவாங்கி, கிறிஸ்தவம் அவற்றில் பலவற்றை நிராகரிக்கின்றதென்ற அறிவோ உணர்வோ இல்லாமல் அவற்றை வாழ்க்கையில் தொடர்வதற்குப் பெயரல்ல கிறிஸ்தவம். கிறிஸ்துதான் ஆண்டவர் என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்தவ வேதம் போதிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டிராமல் நொன்டிச்சாக்குச் சொல்லிப் பெயரளவில் வாழ்வதல்ல கிறிஸ்தவம். மொத்தத்தில் சொல்லப்போனால் கிறிஸ்தவம் வெறும் சடங்கல்ல.
கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தை வெறும் சடங்காக மட்டுமே பார்க்கிறது. சீ. எஸ். ஐ கிறிஸ்தவத்திலும் அதேநிலைதான். கிறிஸ்தவத்தை வெறும் சடங்காக மட்டும் கொண்டு வாழ்கிறபோது அது நிச்சயம் உலகத்தைக் குழம்பிப்போகச் செய்யும். ஏனென்றால், கிறிஸ்தவத்தின் மெய்த்தன்மையை அதனால் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஒரு தடவை கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னைக் கிறிஸ்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். உங்கள் மதம் என்ன என்று அவர் என்னைப் பார்த்துக்கேட்டபோது, நான் கிறிஸ்தவன் என்று சொன்னேன். அவர் அதற்குப் பதிலாக, நாமிருவருமே கிறிஸ்தவர்கள் என்று பதிலளித்தார். உடனே அவரைத் திருத்தி, நான் கத்தோலிக்கன் அல்ல, கிறிஸ்தவன் என்று பதிலளித்தேன். அத்தோடு அவருக்குப் புரியும்படியாக ஒருசில வார்த்தைகளில் கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைகளை விளக்கினேன். அவருக்கு அது புரியவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. கத்தோலிக்க மதம் எந்தளவுக்கு உலகத்தைக் குழப்பிவைத்திருக்கிறது என்பது தெரிகிறதா?
உலகத்தால் கிறிஸ்தவத்தை மாம்சத்தில் புரிந்துகொள்ள முடியாது. அதைப்பொறுத்தளவில் கிறிஸ்துவின் பெயரை ஏதோவொருவிதத்தில் சூட்டிக்கொண்டிருப்பவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள். அதற்கு கத்தோலிக்கர்கள், வேதத்தை நிராகரித்து மாம்சத்தின் வழியில் போய்க்கொண்டிருக்கும் லிபரல் திருச்சபைகள், சுவிசேஷ கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் பிரித்து அடையாளங்கண்டுகொள்ளத் தெரியாது. அதனால்தான் ஸ்ரீலங்காவில் கத்தோலிக்க ஆலயங்கள் நீர்கொழும்பு என்ற பகுதியில் தாக்கப்பட்டபோது கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று அது எண்ணுவதற்குக் காரணம். அது நடந்தபின் நீர்கொழும்பில் அங்கிருந்த சிங்களவர்கள் முஸ்லீம்களைத் தாக்கியபோது அதைக் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களைத் தாக்குவதாக முடிவு கட்டியது. மாம்சத்தில் இருக்கும் உலகத்துக்கு மெய்கிறிஸ்தவத்தை மாம்சத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை.
கிறிஸ்தவம் அடிப்படையில் நம் வாழ்க்கையில் பெருமாற்றத்தை, அதிரடியான மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதற்கு மறுபிறப்பு என்ற பெயரிருப்பதற்குக் காரணமே அவ்வாழ்க்கை மறுபடியும் பிறக்கின்ற அடிப்படை மாற்றத்தைத் தன்னில் கொண்டிருப்பதனால்தான். அந்த அடிப்படை மாற்றம் பழையவை அனைத்தையும் அடியோடு களைந்தெறிந்து முற்றிலும் புதிய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒருவனில் உண்டாக்குகின்றது.
2 கொரிந்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
ஒருவனுடைய பழைய இருதயம் முழுமுற்றாக அடியோடு ஆவிக்குரியவிதத்தில் மாற்றியமைக்கப்படுகிறது. அத்தகைய மாற்றத்தைச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர்; அவரால் மட்டுமே முடிந்த, அவர் மட்டுமே செய்கின்ற செயல் அது. அதனால்தான் நாம் ஒருவன் தன்னைக் கிறிஸ்தவனாக மாற்றிக்கொள்ளவோ, வேறு எவரும் இன்னொருவரைக் கிறிஸ்தவராக மாற்றவோ முடியாதென்கிறோம்.
யோவான் 1:13
அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 3:5-6
5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
அடிப்படையிலேயே புதிய மாற்றத்தை ஒருவனில் ஆவியானவர் கொண்டுவருவதால் அவன் அறிவோடும் உணர்வோடும் பழைய வாழ்க்கைக்குரிய அத்தனையையும் தன்னில் அன்றாடம் களைந்துபோடுகிறான். அவன் பாவத்தைத் தொடர்ந்து வாழ்க்கையில் செய்கிறவனாக இல்லாமலிருப்பதோடு, பழைய பஞ்சாங்கமான களைந்தெறிந்திருக்கும் புறமத சமுதாயப்பண்பாடுகளைத் தொடர்ந்து தன் வாழ்க்கையில் கொண்டிருக்கவும் இடங்கொடுக்கமாட்டான். அவனுடைய இருதயம் ஆண்டவருக்கு சொந்தமானதாக, ஆண்டவருடைய சித்தத்தை மட்டுமே எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றிற்கு முகங்கொடுத்து தன் வாழ்வில் நிறைவேற்றுகிறவனாக இருப்பான். வேதத்தை வாசித்து எதையும் வேத அடிப்படையில் ஆராய்ந்து சிந்திக்கிறவனாக இருப்பான். அவன் இப்போது கிறிஸ்துவுக்கு அடிமை; அவன் கிறிஸ்துவின் சீடன். தன் எஜமானாகிய கிறிஸ்துவின் வார்த்தைகளை மனதிலிருத்திக்கொண்டு அவருடைய எண்ணங்களுக்கு மீறிய செயல்களுக்கு அவன் தன் வாழ்வில் இடங்கொடுக்க மாட்டான். அதுமட்டுமல்லாமல் அவருடைய சித்தத்திற்கேற்றபடி தன் வாழ்க்கையை அன்றாடம் அமைத்துக்கொண்டு அவருக்கு சாட்சியாக சமுதாயத்தில் சமுதாயம் ஆச்சரியப்படும்படியாக வாழ்ந்து வருவான். இது பரிசுத்த ஆவியைத் தன்னில் கொண்டிருந்து ஆவிக்குரிய கிறிஸ்தவன் ஆவியின் மூலம் வாழ்கின்ற நிதர்சனமான வாழ்க்கை.
மறுபிறப்படைந்த மெய்க்கிறிஸ்தவன் பூரணமானவனல்ல. அவன் பூரணத்துவத்தை அடையும் நோக்கத்துடன் (பரலோகத்தில்) அன்றாடம் ஆவியின் துணையோடு பரிசுத்தமாகுதலில் ஈடுபட வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறான். அவன் விசுவாச வாழ்க்கையில் சில வேளைகளில் தவறு செய்கிறான்; சிலவேளைகளில் விழுந்துபோகிறான்; தவறு செய்துவிட்ட குற்றவுணர்வினால் தவித்துப் போகிறான்; தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறான் என்றால் அதற்கெல்லாம் காரணம் அவன் ஆவியின் பிறப்பை அடைந்து, ஆவியானவரைத் தன்னில் கொண்டிருந்து தனக்குள் இருக்கும் பாவத்தையும் தன் பலவீனங்களையும் உணர்கிறான் என்றுதான் அர்த்தம். ஆவியின் பிறப்பை அடைந்திராத மனிதனுக்கு இத்தகைய உணர்வுகள் ஒருபோதும் ஏற்படாது. அவன் யூதாஸைப்போலவும், ஏரோது இராஜாவைப்போலவும் வருத்தப்படலாம்; ஆனால், அவனுக்கு பாவஉணர்வோ, பாவத்தில் இருந்து மனந்திரும்பவேண்டும் என்ற இருதயத்துடிப்போ இருக்காது. மறுபிறப்படைந்தவன் அன்றாடம் தனக்குள் இருக்கும் இருதயத்தின் பலவீனத்தை உணர்ந்து, அதன் சோதனைக்கு அகப்பட்டுப் பாவத்தைச் செய்துவிடாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் ஆவியின் துணையோடு எடுத்து கர்த்தரை நெருங்கி வாழ்வான். அவன் தாழ்மையோடு அன்றாடம் மனந்திரும்பி வாழ்கின்ற வாழ்க்கையைக் கொண்டவனாக இருப்பான்.
