திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2018 -ம் ஆண்டு முதல் இதழ்

1. வாசகர்களே!

2. வேதம் மட்டுமே! வேறெதுவும் வேண்டாம்

3. தேவபயத்திற்கும் நம்முடைய கிரியைகளுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு 

4. கிறிஸ்தவ வைராக்கியமும் முதலாவது கட்டளையும்

 

 

வாசகர்களே! 

இந்த இதழை நேரத்தோடு முடிக்க இதழாசிரியரோடு உழைத்திருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் அச்சகத்தாருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். முழு நேர பத்திரிகை ஆசிரியராக இருப்பதற்கும், பகுதி நேர பத்திரிகை ஆசிரியராக இருப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. பகுதி நேர ஆசிரியர் பல வேலைகளுக்கு மத்தியில் இதழை வெளியிடும் கடமை இருக்கிறது. இந்தப் பணியில் கர்த்தரின் துணையை இதழ் ஆரம்பித்த காலத்தில் இருந்து கண்டு வருகிறோம். கர்த்தருக்கு நன்றி!

‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தவாதக் கோட்பாட்டை கிறிஸ்தவர்கள் மத்தியில் அநேகர் விஷயம் தெரியாமல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கோட்பாட்டை சீர்திருத்தவாத வரலாறு தெரியாமல் விளங்கிக்கொள்ள முடியாது. இது பற்றி இந்த இதழில் ஒரு ஆக்கத்தைத் தந்திருக்கிறேன்.

மகிழ்ச்சியான ஒரு விஷயம் – வரும் ஜனவரி மாதத்தில் மூன்று வருட இதழ்களைச் சுமந்து திருமறைத்தீபத்தின் 6ம் வால்யூம் 608 பக்கங்களோடு வெளிவரவிருக்கிறது. சீர்திருத்த வெளியீடுகளின் சென்னை முகவரியோடு தொடர்புகொண்டு வாசகர்கள் இதனைப் பெற முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த இதழில் இன்னுமொரு மகிழ்ச்சி தரும் விஷயம் போதகர் அல்பர்ட் என் மார்டினின் தேவபயத்தைப் பற்றிய தொடர்கட்டுரையும், போதகர் டேவிட் மெரெக்கின் பக்தி வைராக்கியம் பற்றிய தொடர்கட்டுரையும் வெளிவருவதாகும். அநேக வாசகர்கள் இவை தரும் நடைமுறை பயன்களை எங்களுக்கு விளக்கியிருக்கிறார்கள். இதுபோன்ற சத்தியங்களைக் கேள்விப்பட்டதேயில்லையே என்பதுதான் பொதுவாக நம் காதில் விழுகின்ற வார்த்தைகளாக இருக்கின்றன. இந்த இதழில் வந்திருக்கும் தொடர்கள் உங்களை சிந்தித்து செயல்பட வைக்கவேண்டும். அந்தளவுக்கு அதிக நடைமுறைப் பயன்பாடுகளோடு (Applications) இரண்டும் வந்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்கவும் கேட்கவும் முடியாதிருக்கும் வேதசத்தியங்களைச் சுமந்து இந்த இதழ் வருகிறது. கர்த்தர், நம்மினத்தின் மத்தியில் நாம் ஒருபோதும் கண்டிராத பெரும் ஆத்மீக சீர்திருத்தத்தை எழுப்ப அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஜெபியுங்கள். அதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது. எப்போதும்போல் இந்த இதழும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்

 

 

வேதம் மட்டுமே! வேறெதுவும் வேண்டாம்

நான் வாசித்த மூன்று நூல்கள்

சமீபத்தில் அருமையான மூன்று ஆங்கில நூல்களை வாசிக்க முடிந்தது. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் அவரைக் கவனித்துக்கொள்ளுவதற்காக ஊழியப்பணிகளில் இருந்து இரண்டு வாரம் ஓய்வெடுத்திருந்தேன். அந்தக் காலங்களைப் பிரயோஜனமாகப் பயன்படுத்தி இந்த நூல்களை வாசிக்கமுடிந்தது. உண்மையில் இந்த மூன்று நூல்களையும் ஒரே நேரத்தில் மாறி மாறி வாசித்தேன். ஒன்று கர்த்தரின் உடன்படிக்கையைப்பற்றி நண்பர் கிரெக் நிக்கல்ஸ் எழுதிய இறையியல் நூல் (The Covenant Theology, Greg Nichols, 365pgs). இது கவனத்தோடு பொறுமையாக வாசிக்கவேண்டிய இறையியல் ஆக்கம். இரண்டாவது, விசுவாச அறிக்கைகளின் அவசியத்தைப் பற்றி கார்ல் ட்ரூமன் எழுதிய நூல் (Creedal Imperative, Carl Trueman). மூன்றாவது போதக, பிரசங்க ஊழியப்பணி பற்றி ரொபட் ரேமன்ட் எழுதிய நூல் (The God Centered Preacher, Robert Reymond, 351pgs).

 

 

இந்த மூன்று நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல் காணப்பட்டாலும் ஒரு முக்கிய விஷயத்தில் மூன்று நூலாசிரியர்களும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகவே நூலில் பல்வேறு விதங்களில் விளக்கியிருக்கிறார்கள். அதாவது இவர்கள் மூவரும் 16ம், 17ம் நூற்றாண்டு விசுவாச அறிக்கைகளின் அடிப்படையிலான சீர்திருத்த விசுவாசத்தை உறுதியோடு விசுவாசிக்கிறவர்கள். இவர்களில் இருவர் பிரஸ்பிடீரியன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் சீர்திருத்த பாப்திஸ்து, என் நல்ல நண்பர். கார்ல் ட்ரூமனும், ரேமன்டும் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும், நண்பர் நிக்கல்ஸ் 1689 விசுவாச அறிக்கையையும் விசுவாசிக்கிறவர்கள். முதலிரு பிரெஸ்பிடீரியன் இறையியலறிஞர்களும் சீர்திருத்த பாப்திஸ்துகளை மதிக்கிறவர்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸ் தன் நூலில் சினாட் ஆப் டோர்ட் மற்றும் பியூரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து தன் நூலை எழுதியிருக்கிறார். சாதாரணமாக பிரெஸ்பிடீரியன் பிரிவினர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பாப்திஸ்துகள் சீர்திருத்தவாதத்தை நம்புகிறவர்களாக இருக்க முடியாது (Baptists cannot be Reformed) என்று கருதி வந்தபோதும் இந்த இருவருக்கும் அந்த வியாதி இல்லை. இந்த இருவரும் சீர்திருத்த பாப்திஸ்து இறையியலறிஞர்களோடும், திருச்சபைகளோடும் நல்லுறவு வைத்து பல விஷயங்களில் இணைந்துழைக்கிறார்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸும் இருந்து வருகிறார். இந்த மூவருக்கும் 17ம் நூற்றாண்டில் பியூரிட்டன் பிரெஸ்பிடீரியன்களும், பியூரிட்டன் ஜோன் ஓவனின் கொங்கிரிகேஷனலிஸ்டுகளும், பியூரிட்டன் சீர்திருத்த பாப்திஸ்துகளும் நல்லறவு வைத்திருந்து இணைந்து பணியாற்றியிருந்ததை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

நண்பர் கிரெக் நிக்கல்ஸின் கர்த்தரின் உடன்படிக்கைபற்றிய நூல், 16, 17ம் நூற்றாண்டு சீர்திருத்த பியூரிட்டன் காலப்பகுதிகளில் வெளிவந்த விசுவாச அறிக்கைகளைப் பின்னணியாகக் கொண்டு கர்த்தரின் உடன்படிக்கை பற்றிய சத்தியத்தை, அதுவும் அதுபற்றிய சீர்திருத்த பாப்திஸ்துகளின் நிலைப்பாட்டை ஆய்வு செய்கிறது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியல் அறிஞரான கார்ல் ட்ரூமன், சத்தியத்தில் திருச்சபை நிலைத்திருக்க விசுவாச அறிக்கை எத்தனை அவசியமானது என்பதைத் துல்லியமாக விளக்குகிறார். இதுபற்றி இதுவரை நான் வாசித்திருக்கும் நூல்களில் இது சிறப்பானது என்று சொல்வேன். ரொபட் ரேமன்ட் போதக, பிரசங்க ஊழியப்பணி வேதபூர்வமானதாக இருப்பதற்கு அது சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படையில், விசுவாச அறிக்கைகள் விளக்கும் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார். இத்தனை தைரியத்தோடு இதை இவர் எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்; மறுபுறம் ஆனந்தமும்கூட. ஆகவே, இவர்கள் மூவரும் வரலாற்று விசுவாச அறிக்கை விளக்கும் சத்தியங்களில் ஆழமான நம்பிக்கைகொண்ட, அவற்றை அறிக்கையிடும் இறையியல் அறிஞர்கள் (Confessional theologians).

வேதம் மட்டுமே

‘வேதம் மட்டுமே வேறெதுவும் தேவையில்லை’ என்ற சுலோகம் இன்று நேற்றில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதை யெகோவாவின் சாட்சிகளில் இருந்து இன்றிருக்கும் சுவிசேஷக் கிறிஸ்தவ சபைப்பிரிவுகள்வரை அனைவரும் அறிக்கையிட்டு வருகிறார்கள். இவர்கள் வேதத்திற்கு மட்டுமே நாம் அடிபணிவோம், வெறெதற்கும் அடிபணிய மாட்டோம் என்று மட்டுமல்லாமல், வேதத்தைத் தவிர வெறெதையும் வாசிக்க மாட்டோம், சபைக்குள்ளும் அனுமதிக்கமாட்டோம் என்று அறைகூவலிடுகிறார்கள். ஆங்கிலத்தில் இந்த நிலைப்பாட்டை ‘No Creed, No Confession, Bible alone’ என்று சொல்லுவார்கள். இதை மேலைத்தேய சபைகள் மத்தியில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் எங்கும் பரவலாகக் காணலாம்.

உண்மையில் ‘வேதம் மட்டுமே’ (Scripture alone) என்ற வார்த்தைப் பிரயோகம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் எழுந்தது. மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் இதை வலியுறுத்திப் பேசி எழுதியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அன்று ரோமன் கத்தொலிக்க மதம் வேதத்தை அடியோடு புறக்கணித்து பெயரளவில் மட்டும் அதைப் பயன்படுத்தி வேதத்தில் இல்லாத எல்லாவற்றையும் கத்தோலிக்கர்கள் தங்களுடைய ஆத்மீக விருத்திக்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கிரியையினாலேயே இரட்சிப்பு கிடைக்கும் என்று போதித்த கத்தோலிக்க மதம், பரிசேயர்களைப்போல ஆயிரக்கணக்கான நிபந்தனைகளை உருவாக்கி கத்தோலிக்கர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இயேசு பிரசங்கித்த மலைப்பிரசங்கம் பரிசேயர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை கத்தோலிக்க மதத்திற்கும் எதிரானதாகும். கத்தோலிக்க மதம் அன்று இந்த விதத்தில் வேதத்தின் அதிகாரத்தையும், பயன்பாட்டையும் சிதைத்து தான் சுயமாக உண்டாக்கிய நிபந்தனைகளுக்கு மக்களை அடிமைப்படுத்தியதால் அதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்ட சீர்திருத்தவாதிகள் ‘வேதம் மட்டுமே’ என்ற சுலோகத்தை உருவாக்கினார்கள். இந்த வார்த்தைப்பிரயோகத்தில் ‘மட்டுமே’ (alone) என்ற வார்த்தை வேதத்தைத் தவிர வெறெதுவும் நமக்கு அதிகாரமாக இருக்கக்கூடாது என்ற அர்த்தத்தையும், அதிலிருந்து மட்டுமே எந்தப் போதனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற போதனையையும் விளக்குவதாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் புரிந்துகொள்ளுவதற்கு நமக்கு வரலாற்று ஞானம் அவசியமாகிறது. 16ம் நூற்றாண்டு வரலாற்றில் இந்த வார்த்தைப் பிரயோகம் உருவாகியிருப்பதால் அதன் அடிப்படையில் மட்டுமே இதை விளங்கிக்கொண்டு விளக்கங்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வார்த்தைப் பிரயோகம் பொருளற்றதாகிவிடும்; தவறான கருத்தைத் தந்துவிடும். இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களுமே வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் எழுத்தில் வடித்து நமக்குத் தந்திருக்கிறார்கள். ‘வேதம் மட்டுமே’ என்று அறைகூவலிட்ட இந்த தேவமனிதர்கள் விசுவாச அறிக்கைகளைப் பயன்படுத்துவது வேதத்திற்கு எதிரான செயல் என்று எண்ணியிருந்தால், அவற்றை எழுதி, வெளியிட்டு, பயன்படுத்தியோடு திருச்சபைக்கு உதவட்டும் என்று விட்டுச் சென்றிருப்பார்களா? சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தவாத வார்த்தைப் பிரயோகம் விசுவாச அறிக்கைகளுக்கும், வினாவிடைப்போதனைகளுக்கும் எதிரான வார்த்தைப் பிரயோகமல்ல; அப்படி எண்ணுவது மிகப் பெரிய தவறு. சமீபத்தில், இயன் மரே எழுதி வெளிவந்த ஒரு நூலில், ‘வேதத்தை அடியோடு அகற்றி அதன் இடத்தை எடுத்துக்கொள்ளுவதல்ல விசுவாச அறிக்கைகளின் நோக்கம்; சத்தியத்திற்கு மாறாக அதற்கு விளக்கங்கொடுப்பதைத் தவிர்ப்பதுதான்’ என்று விளக்கியிருக்கிறார்.

இன்று சுவிசேஷத் திருச்சபைகளில் பெரும்பாலானவை இந்த வரலாறெல்லாம் தெரியாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘வேதம் மட்டுமே’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துகிற இவர்கள் இதன் மூலம் விளக்குவதென்ன தெரியுமா? ‘நாங்கள் எந்த விசுவாச அறிக்கையையும் வைத்துக்கொள்ள மாட்டோம், நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக துல்லியமாக விளக்கமாட்டோம். வேதத்தை விசுவாசிக்கிறோம், இயேசுவை விசுவாசிக்கிறோம், அது மட்டுமே முக்கியம் வேறெதுவும் முக்கியமில்லை’ என்று சொல்லுகிறார்கள். அதனால்தான் இவர்களுடைய சபைகளில் எதை விசுவாசிக்கிறோம் என்பதை விளக்கும் எந்தவித அறிக்கையும் இருக்காது. சட்டவிதிகள் இருக்காது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்ற வார்த்தைகளைக் தவிர வேறெதையும் இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. விசுவாச அறிக்கை தேவையில்லை, நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக சொல்லமாட்டோம் என்று இவர்கள் சொல்லுகிறபோது இவர்கள் ஏற்கனவே அந்த அறிக்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணரவில்லை. உலகத்தில் எவருமே ஏதாவதொரு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதில்லை. ஆண்டவர் இல்லை என்று மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய நம்பிக்கையாக, அறிக்கையாக இருக்கிறது. தன் விசுவாசம் எப்படிப்பட்டதென்று தெளிவாக விளக்க மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய அறிக்கையாக இருக்கிறது. அதாவது, குறைந்தளவுக்கு மட்டுமே என் விசுவாசம் இருக்கும் என்பது அவனுடைய அறிக்கை.

விசுவாச அறிக்கை அலர்ஜி

கார்ல் ட்ரூமன் தன்னுடைய நூலில் சொல்லுகிறார், ‘எதையும் அறிக்கையிட மாட்டோம் என்று சொல்லுகிற இவர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதை மறந்துவிடுகிறார்கள். தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட மாட்டோம் என்பது இவர்களுடைய அறிக்கையாக இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.’ நீங்களே ஆராய்ந்து பாருங்கள், விசுவாச அறிக்கை அவசியமில்லை என்றும், தாங்கள் விசுவாசிப்பதை விளக்கிச் சொல்லமாட்டோம் என்றும், வேதத்தை மட்டுமே நம்புகிறோம் என்றும் சொல்லுகிற சபைப்பிரிவுகளெல்லாம் எந்த அறிக்கையையும் கொண்டிருக்கவில்லையா? நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள். எந்த விசுவாச அறிக்கையையும் கொண்டிராத கெரிஸ்மெட்டிக் சபை அந்நிய பாஷையில் பேசாதவர்கள் ஆவியில்லாதவர்கள் என்பதை அடித்துச் சொல்லிவருகிறது. சீர்திருத்த சத்தியம் வேண்டாம், விசுவாச அறிக்கை வேண்டாம், சபை சட்டஅமைப்பு வேண்டாம் என்று சொல்லுகிற சகோதரத்துவ சபைகள் விடமாட்டேன் சாமி என்று, காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. எனவே ‘வேதம் மட்டுமே’ என்று அறிக்கையிடுகிற இவர்கள் உண்மையில் பல விஷயங்களை ஆணித்தரமாக விசுவாசிக்கும் அதேவேளையில் அவற்றை விளக்கிச் சொல்ல மட்டும் மறுக்கிறார்கள்.

தாங்கள் விசுவாசிக்கின்றவற்றை வெளிப்படையாக சொல்ல மறுத்து, தாங்கள் யார் என்பதை இனங்காட்டிக் கொள்ளாமல் அதை மறைத்து, விசுவாச அறிக்கை கூடாது என்று இவர்கள் சொல்லுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

  1. இவர்களில் பலருக்கு உண்மையில் எதை விசுவாசிக்கிறோம் என்பதில் ஆணித்தரமான உறுதியில்லை. அதனால் விசுவாசிப்பவற்றை இவர்களால் தெளிவாக அறிக்கையிட முடியாதிருக்கிறது. விசுவாச அறிக்கை தேவையில்லை என்று இவர்கள் கூறுவது உண்மையை மறைப்பதற்காகவே.
  2. பலர் தாங்கள் விசுவாசிப்பதை அறிக்கையிட்டு தங்களை இனங்காட்டிவிட்டால் எல்லாத்தரப்பாரும் சபைக்கு வராமல் போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். அதனால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்பதை மட்டுமே சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறார்கள். இதனால் பலதரப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களும் சபைக்கு வருகிற வாய்ப்பு இருக்கிறது.
  3. வேதம் மட்டுமே என்று சொல்லுவதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு போதகன் தான் எதை விசுவாசிக்கிறேன் என்பதை மறைத்து ஆளாளுக்கு ஏற்றவிதத்தில் போதனைகளைத் தந்து தன்னுடைய தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.
  4. சிலர் வேதசத்தியங்களை ஆழமாக அறிந்திருப்பது அவசியமில்லை என்றும், அப்படி ஆழமாக அறிந்திருப்பது ஐக்கியத்துக்கு உதவாது என்றும் கருதி விசுவாச அறிக்கை பிரிவினையை உண்டாக்கும் என்று அதற்கு விலகி நிற்கிறார்கள்.
  5. சிலர் எந்த விசுவாச அறிக்கையும் வேதத்திற்கு முரணானது என்ற முற்றிலும் தப்பான எண்ணத்தில் அதை நிராகரிக்கிறார்கள்.
  6. சிலர் மனிதனால் எழுதப்பட்ட விசுவாச அறிக்கையை வைத்திருப்பதும், நம்புவதும் வேதத்தில் இருக்க வேண்டிய நம்பிக்கையை சிதைத்துவிடும் என்று நம்பி அதற்கு விலகி நிற்கிறார்கள்.
  7. வேறு சிலர் விசுவாச அறிக்கைகள் மிகவும் பழமையான வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததால் (16, 17ம் நூற்றாண்டு) அவற்றால் நவீன கால கிறிஸ்தவத்துக்குப் பயனில்லை என்ற மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சுவிசேஷ கிறிஸ்தவர்களில் அநேகர் தரும் இந்தக் காரணங்களுக்கெல்லாம் பதிலளிப்பது அவசியம். விசுவாச அறிக்கைகளை நிராகரித்து அவற்றை வேதத்திற்கு முரணானவையாகப் பார்க்கிறவர்களைப்பற்றி கார்ல் ட்ரூமன் முக்கியமானதொரு உண்மையை நம்முன் வைக்கிறார். ‘விசுவாச அறிக்கை மனிதன் எழுதியது, அது தேவையில்லை என்கிறவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து, அவற்றை எழுத்தில் வெளியிடாமலும், எவரும் அவற்றை ஆராய்ந்து அவை வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்க வழியில்லாமலும் செய்கிறார்கள்.’ இதுவே இவர்களைப்பற்றிய உண்மை. இவர்கள் எந்த விசுவாச அறிக்கையையும் எதிர்ப்பதற்குக் காரணம் தங்களுடைய இரகசியமான நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து எவரும் அவற்றை அறிந்துகொள்ளாமல் இருக்கச் செய்வதுதான்.