மெய்க்கிறிஸ்தவன் மறுபிறப்படைந்ததன் விளைவாக துன்பங்களைக்குறித்த வித்தியாசமான பார்வையைக் கொண்டவனாக, அவற்றை வித்தியாசமான முறையில் எதிர்கொள்ளுகிறவனாகவும் இருப்பான். அவன் துன்பத்தை மெய்க்கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கணிக்கிறான். மறுபிறப்படைந்தவுடன் அவன் முன்பனுபவித்து வந்திருந்த துன்பங்கள் தொடர்ந்தும் வாழ்வில் தொடரும் என்ற ஞானத்தைக் கொண்டிருக்கிறான். அவனில் ஏற்பட்டிருக்கிற ஆவிக்குரிய மாற்றம் தொடரும் துன்பங்களைப்பற்றிய வித்தியாசமான அறிவையும், அவற்றை அணுகும் முறையில் மாற்றத்தையும் கொண்டுவந்திருக்கிறது. இன்று நம்மத்தியில் பரவலாகக் காணப்படும் போலிக்கிறிஸ்தவம், கிறிஸ்துவை விசுவாசித்தால் எல்லாத்துன்பங்களும் மறைந்துவிடும் என்று பொய்யைப் பரப்பிவருகிறது. அதனால்தான் கிறிஸ்தவ சுவிசேஷத்தை மட்டும் அது சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘சுகமளிக்கும் ஆசீர்வாதக் கூட்டத்தை’ அதோடு சேர்த்து நடத்துகிறது. சுவிசேஷத்தை நம்பினால் துன்பங்கள், நோய்கள், தொல்லைகள் எல்லாம் உடனடியாகப் போய்விடும் என்ற பொய்யை அது நம்புவதாலேயே இம்முறையைக் கையாண்டு வருகிறது. இதேபோல்தான் ‘செழிப்புபதேசப்’ பிரசங்கிகளும் இயேசுவை விசுவாசித்தால் செல்வந்தனாகிவிடலாம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இதெல்லாம் வேதத்தில் காணப்படாத போலிப்பிரச்சாரங்கள். மெய்க்கிறிஸ்தவம் தரும் மறுபிறப்பாகிய வாழ்க்கையில் இதற்கெல்லாம் இடமில்லை. மெய்க்கிறிஸ்தவம் துன்பங்களை அகற்றுவதைவிட அவற்றைத் தாங்கி ஆவிக்குரிய பலத்தோடு கர்த்தருடைய மகிமைக்காக வாழும் வல்லமையைத் தருகிறது. எல்லாத் துன்பங்களையும் ஆவிக்குரிய ஆசீர்வாதமாக மாற்றியமைக்கிறது மெய்க்கிறிஸ்தவம். அத்துன்பங்கள் அக்கினியின் ஆக்ரோஷத்தைக் கொண்டிருந்தாலும் அதில் நடந்துபோகிற மெய்க்கிறிஸ்தவன் ஜில் என்று தண்ணிரில் நடப்பதுபோன்ற அனுபவத்தை அடைகிறான். அதற்குக் காரணம் அவனடைந்திருக்கும் புதிய வாழ்க்கையாகிய மறுபிறப்பும், அவனுக்குள் இருக்கும் ஆவியானவருமே.
இதுவரை நான் விளக்கியிருப்பது மெய்க்கிறிஸ்தவமாக இல்லாவிட்டால் 1 பேதுரு நிருபத்தில் பேதுரு எழுதியிருப்பதெல்லாமே பொய்யாகிவிடும். முதலாம் நூற்றாண்டில் உலக இன்பத்தை அனுபவிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு கிறிஸ்தவத்தை நிந்தித்து, எதிர்த்து, அதற்கு ஆபத்து விளைவித்து ஆண்டுவந்த ரோம இராஜ்ஜியத்தின் கீழ் கொடுமையான பல்வேறு துன்பங்களை அன்றாடம் அனுபவித்து வாழ்ந்து வந்துகொண்டிருந்த கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, அவர்களை நன்கறிந்திருந்த பேதுரு ஆலோசனை தரும்போது, எத்தனைப் பெரும் துன்பங்களை சந்தித்தபோதும் அத்துன்பங்களை ஏற்று கிறிஸ்து துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்ததுபோல் கிறிஸ்துவின் மகிமைக்காக வாழுவதோடு, அத்துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் வார்த்தைகளை மீறாமல் பின்பற்றி வாழும்படி அந்நிருபத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அறிவுறுத்தி வருகிறார். இன்னொருவிதத்தில் கூறுவதானால், துன்பத்தை நீக்கிக்கொள்ளுவதற்காகத் தன்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப சுழ்நிலையை எதையாவது செய்து மாற்றுவதில் கவனத்தைச் செலுத்தாமல், கிறிஸ்துவைப்போல அனைத்தையும் தாங்கி இருதயத்திலும், வாழ்க்கையிலும் வேதவார்த்தைக்கேற்ற பண்புகளை மட்டும் கொண்டிருந்து கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் வாழ்க்கையைப் பலரும் பார்த்தறிந்துகொள்ளுமாறு வாழும்படிப் பேதுரு சொல்லியிருக்கிறார். அதாவது, வெளிப்புற சீர்திருத்தத்தை சமுதாயத்தில் கொண்டுவருவதில் நேரத்தை வீணாக்காமல் (புரட்சி செய்தோ, ஆட்சியைக் கவிழ்த்தோ, ஆயுதம் தாங்கியோ, திருப்பி அடித்தோ அல்லது சமூகநீதி, மனித உரிமைகள் என்று சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்காமல்), உட்புறமாக ஆவிக்குரிய சீர்திருத்தத்தைக் கொண்டிருந்து (கிறிஸ்துவின் அன்பை இதயத்தில் கொண்டிருந்து ஆவிக்குரிய கிருபையின் கனிகளை வெளிப்படுத்தி) அதை சமுதாயம் பார்த்து வியக்கும்படிச் செய்யுமாறு பேதுரு சொல்லுகிறார். அடிக்கிறவனை திருப்பி அடிக்காமல், நிந்திக்கிறவனைத் திருப்பித் தாக்காமல், தன் இருதயத்தையும், வாயையும் வேதக்கடிவாளத்தால் கட்டி தனக்கு எதிராக நடக்கின்ற கொடுமைகளையெல்லாம் ‘ஆசீர்வாதமாக’ எண்ணி ஏற்று எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்தவன் கர்த்தரை மகிமைப்படுத்துவான். (1 பேதுரு 2:13-25; 3:8-17). ஆவிக்குரியவிதமாக ஒருவனில் ஆவிக்குரிய மாற்றங்கள் இந்தவகையில் ஏற்பட்டு ஆவிக்குரிய கிரியைகளை அவன் சமுதாயத்தில் செய்கிறபோது சமுதாயம் மெய்க்கிறிஸ்தவம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளுகிறது, அத்தோடு அத்தகைய ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துகிறவர்களின் செயல்களும் சமுதாயத்தில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக்கொட்டி கிறிஸ்தவத்தைப்பற்றி அசட்டுப்பேச்சுப் பேசுகிறதைவிட ஐந்து நிமிடம் மெய்க்கிறிஸ்தவனாக வாழ்ந்து காட்டுகிறபோது அதை உலகம் நின்று நிதானித்துக் கவனிக்கிறது.
உதாரணத்துக்கு, லூக்கா 10:25-37 வரையுள்ள வசனங்களில் விளக்கப்பட்டிருக்கும் நல்ல சமாரியன் உவமையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உவமை மூலம் இயேசு கிறிஸ்தவத்தின் மெய்த்தன்மையை விளக்குகிறார். எரிகோவுக்கு போகிற வழியில் கள்வர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராகக் கிடந்த மனிதனுக்கு அந்த வழியில்போன ஆசாரியனும் லேவியனும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய போலிமத வாழ்க்கையில் கர்த்தரிடம் இருக்கவேண்டிய மறுபிறப்பின் அடிப்படையிலான மெய்யான அன்போ, அந்த அன்பை சக மனிதர்களிடம் வெளிப்படுத்துகிற வாழ்க்கையோ இருக்கவில்லை. அந்தப் போலிமதச் சடங்கே அவர்கள் குற்றுயிராகக் கிடந்த மனிதனிடம் எந்த அக்கறையும் காட்டாமல் விலகிப்போக வைத்தது. அந்த வழியில் வந்த சமாரியன் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் குற்றுயிராகக் கிடந்த மனிதன் மேல் இரக்கங்காட்டி, அன்புகாட்டி அவனுக்குத் தேவையான அனைத்தையும் செய்துவைத்தான். இந்த உவமையின் மூலம் இயேசு மெய்யான கிறிஸ்தவம் எது என்பதை விளக்கியிருக்கிறார்.
இந்த உவமை விளக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பார்க்கிறபோது அங்கே ஒரு நியாயசாஸ்திரி (பரிசேயர்கள் கூட்டத்தைச் சேர்ந்த நியாயப்பிரமாணத்திற்கு விளக்கங்கொடுக்கிறவர்கள்) நித்தியஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்? என்று இயேசுவை நோக்கிக் கேட்டான். அவனுடைய எண்ணப்படி சடங்குகளை வாழ்க்கையில் வெளிப்புறமாகப் பின்பற்றுவதே நித்தியஜீவனை அடைய வழியாயிருந்தது. அவன் இயேசுவில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக இதைக் கேட்டான். ஆனால், இயேசு மிகவும் ஞானத்தோடு நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல் என்று கேட்டு அவனை மடக்கினார். அதற்கு அவன் நல்ல பதிலைக் கொடுத்தான். இயேசு அந்தப் பதிலை மெச்சினார். அவனுடைய பதில் பத்துக்கட்டளைகளைச் சுருக்கமாக விளக்குவதாக இருந்தது: முதலில், முழுமனதோடும் இருதயத்தோடும் கர்த்தரில் அன்பு காட்டு, இரண்டாவதாக, உன்னில் அன்புகாட்டுவதுபோல் பிறனில் அன்புகாட்டு என்பது அவனுடைய பதிலாக இருந்தது. பதிலில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்தப் பதிலின்படி அவன் வாழவில்லை; வாழமுடியாதவனாக இருக்கிறான் என்பதை அவன் உணராமல் இருந்தான். தான் கர்த்தர் மேல் ஆழமான அன்புசெலுத்துவதாகவும், தன்னை நேசிப்பதுபோல் மற்றவர்களை நேசிப்பதாகவும் அவன் எண்ணி வாழ்ந்துகொண்டிருந்தான். இயேசு அவனுடைய பதிலை மெச்சி, நீ சொன்னதைத் தொடர்ந்து செய் என்று சொன்னது அவனுடைய மனதை ஏதோ ஒருவிதத்தில் உறுத்தியிருக்கிறது. அதனால் அவன் மறுபடியும் தான் நீதிமான் என்று காட்டிக்கொள்ளுவதற்காக, எனக்குப் பிறன் யார்? என்று இயேசுவிடம் கேட்டான். அதற்கு பதிலளிக்கும்போதுதான் இயேசு இந்த நல்ல சமாரியன் உவ¬மையை விளக்கினார். அதை விளக்கியபின் இந்த மூன்று பேரில் (ஆசாரியன், லேவியன், சமாரியன்) எவன் பிறன், உனக்கு எப்படித் தோன்றுகிறது? என்று இயேசு கேட்டார். நியாயசாஸ்திரி அதற்குப் பதிலாக, இரக்கஞ் செய்தவனே என்றான். இயேசுவும் நீயும் போய் அப்படியே செய் என்றார். இந்த இடத்தில் யூதனான நியாயசாஸ்திரி சமாரியர்களோடு எந¢தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதை உணரவேண்டும். அவர்கள் சமாரியர்களை யூதமத எதிரிகளாகக் கணித்து வெறுத்தார்கள். இங்கே இயேசு தன் உவமையில் சமாரியனை நல்லவனாகக் காண்பிக்கிறார்.
இந்தப்பகுதியில் இருந்து எதை அறிந்துகொள்ளுகிறோம்? கர்த்தரை அறிந்திருப்பதாகவும், நேசிப்பதாகவும் எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த நியாயசாஸ்திரி உண்மையில் அவரை அறியவும் இல்லை; நேசிக்கும் இருதயத்தைக் கொண்டிருக்கவும் இல்லை. அவனுக்கு அன்பு காட்டுவதும், இரக்கங்காட்டுவதும் என்ன என்பது தெரியாமல் இருந்தது. இயேசு மெய்க்கிறிஸ்தவத்தை இந்தப் பகுதியில் அவனுக்கு விளக்கும்போது, மெய்க்கிறிஸ்தவனுடைய செய்கைகள், அவனுடைய வெளிப்புற வாழ்க்கை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை வைத்தே விளக்குகிறார். சமாரியனுடைய செய்கைகளை வைத்தே கிறிஸ்தவம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார். சமாரியன் குற்றுயிராகக் கிடந்தவனுக்கு செய்துவைத்த செயல்கள் அவன் மனித உரிமைகள் இயக்கத்தை சேர்ந்தவனாக இருந்ததாலோ அல்லது சமூகசேவை செய்வதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்ததாலோ அல்ல. கிறிஸ்தவனாக இல்லாமலேயே ஒருவன் அருமையாக சமூகசேவைகள் செய்யமுடியும். உலகத்தில் அநேகர் அப்படிச் செய்கிறார்கள். இங்கே சமாரியனுடைய செயல்கள் அனைத்திற்கும் காரணம் அவன் கர்த்தரை மெய்யாக விசுவாசித்து அவருடைய அன்பை அனுபவத்தில் மறுபிறப்பின் மூலம் அடைந்து, அந்த அன்பை சுற்றி இருப்பவர்களிடம் தன்னலம் இல்லாமல் சுயமாக வெளிப்படுத்துகிறவனாக இருந்ததுதான். சமாரியனுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் அவனுக்கு கர்த்தரிடம் இருந்த மெய்விசுவாசமே. இயேசு அதை வெளிப்படையாக விளக்காமல் சமாரியனுடைய செயல்களுக்குக்கெல்லாம் அதுவே காரணமாக விளக்குகிறார்.
மெய்க்கிறிஸ்தவ அனுபவம் சமாரியனில் இருந்ததுபோல ஒவ்வொருவருடைய அகவாழ்க்கையை மட்டுமன்றி புறவாழ்க்கையையும் மாற்றும். மறுபிறப்பாகிற அனுபவத்தை அகத்தோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. விஷம் உள்ளே போய்விட்டால் எப்படி முழுச்சரீரத்தையும் பாதிக்குமோ அதேபோல் மறுபிறப்பு இருதயத்தில் நிகழ்ந்துவிட்டால் அது முழு மனிதனையும், அவனுடைய இருதயம், அதிலிருந்து புறப்படும் அவனுடைய சிந்தனைகள், செயல்கள் அனைத்தையும் முற்றாக மாற்றும். சமாரியனில் இதையே காண்கிறோம். நியாயசாஸ்திரியின் இருதயம் மறுபிறப்பை அடையாததாக இருந்ததால் அவனால் வெளிப்புறமாக ஜீவனில்லாத சடங்குகளை மட்டுமே தன்னலத்தோடு செய்யமுடிந்தது; அதற்குமேல் அவனால் உயரமுடியவில்லை.
இதையெல்லாம் நான் விளக்குவதற்குக் காரணம் மெய்க்கிறிஸ்தவர்கள் சமாரியனைப்போல கர்த்தரை நேசித்து அந்த நேசத்தின் காரணமாக எந்த விளம்பரத்தையும் நாடாமல், ஒரு கை செய்வதை மற்றக்கை அறியாதவகையில் வாழ்க்கையில் நற்கிரியைகளை சமூதாயத்தில் செய்துவருவார்கள். மறுபிறப்பாகிய ஆவியின் அனுபவம் அவர்களை அடியோடுமாற்றி அத்தகைய வாழ்க்கையை வாழவைக்கிறது. இந்த ஆவிக்குரிய வாழ்க்கையையே கிறிஸ்தவம் என்று வேதம் சொல்லுகிறது. இந்த ஆவிக்குரிய புரட்சிகரமான வாழ்க்கையை வாழும் வல்லமையைத் தருவதே ஆவிக்குரிய மறுபிறப்பு. இந்த வாழ்க்கைக்குப் புறம்பான அனைத்தும் உலகத்தைச் சார்ந்த, சாத்தானுக்குரிய போலிச் சமுதாய வாழ்க்கை.