விசுவாசத்தை அறிக்கை செய்யாவிட்டால் ஆபத்து

விசுவாச அறிக்கைகளை ஏற்று அவற்றிற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் இல்லை ஆபத்து; அவற்றை வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்காமல் இருப்பதுதான் ஆபத்து. எதுவுமே வேதத்தின் போதனைகளால் ஆராயப்பட வேண்டும். வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, வேதத்தினால் ஆராயப்பட்டு, ஆவிக்குரிய இறையியலறிஞர்களால் பரிசீலிக்கப்பட்டு 300 வருடங்களுக்கு மேலாக சீர்திருத்த திருச்சபைப் பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு ஆய்வுக்குள்ளாகி, அங்கீகரிக்கப்பட்டு, வரலாற்றில் நிலைத்திருக்கும் விசுவாச அறிக்கைகள் எப்படி திருச்சபைகளுக்கு ஆபத்தானவையாக அமைய முடியும்? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சீர்திருத்த விசுவாச அறிக்கைகள் எதுவுமே தனிமனிதனால் எழுதப்பட்டவையல்ல. அவை சீர்திருத்தவாத, பியூரிட்டன் திருச்சபை இறையியல் அறிஞர்களால் திருச்சபைகளின் அனுமதியோடு பலகாலம் கூடி ஆய்வுசெய்து, விவாதித்து, திருச்சபைகளால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அங்கீகரித்து திருச்சபைகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டவை. அதனால்தான் இவை திருச்சபை விசுவாச அறிக்கைகளாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த வகையிலேயே சினாட் ஆப் டோர்ட், பெல்ஜிக் விசுவாச அறிக்கை, ஹைடில்பேர்க் வினாவிடைத் தொகுப்பு, வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைத் தொகுப்புகள், 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.

விசுவாச அறிக்கைகள் பழங்காலத்தைச் சேர்ந்தவை; அவற்றால் நவீன காலத்துக்கு நடைமுறைப்பயனில்லை என்ற வாதம் உப்புச்சப்பில்லாதது. வேதமும் மிகவும் பழமையானதுதான். அதனால் அதை ஒதுக்கிவிடப் போகிறீர்களா? விசுவாச அறிக்கைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போது எழுதப்பட்டவை என்பதல்ல முக்கியம், அவை எதைப் போதிக்கின்றன என்பதுதான் முக்கியம். இறையியலில், ஏனைய இறையியல் பயிற்சிகளைப்போல வரலாற்று இறையியல் (Historical theology) மிகமுக்கியமானது. இது வேதசத்தியங்கள் எந்தெந்தக காலத்தில் என்னென்ன ஆபத்துகளைச் சந்தித்தன என்றும், திருச்சபை அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சத்தியத்தில் உறுதியாக இருந்தன என்றும் விளக்குகின்றது. வரலாற்று இறையியலை வாசிக்கின்றபோது ஆதிசபை முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கடப்பதற்கு முன்பே பல போலிப்போதனைகளைக் கர்த்தரைக் குறித்த போதனைகள் தொடர்பாக சந்தித்திருப்பதையும் அதன் காரணமாக எழுந்த விசுவாச அறிக்கைகளையும் விளக்குவதைக் காண்கிறோம். (அப்போஸ்தலர்கள் விசுவாச அறிக்கை, நைசீன் விசுவாச அறிக்கை 381, கெல்சிடோனியன் விசுவாச அறிக்கை 451). இந்தப் பழம்பெரும் வரலாறில்லாமல் நவீனகாலத்தில் சத்தியத்துக்கு எதிராக உருவாகும் ஆபத்துக்களை ஒருவரால் எப்படித் தடுத்து வெற்றிகொள்ள முடியும்? திருச்சபை வரலாறு நமக்கு வலிமையூட்டுகிறது; வரலாற்றை நிராகரிக்கிறவர்களின் ஆவிக்குரிய எதிர்காலம் வளமையாக இருக்கமுடியாது. ‘விஞ்ஞான உலகம் பெற்றுத்தந்திருக்கும் குழந்தையே வரலாற்றை நிராகரிக்கும் நவீன காலத்தவறு’ என்கிறார் கார்ல் ட்ரூமன்.

வார்த்தைகளுடையதும், வார்த்தைப் பிரயோகங்களினதும் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே விளக்கியிருந்தேன். சிந்தித்துப் பாருங்கள்; வரலாற்றில் எழுந்த விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தேவையற்றவையாக இருக்குமானால் எங்கிருந்து நாம் இறையியல் வார்த்தைப் பிரயோகங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், பரிகாரப்பலி, விசுவாசத்தினால் மட்டும், கிருபையின் அடிப்படையிலான உடன்படிக்கை, நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல், முழுமையான பாவச்சீரழிவு போன்ற இறையியல் வார்த்தைப் பிரயோகங்களை அறியாமல் தட்டுத்தடுமாறி அரைகுறை வேத அறிவோடு 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த கத்தோலிக்க காட்டாட்சிக்காலத்தில் இருந்ததைப்போலல்லவா தள்ளாடிக்கொண்டிருந்திருப்போம். வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு இந்த வார்த்தைப் பிரயோகங்களை அறிமுகப்படுத்தி வேதஞானத்தை வளர்த்துக்கொள்ள துணை செய்கின்றன.

விசுவாச அறிக்கைகள் தெளிவாக துல்லியமாக வேத சத்தியங்களை முறைப்படுத்தி வழங்குவதால் சத்தியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவும் முடிகிறது. ‘கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார்’ என்பது பரவலாக சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்பிவரும் ஒரு போதனை. இது தவறு என்பதை அறியாமலேயே பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள். இது எத்தனை ஆபத்தானது என்ற உணர்வும் அவர்களுக்கில்லை. இது ஒன்றும் அத்தனை பெரிய ஆபத்தான விஷயமல்ல என்று அசட்டை செய்கிறவர்களும் அநேகம். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் ஆராய்ந்து வாசிக்கின்றபோதுதான் இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயமல்ல; மிகவும் ஆபத்தான, கிறிஸ்துவின் வருகையின் காரணத்தையும், அவர் நிறைவேற்றிய பரிகாரப்பலியின் தன்மையையும், சுவிசேஷத்தையும் மாற்றிப்போதிக்கின்ற மோசமான போலிப்போதனை என்பது தெரியவரும். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்தாதவர்கள் மத்தியில் நடமாடி வரும் இந்தப் போதனை எந்தளவுக்கு விசுவாச அறிக்கைகள் அவசியமானவை என்பதை உணர்த்துகிறதா, இல்லையா?

‘நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறோம், அதனால் பத்துக் கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றவேண்டிய அவசியமில்லை’ என்பதைக் காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களும், அன்டிநோமியனிச புதிய உடன்படிக்கை இறையியலைப் பின்பற்றுகிறவர்களும், பொதுவாகவே அனைத்து சுவிசேஷ கிறிஸ்தவ திருச்சபைகளும் நம்பி வருகின்றன. இது எத்தனை தவறான போதனை என்பதை வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு விளக்கி சத்தியத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் வரலாற்று விசுவாச அறிக்கைகளை நிராகரிக்கிறார்கள். அதில் ஆச்சரியமில்லை; ஏனெனில் அவர்களுடைய போதனையில் அது மண்ணை வாரிக்கொட்டுகிறது.

இதேபோல் திரித்துவம் பற்றியும், கிறிஸ்து பற்றியும், கிறிஸ்துவின் பரிகாரப்பலி பற்றியும், நீதிமானாக்குதல் பற்றியும், பரிசுத்தமாக்குதல் பற்றியும் விசுவாச அறிக்கைகள் தெளிவான வேதவிளக்கத்தைத் தந்து போலிப்போதனைகளை இனங்காட்டி சத்தியப்பாதுகாப்புத் தூணாக நிற்கின்றன. இந்த அடிப்படை வேத சத்தியங்களில் வேதத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறவர்களல்லவா விசுவாச அறிக்கைகளைக் கண்டு பயப்பட வேண்டும்? சத்தியத்துக்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்கிற கிறிஸ்தவ விசுவாசி, விசுவாச அறிக்கைகளைக் கைநீட்டி வரவேற்கிறவனாக அல்லவா இருப்பான்.

மூன்று நல்ல நூல்களை வாசித்த சுகமான அனுபவம் மட்டுமல்லாது, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்த வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்து இந்நூல்களை எழுதியிருக்கும் ஆசிரியர்களின் விசுவாசமும் எனக்கு மனநிறைவைத் தந்தது. வரலாற்று சீர்திருத்தவாதத்தின் ஐந்நூறாவது ஆண்டைக் கடந்து வந்திருக்கும் இக்காலத்தில் இனியாவது ‘வேதம் மட்டுமே’ என்று விஷயம் தெரியாமல் உளறிவராமல் அந்த வார்த்தைப் பிரயோகத்தின் உள்ளர்த்தத்தை அறிந்துகொள்ள சுவிசேஷ கிறிஸ்தவர்கள் முயலவேண்டும் என்பதே என் விருப்பம்.

 

 

தேவபயத்திற்கும் நம்முடைய கிரியைகளுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு

வேதம் போதிக்கும் தேவபயம் – 5 – அல்பர்ட் என். மார்டின்

[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

முந்தைய அதிகாரத்தில், எப்போதெல்லாம் தேவபயம் காணக்கூடியதாக இருக்கிறதோ, அது கிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக, கடவுள் தம்முடைய வல்லமையினால் தந்தது என்பதைப் பார்த்தோம். ஆகவே தேவபயம் என்பது பாவமன்னிப்பை மகிழ்ச்சியோடு உணர்வதாகிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இதைப்பற்றி பியூரிட்டன்களில் ஒருவரான, தாமஸ் மென்டன் (Thomas Manton) என்பவர், அருமையாக சொல்லியிருக்கிறார், “கண்டனம் பண்ணுகிற கடவுளைப் பற்றி நம்முடைய இருதயம் வெட்கப்பட்டாலும், அவரே மன்னிக்கிற கடவுளாக இருப்பதனால், அவரை நெருங்கிப் பின்தொடரவும் செய்கிறது. ஆகவே தேவபயமானது, கிறிஸ்துவுக்குள்ளாக கர்த்தருடைய நன்மையை அறிந்துணரச் செய்கிறதே தவிர, நம்முடைய உள்ளத்தை புண்படுத்துகிறதில்லை”. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலாகிய பாவமன்னிப்பை ஒருவன் அறியாதவரை, அவன் ஒருபோதும் கடவுளைப்பற்றிய மெய்யான பயத்தைக் கொண்டிருக்க மாட்டான். அவன் கடவுளைப் பற்றி பயங்கரமாக உணரலாம், அவரைப்பற்றிய திகிலைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த பயங்கரமும், திகிலும் கடவுளைவிட்டு அவனைத் தள்ளி நிற்கும்படிச் செய்யும். ஆனால் பாவமன்னிப்பின் உணர்வோடு இணைந்திருக்கிற தேவபயமானது, கடவுளையும் அவருடைய வழிகளையும் பற்றிக்கொண்டிருக்கும்படி, அவனைக் கடவுளிடத்தில் நெருங்கிச் சேரும்படிச் செய்யும்.

இப்போது, அடுத்த குறிப்பாகிய, “தேவபயத்திற்கும் நம்முடைய நடத்தைக்கும் இடையிலிருக்கிற தொடர்பைப்” பற்றி பார்க்கலாம். இதுபற்றி இரண்டு கூற்றை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவது கூற்று, “தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை உருவாக்கும்”. இரண்டாவது கூற்று, “தேவபயமின்மையே தேவபக்தியில்லாத வாழ்க்கையை உருவாக்கும்”.

தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை உருவாக்கும்

தேவபிள்ளையினுடைய வாழ்க்கையில் தேவபயம் ஏற்படுத்தும் நடைமுறை தாக்கம் என்ன? பலதரப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் வாழ்ந்த ஆண்களையும் பெண்களையும் பற்றிய வேதப்பகுதிகளை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்போம். அவர்கள் மெய்யான தேவபக்தியுடன் வாழ்ந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நாம் கவனித்துப் பார்ப்போமானால், அதற்கெல்லாம் ஆணிவேராக இருந்தது தேவபயம் என்பதாகவே பார்க்க முடியும்.

ஆபிரகாம்

ஆதியாகமம் 12வது அதிகாரத்தின் முதல் சில வசனங்களில், ஆபிரகாம் தன்னுடைய இடத்தைவிட்டு வெளியேறும்படி தேவனால் அழைக்கப்பட்டதாக நாம் வாசிக்கிறோம். பிறகு, ஆதியாகமம் 20வது அதிகாரத்தில், ஆபிரகாம் தன் அழகான மனைவியாகிய சாராளோடு பிரயாணம் செய்வதாகக் காண்கிறோம். ஒருவழியாக அவர்கள் கேரார் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார்கள். அந்த இடத்தின் ராஜா கடவுள் பயமில்லாதவன் என்பது ஆபிரகாமுக்குத் தெரியும். அதுமட்டுமல்லாமல், கடவுள் பயமில்லாத இப்படியான ராஜாக்கள், அழகான பெண்களைப் பார்த்தால் என்ன செய்வது வழக்கம் என்பதையும் ஆபிரகாம் அறிந்திருந்தார். ஆகவே ஆபிரகாம், “இப்படியான இடங்களுக்கு வருகிறபோது, அந்த ராஜாக்கள் என் மனைவியைப் பார்த்தால், அவர்கள் இவள் மேல் விருப்பங்கொள்ளுவார்கள். அவளை அடைவதற்கு நான் இடையில் தடையாக இருப்பேன் என்று எண்ணி, அவளை தன்னுடையவளாக்கிக்கொள்ளுவதற்காக என்னை இல்லாமலாக்கிவிடுவார்கள். ஆகவே நான் அவர்களிடத்தில் பாதி உண்மையைத்தான் சொல்லப்போகிறேன், அதாவது சாராள் என் சகோதரி என்று சொல்லப்போகிறேன்” என்று முடிவெடுத்தார். அது பாதி உண்மையாக இருந்தபோதிலும், உண்மையில் அது முழுமையான பொய். அவர்கள் இருவருக்கிடையில் இரத்த சம்பந்தமான உறவு இருந்தது. சாராள் ஆபிரகாமின் சகோதரி என்பதைக் காட்டிலும் மேலானவள், அதாவது சாராள் ஆபிரகாமின் மனைவியாகவும் இருந்தாள். ஆபிரகாமுடைய அந்த பொய்யின் காரணமாக, அபிமெலேக்கு சாராளைத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு சென்றுவிட்டான். ஆனாலும் அவன் அவளோடு எந்தவிதமான உடலுறவு சம்மந்தமான விஷயங்களில் ஈடுபடாதபடி கர்த்தர் தடுத்தார். பிறகு கர்த்தர் அபிமெலேக்குக்கு கனவில் தோன்றி, “உன்னுடைய மறுமனையாட்டிகளில் ஒருவளாக இவளை எடுத்துக்கொள்ளலாம் என்று நீ எண்ணினால், நீ செத்தவன்” என்றார் (ஆதியாகமம் 20:3). ஆகவே, அபிமெலேக்கு ஆபிரகாமிடம் சென்று, “நீ ஏன் எனக்கு இப்படிச் செய்தாய்” என்றான் (ஆதியாகமம் 20:9). ஆபிரகாமின் பதிலைக் கவனியுங்கள், “இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்” என்றார் (ஆதியாகமம் 20:11).

ஆபிரகாம் என்ன சொன்னார் என்பதை கவனித்தீர்களா? ஆபிரகாம் அபிமெலேக்கிடம், “அபிமெலேக்கே, நீங்கள் என்னைக் கொன்று போட்டுவிட்டு, என் மனைவியை எடுத்துக்கொள்ளுவீர்கள் என்று நான் பயந்ததற்கான காரணத்தை நீர் என்னிடம் கேட்கிறீர், இல்லையா? இதுதான் அதற்குக் காரணம். என்னவென்றால், இது தெய்வபயமில்லாத இடம். நீரும் தெய்வபயமில்லாதவர். எனக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திய மெய்யான அந்த தேவனைப் பற்றிய அறிவு இந்த இடத்தில் இல்லாததனால், இங்கு தேவபயமும் இருக்காது என்று நான் அனுமானித்தேன். ஏனென்றால், கடவுளைப் பற்றிய சரியான பார்வையில்லாத இடத்தில் தேவபயத்தின் எந்த அறிகுறியும் இருக்க முடியாது. எங்கு தேவபயம் இல்லையோ, அங்கு ஒழுக்கக் காரியங்களிலும் உணர்வற்றவர்களாகவே இருப்பார்கள். ஆகவே தேவபயம் இல்லாததனால், உங்களுடைய நடத்தையும் தேவபயமில்லாததை பிரதிபலிக்கிறதாகவே இருக்கும். ஆகவேதான் நான் இப்படிச் செய்தேன்” என்றார். தேவபயம் இருக்கிற இடத்தில்தான் தேவபக்தியும் வளர முடியும் என்று ஆபிரகாம் அனுமானித்தார். தேவபயம் இல்லாத இடத்தில் தேவபக்தியும் இருக்க முடியாது. ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம், தேவபயத்திற்கும் தேவபக்தியுள்ள நடைமுறை வாழ்க்கைக்கும் இணைபிரியா தொடர்புண்டு என்பதை வரலாற்றில் தேவன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை நாம் காணலாம்.

யோசேப்பு

இதே போதனையை விவரிக்கிற இன்னொரு சந்தர்ப்பத்தை ஆதியாகமம் 42வது அதிகாரத்தில் காணலாம். யோசேப்பின் சகோதரர்கள் தானியம் வாங்கும்படியாக எகிப்திற்கு வந்திருந்தார்கள். அப்போது, யோசேப்பு அரியாசனத்தில் பார்வோனுக்கு அடுத்த நிலையில் இருந்தார். வந்திருந்த அவர்கள் தன்னுடைய சகோதரர்கள்தான் என்பதை யோசேப்பு அறிந்திருந்தும், அவர்களை உளவாளிகள் என்று குற்றஞ்சாட்டி, அவர்கள் உளவாளிகளா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கான சில காரியங்களை அவர்கள் செய்யும்படிச் சொன்னார். அப்போது, தான் ஒரு நம்பகமான நேர்மையான மனிதன் என்பதையும் தன்னுடைய கட்டளைகள் நீதியானது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த, யோசேப்பு சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். நீங்கள் நிஜஸ்தரானால் (உண்மையானவர்களானால்), சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுங்கள்” என்றார் (ஆதியாகமம் 42:18-19).

யோசேப்பு சொல்லியது என்னவென்றால், “உங்களுடன் நான் பேசுகிற இந்த விஷயங்களில் நேர்மையாய் நடப்பேன் என்பதை நான் காட்டுவதற்கு, என்னுடைய இருதயத்தில் தேவபயம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதையும் நான் காட்ட முடியாது. என்னிலுள்ள தேவபயம் என்னை நேர்மையும் நம்பகமுமான மனிதனாக வைத்திருக்கிறது” என்றார். தேவபயமே ஒருவனில் தேவபக்தியுள்ள வாழ்க்கையை உருவாக்கும் என்ற உண்மையை, ஆபிரகாமைப் போல யோசேப்பும் அறிந்திருந்தார் என்பதையே தன் வார்த்தைகளின் மூலம் காட்டினார்.

கடவுள் எல்லாவற்றையும் காண்கிறார்

லேவியராகமம் 19:14ல் ஒரு விசித்திரமான கட்டளை காணப்படுகிறது, “செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.” காது கேளாத ஒருவனால், நீங்கள் பேசுகிறதைக் கேட்க முடியாது. அப்படியானால், உங்களுடைய பேச்சைக் கேட்க முடியாத அவன், உங்களுடைய பேச்சினால் காயப்படுவானா? இல்லை. இருப்பினும், கர்த்தர் சொல்லுவதைக் கேளுங்கள், “காது கேளாதவனை நிந்தியாதீர்கள்”. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், “மற்றவர்களுடனான உங்களுடைய நடத்தைகள், உங்களுடைய தவறான நடவடிக்கைகளுக்கு அதற்கீடான எதையாகிலும் அவர்களால் உங்களுக்கு செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து அமையக்கூடாது. அது உங்களுடைய நன்மதிப்பைப் பற்றிய என்னவிதமான தாக்கத்தை அவர்களில் ஏற்படுத்தும் என்பதை வைத்தும் அமையக் கூடாது. எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த நேரத்திலும் உங்களுடைய எல்லாவிதமான நடவடிக்கைகளும் கர்த்தராகிய நான் உங்களுக்கு மேலிருந்து காண்கிறேன் என்பதையும், என்னுடைய காது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துடனேயே செய்யப்பட வேண்டும்.” இந்த எண்ணத்திற்குக் குறைய, உங்களுடைய எந்தவொரு நடவடிக்கையும் எவருக்கு முன்பாகவும் ஒருபோதும் இருக்கக் கூடாது. “நான் செய்கிற இதையெல்லாம் எப்படி கர்த்தரால் பார்க்க முடியும்” என்ற எண்ணம் வரவே கூடாது. ஒரு குருடனுக்கு முன்னால் அவன் குறுக்கே உங்கள் காலை நீட்டினால் அவனால் காணமுடியாதிருக்கலாம், ஆனால் கடவுள் காண்கிறார். அதேபோல், காது கேளாதவனை நீங்கள் நிந்தித்தால், அவனால் கேட்க முடியாது, ஆனால் கடவுள் கேட்கிறார்.

நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிற மாணவராக இருந்தால், நீங்கள் பள்ளியில் ஏமாற்றமாட்டீர்கள். நீங்கள் தேவபயத்துடன் நடக்கிறவர்களாக இருந்தால், நீங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறபோது, மேற்பார்வை ஆசிரியர் மூன்று மணி நேரத்திற்கு அந்த அறையைவிட்டு வெளியில் சென்றுவிட்டு வந்தாலும், உங்களுடைய நேர்மையைப் பற்றிய விஷயத்தில், ஆசிரியர் அந்த அறையில் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒருவேளை அந்த ஆசிரியர் வராமலே போனாலும், நீங்கள் படித்ததை மட்டுமே எழுதுவீர்கள். பக்கத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருப்பவரின் தாளை எட்டிப் பார்ப்பதையோ, பிட் அடிப்பதையோ ஒருபோதும் செய்ய மாட்டீர்கள். அப்படியில்லாமல், நீங்கள் ஏமாற்றுகிறவராக இருந்தால், உங்களுக்கு தேவபயத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறீர்கள். ஏனென்றால், உங்களுடைய ஆசிரியர் காண முடியாததை, கடவுள் காண்கிறார். அல்லது, நீங்கள் இரண்டுவிதமாக பேசுகிற வாலிபனாக இருக்கலாம். அதாவது வீட்டிலும் திருச்சபையிலும் ஒருவிதமாகவும், உங்களுடைய நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்தில் இன்னொருவிதமாக பேசுகிறவராகவும் இருக்கலாம். உங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் பேசுகிறபடியே கண்டதையும் பேசலாம். ஆனால் உங்களுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ நீங்கள் இப்படிப் பேசுகிறவர் என்பதை தெரியாமல் வைத்திருக்கலாம். உங்களுடைய பெற்றோரால் கேட்க முடியாததை கடவுள் கேட்கிறதில்லையா? நீங்கள் பேசியதையெல்லாம் அவர் அறிவார். எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஒலியளவில் ஒவ்வொரு முறையும் பேசினீர்கள் என்பதையும் அவரால் உங்களுக்குச் சொல்ல முடியும். உங்களுடைய அப்பாவும் அம்மாவும் அதையெல்லாம் கேட்காமல், அறியாமல் இருந்தாலே போதும் என்று நீங்கள் திருப்திப்பட்டுக்கொண்டால், நீங்கள் தேவபயத்தோடு நடக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.

வளர்ந்தவர்களும் பெரியவர்களும் இதேபோன்ற சோதனைகளைப் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் எதிர்கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் நம்முடைய வருமானவரி கணக்கை தாக்கல் செய்கிறோம். நாடு முழுவதும் இருக்கிற வருமானவரி முகவர்கள், வரியைக் குறைப்பதற்காக செய்கிற குறுக்கு வழிகளைப் பற்றி பற்றி நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன்? வருமானவரி படிவத்தை பூர்த்திச் செய்கிறபோது தேவபயத்துடன் செய்ய வேண்டும். வருமானவரி படிவத்தில் நாம் குறிப்பிடுவதை வருமானவரி அதிகாரி மட்டும் பார்க்கவில்லை, எல்லாவற்றையும் அறிந்த ஒருவரும் காண்கிறார் என்ற உணர்வுடன் செய்ய வேண்டும். வருமானவரி அறிக்கையை ஏமாற்றி நியாயமான வருமானவரி சலுகையைத் தவிர்த்து, அதிகமாக பெறுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்து செய்கிறவர்களாக இருந்தால், நீங்கள் தேவபயத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள். நீங்கள் மனந்திரும்பாதபட்சத்தில், உங்களுடைய திருட்டுத்தனத்திற்கும், நேர்மையற்ற தன்மைக்குமான சாட்சியாக, நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளே இருப்பார்.

ஒரு மனிதன் தன்னுடைய அலுவலகத்திலோ அல்லது கடை வீதியிலோ, தன்னுடைய மனைவி தன்னுடன் இருந்தால் எந்தவிதத்தில் தன்னுடைய இச்சைகளையும் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பார்வையையும் தவிர்ப்பானோ அந்தவிதமான எச்சரிப்புடன் எப்போதும் அவனை இருக்கச் செய்யக் கூடியதுதான் தேவபயம். நீங்கள் தேவபயத்துடன் நடக்கிறவர்களாக இருந்தால், நீங்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் நடக்கிறவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய கண்களைப் பற்றி எச்சரிப்புடன் இருப்பீர்கள். ஏனென்றால், உங்களுடைய மனைவி எதைப் பார்க்கிறார்கள், எதை அறிந்திருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம், கடவுள் எதைக் காண்கிறார், எதை அறிந்திருக்கிறார் என்பதுதான் முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவருடைய கண்களுக்கு முன்பாக உங்களுடைய இருதயம் சுத்தமாக இருப்பதையே நீங்கள் நாடுவீர்கள்.

யோபு “தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிற” மனிதனாக இருந்தான் என்று வேதம் சொல்லுகிறது (யோபு 1:1). யோபுவினுடைய தேவபயத்தைக் குறிப்பாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்துகிற அவருடைய வார்த்தைகளை, யோபு 31:1ல் நாம் காணலாம், “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” எந்தவொரு மனிதனும் மனந்திரும்பாமல், உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையிலும் இச்சையுடனும் தன் பார்வையையும், வார்த்தைகளையும் கொண்ட வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்தால் அவன் தேவபயத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவன். வேதத்தின்படி அவன் “விபச்சாரக்காரன்”, “தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (மத்தேயு 5:27-28; 1 கொரிந்தியர் 6:9).

கடவுளுடைய கண்களைப் பற்றிய உணர்வு

தேவபயமானது நடைமுறை வாழ்க்கையை எந்தளவுக்கு கட்டுப்படுத்துகிறது என்பதற்கான இன்னுமொரு உதாரணத்தை நெகேமியாவின் புத்தகத்தில் பார்க்கலாம். நெகேமியா சொல்லுகிறார்,

“நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம்வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.” (நெகேமியா 5:14-15).

நெகேமியா, தன்னுடைய பதவியில் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்ததுபோல் தான் செய்யவில்லை என்கிறார். அதாவது, தன்னுடைய சொந்த லாபத்திற்காக தன்னுடைய பதவியைப் பயன்படுத்தியதில்லை. அதற்குக் காரணம் தன்னிலுள்ள தேவபயம்தான் என்கிறார். கடவுளுடைய கண் தன்மேல் தீர்க்கமாக இருக்கிறது என்ற உணர்வுதான், இவ்விதமான அவருடைய நடத்தைக்குக் காரணம். தன்னுடைய சொந்த லாபத்திற்காக தன் பதவியைப் பயன்படுத்தினால், கடவுளுடைய புன்னகையை இழக்க நேரிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். நெகேமியா தன்னுடைய சுய லாபத்திற்காக தன்னுடைய பதவியைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு இந்த உண்மை மட்டுமே போதுமானதாக இருந்தது.

தன்னுடைய சுய லாபத்திற்காக மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல் என்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான பிரச்சனை இல்லையா? நம்முடைய தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக ஓடுகிற ஓட்டத்தில் மற்றவர்களுடைய தேவைகளைப் பற்றி பெரும்பாலும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளுவதில்லை. நம்முடைய சொந்த திருப்திக்காக ஓடுகிற ஓட்டத்தில் மற்றவர்களுடைய தேவைகளைக் காலின் கீழ்போட்டு மிதிக்கிறவர்களாகவே பெரும்பாலும் நாம் இருந்துவிடுகிறோம். நம்முடைய வியாபார நடவடிக்கைகளில் கருமிகளாக இருந்துவிடுகிறோம். பெற்றோர்களாக நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் எல்லை கடந்ததாக இருக்கிறது. இவை யாவற்றிற்கும் தீர்வு என்ன? தேவபயம் மட்டுமே தீர்வு என்று நெகேமியாவைப் போல் நாமும் சொல்லலாமில்லையா? தேவ மனிதர்களுடைய வாழ்க்கையில் தேவபயத்திற்கான முக்கியமான இடத்தை இந்த சம்பவமும் நமக்கு எடுத்துரைக்கிறது.

கடவுளால் நம்மில் விதைக்கப்படும் கிருபையாகிய தேவபயமானது, கடவுளுடைய கண் நம்மீது நோக்கமாக இருக்கிறது என்ற உணர்வுடன் வளருகிறதாக இருக்கிறது. ஆவியினால் மீட்பின் நிறைவேற்றத்தின் காலமாகிய புதிய ஏற்பாட்டிலும் இதை நாம் பார்க்கலாம். நீங்கள் கிறிஸ்தவர்களாக, கிறிஸ்துவுக்குள்ளாக கடவுளோடுள்ள உங்களுடைய உறவைப் பற்றிய சிந்தனையினாலும், அவருடைய புன்னகையின் உண்மைத் தன்மையினாலும், அவர் விலக்கி வைத்துள்ளவைகளின் மீதுள்ள வெறுப்பினாலும் வாழுவதை நீங்கள் ஒரு கனமாகிலும் நிறுத்தினால், பரிசுத்தமாய் வாழுவதற்கு உங்களை உந்தித்தள்ளும் உணர்விலிருந்து துண்டிக்கப்படுவீர்கள். இப்படி நீங்கள் உணர்ந்ததில்லையா? கடவுளிடத்தில் உங்களுக்குள்ள உறவைப் பற்றிய எண்ணம் உங்களில் அற்றுப்போனால், வேறு எது உங்களை ஊக்கப்படுத்த முடியும்? கடவுள் வெறுத்து ஒதுக்கியிருப்பதைப் பற்றிய எண்ணம் உங்களில் இல்லாமற்போனால், வேறு எது உங்களைத் தீமையிலிருந்து திருப்பும்? கடவுளுடைய புன்னகை உங்களைத் தூண்டாவிட்டால், வேறு எது உங்களை நீதியின் பாதையில் நடக்கும்படி தூண்டப் போகிறது? வேறு எதுவும் நம்மில் இவைகளைக் கொண்டுவர முடியாது. உங்களைக் கட்டுப்படுத்தும் தேவபயத்தின் உந்துதலோடு, கிறிஸ்துவினுடைய அன்பின் வல்லமை இணைகிறபோது (2 கொரிந்தியர் 5:14), உங்களில் பரிசுத்தமானது பூரணப்பட முடியும் (2 கொரிந்தியர் 7:1). தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளர்க்கிறது.

கடவுளைப் பிரியப்படுத்துதல்

கொலோசெயர் 3:22ஐ கவனியுங்கள், “வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்”. கொலோசெ பட்டணத்தின் திருச்சபையிலிருந்த அடிமை வேலையாட்களான விசுவாசிகளுக்கு பவுல் சொல்லியதைக் கவனியுங்கள், “பரலோகத்தில் உங்களுக்கு கிருபையுள்ள எஜமான் இருந்தபோதிலும், பூமியிலும் உங்களுக்கு மனித எஜமான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிய வேண்டும். உங்களுடைய எஜமான்கள் உங்களிடத்தில் செய்யச் சொல்லுகிற காரியங்களை, உங்களுடைய சொந்த மதிப்பீட்டின்படி சரியானதா, நீதியானதா என்று ஆராய்ந்த பிறகு, அதனடிப்படையில் உங்களுடைய கீழ்ப்படிவு இருக்கக் கூடாது.” அவர் சொல்லுகிறார், “எல்லாக் காரியங்களிலேயும் கீழ்ப்படியுங்கள்.” ஒரேயொரு விஷயத்தில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு உண்டு. அதாவது கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிராக எதையாவது அவர்கள் செய்யும்படி சொன்னால் மட்டும்தான் இந்த விஷயத்தில் விலக்கு உண்டு. விசுவாசிகளெல்லொரும் இதை அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தினால் உண்டாகிற எந்தவொரு புதிய உறவாக இருந்தாலும், கிறிஸ்துவோடு நீங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே உங்களிடத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பவைகளை இல்லாமலாக்க முடியாது.

வேலையாட்கள் தங்களுடைய எஜமான்களுக்கு இரண்டு விதங்களில் கீழ்ப்படிய முடியும் என்பதை பவுல் அறிந்திருந்தார். முதலாவது, “மனிதர்களுக்குக் பிரியமாய் இருக்க பார்வைக்கு” வேலை செய்யலாம். ஆனால் பவுல் சொல்லுகிறார், “மனிதர்களைப் பிரியப்படுத்துகிறவர்களாக பார்வைக்கு” வேலை செய்யக்கூடாது. அதாவது, உங்கள் எஜமானுடைய கண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து வேலை செய்யாதீர்கள். அவர் ஒருவேளை மூன்று நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிடலாம். அவர் வேறு ஏதேனும் ஊருக்கு சென்றுவிட்டால், அவருடைய பார்வையும் உங்கள்மீதிருந்து போய்விடும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுவதற்கு வேறு எது உங்களை ஊக்கப்படுத்தப் போகிறது? உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் நல்லபடியாக செய்து முடிப்பதற்கு உங்களை உந்தித்தள்ளும் காரணமாக இருக்கப்போவது எது? உங்கள் எஜமானுடைய கண் மட்டுமே நீங்கள் வேலை செய்வதற்கு உங்களை ஊக்கப்படுத்துமானால், உங்களுடைய ஊக்கத்தின் பெரும்பகுதியை விரைவில் இழந்துவிடுவீர்கள்.

ஆனால், வேலையாட்கள் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. அதாவது, “தேவனுக்குப் பயப்படுகிறவர்களாக, கபடமில்லாத இருதயத்துடன்” கீழ்ப்படிதல். கிறிஸ்தவர்களான அடிமை வேலையாட்களை இந்த விதத்தில் வேலை செய்யும்படிதான் பவுல் வலியுறுத்துகிறார். “கபடமில்லாத இருதயத்துடன்” என்றால் மனிதர்களைப் பிரியப்படுத்துவது பாதியும், கடவுளைப் பிரியப்படுத்துவது பாதியுமாக இல்லாத இருதயத்துடன் என்று பொருள். தேவபயத்துடன் நடப்பதும் வேலை செய்வதுமாகிய, ஒரே நிலையிலுள்ள இருதயத்துடன் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. அடிமைகளான வேலையாட்கள், தங்களுடைய அன்றாட கடமைகளைக் கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் செய்வதற்கான ஒரே வழி, தேவபயத்துடன் அவைகளைச் செய்வதுதான், இல்லையா? நிச்சயமாக. நீதியை நிறைவேற்றும்படியாக அரசாட்சி செய்கிற ராஜாவாக இருந்தாலும் சரி, மிருகங்களைக் கவனித்து, அவைகளின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் பொறுப்பிலுள்ள அடிமைகளான வேலையாட்களாக இருந்தாலும் சரி, நம்முடைய கடமை பொறுப்புகளைச் சரியாக செய்வதற்கு தேவபயமே நம்மை ஊக்கப்படுத்தக் கூடியது. ராஜாவாக இருந்தாலும், அடிமைகளான வேலையாட்களைப் போலவே, கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தன்னுடைய கடமைகளைச் சரியாக செய்ய தேவபயத்துடனேயே தன்னுடைய பணிகளைச் செய்ய வேண்டும். அடிமைகளான வேலையாட்களும், என் எஜமானுடைய கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா என்பதில் கவனம் காட்டாமல், பரலோக எஜமானுடைய கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்துடனேயே தன் பணிகளைச் செய்ய வேண்டும்.

பயன்பாடுகள்

தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளரச் செய்யக்கூடியது என்பதை வேதம் தெளிவாகப் போதிக்கிறது. இந்தப் போதனையினுடைய மிக முக்கியமான பயன்பாடுகள் என்ன?

தேவபயத்தின் அவசியத்தைப் பற்றிச் சிந்தியாமல், மனிதர்களுடைய நடத்தை பற்றிய பிரச்சனைகளை தீர்க்க முற்படுவது மடமையே. கடவுள், மனிதன் தன்னோடு உறவுகொள்ளுகிறபோது ஒழுக்க நடவடிக்கைகளை அவனில் விதைக்கிறார். மெய்யாக கடவுளைத் தேடுவது இல்லாமற்போனால், ஒழுக்கத்தில் உண்மை என்பது விரைவிலேயே இல்லாமலாகிவிடும். இந்நாட்களில் மெய்யாக கடவுளைத் தேடுவது என்பதைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. மெய்யாக கடவுளைத் தேடுவதன் இடத்தை இந்நாட்களில் மனிதநலவாதம் பிடித்திருக்கிறது. அதாவது மனிதனே கடவுள் என்ற எண்ணம் அதிகமாகியிருக்கிறது. அத்தோடு, தாராளவாத கோட்பாடுகளும் நிறைந்திருக்கிறது. அதாவது, மனிதனுக்கு ஏற்ப கடவுளை மறுவடிவம் செய்து பார்த்தல். இருப்பினும், மெய்யாக கடவுளைத் தேடுபவர்களின் எச்சங்கள் இன்னும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மீந்திருப்பவர்களின் தொகை தேய்ந்துகொண்டுதான் போகிறது. ஒழுக்கரீதியான பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கிறபோது, மனிதர்கள் மத்தியில் பெரும்பாலும் கடவுளைப் பற்றிய எந்த எண்ணமும் ஏற்படுகிறதில்லை. உதாரணத்திற்கு, போதை பொருள் பிரச்சனையை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாருமே இந்தப் பிரச்சனை பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். போதைப் பொருளுக்கு, முன்பு அடிமையாக இருந்தவர்களை அழைத்துவந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பேச வைக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் இதைப் பற்றிய பயத்தை ஏற்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளை அழைத்து அதனுடைய தாக்கங்களை எடுத்துச் சொல்ல வைக்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது? பெரும்பாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இதையெல்லாம் கேட்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை என்கிறார்கள். ஏன்? ஏனென்றால், மனிதர்கள், தேவபயமே தேவபக்தியுள்ள ஒழுக்கரீதியான வாழ்க்கை வாழவும், அதில் நிலைத்திருக்கவும் செய்யும் என்ற உண்மையை அறியாமல், வெறுமனே ஒழுக்கரீதியான அந்தப் பிரச்சனையை, தாக்கும் நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகிறார்கள். ரோமர் 1:28ல், பவுல் இதைப் பற்றி இப்படியாகச் சொல்லுகிறார், “தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.”

இரண்டாவதாக, மெய்யான எழுப்புதல் ஒழுக்கம் மற்றும் சமூக மாற்றங்களையும் எப்போதும் அதைத் தொடர்ந்து கொண்டுவரும். எழுப்புதல் என்பது தேவஆவியானவருடைய வல்லமையான செயல்பாட்டினால் உண்டாவது. அதாவது அவருடைய சாதாரண பணிகளை அசாதாரணமான வழிகளில் செயல்படுத்துவதனால் உண்டாவது. ஒரு குறுகிய காலத்தில், மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அநேக மனிதர்களுடைய இருதயத்தில் தேவபயத்தை நாட்டுவதை கர்த்தர் தம்முடைய வல்லமையான மற்றும் சர்வஏகாதிபத்திய செயலின் மூலம் செய்வதுதான் எழுப்புதலாகும். இந்த வகையில் கடவுள் செயல்படுகிறபோதெல்லாம் என்ன நடக்கிறது? பத்தாயிரம் பேர் இருக்கிற ஒரு சமூகத்தில் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேர் திடீரென்று தேவபயத்துடன் நடக்கிறார்கள். அவர்களுடைய நடத்தையெல்லாம் போலீஸ்காரருடைய கண்கள் தங்களைப் பார்க்கிறது என்பதற்காக இல்லாமல் கடவுளுடைய கண்கள் பார்க்கிறது என்பதனால் அமைகிறது. பள்ளியிலுள்ள மாணவர்களுடைய நடவடிக்கைகளெல்லாம் அவர்களுடைய ஆசிரியரின் கண்கள் காண்கிறதா என்பதைப் பொறுத்தில்லாமல், கடவுளுடைய கண்கள் காண்கிறது என்பதால் மாற்றமடைகிறது. சமூகத்தின் மத்தியில் அவர்கள் ஒரு சிறு ஏதேனைப் போல் காணப்படுகிறார்கள். எதனால் இதெல்லாம்? அவர்களுடைய இருதயங்களில் நாட்டப்பட்ட தேவபயமானது அவர்களில் வேர்கொண்டு, சமூக ஒழுக்கரீதியான ஒழுங்குமுறையுள்ள வாழ்க்கையாக வளருகிறது. அவர்கள் ஒருவரோடொருவர் கனிவாக நடக்கிறார்கள், மற்றவர்களைப் பற்றிய அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள். வரலாற்றில் ஆவியின் மூலமாக செய்யப்பட்ட எந்தவொரு மெய்யான எழுப்புதலும் பெருமளவில் சமூக மற்றும் ஒழுக்கரீதியான மாற்றங்களைப் பிறப்பிக்கிறதாகவே இருந்திருக்கிறது.