இதை வாசிக்கும்போதே சிலர் இம்மாதிரியான வாழ்க்கையெல்லாம் இந்தக் காலத்தில் சரிப்பட்டு வருமா? என்று கேள்வி கேட்பார்கள். வேறுசிலர், இதெல்லாம் பரலோகத்தில் மட்டுந்தான் வாழக்கூடிய வாழ்க்கை என்று எகத்தாளத்துடன் சொல்லுவார்கள். இத்தகைய, துன்பங்களைத் தலைமேல் சுமந்து வாழும் வாழ்க்கையை அவர்களால் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. இது கற்பனையான வாழ்க்கை என்று அவர்கள் முடிவுகட்டுகிறார்கள். இவர்கள் இப்படி நடந்துகொள்வதற்குக் காரணம் வேதம் போதிக்கும் கிறிஸ்தவத்தைப்பற்றிய நல்லறிவையும், அதன் அடிப்படையிலான அனுபவத்தையும் அடைந்திராததுதான். நம்மினத்தில் பெரும்பாலும் மறுபிறப்பு பற்றிய மெய்யான போதனைகள் சபைகள் தோறும் குறைவு. அத்தோடு சுவிசேஷம் சொல்லுகிற 99% சுவிசேஷ பிரசங்கிகள் மனிதன் தன்னை எப்படியாவது ஆவிக்குரிய முறையில் மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சுவிசேஷம் சொல்லுகிறார்கள். இதனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று வாயளவில் சொல்லுகிற எல்லோருக்கும் அவர்கள் ஞானஸ்நானத்தைக் கொடுத்து கிறிஸ்தவர்கள் என்று அறிவித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மெய்யான மறுபிறப்பாகிய அனுபவத்தை ஆவியானவர் மூலம் அடைந்திராததால் புறத்தில் கிறிஸ்தவர்களைப்போல வாழமுயற்சிக்கிறார்களே தவிர அகத்தில் ஆவிக்குரிய அனுபவமும் வல்லமையும் இல்லாமல் பாவத்தில் தொடர்ந்தும் நிலைத்திருந்து பாவத்தை விடமுடியாமல் தவிப்போடு வாழ்கிறார்கள். இவர்களால் வேதம்போதிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருபோதும் வாழமுடியாது; வேத சத்தியங்களின் மெய்பொருளை உணரவும் முடியாது.
மெய்க்கிறிஸ்தவத்தை நம்மினத்தில் காணவேண்டுமா? முதலில், கூடுகின்ற கூட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவ விசுவாசத்தை விளக்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். கூட்டம் எதற்குவேண்டுமானாலும் எப்போதும் கூடும். கொஞ்சம் அரிசி, பருப்பு கிடைக்கும் என்றாலே நம்மினத்தில் கூட்டம் தாங்கமுடியாதளவுக்குக் கூடிவிடும். இன்று சுவிசேஷ பிரசங்கிகள் அரிசி, பருப்புக்குப் பதிலாக சரீரசுகமளிப்பதாக அறிவிப்புகொடுக்கிறார்கள். அதை நம்பி வீணாய்ப்போகிறது கூடுகிறகூட்டம். ஒரு தடவை ஒரு போதகர் என்னைப் பிரசங்கிக்க வைத்து பெரிய கூட்டம் நடத்த அழைத்தார். அதுபற்றி நான் மேலும் துருவித் துருவி விசாரித்தபோது, அவர் அந்தக் கூட்டத்திற்கு சுகமளிப்பு ஆசீர்வாதக் கூட்டம் என்று நோட்டீஸ் அடிக்க அனுமதி கேட்டார். அத்தோடு கூட்டத்தில் குறைந்தது மூன்று தடவையாவது காணிக்கை எடுக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார் என்று அறிந்துகொண்டேன். இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, சுவிசேஷத்தை சொல்ல மட்டும் கூட்டம் நடத்துவதானால் என்னோடு பேசுங்கள் என்று அவரிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். இதுதான் இன்று நடைமுறையில் இருந்துவரும் நம்மினத்து கிறிஸ்தவ ஊழியம். வேறுபலர் அவிசுவாசிகளின் தேவைகளை முன்னிலைப்படுத்தி பணத்தையும், பொருளையும் வாரிவிட்டு ஆள் சேர்க்கிறார்கள். கேட்டால் சமூகசேவை என்று பதில்கிடைக்கிறது. இதெல்லாம் எதில் போய் முடிகிறது தெரியுமா? மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தின் தன்மையை ஒருவன் அறிந்துகொள்ள முடியாதபடி அதற்கு வேலிபோட்டுத் தடுத்து விடுகிறது. உலக இச்சையோடு சரீரத்தேவைக்காக வருகிற எவருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை இருக்கவழியில்லை. நடந்துகொண்டிருக்கின்ற, ஆண்டவருக்கு ‘ஆள்பிடிக்கிற’ வியாபாரப்பணி தொடர்கிறவரை ஆவிக்குரிய ஆத்மீக மறுபிறப்பை விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரில் மட்டுமே நம்மினத்தில் காணமுடியும்.
ஒருவரில் மூவர்; மூவரும் ஒருவரே!
கிறிஸ்தவ வேதத்தில் கடவுளைப்பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றியும் தெளிவான போதனைகளைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். அந்தப் போதனைகளில் அடிப்படைப் போதனைகள் அநேகம் இருக்கின்றன. அதாவது, ஒரு கிறிஸ்தவன் நிச்சயம் அறிந்து விசுவாசிக்க வேண்டியதும், அவைபற்றிய எந்தத் தவறான எண்ணங்களைக் கொண்டிராமலும் இருக்கவேண்டியதுமான அநேக போதனைகள் இருக்கின்றன. இந்தப் போதனைகள்பற்றிய குளறுபடியான எண்ணங்களைக் கொண்டிருந்தாலோ அல்லது அவற்றை விசுவாசிக்காமல் இருந்தாலோ அல்லது இந்தப் போதனைகளை எதிர்த்தாலோ ஒரு மனிதன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. அந்தளவுக்கு இந்தப் போதனைகள் கிறிஸ்தவத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இந்தப் போதனைகள் இல்லாமல் கிறிஸ்தவம் இருக்கமுடியாது. இவை கிறிஸ்தவத்தின் உயிர்நாடி.
டேர்டூலியன்
இத்தகைய போதனைகளில் ஒன்றுதான் திரித்துவம் (Trinity) பற்றியது. திரித்துவம் அல்லது மிகவும் பழமையான வார்த்தையான திரியேகத்துவம் என்பது வேதத்தில் எங்கும் காணமுடியாத வார்த்தை. அதை வேதத்தில் காணமுடியவில்லை என்பதற்காக அதைப் பயன்படுத்தக்கூடாது என்பது அறிவின்மையின் அறிகுறி. இந்தப் பதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் திருச்சபை வரலாற்றில் முக்கியமானவரான டேர்டூலியன் (Tertullian, 155-240 AD) என்ற சபைப்பிதா. இவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த ஆங்கில வார்த்தையான Trinity இலத்தீன் மொழிவார்த்தையான trinitas என்பதில் இருந்து உருவானது. இதற்கு அர்த்தம் மூவர் என்பதாகும்.
திரித்துவம் என்ற பதம் கடவுளின் இயல்பான தன்மைபற்றிய முக்கியமான போதனையை விளக்குவதற்காக உருவானது. வார்த்தைகள் மிகவும் அவசியமானவை. புரிந்துகொள்ளக் கஷ்டமான சில சத்தியங்களை விளக்குவதற்கு இறையியல் பதங்கள் அவசியமாகின்றன. வேதத்தில் காணப்படும் அனைத்துப் போதனைகளையும் விளக்குவதற்கு அவசியமான எல்லாப் பதங்களையும் வேதம் தருவதில்லை. ஆகவே, அந்தச் சத்தியங்களைச் சுலபமாக விளங்கிக்கொள்ளுவதற்காக இறையியல் அறிஞர்கள் கவனத்தோடு பல பதங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சபை அங்கத்துவம்பற்றி வேதம் போதித்தபோதும் அங்கத்துவம் என்ற பதம் வேதத்தில் இல்லை. அதற்காக சபை அங்கத்துவம் இல்லாமல் இருந்தால் அது சபையே அல்ல. அங்கத்துவம் என்ற பதத்தை அவசியத்தின் காரணமாக இறையியல் அறிஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அதேபோல்தான் திரித்துவம் என்ற பதமும். இந்தப் பதம் கடவுள் ஒருவராக இருக்கிறார்; அந்த ஒரே கடவுளில் மூன்று ஆள்தத்துவங்கள் காணப்படுகிறார்கள் என்ற முக்கியமான சத்தியத்தை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
கிறிஸ்தவத்தில் கடவுளைப்பற்றிய போதனை மிகவும் விசேஷமானது; அவசியமானது. வேதம் போதிக்கும் கடவுளின் தன்மையை தத்துவரீதியில் விளங்கிக்கொள்ளுவது கொஞ்சம் கஷ்டந்தான். அதாவது, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தத்துவரீதியில் புரிந்துகொள்ளுவதற்கு இலகுவானது. ஆனால், கடவுளின் தன்மையை இந்தவிதமாக தத்துவரீதியில் கிறிஸ்தவத்தில் விளக்கமுடியாது. இருந்தாலும் அது ஒன்றும் அரவே புரிந்துகொள்ள முடியாததொன்றல்ல. கிறிஸ்தவ நம்பிக்கைக்கு விசுவாசம் அவசியம். உலகப்படிப்பைப்போன்றதல்ல அது. உலகத்தின் போதனைகளை விளங்கிக்கொள்ள விசுவாசம் அவசியமில்லை. கிறிஸ்தவ விசுவாசமில்லாதவர்களுக்குக் கிறிஸ்தவ நம்பிக்கை இருக்க வழியில்லை. கடவுளின் தன்மைபற்றிய கிறிஸ்தவ போதனையை விசுவாசத்தின் மூலமே கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசம் பரிசுத்த ஆவியினால் ஏற்படுவது. கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறவர்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக கிறிஸ்தவ போதனைகளை விளங்கிக்கொண்டு அவற்றை வைராக்கியத்துடன் பின்பற்றுகிறார்கள். இதேமுறையில் கடவுளின் தன்மையைப்பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரிசுத்த ஆவியின் மூலமே கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இதுவரை நான் விளக்கியது திரித்துவம் பற்றிய போதனைகளுக்கு மிக நெருக்கமானது.
கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனையாக திரித்துவம் இருப்பதால் அதைக் கிறிஸ்தவர்கள் எல்லோரும் நன்றாக அறிந்திருந்து வைராக்கியத்தோடு விசுவாசிப்பார்கள் என்றுதான் நினைப்பீர்கள். ஆனால், இந்த அடிப்படை சத்தியத்துக்கு பல ஆபத்துக்கள் வந்திருக்கின்றன. தற்காலத்தில்கூட இந்த அடிப்படை போதனையில் ஞானமில்லாத அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அத்தோடு இந்தப் போதனைக்கு எதிரான போலிப்போதனைகளும் கிறிஸ்தவர்கள் மத்தியில் உலவிக்கொண்டிருக்கின்றன. திருச்சபை வரலாற்றில் இந்தப் போதனைக்கே ஆரம்பகாலத்திலிருந்து பெரும் ஆபத்துக்கள் வந்திருக்கின்றன. அவ்வாறு வந்திருக்கும் ஆபத்துக்களையும், போலிப்போதனைகளையும் கொஞ்சம் ஆராய்வோம்.
திருச்சபை வரலாற்றில் மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த ஒரு மனிதன் பெயர் ஏரியஸ் (Arius, 256-336). இவன் திரித்துவத்தைப்பற்றிய தவறான போதனையை அறிமுகப்படுத்தினான். வேதம், பிதாவும், குமாரனும், பரிசுத்தஆவியானவரும் ஒரே தன்மைகளையும் சமமான அதிகாரத்தையும், மகிமையையும் கொண்டவர்களாக ஒரே தேவனாக இருப்பதாக விளக்க, ஏரியஸ் குமாரன் பிதாவைவிடத் தன் தன்மையில் மாறுபட்டவராக அவரைவிடத் தகுதியில் குறைந்தவராக இருப்பதாக விளக்கினான். அத்தோடு இன்னுமொருபடி மேலேபோய் குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் விளக்கினான். இதன் மூலம் குமாரன், பிதா, பரிசுத்தஆவியானவர்போல நித்தியத்தில் இருந்து இருக்கவில்லை என்று ஏரியஸ் விளக்கினான். இந்த விளக்கங்களின் அடிப்படையில் குமாரன் கடவுள் அல்ல என்ற முடிவுக்கு ஏரியன் வந்தான். ஏரியஸின் திரித்துவம் பற்றிய ஆபத்தான போதனைகள் அக்காலத்தில் ஏரியனிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

அத்தநேசியஸ்
ஏரியஸின் போதனைகளால் திருச்சபை குழம்பிப்போயிருந்த நிலையில் அன்று திருச்சபை தலைவராக இருந்த இன்னொரு மனிதர் அத்தநேசியஸ் (Athanasius, 296-373). (அத்தநேசியஸ் பற்றி ஏற்கனவே திருமறைத்தீபத்தில் ஆக்கங்கள் வந்திருக்கின்றன, 2018 இதழ் 4 மற்றும் 2019 இதழ் 1). அத்தநேசியஸ் ஏரியஸின் போலிப்போதனைகளை இனங்கண்டு அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அன்று பேரரசனாக இருந்த நான்காம் கான்ஸ்டன்டைனிடம் இதுபற்றி முறையிட்டார். கான்ஸ்டன்டைன் திருச்சபை குழுவொன்றை நியமித்து ஏரியஸின் போதனைகளை ஆராய்ந்து, அவை ஆபத்தானவை என்று உணர்ந்து அவற்றிற்கெதிராக வேதம் திரித்துவம் பற்றிப் போதிக்கும் விளக்கங்களை அறிக்கையாக வெளியிட்டார். அத்தநேஸியன் சத்திய அறிக்கை, நைசீன் சத்திய அறிக்கை (325), அதற்குப் பின் வந்த கான்ஸ்டான்டிநோப்பிள் அறிக்கைகள் (381) இந்த ஏரியனிசப் போலிப்போதனையைத் தோலுரித்துக்காட்டி அவற்றிற்கெதிரான வேதபோதனைகளைத் தந்து திருச்சபைக்கு பாதுகாப்பளித்தன.
அத்தநேசியஸ் தனியொருவராக அந்தக் காலத்தில் ஏரியனிசத்திற்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுதும் போராடியுள்ளார். வேதசத்தியத்திற்கெதிரான ஆபத்தான போதனை திருச்சபையைச் சிதைத்து ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நஞ்சாக அமைந்துவிடும் என்பதில் அத்தநேசியஸுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. இதை வாசிக்கின்ற உங்களுக்கு திரித்துவத்தைப்பற்றிய தெளிவான அறிவும் நம்பிக்கையும் இருக்கிறதா? அல்லது இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை, இயேசுவை விசுவாசித்தால் மட்டும் போதும் என்ற அலட்சிய மனப்பான்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? அப்படி வாழ்ந்துகொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் அநேகர் நம்மினத்தில் இருக்கிறார்கள். விஷத்தைப் போன்ற போதனைகளைப் பிரசங்கி என்ற பெயரில் அன்றாடம் கொடுத்துக்கொண்டிருக்கிற அநேகர் இருந்தபோதும், அது விஷம் என்று தெரிந்தும் அவர்கள் அபிஷேகம் பெற்ற ‘ஊழியக்காரர்கள்’ அதனால் அவர்களைக் குறைசொல்லக்கூடாது என்ற மனுஷபயத்தோடு விஷத்தைக் குடித்துக்கொண்டிருக்கிற ஆத்துமாக்கள்தான் எத்தனை. அத்தகைய அலட்சிய மனப்பான்மை இந்த அடிப்படைப் போதனைபற்றி மெய்க்கிறிஸ்தவரான அத்தநேசியஸுக்கு இருந்திருந்தால் திருச்சபை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். திரித்துவத்தைப்பற்றிய போலித்தனமான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏரியனிசப் போதனைக்கு எதிரான வேதசத்தியங்களை முழுமையாகத் தந்த இன்னொரு அறிக்கையாக கெல்ஸிடொன் அறிக்கை (Chalcedon, 451) இருந்தது. இந்த அறிக்கை இயேசு உலகத்தில் பிறந்தபோது அவரில் மானுடம், தெய்வீகம் ஆகிய இரண்டு தன்மைகள் (two natures) இணைந்து காணப்பட்டதாக விளக்கியது. இதை இந்த அறிக்கை hypostasis என்ற கிரேக்க பதத்தின் மூலம் விளக்கியது. அதாவது ஒரே மனிதராக இருந்த இயேசு கிறிஸ்துவில் மானுடமும், தெய்வீகமும் இணைந்து பிரிவின்றி காணப்பட்டதாக இந்த அறிக்கை விளக்கியது. அவரில் மானுடம் தனக்குரிய அத்தனை தன்மைகளையும் (பாவத்தைத் தவிர) கொண்டிருந்ததோடு, தெய்வீகமும் அதன் அத்தனைத் தகமைகளையும் கொண்டு இயேசு தேவனாகவும் மனிதராகவும் இருந்தார் என்று இந்த அறிக்கை விளக்கியது.