மூன்றாவதாக, பெற்றோர்களாகிய நம்முடைய நடவடிக்கைகள் எந்தளவிலான தாக்கத்தை நம்முடைய பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மூன்று பெரும் ஓடைகள் இருக்கின்றன. முதலாவது, அடிப்படையானதொன்று, நம்முடைய வீடு; இரண்டாவது பள்ளி; மூன்றாவது திருச்சபை. இந்த வரிசை முறையை நான் மாற்றிவிட்டேனா? இல்லை. அவர்கள் பெருமளவிலான நேரம் உங்களுடைய வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே அதுதான் அதிக வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதற்கடுத்தப்படியாக, பள்ளியில்தான் அவர்கள் அதிகளவிலான நேரம் இருக்கிறார்கள். திருச்சபையில்தான் குறைந்தளவிலான நேரம் இருக்கிறார்கள்.

பெற்றோராகிய நீங்கள், கடவுளுடைய கரத்திலுள்ள, அவரால் பயன்படுத்தப்படுகிற கருவியாக, உங்களுடைய பிள்ளைகளிடத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை மதிப்பிட நீங்கள் விரும்புகிறீர்களா? அதை மதிப்பிட இதோ ஒரு வழி: உங்களுடைய பிள்ளைகள் எந்தளவுக்கு தேவபயத்தை உங்களுடைய உதாரண வாழ்க்கை, கட்டளைகள், வேத ஒழுக்கமுறையில் அவர்களைத் தொடர்ச்சியாக நீங்கள் பயிற்றுவித்தல் மற்றும் என்னவிதமான கல்விமுறையை அவர்களுக்கு வழங்குகிறீர்கள் என்பதன் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்ளுகிறார்கள். உங்களுடைய எல்லாவிதமான நடவடிக்கைகளிலும், கடவுளுடைய கண்தான் மிகவும் வலிமையான தாக்கத்தை உங்களில் ஏற்படுத்துகிறது என்பதை உங்களுடைய பிள்ளைகள் காண்கிறார்களா? அல்லது இரட்டை வாழ்க்கையை நீங்கள் வாழுவதை அவர்கள் காண்கிறார்களா? அதாவது திருச்சபையில் ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒருவிதமாகவும், இன்னொரு நண்பர்கள் கூட்டத்தில் இன்னொருவிதமாகவும் இருப்பதை அவர்கள் காண்கிறார்களா? உங்களுடைய உதாரண வாழ்க்கை மற்றும் கட்டளைகளின் மூலமாக தேவபயத்தை அவர்களுக்குக் கற்றுத் தருகிறீர்களா? அப்படி நீங்கள் செய்யாவிட்டால், கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தையும், நீங்கள் பெற்றிருக்கிறதாக சொல்லுகிற இரட்சிப்பையும் பற்றி அவர்கள் குறை கூறினால், அதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் அடைந்திருக்கிறதாக சொல்லுகிற இரட்சிப்பு, நாள் முழுவதும் தேவபயத்தினால் வாழுகிற வாழ்க்கையை உங்களில் ஏற்படுத்தவில்லை (நீதிமொழிகள் 23:17).

ஒவ்வொரு பெற்றோரும், தாவீது சொல்லிய வார்த்தைகளை நினைவில் கொண்டு உங்களுடைய பிள்ளைகளிடத்தில் உரையாடுங்கள், “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.” (சங்கீதம் 34:11). இந்த இடத்தில் மிகவும் முக்கியமான ஒரு வார்த்தையை வேதம் வலியுறுத்துகிறது. அதை, நீதிமொழிகள் 1:7ல் நாம் வாசிக்கலாம், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்”. நீதிமொழிகளின் முதலாவது அதிகாரம், தேவபயத்தைப் பற்றிய வலிமையான வாக்கியத்துடன் ஆரம்பமாகிறது. அநேக வருடங்களாக நன்மை தீமையை அறியக்கூடியவனாகவும், தேவபயம் சம்பந்தமான எல்லாவித வழிமுறைகளை நிராகரிக்கிறவனாகவும் இருக்கிற மனிதனைப் பற்றிய அற்புதமான, தெளிவான குறிப்புகளை அதன் இறுதியிலும் வாசிக்கலாம். சாலமோன் சொல்லுவதைக் கவனியுங்கள்,

“அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.” (நீதிமொழிகள் 1:28-31)

இந்த அற்புதமான வார்த்தைகளில், தேவபயத்தில் நடப்பதை நிராகரிக்கிற மகனோ, மகளோ, அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களை நல்வழியில் நடத்தாமற்போனதுதான் காரணம் என்பதாக எந்தவிதமான குறிப்பும் இங்கில்லை. மாறாக, அந்தத் தவறு, அந்த இளம் மகன் அல்லது மகளினுடைய நடவடிக்கையில்தான் இருக்கிறது. அதாவது, அவர்கள் “அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்.” சில பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவபயத்தைக் கட்டளைகளின் மூலமாகவும், ஒழுங்கு நடவடிக்கைகளின் மூலமாகவும், உதாரண வாழ்க்கையின் மூலமாகவும் கற்றுத் தருவதிலிருந்து தவறியதையும், அதனிமித்தம் அந்தப் பிள்ளைகள் தேவபக்தியற்றவர்களாக இருந்ததையும் வேதம் சுட்டிக்காட்டத்தான் செய்கிறது. ஏலியினுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு துக்ககரமான உதாரணத்தை வேதத்தில் நாம் பார்க்கலாம் (1 சாமுவேல் 2:27-30). எனினும், கிறிஸ்தவ பெற்றோர்களினுடைய அடங்காத பிள்ளைகள், அந்த பெற்றோர்கள் தேவபக்தியில் வாழத் தவறியதும், அவர்களை தேவபயத்தில் வழிநடத்தாமற்போனதும்தான் காரணம் என்பதாக வேதம் எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு ஆதாரமாக, ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் சொல்லிய வார்த்தைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், “நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.” (ஏசாயா 1:2). ஒரு பெற்றோருடைய கடமையைப் போன்று கடவுள் தம்முடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று யாரேனும் அவரைக் குற்றஞ்சாட்ட முடியுமா?

அத்தோடு, உங்களுடைய பிள்ளை படிக்கின்ற பள்ளியின் தாக்கத்தையும் மதிப்பிட்டுப் பாருங்கள். தேவபயமே ஞானத்தின் மையமாக இருக்கிறது என்று கடவுள் சொல்லுவாரானால், தேவபயமில்லாமலிருப்பது மூடத்தனத்தின் மையம் என்று சொல்லுவதுதான் சரியென்று நான் எண்ணுகிறேன். இது உண்மையானால், அநேக பிள்ளைகள் அவர்களுடைய பள்ளியில் இருக்கிற நாட்கள் ஒருவகையில் மூடத்தனத்தின் நாட்களாகத்தான் இருக்கிறது. தேவபயமில்லாமல் வாழ முடியும் என்பதுதான் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. எந்தவொரு ஆசிரியரும் அப்படிச் சொல்லவே மாட்டார்கள் என்று நீங்கள் சொல்லலாம். தேவபயத்தை அடிப்படையில் வலியுறுத்தி ஒழுக்கரீதியான காரியங்களைக் கற்றுத் தராமலிருப்பதன் மூலமாக, அவர்கள் தேவபயம் தேவையில்லை என்பதைத்தான் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்த விஷயத்தில் திருச்சபையின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பின்வருமாறுதான் நாம் மதிப்பிட வேண்டும்: என்னுடைய திருச்சபை என் பிள்ளைகளுக்கு தேவபயத்தைப் போதிக்கிறதா அல்லது அவர்களை வெறுமனே ஏதேனும் காரியங்களில் ஈடுபடவும் மகிழ்ச்சியூட்டவும் மட்டும் செய்கிறதா? அது கடவுளுடைய மெய்யான குணாதிசயங்களைப் போதிக்கிறதா? கடவுளுடைய பிரசன்னத்தையும், அவருடைய பரிசுத்த கட்டளைகளினுடைய கோரிக்கைகளையும், சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய கிருபையின் ஆச்சரியங்களையும் பற்றிய உணர்வை, தேவகிருபையினால் வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளில் நாட்டுவதற்கான காரியங்களில் ஈடுபடுகிறதா? திருச்சபையின் தாக்கத்தை இவைகளின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும். இளம் பிள்ளைகளுக்கானவைகளை மட்டுமே வைத்து நாம் மதிப்பிட்டுவிடக்கூடாது, நமக்கானவைகளையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாம் பாடுகிற பாடல்கள் நமக்குப் போதிப்பதென்ன? ஆராதனை வேளைகளில் என்னவிதமான ஆவிக்குரிய சூழலைத் திருச்சபையில் பார்க்க முடிகிறது? அங்கு தேவபயத்தை நாடுவதையும் விளக்குவதையும் காணமுடிகிறதா?

சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் போதக ஊழியம் செய்கிற என்னுடைய நெருக்கமான நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினேன். அதில், அவர் அநேக நாட்களாக உண்மையுடன் ஊழியம் செய்துவருகிற திருச்சபையின் தற்சமய நிலையைப் பற்றித் தெரிவிக்கும்படி கேட்டிருந்தேன். அவருடைய பதிலில், மிகவும் ஊக்கப்படுத்தும் சில காரியங்களுக்கு மத்தியில் ஊக்கமிழக்கச் செய்யும் முக்கியமான ஒரு காரியத்தையும் குறிப்பிட்டிருந்தார். சிலர் சபையைவிட்டுச் சென்றுவிட்டதோடு, அவர்கள் சபையைவிட்டு சென்றதற்கான காரணமாக குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், “என்னுடைய சிறு பையனுக்கு ஏற்றவிதமான போதனைகள் இங்கில்லை, அத்தோடு அவனை ஊக்கப்படுத்தும் வகையிலான எந்தவித இசையும் இங்கில்லை” என்பதுதான் என்றெழுதியிருந்தார். அவர்களுடைய பிள்ளைக்கு அரணைப் போன்று, உறுதியான வேத பிரசங்கமும், கடவுளை மையமாகக் கொண்ட பயபக்தியுள்ள ஆராதனையும், திருச்சபை அன்பையும் ஐக்கியத்தையும் விட்டுவிட்டு, தன் பிள்ளையினுடைய கேளிக்கையில் கவனம் காட்டிய இந்தவிதமான முதுகெலும்பில்லாத, அறிவற்ற பெற்றோர்களுக்கு கடவுள்தாமே இரக்கம் காட்டுவாராக. தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளர்க்கிறது. தேவபயம் இருக்கிற இடத்தில்தான் எப்போதும் மெய்யான தேவபக்தியும் காணப்படும். வீடும், பள்ளியும், திருச்சபையுமாக இணைந்து, உதாரண வாழ்க்கையின் மூலமாகவும், போதனைகளின் மூலமாகவும், ஞானத்தின் மையமாகிய தேவபயத்தை இளம் தலைமுறையினருக்குக் கற்றுத் தந்து வளர்க்க வேண்டும்.

தேவபயமின்மையே தேவபக்தியில்லாத வாழ்க்கையை உருவாக்கும்

தேவபயமே தேவபக்தியுள்ள வாழ்க்கையை வளர்க்கிறது என்பது உண்மையானால், தேவபயமில்லாமலிருப்பது தேவபக்தியில்லாத வாழ்க்கையை வளர்க்கிறது என்று சொல்லுவதும் உண்மைதான், இல்லையா? எனினும், இந்தக் கூற்றை நிரூபிக்க, வெறுமனே அனுமானத்தை மட்டும் நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வேதத்தின் மூலமாகவும் இதை நிரூபிக்க முடியும். இதை நாம் ஆழமாக ஆராய்வதற்கு, இதைப் பற்றி விவரிக்கிற ஒரு முக்கியமான வேத வசனத்தை முதலாவது நாம் கவனிப்போம். இரண்டாவதாக, இந்த மைய வசனத்தைக் கொண்டு விளக்கப்படுத்தப்பட்ட போதனைக்கு ஆதாரமாக வேதத்தின் ஏனைய பகுதிகளையும் பார்க்கலாம். இறுதியாக, இவைகள் நமக்குப் போதிக்கிற நடைமுறை பயன்பாடுகளைப் பார்க்கலாம்.

முக்கிய வசனம்: ரோமர் 3:18

தேவபயமில்லாமலிருப்பது தேவபக்தியில்லாத வாழ்க்கையை வளர்க்கிறது என்ற கூற்றை நிரூபிப்பதற்கான முக்கிய வசனம், ரோமர் 3:18, “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. கடவுளுக்கு முன்பாக உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் பாவிகளாக இருக்கிறார்கள் என்பதை நிலைநிறுத்தவும், கிறிஸ்துவில் மட்டுமே காணப்படும், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே பெறப்படும் இரட்சிப்பானது, எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அவசியமானது என்பதை நிரூபிப்பதற்கான வேத ஆதாரங்களை பவுல் தொடர்ந்து தந்து, இந்த வசனத்தோடு அதை நிறைவு செய்கிறார். ஒட்டுமொத்த உலகத்திலுமுள்ள அவபக்தியான செய்கைகள் யாவற்றிற்கும் காரணமாக இருப்பது, “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயமில்லை” என்பதுதான் என்று சொல்லுகிறார். ரோமர் 3:10-18 வரையுள்ள வசனங்களில் பவுல் விவரித்திருப்பதைப்போன்ற, ஒழுங்கற்ற, அவபக்தியான வாழ்க்கைக்குக் காரணம், அவர்களில் தேவபயமில்லாமல் இருப்பதுதான்.

தேவபக்தியில்லாதவர்கள், அவரவருடைய பார்வையின்படியாக தங்கள் வாழ்க்கையை வாழுகிறார்கள், தங்களுடைய விருப்பங்களையும், நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக வாழுகிறார்கள், இதன் மூலம் அவர்களில் தேவபயமில்லை என்பதைக் காட்டுகிறார்கள். யாரேனும் ஒருவரை ப்ளாஷ் கேமரா வைத்துப் படம் பிடித்தால், அப்போது ஒரு சில நிமிடங்கள் அந்நபருடைய கண்களுக்கு முன்பாக ஒரு பிரகாசமான புள்ளி தோன்றும். அவர் பார்க்கிற எல்லாவற்றின் மேலும் அந்தப் புள்ளி இருப்பதாகத் தோன்றும். அவர், தன்னுடைய கையையோ, மரத்தையோ, வீட்டையோ அல்லது வேறுவொரு நபரையோ அந்தப் புள்ளியில்லாமல் பார்க்க முடியாது. அது தொடர்ந்து “அவருடைய கண்களுக்கு முன்பாக” இருக்கும். ஆனால் கேடானவர்களைப் பற்றி வேதம் சொல்லுகிறது, “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயமில்லை” என்று. அதாவது, அவர்கள் காலையில் எழுந்து, அந்த நாளில் செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்திக்கிறபோது, கடவுள் இருப்பதையும், கடவுளுடைய எதிர்பார்ப்பையும், கடவுளுடைய குணாதிசயங்களையும், கடவுளுடைய இரட்சிப்பையும், கடவுளுடைய கட்டளைகளையும், கடவுளுடைய நியாயத்தீர்ப்பையும் பற்றி எந்தவிதமான எண்ணமும் இல்லாமல்தான் அவைகளைப் பார்க்கிறார்கள். தேவபயத்தைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல்தான் அவர்கள் அந்த நாளில் நடக்கிறார்கள். இதுதான் பவுலினுடைய குற்றச்சாட்டு. ஆகவே பவுல் சொல்லுகிறார், தேவபக்தியற்ற வாழ்க்கை வாழுவதை நீங்கள் காணுகிறபோது, அங்கு தேவபயம் இல்லை என்பதுதான் தெரிகிறது. அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயம் இல்லாததனால்தான் அவர்கள் மிகவும் சீர்கேடாகவும் பாவமுள்ளவர்களாகவும் வாழுகிறார்கள்.

தேவபக்தியுள்ள மனிதனோ, தான் பார்க்கிற அனைத்திலும் தேவபயமாகிய அந்த பிரகாசமுள்ள புள்ளி தோன்றுவதாகத்தான் பார்க்கிறான். அவன் கடவுளைப் பற்றிய எண்ணமற்றவனாக ஒருநாளும் எதையும் செய்கிறதில்லை. அவன் எப்போதும், “இந்த நாள் என்னுடைய கர்த்தர் உருவாக்கிய நாள். நான் அவருடைய வேலையாள். அவர் என் தேவன். ஆகவே இந்த நாளில், நான் கடைக்கோ, பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ சென்று, அங்கு வேலையிலோ அல்லது ஏதேனும் உரையாடலில் ஈடுபடும்போதோ, அல்லது வேறு எதைச் செய்தாலும் அவையாவற்றிலும், கடவுள் இருப்பதையும், அவருடனான என்னுடைய உறவையும், அவர் என்னிடம் கோருவதையும், அவர் எனக்காக தந்திருப்பதையும் நினைவுபடுத்தும் விதத்தில்தான் செயல்படுவேன்” என்பான். தேவபயமானது அவனுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது, அதன் பிரதிபலிப்புகள், அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இருக்கிறது. அதற்கு எதிர்மறையாக, தேவபக்தியில்லாதவனுடைய கண்களுக்கு முன்பாக தேவபயமென்பது இல்லை. அவன் கடவுளுடைய அதிகாரத்தை மதிப்பதில்லை, அவருடைய கட்டளைகளைப் பொருட்படுத்துவதில்லை, கடவுள் வழங்குகிற இரட்சிப்பைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளுவதில்லை, கடவுளுடைய புன்னகையைப் பற்றி அக்கறைகொள்ளுவதில்லை, கடவுளால் கைவிடப்பட்ட நிலையைப் பற்றி பயப்படுவதில்லை.

ஒழுக்கரீதியான பிரச்சனைகள், வாழ்வியல் நடத்தைப் பிரச்சனைகள் யாவும், கடவுளுடைய போதனைகள் மற்றும் கட்டளைகளின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பதை இந்த ஆரம்ப வார்த்தைகளே நமக்குக் கற்றுத் தருகின்றன. நன்னெறி, ஒழுக்கம், நடத்தை ஆகியவற்றை, மெய்யாக வேதம் போதிக்கிற கடவுளைத் தேடும் வழிமுறைகளிலிருந்து நாம் பிரிக்க முடியாது. கடவுளே இவைகளையெல்லாம் இணைத்திருக்கிறார், ஆகவே நாம் இவைகளைப் பிரிக்க முடியாது. கடவுள் இணைத்திருப்பவைகளை மனிதன் பிரிக்கப் பார்த்தால், அது அவனுக்குக் கேடாகத்தான் போய் முடியும். ரோமர் 3:18, தெளிவாக நமக்குக் காட்டுகிறது, தேவபயமில்லாத இடத்தில், நிச்சயமாக தேவபக்தியான வாழ்க்கையைப் பார்க்க முடியாது.

முக்கிய குறிப்பாகிய ரோமர் 3:18ஐ பார்த்த பிறகு, பழைய ஏற்பாட்டிலிருந்து வேறு இரண்டு வசனப்பகுதிகளை நாம் இப்போது ஆராய்வோம். அதில் முதலாவது, சங்கீதம் 10. இந்த சங்கீதத்தின் சூழலை, முதல் இரண்டு வசனங்கள் தெளிவாக விவரிக்கிறது:

“கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.”

இதில், துன்மார்க்கனால், நீதிமான் துன்புறுத்தப்படுவதையும், அதைப்பற்றியெல்லாம் கடவுள் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்பதாக அவன் நினைப்பதையும் பார்க்கலாம். இது ஒரு பெரும் பிரச்சனையாக பல சங்கீதங்களிலும் மறுபடியும் மறுபடியும் சுட்டிக் காட்டப்படுவதை நாம் பார்க்கலாம். கிறிஸ்தவர்களாகிய நாம் இன்றளவும் இந்தப் பிரச்சனையை அனுபவிக்கிறோம். “ஆண்டவரே, இதெல்லாம் இப்படிச் சரியில்லாமல் நடக்கிறதே” என்று நாம் சொல்லிய நேரங்களும் உண்டு. ஒருவேளை, என்னுடைய மகனை, ஒருவன் எட்டி உதைத்து, காயப்படுத்திக்கொண்டிருப்பதை நான் கண்டும், அதைத் தடுப்பதற்கான வலிமை என்னிடத்தில் இருந்தும், அந்தவேளையில் நான் ஒன்றும் செய்யாதிருந்தால், ஒரு தகப்பனாக என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்னுடைய பிள்ளையின்மீது எனக்கிருக்கிற ஆழமான அன்பைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பமாட்டீர்களா? நிச்சயமாக கேள்வி எழுப்புவீர்கள். கடவுளுடைய பிள்ளைகளும் இந்த பிரச்சனையை அனுபவித்திருக்கிறார்கள்.