இந்தக் கெல்ஸிடொன் அறிக்கை ஏரியனிசமாகிய போலிப்போதனைக்கெதிராக மட்டும் விளக்கமளிக்காமல் அதைப்போன்ற திரித்துவத்தை சிதைக்க முயன்ற வேறு சில போதனைகளையும் தோலுரித்துக் காட்டியது. திரித்துவத்திற்கு எதிரான இன்னொரு போலிப்போதனை அப்பொலினேரியனிசம். இதைப் போதித்த மனிதன் பெயர் அப்பொலினேரிஸ் (Apollinaris – died in 390). இந்த மனிதன் இயேசு கிறிஸ்து முழுமையற்ற மானுடத் தன்மையைக் கொண்டிருந்ததாகப் போதித்தான். வேதம், அவர் பூரணமான மானுடத்தைக் (பாவம் தவிர) கொண்டிருந்ததாக விளக்குகிறது. இன்னுமொரு போலிப்போதனையை உருவாக்கியவன் பெயர் யூடிக்கஸ் (Eutyches, 380-456). இவன் இயேசு கிறிஸ்துவில் தெய்வீகமும், மானுடமும் ஒருசேரக் கலந்து ஒரேயொரு தன்மை மட்டுமே காணப்பட்டதாக விளக்கினான். இவனுடைய போதனையும் மிகத்தவறானது. திரித்துவத்திற்கெதிரான இன்னுமொரு போதனையை உருவாக்கியவன் பெயர் நெஸ்டோரியஸ் (Nestorius, 386-450). இது நெஸ்டோரியனிசம் என்று அழைக்கப்படுகிறது. நெஸ்டோரியஸ், இயேசு கிறிஸ்துவில் தெய்வீகமும், மானுடமும் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாமல், இரண்டு தன்மைகளாக (nature) அல்லாமல் இரண்டு நபர்களாக (persons) இருந்தன என்று விளக்கினான். இதுவும் திரித்துவம்பற்றிய ஆபத்தான தவறான போதனை.
திரித்துவத்திற்கெதிராக ஆதிசபையில் எழுந்த இன்னுமொரு போலிப்போதனைக்குப் பெயர் டொஸடிசம் (Docetism). இதைப் போதித்தவர்கள், கிறிஸ்து உலகில் மரணம் உட்படத் தன் வாழ்வில் அனுபவித்த அத்தனைத் துன்பங்களையும் மனிதனாகத் தோற்றமளித்து மட்டுமே அனுபவித்தார் என்று விளக்கினார்கள். அதாவது பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் தூதர்கள் இந்த உலகத்துக்கு கர்த்தரின் பணியைச் செய்ய மனிதரூபத்தில் வந்ததுபோல (ஆபிரகாமையும் லோத்தையும் சந்தித்துப் பேசி உணவருந்தியதுபோல) இயேசுவும் மனிதரூபத்தில் காட்சி தந்து துன்பங்களை அனுபவித்தார் என்கிறது இந்தப்போதனை. அத்தோடு இயேசு மனித உருவில் காட்சியளித்து அனுபவித்த துன்பங்கள் எந்த மனிதனும் அனுபவிப்பதுபோன்ற துன்பங்கள் மட்டுமே என்றும் இந்தப்போதனை விளக்கியது. இதன் மூலம் இயேசு கிறிஸ்து உண்மையாக பூரண மானுடத்தோடு இந்த உலகத்தில் வாழவில்லை என்று விளக்கியது டொஸடிசம். இந்தப் போலிப்போதனைக்கெதிராக விளக்கங்கொடுத்த திருச்சபை, ‘வெறுமனே காட்சியளிக்கின்ற கிறிஸ்துவால் வெறும் காட்சியாகத் தோன்றும் இரட்சிப்பை மட்டுமே அளிக்க முடியும்’ என்று ஆணித்தரமாக பதிலளித்தது.
நாம் மேலே கவனித்துள்ள கெல்ஸிடொன் அறிக்கை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கும் போலிப்போதனைகளுக்கெல்லாம் பதிலளித்து அவற்றை நிராகரித்தது. இதற்குப் பிறகு 681ல் இன்னுமொரு அறிக்கை திரித்துவப் போதனைகளுக்கு மேலும் வலிமைதர வெளியிடப்பட்டது. இதை கொன்ஸ்டான்டிநோபிளில் கூடிய மூன்றாவது கவுன்ஸில் வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் இருக்கின்றது. இந்த அறிக்கை இயேசு கிறிஸ்து தனிப்பட்ட இரண்டு தன்மைகளைத் (தெய்வீகமும் மானுடமும்) தன்னில் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவரில் இரண்டு சித்தங்கள் இருந்ததாக விளக்கியது. அதாவது, அவரில் தெய்வீக சித்தமும், மானுட சித்தமும் இருந்ததாக இது விளக்கியது. கிறிஸ்துவில் ஒரு சித்தம் மட்டுமே காணப்பட்டதாக ஒரு போதனை கிளம்பியதாலேயே கொன்ஸ்டான்டிநோபில் கவுன்சில் இந்த அறிக்கையை வெளியிட்டு அவரில் இரண்டு சித்தங்கள் இருந்ததாக விளக்க நேர்ந்தது. இந்த அறிக்கை, ‘கிறிஸ்துவில் இயற்கையாக பிரிக்கமுடியாத, மாற்றமடையாத, ஒன்றுக்கொன்று முரண்படாத, குழப்பமற்ற இரண்டு சித்தங்கள் இருந்தது மட்டுமன்றி அவை தனித்துவத்தோடு அவரில் இயங்கின’ என்று விளக்கியது. அத்தோடு, ‘கிறிஸ்துவின் மானுட சித்தம் அவரது தெய்வீக சித்ததை எதிர்க்காமலும் அதோடு ஒத்துழைக்கத் தயங்காமலும் அதற்கு இணங்கி நடக்கின்ற சித்தமாக இருந்தது’ என்றும் விளக்கியது. இந்த உண்மையை வலியுறுத்திப் பேசி அதற்காக பெருந்துன்பத்தை ஆதிசபைக் காலத்தில் அனுபவித்த ஒரு மனிதனின் பெயர் மெக்ஸிமஸ் (Maximus the Confessor, 550-662). கிறிஸ்துவில் ஒரு சித்தம் மட்டுமே இருந்ததாகப் போதித்த போலிப்போதனையாளர்கள் அதற்கெதிராக நின்ற மெக்ஸிமஸின் நாக்கை அறித்து அவருடைய ஒரு கரத்தையும் துண்டித்தார்கள். இக்காயங்களின் காரணமாக மெக்ஸிமஸ் பின்னால் மரணத்தை சந்தித்தார். மெக்ஸிமஸ் இறந்த பின்னும் கிறிஸ்துவைப்பற்றிய அவருடைய போதனைகள் நெடுங்காலத்துக்கு கொன்ஸ்டாட்டிநோபிளில் நம்பப்பட்டு வந்தன. இயேசு கிறிஸ்து தன்னில் இரண்டு தன்மைகளைக் கொண்டிருந்தார் என்று போதிப்போமானால் அவரில் இரண்டு சித்தங்கள் காணப்பட்டன என்று நம்மால் சொல்லாமல் இருக்கமுடியாது. அவரில் ஒரு சித்தம் மட்டுமே இருந்ததாக சொன்னால் அவருடைய தன்மைகளில் ஒன்று பூரணமற்றதாக இருந்ததாக முடிவெடுக்க நேரும். கிறிஸ்து இரண்டு பூரணமான தன்மைகளைக் கொண்டிருந்ததோடு அந்தத் தன்மைகள் முழுமையான இரண்டு சித்தங்களையும் கொண்டிருந்தன.