இந்த சங்கீதத்தின் சூழலில், இதை எழுதியவர், துன்மார்க்கனுடைய எண்ணத்தில் என்ன நினைக்கிறான் என்பதைப் பற்றி ஆராய்ந்து இங்குத் தெரியப்படுத்துகிறார். துன்மார்க்கன் நீதிமானைப் பிடித்துக்கொள்ளுகிறான், ஆனால் வானத்திலிருந்து எந்தவிதமான இடிமுழக்கமும் உண்டாகவில்லை, மின்னலின் ஒளி அவனைத் தாக்கவும் இல்லை. ஆகவே அவன் தொடர்ந்தும் தன்னுடைய துன்மார்க்கத்தின்படி நடக்கிறான். முதலாவது, துன்மார்க்கன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள்:

“அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான். நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.” (சங்கீதம் 10:5-10)

நீதிமான்களுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் எதிராக துன்மார்க்கன் தன்னுடைய திட்டங்களையெல்லாம் செயல்படுத்துகிறான். ஆனால் இந்தப் பகுதி, 4வது மற்றும் 11வது வசனங்களைச் சுற்றி அமைந்திருக்கிறது. இவை இரண்டும், துன்மார்க்கன் தான் செய்கிறதை எதனால் செய்கிறான் என்பதை விவரிக்கின்றன. இவையெல்லாவற்றிற்குமான அவனுடைய காரணத்தை 4வது வசனத்தில் கவனியுங்கள், “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே”. வேறுவிதமாக சொல்லுவதானால், துன்மார்க்கன் கடவுளைப் பற்றிய சிந்தனைகளைத் தன்னுடைய எண்ணத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். இப்படி சொல்லுவதனால், அவன் நாத்தீக சிந்தனை கொண்டவன் என்று பொருளல்ல. கடவுளைப் பற்றிய சிந்தனைகள், அவனுடைய எண்ணத்திலிருந்து அவனை ஆளுகை செய்யவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அவனுடைய எண்ணமெல்லாம் கடவுள் இல்லை என்பதாகவே இருக்கிறது. அவன் தன்னுடைய திட்டங்களைத் தீட்டுகிறான். அவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறான். ஆனால் கடவுளைப் பற்றிய எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் இதையெல்லாம் செய்கிறான். அதே துன்மார்க்கன் கடவுளுடைய குணாதிசயங்கள் பற்றிய உணர்வுகளை தன்னிலிருந்து விரட்டித் தள்ளுகிறான் என்று 11வது வசனம் காட்டுகிறது, “தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்”. கடவுளுடைய எல்லாம் அறிந்த அறிவை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறான். ஏன் அவன் தன்னுடைய எண்ணத்திலிருந்து கடவுளைத் தள்ளிவிடுகிறான்? அதில் அவன் முழுமையான வெற்றி காண முடியாதபோது, தன் எண்ணத்தில் தொடர்ந்து வலம்வருகிற கடவுளுடைய குணாதிசயங்களையும் வல்லமையையும் ஏன் வேறுவிதமாகக் காட்ட, குறைவுபடுத்த முயற்சிக்கிறான்? ஏனென்றால், அவனுடைய எண்ணத்திலிருந்து தேவபயத்தை விரட்டாவிட்டால், அவனால் அவபக்தியான வாழ்க்கையை வாழ முடியாது என்பதனால்தான். ஆகவே அவன் தன்னுடைய அவபக்தியான வாழ்க்கையைத் தொடரவேண்டுமானால், தேவபயமற்ற சூழலைத் தன்னில் அவன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான மற்றொரு பழைய ஏற்பாட்டு வேதப்பகுதி மல்கியா 3. உடன்படிக்கையின் தூதனானவரைப் பற்றிய அறிவிப்போடு இவ்வதிகாரம் ஆரம்பமாகிறது. அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய குறிப்பாக இருக்கிறது. அவர் வருகிறபோது, அவர் இரண்டுவிதமான ஊழியங்களைக் கொண்டிருப்பார் என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். முதலாவது, சுத்திகரிக்கும் ஊழியமாயிருக்கும்:

“ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் (சோப்பு) போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” (மல்கியா 3:2-3)

இரண்டாவது, உடன்படிக்கையின் தூதனானவர் நியாயத்தீர்ப்பின் ஊழியத்தைக் கொண்டிருப்பார்:

“நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:5)

தூதனானவர் வெறுமனே சுத்திகரிப்பதற்காக மட்டும் வரவில்லை, நியாயந்தீர்க்கவும் வருகிறார். யாரெல்லாம் நியாயந்தீர்க்கப்பட போகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்: சூனியக்காரர்கள், விபச்சாரக்காரர்கள், பொய்யாணையிடுகிறவர்கள், விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்கள், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்கள். வேறுவிதமாகச் சொல்லுவதானால், கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்பு, உலகத்திலுள்ள எல்லாவிதமான தீமைகளுக்கும், குற்றங்களுக்கும், ஒழுக்கக்கேடுகளுக்கும் எதிராக இருக்கும் என்கிறார். பிறகு, அவர்கள் எல்லாருக்குமிடையில் இருக்கிற ஒரு ஒற்றுமையைக் குறிப்பிடுகிறார், “அவர்கள் எனக்கு பயப்படாதவர்கள்”. ஒரு விபச்சாரக்காரனுக்கும், மற்றவர்களுடைய அடிப்படையான தேவைகளைத் தீர்க்குமளவுக்கு தன்னிடம் இருந்தும் அதை செய்வதற்கு மனமற்றவனாக இருக்கிற ஒருவனுக்கும் இடையிலிருக்கிற ஒற்றுமை என்ன? இந்த வசனத்தின்படி, அவர்கள் இருவரும் தேவபயத்தில் நடக்கிறவர் அல்ல என்பதுதான். ஆகவே கடவுள் தமக்கு பயப்படாதவர்களுக்கு எதிராக கடும் கோபத்துடனும், பழிவாங்குதலுடனும் தம்முடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவார் என்று மல்கியா தீர்க்கதரிசி சொல்லுகிறார்.

மதரீதியான மாய்மாலக்காரர்கள்

இதுவரை நாம் பார்த்த வேதப்பகுதிகள், வெளிப்படையாக கடவுளுக்கு எதிராக துன்மார்க்கமாய் நடக்கிறவர்களைப் பற்றி குறிப்பிடுவதைப் பார்த்தோம். ஆனால் தேவபயமற்ற இன்னொரு பிரிவினரான மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வெளிப்புறமாக கடவுளுடைய காரியங்களில் அதிகமாக ஈடுபடுகிறவர்கள், ஆனால் இவர்கள் மதரீதியான மாய்மாலக்காரர்கள். வெளிப்புறமாக கடவுளைப் பற்றிய விஷயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள், ஆனால் அவைகளின் தாக்கம் அவர்களில் இருக்காது. இந்தவிதமான மனிதர்களுக்கு ஏற்ற உதாரணமாக இருந்தவர்கள்தான், பரிசேயர்களும் வேதபாரகர்களும்.

மத்தேயு 6ல், நம்முடைய கர்த்தர் இவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அழைக்கிறார். இவர்களைப் போல் நாம் இருக்கக்கூடாது என்று நம்மை எச்சரிக்கிறார். அதற்கான காரணங்களாக அவர் குறிப்பிடுவது, அவர்கள் ஜெபிக்கிறபோது, மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஜெபிப்பார்கள் (வசனம் 5), அவர்கள் தர்மம் செய்கிறபோது, மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்வார்கள் (வசனம் 2), மற்றும் அவர்கள் உபவாசம் பண்ணும்போது, மனிதர்கள் காணும்படியாகவே செய்வார்கள் (வசனம் 16). அதாவது, மதரீதியான காரியங்களைச் நிறைவேற்றுவதற்காக அவர்கள் எடுக்கிற முயற்சிகளிலும், மதரீதியான காரியங்களை அவர்கள் செய்கிறபோதும், அவற்றில் எந்தவிதமான தேவபயமும் இருக்கவில்லை. தேவபயத்தின் சாராம்சம் என்ன? கடவுள் இருக்கிறார் என்றும், அவருடைய புன்னகையே எனக்கு பெருத்த மகிழ்ச்சி என்றும், அவரால் கைவிடப்படுவதுதான் பெரும் பயங்கரமானது என்றும் உணருவதே தேவபயமாகும். இது ஒரு மனிதனை, அவனுடைய மனச்சாட்சியை மீறி எதையும் செய்யாமலும், கடவுளுடைய சாட்சியத்தை நாடுகிறவனாகவும் இருக்கச் செய்யும். இப்படியான விஷயங்களுக்கு பரிசேயர்களும் வேதபாரகர்களும் அந்நியர்களாக இருந்தார்கள்.

கிறிஸ்தவர்களே, உங்களுடைய இருதயம் எங்கிருக்கிறது? கடவுளிடத்தில் ஜெபம் பண்ணுவதற்கு நீங்கள் செல்லுவதையும், அவருடைய கட்டளைகளுக்கான உங்களுடைய கீழ்ப்படிவையும் மனிதர்கள் காணலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், கடவுள் உங்களில் எதைக் காண்கிறார் என்பதுதான்? அவருடைய கட்டளைகளுக்கான உங்களுடைய வெளிப்புறமான கீழ்ப்படிவை, உங்களுடைய இருதயத்திலுள்ள தேவபயத்தின் வெளிப்பாடாக அவர் காண்கிறாரா? நீங்கள் அவரை ஆராதிப்பது, அவர்மீதுள்ள உங்களுடைய அன்பினாலும், அவரைப் பிரியப்படுத்துவதிலுள்ள உங்களுடைய ஆர்வத்தினாலும், அவருக்கு நீங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினாலும் நீங்கள் செய்கிறதாக அவர் பார்க்கிறாரா? அல்லது மதரீதியான உங்களுடைய நடவடிக்கைகள் யாவும் ஏதோ தொடர்ச்சியாக செய்துவருகிற உயிரற்ற நடைமுறை ஒழுங்காக மட்டுமே இருக்கிறதா? மற்றவர்கள் உங்களை அப்படிக் காணவேண்டுமென்பதற்காக அவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறீர்களா?

நீங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டுவருகிறவைகளையெல்லாம் எதற்காகச் செய்கிறீர்கள்? மற்றவர்கள் செய்கிற சிலவற்றையும் நீங்கள் ஏன் செய்யக் கூடாது? மனிதர்களுடைய கண்களுக்கு முன்பாக, ஏதோ மெய்யான மதரீதியான சடங்குகளாக செய்ய வேண்டும் என்பதற்காக இவைகளையெல்லாம் செய்து கொண்டு வருகிறீர்களா? வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் பார்த்து இயேசு சொல்லியவைகளைக் கவனியுங்கள், “அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.” (மத்தேயு 23:28). வேதம் போதிக்கும் ஆத்மீக வழிமுறைகளையெல்லாம் வெறுமனே அறிவில் மட்டும் வைத்திருந்து, வெளிப்புறமான சடங்குமுறைகளை மட்டும் கைக்கொண்டு, இருதயத்தில் தேவபயத்திற்கு அந்நியனாக ஒருவன் இருந்தால், அவன் மெய்யான, இரட்சிக்கும், வேதப்பூர்வமான கிறிஸ்தவத்தைப் பற்றி உள்ளார்ந்த மனதில் ஒன்றும் அறியாதவனாக இருக்கிறான். ஆவிக்குரிய வறட்சியைப்பற்றி அவன் ஒன்றுமறியாதவனாக இருக்கிறான். நீதியினிமித்தமான பசிதாகத்தைப் பற்றி அவன் ஒன்றுமறியாதவனாக இருக்கிறான். தனிமையில் தன்னுடைய பாவத்திற்காக அழுது புலம்புவதைப் பற்றி அவன் ஒன்றுமறியாதவன். கடவுளைப் பற்றிய அவனுடைய ஒட்டுமொத்தமான அனுபவம் தலையில் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது, வெளிப்புறமான சில நடவடிக்கையில் மட்டுமே அது அவனுடைய வாழ்க்கையில் வெளிப்படுகிறது. ஆனால் கடவுளைப் பற்றி அவனுடைய இருதயத்தில் ஒன்றும் அறியாதிருக்கிறான்.

இந்தக் காலகட்டங்களில், தேவபயமின்மையின் தாக்கம், மிகுந்த வீரியத்துடன் உலகின் எல்லா கலாச்சாரத்திலும் காணப்படுகிறது. என்னுடைய பழங்கால வீடு ஒன்றை இடித்துத் தள்ளுவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதை நான் இரண்டு வழிகளில் செய்யலாம். கட்டிடத்தை உடைப்பதற்கான கருவிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, மேற்கூரையிலிருந்து ஆரம்பித்து, வீட்டைப் பகுதி பகுதியாக இடிக்கலாம். ஒவ்வொரு செங்கல்லாக, கட்டிடத்திலுள்ள கதவு மற்றும் ஜன்னல்களையெல்லாம் ஒவ்வொன்றாக கழட்டி நான் அதை செய்து வரலாம். ஆனால் கட்டிடத்தை இடிப்பதற்கு இன்னொரு முறையையும் நான் செய்யலாம். அதாவது வலிமையான சுத்தியலைப் பயன்படுத்தி, கட்டிடத்தின் அஸ்திபாரத்திலிருந்து நான் ஆரம்பிக்கலாம். செய்யத் துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின், அவ்வழியே செல்பவர்கள், நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாதிருக்கலாம். ஏனென்றால், வீடு இன்னும் அப்படியேதான் இருக்கும். அதுவரை நான் என்ன செய்திருக்க முடியும், அஸ்திபாரத்திலுள்ள ஏதோ ஒரு பகுதியை உடைத்திருப்பேன் அல்லது அதில் ஒரு சிறு துளை மட்டுமே போட்டிருக்க முடியும். இந்த முறையை நான் தொடர்ந்தால், நிச்சயமாக, அன்று மாலைவரைகூட வீடு அப்படியேதான் இருக்கும். ஆனால் முதல் முறையைக் கையாண்டிருந்தால், இந்நேரத்தில் வீட்டின் பல பகுதிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேற்கூரையின் பல பகுதிகள் கிழித்தெறியப்பட்டிருக்கலாம். சில ஜன்னல்களையும் உடைத்தெடுத்திருக்கலாம். ஆனால் இரண்டாவது முறையை நான் தொடர்ந்திருந்தால், இரண்டு மூன்று நாட்களில், முதல் முறையைக் கையாளுவதனால் ஏற்படும் மாற்றங்களைக் காட்டிலும் அதிகமானதைச் செய்திருப்பேன். ஒட்டுமொத்த கட்டிடத்தின் வலிமையையும் தாங்கி நிற்கிற அஸ்திபாரத்தின் சில பகுதிகளை நான் கண்டறிந்து, சரியாக அதை நான் உடைத்தெறிந்தால், இரண்டு மூன்று நாட்களில் முழு கட்டிடமே தரைமட்டமாக்கிவிடலாம். முதல் முறையைக் கையாண்டிருந்தால் அந்த நேரத்தில் 80 சதவீதமான கட்டிடம் இன்னும் அப்படியேதான் இருக்கும்.

வேதப்பூர்வமான நன்னெறி ஒழுக்க முறைகளையெல்லாம் பிசாசானவன் வெறுக்கிறான். இவைகளையெல்லாம் அவன் தகர்த்தெறிய இரண்டு முறைகளைக் கையாளலாம். முதலாவது, கிறிஸ்தவ நல்லொழுக்க முறைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே தாக்கும் வண்ணமாக, அவன், “சரீரப்பிரகாரமான பரிசுத்தம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியான பரிசுத்தத்தையெல்லாம் நான் அழிக்கப் போகிறேன். நேர்மை என்பதெல்லாம் ஒன்றுமில்லை, அப்படியான நேர்மையின் ஒவ்வொரு கல்லையும் நான் தகர்த்தெறியப் போகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் சாத்தான் இதையெல்லாம்விட புத்திசாலியானவன். அவன், “உங்களுடைய கட்டிடத்தின் கற்களையெல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பக்கம் செல்லுகிறவர்களெல்லாம் கட்டிடம் இன்னும் நிற்பதைப் பார்க்கட்டும். நான் என்ன செய்யப் போகிறேனென்றால், உங்களுக்குத் தெரியாமல், உங்களுடைய பின்புறத்தில் வந்து கட்டிடத்தினுடைய அஸ்திபாரத்தை மெல்லத் தகர்க்க ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லுகிறான்.

அநேக தலைமுறைகளாக, சாத்தான், பின்புறத்திலிருந்து அஸ்திபாரத்தைத் தகர்க்கும் வேலையில்தான் ஈடுபட்டு வருகிறான். அதற்காக அவன் பயன்படுத்துகிற ஒரு சுத்தியல்தான் தாராளவாத கோட்பாடு. அதன் மூலம் அவன் வேதம் போதிக்கும் கடவுளைப் பற்றி திரித்துக் கூறுகிறான். இஸ்ரவேலின் பயபக்தியும் மகிமையுமான அவரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய தேவனும் பிதாவுமாகிய அவரை, கொள்கைகளற்ற உணர்ச்சிவசப்படுகிறவராக மட்டும் அவரைக் காட்டுகிறான். அவருடைய பரிசுத்தம், நீதி, கோபம் என்பதெல்லாம் பெருமளவுக்கு மறக்கப்பட்டுப் போனது அல்லது நேரடியாக மறுதலிக்கப்படுகிறது. பிறகு இன்னொரு சுத்தியல், மனிதநலவாதம். இது பள்ளி படிப்பின் வாயிலாக பெருமளவுக்கு நுழைக்கப்படுகிறது. மனிதன் அடிப்படையில் தீமையை நாடி செல்லக்கூடியவனாக சீர்கேடான பாவநிலையில் இருக்கிறான் என்பதெல்லாம் இல்லை என்று அங்குக் கற்றுத்தரப்படுகிறது. மற்றொரு சுத்தியலையும் அவன் பயன்படுத்துகிறான், அதுதான் பரிணாம வளர்ச்சித் தத்துவம். அது, மனிதன் கடவுளுக்குக் கடமைப்பாடுடையவன் அல்ல, ஏனென்றால், மனிதன் கடவுளுடைய கையினால் உண்டானவையே அல்ல என்கிறது. மிருகங்களுடைய வளர்ச்சிபெற்ற நிலையே மனிதன் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டாலும், ஒருவேளை மிருகங்களைப் போல் அவர்கள் நடந்தாலும், அது நமக்கு ஆச்சரியமாக இருக்குமா?

இந்தத் தாக்கங்கள் யாவும், ஒழுக்கம் சம்மந்தமான அஸ்திபாரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று அழகான மாளிகையைப் போல் காணப்பட்டதெல்லாம், இன்று கசாப்புக் கடையைப் போல் காணப்படுகிறது. எல்லாரும் சொல்லுகிறார்கள், “அதோ பாருங்கள், வீடு விழுந்துகொண்டு இருக்கிறது” என்று. ஏன்? ஏனென்றால், தேவபயமானது நம்முடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. மறுபடியுமாக வேதப்பூர்வமான நன்னெறி ஒழுக்க முறைகளுக்குத் திரும்ப வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது, மனிதர்களுடைய இருதயங்களில் தேவபயத்தை நாட்ட ஆரம்பிப்பதுதான். இங்கிருந்துதான் இதை நாம் துவங்க வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடைய கிரியையினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும், கடவுளுடைய இரட்சிக்கும் கிருபையாகிய சுவிசேஷத்தின் மூலமாக மட்டுமே, மனிதர்களுடைய இருதயங்களில் தேவபயமாகிய அஸ்திபாரம் கட்டப்படும்.

மறுபடியும் நாம் மக்களிடத்தில் சென்று, கடவுள் யார் என்பதையும், அதாவது அவர் சிருஷ்டிகராக, கட்டளைகளைத் தருகிறவராக, நியாயந்தீர்க்கிறவராக இருப்பதையும், தம்முடைய படைப்புயிர்களிடத்தில் அவர் எதிர்பார்க்கிற நன்னெறி மற்றும் ஒழுக்கத்தின் நிலையையும் எடுத்துரைக்க வேண்டும். அவர் யார் என்பதையும், அவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் பற்றி அவர்கள் சிந்திக்கத் துவங்குகிறபோது, அத்தகைய கடவுளுக்கு எதிராக பாவம் செய்வதென்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை அவர்கள் சிந்திக்க துவங்குவார்கள். பிறகு, இந்த பரிசுத்தமுள்ள கடவுள், நீதியாக நம்மை தண்டிக்கக்கூடியவராக இருந்தபோதிலும், அவர் உலகத்தில் மிகவும் அன்புகூர்ந்ததனால், தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார் என்பதைக் கேட்கிறபோது, சங்கீதக்காரனைப் போல், “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (சங்கீதம் 130:4) என்று பாவமன்னிப்பைப் பற்றி இவர்களும் சொல்லுவார்கள். மனிதர்களில் தேவபயத்தைப் பற்றிய எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத, அவர்களுடைய பாவங்களில் தொடர்ந்திருக்க செய்யக்கூடிய மலிவு விலை மருந்தைப் போன்று சுவிசேஷத்தை மாற்றக் கூடாது. மாறாக, பலமான வேதப்பூர்வமான சுவிசேஷ அறிவிப்பென்பது, மனிதர்களை மனந்திரும்புதலுக்கும், சீடத்துவத்திற்குமான கருவியாக, தங்களுடைய இருதயத்திலும் மனச்சாட்சியிலும் புதிய உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்களின் வல்லமையினால், கடவுளுடைய இலவசமானதும், முழுமையானதுமான பாவமன்னிப்பை மனிதர்கள் பெற்று அனுபவிக்கிறபோது, பயத்தோடும் பக்தியோடும் அவர்கள் கடவுளிடம் சேரும்படி கொண்டுவரப்படுகிறார்கள். கடவுளுடைய இந்த செயல், அவருடைய கட்டளைகள் மற்றும் கற்பனைகளின்படி நடப்பதற்கான வலிமையை அவர்களுக்குப் பெற்று தந்து, இந்த கிருபையுள்ள தேவனும் இரட்சகருமாகிய அவரிடத்தில் இருதயப்பூர்வமான மகிழ்ச்சியும் நேசமும் கொண்டவர்களாக இருக்கச் செய்கிறது.

அவிசுவாசியினுடைய சாட்சி

தேவபயமின்மை என்பது ஒரு நாட்டினுடைய ஆவிக்குரிய நிலையை மட்டுமல்ல, அந்நாட்டிலுள்ள தேவபயமற்ற ஒவ்வொரு தனிநபருடைய நடத்தையையும் விளக்குகிறதாக இருக்கிறது. ஒரு அவிசுவாசியினுடைய வாழ்க்கை ஏன் அந்தவிதமாக இருக்கிறது? அவிசுவாசியான ஒரு இளைஞன், காலையில் எழுந்து, சாப்பிட்டு, பள்ளிக்குச் சென்று, இங்குமங்குமாக கொஞ்சம் பொய் பேசி, இங்குமங்குமாக கொஞ்சம் ஏமாற்றி, தன் சகோதர சகோதரிகளுடன் சண்டை போட்டு, தன் பெற்றோரிடமிருந்து உண்மையை மறைத்து ஏன் வாழுகிறான்? அதற்கான பதில் இதோ: அவனுடைய கண்களுக்கு முன்பாக தேவபயமில்லை. அவிசுவாசிகளான பெரியவர்களுடைய வாழ்க்கையும் இப்படியே இருக்கிறது.

துரதிஷ்டவசமாக, இந்நாட்களில் தங்களைக் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ளுகிற அநேகர், கர்த்தருடைய நாளில் திருச்சபையிலிருந்து வீட்டிற்குச் சென்றபிறகு, அன்று மதியமும், மாலையும் டி.வி. பெட்டியின் முன் தங்களுடைய நேரங்களைக் கழிக்கிறார்கள். கடவுளுடைய கட்டளையாகிய “ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” என்பது என்ன சொல்லுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்துகிறதே இல்லை. கர்த்தருடைய நாளை எப்படிச்  செலவிடுவது என்பதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது, அதில் கடவுள் எதுவும் சொல்லுவதற்கில்லை என்பதாக நினைக்கிறார்கள். கர்த்தருடைய நாளின் மதிய வேளையிலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கடவுள்தாமே சொல்லியிருக்கிறார் என்பதாக அவர்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. ஏன் அவர்கள் அப்படி நடக்கிறார்கள்? கர்த்தருடைய நாளில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றிய விஷயத்தில் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக தேவபயமில்லை என்பதே அதற்குக் காரணம்.

அன்பான வாசகரே, உங்களுடைய அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை நேர்மையுடன் ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய அடித்தளமாக தேவபயம் இல்லை என்பது உங்களுக்கு வெளிப்பட்டால், நீங்கள் இயேசுவிடம் வந்து, அவரால் இந்த பயம் உங்களுடைய இருதயத்தில் நாட்டப்படாதவரை, உங்களுடைய வாழ்க்கை இப்படியேதான் தொடரப்போகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதே நிலையிலேயே நீங்கள் தொடர்ந்து வாழ்ந்து மரித்தால், ஏன் கர்த்தராகிய இயேசு “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத்தேயு 10:28) என்று மனிதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்பதை அப்போது நீங்கள் உணருவீர்கள்.

 

கிறிஸ்தவ வைராக்கியமும் முதலாவது கட்டளையும்

பக்தி வைராக்கியம் – 6 – டேவிட் மெரெக்

[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]  

இத்தொடரை ஆரம்பித்தபோது, ரோமர் 12:9-11 வரையுள்ள வசனப் பகுதியை விரிவாகப் படித்தோம். அதன்பிறகு, இந்த பகுதியைச் சுற்றியுள்ள வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை போதனைகளைப் படித்தோம். இப்போது இப்பாடத் தொடரின் மைய வசனமாகிய ரோமர் 12:11ஐ, வேதத்திலுள்ள மற்ற பகுதிகளோடு தொடர்புபடுத்தி பரந்த எல்லையளவில் ஆராய்ந்து பார்க்கப் போகிறோம்.

இந்த ஆக்கத்தில், 11வது வசனத்தின் நடுப்பாகமாக இருக்கிற “ஆவியிலே அனலாயிருங்கள்” என்பதைக் குறித்து விரிவாகப் படிக்கப் போகிறோம். முதல் ஆக்கத்திலேயே இந்த வசனத்தைப் பற்றிப் பொதுவாக நாம் படித்திருக்கிறோம். “ஆவியிலே அனலாயிருங்கள்” என்கிற இதனுடைய மொழிநடை வேதத்தின் இன்னொரு வசனத்தின் மொழிநடைக்கு ஒத்ததாக இருக்கிறதைப் பார்த்தோம். அந்த வசனப்பகுதி, உபாகமம் 6:4-5 வசனங்கள்,

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இருதயம்” “ஆத்துமா” என்பது ரோமர் 12:11ல் வருகிற “ஆவி” என்பதற்கான இணை வார்த்தைகள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வார்த்தைகளும் நம்முடைய சரீரத்தைத் தவிர்த்த அதற்கு உள்ளிருக்கிறதைக் குறிக்கின்ற வார்த்தைகள். ஆகவே கடவுள் மீது உணர்வுப்பூர்வமாக முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு காட்டுதல் என்பது ஆவியிலே அனலாயிருப்பதற்கான இணையாகும்.

முதலாவது நாம், உபாகமம் 6:5 வசனத்தின் மொழியமைப்பில் அதிக கவனம் செலுத்தப் போகிறோம். பிறகு, வேதத்தின் ஏனைய பகுதிகளில் இதேவித மொழியமைப்பு இருக்கிற பகுதிகளை ஆராய்வோம்.

  1. இக்கட்டளையின் மொழிநடை. உபாகமம் 6:5 வசனத்திலுள்ள கட்டளை பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் மீண்டும் இதேவிதமாக முழுமையாக சொல்லப்படவில்லை. ஆனால், புதிய ஏற்பாட்டில் மறுபடியுமாக சொல்லப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் இதனோடு கூடுதலாக சில பகுதிகள் சேர்க்கப்பட்டுத்தான் சொல்லப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு இதைக் குறிப்பிட்டுச் சொல்லிய ஒரு பகுதியை நாம் பார்க்கலாம் – மாற்கு 12:28-34. உபாகமம் 6:4-5 வசனங்களைத்தான் இயேசு குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கட்டளையின் மொழியமைப்பு பற்றி இரண்டு காரியங்களை கவனியுங்கள்.

அ. இந்தக் கட்டளையின் உச்சகட்ட முக்கியத்துவம் – கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளிலெல்லாம் இது முதன்மையானது என்று இயேசு அடையாளம் காட்டுகிறார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. பிறகு இரண்டாவது கட்டளையைப் பட்டியலிட்டு, இந்த இரண்டையும்விட கடவுளுடைய கட்டளைகளில் பெரியது வேறு எதுவுமில்லை என்று அறிவிக்கிறார். இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ள ஒழுக்க நீதிச் சட்டங்களில், அவரிடம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவதைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்று இயேசு சொல்லுகிறார். (பிறகு இரண்டாவதாக நம்மைப் போல் பிறரை நேசிக்க வேண்டுமென்கிறார். லேவியராகமம் 19:18).

ஆனால் இங்கே இன்னும் அதிக உண்மைகளைக் காண்கிறோம். இயேசு எடுத்துரைத்த இந்த இரண்டு கட்டளைகளின் முக்கியத்துவத்தை அந்த வேதபாரகன் ஒப்புக்கொண்டான். பழைய உடன்படிக்கையின்படி கடவுளுக்கு செலுத்தப்படும் சர்வாங்க தகனபலி மற்றும் ஏனைய பலிகளைவிட இவை இரண்டுமே மிகவும் முக்கியமானது என்று அவன் சொன்னான். இந்த மனிதனின் வார்த்தைகளுக்கு இயேசு எப்படி பதிலளித்தார் என்று கவனியுங்கள். அவனுடைய பதில் ஞானமானது என்ற வகையில் கவனிக்கச் சொல்லுகிறார். அந்த வேதபாரகன் தேவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவன் அல்ல என்று இயேசு அறிவிக்கிறார். இயேசுவின் உண்மையான விசுவாசியாவதற்கு அவன் வெகு தொலைவில் இருக்கவில்லை. கடந்து போகப் போகிற, பழைய உடன்படிக்கையின் வெளிப்புறச் சடங்குகளையும் பரிசேயர்களால் ஏற்படுத்தப்பட்ட மனித சட்டங்களையும் தாண்டி அவன் சிந்தித்திருக்கிறான். மெய்யான கடவுள் பக்தி என்பது முழு மனிதனையும் உள்ளடக்கியது என்றும், குறிப்பாக அது இருதயத்தோடு சம்பந்தப்பட்டது என்றும் அவன் அறிந்திருந்தான். முழுமையாக கடவுளிடம் அன்புகாட்டுவது எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் அறியத் துவங்கியிருந்தான்.

தொடர்ந்து பார்ப்பதற்கு முன்பாக, இந்தப் பிரதான கட்டளையின் உச்சகட்ட முக்கியத்துவத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு பாடத்தை கவனியுங்கள். இந்த முதலாவது பிரதான கட்டளையானது, ரோமர் 12:11ல் கட்டளையிடப்பட்டுள்ள ஆவியிலே அனலாயிருங்கள் என்பதை விளக்கும் மற்றொரு வழிமுறையாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், பக்தி வைராக்கியம் கொண்டிருப்பதென்பது கடவுளை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் நேசிப்பதாகும். அது உண்மையானால், பக்தி வைராக்கியம் இருப்பதையே கடவுள் உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார். ஆகையால் நமக்கும் அதுவே உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

இப்போது முதலாவதும் பிரதானமானதுமான கட்டளையைக் குறித்த இன்னுமொரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன்.

ஆ. இந்த கட்டளையின் மையக் கடமை – முதலாவது மற்றும் இரண்டாவது பெரிய கட்டளைகள் இரண்டிலும் ஒரு பொதுவான விஷயம் உண்டு. இரண்டுமே நாம் அன்புகாட்ட வேண்டும் என்று கோருகின்றன. முதலாவது கட்டளையின்படி நாம் கடவுளிடத்தில் முழுமையாக அன்புகாட்ட வேண்டும். இரண்டாவது கட்டளையின்படி நாம் இயற்கையாக நம்மிடத்தில் அன்புகூருவதுபோல் பிறரிடத்தில் அன்புகாட்ட வேண்டும். “மனிதனுடைய ஒரே முழுமையான கடமையாகவும், ஒரே முழுமையான ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய கட்டளையாகவும் இருப்பது அன்பே” என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அன்புகாட்டுதலாகிய கோரிக்கை எப்படி மையமாக இருக்கிறது என்பதை கடவுளுடைய வார்த்தையின் மற்ற பகுதிகளும் நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

ஆனால் எப்போது நாம் இந்த வகையில் நேசிக்க முடியும்? நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இந்த இரண்டு கட்டளைகளிலும், கடவுள் நாம் செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறவைகளை செய்வதற்கு நாம் இன்னும் துவங்கவே இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இயற்கையில் நம்முடைய இருதயம் அதிக சுயநலங் கொண்டது. கடவுளுக்கு முன்பாக தைரியமாக நின்று நான் உம்மை முழுமையாக நேசித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடியவன் யார்? இதன்படி, நாம் அனைவரும் நம்மிலேயே கண்டனத்திற்குரியவர்கள். கடவுளின் பெரிய கட்டளைகளான இவைகளை நாம் எப்படிக் கடைபிடிக்கத் துவங்க முடியும்? மேலும், இப்படியே சென்றால், நாம் எப்படி பக்தியுள்ள கிறிஸ்தவ வைராக்கியத்தைத் துவங்க முடியும்?

அப்போஸ்தலனாகிய யோவான் இக்கேள்விகளுக்கு மிக எளிய வழியில் பதிலளிக்கிறார் – 1 யோவான் 4:19 (இந்த வசனத்தில் வரும் “அவரிடத்தில்” என்பது இங்கே இருந்திருக்கக் கூடாது). கடவுள் நம்மிடத்தில் காட்டிய அற்புதமான அன்பினிமித்தமாகவே நம்முடைய இருதயத்தில் எந்தவித அன்பும் ஆரம்பிக்கிறது. அந்த அன்பு எப்படி நம்மிடத்தில் காட்டப்பட்டது? (1 யோவான் 4:9-10). நாம் நித்திய அழிவை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். நாம் தேவகோபத்திற்கே உரியவர்களாயிருந்தோம். ஆனால் பிதாவாகிய தேவனோ தம்முடைய கோபத்தை தம்முடைய நேச குமாரன் மீது சிலுவையில் ஊற்றினார். இந்த வகையில் மாசற்ற தேவாட்டுக்குட்டி கடவுளின் நீதியை நிறைவேற்றியது. பாவத்திற்காக வருந்தும் பாவிகளாக, நாம் அவரை விசுவாசித்து நாடி வருகிறபோது, அவர் மூலமாக நாம் வாழ்வை அடைகிறோம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் – நித்திய ஜீவனை உடையவன் (1 யோவான் 5:11-12). கடவுளின் அன்புக்காக அவரைப் போற்றுங்கள். நாம் மெய்யாகவே அவருடைய அன்பை ருசிபார்த்திருந்தால், நாமும் அன்பையே பதிலாக வழங்கியிருப்போம். நன்றியுடன் அவருடைய மாதிரியைப் பின்பற்றும்படி ஊக்கப்படுத்தப்படுகிறோம். ரோமர் 12:1ஐ சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய இரக்கங்களே ஆர்வமுள்ள இருதயத்தோடு நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய நம்மை ஊக்குவிக்கிறது. தேவனுடைய இரக்கங்களை நாம் சரியானவிதத்தில் பார்க்கக் கூடுமானால், நம்முடைய பதில் நடவடிக்கையாக கடவுளிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவோம். கடவுளிடத்தில் அன்புகூருகிறதன் விளைவாக, நாம் நம்முடைய அயலானிடத்திலும் அன்புகூருவோம். விசேஷமாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகாட்டுவோம். வாசியுங்கள் 1 யோவான் 4:11 (பிறகு 9-10). கடவுளுடைய பிள்ளைகளிடத்தில் நாம் அன்புகாட்டுவோம், ஏனென்றால், நாம், நம்முடைய மற்றும் அவர்களுடைய பிதாவினிடத்தில் அன்புகாட்டுவதனால் அப்படிச் செய்வோம். (1 யோவான் 4:20 – 5:1.)

நம்முடைய இருதயத்தின் சுயநலம் மற்றும் அன்பற்ற தன்மைகளை நாம் அறிந்திருக்கிறோம். இந்த அன்பு எங்கிருந்து வரும்? யோவானின் வார்த்தைகளுக்கே இது நம்மை மீண்டும் அழைத்துச் செல்லுகிறது “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியினால் நாமும் அன்புகூருகிறோம்”. நம்முடைய அன்பிலுள்ள பிரச்சனைகளை அவருடைய அன்பு எப்படிக் கையாளுகிறது? (உபாகமம் 30:4-6). இதைத் தொடர்ந்து வரும் வசனங்கள் யூதர்கள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்து விடுதலை பெற்றுவருவதைக் குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால் அதன் முழுமையான நிறைவேற்றம் புதிய உடன்படிக்கையில் தங்கியிருக்கிறது. கடவுளிடத்தில் நாம் அன்புகாட்ட வேண்டிய வகையில் அன்புகாட்ட வேண்டுமானால், பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினால் நம்முடைய இருதயத்தை அற்புதமாக மாற்றினால் மட்டுமே ஆகும். அன்பென்பது ஆவியின் கனி என்று புதிய ஏற்பாடு அறிவிக்கிறது (கலாத்தியர் 5:22). வைராக்கியமுள்ள இருதயம் கடவுளிடமிருந்தே வருகிறதென்று பார்த்ததுபோல் கடவுளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் அன்புகாட்டுவதும் கடவுளிடமிருந்தே வருகிறது. ஆகவே முழு இருதயத்தோடு பக்தி வைராக்கியம் கொண்டிருப்பது என்னிடத்தில் குறைவாக இருந்தால், நான் சிலுவையினிடத்திலே இன்று போக வேண்டியவனாக இருக்கிறேன். முதலாவது மற்றும் இரண்டாவது கட்டளையை நிறைவேற்றுவதில் என்னுடைய தோல்விகளை நான் அறிக்கையிட வேண்டும். கடவுளுடைய புதிதான பாவமன்னிப்பை நாட வேண்டும். என்னுடைய வாழ்வில் அதிகம் தேவையான ஆவியின் கனியாகிய அன்புக்காக தொடர்ந்து கடவுளிடம் மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

  1. முதலாவது கட்டளையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே மொழியமைப்பு பழைய ஏற்பாட்டின் பிற இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்ப்போம். முதலாவது கட்டளை பழைய ஏற்பாட்டில் ஒரே ஒரு இடத்தில்தான் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்தேன் – உபாகமம் 6:5. ஆயினும், இந்த கட்டளையின் சில பாகங்களோ அல்லது மொழியமைப்போ பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கத்தில் மீதமுள்ள பகுதியில், இப்போதனையின் சுருக்கத்தைத் தரவிருக்கிறேன்.

இதை நான் ஏன் செய்கிறேன்? முதலாவது கட்டளையோடு தொடர்புடைய முக்கியமான ஒரு கேள்விக்கு இன்னும் பதில் காண வேண்டியிருக்கிறது. இப்போது நாம் பார்க்கப் போகும் பகுதிகள் அந்த முக்கிய கேள்விக்கு பதில் காண நமக்கு உதவியாக இருக்கும். அந்தக் கேள்வி: கடவுளிடம் உச்சகட்ட முழுமையான அன்புகாட்டுதல் எப்படியிருக்கும்? நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படிக் காண்பிப்பது? வேதத்தின் ஏனைய பகுதிகள் இதைப் பற்றி என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். முதலாவது கட்டளைக்கு மிக நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலிருந்து நாம் துவங்கலாம்.