புலிஞ்ஞர்
இதுவரை நாம் கவனித்திருக்கும் கவுன்சில் அறிக்கைகளைத் தவிர (அத்தநேசியஸ், நைசீன், கெல்ஸிடொன், கான்ஸ்டான்டிநோபிள் மூன்றாம் கவுன்சில்) அவற்றிற்குப் பின் வெளிவந்துள்ள மேலும் சில குறிப்பிட்ட அறிக்கைகள் திரித்துவப் போதனைகள்பற்றிய தெளிவான போதனைகளைத் தந்து திருச்சபைக்குப் பேருதவி புரிகின்றன. இங்கிலாந்து சபையின் (Church of England) விசுவாச அறிக்கையின் எட்டாவது விளக்கம் திரித்துவ போதனை குறித்தது. புலிஞ்ஞரால் (Bullinger) வெளியிடப்பட்ட இரண்டாம் ஹெல்வெடிக் அறிக்கை (2nd Helvetic creed, 1566) இயேசு கிறிஸ்துவின் இரண்டு தன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கின்றது. அதற்குப் பின்னால் வரலாற்றில் பதினேழாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட முக்கியமான விசுவாச அறிக்கைகளான வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் 1689 இரண்டாம் இலண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கைகள் மிகவும் அவசியமான தெளிவான திரித்துவம்பற்றிய விளக்கங்களைக் கொடுக்கின்றன.
இதுவரை நாம் பார்த்து வந்திருக்கும் திரித்துவம்பற்றிய வரலாற்று உண்மைகளில் இருந்து நாம் முக்கியமான ஒரு விஷயத்தை உணரமுடிகின்றதல்லவா? அதாவது, வேதத்தின் அடிப்படைப் போதனைகளுக்கு ஆபத்து வருகின்றபோது, போலிப்போதனைகள் சபைகளைத் தாக்குகின்றபோது திருச்சபை அமைதியாக வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல் அந்தத் தவறான போதனைகளை ஆராய்ந்து அவற்றின் மெய்ரூபத்தை வெளிப்படுத்தி மெய்யான சத்தியத்தை விளக்கி சபைகளுக்கு பாதுகாப்பளித்திருக்கிறது. திருச்சபை அதைச் செய்திருப்பதால்தான் இன்று அருமையான விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் நமக்கு இந்த விஷயத்தில் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த அறிக்கைள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளைத் துல்லியமாக விளக்குபவை. இந்த அடிப்படைப் போதனைகளில் அவசியமான அளவுக்கு தெளிவான அறிவோ நம்பிக்கைகளோ இல்லாத எத்தனை பேர் ஊழியக்காரர்கள், போதகர்கள் என்ற பெயரில் நம்மினத்தில் சபை நடத்தி வருகிறார்கள் தெரியுமா? இந்த அநியாயத்தை வேறெங்கு காணமுடியும்? இட்டிலிக்கடைக்காரன்கூட இட்லி சுடத்தெரியாமல் கடைவைக்கமாட்டான். எந்தவித அடிப்படை வேதஅறிவும் இல்லாமல் ஊழியம்செய்கிறவர்களை நம்மினத்தில்தான் அதிகம் காண்கிறோம். ஒரு சபையில் எத்தகைய வேதநம்பிக்கைகளைக்கொண்ட மனிதர்கள் போதகர்களாக இருக்கவேண்டும் என்பதிலும், சபை எதை விசுவாசிக்கவேண்டும் என்பதிலும் உதாசீனம் காட்டும் சபைகள் நீண்டநாட்களுக்கு நல்ல சபைகளாக இருக்க வழியில்லை. அவை போலிச்சபைகளாக வேதவிரோதிகளாக வெகுவிரைவில் மாறிவிடும்.
இந்த ஆக்கத்தை நிறைவுக்குக் கொண்டு வரும் இந்த நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டு தன்மைகளைப்பற்றிய சில உண்மைகளை பிலிப்பியர் 2:6-8 வரையுள்ள வசனங்களில் இருந்து சுருக்கமாக விளக்க விரும்புகிறேன்.
பிலிப்பியர் 2:6-8
6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
இந்தப் பகுதியில் இருந்து ஐந்து உண்மைகளைக் கவனியுங்கள்.
- இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தபோது அவர் தன்னுடைய தெய்வீகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மனிதராகப் பிறக்கவில்லை.அவர் மனிதராக இருந்தால் அவரில் தெய்வீகம் இருக்க வழியில்லை என்ற தவறான போதனை திருச்சபையை ஆதியில் தாக்கியிருக்கிறது; இன்றும்கூட அப்படி எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். யேகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses) இயேசுவை ஆண்டவராக, பிதா, பரிசுத்தஆவியோடு சமமானவராக பார்க்க மறுக்கிறார்கள். மோர்மன் (Morman) என்கிற போலிமதமும் இதே ஆபத்தைக் கொண்டிருக்கிறது. கிரிஸ்டோடொல்பியன் என்ற பெயரில் உலவிவரும் இன்னுமொரு போலிக்கூட்டமும் இயேசு கிறிஸ்துவை தேவனாக, ஆண்டவராகக் காண மறுக்கிறது. இயேசு கிறிஸ்துவை தேவனாகக் காண மறுக்கிறவர்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைக்கு எதிரிகள். பவுல் இந்த வேதபகுதியில் அவர் ‘தேவனுடைய ரூபமாயிருந்தும்’ என்று தெளிவாக எழுதியிருப்பதைக் கவனியுங்கள். அதாவது, அவர் தொடர்ந்து தேவனாக இருந்த நிலையில் என்று இதற்குப் பொருள். அத்தோடு ‘அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி’ என்று சொல்லியிருப்பது அவர் தெய்வீகத்தைத் துறந்ததைக் குறிக்கவில்லை. தெய்வீகத்தோடு தொடர்ந்து இருந்தபோதும் (திரித்துவத்தின் இரண்டாம் நபராக) அதை அவர் முழுமையாகப் பயன்படுத்தி தேவன் என்று தன்னை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் முழு மானுடத்தோடு செயல்பட்டதையே அது குறிக்கிறது. தெய்வீகமும், மானுடமும் இணைந்து காணப்படும் தேவமனிதனாக அவர் பிறந்திருக்காவிட்டால் அவரால் மீட்புப் பணியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறது வேதம். மீட்புப் பணியை நிறைவேற்றவே அவர் தேவனாகவும் மனிதனாகவும் பிறக்கவேண்டியிருந்தது. அப்படி அவர் இல்லாதிருந்திருப்பாரானால் நமக்கு இரட்சிப்பு ஒருபோதும் கிடைத்திராது; இப்போது பரலோகத்தில் அவர் பிரதான ஆசாரியராகவும் இருந்திருக்க வழியில்லை.
- இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்தபோது தன்னுடைய தெய்வீகத்தை மானுடமாக மாற்றியமைத்துக் கொள்ளவில்லை.அதாவது, அவரில் தெய்வீகம் தன் தன்மையை இழந்து மானுடமாக மாறிவிடவில்லை. அப்படி அவர் செய்ததாக ஏரியன் என்ற போலிப்போதகன் மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில் விளக்கியிருக்கிறான். கானாவில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியபோது தண்ணீர் தன்னுடைய தன்மையை இழந்து முழுத் திராட்சை இரசமாக மாறியது. அது தண்ணீர் கலந்த திராட்சை இரசமாக இருக்கவில்லை. அதுபோலவே கிறிஸ்து இருந்ததாக ஏரியன் விளக்கினான். அது பெருந்தவறு. இயேசு கிறிஸ்துவில் தெய்வீகம் எந்தத் தன்மையையும் இழக்காமல் பூரணத்துவத்தோடு இருந்த நிலையில் அதோடு இயேசு மானுடத்தை இணைத்துக் கொண்டார் என்கிறது வேதம்.
பாலில் தண்ணீரைக் கலக்கின்றபோது பால் தொடர்ந்து பாலாக இருந்தபோதும் அது தண்ணீர் பாலாக மாறிவிடுகிறது. அதாவது தண்ணீரும் பாலும் கலந்த நிலையில் அது இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் தன்மைகளை இந்த முறையில் விளக்கக்கூடாது. அவரில் தெய்வீகமும், மானுடமும் எந்த மாற்றத்தையும் அடையவில்லை; அவை கலக்கவும் இல்லை. இயேசு முழுப் பூரணமுள்ள தெய்வீகத்தையும், மானுடத்தையும் கொண்டிராதிருந்தால் அவரால் மீட்புப் பணியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்க முடியாது. அவர் பெண்ணுக்கு (மேரிக்கு) மகனாகப் பிறந்தபோதும் தொடர்ந்தும் ‘வார்த்தையாக’ இருந்தார்.