அ. உபாகமம் 13:1-4. வசனம் 3, முதலாவது மற்றும் பெரிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோமா இல்லையா என்பதற்கான பரீட்சை நமக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதுதான் அந்த பரீட்சை? ஒருவன் தனக்கு தீர்க்கதரிசன வரமுண்டு என்று சொல்லிக்கொண்டு வருகிறான், அவன் சொல்லிய தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. மேலும், அந்த தீர்க்கதரிசனம் அற்புதங்களையும் அடையாளங்களையும் முன்னறிவிக்கிறது, அவன் சொல்லிய அற்புதங்களும் அடையாளங்களும் மெய்யாகவே நிறைவேறுகிறது. ஆனால் இந்தத் தீர்க்கதரிசியோடும் அவனுடைய அடையாளங்கள் அற்புதங்களோடும் ஒரு பிரச்சனை உண்டு. அவன் மெய்யான கடவுளை விட்டும் அவருடைய வார்த்தைகளை விட்டும் விலகும்படி நம்மை வலியுறுத்தி வருகிறான். பொருளாதாரம் மற்றும் உடல் சுகம் கிடைக்கும் என்று கூறி அந்நிய தெய்வங்களை வழிபடும்படி நம்மை வற்புறுத்துகிறான். இதற்கு எப்படி நாம் பதில் தருவது? அவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லையா? அவனுடைய ஊழியத்தோடு தொடர்புடைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கவில்லையா? ஆனால் பரீட்சை இதுதான். ஆண்டவர் நம்மைப் பார்த்துச் சொல்லுகிறார் இயற்கைக்கு எதிரான அசாதாரண நிகழ்வுகள் நடந்து நாம் அவரிலும் அவருடைய வார்த்தையிலுமிருந்து விலக வேண்டும் என்று சொன்னாலும் நாம் அவரிலும் அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருந்தால் மட்டுமே அவருடைய முதலாவது மற்றும் பெரிய கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறவர்களாயிருப்போம். அதேவேளை, பொய்யான அற்புதங்களும் அடையாளங்களும் இருக்கிறதென்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. பிறகு வசனங்கள் 6-10, உங்களுடைய நெருக்கமான உறவினர்களோ நண்பர்களோ உங்களைக் கடவுளையும் அவருடைய வார்த்தையையும் விட்டு விலகச் செய்தால், அப்போதும் இதே தத்துவமே கையாளப்பட வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில், நாம் மிகவும் மதிக்கத்தக்க மனித உறவுகளை இழக்க நேரிட்டாலும் நம்முடைய கர்த்தராகிய ஆண்டவரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூர அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுபோன்றதை செய்யும்படிதான் இயேசுவும் சொல்லியிருக்கிறார், யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். (லூக்கா 14:26-27)

வேறுவிதமாக சொல்லுவதானால், நம்முடைய உறவுகள் மீது நியாயமானபடி வரவேண்டிய அன்பைக் காட்டிலும், நம்மீது நமக்கு இருக்கிற அன்பைக் காட்டிலும், அதிகமாக இயேசுவின் மீது அன்பு இருக்க வேண்டும். அவர்மீதுள்ள நம்முடைய அன்பைக் காட்ட வேண்டியபடி காட்டுவதற்காக நம்முடைய உறவுகளையும் நம்மையும் நாம் வெறுக்கிறதாகவும் சில நேரங்களில் தென்படலாம். இல்லாவிட்டால், அவருடைய சீடர்கள் என்று உரிமை கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இருக்காது. கிறிஸ்துவின் மீது நாம் காட்டுகிற அன்பு வேறு எவரிடமோ அல்லது எதனிடமோ வைக்கிற அன்பையும்விட பெரிதாக இருக்க வேண்டும். ஆண்டவரைப் பின்பற்றுவதற்காக அவைகளை விட்டுவிலக நேரிடலாம் (மத்தேயு 19:29). முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் ஆண்டவரிடத்தில் அன்புகூருவதென்பது, கிறிஸ்துவின் சிலுவையைச் சுமப்பதையும் உள்ளடக்கியது.

உபாகமம் 13 ஆம் அதிகாரத்திலுள்ள இந்த முக்கிய பகுதியில் இன்னுமொரு விஷயத்தையும் சுருக்கமாகக் கவனியுங்கள். வசனம் 4ல், கடவுள் மீதுள்ள உச்சகட்ட அன்பின் சாதகமான காரணிகளின் பட்டியலையும் பாருங்கள் – அவரை பின்பற்றுதல், அவருக்கு பயப்படுதல், அவருக்குக் கீழ்ப்படிதல், அவரைச் சேவித்தல், அவரைப் பற்றிக்கொள்ளுதல். பழைய ஏற்பாட்டில் இது போன்ற இன்னும் அநேகமானவைகளை அடுத்து வரும் பகுதிகளிலும் காணலாம்.

ஆ. யோசுவா 22:5. கானான் தேசத்தைப் பிடிப்பதற்கு உதவியாக இருந்து, பிறகு தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த யோர்தானின் மறுகரையிலிருந்த கோத்திரங்களோடு யோசுவா பேசிக்கொண்டிருந்தார். அதில் அவர், அவர்கள் தொடர்ந்து உண்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த முதலாவது மற்றும் பிரதான கட்டளையை மீண்டும் எடுத்துச்சொல்லி விளக்கினார். அவர் “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து” என்று துவங்கி “முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும்” என்று முடிக்கிறார் (ஆங்கில வேதத்தில் இவ்வசனம் இப்படியே முடிகிறது. தமிழில் இது வசனத்தின் நடுவில் வருகிறது). கடவுளிடம் உச்சகட்ட அன்புகாட்டுவது தொடர்பாக பல காரியங்களை இவை இரண்டிற்கும் நடுவில் விளக்குகிறார். அதில், அவருடைய வழிகளில் நடத்தல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுதல், அவரை பற்றிக்கொண்டிருத்தல், அவரை சேவித்தல் (அவரை வழிபடுதல்) ஆகியவை அடங்கும். கடவுளிடம் எப்படி அதிகமாக அன்புகாட்டுவது என்று நீங்கள் அறிய வேண்டுமா? அவர் சொல்லுகிறதை செய்யுங்கள், விசுவாசத்தினால் அவரைச் சார்ந்திருந்து உறுதியாக அவரைப் பற்றிக்கொள்ளுங்கள், அவரை ஆராதியுங்கள். இந்த அன்பு இப்படித்தான் வெளிப்படும்.

இ. 2 இராஜாக்கள் 23:24-25. தெய்வபக்தியுள்ள ராஜாவாகிய யோசியாவுக்கு கடவுள்மீதிருந்த அன்பை இப்பகுதி நேரடியாக விவரிக்கவில்லை. இருப்பினும், இப்பகுதிதான் உபாகமம் 6:5ல் குறிப்பிட்டுள்ள மனிதனிலுள்ள மூன்று அம்சங்களின் செயல்பாட்டை விவரிக்கிற அதற்கடுத்த ஒரே வேதப்பகுதியாக இருக்கிறது. ஆகவே இது அந்தப் பெரிய கட்டளையையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அதனை மேலும் விளக்குகிற பகுதியாகவே இதை நாம் பார்க்க வேண்டும். தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், தன் முழு பலத்தோடும் யோசியா இங்கு என்ன செய்தான்? அவன் கர்த்தரிடம் திரும்பினான். அவன் சிறுவயதில் கடவுளை அறிந்துகொண்டபோதே இதைச் செய்திருக்கிறான். விசுவாசத் துரோகிகளான யூதா நாட்டிற்கு இராஜாவானபோதும் இதையே செய்திருக்கிறான். அவன் தன்னைத் தாழ்த்தி இருதயத்தின் ஆழத்தில் துக்கப்பட்டு கண்ணீர்விட்டு மனந்திரும்பியிருக்கிறான் (2 இராஜாக்கள் 22:11, 18-19). அவர்கள் அதுவரை வணங்கிக்கொண்டிருந்த அந்நிய தெய்வங்களைவிட்டுத் திரும்பினான். அதுவரை அவர்கள் பின்பற்றி வந்த எல்லாவித கீழ்ப்படியாமையின் நடவடிக்கைகளிலிருந்து அவன் திரும்பினான். கடவுள் தம்முடைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தாரோ அதைச் செய்து தன்னுடைய மனந்திரும்புதலின் கனிகளைக் காட்டினான். யோசியாவுக்கு கடவுள் மீதிருந்த அன்பை இது நமக்கு அடையாளங் காட்டுகிறது. நமக்கும் இப்படித்தான். கடவுளிடம் நாம் அதிகமாக அன்புகாட்டுகிறதாக இருந்தால், நொறுங்கிய இருதயத்தோடு நாம் அந்நிய தெய்வங்களிலிருந்தும் பாவகரமான நடவடிக்கைகளிலிருந்தும் திரும்பி, நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிறவைகளைச் செய்கிறவர்களாக இருப்போம்.

முழு இருதயத்தோடும் அல்லது முழு ஆத்துமாவோடும் கடவுளிடம் திரும்பியதாக அல்லது திரும்ப வேண்டுமென்பதை பழைய ஏற்பாடு பல பகுதிகளில் நமக்கு இனங்காட்டுகிறது. அதில் அநேகமானவை, நாம் இதுவரை பார்த்தவைகளையே மறுபடியும் எடுத்துரைக்கின்றன. இதனோடு தொடர்புடைய சிலவற்றை இப்போது நான் இங்கு பட்டியலிடுகிறேன். கடவுளிடம் மெய்யாகவே நாம் அன்புகாட்டுகிறவர்களானால், நாம்

  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடுவோம் – உபாகமம் 4:29 (மேலும் 2 நாளாகமம் 15:12, ஒப்பிடுக 15; 22:9; 31:21, எரேமியா 29:13). ஒரு நபரைத் தேடுவது அன்பின் அடையாளம்.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரை சேவிப்போம் – உபாகமம் 10:12 (மேலும் 11:13; 1 சாமுவேல் 12:20, 24). நாம் நேசிக்கும் ஒரேயொருவர் கடவுள் மட்டுமே.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு காத்து நடப்போம். உபாகமம் 26:16 (உபாகமம் 30:1-2; 2 இராஜாக்கள் 23:3; 2 நாளாகமம் 34:31; ஒப்பிடுக யோவான் 14:15; 1 யோவான் 5:3). நம்முடைய தேவனும் தலைவனும் ராஜாவுமாகிய அவரிடம் அன்புகாட்டுவது அவருக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நம்முடைய பாவங்களிலிருந்து நம்முடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவோம். உபாகமம் 30:10 (மேலும் 1 சாமுவேல் 7:3; 2 நாளாகமம் 6:38; யோவேல் 2:12-13). அன்பு ஒரு நல்லுறவை விரும்பும்.
  • முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சத்தியத்தில் நடப்போம். 1 இராஜாக்கள் 2:4 (மேலும் 8:23; 2 நாளாகமம் 6:14). நாம் உண்மையில் அன்புகாட்டுகிற ஒருவரோடு நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள விரும்புவோம்.
  • முழு இருதயத்தோடும் கர்த்தரைப் பின்பற்றுவோம் – 1 இராஜாக்கள் 14:8
  • முழு இருதயத்தோடும் நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம் – சங்கீதம் 86:12
  • முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை வைப்போம் – நீதிமொழிகள் 3:5
  • கடவுளின் மீட்பிற்காக அவரில் முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூருவோம் – செப்பனியா 3:14

இவ்வேளையில், முதலாவது பிரதான கட்டளையின்படி நாம் கடவுளிடம் அதிகமாக அன்புகாட்டுவதற்கு நம்மை ஊக்கப்படுத்தும் இரண்டு உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். பக்தி வைராக்கியத்திற்கான அந்த இரண்டு விஷயங்கள் இதோ –

  1. கடவுள் நம்மை ஆசீர்வதிக்க செயல்படும் விதம் – எரேமியா 32:40-41. இங்கு, ஆர்வமுள்ள ஆவியோடும் அதாவது முழு இருதயத்தோடு தமக்கு மறுமொழி தரும்படி கடவுள் தாமே நம்மை அழைக்கிறார். கடவுள், தம்முடைய முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தம்முடைய மக்களை புதிய பூமியில் நாட்டுவேன் என்று புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தை அவர்தாமே ஏற்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். கடவுள் தம்முடைய பிள்ளைகளாகிய உங்களுக்குத் தாம் செய்வேன் என்று வாக்களித்திருப்பவைகளைச் செய்வதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுகிறார். ஆகவே அவரைப் போல் நாமும் ஆர்வமுள்ள ஆவியைக் கொண்டு அதாவது நாம் இதுவரை பார்த்த விஷயங்களின் அடிப்படையில் ஆண்டவரிடம் அன்புகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.
  2. பிரசங்கி 9:10 – பாதாளம் வருகிறது. இந்த வாழ்நாளில் நம்முடைய ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு கொஞ்ச நாட்களே உண்டு. இரவு வருகிறது. பகற்காலமிருக்கும்போதே நமக்கு மீதமிருக்கும் வலிமையைக் கொண்டு நாம் செய்யும்படி அவர் நமக்குக் கொடுத்துள்ளவைகளை செய்வதற்கு அவர்தாமே உதவுவாராக.

பக்தி வைராக்கியத்திற்கான ஆதாரங்கள்

“ஆவியிலே அனலாயிருங்கள்” என்ற வார்த்தைப் பிரயோகம், இயேசு குறிப்பிட்ட முதலாவதும் பெரியதுமான கட்டளையை நமக்கு சுட்டிக்காட்டியது. இந்த வார்த்தைப் பிரயோகம், நம்முடைய தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்ற கட்டளையின் மொழிநடைக்கு ஒத்ததாக இருக்கிறதைப் பார்த்தோம்.

இப்போது, ரோமர் 12:11ல் பக்திவைராக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் கருப்பொருளைப் படிக்கலாம் – “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்”. இந்த வசனத்தை நாம் முதலாவது படித்தபோது, ஆவியிலே அனலாயிருப்பது அல்லது பக்தி வைராக்கியம் என்றால் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தச் சொற்றொடர் நமக்கு உதவியது. இப்போது இதில் நாம் பார்க்கப்போவது, பக்தி வைராக்கியம் என்பது அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருப்பதாகும் என்பதையே. வேறு விதத்தில் சொல்லுவதானால், கடவுள் நாம் செய்யும்படி நமக்குக் கொடுத்திருக்கிற காரியங்களை உண்மையுடன் நிறைவேற்றுவதற்கு அதிக ஆர்வத்தைக் காட்டுவதாகும். அசதியாகவும் அஜாக்கிரதையாகவும் இருப்பது பக்தி வைராக்கியத்திற்கு எதிரானதாகும். அதாவது, கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களை கவனத்துடனும் ஆர்வத்துடனும் செய்யாமல் மெதுவாகவும், தயக்கமாகவும், தாமதமாகவும், சோம்பலாகவும் செய்வதாகும்.

இதுவரை நான் குறிப்பிட்ட யாவும், ஜாக்கிரதையாயிருப்பது மற்றும் அதற்கு எதிர்மாறான விஷயங்கள் பற்றிய மிகவும் பொதுவான அம்சங்கள். நம் வாழ்வில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கான அடையாளங்களைக் குறிப்பாகக் காட்டுவது சாத்தியமா? நிச்சயமாக இது சாத்தியம். இதைப் பற்றி வேதம் அதிகமான குறிப்புகளை நமக்குத் தருகிறது. ஆகவே இப்போது, நம் வாழ்வில் இந்த ஜாக்கிரதை இருப்பதைக் காட்டும் அடையாளங்களான 10 வழிமுறைகளில் நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். இதில் முதலாவது, மிகவும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியதாகையால் அதை விரிவாகப் படிக்கப் போகிறோம்.

  1. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய வழக்கமான வேலைகளில் நாம் சோம்பலுள்ளவர்களாக இருக்கக் கூடாது. (நீதிமொழிகள் 10:4; 12:24; 13:4). கிறிஸ்தவ வைராக்கியத்திலுள்ள ஜாக்கிரதை என்பது இதன்மூலம் கண்கூடாகத் தெரியக் கூடும். இதில், ஒரு மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற வழக்கமான வேலை அல்லது அவனுடைய தொழிலைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இது, அவன் இரவில் தூங்குவதற்குப் போக மீதமிருக்கிற பெருமளவிலான நேரத்தில் அவன் செய்யும் வேலையைப் பற்றியது. இந்த வேலையின் மூலமாகத்தான் அவன் தன்னுடையதும் தன் குடும்பத்திலுள்ளவர்களுடையதுமான தேவைகளை நிறைவேற்றுவதற்கான வருமானத்தைச் சம்பாதிக்கிறான். நம்மில் போதகர்களாக இருக்கிறவர்கள், அவ்வேளைக்காக வருமானம் பெறுகிறோமோ இல்லையோ, நம்முடைய வேலை போதகப் பணியை விசுவாசத்தோடு செய்வதாகும்.

இரண்டு விதமான தனிநபர்களிடத்தில் காணப்படும் வேறுபாட்டை இவ்வசனங்களில் தெளிவாகக் காணலாம். ஒருபுறம் ஜாக்கிரதையுள்ளவன், அவன், கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளைச் செய்வதில் கவனத்தோடு ஈடுபடுகிறவன். அவன் சோர்வுறுகிறபோது, பெலத்திற்காக கடவுளை நோக்கிக் கதறுகிறான், தொடர்ந்தும் வேலையைச் செய்து கொண்டுபோகிறான். (நிச்சயமாக, அவன் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள போதுமான தூக்கத்தைப் பெறவும், ஓய்வுநாளின் ஓய்வு எடுப்பதையும் (இது போதகர்களுக்கு ஓய்வுநாளைத் தவிர்த்த ஏனைய நாளாக இருக்கும்), தேவையான விடுமுறை காலங்களையும் பொறுப்புடன் தேட வேண்டும்.) சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் தனக்கு சாதகமானதாக இல்லாதபோதும் அவன் கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிற வேலையைத் தொடருகிறான். அவன் தன்னுடைய வேலையை முழுமையாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டுமானால், அதனோடு தொடர்புடைய அனைத்துக் காரியங்களிலும் அவன் தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறான். கடவுளுக்காக கனி கொடுப்பதற்கு கடவுள் கொடுத்திருக்கிற அனைத்து வழிமுறைகளையும், திறமைகளையும், வாய்ப்புகளையும் உண்மையுடன் பயன்படுத்துகிறான் (தாலந்துகள் உவமையைக் கவனியுங்கள் – மத்தேயு 25:14-17, 19-23, லூக்கா 19:12-19).

மறுபுறம் சோம்பலானவன், தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஏனோதானோ என்றோ, அலட்சியமாகவோ இருக்கிறவன். அவன் தனது வேலையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றாவிட்டால், அவன் அதைச் செய்கிறதில்லை. அப்படியே அந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், பாதி தூக்கத்தில் செய்வான் அல்லது தாமதமாக ஆரம்பிப்பான் (நீதிமொழிகள் 26:14). சூரியன் இன்னும் நடு வானில் இருக்கிறபோதே தன்னுடைய வேலையைவிட்டு திரும்பி பொழுதுபோக்கிற்குப் போய்விடுவான். அவன் வேலை செய்கிறபோது, அவன் தனக்குப் பிடித்தமான வேலையைத்தவிர மற்றவைகளை வழக்கமாக அவன் அரை மனதோடுதான் செய்வான். அவனது பணிகளைக் கடினமாக்குகிற ஏதாவது தடைகள் வந்தால், உடனடியாக அவன் தன் வேலையைத் தொடருவதை விட்டுவிடுவான் (நீதிமொழிகள் 20:4). அவன் எப்போதும் தனது கவனக்குறைவுக்கு சாக்குப்போக்குச் சொல்லுவான். சாக்குப்போக்குச் சொல்லுவதை விட்டுவிட்டு தன்னுடைய வேலையைத் தொடரும்படி யாராவது அவனிடம் சொன்னால் அவன் ஒருபோதும் அதை கேட்பதில்லை (நீதிமொழிகள் 26:16). அந்த சாக்குப்போக்குகள் பெரும்பாலும் அவனது கற்பனையாகவே இருக்கும் (நீதிமொழிகள் 22:13; 26:13 – “வெளியே சிங்கம் உண்டு”). அவன் முன்னேறுவதில்லை, தன்னுடைய வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதில்லை, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதில்லை, உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக அவன் அவைகளைப் புறக்கணித்து புதைத்து விடுகிறான் (தாலந்துகள் உவமையைக் கவனியுங்கள் (மத்தேயு 25:18, 24-30; லூக்கா 19:20-26).

ஜாக்கிரதையும் சோம்பலும் மோதுகிறதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீதிமொழிகள் புத்தகம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. உண்மைதான், இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், ஜாக்கிரதையுள்ளவனிடம் தனது தேவைக்கு மேலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கக்கூடியதாக பணம் இருக்கும். அவன் பெரும்பாலும் மற்றவர்களுக்காக வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவனே செய்துவிடுவான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுள் ஒரு தற்காலிக, உடல் வழி ஊக்கத்தை ஜாக்கிரதையுள்ளவர்களுக்குத் தந்து ஆசீர்வதிக்கிறார். ஒருவேளை இவன் விசுவாசியாக இருப்பானானால், அது அவனுக்கு மிக விலையுயர்ந்த ஆசீர்வாதமாக இருக்கும். அவன் தனது கர்த்தரும் இரட்சகருமாகிய அவரின் இன்முக அங்கீகாரத்தைப் பெறுகிறான் (மத்தேயு 25:18-23; லூக்கா 19:16-19).