- இயேசு கிறிஸ்து தன் தெய்வீகத்திலும் மானுடத்திலும் மாற்றத்தை உண்டாக்கி, இரண்டையும் கலந்து மனிதராகப் பிறக்கவில்லை.இப்படியும் சிலர் ஆதி சபைக்காலத்தில் திரித்து விளக்கியிருக்கிறார்கள். பவுல் இந்த வேதபகுதியில் தெய்வீகத்தோடிருந்து மானுடத்தையும் தன்னில் இணைத்துக்கொண்டார் இயேசு என்றுதான் விளக்கியிருக்கிறார். அவருடைய தெய்வீகத்திலோ மானுடத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவ்விரண்டும் ஒன்றோடொன்று கலந்திருந்தாலோ, அல்லது அவற்றில் ஒன்றில் மட்டும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலோ இயேசு கிறிஸ்து தேவனும் மனிதனுமாக பூரணமாக இருந்திருக்க முடியாது. அவர் தேவனும் மனிதனுமாகவே தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில்கொண்டு இருந்தார்.
- இயேசு மனிதராகப் பிறந்தபோது அதை அவர் வெறும் மனிதரூபத்தில் காட்சியளித்ததாக மட்டும் எண்ணக்கூடாது.இந்தவிதமாகவே டொஸடிசம் என்ற போலிப்போதனை விளக்குகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் தூதர்கள் ஆபிரகாமையும், லோத்தையும் சந்தித்தபோது மனித உருவில் வந்து அவர்களைச் சந்தித்தார்கள், உணவருந்தினார்கள். அதுபோல் இயேசு இருந்ததாக டொஸடிசம் விளக்குகிறது. இதுவும் பெருந்தவறான போதனை. இயேசு மனிதராகக் காட்சியளிக்கவில்லை; பூரணமான மானுடத்தைத் தன்னில் கொண்டிருந்து மனிதராக வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்தார். அவர் மானுடத்தில் செய்யவேண்டியிருந்த அனைத்தையும் மனிதராகக் காட்சியளிப்பதன் மூலம் செய்து நிறைவேற்றியிருக்க முடியாது. அவர் செய்யவேண்டியிருந்த அனைத்தையும் பூரணமான மானுடத்தில் செய்யவேண்டியதாக இருந்தது. அதுவே பிதா அவருக்கு அளித்திருந்த மீட்புப் பணி. தெய்வீகமும் மானுடமும் பூரணமாக அவரில் இருந்ததாக வேதம் விளக்குகிறது.
- இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்தபோது தம்முடைய மகிமையான தெய்வீகத்தைத் தன் மானுடத்தில் மறைத்திருந்தார்.அதாவது, திரையைப் போட்டு மற்றவர் கண்களுக்கு அது புலப்படாமல் இருப்பதற்காக மறைப்பதுபோல் அவர் தன் தெய்வீகம் மற்றவர்களுக்கு வெளிப்படாதவிதத்தில் மறைத்திருந்தார். அதனால்தான் அவரைப் பார்த்த எவரும் தேவனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; விசுவாசம் அடைந்தவர்களைத் தவிர. மானுடர்களுக்கு அவர் மனிதராக மட்டுமே, யோசேப்புவின் மகனாக மட்டுமே தெரிந்தார். எத்தனையோ தடவை அவர் பிதாவோடு தன்னை இணைத்துப் பேசியிருந்தபோதும், பிதாவும் நானும் ஒன்று என்று விளக்கியிருந்தபோதும், உங்கள் பிதாவான ஆபிரகாமுக்கு முன் நானிருந்தேன் என்று யூதர்களைப் பார்த்து சொல்லியிருந்தபோதும் அவர்கள் அவரைத் தேவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து கொல்லப் பார்த்தார்கள்.
யோவான் 5:17
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.
யோவான் 8:38
நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
யோவான் 10:15, 18, 30
15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யூதர்களால் அவருடைய தெய்வீகத்தை உணரமுடியாதபடி அது அவரில் மறைந்து காணப்பட்டது. அவரில் தெய்வீகம், அதனுடைய எந்தத் தன்மையையும் இழக்காமல் மறைந்து காணப்பட்டது. இதைத்தான் பவுல் பிலிப்பியர் 2:7ல் அவர் ‘தம்மைத்தாமே வெறுமையாக்கி’ என்ற பதங்களின் மூலம் விளக்கியிருக்கிறார்.
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
இயேசு பலதடவைகள் தன்னுடைய தெய்வீகத்தில் கிரியைகளைச் செய்திருப்பதை வேதத்தில் வாசிக்கிறோம். அவர் கானாவில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார். தண்ணீரில் நடந்தார். அநேகருடைய நோய்களைத் தீர்த்தார். மக்கள் கண்முன் அவரைப் பிடிக்கமுடியாதபடி மறைந்தார். மரித்தவர்களை உயிர்த்தெழச் செய்தார். தானே மரித்து உயிர்த்தெழுந்தார். இதெல்லாம் அவருடைய தெய்வீக நடவடிக்கைகள். இதையெல்லாம் அவர் செய்தபோதும் மக்களின் கண்கள் குருடாகி அவரை தேவனாக ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு தெய்வீகம் அவரில் மறைந்திருந்தது. இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் ஒரு தீர்க்கதரிசியாகவோ, நல்ல போதகராகவோ அல்லது கடவுளால் அனுப்பப்பட்ட மனிதராகவோ மட்டுமே பார்க்க முடிந்தது. அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள அவர்களுடைய இருதயம் இடங்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்துவை பெண்ணுக்கு மகனாகப் பிறந்த கர்த்தரின் ஒரே பேரான குமாரனாக, திரித்துவத்தின் இரண்டாம் நபராக, தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில் கொண்டிருந்த தேவமனிதனாக, அடிமையைப் போன்று தம்மை வெறுமையாக்கிப் பணிசெய்தவராக ஏற்றுக்கொள்ள மறுத்தால் கிறிஸ்தவம் இல்லாமல் போய்விடும். மாம்சத்தின் புலனுக்கு எட்டாத இந்த தேவஇரகசியத்தை நிராகரிப்போமானால் கிறிஸ்தவம் புறஜாதி மதத்தைப் போலாகிவிடும். திரித்துவப் போதனை கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைப் போதனை. அதில் குளறுபடியான எண்ணங்களைக் கொண்டிராமல் வேதம் விளக்குகின்றவிதத்தில் அதை விசுவாசியுங்கள்.
1689 விசுவாச அறிக்கை அதுபற்றித் தரும் அருமையான விளக்கத்தைக் கவனியுங்கள்.
கடவுளுடைய குமாரனாகிய பரிசுத்த திரித்துவத்தின் இரண்டாம் நபரே இவ்வுலகத்தை படைத்து, தான் படைத்த அனைத்தையும் தாங்கி ஆளுகை செய்யும் தெய்வீக நபராவார். அவரே மெய்யான, நித்திய தேவனும், பிதாவின் மகிமையின் பிரகாசமானவரும், பிதாவின் அதே சாரத்தைக் கொண்டவரும், அவருக்கு சமமானவருமாவார். இவரே, குறிக்கப்பட்ட காலத்தில் மனித சுபாவத்தை அதன் எல்லா அடிப்படைக் குணாதிசயங்களோடும், அதற்குரிய எல்லா இயலாமைகளோடும், பாவம் நீங்கலாக தன் மீது சுமந்தார். யூதா கோத்திரத்துப் பெண்மணியான மரியாளின் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, உன்னதமானவருடைய வல்லமை அவள் மீது நிழலிட்டபோது கன்னிமரியாளின் கர்ப்பத்திலே அவர் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். மேலும், வேதம் சொல்வதுபோல் அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் ஆபிரகாம் மற்றும் தாவீதினுடைய சந்ததியுமானார். இவ்விதமாக முழுமையான, பூரணமான, முற்றிலும் வேறுபட்ட தெய்வீக மற்றும் மானிடத்தன்மைகளாகிய இவ்விரண்டும் ஒரே நபரில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டது. இருந்தபோதும், இவ்விரண்டு தன்மைகளும் ஒரு தன்மை இன்னொரு தன்மையாக மாற்றமடையாமலும், ஒன்றோடொன்று கலந்துவிடாமலும், வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் எந்தவிதக் குழப்பமுமில்லாமல் அவரில் காணப்படுகின்றன. இப்படியாக, கடவுளுடைய குமாரன் இப்போது மெய்யான தேவனாகவும், மெய்யான மனிதனாகவும் இருக்கும் வேளையில் கடவுளுக்கும் மனிதனுக்கு மிடையில் மத்தியஸ்தராகிய ஒரே கிறிஸ்துவாகவும் இருக்கிறார்.
(1689 விசுவாச அறிக்கை, அதிகாரம் 8, பத்தி 2)
யோவான் 1:1-5; 10-11
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.