ஆனால் சோம்பேறியைப் பற்றி என்னச் சொல்லுவது? இறுதியில் அவன் ஏழையாவான். மற்றவர்களுக்கு இருக்கும் அதே ஆசைகள் அவனுக்கும் உண்டு. ஆனால் அவன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தீர்ப்பதற்குக்கூட அவனிடம் போதுமானது இல்லை. பெரும்பாலும் அவன் மற்றவர்களுக்காக வேலை செய்யவே கட்டாயப்படுத்தப்படுவான். ஒருவேளை இது போன்ற ஒரு சோம்பேறி நம்முடைய திருச்சபைக்கு வந்து அல்லது அங்கத்தவனாக சேர்ந்து, நீங்கள் என்னை நேசிக்க வேண்டியவர்கள், அதனால் என்னுடைய தேவைகளுக்கான பணம் மற்றும் உணவைத் தரவேண்டுமென்று சொன்னால் என்ன செய்வீர்கள்? திருச்சபையோ அல்லது ஒரு விசுவாசியோ இதற்கு எப்படி பதிலளிப்பது? தன்னுடைய தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ள இயலாமலும், மெய்யாகவே தேவையில் இருக்கிறவர்களுமாகிய மெய்யான விசுவாசிகளே இப்படியான உபகாரங்களைப் பெற வேண்டும் (1 யோவான் 3:16-18; கலாத்தியர் 6:9-10). இல்லாவிட்டால், நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் அதே வேதம் ஒரு நபர் வேலை செய்ய மறுத்தால், அவன் சாப்பிடவும் கூடாது என்கிறது (2 தெசலோனிக்கேயர் 3:10). சோம்பேறிக்கு வரும் பொதுவான பாதிப்புகளை நாம் மாற்றப் பார்ப்பது தவறானதாகும். ஏனென்றால் அவன் பாவம் செய்கிறான், அந்த பாவத்தில் அவன் தொடர்ந்து இருக்கும்படி ஊக்குவிக்கக் கூடாது. (நீதிமொழிகள் 16:26).

இந்த விஷயத்தில், போதகர்களுடைய வேலை என்ன? தன்னுடைய போதகப் பொறுப்புகளை அலட்சியம் செய்கிறவன் சோம்பலான போதகனாக இருப்பான், இல்லையா? நிச்சயமாக. நாம் நேர்மையானவர்களாக இருந்தால், நம்முடைய மனசாட்சி இப்படித்தான் சொல்லும். நம்மில் அநேகருக்கு, கிட்டத்தட்ட எல்லாருக்கும் என்று சொல்லலாம், பிரசங்கம் தயாரிப்பது கடினமானதும் சரீர தளர்ச்சியை ஏற்படுத்தும் வேலையுமாகும். குறிப்பாக இதற்காகப் படிக்கின்ற வேளையில் சில பிரசங்கங்கள் முழு வடிவம் பெறாமல் இருக்கும், அவற்றில் சில பகுதிகளை பல முறை எழுத வேண்டியிருக்கலாம், அல்லது முழுவதும்கூட மறுபடியும் எழுத வேண்டி வரும். வழிதவறிச் சென்று, திரும்ப மறுக்கும் ஆட்டை மீட்பதென்பது சரீரத் தளர்வை ஏற்படுத்தும் வேலையாகும். விசுவாசிகளின் வாழ்க்கையில் பாவத்தைக் சுட்டிக்காட்ட வேண்டியவேளையில் அன்போடு அதை எடுத்துக்காட்டுவதும், மனந்திரும்ப மறுக்கிறபோது திருச்சபை ஒழுங்குக்கட்டுப்பாட்டை, கசப்பானதாக இருந்தாலும், அன்போடு கொண்டு வருவதும் உண்டு. பவுல் தன்னுடைய ஊழியசப் பணிகளைக் கடினமான உழைப்பு என்கிறார், அதாவது கடுமையான வேலை என்கிறார். இருப்பினும் அவர் உண்மையுடன் தனது உழைப்பைத் தொடந்தார். அவரை நாம் உதாரணமாகக் கொண்டு உழைக்க வேண்டும். நாம் போதகர்களாக உண்மையாக உழைத்தும், பலவிதமான பணப் போராட்டங்களுடனும் நாம் வாழலாம். ஆனால் “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று ஆண்டவர் சொல்லியவற்றிற்கு வேறெதுவும் ஒப்பாகாது. “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. . . . பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத்தேயு 25:26, 30) என்ற வார்த்தைக்கு நாம் பயப்பட வேண்டும். நற்செய்தி ஊழியனாக இருப்பது பெரும் பாக்கியமானது. அதேவேளை, கடவுளுடைய மக்களின் அழியா ஆத்துமாக்களைக் குறித்த பொறுப்பும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நம்முடைய ஜாக்கிரதையில் தெளிவாகக் காணப்படும் இன்னும் சில விஷயங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். அடுத்து நாம் பார்க்கயிருப்பது சற்றுமுன் நாம் பார்த்ததோடு நெருக்கமான தொடர்புடையது.

  1. ஜாக்கிரதை என்பது நம்முடைய பொருட்கள் மற்றும் உடமைகளை அக்கறையுடன் பராமரிப்பதாகும். அதைச் சோம்பேறி புறக்கணிப்பான். (நீதிமொழிகள் 24:30-34; 27:23-27, பிரசங்கி 10:18; நீதிமொழிகள் 12:27). இங்கு சோம்பேறி மற்றும் ஜாக்கிரதையுள்ளவன் இருவரும் விவசாயிகள். சோம்பேறியின் நிலம் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் வறுமை அவனுக்கு உண்டாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மறுபுறம், ஜாக்கிரதையுள்ள விவசாயி தனக்கு உணவு தரும் கால்நடைகளையும் வயல்நிலங்களையும் அக்கறையுடன் கவனிக்கிறான். அவனுக்கும் அவனுடைய வீட்டிலுள்ளவர்களுக்கும் எல்லாம் நிறைவாக இருக்கிறது.
  2. ஜாக்கிரதையாயிருத்தல் என்பது தன்னுடைய வாழ்க்கைக்கான திட்டமிடுவதில் தீவிரமான கவனத்தைக் காட்டுவதாகும். (நீதிமொழிகள் 21:5). நம்முடைய வீட்டிற்கும், குடும்பத்திற்கும், கிறிஸ்துவின் சபைக்கும்கூட, ஞானமான நல்ல திட்டமிடுவதற்கு அதிக உழைப்பும், கவனமான சிந்தனையும் தேவை. அதற்காக பல்வேறு காரியங்களை ஆராயவும் தேவையான தகவல்களைச் சேகரிக்கவும் நேரம் எடுக்கும். ஜாக்கிரதையுள்ளவன் நேரத்தைக் கொடுத்து அதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்கிறான், அவனது திட்டங்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. சோம்பேறி விரைந்து முடிக்கப் பார்க்கிறான், மனதைத் தூண்டும் செயல்களில் முற்படுகிறான், அவனது சோம்பலுக்கான விளைவை அனுபவிக்கிறான்.

ஜாக்கிரதையைக் குறித்த அடுத்த ஆதாரத்தை ஏற்கனவே நான் ஓரளவிற்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன், எனினும் மீண்டும் அதை வலியுறுத்துவது நல்லது. கிறிஸ்தவ தலைவர்கள் தங்களுடைய வைராக்கியத்தை அவர்களுடைய ஜாக்கிரதையின் மூலமாகக் காட்டுகிறார்கள்.

  1. கடவுளின் மக்களைக் கவனமாக வழி நடத்தி செல்லுதல். முன்னரே இந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறோம். (ரோமர் 12:8 – 11வது வசனத்திலுள்ள அதே “ஜாக்கிரதை” என்ற வார்த்தையை இங்கும் கவனியுங்கள்) (யூதா 3:1 வசனத்திலும் காண்க). நாம் கிறிஸ்துவின் சபையில் தலைவர்களாக இருந்தால், சபையை ஜாக்கிரதையுடன் வழிநடத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தைச் சிந்திய சபையை நல்ல முறையில் அதிக கவனத்தோடு கண்காணிப்புச் செய்து, மேய்க்க வேண்டும் (அப்போஸ்தலர் 20:28).
  2. ஜாக்கிரதை என்பது பாவம் செய்கிறபோது ஒழுங்காக தேவனுக்கேற்ற துக்கம் கொண்டு மனந்திரும்புவதுமாகும். பாவத்திலிருந்து கர்த்தரிடம் மனந்திரும்புவதென்பது நம்முடைய முழு இருயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் என்பதைக் காட்டும் அடையாளமாகச் செய்ய வேண்டும். இது ஜாக்கிரதையோடு தொடர்புடையதாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 7:9-11). இங்கே பவுல் கொரிந்து விசுவாசிகளின் மனந்திரும்புதலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் கடவுளுக்கேற்றவிதத்தில் துக்கங்கொண்டதாக சொல்லுகிறார். பிறகு கடவுளுக்கேற்றவிதம் என்றால் என்ன என்று அவர் விளக்குகிறார். அவர் சொல்லுகிற முதலாவது காரியம், “அது உங்களில் எவ்வளவு ஜாக்கிரதையை உண்டாக்கியது?” அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாயிருந்து முற்றிலும் மனந்திரும்பியிருந்ததை அதிகத் தெளிவாக காட்ட கவனமாக இருந்தார்கள். இந்த தெய்வீக மனந்திரும்புதல் தீவிரமான விருப்பத்தோடும் வைராக்கியத்தோடும் சம்பந்தமுடையது. தேவனுக்கேற்ற துக்கத்துடன் (உலக துக்கத்திலிருந்து வேறுபட்டது) தங்கள் பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பியதன் தீவிரத்தைக் காட்ட பவுல் இங்கே பல விதமான பதங்களைப் பயன்படுத்துகிறார். இது நம்மில் ஒரு சவாலான கேள்வியை எழுப்புகிறது. நம்முடைய மனந்திரும்புதல் கொரிந்து விசுவாசிகளினுடையதைப் போல் இருக்கிறதா – குறிப்பாகக் கேடான பாவங்களைச் செய்தபோது? நம்முடைய மனந்திரும்புதல் ஜாக்கிரதையும் வைராக்கியமும் கொண்டதா அல்லது அது மந்தமானதும் சோம்பலானதும் உண்மையான மாற்றத்திற்கான எந்த முயற்சியும் இல்லாதிருக்கிறதா?
  3. தேவையிலுள்ள ஏழை மக்களுக்கு நம்மிடமுள்ள பொருட்களைக் கொண்டு உதவி செய்வதும் கடவுளுடைய மக்களின் தேவைகளுக்கு உதவுவதும் (அவர்களைப் பாதுகாப்பது உட்பட) கிறிஸ்தவ வைராக்கியத்தின் அடையாளம். (தீத்து 2:14). நம் கர்த்தருடைய பார்வையில் இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிற அநேக வேதப்பகுதிகளை வேதத்தில் பார்க்கலாம் (கலாத்தியர் 2:10; 2 கொரிந்தியர் 8:7-8; 16; எபிரெயர் 6:10-11; 2 கொரிந்தியர் 9:1-2; 1 பேதுரு 4:8; 2 கொரிந்தியர் 11:29). பவுல் இங்கே ஏழைகளை நினைப்பதில் ஆர்வமாக (அல்லது ஜாக்கிரதையாக) இருப்பதாக கூறுகிறார். நம்மில் பக்தி வைராக்கியம் இருக்குமானால், நாம் ஏழைகளின் தேவைகளைப் பற்றியும் தேவையிலுள்ள, நம்மால் உதவக்கூடியவர்களுமான விசுவாசிகளைப் பற்றியும் இதேவித ஜாக்கிரதையையே கொண்டிருப்போம்.
  4. சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவது வைராக்கியமான கிறிஸ்தவ ஜாக்கிரதையின் அடையாளம். (எபேசியர் 4:1-3). பவுல் இங்கே சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருங்கள் என்று வலியுறுத்துகிறார். இத்தகைய ஒற்றுமையைப் பெற்று, அது காக்கப்பட வேண்டுமானால், அதற்கு நம்முடைய ஜாக்கிரதை அவசியமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் சண்டையிட்டுப் பிரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே சாத்தான் தொடர்ந்து முயற்சிக்கிறான். நம்முடைய இரட்சகர் மரிப்பதற்கு முந்தைய நாள் இரவில், இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்ட, அவரது அப்போஸ்தலர்களிடம் இது இருக்க வேண்டுமென்று அவர் தம்முடைய பிதாவினிடத்தில் வெளிப்படையாக ஜெபித்தார். இது கிறிஸ்துவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தால், இதை பெறுவதும் காப்பதும் சவாலான ஒன்றாக இருந்தால், இத்தகைய ஒற்றுமையே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாகவும் நாம் அக்கறைக் காட்ட வேண்டியதுமாகும். சுயநல நோக்கங்கள், பெருமை, மற்றும் சுயவிருப்பு பற்றிய காரியங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். நமது சொந்தக் காரியங்களையே கொண்டிருப்பதும் அதையே முன்னிலைப்படுத்துவதுமாக இருப்பதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நமக்கென்று ஒரு வட்டமிட்டிருப்பது, பிரிந்திருப்பது, சிறிய பிரச்சனைகள் மற்றும் வேதத்திற்கு எதிரான பாரம்பரியங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். அனைவரோடும் சமாதானத்தை நாடுவதையே நாம் எப்போதும் எதிர்நோக்குகிறவர்களாக இருக்க வேண்டும். நம்மில் தொடர்ந்திருக்கும் கசப்பு, மன்னிக்க மறுக்கும் ஆவி, மற்றும் பழிவாங்குவதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நாம் ஊழியம் செய்யும் உள்ளூர் சபையில் மட்டும் ஜாக்கிரைதையுள்ளவர்களாக இருப்பதல்ல, போதகர்களான நமக்குள்ளும், வேதப்பூர்வமான நல்ல சபைகளோடும் நாம் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.
  5. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் ஜாக்கிரதையைக் காட்ட வேண்டும். (2 தீமோத்தேயு 2:15). ஒரு போதகனாக, தேவனுடைய வார்த்தையை ஒழுங்காகப் பகுத்து ஆராய்ந்து போதிக்கும் வெட்கப்படாத ஊழியனாக கடவுளுக்கு நம்மை எப்படி வழங்க முடியும்? பரிசுத்த ஆவியின் உதவியினால் நாம் தேவனுடைய வார்த்தைகளை ஜாக்கிரதையாகப் படித்தால் மட்டுமே முடியும்.
  6. ஒரு கிறிஸ்தவனாக வளருவதில் ஜாக்கிரதையைக் காட்ட வேண்டும். (2 பேதுரு 1:2-7). நாம் கிறிஸ்தவர்களாக வளருவதற்கான அனைத்தும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரே நாம் வளருவதற்கு காரணகர்த்தாவாகவும் இருக்கிறார். ஆனால் நாம் வளர வேண்டுமானால், நாம் ஜாக்கிரதையுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.
  7. விசுவாசத்துடன் இறுதிவரை கிறிஸ்துவுக்குள் சமாதானத்துடன், மாசற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்திருத்தல் வேண்டும். (2 பேதுரு 3:13-14; 2 பேதுரு 1:10; எபிரெயர் 4:11; 6:10-12). சகோதரர்களே, நாம் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் இருக்கிறோம். ஓட்டப்பந்தயத்தை நல்லவிதமாக துவங்குவது மட்டும் போதாது. நாமும் நாம் யாருக்கு ஊழியம் செய்கிறோமோ அவர்களும் ஓட்டப்பந்தயத்தின் இறுதிவரை நல்லவிதமாக தொடர்ந்து ஓடுவதற்கு ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இறுதிவரை விடாமுயற்சியுடன் தொடருகிறவர்களே இரட்சிக்கப்படுவார்கள். நம்முடைய ஆத்துமா நித்திய இரட்சிப்பை அடைய, ஜாக்கிரதையுடன் கூடிய வைராக்கியம் தேவையாக இருக்கிறது.

இதுவரை நாம், அநேக காரியங்களை பார்த்திருக்கிறோம். முடிக்கிற வேளையில் உங்கள் முன் இரண்டு கேள்விகளை விளக்கப் போகிறேன்.

  1. என்னில் பக்தி வைராக்கியம் இருக்கிறது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்ளுவது? இதுவரை நாம் பார்த்திருக்கிற பத்துக் காரியங்கள் மற்றும் நாம் செய்யும்படி கடவுள் சொல்லியிருக்கிற இன்னும் வேறுபல காரியங்களைச் செய்வதில் நாம் அசதியாக சோம்பலுடன் இருக்கிறோமா அல்லது ஜாக்கிரதையும் ஆர்வமும் கொண்டிருக்கிறோமா? என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது உண்மையாக இருந்தால், இன்னுமொரு கேள்வி நம்முன் எழுகிறது.
  2. அப்படியானால், இந்த விஷயங்களில் என்னுடைய வைராக்கியத்தை எப்படித் தூண்டிவிடுவது? இக்கேள்விக்கு ஏற்கனவே சில பதில்களைப் பார்த்திருக்கிறோம், அதாவது ஜெபத்தில் ஆண்டவரிடம் இவ்வைராக்கியத்தைக் கேட்டல், நம்மை ஊக்கப்படுத்தும் கடவுளின் இரக்கங்களை நினைவுகூருதல் போன்றவை. எனினும் இவ்வேளையில் நான் இன்னுமொரு பதிலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்தக் காரியங்களுக்கான வைராக்கியத்தை என்னில் தூண்டுவதற்கான ஒரு வழி: கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிற வேலைகளை உண்மையிலேயே ஜாக்கிரதையுடன் செய்யத் துவங்குவதன் மூலமே இதை என்னில் தூண்ட முடியும். நாம் காட்டும் ஜாக்கிரதையே நம்மிலுள்ள வைராக்கியத்தை வெளிப்படுத்துகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் இது போன்ற ஜாக்கிரதையும் நம்மில் பக்தி வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்கு உதவும் ஒரு கருவியே என்பதை நாம் அறிவது அவசியம். நீங்கள் சோம்பலை அழித்து, கர்த்தரைச் சார்ந்திருந்து, அவருடைய உதவியை நாடி கூக்குரலிடுங்கள் என்று வேதம் சொல்லுகிறபோது, உண்மையில், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக செய்ய ஆரம்பியுங்கள் என்றுதான் சொல்லுகிறது. கடவுள் உங்களையும் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆத்துமாவையும் சந்தித்து ஊக்கப்படுத்துவது உங்களுக்கு முன்னிருக்கும் தற்போதுள்ள வேலைகளைச் செய்வதற்காக என்பது உண்மை இல்லையா?

இயேசுவும் பத்துக் குஷ்டரோகிகளும் பற்றிய உதாரணத்தை கவனியுங்கள் (லூக்கா 17:12-14). இயேசு அவர்களுடைய கிராமத்தில் நுழைந்தவுடன், அந்த பத்து குஷ்டரோகிகளும் தூரத்தில் நின்று, சத்தமிட்டு, இயேசுவே ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும் என்றார்கள். என்ன நடந்தது என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆசாரியனிடத்தில் சென்று அவர்கள் தங்களைக் காட்டும்படி இயேசு அவர்களிடம் கூறினார். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. தொழுநோய் உடையவர்கள் அந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமானார்கள் என்று அவர்கள் அறிந்திராதவரை அவர்கள் ஆசாரியனைச் சந்திக்கக் கூடாது. அவர்கள் உண்மையில் குணமடைவதற்கு முன்பாகவே அவர்கள் சென்று ஆசாரியனுக்குக் காண்பிக்கும்படி ஆண்டவர் சொன்னார். ஒருவேளை நான் அங்கு இருந்திருந்தால், “ஆண்டவரே நான் இன்னும் குணமாகவில்லையே” என்று ஆண்டவரிடம் கேட்டிருப்பேன். ஆனால் அவர்களோ, விசுவாசத்தினால் இயேசு சொன்னதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் செய்தார்கள். அவர்கள் போகும்போது அவர்கள் குணமடைந்தார்கள். எனவே அது பக்தி வைராக்கியத்தினால் உண்டானது.

நம்முடைய தியான நேரங்கள் எப்படியிருக்கிறது? நான் ஒரு கல்லூரி மாணவனாக இருந்தபோது, நான் வேத புத்தகத்தை வாசிப்பது மற்றும் ஜெபிப்பதுபோன்ற உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, மாணவர்கள் சேர்ந்திருக்கும் அந்த அறையில் நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என்னுடைய வேத புத்தகம் என் படுக்கையிலிருந்து நான்கு அடி தொலைவிலுள்ள மேசையில்தான் இருந்தது. ஆனால் எனக்கும் என் வேதப்புத்தகத்திற்கும் இடையில் ஒரு கற்சுவர் இருப்பது போல் இருந்தது. நான் கண்டறிந்தது என்ன? என்னுடைய பெலவீனத்துடன், நான் எழுந்து மேசைக்குச் சென்று என் வேதப்புத்தகத்தை எடுத்தேன், கற்சுவர் மறைந்தது. நான் வாசிக்க ஆரம்பித்தபோது கடவுள் என்னைச் சந்தித்து என் ஆத்துமாவுக்கு உணவளித்தார். இந்த வேளையில் நாம் பார்த்த 10 காரியங்களுக்கும் ஜாக்கிரதையாக இருப்பதற்கும் இதுவே வழி. எழுந்து, ஜெபத்துடன் கடவுளைச் சார்ந்திருந்து, இவைகளைச் செய்யத் தொடங்குங்கள், உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறவைகள் மாயமாக மறைவதையும் கடவுள் தாம் விரும்புவதைச் செய்யும்படி நம்முடைய இருதயங்களை எழுப்பிவிடுவதையும் காண்பீர்கள். சுவர்களின் மத்தியிலும் நாம் தொடர்ந்து நடந்து முன்னேறிச் செல்ல கடவுள் தாமே நமக்கு உதவி செய்வாராக!

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.